Tuesday, February 8, 2011

பறவை போல் பறந்த பெண் சித்தர்! சக்கரத்தம்மாள்!


சித்தர்கள் பற்றிப் படிக்கும்போது பெண் சித்தரான சக்கரத்தம்மாள் பற்றியும் அறிய நேர்ந்தது. ஆனாலும் அவர் சரித்திரம் முழுதும் தெரியவில்லை. தேடிக்கொண்டிருந்த சமயம் இரண்டு வருடம் முன்னர் தமிழ் ஹிந்து தளத்தில் முதன்முதல் சக்கரத்தம்மாள் பற்றிய குறிப்புகளை எவரோ எழுதி இருந்தனர். யார் என நினைவில் இல்லை. அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவருடைய அதிஷ்டானம்/சமாதி திருவான்மியூரில் உள்ளது என்பதும், அவரை ஆதரித்தவர் ஸ்வாமி விவேகாநந்தரின் சீடரான மருத்துவர் நஞ்சுண்ட ராவ் என்பவர் என்பதும் தெரிய வந்தது. நஞ்சுண்ட ராவ் அவர்கள் ஆங்கில மருத்துவர். பல் மருத்துவர் என்று திவாவிடம் கூறினேன். இல்லை. ஆங்கில மருத்துவரே.

ஆனால் மிகச் சிறந்த தேசபக்தரான இவர் மஹாகவி பாரதியையும் ஆங்கிலேய அரசிடமிருந்து பாதுகாத்திருக்கிறார். சக்கரத்தம்மாளின் பரிபூரணப் பேராநந்த நிலையைக் கண்டு பல முறை வியந்திருக்கிறார். அதை அவர் வார்த்தைகளில் சொல்வதைக் கேட்போம்.

"முக்தி என்றால் என்ன என்பதை எழுத்தறிவற்ற இந்த எளிய அந்தணப் பெண்மணியிடம் தான் தெரிந்து கொண்டேன். எப்போதும் பரிபூரணப் பேராநந்த நிலையில் அவர் இருக்கிறார். அவருடைய உடலின் ஒவ்வொரு அணுவும் அந்தப் பரிபூரணப் பேராநந்தத்தை வெளிப்படுத்துகிறது." இனி சக்கரத்தம்மாள் பற்றிக் காண்போமா?

1854-ம் வருடம் வட ஆற்காடு மாவட்டத்தில் போளூரின் ஒரு சிறு கிராமம் ஆன தேவிகாபுரத்தில் வசித்த சிவாச்சாரியார் ஆன சேஷ குருக்களுக்குப்பிறந்தார் சக்கரத்தம்மாள். இவரின் பெயர் அப்போது அநந்தாம்பாள் என்று வைத்திருந்தனர். பிறந்த சில காலத்திலேயே பெற்ற தாயை இழந்த அநந்தாம்பாளைச் சிறிய தாயாரான சுப்பம்மா வளர்த்து வந்தார். சிறிய தாயாரின் சகோதரர் ஆன சாம்பசிவ சிவாசாரியார் சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் கோமளீஸ்வரன் மடத்து அதிபதியாக இருந்தார். திடீரென அவர் மனைவி இறந்து போக அநந்தாம்பாளை சாம்பசிவ சிவாசாரியாருக்கு மறுமணம் செய்து வைக்கத் தீர்மானிக்கப் பட்டது. அப்போது அநந்தாம்பாளின் வயது ஒன்பது. சாம்பசிவ சிவாசாரியாரின் வயது 24.

சிவாசாரியார் மனைவியின் மிக மிக இளவயது காரணமாயும், பல்வேறு துர் சகவாசங்கள் காரணமாயும் துர் நடத்தை கொண்டு வாழ்ந்து வந்தார். எனினும் அநந்தாம்பாள் கணவனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளைத் தவறாமல் செய்து வந்ததோடு மற்ற நேரங்களில் எந்நேரமும் கோயிலில் அடியார் கூட்டத்துடன் கலந்து வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அதில் செலுத்தினார். நாள் ஆக, ஆக அவரின் சிவ-சக்தி வழிபாட்டில் மனம் பூரணமாய்ச் சென்றது. இவ்வுலக வாழ்க்கையில் பற்று அறுந்து இறைவன் -இறைவி மேல் பக்தியும், பற்றும் வளர்ந்தது.

