Wednesday, December 31, 2008

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைப் பரப்பட்டும். நிம்மதியான,பாதுகாப்பான வாழ்க்கை அமையவும் வாழ்த்துகள். அனைத்துத் தரப்பினரும் எல்லா நலன்களும் பெற்று வாழவும் வாழ்த்துகள். மழை பொழியவும், மண் வளம் பெறவும், அதன் மூலம் காடுகள் வளம் பெறவும், இயற்கையை ரசிக்கவும், இயற்கையோடு இசைந்து வாழவும், மற்றவர்கள் துயரம் தீர்க்கவும் பழகுவோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

நாடு நலம் பெறப் பாடுபடுவோம்!

Thursday, December 25, 2008

இப்போத் தான் சொல்ல முடிந்தது!

ஹிஹிஹி, இங்கேயும் பஜனை பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்று சிஷ்ய(கோ)கேடிங்க பல்லைக் கடிக்கிறது தெரியுது, இல்லை, இல்லை, பஜனை எல்லாம் பண்ணலை. ஏப்ரல் மாசம் பண்டரிபுரம் போயிட்டு வந்துட்டு அது பத்தி எழுத நினைச்சேன், எழுதவே முடியலை. பண்டரிநாதர் படத்தைப் போட்டு வச்சுட்டுப் பதிவே எழுதமுடியலையே அதான், ஏதாவது எழுதலாம்னு.

பண்டரிநாதர் கதை எல்லாம் இங்கே சொல்லப் போறதில்லை. அது தனியா வச்சுக்கலாம்.இந்திய ரயில்வேயின் சுற்றுலாத் திட்டத்தில் செல்லும் ரயில் பயணத்தின் மூலம் நாங்க மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, த்ரயம்பகேஸ்வர் கோயில், ஷிர்டி, சனி ஷிங்கனாபூர் மற்றும் பண்டரிபுர் போனோம். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயிலில் மொத்தம் ஏழு பெட்டிகள் இருக்கின்றன. இங்கே சென்னையில் போட் க்ளப் சாலையில் அமைந்திருக்கும் ட்ராவல் டைம்ஸ் காரர்களால் ஒப்பந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பயண ஏற்பாடுகள் அமைகின்றன. ரயில்வே அமைச்சகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து இதில் செயல்படுகின்றது. மிக மிக அருமையான ஏற்பாடுகள். கட்டணமும் ஏற்கும் அளவுக்கே, அதிகமான கட்டண வசூல் என்று குறை சொல்ல முடியாது. பயணிகளுக்கென ஆறு பெட்டிகளும், பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் குழுவினருக்கென ஒரு பெட்டியும், சமையல் செய்ய, சமையல் சாமான்கள், சமையல்காரர்கள், மற்றும் உதவும் ஆட்கள் இவர்களுக்கென ஒரு பெட்டியும் ஒதுக்கப் படுகின்றது. ஒரே குறை இதிலே குளிர்சாதன வசதி கொண்ட தூங்கும் வசதிப் பெட்டி இல்லாமைதான். அனைவராலும் அந்தக் கட்டணம் ஏற்கமுடியாது என்பதால் தூங்கும் வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டிகளே அனைத்திலும். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உட்பட மொத்தம் 500 பேருக்குக் குறையாமல் பயணிக்கின்றனர்.இதிலே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அவர்கள் கொடுக்கும் உணவு சாத்வீக உணவு. என்றாலும், வெங்காயம், பூண்டு தவிர்க்கலாம் இது புனித யாத்திரைகள் என்பதால். அதையும் நாங்கள் ஒரு ஆலோசனையாகக் கொடுத்திருக்கின்றோம். பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவுகளை எங்களைப் போல் பலரும் தவிர்த்தனர். காலை ஒருவேளை காஃபிக்கு டோக்கன் கொடுத்துவிடுகின்றனர். அதைக் கொடுத்துவிட்டுக் காலை காஃபி பெற்றுக் கொள்ளலாம். பின்னர் தேவைப் பட்டால் காஃபி, டீ நம் சொந்த செலவில். காலை ஆகாரமும் எளிமையாக கேழ்வரகு சேர்த்தோ, கோதுமை சேர்த்தோ உப்புமா அல்லது இட்டிலி, பொங்கல் என்று எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலேயே தருகின்றனர். மதியமும் சாப்பாடு எளிமையாக இருக்கின்றது. பின்னர் இரவு சாப்பாடும் அதேபோல். ஒரு பெட்டிக்கு இரு பாதுகாவலர் அமைப்பாளர்களே ஏற்பாடு செய்கின்றனர். ரயிலில் இருந்து இறங்கி நாம் பார்க்கப் போகவேண்டிய இடத்தின் தூரத்திற்குத் தகுந்தாற்போல் பெரிய வோல்வோ பேருந்துகள் ஏற்பாடு செய்யப் பட்டு ஒவ்வொரு பெட்டியின் எண்ணும் அந்த அந்தப் பேருந்துக்குக் கொடுத்துவிடுகின்றனர்.

நம் பெட்டியின் எண் உள்ள பேருந்தில் ஏறிக் கொள்ளவேண்டும். ஆகவே அடிச்சுப் பிடிச்சு ஏறிக்கணும்னு எல்லாம் கிடையாது. மேலும் தங்கப்போவது ஒரு இரவோ அல்லது ஒரு பகலோ தான் என்பதால் பெட்டி, படுக்கையை எல்லாம் ரயிலிலேயே வைத்துவிட்டுப் போகலாம். பாதுகாவலர்கள் ரயிலிலேயே இருப்பார்கள் என்பதால் பயமும் இல்லை. நாம் தங்குமிடத்துக்குப் போகும் முன்னரே அங்கே சமைப்பவர்கள், உதவியாளர்கள் போய்விடுகின்றனர். ஆகவே நாம் தரிசனம் எல்லாம் முடித்துக் கொண்டு வரும்போது உணவும் தயாராகக் காத்திருக்கும். ரயிலில் போகவேண்டிய இடங்களுக்கு ரயிலிலேயே அழைத்துச் சென்று விடுகின்றனர். இதற்கென ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதி கொடுத்திருக்கின்றது. மற்றப் பயணிகள் யாரும் இந்த ரயிலில் ஏறவோ, இறங்கவோ முடியாத அளவுக்குக் கடுமையான கண்காணிப்பு. தண்ணீர் பிடிக்கவும், மற்றத் தேவைகளுக்காகவுமே பெரிய ரயில் நிலையங்களில் நின்றாலும், சில சமயம் சிக்னல் கிடைக்காமலும் நிற்கவேண்டி வருகின்றது. ஆனால் பயணம் செல்லும் நேரங்களில் வேகமாய்ப் போய் விடுகின்றனர்.

தங்குமிடங்கள் தான் கல்யாண மண்டபம், ஏதேனும் சத்திரம் என்று ஏற்பாடு செய்கின்றனர். இது சிலரின் செளகரியத்தை உத்தேசித்து என்றாலும், சிலருக்கு அசெளகரியமாகவும் இருக்கின்றது. அத்தனை பேரும் குளித்துக் காலைக்கடன்கள் முடித்துத் தயாராகத் தேவையான வசதிகள் இருப்பதில்லை. எங்களில் சிலர் தனியாகப் பக்கத்திலேயே இருக்கும் லாட்ஜுகளில் அறைகள் எடுத்துக் கொண்டு தங்கினோம். அமைப்பாளர்கள் மூலமும் அறைகள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றாலும் நாமாய்ப் போனால் 500ரூ 600 ரூ இருக்கும் அறைகள் அவங்க மூலமாய்ப் போகும்போது 1,200ரூ ஆக இருக்கின்றது. ஆகவே நாங்க மொழிப் பிரச்னை இல்லாத காரணத்தால் நாங்களாகவே அறை எடுத்துக் கொண்டோம். மத்தவங்க தங்குமிடத்துக்கு அருகேயே! "பாரத தரிசனம்" என்ற பெயரில் செல்லும் இந்த ரயிலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பார்க்கும்படி வசதி செய்து கொடுக்கின்றனர். இனி நாங்கள் போன விபரம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். கும்பகோணம் போனதே இன்னும் முடிக்கலைனு பல்லைக் கடிக்கிறது காதிலே விழுதே, அதுவும் வரும்.

Friday, December 19, 2008

நீங்க க.கை.நா.??? இதைப் படிங்க முதல்லே!

அப்படி ஒண்ணும் பெரிசா தொழில் நுட்பம் தெரியாது தான். ஆனால் அதுக்காக ஒரேயடியா மட்டம்னும் இல்லை. என்றாலும் சில விஷயங்கள் புரியலை பதிவுகள் எழுத ஆரம்பிச்சப்போ. இந்த அம்பி பிடிவாதமா எனக்கு எதுவுமே சொல்லித் தரலை.(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனால் அதுக்காக மத்தவங்க சும்மா இல்லை. முக்கியமா சூடான் புலியும், உ.பி.ச.வும் நிறையவே உதவி செய்தாங்க. அதிலேயும் புலி நிறையவே உறுமிட்டுப் போயிருக்கு. ஆனால் இந்த டாடா இண்டிகாம் காரங்க உதவினாப் போல இருக்குமா என்றால் இல்லைனு தான் சொல்லணும்.

எந்த வேளையில் இந்த சேவையை எடுத்துக் கொண்டேனோ தெரியலை, முதலில் எல்லாம் ஒழுங்காவே போயிண்டிருந்தது. பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் நானும் ஒரு தலைவியாக ஆகி, பிரசித்தி பெற்ற எழுத்தாளியாக மாறி இலக்கியம் படைக்க ஆரம்பிச்சதும் எங்கே இருந்தோ சதிவேலைகள் துவங்கிட்டன. முதல்லே 06-ம் வருஷம் எக்ஸ்பி ரீ இன்ஸ்டால் பண்ணதில் ஆரம்பிச்சது பிரச்னை. அப்புறமா ஒரு மாசம் இணையம் இல்லாமல், போதும், போதும்னு ஆயிடுச்சு. வாடிக்கையாளர் சேவை மையம் இருப்பது ஹைதராபாதில், சேவை கொடுப்பது சென்னையில். எங்க ஏரியாவுக்கான செர்வர் இருப்பது பக்கத்துத் தெருவில், அதுவும் நாங்க ரொம்பவே அடிக்கடி புகார் செய்யறோம்னு மாத்தினாங்க. அந்த வீட்டுக்காரர் டாடா செர்வரிலேயே அவங்க வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு நினைவா செர்வரையும் ஆஃப் செய்து வச்சுடுவார். இது தெரியாம நாங்க இங்கே லபோ திபோ னு அலறுவோம். வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொலைபேசினால் எல்லா நேரமும் எடுப்பாங்கனு சொல்லவும் முடியாது.

முதல்லே அவங்க கொடுத்த நம்பரைப் போட்டு அழைக்கணும். வரவேற்பு கொடுத்ததுக்குப் பின்னர் நமக்கு ஒன்று, இரண்டு கத்துக் கொடுப்பாங்க. அதைக் கத்துக்கிட்டதும் தான் நமக்கு தொழில் நுட்ப சேவையின் நம்பரே வரும். உடனே எடுத்துப் பேசினால் உங்க அதிர்ஷ்டம். லோகல் செர்வர் வீக்குன்னா அவங்க எடுக்கவே மாட்டாங்க. "All the Executives are busy. Please stay on the line or try later"அப்படினு recorded message வந்தாலே சரி ஏதோ முக்கியமான பிரச்னை, இப்போ எடுக்க மாட்டாங்கனு புரிஞ்சுடும். அப்பாடா, எப்படிப் பாருங்க, ஒரே வரியிலே புரிய வைக்கிறாங்க. இதிலே சொல்லிக் கொடுக்கும் அவங்க திறமைசாலியா, கத்துக்கும் நாம திறமைசாலியானு சந்தேகமே வரும். அப்படி ஒண்ணும் இல்லைனா தொலைபேசியை எடுத்துச் சமயங்களில் குயில் கூவும், இல்லைனா மயில் அகவும். ஹிஹி, புரியலையா?? குயில் போலக் கொஞ்சிக்கொஞ்சி யாராவது ஒரு பெண்ணோ, மயில் போல அகவிக் கொண்டு யாராவது ஒரு ஆணோ பேசுவார்கள். நமக்கு இணைப்பு வரலைனதும் அவங்க படற வருத்தத்தைப் பார்த்து நமக்குக் கண்ணீரே வந்துடும். ஆஹா, இவ்வளவு வருத்தப் படறாங்களே, உடனே நம்ம சேவையைக் கவனிப்பாங்கனு நீங்க நினைச்சால். அது உங்க மடத் தனம்.

உங்களோட அடையாளச் சொல் கேட்டுக் கொண்டு, எங்கே இருந்து பேசறீங்க, உங்க மாற்று அடையாள மெயில் ஐடி என்ன, தொலைபேசி எண் இதுதானா என்று எல்லா உறுதிகளும் செய்து கொண்டு (இது ஒவ்வொரு முறையும் கேட்கப் படும். இப்போ எனக்கு என்னோட பேரே மறந்துடுச்சு, இந்த யூசர் ஐடிதான் நினைவிலே இருக்கு) அப்புறமாச் சொல்லுவாங்க, "மேடம், உங்க மோடத்திலே/ரவுட்டரிலே எல்லா லைட்டும் எரியுதா?? எரியுது அல்லது இல்லை, அல்லது விட்டு விட்டு எரியுது, அல்லது கண் சிமிட்டிட்டே இருக்குனு நீங்க சொன்னதும்

சேவை மையம்:"ரீ ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்"

நாம்: பண்ணிட்டேனே, பலமுறை.

சேவை: அப்படியா, சாரி மேடம், இப்போ நீங்க என்ன செய்யறீங்க ஸ்டார்டிலே போய் ரன் என்று ஒரு ஆப்ஷன் இருக்குமே அதை க்ளிக் பண்ணி கமாண்டிலே போய்"..........

நான்: ping தானே போடச் சொல்றீங்க? போட்டுப் பார்த்துட்டேனே, பைட்ஸே போகவும் இல்லை, வரவும் இல்லை.

சேவை: அடடா, மேடம், இப்போ என்ன செய்யறது?? ம்ம்ம்ம்? இந்த alternative gateway னு ஒண்ணு இருக்கு, அதிலே.....

நான்: properties போய் அதையும் போட்டுப் பார்த்தாச்சே, லோகல் ஏரியா கனெக்ஷனையும் ஒரு தரம் ஆப் பண்ணிட்டுத் திரும்ப ஸ்டார்ட் பண்ணி எல்லாம் பண்ணிட்டேனே??

சேவை: அப்போ ஒண்ணு செய்யுங்க, அந்த கேபிள் வயர் தொங்குதே உங்க கணினிக்கு மேலே தொங்குதா, வெளியே இருக்கா அதிலே, ஒரு வெள்ளைக் கலர் பாக்ஸ் இருக்கும்.

நான்: ஜங்ஷன் பாக்ஸ்தானே? அதை ஆஃப் செய்து லூப்பிலே போட்டு, பின்னாடி லைனுக்கு மாத்தி, கேபிளை எல்லாம் மீண்டும் பிட் பண்ணி எல்லாம் செய்து பார்த்துட்டேன்.

சேவை: சரி மேடம், (வேறு வழியில்லை, பல்லைக் கடிப்பாங்கனு நினைக்கிறேன்.) கொஞ்ச நேரம் காத்திருக்க முடியுமா? உங்க புகாரைப் பதிவு செய்து கொண்டு, உங்களுக்கு நம்பர் தரேன்.

