Friday, November 20, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!

மன்னனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டான். உடனேயே ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு காஞ்சியை விட்டுச் சென்ற திருமழிசை ஆழ்வாரையும், கணிகண்ணனையும் தேடிக் கொண்டு சென்றான். அருகில் இருந்த ஓர் சிறிய கிராமத்தில் தங்கி இருந்த இருவரையும் கண்டான். மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இருவரையும் காஞ்சிக்குத் திரும்பச் சொன்னான். மன்னனின் மன்னிப்பு மனதார இருப்பதை உணர்ந்துகொண்ட ஆழ்வாரும் காஞ்சிக்குத் திரும்ப முடிவு செய்தார். அவர் மட்டும் திரும்பினால் போதுமா? கூடவே கணிகண்ணனும், எல்லாத்துக்கும் மேலே பெருமாளும் அல்லவோ திரும்பணும்? அதுக்கும் ஆழ்வார்தான் மனசு வைக்கணும். ஆழ்வார் உடனேயே பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
என்று வேண்டிக் கொள்ள பெருமாளும் ஆழ்வாரின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து காஞ்சிக்குத் திரும்பினாராம். அன்று முதல் இவருக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இதே கதையில் கணிகண்ணனை மன்னன் பாடச் சொன்னான் என்பதற்குப் பதிலாக வேறு மாதிரியும் சொல்கின்றார்கள்.

திருமழிசை ஆழ்வாருக்கும், கணிகண்ணனுக்கும் சேவைகள் செய்து வந்த மூதாட்டியின் அன்பிலும், அவள் குணத்திலும் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போன திருமழிசை ஆழ்வார் அந்த மூதாட்டி இளமையில் சிறப்போடும், செல்வத்தோடும் வாழமுடியவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். அவருடைய பக்தியின், தவத்தின் உதவியால் பெருமாளை வேண்டி அந்த மூதாட்டிக்கு இளமை திரும்பக் கிடைக்கச் செய்கிறார். இந்தத் தகவல் மன்னனின் அரண்மனை வரையிலும் எட்ட, தானும், தன் ஆசைக்கிழத்தியும் வயது முதிர்ந்து வருவதை எண்ணிய மன்னன், நமக்கும் இளமை திரும்பினால் இன்னமும் பலநாட்கள் ஆநந்தம் அநுபவிக்கலாமே என எண்ணினான். திருமழிசை ஆழ்வாரை இதற்காக வேண்ட, ஆழ்வார் மறுக்கிறார். மூதாட்டியின் இறை பக்தியையும், மன்னனின் சுயநலத்தையும் சுட்டிக் காட்டிய அவர் திட்டவட்டமாய் மன்னன் கோரிக்கைக்கு மறுக்கிறார். மன்னன் விடாமல் கணிகண்ணனைக் கேட்க தன் குரு மறுத்த ஒரு விஷயத்திற்குத் தான் எங்கனம் உதவுவது என அவனும் மறுக்கிறான். கோபம் கொண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த அன்பு சீடனைப் பிரிய மனமில்லாமலும், பெருமாளையும் பிரிய மனமில்லாமலும் இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். பின்னர் மன்னன் வேண்டுகோளின்படி திரும்புகிறார். இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் இந்தப் பெருமான் பேரில் அடைக்கலப் பத்து என்ற பாசுரங்களைப் பாடி உள்ளார். இந்தப் பாசுரங்கள் வெள்ளிப்பதக்கங்களில் பொறிக்கப் பட்டு ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். அடைக்கலப் பத்து தவிர, அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச்சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார் ஸ்ரீதேசிகர். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் கூட இந்தப் பெருமாளின் பெயரில் ஒரு கீர்த்தனை பாடியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பெருமாள் தங்கக் கொண்டையுடன் காட்சி அளிப்பார். இந்தத் தங்கக் கொண்டையை இவருக்கு அளித்தது வெங்கடாத்ரி என்னும் தெலுங்கு அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வைணவர் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தின் பெருமாளுக்கு ஆப்ரணங்கள் வழங்கி உள்ளதாய்த் தெரிய வருகிறது. ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் தங்கக் கொண்டை செய்யவேண்டி, போதிய பணம் பெற யாசகம் செய்து பொருள் சேர்த்தார் வெங்கடாத்திரி. நகை செய்யும் ஆசாரியிடம் பொருளைக் கொடுத்துப் பொன் வாங்கி கொண்டை செய்யச் சொல்ல, அதில் நட்ட நடுவில் பதிக்கவேண்டிய எமரால்ட் கற்களைப் பார்த்த ஆசாரியின் ஆசை மனைவியான நடன நங்கை அதைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டாள். இந்த் அவிஷயம் அறிந்த வெங்கடாத்ரி அந்த மாது எங்கே இருக்கிறாள் எனக் கேட்டறிந்து அவள் வசித்து வந்த தஞ்சைக்கே சென்று அங்கே அவள் வீட்டு வாயிலில் உண்ணாவிரதம் இருந்து அந்தக் கற்களை மீட்டு வந்தார். பின்னர் பெருமாள் அவர் கனவில் வந்து ஸ்ரீதேவி, பூதேவிக்கு அவ்வாறே செய்து கொடுக்கும்படிச் சொல்ல அவ்வாறே இரு நாச்சிமார்களுக்கும் இதே போல் யாசகம் செய்து பொருளீட்டி ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கிறார் வெங்கடாத்ரி.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் சிலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிக்குப் பண உதவி, ஆபரணங்கள் என நன்கொடையாகக் கொடுத்திருக்கின்றனர்.