இங்கே சிவாசாரியாரோ பலவிதமான துர் நடத்தைகளின் காரணமாய் தனது 34-ம் வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார். 20 வயதான அநந்தாம்பாள் தன் தலையை மழித்துக்கொண்டு வெள்ளுடை தரிக்க ஆரம்பித்தார். எனினும் தன் யோகப் பயிற்சியை விடாமல் தினமும் மொட்டை மாடியில் அமர்ந்து யோகப் பயிற்சியை விடாமல் செய்து நாளாக ஆக, மோனத் தவத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த மோனத் தவம் தொடர்ந்தது. குளியல் இல்லை; உணவு கிடையாது; நீர் அருந்தவில்லை. கடைசியில் பரவொளியைக் கண்டே விட்டார் அநந்தாம்பாள். இந்தப் பேரின்ப ஒளி அவர் மனதை நிறைத்தது. மனம் மகிழ்வில் ஆழ்ந்து எல்லை இல்லாப் பரவசம் அடைந்தார். அதன் பின்னர் அவர் மனம் எந்நேரமும் அந்த ஜோதி ரூபத்தின் மேலேயே சென்றது. கோமளீஸ்வரன் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு உரக்கச் சிரித்துக்கொண்டும் தானே பேசிக்கொண்டும் இருப்பதைப் பார்த்த ஊர் மக்கள் பைத்தியமோ என்று எண்ணினார்கள். விலகிச் சென்றனர். முதன் முதல் இவரைக் கண்ட மருத்துவர் நஞ்சுண்டராவும் இவரைப் பைத்தியம் என்றே எண்ணினார்.


ஆனால் சக்கரத்தம்மாளுக்குப் பலவிதமான சித்திகளும், முக்கியமாய்ப் பேரானந்தநிலையும் கை கூடி இருப்பதை நஞ்சுண்ட ராவ் உணர்ந்துவிட்டார். ஆகவே அவரே சக்கரத்தம்மாளின் புகழைப் பரப்பவும் ஆரம்பித்தார். பரவொளி தரிசனத்தின் பின்னர் அநந்தாம்பாளுக்குப் பலவிதமான சித்திகள் கைகூடின. ஒரு சமயம் சக்கரத்தம்மாளைத் திருவண்ணாமலைக்கு அழைத்துச் சென்றார் நஞ்சுண்ட ராவ். அப்போது விருபாக்ஷி மலைக் குகையில் பகவான் ஸ்ரீரமணர் இருந்ததாகவும், அவருடன் சில சூக்ஷ்மங்களைச் சக்கரத்தம்மாள் பகிர்ந்து கொண்டதாயும் கூறுகின்றனர். அவருக்குக் கிடைத்த அட்ட சித்திகளில் முக்கியமாய்க் கூறத்தக்க சித்தி லஹிமா என்னும் சித்தியாகும். இந்த சித்தி பரிபூரணமாய்க் கைவரப் பெற்றவர்கள் தங்கள் உடலை மிக மிக லேசாக்கிக்கொண்டு பறவையைப் போல் ஆகாய மார்க்கத்தில் பறப்பது ஆகும். கர்ம சித்தி வகையைச் சேர்ந்தது என்று கூறப்படும் இந்த சித்தியை அற்புதமாய்க் கையாண்ட சக்கரத்தம்மா அவர் வாழ்ந்த காலகட்டத்து அறிஞர் பெருமக்களின் ஆராய்ச்சிக்கும் ஆளாகி இருக்கிறார் என்பதைத் திரு வி.க. என்னும் திரு வி.கல்யாணசுந்தரனார் தெரிவிக்கிறார், கேட்போமா?