நான்: வேறே வழி?? கொடுங்க, காத்திருக்கேன்
.

ஒரு சகிக்க முடியாத, காதால் கேட்க முடியாத கொடுமையான சங்கீதம் ஒலிபரப்பப் படும். சில, பல நிமிடங்களுக்குப் பின்னர், குயில் மீண்டும் கூவும். "மேடம், இதுதான் உங்கள் புகார் எண். இந்த நிமிடத்தில் இருந்து 24 மணி நேரம் கணக்கு. அதுக்குள்ளே உங்க புகார் சரி செய்யப் படும். அப்படி இல்லைனா நீங்க மீண்டும் எங்களை எப்போ வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். எங்களோட எண் .............. Good Day Madam. We are here to serve you. தொலைபேசி வைக்கப் படும். இப்படியாகத் தானே, நான் ஒரு தொழில் நுட்ப நிபுணியாகிவிட்டேன், இப்போ டாடா இண்டிகாம் தயவாலே. செர்வர் சரியில்லைனா யுபிஎஸ்ஸுக்கு பாட்டரி மாத்தினீங்களானு அவங்களையே இப்போக் கேட்டுட்டு இருக்கேன்.

24 மணி நேரத்துக்குள்ளே சரி செய்யலைனா என்ன நடக்கும்கிறதை இன்னொரு பதிவாத் தான் எழுதணும். இன்னிக்குத் தான் கிட்டத் தட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது வருது இணையம். வேறே வேலை இருக்கு, அதை எல்லாம் முடிக்கணும், வர்ட்டாஆஆஆஆஆஆ??????

Wednesday, December 17, 2008

இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே??

இங்கே கூடத் தேடிப் பிடிச்சுட்டு வந்து பின்னூட்டம் போட்டிருக்கும் துளசிக்கும், அம்பிக்கும் நன்னியோ நன்னி! எனக்குத் தான் கொஞ்ச நாட்களாய் யாரோட பதிவுக்கும் போக முடியாமல் இருக்கு. கொஞ்ச நாட்களில் சரியாகும்னு நம்பறேன். எல்லாருமே நிறைய எழுதி இருக்காங்க, அதனால் படிக்கவும் நிறைய இருக்கு. நேரம் தான் கிடைக்கலை. போகட்டும். இப்போ கும்பகோணம் பயணம் தொடர்ச்சி.

அடுத்த வண்டி வந்ததும் ஏறிக் கொண்டு போகிறதுக்குள்ளே இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வந்துடுச்சு. ஒரு வழியா செண்டரலில் இருந்து ஆட்டோ பிடிச்சுட்டு எழும்பூர் போய்ச் சேர்ந்தால் வாசலில் அனுமார் வால் போல வரிசை நிக்குது, செக்யூரிடி செக்கப்புக்கு. ஏர்போர்டில் எல்லாம் பார்க்கிறது இவ்வளவு இருக்காது. இங்கே பல வண்டிகளின் பிரயாணிகளும் சேர்ந்து ஒரே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாய் வரிசை. அதிலே போய் நின்னால் நல்லவேளையா பைரவர் வரலை எங்களுக்கு. ஸ்கானிங் மட்டும் பண்ணிட்டு அனுப்பிட்டாங்க. வண்டி சரியான நேரத்துக்கு வந்துட்டு, கும்பகோணம் போய்ச் சேரும்போது வழக்கம்போல் தாமதமான நேரத்துக்குப் போனது. அங்கே இருந்து சத்திரம் போய், குளிச்சு, காலை ஆகாரம் சாப்பிட்டு, கல்யாண விசேஷங்கள் ஆரம்பிக்க நேரம் இருந்ததால் மறுநாளே திரும்பவேண்டிய நிர்பந்தம் காரணமாய் நாங்க திரும்பறதுக்கு வண்டி இருந்தால் முன்பதிவு செய்துடலாம்னு போனோம். ஏற்கெனவே பெண்ணோட அப்பா கும்பகோணத்துக்கு வரணும்னால் திருச்சி வந்து தான் வரணும்னு சொல்லி இருந்தார். அதையே என்னுடைய தம்பியும், தான் காரில் வந்தப்போ சுத்தி வந்ததாய்ச் சொல்லவே, அஸ்தியில் ஜுரம் கண்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டுப் பேருந்து நிலையம் போனோம்.

அங்கே இரண்டு முன்பதிவு கவுண்டர்கள். எதிலே பண்ணறதுனு தெரியாமல் குழம்பிப் போய் ஏசி பேருந்து எனக் கேட்க பக்கத்திலே போங்கனு சொல்ல, அங்கே போனால் ஏசி பேருந்து 4 மணிக்குத் தான் என்று சொல்ல, அதுக்கு முன்னாலே பார்த்தால் 1-40 மணிக்குக் கிளம்பும் பேருந்து தான் சரியா இருக்கும்னு தோணவே, அதிலே செய்து கொண்டோம். பஸ் சூப்பர் டீலக்ஸ் பஸ் என்பதால் கட்டணமும் அதிகமாய் வாங்கினாங்க. சரினு வாங்கிட்டோம். அப்புறம் திரும்ப சத்திரம் வந்து விசேஷங்களில் கலந்து கொண்டு மதியம் சாப்பாடு ஆனதும், நாங்கள் ஏற்கெனவேயே பெரியகடைத் தெருவில் முன்பதிவு செய்து வைத்திருந்த வழக்கமான லாட்ஜுக்குப் போய் விட்டோம். அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் பக்கத்தில் இருக்கும் கோவிந்தபுரமும், திருவிசை நல்லூரும் பார்த்துட்டு வந்துடலாம்னு கிளம்பினோம். இரண்டும் கும்பகோணத்தில் இருந்து ரொம்பக் கிட்ட இருந்தது. ஆறு மணிக்குள்ளே வந்துடலாம். ஆகவே ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு கிளம்பினோம். கோவிந்தபுரம் போகும் வழியில் தான் தட்சிண பண்டரிபுரம் என்னும் கோயில் புதியதாய்க் கட்டப் பட்டு வருகின்றது.

ஜெயா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிறு அன்றும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் என்பவரின் பஜனைகளைக் காண்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். கீத கோவிந்தம் பாடல்களையும் பண்டரிநாதனின் புகழையும் பரப்பி வரும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் அவர்கள் திரு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு யாத்திரையும் சென்று வருகின்றார். இந்த வருடமும் செல்கின்றனர். இவர் ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களின் சீடர். அவரைப் போலவே நல்ல வளமான குரலும் இருக்கின்றது. ஞாயிறு அன்று காலை 6-30 மணி அளவில் பக்த விஜயம் என்னும் பண்டரிநாதரின் பக்தர்களின் கதைகள் பற்றியும் சிறு சொற்பொழிவு செய்து வருகின்றார். பண்டரி நாதன் பற்றியும், பண்டரிபுரம் பற்றியும் ஏற்கெனவே எழுதணும்னு பலமுறைகள் நினைச்சும் எழுத முடியலை. இனி பண்டரிநாதன் பற்றி, நாளை.

Tuesday, December 9, 2008

யாருக்கும் தெரியாதது!

நாங்க ஒவ்வொரு முறை கும்பகோணம் போறப்போவும் அநேகமாய்ப் பேருந்திலேயே போவோம். எனக்கு ரெயில் பிடிக்கும் என்பதாலேயே ம.பா.வுக்குப் பிடிக்காது. ஆனால் இப்போ எல்லாம் இந்த ரெயில் மார்க்கம் அடைபட்டதில் இருந்து வேறே வழி இல்லாமல் போச்சு. இல்லைனா, ஒரு வண்டியை ஏற்பாடு செய்துட்டுப் போவோம். அதுக்கு முடியாதப்போப் பேருந்து தான். அதிலேயும் இப்போப் பேருந்து கொஞ்சம் வசதிகளோடு இருக்கிறாப்போல் ஒரு எண்ணம் மனசில் அதனாலேயும். எந்தவித வசதிகளும் இல்லைங்கறது போய் அனுபவிச்சால் தான் புரியும். இந்த டிசம்பர் ஆறாம் தேதி கும்பகோணம் போகப் போறோம்னு ஆகஸ்டிலேயே தெரியும். அண்ணா பையர் கல்யாணம் கும்பகோணத்தில். பெரியம்மா பையர் தான் என்றாலும் உறவுமுறை இன்னும் நெருக்கமாய்க் கடைப்பிடித்து வருகிறதாலே கிட்டத் தட்ட 50 பேருக்கு மேலே போக ஏற்பாடு செய்யப் பட்டு மொத்த ஓட்டும் (என்னோட ம.பா. தவிர, அவர் வழி எப்பவும் தனி வழி!) ரெயிலுக்கே விழுந்ததால் ரெயிலில் ஒரு இரண்டு போகியை எங்க குடும்பத்துக்கு ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தென்னக ரயில்வேக்கு.

ஆக மொத்தம் டிசம்பரில் கும்பகோணம் பயணம் உறுதி செய்யப் பட்டது. ஆனால் நானோ அக்டோபரிலேயே விழுந்து, எழுந்து, வீட்டை விட்டு நகராமல், (எல்லாம் ம.பா.வோட பயம் தான் காரணம், நடக்கும்போதே விழுந்து வைப்பேனோனு பயம் அவருக்கு) படிதாண்டாப் பத்தினியாக இருந்து வந்ததால் எல்லாருக்கும் கொஞ்சம் சந்தேகம். ஆனால் நான் லேசில் விடுவேனா? அதிலும் ரெயில் பயணத்தை, எல்லாரோடயும் சேர்ந்து போய் எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன? ஆகவே கிளம்பிட்டோம் ஆறாம் தேதி கும்பகோணத்திற்கு. அன்னைக்குனு பார்த்து ஒரு வேளை மட்டுமே பிடிவாதமாய் வரும் வீட்டு வேலைகளில் உதவும் அம்மாவும் சொல்லாமல், கொள்ளாமல் விடுமுறை எடுக்க, ஏற்கெனவே நெஞ்சாக்கூட்டுக்குள்ளே இருந்து பட்சி கூவின கூவலில், நான் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து, வீடு எல்லாம் சுத்தம் செய்து, ஆயுசிலேயே முதல்முறையாக பாக்கிங்கையும் முன்னாலேயே செய்துவிட்டுத் தயார் ஆக, ஆச்சரியப் பட்டுப் போன ம.பா. உடம்பு ஒண்ணும் இல்லையேனு அக்கறையோடு விசாரித்தார்.

ராத்திரி 10-30-க்குத் தான் ரெயில். ஆனால் ரெயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாலும், ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகச் சோதனை போடுவதாலும் சீக்கிரமே வரும்படிக்கு அண்ணா தொலைபேசியில் ஒலிபரப்புச் செய்திருந்தார். ஆகவே 6---30 மணிக்கெல்லாம் வேலை செய்யும் அம்மாவின் சதித்திட்டத்தையும் முறியடித்துவிட்டு வெற்றிகரமாய்க் கிளம்பினோம். ஆட்டோ கொண்டு வரவும் ஆள் அனுப்பியாச்சு. என்னோட ம.பா.வுக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் போகணும் என்று ஆசை வர, எனக்கு அதுக்கு நேர்மாறாக செண்ட்ரல் வரை ரயில், அங்கிருந்து எழும்பூருக்கு ஆட்டோ என்று ஆசைவர, அந்த விவாதம் முற்றுப்பெறாமல் இருக்கும்போதே ஆட்டோ வந்துவிட்டது. எல்லாக் கதவையும் பூட்டியாச்சு. பெட்டிகளையும் ஆட்டோவில் ஏற்றியாச்சு. திடீரென வாசல் வராந்தாவில் இருந்து அலை ஓசை போன்ற சத்தம். பெரியதாய்க் கேட்டது. என்னனு புரியலை. ஒரே குழப்பம். ஒவ்வொரு இடமாய், ஒவ்வொரு மின்சாரம் விநியோகம் இருக்கும் இடங்களாய்ப் பார்த்தோம். எதுவும் இல்லை. சமையல் அறையை அப்போதுதான் எரிவாயு அடுப்பை மூடிவிட்டுப் பூட்டி இருந்தோம். ஆகையால் அங்கே இல்லை. மீண்டும், சோதனை, சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி என்றாக, நான் இன்வெர்டரை செக் பண்ணுங்கனு சொல்ல, அவர் அரை மனதோடு பூட்டிய கதவை எல்லாம் திறந்து இன்வெர்டர் இருக்கும் வாசல் அறையிலும் போய்ப் பார்க்க அங்கேயும் எதுவும் இல்லை.

அலை ஓசை நிற்கவே இல்லை. அப்போ வாசலில் இருந்த சோபா நாற்காலியில் இருந்து தான் அந்த சத்தம் வருதுனு என் மண்டையில் பல்பு பிரகாசமாய் எரிய அங்கே போய்ப் பார்த்தால் வீட்டைப் பாதுகாக்கும் நபரின் பை வைத்திருந்தது. அதிலிருந்து தான் சத்தம் விடாமல் வருது. உடனடியாக அட, ட்ரான்சிஸ்டர் ரேடியோ, வச்சிருப்பாரே, அதுதான் சத்தம் போடுது எனப் புரிய அவரிடம் கேட்டால் அசடு வழிந்து கொண்டு அட, ஆமாம் என்றார். அதுக்கப்புறம் நிம்மதியாய் மறுபடியும் கதவை எல்லாம் பூட்டிக் கொண்டு, சாவியையும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, இதுதான் சமயம் என்று நான் அம்பத்தூர் ஸ்டேஷனுக்குப் போங்கனு சொல்லி விட்டு உட்கார ஆட்டோவும் நகர்ந்தது.

ஆட்டோ டிரைவர் என்னைத் திட்ட ஆரம்பித்தார். நான் அம்பத்தூர் ஸ்டேஷன் போக இவர் ஏன் திட்டணும்னு பார்த்தால் ரோடு சரியாய் இல்லையாம். ஆகையால் ஆட்டோ விலையில் பாதியோ, அல்லது ஒருவாரத்துக்கான பெட்ரோல் பணமோ கொடுத்தால் தான் மேற்கொண்டு நகருவாராம். இல்லைனா இறங்குங்க என்று கறாராய்ச் சொல்ல, இந்த இடத்துக்கு ஆட்டோ வரதே பெரிய விஷயம், இந்த மழை நாளில், இவரைப் போய் விரோதித்துக் கொள்ள முடியுமா? சரினு ஒத்துக் கொண்டு போனோம். போகிற வழி எல்லாம் எங்களுக்கு முதலில் சாலையைப் போடும் வழியைப் பாருங்க என்று வித விதமாய் ஆலோசனை. விட்டால் அப்போவே உடனேயே கையில் பாண்டும், கொல்லுருவும் கொடுத்து ஜல்லிக்கும் ஆர்டர் கொடுக்கச் சொல்லிடுவார் போல் இருந்தது. ஆனால் கல்யாணத்துக்கு வரதாய் ஒத்துக் கொண்டு இருக்கோமே? ஆகவே அவரை மெதுவாய் சமாதானம் செய்து சரி, இனிமேல் ஒழுங்காய் இருக்கோம், அம்பத்தூரில் எங்கே சாலை போயிருந்தாலும் நாங்களே உடனே போய் சாலையை மராமத்துப் பண்ணறோம் என்றெல்லாம் ஒத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். போய் இறங்கி சாமானை எடுத்துக் கொண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு வரதுக்குள்ளே, ஏதோ அவசர காரியம் இருக்கிறாப்போல் அடுத்தடுத்து இரண்டு ரெயில்கள் போய்விட்டன.