Thursday, November 19, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே போனாயோ?

பெருந்தேவித் தாயாரின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. விமானத்தின் பெயர் கல்யாணகோடி விமானம். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைச் சேவிக்கவேண்டுமாம். ஆனால் நாங்க முதல்லே பெருமாளைத் தான் பார்த்தோம். அப்புறமாய்த் தாயாரைப் பார்த்தோம். எழுதறது மட்டும் முதல்லே தாயார் பத்தி. கிழக்கு நோக்கி தாமரை மலர்களைக் கையில் ஏந்தியவண்ணம் அபயஹஸ்தம் காட்டும் தாயாருக்கு அரித்ரா தேவி, மகாதேவி என்ற திருநாமங்களும் உண்டு என்றார் பட்டாசாரியார். அருகில் உற்சவர். இந்தட் தாயாரின் அவதாரம் பற்றிய பட்டாசாரியார் சொன்ன புராணக் கதையானது.

பிருகு மகரிஷி பிள்ளை வரம் வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய யாகத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் அவதரித்தார் என்கின்றனர். அவர் பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரைப் பூஜித்து வழிபட்டு வர, அவருக்கு அருள் புரிய எண்ணிய பெருமான், சிவன், பிரம்மா, பிருகுமஹரிஷி, காசியபர், கண்வர், காத்யாயன ரிஷி, ஹரித ரிஷி போன்றோர் முன்னிலையில் அம்பாளின் கரம் பிடித்து மணம் புரிந்து கொண்டார். அப்போது உள்ளே சென்ற அம்பாள் இன்று வரை படிதாண்டுவதில்லை. படிதாண்டாப் பத்தினி எனப் படும் அம்பாள் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளும் பெருமாளுடன் கூட திருவீதி உலாவுக்குச் செல்வதில்லை. ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்ரீவேதாந்த தேசிகருக்காகப் பொன்மழை பொழியச் செய்தாள் பெருந்தேவித் தாயார். வேதாந்த தேசிகரின் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை எவ்விதமாவது அவமானப் படுத்த எண்ணினார்கள். காஞ்சிக்கு வந்த வறிய பிரம்மசாரி ஒருவனை வேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும் எனக் கேட்கும்படி ஏவினார்கள். அவனும் அவ்விதமே அவரிடம் சென்று பொருள் கேட்க, தேசிகரோ அம்பாளை வேண்டினார். ஸ்ரீதுதி பாடினார். அவரின் ஸ்ரீதுதிகளால் மனமகிழ்ந்த அம்பாள் அங்கே பொன்மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை நிலைநாட்டினாள்.

அது மட்டுமா? ஸ்வாமிக்குனு தயார் செய்யப் பட்ட வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளையும் தனக்கென வாங்கிக் கொண்டுவிட்டாள். பின்னர் வேறு வெள்ளித் தகடுகள் வேய்ந்த புதுக்கதவுகள் செய்து பெருமாளுக்குக் கதவுகள் பொருத்தப் பட்டது என்கின்றனர். தாயார் சந்நிதியில் இருந்து உள்பிரஹாரத்துக்கு வந்தால் அங்கே நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் போன்றோர் காணப்படுகிறார்கள். இங்கே விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே காணப்படுகிறார். இங்கிருந்து இப்போ நாம் ஏறப் போவது அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு.

இருபத்து நான்கு படிகள் என்கின்றனர். காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு தத்துவங்களையும் குறிக்கும் வண்ணம் எழுப்பப் பட்டது என்று சிலர் கூற்று. விமானம் புண்ணியகோடி விமானம். மூலவர் தேவராஜர். இவருக்கு தேவப் பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், தேவாதிராஜன். கஜேந்திர வரதன், தேவராஜப் பெருமாள், மாணிக்கவரதன் போன்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. திருப்பதியின் வெங்கடாசலபதியைக் கிருஷ்ணரின் அம்சம் என்றும் வகுளா தேவிதான் யசோதை என்றும் சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். ஒவ்வொரு வருஷமும் சித்ரா பெளர்ணமி அன்று பிரம்மா இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். சித்ரா பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பதினான்கு நாட்களும் மாலைக்கதிரவனின் கிரணங்கள் மூலவரின் பாதங்களைத் தொட்டுச் செல்லும். இவர் சொன்னால் சொன்னபடி செய்யும் பெருமாள் ஆவார்.