"அம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர். அக்காலத்தில் சென்னையில் வசித்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து நின்றுகொண்டு அம்மையார் நிலையை ஆராய்வர். நான் தேசபக்தன் ஆசிரியனாக இருந்த காலத்தில் டாக்டர் நஞ்சுண்டராவ் அவர்களிடம் நெருங்கிப் பழகி வந்தேன். பறவையாரைப் பர்றி நான் வரிடம் விசாரித்து அறிந்து கொண்டேன். அவர் அம்மையாரைச் சித்தர் இனத்தில் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தார். " தமிழ்த்தென்றல் ஆன திரு வி.க. அவர்க்ள் தாம் எழுதிய "உள்ளொளி" என்னும் நூலில் நேரில் கண்ட சாட்சியமாகச் சக்கரை அம்மாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது புதுப்பேட்டை என்று அழைக்கப்படும் கோமளீஸ்வரன் பேட்டையில் மடத்தில் விடாமல் ஸ்ரீசக்ர பூஜை செய்து வந்ததாலேயே , அநந்தாம்பாள் என்ற பெயர் மாறியது சக்கரத்தம்மாள் என்றானது. சக்கரை அம்மா, சக்கரை அம்மன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த அம்மாவின் பேரன் உறவின் முறைக்கார சிவாசாரியார் தற்சமயம் கோமளீஸ்வரர் மடத்தில் சிவாசாரியாராக இருந்து வருவதாய்த் தெரிகிறது. கோமளீஸ்வரன் ஆலயத்தில்/மடத்தில் சக்கரை அம்மாவின் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இதைத் தவிரவே திருவான்மியூரில் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கோமளீஸ்வரன் பேட்டை மடத்தில் சக்கரை அம்மா மொட்டை மாடியில் அமர்ந்து தியானம் செய்த திண்டு, படங்கள் இருப்பதாயும் திருவான்மியூர் கோயிலுக்கு சிறப்பு தினங்களில் இங்கிருந்து சென்று வழிபாடுகள் செய்வதாயும் தெரிய வருகிறது.

தன் பூவுடலைத் துறக்கும் நேரம் வந்துவிட்டது என்றுணர்ந்த அம்மாள், திருவான்மியூர் மருந்தீசர் கோயிலை அடைந்தார். அங்கே நஞ்சுண்ட ராவிடம் தன் உடலை நீக்கப் போவதாய்த் தெரிவிக்கவும் அவர் தன் சொந்த இடத்தில் சமாதிக்கோயில் எழுப்ப அம்மாளின் சம்மதம் கேட்க அம்மாளும் அநுமதி வழங்கியதோடு தற்சமயம் இருக்கும் இந்த இடத்தைச் சுட்டிக் காட்டி இங்கே எழுப்புங்கள் என்றாராம். ஆள்நடமாட்டமே இல்லாத அந்தக் காலத்தில் அந்த இடத்தில் கோயில் கட்டினால் யார் வருவார்கள் என்று கேட்ட மருத்துவரிடம் நூறாண்டுகள் கழித்துப் பார்க்கவேண்டும் என்றாராம் அம்மாள். 1901-ம் வருடம் பெப்ரவரி மாதம் 28-ம் தேதி தனது 47-வது வயதில் ஜீவசமாதியில் ஆழ்ந்த சக்கரத்தம்மாள் சொன்னது போல் இங்கு சரியானபடி ஆலயம் அமைக்கவும் 2002-ம் ஆண்டு தான் நேரம் வாய்த்தது. கும்பாபிஷேஹம் செய்யப் பட்டு தற்சமயம் பிரபலமாய் விளங்குகிறது. இங்கே சென்றவர்களின் மன உளைச்சல், தீராத வியாதி, குடும்பத்தில் மன வருத்தங்கள் ஆகியனவற்றுக்குத் தீர்வு கிடைப்பதாயும் கூறுகின்றனர். 1948-ம் ஆண்டு ஜனவரியில் இங்கே வந்திருந்த பரமாசாரியார் அவர்கள் இங்கே ஐந்து நாட்கள் தங்கி தியானம் செய்தாராம்.