செல்லில் அண்ணாவிடமிருந்து, அழைப்பு. என்னம்மா, மணி ஏழுக்கு மேலே ஆயிடுச்சு? நீ எப்போவும் முதல்லே வருவியே? இன்னிக்கு என்ன ஆச்சுனு கேட்டார். செல்லை மறக்காமல் எடுத்து வச்சுண்டதே பெரிய விஷயம். அவருக்கு பதில் சொல்லாமல் அசடு வழிந்துட்டு, வந்துட்டே இருக்கோம்னு சொல்லிட்டு அடுத்த வண்டிக்குக் காத்திருந்தோம்.

Friday, September 26, 2008

சித்திரம் பேசுதடி! மினி தாஜ்மஹால்!

அடுத்து நாம் காணப் போவது பீபி கா மக்பரா என்ற பெயரில் அழைக்கப்படும் மினி தாஜ்மஹால். ஒளரங்கசீபின் மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் தாஜ்மஹாலில் கட்டடக் கலை அமைப்பை அப்படியே பிரதி எடுத்துக் கட்டப் பட்டுள்ளது. இதைக் கட்டியது ஒளரங்கசீப் என்று சிலரும், ஒளரங்கசீபின் மகன் தன் தாயின் நினைவில் கட்டியது என உள்ளூர் மக்களும் சொல்கின்றனர். எப்படி இருந்தாலும் கட்டப் பட்டது ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் என்பது சந்தேகம் இல்லை. 1679-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம் ஒளரங்கசீபின் மனைவி ரபியா-உத்-துரானி என்பவரின் நினைவுச்சின்னம். இது தாஜ்மஹாலின் ஒரு மோசமான நினைவுச்சின்னம் என்று பொதுவாகச் சொல்லப் படுகின்றது. வெளிப்பாகத்தின் அமைப்பு தாஜ்மஹாலை ஒத்திருந்தாலும், அதைப் போல் வெள்ளை மார்பிளால் இது முழுதும் கட்டப்படவில்லை. மேலே உள்ள குவிந்த கூரை போன்ற அமைப்பு மார்பிளில் உள்ளது. ஆனால் அதன் சுவர்கள் (ப்ளாஸ்டர்) சுண்ணாம்புப் பூச்சு வேலைகளாலேயே செய்யப்பட்டுள்ளது. உள்ளே எண்கோணவடிவில் உள்ள மார்பிள் சாளரம் காணப்படுகின்றது.

இது எந்தவிதத்திலும் தாஜ்மஹாலோடு ஒப்புநோக்கும் வகையில் இல்லை என்றே சொல்லவேண்டும். என்னோட கருத்து தாஜ்மஹாலை விடவும், ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபுவில் பில்வாடா சமணக் கோயிலின் வேலைப்பாடுகள் காணக் கிடைக்காத ஒன்று என்று சொல்லலாம். இங்கேயும் உள்ளே நுழையும் இடத்தில் இருபக்கமும் செயற்கைத் தடாகமும், பாதைகளும் காணக் கிடைக்கின்றன. தாஜ்மஹாலைப் பிரதி எடுத்திருக்கும் ஒரு கட்டிடம் என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, அதற்கு ஈடு என்று சொல்ல முடியாது.

அடுத்து நாம் காணப் போவது தண்ணீரில் ஓடும் மாவு அரைக்கும் மில். ஒளரங்கசீப் காலத்திலேயே இதுவும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது. பாபா ஷா முஸாபர் என்ற ஒரு முஸ்லீம் பெரியவரின் நினைவாக எழுப்பப்பட்ட புனிதக் கோயிலின் உள்ளே அமைக்கப் பட்டுள்ளது இது. ஒளரங்கசீபின் குரு இவர்தான் எனவும் சொல்லப் படுகின்றது. இந்தக் கோயிலின் நீர்நிலையில் இருந்து வடிகுழாய் மூலம் நீர் எடுத்துச் செல்லப்பட்டு அதன் மூலம் இந்த இயந்திரம் இயக்கப்பட்டிருக்கின்றது. ஏழை மக்களுக்காகவும், படை வீரர்களுக்காகவும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது இது.

Friday, September 19, 2008

சித்திரம் பேசுதடி!!! தேவகிரிக் கோட்டை!

பலமான சுற்றுச் சுவர்களுடன் கூடிய இந்தக் கோட்டை ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு அரசர்களால் பல்வேறு விதமான ஆட்சிக்கு உட்பட்டிருந்த காரணத்தால் அந்த அரசர்களின் திறமைகளுக்கும், வலுவான அரசாட்சிக்கும் ஏற்ற வகையில் பலப் படுத்தப் பட்டிருக்கின்றது. வியக்க வைக்கும் கட்டிடக் கலையைக் கொண்டிருக்கும் இந்தக் கோட்டை பல பாகங்களாய்ப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. மொத்தக் கோட்டையிலும் தண்ணீர் நிரப்பும் தொட்டிகள், மேலே ஏறிச் செல்லப் படிகள் என்று காணப் படுகின்றன. மேலே ஏறிச் செல்லும் வழியில் படை வீரர்கள் நின்று கொள்ள இடமும், ஓய்வெடுக்கும் இடங்களும், மறைந்து கொள்ளும் இடங்களும் காணப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் நல்ல வெயில் காலம். சுட்டெரிக்கும் மே மாத வெயில். இந்த வெயிலில் தான் மேலே ஏறிச் செல்லவேண்டும். குன்று செங்குத்தாய் இருப்பதால் கொஞ்சம் கஷ்டம் தான் மேலே ஏறிச் செல்ல, அங்கங்கே சில படிகள், சில இடங்களில் சாய்வான நடைபாதைகள் மேலே செல்லவும் கீழே இறங்கவும் காண முடிகின்றது. பிரதான நுழைவாயிலில் இருந்து அடுத்த நுழைவாயில் அமைத்திருக்கும் கோணத்தால் உள்ளே நுழையும் எதிரிக்கு இன்னொரு வாயில் உள்ளே அமைந்திருப்பதைக் காண முடியாது. ஆனால் உள்ளே இருப்பவர் நுழைபவரைக் காண முடியும், தாக்கி அழிக்கவும் முடியும்.

யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் கட்டப் பட்டிருந்த கோயில் பின்னாட்களில் பல்வேறு கைகளிலும் மாறியதால் இன்று அங்கே பாரதமாதா கோயில் என்று மாற்றம் செய்யப் பட்டு, பாரதமாதா தரிசனம் கொடுக்கின்றாள். இதைத் தவிர, “ஆம்காஸ் மண்டபம்” மன்னர் பொது மக்களைத் தரிசிக்கும் இடம், ரங் மஹால், சினிமஹால், போன்றவை தவிர ஒரு இருட்டான பாதையும் காணப் படுகின்றது. இது தான் இந்தக் கோட்டையின் அதிசயமே. சுற்றிச் சுற்றி வந்து உள்ளே செல்லும் பல்வேறு முக்கிய வாயில்களைக் கடந்துக் கொஞ்சம் மேலே ஏறினால், ஒரு பரந்த வெளி வருகின்றது. அதன் இருபக்கமும் வீரர்கள் நிற்கும் இடம். அதைக் கடந்தால் திறந்த ஒரு முற்றம். மேலே பார்த்தால் சுற்றுச் சுவர்கள் தெரியும். திறந்த முற்றத்தில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் நுழைவாயிலுக்குள் நுழைந்தால் ஒரு பெரிய அறை போன்ற ஒரு இடம் வருகின்றது. அங்கே நுழையும் முன்னரே கையில் வைத்திருக்கும் அனைத்து வெளிச்சம் தரும் வஸ்துக்களையும் அணைக்கச் சொல்லி விடுகின்றனர். ஒரு தீவட்டியும், அதை ஏற்ற ஒரு நெருப்புப் பெட்டியும் வழிகாட்டி, (அரசால் அனுமதிக்கப்பட்ட வழிகாட்டிகள் மட்டுமே) எடுத்து வருகின்றார். ஒரு குழு நுழைந்து உள்ளே சென்று பார்த்துவிட்டு, வேறு வாயில் வழியாக வெளியேறியதுமே மற்றொரு குழுவுக்கு அனுமதி.

உள்ளே சென்றால் கண்ணை மயக்கும் இருட்டு. எதிரே என்ன இருக்கின்றது? சுவரா? வெட்டவெளியா, மனிதரா?? என்ன என்றே புரியாதவண்ணம் மனதைக் குழப்பும் இருட்டு. நம் மனதையும் கண நேரம் அந்த இருட்டு மனதைக் குழப்புகின்றது. அதற்குள் வழிகாட்டி கையில் வைத்திருக்கும் தீவட்டியை ஏற்றி விடுகின்றார். கொஞ்சம் நிம்மதி. மற்றொரு பக்கமாய்த் தப்பித்துச் சென்று விடலாம் என்று இந்த இருட்டில் இருந்து தப்பிக்கும் ஒற்றர்களோ, வேற்று நாட்டு வீரர்களோ தப்பிக்க முடியாதபடிக்கு அங்கே சிறு இடத்திற்குச் செல்கின்றது. மேலே உயர்ந்த நீண்ட சுவர்கள். அதன் மேலே இருந்து எண்ணெய்க் கொப்பரை மூலமோ, அல்லது வேறு வகையிலோ நெருப்புக்களோ, கொதிக்கும் எண்ணெயோ ஊற்றப் பட்டால் வந்தவர் தப்பிக்கவே முடியாது. அப்படி ஒரு வகையில் கட்டப் பட்டிருக்கின்றது, நம் கட்டிடக் கலையில் சிறப்புக்கு ஒரு மாட்சிமை கொடுக்கின்றது. இதன் பின்னர் யாதவர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் ஜைனக் கோயிலாக இருந்த பாரதமாதா கோயிலுக்குச் சென்று தரிசித்துவிட்டுத் திரும்பும்போது “ஹாதி ஹவுஸ்” என்னும் இடத்தில் உள்ள தண்ணீர் சேமித்து வைக்கும் இடத்தைப் பார்க்கலாம். சுற்றிலும் படிக்கட்டுகள் கீழே இறங்க அமைத்துள்ளது, அது அளவில் மிக மிகப் பெரியதாய் இருக்கின்றபடியால் இந்தப் பெயரில் அழைக்கப் படுகின்றது.
இவற்றைத் தவிர யாதவர்களால் கட்டி முடிக்கப் படாத சில குகைகளும் இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. மலைக்கு மேலேயும் கட்டிடம் தெரிகின்றது. அரண்மனை தவிர, அங்கே தான் ஏகநாதரின் குருவான சாது ஜனார்தனரின் சமாதி இருப்பதாயும் சொல்லுகின்றார்கள். அங்கே மேலே ஏறும் பாதை பாதியிலேயே தடைபட்டு இருப்பதோடு அல்லாமல் ரொம்பவே செங்குத்தாயும் இருப்பதால் போக அனுமதி இல்லை. தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இன்னமும் இந்தக் கோட்டையில் தன் ஆராய்ச்சியையும், அகழாய்வையும் செய்து வருகின்றதாயும் சொல்கின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலேயே இந்தக் கோட்டை இன்று உள்ளது. அடுத்து நாம் பார்க்கப் போவது மினி தாஜ்மஹால். ஒளரங்கசீபின் பிள்ளை தன் தாய்க்காகக் கட்டியது. கிட்டத் தட்ட தாஜ்மஹாலின் மாதிரி என்றே சொல்லலாம்.

Wednesday, September 17, 2008

சித்திரம் பேசுதடி!! தேவகிரிக் கோட்டை!

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே

இதை எழுதியே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. பல்வேறு வேலைகளுக்கு இடையே இதன் குறிப்புக்களையும் எங்கேயோ வச்சுட்டேன். ஒருவழியா இணையம் இல்லையா ஒரு வாரமா, இப்போத் தான் தேடி எடுக்க நேரமே கிடைச்சதுனு சொல்லலாம். எல்லோரா குகைகளுக்குச் செல்லும் முன்பே நாங்கள் முதன் முதல் சென்றது தவுலதாபாத் கோட்டை. தற்சமயம் தவுலதாபாத் என அழைக்கப் பட்டாலும் இதன் உண்மையான பெயர் தேவகிரிக் கோட்டை ஆகும். யாதவ வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் இந்தப் பெயரே நீடித்து இருந்திருக்கின்றது, முகமதியர் வரும் வரைக்கும். அதுவும் முகமது- பின் – துக்ளக்கை யாருக்கும் மறக்கவே முடியாது. துக்ளக் புத்தகத்தால் மட்டுமல்ல, நாடகம் கூட வந்தது, நினைவிருக்கலாம். அந்த துக்ளக் மன்னனால் டெல்லி தலைநகருக்குரிய பெருமையில் இருந்து நீக்கப் பட்டு, மொத்த இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, இந்தியாவின் மத்தியில் உள்ள இந்தத் தட்சிண பூமியின் தேவகிரிக் கோட்டைதான் சரியாக இருக்கும் எனத் தீர்மானித்து அங்கே சிலகாலம் தலைநகரம் மாற்றப் பட்டது. இதைப் பற்றி அறியும் முன்னர் தேவகிரிக் கோட்டையின் வரலாறு பற்றிச் சிறிது தெரிந்து கொள்ளுவோமா??

12-ம் நூற்றாண்டு வரையில் இந்து அரச குடும்பங்களாலேயே ஆளப்பட்டு வந்தது இந்தக் கோட்டை. தேவகிரி, தேவர்களின் மலை என்ற பெயரால் அழைக்கப் பட்டு வந்தது. இது அநேகமாய் எவராலும் வெல்ல முடியாதபடிக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது. பில்லமராஜா என்ற யாதவ அரசனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இந்தக் கோட்டை. மலையின் கற்களாலேயே வெட்டி எடுக்கப் பட்டுக் கட்டப் பட்ட கோட்டைகளின் முன்மாதிரியாகவும் சொல்லப் படுகின்றது. என்றாலும் வலுவான அரசன் இல்லாததால் 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களின் வசம் சென்றது. சுல்தான்களின் வசம் சென்ற 30 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த முகமது பின் துக்ளக் என்ற அரசன், இந்தக் கோட்டைக்கு தவுலதாபாத், (செல்வங்களின் இருப்பிடம்) என்ற பெயர் மாற்றம் செய்து, தலைநகர் இனிமேல் இந்தக் கோட்டையில் இருந்து செயல்படும் என அறிவித்தான். ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம், மன்னன் செய்த ஒரு தவறினால் அது சரிவர நடக்கவில்லை. டெல்லியின் மொத்தக் குடி மக்களையும் மன்னன் மாற்ற முற்பட, வயதானவர்கள், நோயுற்றவர்கள், ஏழைகள், குழந்தைகள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் இது மிகுந்த சிரமத்தையும், பொருட்செலவையும் கொடுத்தது. இதில் மிகுந்த நோயுற்றவர்களும் தப்பவில்லை. பலரும் டெல்லியில் இருந்து தேவகிரி செல்லும் வழியிலே இறந்தனர். பின்னர் தாமதமாய் மனம் வருந்திய மன்னன், மீண்டும் அதே தவறைச் செய்தான். இம்முறை டெல்லியில் இருந்து கிளம்பிய அத்தனை மக்களையும் மீண்டும் டெல்லிக்கே போகச் சொல்ல, இப்போதும் அதே போல் மக்களுக்குத் தீங்கே விளைந்தது. எனினும் அனைத்துக்கும் தப்பி வந்த ஒரு சிலரால் தேவகிரிக் கோட்டை ஏற்றமே பெற்றது. கோட்டையின் வளர்ச்சி அபரிமிதமாய் இருந்தது. மிகப் பெரிய நகரமாய் தலைநகரம் ஆன டெல்லிக்கே சவால் விடும் வகையில் அதன் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் இருந்தது.