எப்படினு கேட்கறீங்களா? திருமழிசை ஆழ்வார் இந்த நகரில் தன் சீடனான கணிகண்ணன் என்பவருடன் வசித்து வந்தார். பல்லவ மன்னர்கள் காஞ்சியை ஆட்சி புரிந்த காலம் அது. கணிகண்ணனின் தமிழ்ப் பாடல்களின் அழகைப் பார்த்து ரசித்த மன்னர், இந்தப் பாடல்கள் தன்னைப் பற்றிப் போற்றிப் பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என எண்ண ஆரம்பித்தார். கணிகண்ணனைத் தன் அவைக்கு வரவழைத்துத் தன்னைப் போற்றிப் பாடச் சொன்னார். ‘மாதவனைப் பாடும் வாயால், மனிதர்களைப்பாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக மறுத்தார் கணிகண்ணன். மன்னன் அவரைப் பல்லவ நாட்டை விட்டே வெளியே போகச் சொல்லி நாடு கடத்தினான். கணிகண்ணனும் காஞ்சியை விட்டும் பல்லவநாட்டை விட்டும் வெளியேறினார். தன் அருமைச் சீடன் நகரை விட்டுச் செல்வது அறிந்த திருமழிசை ஆழ்வார் துக்கம் பொங்கப் பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”

என்று சொல்லிவிட்டார். திருமழிசை ஆழ்வாரும் காஞ்சியை விட்டுக் கிளம்ப பெருமாளும் ஆழ்வார் கேட்டுக்கொண்டபடிக்கு தன் பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஆழ்வாரைத் தொடர்ந்து போய்விட்டார். காஞ்சியை இருள் சூழ்ந்து கொண்டது. மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் இல்லை. மன்னன் நடுங்கிப் போனான். ஏற்கெனவே நகரம் இருளில் ஆழ்ந்திருந்தது. இப்போ இங்கே பெருமாளையே காணோம். எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். என்றாலும் இங்கே திரும்பி வந்தாரானு மட்டும் நாம இப்போ தெரிஞ்சுக்கலாமா? நாளைக்கு கணினி ஆக்கிரமிப்போ, ஆற்காட்டார் வரவோ இல்லைனா வருவேன்.

Wednesday, November 11, 2009

கடும் ஆக்கிரமிப்பு!

கடந்த பத்து நாட்களாக என்னோட கணினி கடுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது எந்த நாட்டுச் சதி என ஆராய்ந்ததில் யு.எஸ்ஸில் இருந்து வந்திருக்கும் சிலரின் ஆக்கிரமிப்பு எனத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விட்டது. இதுக்காக டாடா கம்யூனிகேஷன்ஸ்காரங்க இணையத்தை இணைப்புக் கொடுக்காமல் செர்வரை டவுன், டவுன் என்றே ஒரு மூணு நாள் ஓட்டினாங்க. அப்புறமா வேறே வழியில்லாம நேத்திக்கு இணைப்பைக் கொடுத்துட்டாங்க. ஆனால் நமக்கு கணினியே கிடைக்கலையே! ஆண்டவா, இந்த சோகக்கதையை யார் கிட்டே போய்ச்சொல்றது?? நாளைக்குக் கணினி கிடைச்சாத் தான் கஞ்சி வரதப்பர் வருவார். மெதுவா வரேன், அது வரையில் எஞ்சாய் பண்ணுங்க எல்லாரும். சிஷ்யகே(கோ)டிங்க எல்லாம் கொஞ்சம் பொறுத்துக்குங்கப்பா!

Monday, November 2, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!