திருவான்மியூர் மருந்தீசர் கோயிலுக்கு வெளியே, தெப்பக்குளத்தை ஒட்டி இடப்பக்கமாய், கலாக்ஷேத்ரா காலனியை நோக்கிச் செல்லும் சாலையில் செல்லவேண்டும். அந்தச் சிறிய சாலையில் இடையில் குறுக்கிடும் சாலையையும் கடந்து நேரே சென்றோமானால் இடப்புறம் ஸ்ரீசக்கரை அம்மா ஆலயம் என்று ஆலயத்தின் பெயரோடு கண்களில் படும். அழகாய் சோலை போல் மரம், செடி,கொடிகள் வளர்க்கப்பட்டு காட்சி அளிக்கும் அந்தச் சிறிய ஆலயம் நேர்த்தியாகவும் இருப்பதாய்த் தெரிய வருகிறது. கோயிலில் சந்நிதியும் சின்னது. கருவறையில் உள்ளே சக்கரை அம்மாவுக்கு கல் விக்கிரஹம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அதிர்வலைகள் தியானத்தை நோக்கி நம்மைத் தூண்டும் என்கின்றனர்.

இதைத் தவிர உபந்நியாசங்கள் செய்யும் சிறிய அரங்கம், அரங்கின் பின்னால் டாக்டர் நஞ்சுண்டராவின் மார்பளவு சிலை போன்றவை காணப்படுகிறது. ஆலயத்தின் பின்னால் இருக்கும் சிறிய கூடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகள், போதிக்கப் படுகின்றனர். கோயிலை நிர்வகிப்பது டாக்டர் நஞ்சுண்டராவ் பிரைவேட் ரிலீஜியஸ் ட்ரஸ்ட் ஆகும். தற்சமயம் அறங்காவலராக இருப்பது சுமனா சுரேஷ் என்பவர் என்கின்றனர். நஞ்சுண்டராவ் அவர்களின் பேரன் இங்கே இலவச மருத்துவத் தொண்டு செய்து வருகிறார்.

இவற்றைத் தவிர தியான மண்டபம், புல்வெளியில் செயற்கை நீரூற்று, புத்தர் சிலை, எண்கோண மண்டபத்தினுள்ளே கண்ணாடிப்பேழையில் சக்கரை அம்மாவின் சிலை போன்றவையும் இருக்கின்றன. கண்மூடி நம்மை மறந்து தியானம் செய்ய வசதியான இடம் என்றும் மனம் அமைதியை எட்டும் என்றும் கூறுகின்றனர்.

இன்னும் போகலை. போகணும், அதனால் படங்கள் போயிட்டு வந்து.

3 comments:

  1. http://www.youtube.com/watch?v=sBQLq2VmZcA

    க்ரிஸ் ஏஞ்சல் தண்ணீர் மேல் நடக்கும் வீடீயோ வைப் பாருங்கள். அனிமா சித்திதான் இது. இமய மலையில் யாரோ யோஹியிடம் கற்றாராம். நம் நாட்டில் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். நமக்குப் பெருமைதான்.

    ReplyDelete
    Replies
    1. Hello sir, Replying just to clear truth about criss angel...to avoid doing the referral of Real sitthars with any fake self advertising ppl like criss...

      https://m.youtube.com/watch?v=dycpIPTFJ04

      Delete
  2. வாங்க அசோகரே, நல்வரவு, முதல் வரவுக்கும் சேர்த்து. ம.பா. என்பது மறுபாதிதான். :))))) அங்கே கேட்டதுக்கு இங்கே பதில் கொடுத்திருக்கேன். :D

    ReplyDelete