பின்னர் இந்தக் கோட்டை பாமனி சுல்தான்களின் கையில் வந்து சேர்ந்தது. அவர்கள் டெல்லியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுயாட்சி புரிந்து வந்தனர். 16-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தட்சிண பீடபூமியின் சுல்தான்கள் ஆட்சி முடிந்து இந்தக் கோட்டை டெல்லியின் முகலாயர் வசம் போய்ச் சேர்ந்து அதன் கடைசிச்சக்கரவர்த்தி ஆன ஒளரங்க சீப் காலம் வரையிலும் அவனிடமே இருந்து வந்தது. சிவாஜியின் காலத்திற்குப் பின்னர் சிலகாலம் மராத்தியர்கள் வசம் இருந்து வந்தாலும் பின்னர் இந்தக் கோட்டை ஹைதரபாத் நிஜாம் வசம் போய்ச் சேர்ந்தது. 1949-ம் ஆண்டு வரையிலும் நிஜாம் மன்னர்களிடமே இருந்து வந்த இந்தக் கோட்டை நிஜாம்களின் சரணாகதிக்குப் பின்னர் இந்திய யூனியனிடம் வந்து சேர்ந்தது. இப்போது கோட்டையின் அமைப்பைப் பார்க்கலாமா???

Saturday, August 9, 2008

அரசு போக்கு????? வரத்துக்கழகத்தின் சிறப்பு!!!

இந்த முறை கும்பகோணம் செல்லும்போது முன்பதிவு செய்து கொள்ள முடியவில்லை. கடைசிவரையில் கிளம்புவது நிச்சயம் ஆகாததாலேயே எதுவும் பண்ண முடியவில்லை. என்றாலும் எப்படியும் இந்த வாரம் போயிட்டு வந்துடணும்னு தான் இருந்தோம். வீட்டில் வேலைகள் சரிவர முடியாமல், எந்த நேரம் கொத்தனார் வருவார்னு புரியாமல், வெளியே எங்கேயும் போக முடியாமல், மாறி, மாறி வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருந்துவிட்டுக் கடைசியாய் இந்தத் திங்கள் அன்று 4-ம் தேதி,முக்கியவேலையை முடிச்சுக் கொடுத்தார் கொத்தனார். மத்ததை அப்புறமா வச்சுக்கலாம்னு அவசரம், அவசரமா குலதெய்வம் கோயிலுக்குக் கிளம்பினோம். எனக்கு இரவுப் பயணம்தான் சரியா வரும்,அதிலும் ரயில் என்றால் இன்னும் வசதி. ஆனால் என்னோட ம.பா. நேர் மாறாக பகலில் தான் போகணும்னு பிடிவாதம் பிடிப்பார். ரயில் எதுவும் இப்போ இல்லையே?? பேருந்துப் பயணம் தான் ஒரே வழி. வேறே வழியே இல்லை. புதன் இரவே போய் என்ன செய்யறது?? அனாவசியமா லாட்ஜில் போய் உட்காரணும், வாடகை கொடுத்துட்டு, (சிக்கன நடவடிக்கை :P) அதுவும் தவிர, நீ சாப்பிடத் தகராறு பண்ணுவே, வியாழன் அன்று காலையில்னா சாப்பாடு பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு திட்டவட்டமான அறிவிப்பு வரவே, வியாழன் அன்று காலையில் எல்லாம் தயார் செய்துகொண்டு கிளம்பிட்டோம். 8 மணிக்குக் கிளம்பணும்னா டாணென்று 8 மணிக்கே கிளம்பினோம்.

ஆனால் போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு போகவே 9-30 ஆகிவிட்டது. குடும்ப ஆட்டோகாரர் தான் கொண்டுவிட்டுட்டுப் போனார். இல்லைனா இது கூட முடியாது. போனதுமே, ஒரு பேருந்து கிளம்பத் தயாராக இருந்தது. ஆனால் என் மனசிலே பட்சி கூவுகின்றது இதிலே ஏறாதேனு. நான் சொல்றதுக்குள்ளே, முன்னால் வெகுவேகமாய்ப் போயிட்டு இருந்த ம.பா. அந்தப் பேருந்தில் ஏறியாச்சு. நான் சில, பல கிலோ மீட்டர் பின்னால் வரேன். அதுக்குள்ளே பஸ்ஸில் ஏறி, வெற்றிகரமாய் டபுள் சீட்டாகவும் தேர்ந்தெடுத்து, எல்லாமே டபுள் சீட்தான், அது வேறே விஷயம், சாமான்களை வச்சுட்டு, என்னைப் பார்க்க வந்தார். நல்லவேளையாக இமயமலை உயரத்தில் படிக்கட்டுகள் இல்லை. நம்ம கால் நம்மை எப்போ வாரிவிடும்னு சொல்ல முடியாது. இந்த அழகிலேயே நிஜமாவே இமயமலைக்கும் போயிட்டு வந்தாச்சு! நானே படிக்கட்டுகளில் ஏறி சீட்டில் போய் உட்கார்ந்தாச்சு. உடனே பேருந்தும் கிளம்பிவிட்டது. ஆஹா,னு நினைச்சுட்டு, கையில் கொண்டு போயிருந்து புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்க ஆரம்பிச்சேன். புத்தகத்தில் மூழ்கியாச்சு. பேருந்துக்குக் குளிர் ஜுரம் கண்டிருந்ததுனு நினைக்கிறேன். ஒரே உதறல். தூக்கித் தூக்கிப் போடுது. என்றாலும் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பேருந்து சென்ற இடமோ அதைக் கவனிக்கும் மருத்துவமனை. ஆம்! அங்கேயே பக்கத்தில் இருந்த வொர்க்ஷாப்புக்குப் போயிடுச்சு அந்தப் பேருந்து. அங்கே இன்னொரு பேருந்தை வரவழைச்சு, எங்களை எல்லாரையும் அதிலே உட்காரச் சொன்னாங்க. அங்கே எல்லாரும் முன்னாலே போயிடக் கடைசியில் இறங்கின எங்களுக்குச் சேர்ந்து உட்கார இடமே இல்லை. அது தான் போச்சுனா எல்லாருமே தனித்தனியாக ஆளுக்கு ஒரு சீட்டில் உட்கார்ந்து இருக்க, ஒவ்வொருத்தரையாக் கேட்டால் யாருமே மாறி உட்கார ஒத்துக்கலை.
விடாமல் போராடி, கண்டக்டரும் வந்து சொன்னதும் முன் சீட் இரண்டும் கிடைச்சது. இரண்டு பேரும் உட்கார்ந்தோம். பேருந்தும் கிளம்பியது. தாம்பரம் போக ஆன இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர்,பெருங்களத்தூரில் வேகம் எடுக்க ஆரம்பிச்சு, வேகமாயே போயிட்டு இருந்தது. திண்டிவனம் நெருங்கவேண்டும், இன்னும் பத்து நிமிஷம். படார்! பட் படார்! எங்கேயோ பட்டாசு வெடிக்கிறாங்களா?? இல்லை வெடியா?? பேருந்தின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் டயர்கள் வேகமும், கனமும் தாங்காமல் கிறீச்சிட, பேருந்து நின்றது. நல்லவேளையா நின்ற இடம், திண்டிவனம் போகும் வழியில் லாரிகள், கண்டெயினர்கள் எல்லாம் நின்று இளைப்பாறக் கட்டி இருக்கும் ரெஸ்ட் ஏரியா. அங்கே தெய்வச் செயலாக இரண்டு ஆட்டோமொபைல் வொர்க்ஷாப் இருக்க, பஞ்சர் ஆன டயரைக் கழட்டி, ஸ்டெப்னியைப் போட்டுக் கொடுத்தார்கள். கண்டக்டரும், டிரைவரும் தங்கள் கையில் இருந்து பணம் போட்டு செட்டில் பண்ணிவிட்டு, ரசீது கேட்க, ரசீது கிடைக்கவில்லை. கண்டக்டர் கொஞ்ச நேரம் போராடிப் பார்த்துவிட்டுப் பின்னர் வேறே வழியில்லாமல் வந்துட்டார். பயணிகளில் அவசரமாய் பண்ருட்டி போகவேண்டிய ஒருத்தர் தவிர, மற்றவங்க பேருந்திலேயே இருந்தோம். எங்களை வேறு பேருந்துக்கு மாறறீங்களானு கண்டக்டர் கேட்டதுக்கும் நாங்க வேண்டாம்னு சொல்லிட்டோம். பின்னர் பேருந்து கிளம்பி திண்டிவனம் போய் அங்கே இருந்தும் கிளம்பி சீரான நிதானமான வேகமாய்ப் போய்க் கொண்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பண்ருட்டி வரவேண்டும். மறுபடியும் உலோகம் உராயும் ஒலி. இம்முறை சற்று வேகமாய்க் கேட்டதோடு அல்லாமல் பேருந்தே ஆடியதோடு இல்லாமல், யாருக்கும் சரியாக உட்கார முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த என்னோட ம.பா. முழிச்சுட்டு என்னனு பார்க்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு பேருந்து, கும்பகோணம் போயிட்டு இருந்தது அதுவும், நாங்க ஏறி இருந்தது தஞ்சாவூர் பேருந்து, அந்தக் கும்பகோணம் பேருந்து எங்களை முந்தறதுக்குப் பார்த்திருக்கு, அந்தக் குறுகிய சாலையிலே. ஏற்கெனவே சாலை அப்படி ஒண்ணும் நல்லா இல்லை. என்றாலும் போன முறைக்கு இந்த முறை பரவாயில்லை. ஒட்டு வேலை எல்லாம் செய்து வச்சிருக்காங்க. மழைக்குத் தாங்குமா தெரியலை. அந்தச் சாலையிலே எதிரே வர பேருந்தை இடிக்காமல் போனாலே நல்லா இருக்கும். அந்த இடத்திலே போய் இவர் ஓவர்டேக் பண்ணறார்னா??? நல்லவேளையா, எங்க பேருந்தின் ஓட்டுநர் முன் கூட்டியே கவனிச்சிருக்கார், அதனால் வேகத்தைக் குறைச்சு பேருந்தையும் நிறுத்திட்டார். அந்தப் பேருந்தின் ஓட்டுநரை எதுவும் கேட்கிறதுக்குள், அவங்க அதே உரசலுடன் வேகமாய் முன்னாலே போயிட்டாங்க. உடனேயே எங்க ஓட்டுநர் வேகமாய் ஓட்டி முன்னால் போய் அந்தப் பேருந்தை நிறுத்தினார். எங்க பேருந்தின் நடத்துனரும், அவருக்கு உதவியாய்ப் பயணிகளில் சிலரும் போய் அந்தப் பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் என்ன இது, இப்படியா வருவாங்க? ஜன்னல் பக்கமாய் உட்காருகிறவங்களுக்குக் கை போயிருக்கும் என்று கேட்டால், அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டுத் தலையை ஆட்டி விட்டு வேகமாய்ப் போயே போயிட்டார்! போயாச்சு, போயிந்தி!

சமாளித்துக் கொண்டு மறுபடியும் பேருந்து கிளம்பியது. ஆனால் மீண்டும் ஏதோ பிரச்னை. ஒரு லெதர் துண்டத்தை ஓட்டுநர் எடுத்து நடத்துனரிடம் கொடுக்க அவரும் அதை, ஸ்டியரிங் வீலின் கீழே வைக்க முயன்றார். பலமுறை முயன்றும் அவரால் முடியவில்லை. திண்டிவனத்தில் ஏறி இருந்த ஒரு பயணி ஓட்டுநரின் பின்னாலேயே உட்கார்ந்திருந்தார், அவர் ஏதோ சொல்கின்றார், ஆனால் என்னனு புரியலை, ஏதோ பிரச்னைனு மட்டும் புரிஞ்சது. என்னவோ, ஏதோனு நினைச்சுட்டு உட்கார்ந்திருந்தோம். பண்ருட்டி நெருங்கும்போது மீண்டும் ஒரு ஆட்டோமொபல் வொர்க்ஷாப் வழியில் வர, பயணி பேருந்தை அந்த இடத்தில் நிறுத்தச் சொல்லிக் கீழே இறங்கி வேகமாய் ஓடிப் போனார். பேருந்து பெரும் குலுக்கலுடன் நின்றது. நடத்துனரும் இறங்கி ஓடினார். இருவருமாய் ஒரு ஸ்பானரைக் கொண்டு வந்து ஸ்டியரிங் வீலைப் பதிய வைத்திருந்த இடத்தில், அந்த லெதர் சக்கையை மீண்டும் வைத்து இறுக்க ஆரம்பிக்க அவர்களோடு சேர்ந்து ஓட்டுநரும் முயல, அப்போத் தான் விஷயமே புரிஞ்சது. ஸ்டியரிங் வீல் கையோடு வந்திருக்கின்றது. சின்ன வயசாய் இருந்தாலும் ஓட்டுநர் சமாளித்துக் கொண்டு பல மைல்கள் வந்துவிட்டிருக்கின்றார். இனி முடியாதுங்கற நிலைமை வந்ததும் பேருந்தையும் கஷ்டப் பட்டு நிறுத்திவிட்டு இப்போ சரி பண்ணிக் கொண்டிருக்கிறார். மறுபடியும் பயணிகளில் சிலரும், வொர்க்ஷாப்பின் தொழிலாளியும் வந்து உதவ ஒரு மாதிரி ஸ்டியரிங் பொருத்தப் பட்டு பேருந்து கிளம்பியது. ஆனாலும் கும்பகோணம் வந்து சேரும்வரையில் அப்பாடானு உட்கார முடியவில்லை. சும்மாவே பேருந்துப் பயணத்தில் தூங்கி எல்லாம் போக மாட்டேன். இப்போ இன்னும் விழிப்பாய் இருக்க வேண்டி வந்தது. ஆனாலும் அரசாங்கப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பராமரிக்கும் விதத்தை நினைச்சால், பயணிகளின் நிலையை நினைச்சால் ரொம்பவே கவலையாகத் தான் இருக்கு.