மலையாக மாறிய கஜேந்திரனின் மேல் பெருமாள் எழுந்தருளி இருப்பதால் மேலே பல படிகள் ஏறிச் சென்றே பெருமாளைத் தரிசிக்கவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு மாடக்கோயில் என்றே சொல்லலாம். இந்தக் கோயிலுக்கு தேவகுரு பிரஹஸ்பதியும் வந்து வழிபட்டிருக்கிறார். இந்திரன் கொடுத்த சாபத்தால் ஏழ்மை நிலையடைந்த பிரஹஸ்பதிக்கு இங்கேதான் சாப விமோசனம் கிடைத்தது என்கின்றனர். ஐந்து பிராஹாரங்களுடன் இருக்கும் இந்தக்கோயில் கட்டுமலை அமைப்புடன் கூடியது. கட்டுமலைகளை முறையே வாரணகிரி அத்திகிரி எனச் சொல்லுகின்றனர். முதலில் மேலே ஏறுவது வாரணகிரியில். அங்கே அழகிய சிங்கரைத் தரிசனம் செய்து கொண்டே பின்னர் அத்திகிரிக்கு இன்னும் மேலே ஏற வேண்டும். மேலே ஏறினால் தேவராஜப் பெருமாள் என்ற பெயரில் மூலவர் எழுந்தருளி உள்ளார். ஆனால் இங்கே உற்சவர் ஆன வரதராஜருக்கே சிறப்பு அதிகம். அதோடு இந்தக் கோயிலில் தாயாருக்குச் சிறப்பும், செல்வாக்கும் அதிகம் என்கின்றனர். ஆகையால் முதலில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கவேண்டும். அதுக்கு முன்னால் அத்தி வரதர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அத்தி வரதர் மிகவும் பிரபலமானவர். அவரை நாம் தினமும் தரிசிக்க முடியாது. அவர் இருப்பதும் வெளியே ஏதோ சந்நிதியில் இல்லை. கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே உள்ள அநந்த சரஸ் என்னும் தீர்த்தத்தில் உள்ள நீராழிமண்டபத்தின் அடியில் நீருக்குள்ளே நிரந்தரமாய் சயனக் கோலத்தில்வெள்ளிப் பேழையில் இருப்பவர் அத்தி வரதர். பெரிய அத்திமரத்தால் செய்யப் பட்ட இவர் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் உடல் வெப்பத்தால் தகிப்பதாகவும், தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங்களில் திருமஞ்சனம் செய்யவேண்டும் என்று பட்டாசாரியார் ஒருவரது கனவில் வந்து சொன்னதாகவும், தினமும் திருமஞ்சனம் மூன்று வேளை செய்ய முடியாவிட்டால், தன்னை நிரந்தரமாய் அநந்த சரஸில் மூழ்க வைக்கும்படியும் பெருமாள் சொன்னதாகவும், நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்துத் தினமும் மூன்று வேளை திருமஞ்சனம் செய்ய முடியாது என்பதால் வரதரை நீரில் மூழ்கும்படிச் செய்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. மற்றோர் தகவலின் படி கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் வசம் இந்தக் கோயில் போய்விட, இங்கே இருந்த மூல விக்ரஹங்கள் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டன/கடத்தப் பட்டன. நரசிம்மர், ஹரித்ராதேவி தாயார், வரதர் போன்ற அனைவரும் பாடலிபுத்திரம் போய்விட, சில நாட்கள் கோயில் வழிபாட்டிலேயே இல்லை எனச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் கோயிலில் ஏற்கெனவே வழிபாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில், உற்சவர் இல்லையே என கோயிலின் பட்டர் ஒருவரும் ராமாநுஜரும் கூடி யோசித்து அத்திமரத்தால் வரதராஜரின் சிலா உருவை உருவாக்கியதாகவும், அந்நியர் கண்களில் இருந்து தப்பவேண்டி அநந்த சரஸில் வைத்திருக்கலாமெனவும் சொல்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப் பட்ட அத்திவரதர் நீருக்குள் போய் மறைந்தார். இனி மூலவரும் இல்லை, உற்சவரும் இல்லையே என்ன செய்வது? என யோசித்த அர்ச்சகர்களுக்கு பெருமாளே மீண்டும் கனவில் வந்து பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே இன்னொரு வரதர் இருப்பதாகச் சொல்லி அவரைக் கண்டு பிடித்துப் பிரதிஷ்டை செய்யச் சொல்லி இருக்கின்றனர். அவரைக் கண்டுபிடித்து இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து எழுந்தருளப் பண்ணி இருக்கின்றனர். அத்தி வரதரை பெருமாளின் ஆக்ஞைப்படியே நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனைகள் செய்து பின்னர் மீண்டும் நீருக்குள்ளேயே விடுவார்கள்.

கடைசியாய் 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வெளியே வந்திருக்கார். (அட, நாங்க செகந்தராபாத்தில் இல்லை இருந்திருக்கோம்?) மீண்டும் 2019- வருவாராம். ஹிஹிஹி, இருக்கோமோ, இல்லையோ? யாருக்குக் கொடுத்து வைக்கிறதோ தெரியலை, போகட்டும்! ஜெயஸ்ரீ கேட்ட சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சனர் இங்கே தான் குளக்கரையில் சேவை சாதிக்கிறார். மிகப் பெரிய சக்கரத்தாழ்வார் என்று சொல்கின்றார்கள். அநந்த சரஸ் தீர்த்தம் தவிரவும் வேகவதி ஆற்றையும் சேர்த்து மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வேணுகோபாலன், பூவராகன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தை நம்மாழ்வார் பெயரில் ஆழ்வார் வீதி என அழைக்கின்றனர். பெருமாள் கருடசேவையின் போது இந்த ஆழ்வார் வீதிக்குத் தான் முதலில் வருகின்றார். மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இன்னும் பல அடியார்கள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரையும் தரிசித்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமானது இங்கே உள்ள அம்மாள் காலட்சேபக் கூடம். வேதாந்த தேசிகரின் குருவான நடாத்தூர் வரதாசாரியார் என்பவர் தினமும் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார்.
அவர் செய்யும் நைவேத்தியங்களில் பாலும் இடம் பெறும். சூடாகக் காய்ச்சப்பட்ட பாலைச் சூடு போக நன்கு ஆற்றி, ஆற்றி இளஞ்சூடாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.. ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி சூடு பொறுக்காது எனக் கவனமாகச் செயல் படுவாளோ அதைப்போல் கவனமாகவும், பொறுமையாகவும் தினமும் இதைச் செய்து வந்ததால் பெருமாளே இவரை, “அம்மையே” என அழைத்ததாகவும், அது முதல் இவர் பெயர் நடாத்தூர் அம்மாள் என அழைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர்.

நாலாம் பிரஹாரத்தில் மடைப்பள்ளி. அங்கிருந்து பெருந்தேவி தாயார் சந்நிதிக்குப் போகும் வழியில் மீண்டும் பிரசாத விநியோகம் நடந்தது. இதுவும் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு மடைப்பள்ளியில் இருந்து வந்ததே. ஆனால் வெளியில் வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் கேட்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் தலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் கேட்கலை, நாங்களாகவே தீர்மானம் பண்ணிக் கொடுத்தோம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை விநியோகிக்கப் பட்டது. எந்தப் பெருமாள் கோயிலுக்கு எப்போது சென்றாலும் பிரசாதம் கிடைக்காமலோ அல்லது சாப்பிடாமலோ வரவே முடியாது. காக்கும் கடவுள் என்பதாலோ என்னமோ பெருமாள் கோயில்களுக்குப் போனால் வயிற்றைக் கவனிச்சுட்டுத் தான் அனுப்பறார் பெருமாள். இனி பெருந்தேவித் தாயாரின் சந்நிதி. அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். நிஜமாவே காஞ்சியைப் பத்தி ஓரளவு சுருக்கமாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, விரிவா எழுத ஆரம்பிச்சால் சிதம்பர ரகசியத்தை விடப் பெரிசாய் வரும்.