Wednesday, July 16, 2008

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள் தொடர்ச்சி 7

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே முந்தைய பகுதிகளை வாசிக்கவும். இப்போ நாம் காணப் போவது கைலாச நாதர் கோவில் இருக்கும் குகைப் பகுதி. இது உலகிலேயே ஒரே கல்லால் கட்டப் பட்ட மிகப் பெரிய குகைக்கோயில் என்று சொல்லப் படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் இங்கு மிகுந்து காணப் படுகின்றது. எதுவுமே பெரிய அளவிலேயே நம் முன்னோர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள் என்பதற்கு இந்த எல்லோரா குகைக் கோயில்கள் ஒரு சான்று. பெரிய புத்தர் சிலைகள், பெரிய சிவலிங்கம் என எல்லாமே மிகப் பெரிய அளவிலானது. இவை எல்லாம் செய்து முடிக்க எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்கின்றன. சற்றும் சலிக்காமல் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் அலுப்புக் கொள்ளாமல், உடல் வருத்தம் பாராமல் வெறும் உளியையும், சுத்தியலையும் வைத்துக் கொண்டு செதுக்கிய இந்தச் சிற்பங்களின் அளவையும், அழகையும், குகைக் கோயில்களின் அமைப்பையும் பார்த்தால் கட்டுமானத் துறையில் எத்துணை சிறந்தவர்களாயும், வல்லவர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் நன்கு புலனாகின்றது அல்லவா??
குகைக்கோயில்களுக்குச் செல்லும்போது கடந்து செல்லும் பாதை இது. முற்றிலும் மலைப்பாறைகளினாலேயே ஆன பாதை இது. இந்தப் பாதையைக் கடந்ததும் வருவதே கைலாசநாதர் கோயில் ஆகும். முற்றிலும் ஒரே கல்லினால் ஆன இந்தக் கோயில் பெரிய அளவில் அலங்கரிக்கப் பட்டு மூன்று தளங்கள் கொண்டதாய விளங்குகின்றது. மேலிருந்து கீழே செதுக்கப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயிலின் வெளிச் சுவற்றில் இருந்து உள்ளே செல்லும் வழியில் ஒரு பெரிய முற்றம் காணப் படுகின்றது. முக்கியமான சிவன் கோயிலைச் சுற்றிலும் அது செல்லுகின்றது. எதிரே ஒரு பெரிய நந்தீஸ்வரர் காணப் படுகின்றார். மிக மிக அழகாய் அலங்கரிக்கப் பட்டுள்ளது சிற்பங்களால். கிட்டத் தட்ட 20 மீட்டர் உயரம் உள்ள தூண்கள் இருபுறமும் காணப் படுகின்றன. மூன்று யானைகள் அவற்றை அலங்கரிக்கின்றது.
முற்றத்தின் இடது பக்கம் நதி தேவதைகளும், அதன் வலது பக்கத்தில் இலங்கேஸ்வரன் கோயிலும் உள்ளது. கோயில் மேற்கே பார்த்து எழும்பி உள்ளது. கீழ்த்தளத்தில் உள்ளது. கையில் தாமரைப் பூக்களை வைத்துள்ள யானைச் சிற்பங்கள் காணப் படுகின்றன. மேல் தளம் 16 அல்லது 14 தூண்கள் உள்ள மண்டபத்துடனும், மூன்று முக மண்டபங்களுடனும் காணப் படுகின்றது. நந்தி இருக்கும் கூடாரத்தை இவை ஒரு பாலத்தால் இணைக்கின்றது. கைலை என அழைக்கப் படும் கைலாசத்தின் கலாசார வடிவங்கள் மிக அருமையாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. துர்கை அம்மன் வலது பக்கமும், இடது பக்கம் நுழையும் இடத்தில் விநாயகர் சிற்பம் சற்றே சிதைந்த நிலையிலும் காணப் படுகின்றது. இரண்டு படிக்கட்டுகள் மேல்தளத்துக்குச் செல்லக் காணப் படுகின்றது. முக்கியமான கோயிலின் மண்டபத்தில் ராமாயணச் சிற்பக் காட்சிகளும், மகாபாரதக் காட்சிகளும் காண முடிகின்றது. கீழ்த்தளத்தில் ஈசன் கஜமுகாசுரராக யானையாக வந்த அசுரனைக் கொன்று அந்தத் தோலுடன் நடனமாடும் கோலத்தில் காண்கின்றோம். மேலே மண்டபத்தில் ஆஹா, இது என்ன?? ஜடாயுவா இது? ராவணனுடன் சண்டை போடுவதைப் பார்த்தால் நிஜம் போல் தோன்றுகின்றதே? இதோ இங்கே மகாலட்சுமி, இங்கே துர்க்கை. இன்னும் பார்க்க ஆசைதான், ஆனால் இதை முடித்துவிட்டு மேலே போய் அங்கிருந்து கீழே தெரியும் காட்சிகளைப் பார்த்துவிட்டு வண்டிக்கு வரச் சொல்லி வழிகாட்டி சொல்லிவிட்டாரே?? மற்ற குகைகள்?? மற்றவை கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளது. உள்ளே செல்ல அனுமதி இல்லை! அடக் கடவுளே? அப்போ ஜைனக் குகைகள்??சாப்பாடு முடிஞ்சு திரும்ப வருவோம். சரி, இப்போ சாப்பிட்டு விட்டே வருவோம். நமக்கும் கொஞ்சம் அலுப்பாய் இருக்கிறது. இதை ஆரம்பிச்சது என்னமோ எல்லோராவில். ஆனால் எல்லோரா வரதுக்கு முன்னாலே தேவகிரிக் கோட்டைக்கு மேலே ஏறிச் சென்றது வேறே ஆயாசம் அதிகமாய் உள்ளது. தேவகிரிக் கோட்டையும், மிச்சம் இருக்கும் ஜைனக் குகையும் நாளை பார்ப்போமா????

Wednesday, July 9, 2008

சினிமா விமரிசனம் எழுதி இருக்கேனே?


யோசிச்சுட்டு, இப்போ எல்லாரும் சினிமா விமரிசனம், அது, இதுனு தூள் கிளப்பறாங்க. நாமளும் எழுத வேண்டாமா?னு எழுத ஆரம்பிச்ச விமரிசனம் இது. நான் சமீபத்தில் பார்த்த படம் "உம்ராவ் ஜான்". ரொம்பவே புதுசு இல்லை?? :P நிஜமாவே இந்த உம்ராவ் ஜான் ரொம்பவே புதுசு தான். ஐஷுவும், அபிஷேக்கும் நடிச்சது. ஐஷுதான் உம்ராவ் ஜான். அபிஷேக் தான் அவங்க காதலன். சும்மா தூள் கிளப்பி இருக்காங்க இரண்டு பேரும். பத்தாதுக்கு சுனில் ஷெட்டி(???) பார்த்தா அவர் மாதிரித் தான் இருக்கு. ஷபனா அஸ்மி இரண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்க. அதிலும் தான் பிறந்து வளர்ந்த வீட்டை உம்ராவ் ஜான் மீண்டும் பார்க்க வரும் காட்சியில் ஐஷு ரொம்பவே உருக்கிட்டாங்க. அதிலும் அம்மா கிட்டே கெஞ்சும்போதும், தம்பியிடம் ஒரு காலத்தில் உயிராய் இருந்த தம்பி கிட்டே தன் தரப்பு நியாயத்தைச் சொல்லும்போதும், பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து மீண்டும் நாட்டிய நங்கையாக ஆட வரும்போது, கூடி இருக்கும் அனைத்து ஆண்களும் பேசுவதைக் கேட்டு மனம் நொந்து பாட்டிலேயே பதில் சொல்வதும், அந்தப் பாட்டும், ஆட்டமும் முடிந்ததும் ஏற்படும் மெளனமும், அருமை!

கண்ணும், உதடும், முகத்தின் ஒவ்வொரு தசையும் அருமையாக நடிக்கின்றது. உம்ராவ் ஜானாக வாழ்ந்தே காட்டி விட்டார். இதே ஐஷு தானா தேவதாஸில் அத்தனை மோசமாய் நடிச்சது?? ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இதே படம் ரேகா நடிச்சு வந்ததும் பார்த்திருக்கேன். ரேகாவின் நடிப்புக்கு ஈடு கொடுக்கும் விதத்திலே நடிச்சிருக்கார் ஐஸ்வர்யாவும். இம்மாதிரியாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களிலே நடிச்சதிலே ருதாலியில் டிம்பிள், ஜுபைதாவில், கரிஷ்மா, மீண்டும் ஷக்தியில் கரிஷ்மா தான், இவ்வளவு அருமையான நடிப்புக் காட்டி இருந்தார்கள். அதிலும் ஷக்தியில் கரிஷ்மா குழந்தையைப் பிரிஞ்சு துடிக்கும் காட்சி ஒண்ணு போதும். என்ன, ஹிந்திப் படம் பத்தியே எழுதறேன்னு பார்க்கிறீங்களா? தமிழ்ப்படம் நான் பார்த்த சானல்களில் எல்லாம் நல்ல படமாவே இல்லை. எல்லாம் பாடாவதிப் படம். ஒண்ணிலே சபாபதினு ஒரு படம், மத்ததிலேயும் வேறே ஏதோ பழைய படங்கள், செளகார் ஜானகி கண்ணில்லாத பெண்ணாக நடிக்கும் படம் ஒண்ணு, பேர் என்ன? தெரியலை, மறந்துட்டேன்! சரி, வேண்டாம், பார்த்த படமா இருந்தாலும் உம்ராவ் ஜானே தேவலைனு அங்கே போய் செட்டில் ஆகிட்டேன்.

பொதிகை சானலில் இப்போ நிகழ்ச்சிகள் கொஞ்சம் தடுமாறுது, என்னனு புரியலை! காலம்பர 6-30-க்கும், சாயந்திரம் 6-30-க்கும் வேளுக்குடியின் நிகழ்ச்சி தவிர வேறே ஒண்ணும் சுகமாய் இல்லை. மற்றதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவும் பார்க்கிறாப்போல இருக்கிறதில்லை. அதிலும் இந்த சாமி படங்கள், சீரியல்கள்னு வந்தால் எங்கே இருக்கும் கொஞ்ச நஞ்ச பக்தியும் போயிடுமோனு பயம் வந்துடுது. அதனால் அதெல்லாம் கிட்டேயே போகிறதில்லை.
*************************************************************************************

மேடம், உங்களுக்கு என்ன உடம்பு சரியில்லையா?இது சிலர் கேள்வி!
கீதாம்மா, என்ன ஆச்சு? இதுவும் சிலர் கேள்வி??
கீதாக்கா, என்ன திடீர்னு இப்படி ஆயிட்டீங்க? இதுவும் சிலர் கேள்வி!
கீதா, என்னம்மா ஆச்சு? ஹிஹிஹி, இதுவும் சிலர் கேள்வி!

இப்படி எல்லாரும் கேட்கும்படியான அந்தக் காரணம் தான் என்ன?

தொலைபேசியில் பேசினாலும் இதே கேள்வி தான், சாட்டிங்கிலும் இதே கேள்வி தான், அந்தக் கேள்வி என்ன? யாராலயும் கண்டு பிடிக்க முடியலை! ம்ம்ம்ம்ம் சரி, சரி, நானே சொல்லறேன், ஆனால் அதுக்கு முன்னாலே ஒரு சான்ஸ்! யாரானும் கண்டு பிடிக்கிறாங்களானு பார்ப்போம்! மற்றக் கேள்விகள் இதோஇங்கே பதில் சொல்லுங்கப்பா!!!!!! இந்நேரம் என்னோட உபிச இருந்திருந்தா நடக்கிற கதையே வேறே! ம்ம்ம்ம்ம் அவங்க இல்லாம எவ்வளவு கஷ்டமா இருக்கு? :P :P

Sunday, July 6, 2008

வீட்டுக்கு வீடு வாசப்படி தான், எங்க வீட்டு வாசப்படி ரொம்பப் பெரிசு!

என்னத்தைச் சொல்றது?? பழைய ஐடியிலே இருந்து நினைவில்லாமல் வல்லியோட கமெண்டுக்கும், கோபியோட கமெண்டுக்கும் பதில் சொல்லிட்டேன். அப்புறம் என்னோட பதிலை, நானே போய் பப்ளிஷ் பண்ண வேண்டியதாப் போயிடுத்து! எல்லாம் அஜித் லெட்டர்! இன்னும் இங்கே சூடு பிடிக்கலை, இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் லீக் ஆயிட்டு இருக்கு! ஹிஹிஹி, வெட்கத்தை விட்டு நானே போய்க் கூப்பிட்டுட்டுத் தான் இருக்கேன் ஒவ்வொருத்தரா!! போகட்டும், இப்போத் தலையாய விஷயம் என்னன்னா, எனக்கும், கொத்தனார்களுக்கும் உள்ள ஜன்மப் பகை பத்தித் தான்!

கொத்தனார்னதும் எல்லாருக்கும் நினைவுக்கு இ.கொ. வந்தால் நான் பொறுப்பில்லை! நான் சொல்றது நிஜமான கொத்தனாருங்கோ!!! கல்யாணத்துக்கு முன்னாலே மதுரையிலெ இருந்தவரைக்கும், இந்தக் கொத்தனாருங்களோட அதிகம் பழக்கம் கிடையாது. ஒருமுறை புதுவீடு கட்டும்போது, சிமெண்ட் கலவையில் தெரியாத்தனமாக் கால்,கை வைத்து விழுந்துவிட்டு, குளியல் நடத்தினதிலே இருந்தே, சிமெண்ட் என்றாலே அலர்ஜி!!! தவிர, அப்போ எல்லாம் அப்பா கட்டிட்டு இருந்த வீட்டைக் கூடப் போய்ப் பார்த்ததில்லை! அப்பாவே போக மாட்டார்! அப்புறம் நாங்க எங்கே போறது? அப்புறமாக் கல்யாணம் ஆனதும் தான் இது பற்றிய அறிவாற்றல் பெருக ஆரம்பிச்சது! அதுவும் என்னோட ம.பா.வுக்கு நான் இவ்வளவு அறிவிலியாக இருப்பதைப் பற்றிய வருத்தம் அளவு கடந்து போகவே, அவர் என்னை இந்தக் கொத்தனாருங்களோட தனியாக மோத விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு ஆஃபீஸ் கிளம்பிப் போயிடுவார்.

இப்போத் தான் தொலைபேசியில் அழைப்பு, தொல்லைபேசியாக இருக்கு. செல்பேசியில் அழைப்பு செல்லாக அரிக்குது. செல் கண்டார், செல்லே கண்டாராக எல்லாரும் பேசித் தீர்க்கிறாங்க. நாங்க நினைவா, செல்போனை வெளியே போகும்போது வீட்டில் பத்திரமா வச்சுட்டே போவோம்!! எங்கேயாவது வெளியூர் போனால் நினைவு வச்சுட்டு எடுத்துட்டுப் போறதே அபூர்வம். இப்போ, இப்போ கொஞ்சம் நினைவு வந்து எடுத்துட்டுப் போக ஆரம்பிச்சாலும், பக்கத்து வீட்டுக்கு வெத்திலை, பாக்குக்குப் போகறச்சே எடுத்துண்டு போகறதில்லை! ஆனால் எனக்குக் கல்யாணம் ஆனப்போ வீட்டில் தொலைபேசியும், கிடையாது, கிட்டப் பேசியும் கிடையாது. அதனால் அப்போ தொலைபேசி எல்லாம் கேட்டுக்க முடியாதே! காலையிலே அவர் சொல்லிட்டுப் போகிற எல்லாத்தையும் நான் சாயந்திரம் அவர் வரதுக்குள்ளே எல்லாத்தையும் நிறைவேத்தி வச்சுட்டு, ரிப்போர்ட் கொடுக்கணும். அவர் பார்த்து மார்க் போடுவார். சீச்ச்சீ, ஸ்கூல் நினைப்பிலே சொல்லிட்டேனே!

இப்படியாகத் தானே ஒரு மாதிரியா என்னையும் இந்த சித்தாள் வேலைக்குப் பழக்கப் படுத்தி வைச்சார். அப்போவும் வெள்ளை அடிக்கும்போது வீட்டிலே இருக்க முடியாது. நாங்க குடி இருந்த வீடு, குடி இருக்காத வீடு, அரசாங்க வீடு, சொந்த வீடுன்னு எல்லாம் பாரபட்சமே பார்த்ததில்லை. எங்கே போனாலும் போன ஒரு மாசம், 2 மாசத்துக்கெல்லாம், அவர் கொல்லுருவைக் கையில் எடுத்தால், நான் பாண்டில் சிமெண்டைத் தூக்கியே ஆகணும்!! வேறே வழியே இல்லை. அதிலும் அந்த வீட்டில், நாமளும் இருந்து கொண்டு, நம்ம சாமான்களையும் வைத்துக் கொண்டு, அவற்றை இடம் ஒதுக்கி வர ஆளுங்களுக்கு வேலை செய்ய ஒழிச்சுக் கொடுத்தது போக மிச்சம் இருக்கும் இடத்தில் தான் சமையல், டிபன், காபி, சாப்பாடு, தூக்கம் எல்லாம். அதுக்குத் தானோ என்னமோ தெரியலை, ஒவ்வொரு முறை மாற்றல் ஆகிப் போகும்போதெல்லாம் முன் பதிவு செய்யப் பட்ட முதல் வகுப்பு டிக்கெட்டையும், ஏசி டிக்கெட்டையும் வச்சுக் கொண்டு, அந்த வண்டியைக் கோட்டை விட்டுட்டு, வேறே வண்டியில் அன்ரிசர்வில் போக வச்சுப் பழக்கிட்டாரோனு தோணும். ஒரு ஸ்டவ் வக்கிற இடம் இருந்தாலே போதும், சின்ன டிரங்குப் பெட்டிக்குள் சமையல் பாத்திரங்களை வைத்து, சமைத்துத் திரும்பத் தேய்ச்சதும் அதிலேயே வைத்துனு மிக மிகக் குறைந்த அளவு பாத்திரங்களே போதும்னு ஆயிடும்.

பாத்திரங்கள் விஷயத்தில் தான் இப்படி, மத்தது எல்லாம் பூதம், பூதமா இருக்கும், பீரோ, கட்டில், மேஜை, நாற்காலி, காபி டேபிள்னு. அதை எல்லாம் எங்கே வைக்கிறது? எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு பெட்டி வேறே! அந்தப் பெட்டி நிறைய அவங்க அவங்க சேமிப்பான புத்தக மூட்டைகள்!இத்தனையையும் ஒரு பத்துக்குப் பத்து அடி அறையில் அடக்கிட்டு, ஒருத்தர் மேலே ஒருத்தர் பச்சைக் குதிரை தாண்டிட்டு, ஒரு மாதிரியா விளையாட்டு வீராங்கனையாவும் மாறியாச்சு! தாண்டிக் குதிச்சு, எடுக்கிறதிலேயும், எம்பி எடுக்கிறதிலேயும் என்னைவிடச் சிறந்தவங்க இப்போ இருக்கிறது கஷ்டம். இதிலேயே விருந்தாளிகள் உபசரிப்பும் நடக்கும். வந்தவங்க தான் பயப்படுவாங்க, சாப்பாட்டிலே சிமெண்ட் விழுமா, மணல் விழுமானு, நாங்க கவலையே பட்டுக்க மாட்டோம். இத்தனையும் எதுக்குனு கேட்கிறீங்களா? வீட்டிலே இப்போ கொஞ்சம் ரிப்பேர் வேலை நடக்குது. 2 அறையில் இருந்து சாமான்கள் வெளியே வந்து ஹாலை அடைச்சுட்டு இருக்கு. எடுத்து வைச்ச மேஸ்திரி, சித்தாள் எல்லாம், இந்த மாதிரியும் சாமான்கள் இருக்குமானு ஆச்சரியத்தோடு சுத்திச் சுத்திப் பார்த்துட்டு இருக்காங்க. நான் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூ.னு வசூல் பண்ணலாம்னு கூடச் சொன்னேன். கேட்கலை. :P

இந்த அழகிலே, சாப்பிடறது, தூங்கறது, எல்லாம் ஹாலிலே தான். கம்ப்யூட்டரும் ஹாலுக்கு வந்துடுச்சு, அதுக்குப் பிடிக்கவே இல்லைனு நல்லாத் தெரியுது, பின்னே? தனிக்காட்டு ராஜாவா இருந்தது. அங்கே இருந்து எடுத்து வந்து இங்கே கூட்டத்தோடு கூட்டமா இருந்தா இதை யார் கவனிப்பாங்க? அதான் ரொம்ப வருத்தத்தோட, அடிக்கடி மக்கர் செய்யுது. ஒருமாதிரியா சமாதானம் செய்து வச்சிருக்கேன். இன்னும் 2 நாள், இன்னும் 1 நாள் அப்படினு கவுண்ட் டவுன் சொல்லிக்கிட்டு வரேன். ஆனால் வண்ணான் வீட்டுக்குப் போற வழி இன்னும் கொஞ்சம் தூரம்னு ஆயிட்டு இருக்கு. பின்னே? யானை அசைஞ்சு திங்கும், வீடு அசையாம திங்கும் னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?? பேசாம ஒரு யானையே வாங்கி இருக்கலாமோ??

Saturday, July 5, 2008

சத்தம் போடாமல் ஒரு புதிரா, புனிதமா???


கே ஆர் எஸ்ஸுக்குப் போட்டியா ஒரு புதிரா, புனிதமா பாணியில் கொஞ்சம் கூட இல்லாமல் சில கேள்விகள் மட்டுமே கேட்டிருக்கேன். பதில் சொல்றவங்க தான் உண்மையான குண்டர், சீச்சீ, இல்லை, தொண்டர்னு தெரிஞ்சுடும்!

1.தொலைபேசி அழைப்பிலே அழுகை! ஏன், யாரிடம், எதுக்காக?

2.அம்பியை நேரிலே பார்த்தப்போ கூட அம்பியும் ஒரே வருத்தம்! ஏன்? எதுக்காக, யாரிடம்?

3.ரசிகன் இந்தியா வந்ததும் தொலைபேசியில் தன்னோட வருத்தத்தை யாரிடம் தெரிவித்தார்? ஏன், எதுக்காக, யாரிடம்?

4.கோபிநாத், சாட்டும்போது யாரிடம் ஒரு குரல் அழுதார்?? ஏன், எதுக்காக, யாரிடம்???

5.மதுரையம்பதியை வெறுப்படைய வைத்தது எது? பல நாட்களாய்ப் போராடுவது எதற்கு?
ஏன் எதுக்காக, யாரிடம்??

6.யாரைக் கண்டாலே அபி அப்பா ஓடி ஒளிஞ்சுக்கறார்? ஏன் , எதுக்காக, யாரிடம்?

7.இ.கொ. திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன், என்று சபதம் எடுத்தது ஏன், எதுக்காக, யாரிடம்?

8.மருத்துவர் ராமநாதன் தன்னோட சுட்டிகள் லிஸ்டிலே இருந்து யாரோட பதிவின் சுட்டியை நீக்கி உள்ளார்?? ஏன் எதுக்காக, யாரிடம்???

9.வலை உலகே என்ன ஆச்சோ எப்போ நிலைமை சீரடையுமோனு கவலையில் ஆழ்ந்திருப்பதாய்ச் செய்தி! ஏன் எதுக்காக, யாரிடம்???

10.இதெல்லாம் எதைக் குறிச்சுனு யாருக்காவது யூகம் செய்ய முடியுதா??


மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் திங்களன்று இந்திய நேரப்படி, 00-00 மணிக்கு வெளிவரும். அதுவரைக்கும் பதில்களை உங்கள் ஊகப்படி இங்கே பின்னூட்டமாய்த் தெரிவிக்கலாம்.

Thursday, July 3, 2008

காலமிது, காலமிது, மொக்கைகளின் காலமிது!!!

நல்லதுக்கே காலம் இல்லை, எல்லாம் இந்த சிஷ்ய கேடிங்க பண்ணற அடம் தான். ராமாயணம் எழுத ஆரம்பிச்சுட்டேனா? எல்லாம் கட்சி மாறிடுச்சுங்க, ஆனால் மொக்கைக்கு ஆபர் மேலே ஆபர் வந்துட்டே இருக்கே? என்ன செய்யறதுனு யோசிச்சேன்! எல்லாம் மொக்கைக்கே காலமாப் போச்சு, அட, ராமாயணத்துக்குத் தான் பின்னூட்டம் கொடுக்க மாட்டாங்க, சரி, போகட்டும்னா, எல்லாம் விழுந்து, விழுந்து, இந்த அம்பிக்கே, பின்னூட்டம் கொடுக்கிறதைப் பார்த்தால், ஹிஹிஹி, புகை எல்லாம் ஒண்ணும் இல்லை, கொஞ்சமே கொஞ்சம் தீசல் வாசனை தான் வரும்!! அப்படி என்னத்தைப் பெரிசா எழுதறார்? எல்லாம் சோகக் கதை, சொந்தக் கதை தான். அதிகம் வேறே ஒண்ணும் “ஜொள்”ளறதில்லை. ஒருவேளை அம்பி ரொம்பவே “ஜொள்”ளறதினாலேயே எல்லாரும் வராங்களோனு நினைக்க்கிறேன். புதுக்கடை ஆரம்பிச்சதை யார் கிட்டேயும் சொல்லலை, புதுசா வீடே இருக்கு, ஆனால் அது இன்னொருத்தர், பாவம் எனக்குத் , தானமாக் கொடுத்தது.. “தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடுங்கின கதை”யா ஆகிடும், அங்கே போய் மொக்கை போட்டால். அதான் இலவசமே போதும்னு இங்கே வந்துட்டேன். நாமதான் இலவசத்துக்கு அலைவோமே?? இ.கொ. உங்களை இல்லை! எதுக்கோ மூக்கிலே வேர்த்தாப்பலே வந்துடுவீங்களே இதுக்கு மட்டும்! :P

2 நாளா, 2 நாள் என்ன, இப்போ அடிக்கடி தொலைக்காட்சி பார்க்கிறதாலே, சில, படங்களும் பார்க்க முடிஞ்சது. ஹிஹிஹி, வேறே வழி இல்லை, தொலைக்காட்சியைப் பார்த்தாவது கொஞ்சம் மன ஆறுதல் அடையலாமே?? நல்ல படம்னு பார்த்தால், போன வாரம் பார்த்த, “KHOON BHARI MAANG” தான். ஏற்கெனவே தமிழ், ஹிந்தி எல்லா மொழியிலேயும் பார்த்தாச்சு. இருந்தாலும் ரேகாவின் நடிப்புக்காக இந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். சர்வ அனாயாசமான நடிப்பு. Born Actress? ம்ஹூம், அப்புறமா ஜெயபாதுரி சண்டைக்கு வருவாங்க, :P versatile actress??? இதான் சரியா இருக்குமோனு நினைக்கிறேன். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்ற பழமொழிக்கும் ஏற்ப இவரின் நடிப்பு இருக்குனு சொன்னால் அதிலே தப்பில்லை. அதிலும் வில்லனாய் வரும் கபூர்??? என்ன கபூர்?? பேர் மறந்துட்டேனே??? ரொம்பவே பிரசித்தம் தான், என்றாலும் மறந்து போச்சு! கபூரிடம் அவரோட காதலை நிஜம்னு நினைச்சுத் தடுமாறுவதும், தன்னோட சிநேகிதியான அனிதா ராஜ்(?) இவர் தான்னு நினைக்கிறேன், தன் கணவரோட ஏற்கெனவே தொடர்பு வச்சிருக்கிறதும் தெரியாத அளவுக்கு ரொம்பவே அப்பாவி!!! முன்னாலே தெரியாது, சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் தெரியலை! அப்புறமாய் வில்லன் தன்னைத் தண்ணீரில் தள்ளிக் கொலை செய்ய முயற்சிக்கும்போதும், அப்புறமாய் அவனைப் பழி வாங்க நினைக்கும்போதும், பழிவாங்கும் விதமாய் வித, விதமாய் ஆடை, அலங்காரத்தில் வருவதுமாய்த் திரையை ஆக்கிரமிக்கின்றார். ஒரே பாட்டுத் தான். திரும்பத் திரும்ப வருது. முதலில் ராகேஷ் ரோஷனும், ரேகாவும் பாடும் அந்தப் பாட்டு, டூயட்னும் சொல்ல முடியாது, இல்லைனும் சொல்ல முடியாது. பின்னர் ராகேஷ் ரோஷன் இறந்ததும் குழந்தைகளோடு அதே பாட்டுத் திரும்ப வருது! “ஹன்ஸ்தே, ஹன்ஸ்தே”னு ஆரம்பிக்கும் அந்தப் பாட்டின் அர்த்தம் என்னமோ அருமை!!! ஆனால் முதலில் ஒண்ணுமே தெரியாமல் அப்பாவியாக இருந்த ரேகா திடீர்னு இத்தனை கெட்டிக்காரியாக ஆனதின் காரணம் அத்தனை அழுத்தமாய் இல்லை. பழிவாங்கறதுதான் காரணம் என்றாலும், கொஞ்சமாவது முன்னாலே தைரியசாலிதான்னு காட்டி இருக்கவேண்டாமா? திரைப்படங்களில் தான் இப்படி ஒரே இரவில், அல்லது ஒரே பாட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கவோ, தைரியம் அதிகம் பெறவோ முடியும். அது என்னமோ தெரியலை, திரைப்படத்திலேயும் சரி, தொலைக்காட்சித் தொடர்களிலேயும் சரி, இந்த மாதிரி கணவனுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருக்கிறதைத் தெரிஞ்சுக்காத அப்பாவி நல்லவளாகவே எல்லா ஹீரோயின்களும் வராங்க. அதிலும், ஜெயாவில் வருது பாருங்க, ஒரு அறுவைத் தொடர், “அலை பாயுதே?” நல்ல பேர், ஆனால் சீரியல் மகா, மகா தண்டம்!!! அபத்தக் களஞ்சியம்! கலெக்டர் மனைவியாம், ஆனால் ரொம்பவே அநியாயத்துக்கும் நல்லவளா இருக்காங்க கெளசல்யா! எங்கே இருந்து இப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தாங்கனு புரியலை! கணவன் காதலிக்கும் பெண்ணை வீட்டுக்கே அழைத்து வருவதில் ஆரம்பிச்சு, ஒரே வீட்டிலேயே இருந்தும் தன் கணவனின் குழந்தைதான் அவள் வயித்திலே வளருகின்றது என்றும் புரியலையாம்! அப்புறம் உண்மை தெரிஞ்சதும் ஆட்டோ டிரைவர் கிட்டேப் போய் உதவி கேட்கிறதும், அந்த ஆட்டோக்காரர் மூலமாய் வேலைக்குப் போறதும், என்ன இது? படிக்கலையா? இல்லை படிச்சதுக்கான சான்றிதழ்கள் இல்லையா? இத்தனைக்கும் தங்கையைக் காப்பாற்ற மலேசியாவுக்குத் தனியாப் போய் தங்கையைக் காப்பாற்றிக் கூட்டிட்டு வந்தாங்க. திடீனு தன்னோட விஷயத்திலே இப்படி அபத்தமா ஏன் நடந்துக்கிறாங்க புரியலை! அதிலும் அந்த ஆட்டோ டிரைவர் சொல்லி வச்சாப்பலே ஒவ்வொரு முறையும் இவங்க தெருவிலே இறங்க வேண்டியது தான் வந்துடுவார். அவருக்கு வேறே ஆள் கிடைக்கலையா?? இவங்களுக்கு வேறே ஆட்டோவே கிடைக்காதா? வீட்டுக்கே வந்து பார்த்து இவங்க கணவர் கிட்டேயும் சவால் விடுவார் அந்த ஆட்டோக் காரர். ஆட்டோ டிரைவர் கிட்டே குடும்ப விஷயங்களைப் பேசுகிறதும், அவர் மூலமாக் கிடைச்ச வேலையிலே வீடு, வீடாய்ப் போய் வீட்டு உபயோகப் பொருட்களை விக்கிறதும், தலையிலே அடிச்சுக் கொண்ட வேகத்திலே தலைவலியே வந்துடுச்சு எனக்கு. அப்புறம் அந்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலே உட்காருவதே இல்லைனு சபதமே எடுத்துக் கொண்டுவிட்டேன். பேசாமல் அந்த ஆட்டோக்காரரை அந்த சீரியலை எடுக்கிறவரை மிரட்டறதுக்கு நாமளே அனுப்பலாம்னு முடிவும் பண்ணிட்டேன்.