ஒண்ட வந்த பிடாரியா, ஊர்ப்பிடாரியா??

ரிமோட்டைக் குடு,

மாட்டேன், எனக்கு விஸ்வரூபம் சீரியல் பார்க்கணும்.

அது ஒம்போது மணிக்குத் தானே, இப்போக் கொடு,

இப்போ ஆரம்பிச்சுடும், ராஜ் டிவியிலே சீக்கிரம் ஆரம்பிக்கும்.

க்ர்ர்ர்ர்ர்ர் கொடுன்னா, நான் இந்த சீரியல் பார்த்துட்டு இருக்கேனில்லை?

பாருங்க, யார் வேண்டாம்னது?? நீங்கதானே இப்போ விளம்பர இடைவேளைனு சானல் மாத்தினீங்க? அது மட்டும் பரவாயில்லையா?

விளம்பர இடைவேளைம்போது இந்த சானலில் வர சீரியல் பார்ப்பேன்.

எத்தனை சீரியல் பார்ப்பீங்க?

ஏன்? உனக்கு ஒண்ணும் கம்ப்யூட்டரில் வேலை இல்லை? யாரும் மாட்டிக்கலையா சாட்டிங்குக்கு?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன், நான் இருந்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கோ?

நீ போய் உன்னோட எழுத்து வேலை ஏதும் இருந்தாப் பாரு, அது சரி, ராஜகோபாலன் போன் பண்ணினார் போலிருக்கே? அவருக்கு அனுப்ப மறந்துட்டியா?

அவர் ஒண்ணும் அதுக்கு போன் பண்ணலை. வேறே சந்தேகம் கேட்டுட்டு இருந்தார், அதான் நீங்க தான் கேட்டுண்டு இருந்தீங்களே?

எங்கே? நீ பேசிண்டிருந்ததிலே சீரியல்லே என்ன பேசிண்டாங்கங்கறதே புரியலை, நீ பேசினதும் என்னனு புரியலை. உள்ளே போய்ப் பேச மாட்டியோ??

நான் டிவி பார்க்க வந்தாலே உங்களுக்குப் பிடிக்கலை..

நான் உன்னோட கம்ப்யூட்டர் கிட்டே வரேனா?

நான் வேண்டாம்னு சொல்லலையே?

எங்கே? கொஞ்சம் தூசி தட்டிக் கொடுப்போம்னா, குய்யோ, முறையோனு அலறுகிறே??

ஆமாம், முன்னாடி தூசி தட்டறேன்னு எல்லா கனெக்ஷனையும் எடுத்துட்டுத் திரும்பப் போடறதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடுத்து. போன தடவை லோகல் ஏரியா கனெக்ஷனே வரலை. அப்புறம் எந்த வயர் விட்டுப் போயிருக்குனு ஆராய்ச்சி பண்ணிண்டிருந்தீங்க??

கண்டு பிடிச்சேனா இல்லையா? அதுக்குள்ளே டாடா கம்யூனிகேஷன்ஸ் ஃபீல்டு இஞ்சினியரைக் கூப்பிட்டு, ஒரே அமர்க்களம் பண்ணிட்டே.

அது சரி, விஸ்வரூபம் இன்னும் ஆரம்பிக்கலை??

ஆரம்பிக்கலையா?? முடிஞ்சுடுத்தே? இத்தனை நாழி என்ன நடந்ததுனு நினைக்கறே??

சரியாப் போச்சு போங்க, நான் சரியாவே பார்க்கலை! அந்த ருக்குவுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?

ருக்குவுக்கும், வெங்குட்டுவுக்கும் கல்யாணம் ஆகி ஆலத்தி எடுத்து உள்ளே அழைச்சாங்களே? பார்க்கலையா?

ம்ஹும் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, எப்போவோ சீரியல் பார்க்க வரேன், அதுவும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு, அதுவும் சரியாப் பார்க்க முடியாம.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அதான் முன்னாடி வந்தது தானே, இது ஒண்ணும் புதுசா வரலையே??

எங்கே?? அப்போவும் சரியாப் பார்க்கமுடியலை, அதோட முடிவும் சொல்லாம பட்டுனு நிறுத்திட்டாங்க, இப்போவாவது முடிவு சொல்றாங்களானு பார்க்கவேண்டாமா? இப்போவும் பார்க்கமுடியலைனா??? ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்!

என்ன பார்க்க முடியலை, நீ பார்க்கலைனா நான் என்ன பண்றது?? நான் கோலங்கள் பார்க்கிறதைக் கூட விட்டுட்டேன் உனக்காக. இந்த நேரத்தில் நான் கோலங்கள் தான் பார்ப்பேன். ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டின கதையா!!!!!!...............

என்னது நான் பிடாரியா??? எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்க!