அடுத்து சிம்ரன் திரை. முதலில் நல்லாவே போயிட்டிருந்தது. தர்ம யுத்தம் கொஞ்சம் சொதப்பல். அது எப்படி குழந்தைக்கான தடுப்பு ஊசி மருந்துகளினால் குழந்தைகள் செத்துப் போவதற்கு விஞ்ஞானிதான் ஒரே காரணம்னு அவரை மட்டும் தேடிப் பிடிச்சுக் கைது பண்றாங்க? லாஜிக்கே புரியலை! அந்த மருந்து தரமானதுனு தரக்கட்டுப்பாடுக்குப் போய் அங்கே சோதனை செய்து பார்க்கலையா? அதுக்கப்புறம்தானே மருந்துக் கம்பெனிகள் அதைத் தயார் செய்திருக்கணும்? பின்னரும் அதை விநியோகஸ்தர்கள் மூலமே விநியோகிக்கணும். அப்போவும் அரசின் மருந்தாளுநர்களின் தரக்கட்டுப்பாடு அதிகாரி அதைப் பார்த்திருக்கணுமே? திடீர்னு மருந்துப் பெட்டிகள் இடம் மாறுவது என்றால் அதை ஏன் யாருமே கவனிக்கலை? என்னதான் எல்லாருமே விஞ்ஞானிக்கு எதிராக வேலை செய்யறாங்கனு வச்சுக் கொண்டாலும், ஒருத்தர் கூடவா அது தப்புனு உணராமல் இருந்திருப்பாங்க? அதுக்கப்புறம் அந்த ஊசி மருந்துகளை உபயோகித்த செவிலியர், மருத்துவர்கள். மருந்துகள் வந்திருக்கிறதென்னமோ அரசாங்க மருந்துக் கிடங்கிலே இருந்துதான். அப்படி இருக்கும்போது அங்கே இருக்கும் அதிகாரிகளையோ, மற்ற ஊழியர்களையோ விசாரணை என்பது பேருக்குக் கூடச் செய்யவில்லை. செவிலியர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, மருந்து கையாண்டதோடு சரி, விட்டுடலாம். மத்தவங்க? ஏன் அவங்க யாரையுமே பிடிக்கலை?

விஞ்ஞானியை மட்டும் அதிலும் அவர் ஒருத்தரை மட்டும் குறி வச்சு ஏன் பிடிக்கணும்? இந்தச் சாதாரணச் சந்தேகம் யாருக்குமே வரலை! சிம்ரன், அவர் காதலிக்கும் போலீஸ் ஏ.சி. உள்பட. ஆனால் முதலிலேயே நமக்குப் புரிஞ்சுடுது, ஏ.சி.யின் அப்பாதான் வில்லன், அவர் தான் விஞ்ஞானிக்கு எதிரி, ஆனால் மறைமுக எதிரினு. அதற்கான காரணம் தான் சொதப்பலோ சொதப்பல்! வெறும் பொறாமை தான் காரணமாம். வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றது தான் காரணமாம். விருதுகள் கிடைச்சது தான் காரணமாம். அதுக்காக விஞ்ஞானியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இருந்தாலோ, அவர் பெண்களுக்குத் தீங்கு இழைச்சிருந்தாலோ ஏத்துக்கவோ, மன்னிக்கவோ முடியும். ஆனால் இப்படியா அநியாயமாய்க் குழந்தைகள், அதுவும் பச்சிளங்குழந்தைகள், உயிரோடு விளையாடுறது? இதைப் பார்க்கிற யாரேனும் நிஜமா இப்படிப் பண்ணாம இருக்கணுமேனு கவலை வந்துடுச்சு. என்னவோ போங்க! சினிமாதான் பிதற்றல்னால் தொலைக்காட்சித் தொடர்கள் அதுக்கு மேலே பேத்தல்! இப்போ புதுசா வேறே ஒண்ணு வருது. நான் திரும்பிக் கூடப் பார்க்கிறதில்லைனு முடிவு எடுத்துட்டேன். என்னோட ம.பா. தான் ரொம்பவே ஆர்வத்தோட பார்த்துட்டு இருக்கார். என்னைக் கூப்பிட்டதுக்கு, நான் வரலை, இனிமேல் இந்த மாதிரி சீரியல் பார்க்க வந்தால் என்னை நானே, கிளிப்பச்சைக் கலர் சப்பலாலோ, இல்லை பஞ்சு மிட்டாய்க் கலர் சப்பலாலோ அடிச்சுக்கறேன்னு சொல்லிட்டேன். செருப்புக் கடையிலே போய்ப் பார்த்து இந்தப் பழைய செருப்பை விட்டுட்டு, புதுசை லவட்டிட்டு வரணும் அதுக்கு,!!!!!! என்ன ராமாயணம் எழுதலைனு கேட்காதீங்க! அது தனிக்கதை! வரும், வரும், கொஞ்சம் வேலை இருக்கா? மொக்கைனால் ஆன்லைனிலே போடலாம். இந்த ராமாயணம் மட்டும் கொஞ்சம் தயார் பண்ணிக்க வேண்டி இருக்கு! 2 நாளா ஆன்லைனிலே போட்டேன், ஆனால் எனக்குத் திருப்தியா இல்லை! வரேன், எழுதி வச்சுட்டு! வர்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆஆஆஆ????????

Tuesday, July 1, 2008

சித்திரம் பேசுதடி- எல்லோரா குகைகள் தொடர் 6

7-ம் நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப் படும் இந்த இந்து சமயத்தைக் குறிக்கும் குகைகள் பெரும்பாலும் இந்துமதக் கடவுளரையே கொண்டுள்ளது. முதலில் நாம் காணும் கோயில் விஷ்ணுவின் கோயிலாக இருந்திருக்கின்றது. இந்துமதத்தின் பல்வேறு கடவுளரின் உருவங்களையும் காணலாம் இங்கே. நுழையும்போது துவாரபாலகர்களும், நதிகளின் தேவ உருவங்களையும் கொண்ட சிற்பங்களைக் காண முடிகின்றது. இடப்பக்கத்தில் துர்கை, மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, காண்கின்றோம். வலப்பக்கத்திலும் துர்கையோடு கூடிய நடனக் கோலத்தில் ஈசனின் சிற்பமும், ராவணன் கைலை மலையை அசைக்கும் கோலத்திலும் பார்க்க முடிகின்றது. இந்த ராவணனின் சிற்பத்தை வைத்தே இந்தக் குகையும் அவ்வாறே அழைக்கப் படுகின்றது.
இது தவிர, ராமாயணக் கதையைக் கூறும் சிற்பங்களும் சிறிய அளவில் செதுக்கப் பட்டிருப்பதையும் காண முடிகின்றது. அடுத்த குகை தசாவதாரக் குகை என அழைக்கப் படுகின்றது. ஆனால் இது ஒரு காலத்தில் புத்த மதக் குகையாக இருந்திருக்கலாம் எனவும், பின்னாட்களில் மாற்றப் பட்டிருக்கலாம் எனவும் சொல்லப் படுகின்றது. திறந்தவெளி ஒன்றும், ஒரே கல்லினால் மண்டபம் ஒன்று காணப்படுகின்றது. பக்கத்திலேயே இரண்டு தளம் கொண்ட கோயில் ஒன்றும் இருக்கின்றது. மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனை போன்ற நதியின் தேவதைகளின் உருவம் செதுக்கப் பட்டிருக்கின்றது. கூரையைப் பாருங்கள், அடடா, என்ன அழகு? என்ன அழகு?? இப்போதெல்லாம் அரசின் உதவி கிடைத்தாலும் கூட இம்மாதிரியான சிற்ப வேலைப்பாடுகளை இவ்வளவு தரத்தோடு செய்ய முடியுமா சந்தேகமே!

சிங்கங்கள், கணநாதர்கள், மேலே காண்கின்றார்கள். படிகள் மேலே உள்ள தளத்திற்குச் செல்ல ஏறுகின்றோம். ஒரு பெரிய விசாலமான கூடம் வருகின்றது. மண்டபம் எனவும் சொல்லலாமோ??? இங்கே தான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் செதுக்கி வைத்திருக்கின்றனர். இன்னும் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தோமானால், விஷ்ணு மட்டுமில்லாமல், சிவன், சிவ, பார்வதி சொக்கட்டான் ஆடும் கோலத்தின் சிற்ப வடிவம், ஆஹா, உமை அன்னையின் முகத்தில் தான் எவ்வளவு சந்தோஷம்?? கணவனோடு ஆடுவதாலா? அல்லது ஆடல்வல்லானை ஜெயித்துவிட்டோமென்றா?? புரியவில்லை!ஆஹா, இதோ, காரணம் புரிந்துவிட்டது. அம்மை ஈசனைத் திருமணம் செய்து கொண்டு இப்போதே வந்திருக்கின்றாள். அது தான் காரணம், நாணம் குமிழியிட, அது முகத்தில் சிரிப்பாய் மலர்ந்திருக்கின்றது. அதோ, அது என்ன??/

லிங்கத்தில் இருந்து சிவனா? அல்லது சிவன் லிங்கமாய் ஆவிர்ப்பவிக்கின்றாரா?? எதிரே யார்?/ ஓ, மார்க்கண்டேயரா?? ஆமாம், மார்க்கண்டேயரைக் காக்க இறைவன் லிங்க வடிவத்தில் இருந்து சிவனாக வந்து எமனைத் தண்டிக்கின்றார். அதுக்கும் முன்னால், இது என்ன?// கங்கையைத் தலையில் தாங்கும் கோலத்தில் சிவன்!!! பார்க்கக் கண் கோடி போதாது! இத்தனையும் செய்து முடித்த நம்ம முன்னோர்களின் புத்திசாலித் தனத்தைப் பாராட்டுவதா? அல்லது இப்போது கவனிப்பார் அதிகம் இல்லாமல் ஏதோ ஓரளவு கவனிப்போடு, மெல்ல, மெல்ல அழிந்து கொண்டிருப்பதை நினைத்து வருந்துவதா?? புரியவில்லை!

Monday, June 30, 2008

மன ஆறுதலுக்கு ஒரு மொக்கை!!!!!

என்னமோ தெரியலை, இந்த ப்ளாகர் இன்னும் என் கிட்டே ஓர வஞ்சனையோடத் தான் இருக்கு. :P அதிலேயே மீண்டும் ஒரு பதிவு திறக்கலாம்னு போனேன். எல்லாம் இந்த சிஷ்யகேடிங்கள் எல்லாம் மொக்கை போட அலையுதே, அதுக்காகத் தான். அவங்க விருப்பத்தையும் நிறைவேற்றினாப்போல இருக்கும், நாமளும், அங்கே, இங்கேனு அலையாமல் ஒரே இடத்திலே மொக்கையும் போட்டுக்கலாம், பக்கத்திலேயே வேணும்கிற ஆன்மீகமோ, தத்துவமோ, எதுவேணாலும் எழுதிக்கலாம்னு பார்த்தேன். ஆனால், இந்த ப்ளாகர் கடைசி வரை ஒத்துக்கவே இல்லை. குமரனுக்கோ, அல்லது 13-ம் ஆழ்வாருக்கோ மட்டும்தான் இஷ்டத்துக்கு ஏத்திக்கிற உரிமை இருக்குனு சொல்லிடுச்சு! என்னடானு யோசிச்சேன், புது வீடு என்னமோ இருக்கு, ஆனால் பூமிதானமா வாங்கினது. வேறொருத்தர் பரிசாக் கொடுத்தது. அங்கே போய் மொக்கை போடக் கஷ்டமா இருக்கே?? என்னத்தைச் சொல்றது? மொக்கை எழுதச் சொல்லி நாளுக்கு நாள் சிஷ்யகேடிங்க விண்ணப்ப மனு அதிகம் ஆயிட்டே இருக்கே???

எப்படியாவது அவங்க ஆவலை நிறைவேத்தணும்னு ஆரம்பிச்சது தான் இது. அதே சமயம் நடு நடுவிலே கொஞ்சம் விஷயமும் தானம் செய்யணுமே??? ஊரெல்லாம் சுத்திட்டு அதைப் பத்தி எழுதாமல் இருக்கிறதும் சரியாப் படலை. சிலருக்கு போரடிச்சாலும், ஊர் சுத்தும்போது நடக்கும் விஷயங்களின் சுவைக்கு ஈடு, இணை இல்லை அல்லவா? அதான் தனிக் கடை போட்டுடலாம்னு போட்டாச்சு. ஆனால் யாரையும் கூப்பிடலை, பின்னூட்டத்தை வச்சு திவா வந்துட்டுப் போயிருக்கார். அம்பி கண்டு பிடிச்சாச்சு, கேஆரெஸ்ஸும் கண்டு பிடிச்சாச்சு, ஆனால் நான் கூப்பிடணும்னு பார்க்கிறாங்க போலிருக்கு! மெதுவா வரட்டும், யாரும் பின்னூட்டம் கொடுக்கலைனால், ஒருத்தரும் படிக்கலைனு அர்த்தம் இல்லை, அது தெரியும், அதனால் மெதுவா, வந்து பின்னூட்டம் கொடுக்கட்டும்னு இருக்கேன்.

எல்லாம் இப்போ சங்கிலித் தொடர், வளையல் தொடர், நெக்லஸ் தொடரில் பிசியா இருக்காங்க. எல்லாம் முடிஞ்சு வந்து பார்க்கட்டும். பல இடங்களுக்கும் இந்த ஆறு மாசமாப் போயிட்டு வந்தாச்சு, ஆனால் அது பத்தி ஒண்ணும் எழுத முடியலை. நேரம் எப்படிக் கிடைக்குமோ தெரியலை. இப்போ ப்ளாகர் மட்டுமில்லாமல், மீண்டும் இணைய வேதாளமும் முருங்கை மரத்தில், மழைக்காலம் வந்தால் எனக்கு இழுக்குமோ இல்லையோ என் இணையம் இழுக்கும். எப்போ வருமோ தெரியாது. ஆகவே மன ஆறுதலுக்கு ஒரு மொக்கை! அப்பாடா, தலைப்புக்கும், இதுக்கும் ஒருமாதிரி சம்மந்தம் கொண்டு வந்துட்டேன்!!! வர்ட்டாஆஆஆஆ???? நாளைக்கு வரமுடியுமோ, இல்லையோ தெரியலை! :(((( அதுவரை எஞ்சாய்!!!!!!!!!