பதிலே வரலை, இதுக்கு மட்டும் காதே கேட்கலை போலிருக்கு. ஊர்ப் பிடாரி யாரு, ஒண்ட வந்த பிடாரி யாருனு புரிஞ்சிருக்குமே! இன்னிக்கு இதான்! ஒரு வாரம் முன்னாலே நடந்தது இது! இரண்டு நாளா இணையமும் இல்லை, இணையம் பக்கம் வரவும் முடியலையா, எதுவுமே அப்லோட் பண்ணலை. நாளைக்குப் பார்க்கலாம்.

Saturday, October 31, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! 1


நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றும், ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீவித்யையை உபதேசித்ததும், சக்தி பீடங்களில் ஒன்றுமானது காஞ்சி என முன்னரே பார்த்தோம். காஞ்சி ஸ்ரீமந்நாராயணனின் இடுப்புப் பகுதியாகத் திகழ்வதாய்ச் சொல்லுவார்கள். அயோத்தி தலையாகவும், காசி மூக்காகவும், மதுரா கழுத்தாகவும், ஹரித்வார் மார்பாகவும், துவாரகை தொப்புளாகவும், அவந்தி காலடியாகவும் சொல்லப் படும். பஞ்சாமிர்த க்ஷேத்திரங்களில் ஒன்றாயும் சொல்லுவார்கள் காஞ்சியை. மற்றவை திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம் என அழைக்கப் படும் மேல்கோட்டை. ஸ்ரீ ராமாநுஜர் திருமஞ்சன கைங்கர்யம் இங்கே செய்து வந்த வேளையிலேயே பரந்தாமன் வைணவத் தலைமையை அவர் ஏற்கும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தான் என்றும் சொல்லுவார்கள். பரந்தாமனுக்கு இணக்கமான ராமாநுஜரைத் தியாகம் செய்ததால் தியாக மண்டபம் எனவும் வரதராஜப் பெருமாள் கோயில் அழைக்கப் படுகிறது.

பரமஞாநிகள் வாழ்ந்த இடமான காஞ்சியில் அருள் பாலிக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாளைக் கிருத யுகத்திலேயே பிரமன் வழிபட்டதாகச் சொல்கின்றனர். திரேதா யுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும் கலியுகத்தில் அநந்த சேஷனும் வழிபட்டனர். சரஸ்வதியின் கோபத்தைப் பரந்தாமன் போக்கிய தலம் இது. நாரதர், ஆதிசேஷம், பிருகு முனிவர், இந்திரன் ஆகியோரும் வழிபட்டிருக்கின்றனர். மஹாபாரதத்தில் குறிப்பிடப் படவில்லை என்றாலும் வில்லி பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையில் காஞ்சிபுரம் வந்து தீர்த்த ஸ்நாநம் செய்து மற்றும் ஏழு நதிகளில் நீராடியதாயும் சொல்லப் பட்டுள்ளது. பொய்கை ஆழ்வார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்தது இங்கேயே. பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீநிமாந்த மஹாதேசிகர், அப்பய்ய தீக்ஷிதர், புரந்தரர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மா ஆகியோரால் வழிபாடுகள் செய்யப் பட்டும் போற்றிப் பாடப்பட்டும் சிறப்புப் பெற்ற தலம்.

காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் பிரசாதமான மிளகுவடையும், அருமையாக இருக்கும் என்பதோடு பல நாட்கள் ஆனாலும் வீணாய்ப் போகாது என்பது இதன் தனிச்சிறப்பு. கோயிலின் குடையின் அழகும், வரதராஜர் பவனி வரும் பல்லக்கின் பல்லக்குத் தூக்கிகள் நடக்கும் நடை அழகும் மிகவும் பிரசித்தி பெற்றவை. வடை பிரசாதம் நேரடியாகக் கோயில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிச் சாப்பிடணும். எங்களுக்கு அன்று பிரசாதமாகக் காஞ்சிபுரம் இட்லி கிடைத்தது. சந்நிதிக்குள் நுழையும் இடத்தில் அன்றைய காலை வழிபாட்டின் நைவேத்யப் பிரசாதத்தை பட்டாசாரியார் விநியோகித்துக் கொண்டிருந்தார். அபூர்வமாய்க் கிடைத்தது. வெளியே ஸ்டால்களில் விற்பது பிரசாதம் அல்ல.

வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் போய் இறங்கியதுமே பலவிதமான துணிக்கடைகள். எல்லாமே கைத்தறிக் கடைகள் ஒவ்வொரு முறை செல்லும்போது பார்ப்பேன். பெரிய காஞ்சியை விட இந்த விஷ்ணு காஞ்சியிலேயே நிறையக் கடைகள் கைத்தறித் துணி விற்பவையாக உள்ளன. கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே தரிசனத்துக்குச் சென்றோம். தல வரலாறை பிரம்மாண்ட புராணத்தில் காணலாம் என்று சொல்கின்றனர். ஹஸ்திகிரி வரலாறு எனவும் சொல்லப் படுகிறது. பிருகு முனிவர் கேட்க நாரதர் சொன்ன அந்தத் தல வரலாறு பின் வருமாறு:

திருமகளுக்கும், கலைமகளுக்கும் யார் பெரியவங்க என்பதில் போட்டி வந்தது. பிரம்மாவிடம் போய்ச் சந்தேகம் கேட்க திருமகளே பெரியவள் என பிரம்மா தீர்ப்புச் சொல்லிவிடுகிறார். சரஸ்வதிக்குக் கோபம் வந்து சிருஷ்டிக்குப் பயன்படுத்தும் சிருஷ்டி தண்டத்தை எடுத்துக் கொண்டு பிரமனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். சிருஷ்டி தண்டம் இல்லாமையால் படைப்புத் தொழிலே நின்று போக மஹாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார் பிரமன். அவரை நூறு அஸ்வமேத யாகம் செய்யச் சொன்ன விஷ்ணு, பின்னர் திவ்யக்ஷேத்திரமான காஞ்சியில் ஒரு முறை செய்தாலே நூறு முறை செய்தாற்போல் ஆகும் எனச் சொல்லி அங்கே போகச் சொல்ல, பிரமனும் காஞ்சிக்கு வருகிறார். காஞ்சியில் யாகத்தைத் துவக்கிய பிரமன் சரஸ்வதியை யாகம் செய்யத் துணைக்கு அழைக்க, சரஸ்வதி வர மறுக்கிறாள். உடனே சாவித்திரியின் உதவியோடு யாகத்தைத் துவக்கினார் பிரமன். கோபம் கொண்ட சரஸ்வதி, அக்னி, அசுரர்கள் மூலம் யாகத்தைத் தடுக்க முயல, விஷ்ணுவின் உதவியால் அவை தடுக்கப் படுகின்றன. ஆனால் சரஸ்வதியோ நதியாக மாறி தனது நீர் உருவெடுத்து வேகமாய் வேகவதியாகப் பெருக்கெடுத்து ஓடி வருகிறாள். அவள் செய்யப் போவதை உணர்ந்த விஷ்ணு அங்கே தம் கால், கைகளைப் பரப்பிப் படுத்துக் கொண்டு அணை போல் குறுக்காகப்ப் படுத்துக் கொண்டு வெள்ளத்தின் வேகத்தைத் தடுத்தார். தன் வழியில் குறுக்கிட்ட விஷ்ணுவைக் கண்டு நாணம் அடைந்த சரஸ்வதி ஒரு மாலை போல் அவரைச் சுற்றிக் கொண்டு போய் பூமியில் அந்தரவாஹினியாக மறைந்தாள். யாகம் இனிதாய் முடிவடைய, யாகத்தில் ஜோதிப் பிழம்பாய், தீபப் பிரகாசராய் விஷ்ணு தோன்றினார். சிருஷ்டி தண்டத்தை பிரமனிடம் ஒப்படைக்க, பிரமன் அவரை அங்கேயே புண்யகோடி விமானரூடராக எழுந்தருளப் பிரார்த்திக்கிறார். பெருமாளும் அவ்வண்ணமே அங்கே எழுந்தருளுகின்றார்.

சிருஷ்டி தண்டத்தை பிரமனுக்கு அளித்த நாள் கிருத யுகம் ஐந்தாவது மன்வந்தரத்தில் யுவ வருஷம், விருஷப மாதம், சுக்லபக்ஷ சதுர்த்தசி அஸ்வ நக்ஷத்திரம் என்ரு சொல்லுவார்கள். மேற்கண்ட கேள்வியை இந்திரனிடமும் கேட்டதாகவும் இந்திரனும் திருமகளையே உயர்த்திப் பேசியதால் சரஸ்வதி அவனை யானையாக மாறும்படி சபித்ததாகவும், இன்னொரு வரலாறு கூறுகிறது. மகாலக்ஷ்மி இந்திரனை பிரஹலாதனிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்று ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெறும்படிச் சொன்னதாகவும், அதன் படி இந்திரன் இங்கே வந்து சாப விமோசனம் பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்திரனுக்கு ஸ்ரீநரசிம்மர் பிரத்யட்சமாகி அவனுடைய கஜரூபத்தை இரண்டாய்ப் பிளந்து சுயரூபத்தை அருளினார். அந்த நரசிம்ம மூர்த்தி, கஜரூபத்தையே மலையாகக்கொண்டு அங்கேயே குகை நரசிம்மராக எழுந்தருளி இருக்கிறார். ஹஸ்தி என்னும் யானை மலையாக மாறியதால் இந்தப்பகுதி ஹஸ்திகிரி எனப் படுகிறது.

நாங்க எடுத்த படம் சரியா வரலை என்பதாலும் அப்லோட் ஆவதில் நேரம் எடுப்பதாலும் போடமுடியவில்லை. வேலூர் ஜலகண்டேஸ்வரர், ரத்தினகிரி படங்கள் முடிந்தால் போடுகிறேன். :( காஞ்சியைக் குறித்த தகவல்கள் இன்னொரு புத்தகம் எழுதலாம் போல் நிறையவே இருக்கின்றன.

Friday, October 30, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பன் 2


இப்போ இருக்கும் மாமரம் பழைய மாமரம் இல்லைனு ஆதாரபூர்வமாய்த் தெரிய வந்தது. ஆனாலும் இதன் பழங்களும் வித்தியாசமான சுவையோடு இருக்கு, பழைய மரத்தின் கிளை அல்லது விதையிலிருந்து வந்ததுனு சொல்றாங்க. இந்த விஷயம் எனக்குப் புதுசு. போகட்டும். மூலவர் தழுவக் குழந்த நாதரையும், மூலஸ்தானத்திலேயே அம்மன் ஈசனை அணைத்த கோலத்திலேயே லிங்கம் காட்சி கொடுப்பதையும் கவனித்துத் தரிசனம் செய்யவேண்டும். அம்பாளே பிரதிஷ்டை செய்த மணல் லிங்கம் என்பதால் இந்த லிங்கத்திற்கு தேவிக லிங்கம் என்று பெயர். அபிஷேஹம் கிடையாது. காமாக்ஷி அம்மன் கோயிலின் ஸ்ரீசக்ரத்தை ஈசனை ஸ்தாபனம் செய்யச் சொன்னாளாம் அம்பிகை. முதன்முதல் இங்கே ஸ்ரீசக்ரம் ஸ்தாபனம் செய்தது ஈசனே என்றும், அம்பாளே இந்தப் பீடத்திற்குக் காமகோடி பீடம் என்ற பெயரில் விளங்கட்டும் என்று சொன்னதாகவும் தெரியவருகிறது. பூஜை முறைகளும் துர்வாச வடிவத்தில் ஈசனையே வகுத்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டாள் என்கின்றனர். ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே காமாக்ஷி கோயிலில் வழிபாடுகள், ஆராதனை எல்லாம் நடக்கும். இந்த ஸ்ரீசக்ரம் கிருத யுகத்தில் துர்வாசரும், த்ரேதாயுகத்தில் பரசுராமரும், த்வாபர யுகத்தில் தெளம்யரும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் பொலிவூட்டி வழிபட்டிருக்கின்றனர்.

பொதுவாக சிவசக்தி பிரிவதில்லை என்பதால் எல்லாச் சிவன் கோயில்களிலும் லிங்கத்தின் பக்கம் அம்மன் இருப்பது ஐதீகம். ஆனால் ஏகாம்பரேஸ்வரரின் லிங்கத்திலேயே அம்மனும் சேர்ந்து காட்சி கொடுக்கிறாள். அதோடு காஞ்சியில் எந்தச் சிவன் கோயிலிலும் அம்பிகை சந்நிதி கிடையாது. சிற்பங்களும், அழகாய் இருந்தாலும் படம் எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளது. வாரம் ஒருநாள் அம்மன் ஈசனைத் தழுவிய கோலம் தெரியும்படியான கவசத்தினால் அலங்கரிக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். உற்சவ அம்மனுக்கு ஏலவார் குழலி என்று பெயர். இந்தக் கோயிலில் தற்சமயம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் முன்னாட்களில் நூற்றுக் கால் மண்டபமாக இருந்து, பின்னர் பிற்காலச் சோழர்களால் ஆயிரக்கால் மண்டபமாய் மாற்றப் பட்டது என்றும் சொல்கின்றனர். தற்சமயம் காணப்படும் தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப் பட்டது என ஒரு கல்வெட்டுக் கூறுவதாயும் தெரியவருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை இங்கே கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.

இங்கே உள்ள கொடிமரத்தின் முன்னே, சிவகங்கை தீர்த்தத்தின் தென்கரையில் உள்ளது கச்சிமயானம் எனச் சொல்லப் படும் சந்நிதி. இங்கேதான் யாகசாலையில் பண்டாசுர வதம் நடந்தது எனச் சொல்லப் படும். சிவகங்கைத் தீர்த்தமே அம்மனும் ஈசனும் வளர்த்த நெய்க்குண்டம் தான் என்று சொல்லுகிறார்கள். இந்தக் கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி யாகசாலை நெருப்பிலிருந்து உண்டானது என்றும் சொல்கின்றனர். இங்கே உள்ள விநாயகர் விகட சக்ர விநாயகர் என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். வெளிப்பிராஹாரம் பெரியதாய் உள்ளது. நாங்க நிறையத் தரம் வந்து சுத்தி இருப்பதாலும், மேலும் பார்க்க, நடக்க நிறைய இடங்கள் இருப்பதாலும் வெளிப்ரஹாரம் சுத்தவில்லை. வெளியே வந்து வண்டி இருக்குமிடம் தேடினோம். நம்ம ஆகிரா இருக்கும் தெருவில் தான் வண்டியை நிறுத்தி இருந்தாங்க. அங்கே போய் உட்கார்ந்து கொண்டு மத்தவங்க வரதுக்குக் காத்திருந்தோம். எல்லாரும் வந்ததும், நாங்க கிளம்பினது திருப்புட்குழி. ஆனால் நாம் காஞ்சிபுரத்தின் வரதராஜரைப் பார்க்கலையே இன்னும். வரதராஜரைப் பார்த்துட்டுத் தான் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கே வந்தோம். ஆனால் வசதிக்காக் ஏகம்பனைப் பத்தி எழுதியாச்சு. அடுத்து கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!

படங்களே கொஞ்சம் தான் எடுக்க முடிஞ்சது. அதுவும் சரியா அப்லோட் ஆகலை, என்னமோ எந்தப் படமும் போடமுடியலை, ஓரளவுக்கு சிவகங்கை தீர்த்தம் படம் வந்திருக்கு, அதைப் போட்டிருக்கேன்.