Thursday, June 26, 2008

சித்திரம் பேசுதடி!!-எல்லோரா குகைகள் தொடர் 5


ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது, அஜந்தா பற்றி எழுதி. வேலை அதிகம், மேலும் முன்கூட்டி எழுதி வச்சுக்கவும் முடிவதில்லை. அப்போ, அப்போ நேரம் கிடைக்கும்போது எழுதுவதால் இது தள்ளிப் போட்டாச்சு. தாமதத்திற்கு மன்னிக்கவும். இனி அடுத்த குகைக்குப் போவோமா???
************************************************************************************************************

. புத்த மதக் குகைகள் மொத்தம் 12 என்று சொல்லப் படுகின்றது. பனிரண்டும் இருந்தாலும் வழிகாட்டிகள் காட்டுவது முக்கியமான மூன்று அல்லது நான்கு குகைகள் மட்டுமே. மற்றவை சிதிலமடைந்து வருகிறபடியால் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகத்தரத்துக்கு மேற்பட்ட ஒப்பற்ற அமைப்புகளுடன் கூடிய இந்தக் குகைக்கோயில்கள் பாதுகாக்கப் பட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். நம்முடைய நாகரீகமும், கலாசாரமும், ஆடை, அலங்காரமும், கட்டிடக் கலைத் திறமையும் இந்தக் குகைக்கோயில்களின் மூலம் நன்கு வெளிப்படுகின்றது. வெறும் உளியும், சுத்தியும் வைத்துக் கொண்டே, இவ்வளவு திறமையாக யோசித்து அமைத்திருப்பது இந்தியர்களின் கட்டிடக் கலைத் திறமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றது.

எட்டாவது குகையின் புனிதக் கோயில் பின்பக்கத்துச் சுவற்றில் இருந்து சற்றே தனித்துக் காணப்படும் ஒரே மடாலயம் ஆக உள்ளது.வட்டவடிவமான பாதையுடன் கூடிய இந்தக் குகையின் மூன்று தங்கும் அறைகளும், மற்றவை முடிக்கப்படாமலும் காண்கின்றோம். அடுத்துள்ள ஒன்பதாவது குகைக்கு மேல்தளம் இருக்கின்றது. என்ன ஆச்சரியம்?? அந்தத் தளத்தில் பால்கனியும் இருக்கு!!!! மேலும் தேவதையான தாரா, பக்தர்களைப் பாம்பு, கத்தி, யானை, நெருப்பு, மற்றும் கடல்புயலினால் ஏற்பட்ட கப்பல் சேதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் காட்சியை முன்பக்கத்தில் காணலாம். பத்தாவது குகை விஸ்வகர்மா என்ற தேவலோகச் சிற்பியின் பெயரால் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இந்த குகை புத்த சைத்தியங்கள் அந்தக் காலங்களில் எவ்வாறு அமைக்கப் பட்டிருக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. விஸ்வகர்மாவை தேவதைகளின், அல்லது கடவுளரின் சிற்பி என்றே சொல்கின்றனர், என்பதில் இருந்து கலாசாரம் அன்றே எவ்வாறு இருந்திருக்கின்றது என்றும் புரிந்து கொள்ள முடிகின்றது. மிகப் பெரிய கூடத்தின் மூன்று பக்கங்களும், மிருகங்களின் சிற்பங்களால் ஏற்படுத்தப்பட்ட அஸ்திவாரத்தின் மேலேயே எழும்பி உள்ளது. மிருகவேட்டை ஆடுவோரின் தோற்றங்கள் உள்ள ஓவியம் மேலே காணப்படுகின்றது. ஒரு பெரிய ஸ்தூபம் பக்கத்துச் சுவரின் நடுவே காணப்படுகின்றது. அழகிய புத்தரின் சிற்பமும் அதில் உள்ளது.
வெராந்தா என்று சொல்லப் படும் இடத்தில் இருந்து படிகள் மேலே செல்கின்றன. மேலேயும் அழகான ஒரு சைத்தியம் காண்கின்றோம். போதி சத்துவர்களும், தெய்வ உருவங்களும் பெண் உதவியாளர்களும் காண்கின்றோம். தாமரைப் பூக்களும், பெண்கள் அணிந்திருக்கும் உடை அமைப்பும், தலை அலங்கார அமைப்பும், போட்டிருக்கும் நகைகளில் இருந்தும் அன்றைய கலாசாரம் புரியவருகின்றது. அதே சமயம் ஆப்பிரிக்க இனத்தவர்கள் போன்ற சிலரும் ஓவியங்களில் காணக் கிடைக்கின்றனர். 11-ம் குகை இரண்டு தளங்கள் உள்ளது. கீழ்த்தளம் முழுக்க இடிந்துவிட்டதாயும், தற்சமயம் காணக்கிடைக்கும் தாழ்தளம் புத்தரின் போதிக்கும் சிற்பத்துடனும், இரண்டு அறைகளுடனும், , நடுத்தளம் முடிவடையாத நிலையிலும் உள்ளது. இதனுள் செல்ல அனுமதி இல்லை, எனினும் இது பின்னாட்களில் இந்துக்களால் மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது. ஏனெனில் இங்கே துர்கை, விநாயகர் காணப்படுகின்றனர். பனிரண்டாம் குகை மூன்று தளங்கள் உள்ளது.

கீழ்த் தளம் இருபக்கமும் அறைகளுடன், ஒரு மடாலயமாகக் காணப்படுகின்றது. அடுத்து வரும் நடுத்தளமும் கீழ்த்தளம் போன்றே இருக்கின்றது. மேல் தளத்தில் ஏழு வகையான புத்தர் சிலைகள் சுற்றிலும், தெய்வ உருவங்களுடன் காண்கின்றோம். மேலும் உள்ளே சென்றால் பனிரண்டு தேவதைகள், ஈரிதழ்த் தாமரையில் அமர்ந்த கோலத்தின் காணலாம். பதின்மூன்றாம் குகை சாமான்கள் மட்டும் வைக்கும் இடமாக இருந்திருக்கும் வாய்ப்பு உண்டு. இனி நாம் காணப்போவது இந்துமதக் குகைகள்.

Friday, June 13, 2008

சித்திரம் பேசுதடி!! எல்லோரா குகைகள்- தொடர் 4

புத்தர் தன் கைவிரல்களை இவ்வாறு வைத்திருப்பது தான் அவர் போதனை செய்யும் வடிவமாய்க் கருதப் படுகின்றது. இப்போ மெதுவா அடுத்த குகைக்கு வந்துட்டோமே??? அட, இது என்ன இங்கே ஒரு பெரிய வராந்தா மாதிரி இருக்கோ? அதோ, அது தான் குபேரன் சிற்பம் என வழிகாட்டி சொல்லுகின்றாரே??? செல்வத்துக்கு அதிபதியான குபேரனை, "பஞ்சிகா" என்ற பெயரால் அழைத்துள்ளனர். அருகே அவர் மனைவி, "ஹரிதி" என்று அழைக்கப் படுகின்றாள். உள்ளே நுழையும்போது வாயிற்காவலர்கள் போன்ற உருவச் சிலைகளின் அமைப்புடன் விளங்குகின்றது. சுவர்களின் ஒவ்வொரு பக்கமும் புத்தர்களே ஆக்கிரமித்திருப்பதையும் காண முடிகின்றது. விண்ணில் இருந்து தேவர்களும், தேவதைகளும் வந்து புத்தரை ஆசீர்வதிப்பதும், போதிசத்துவர் என்று அழைக்கப் படும் புத்தரின் உருவமும், இன்னும் புத்தர் ஆகக் காத்திருக்கும் துறவிகளும் காணக் கிடைக்கின்றனர்.
புத்தரின் மகா பெரிய உருவம் உட்கார்ந்த நிலையில் காண்கின்றோம். அதை அடுத்து நாம் செல்லும் குகையில் முற்றுப் பெறாத புத்தரின் உருவம் உள்ள சிலையுடன் கூடிய குகையைக் காண்கின்றோம். அதை அடுத்த நான்காவது குகை, இரண்டு தளம் கொண்ட அமைப்புடன் விளங்குகின்றது. ஏற்கெனவேயே முதல் தளத்துக்கே பல படிகள் மேலே ஏறி வந்திருக்கின்றோம். வந்து பார்த்தால் இந்தக் குகை சற்று, இல்லை, இல்லை, நன்றாகவே சிதிலமடைந்த நிலையில் உள்ளது எனப் புரிகின்றது. கடவுளே??? எதை நாம் உருவாக்க முடியும் இது போல்?? என்றாவது நினைத்துப் பார்த்தோமா??? குறைந்த பட்சம் காப்பாற்றிப் பாதுகாத்து வைக்கவாவது தெரியுதா நமக்கு??? எத்தனை அரிய பொக்கிஷங்கள்??? வருத்தம் மேலிடுகின்றது. பார்க்கும்போதே. கீழத்தளத்தில் ஒரு பெரிய விசாலமான கூடமும், உட்கார்ந்த நிலையில் உள்ள பெரிய புத்தர் சிலையும், சிலையின் இரு மருங்கிலும், புத்தருக்கு உதவி செய்யும் துறவிகளும் காணப் படுகின்றனர். மேல் தளத்தில் அதே போல் இருந்தாலும் சற்றே சிறியதான சிற்பங்கள் காணப் படுகின்றன.
ஐந்தாவது குகையில், இன்னும் மேலே ஏற வேண்டி உள்ளது. ஒரு கல்லால் ஆன தளத்தை குடைந்து உருவாக்கப் பட்ட படிகளில் மேலே ஏறிச் செல்கின்றோம். அப்பா, எவ்வளவு பெரிய குகைக் கோயில்??? வியப்பை அடக்கவே முடியவில்லை, அதுக்குள் நமக்குக் களைத்து விடுகின்றது. ஆனால் இம்மாதிரித் தினமும் மேலே ஏறி வந்து வெறும் உளியையும், சுத்தியலையும் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த குகைக் கோயில்களையும் சிற்பங்களையும் செதுக்கி இருக்கின்றார்களே, எத்தகைய உழைப்பு இது???? நாம் இருந்து அனுபவிக்கப் போகின்றோமா என்று அவர்கள் சிறிதாவது நினைத்திருந்தால் இம்மாதிரியான அற்புதங்கள் தோன்றி இருக்காது.

மூன்று பாகமாய்ப் பிரிக்கப் பட்ட இந்தக் குகையின் நடுவே இரு பக்கமும் சிறிய சிறிய அறைகள் இருக்கின்றன. மேலே "காலம்" என அழைக்கப் படும் உத்திரங்கள் எல்லாம் நன்கு அலங்கரிக்கப் பட்டு விளங்குகின்றது. வித, விதமான அழகுணர்ச்சியோடு கூடிய குறிப்புகளால் வரையப் பட்ட வித விதமான இலைத் தொகுதிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தரையில் இருந்து சிறு சிறு கல்லால் ஆன பெஞ்சுகள் எழுப்பப்பட்டுள்ளது. நடுவில் புத்தரை வணங்குமிடம் உள்ளது. உள்ளே பெரிய புத்தரின் திருவுருவச் சிலை உள்ளது. அடுத்து வரும் ஆறாவது குகை செவ்வக வடிவில் உள்ளது. இதிலும் பானைகள், இலைகள், பூக்களால் ஏற்படுத்தப்பட்ட வடிவங்கள் காணக் கிடைக்கின்றது. எத்தனை நுண்ணிய வேலைப்பாடுகள் என மனம் வியப்பதோடு அல்லாமல், இத்தகைய நாகரீக வளர்ச்சி எப்போவோ நம் நாடு அடைந்துவிட்டதை எண்ணும்போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தாலும், இப்போதைய நிலைமையை நினைத்து வருத்தமாயும் இருந்தது.

இந்தக் குகையின் சுவர்களில் போதி சத்துவர் தவிர, மற்றக் கடவுளர்களும் இடம் பெறுகின்றனர். கல்விக்கு அதிபதியாகச் சொல்லப் படும் "மஹா மயூரி" என்னும் தேவதையும், "தாரா" என்னும் தேவதையும் காணப்படுகின்றனர். இன்னொரு பக்கம் மஹா மயூரி தன் மயில் வாகனத்தில் காணப்படுகின்றாள். அருகிலேயே "அவலோகேதேஷ்வர்" கையில் வைத்திருக்கும் தாமரைப் புஷ்பத்துடன் காணப் படுகின்றார். புத்தருக்கான ஒரு சிறிய வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றது. இங்கே பெரிய புத்தரை, பல சிறிய புத்தர்கள் சூழ்ந்துள்ளனர். அடுத்துள்ள ஏழாம் குகை சாதாரணமாய்க் காணப் படுகின்றது. ஆகவே இதில் எல்லாம் அதிகம் காட்டுவதில்லை. இனி அடுத்த குகைக்குப் போவோம்.

Tuesday, June 10, 2008

சித்திரம் பேசுதடி! எல்லோரா குகைகள்

குகைகளின் அமைப்பை மேற்கண்ட படத்தில் பார்க்கலாம், இங்கே படங்கள் எடுக்கவேண்டுமானால் டிஜிட்டல் காமிராவில் தான் எடுக்க முடியும் அல்லது குறிப்பிட்ட வீடியோ காமிரா மட்டுமே. இவை இரண்டையும் தவிர, மற்ற ஃப்ளாஷ் அமைப்புக் கொண்ட கற்கால(எங்க கிட்டே அதான் இருக்கு, அப்போ கற்காலம் தானே) காமிராக்கள் அனுமதி இல்லை. மொபைலில் இருந்து கிளம்பும் ஃப்ளாஷ் கூட அனுமதிக்கப் படவில்லை. தெரியாத்தனமாய் ஒருத்தர் மொபைலில் இருந்து ஃப்ளாஷ் கிளம்ப அவர் அங்கே இருந்த ஊழியரால் வலுக்கட்டாயமாய் வெளியேற்றப் பட்டு பின்னர் மொபைலைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அனுமதித்தனர். மஹாராஷ்டிராவின் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இவை கட்டாயமாய்க் கடைப்பிடிக்கப் படுகின்றது. மேலும் வழிகாட்டியும் அங்கீகரிக்கப் பட்டவராய் இருந்தால் தான் நல்லது. இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் மூலமோ, அல்லது மஹாராஷ்டிர அரசின் சுற்றுலாத் துறையின் மூலமோ ஏற்பாடுகள் செய்து கொண்டு போவதே மிகச் சிறந்தது. இந்தியருக்குக்குறைந்த அளவுப் பணமே செலவு ஆகின்றது. எல்லோரா குகைகள், தெளலதா பாத், த்ருஷ்ணேஸ்வரர் ஜ்யோதிர் லிங்கம், பீபி கா மக்பரா, தண்ணீரில் ஓடும் மாவு அரைக்கும் இயந்திரம் போன்றவைகளை ஒரே நாளில் சென்று பார்க்க ஒரு நபருக்கு 200ரூ வசூலிக்கப் படுகின்றது, இது பேருந்துக்கான செலவு. அங்கே போனால் நுழைவுக்கட்டணம் 20 ரூயில் இருந்து 25 ரூக்குள் தான் இருக்கும். வழக்கம் போல் குழந்தைகளுக்கு அரைக்கட்டணம், வெளிநாட்டுக்காரர்களிடம் அதிகமாகவே வசூலிக்கின்றனர். அஜந்தா குகைகள் ஒளரங்காபாத்தில் இருந்து 120 கி.மீ தள்ளி இருப்பதால், அதற்குச் சென்றுவரபேருந்துக் கட்டணம் நபர் ஒருவருக்கு 300 ரூ. வழிகாட்டிகள் தனியாக டிப்ஸ் கொடுன்னு என்றெல்லாம் கேட்பதில்லை. இனி குகையின் அமைப்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். குகையின் மேல் கஷ்டப் பட்டு ஏறி விட்டோம் நேற்றே. எதிரே தெரிந்தது பெரிய புத்தர் சிலை.
இந்த புத்தர் சிலையின் அமைப்பு புத்தர் தன் கொள்கைகளைச் சீடர்களுக்கு போதிக்கும் நிலையில் இருப்பதாய்ச் சொல்கின்றனர். தென்பகுதியில் இருக்கும் இந்த முதல் குகையில் புத்தரின் பெரிய உருவச் சிலை இருந்தாலும், இது புத்த சைத்தியமாய்த் தெரியவில்லை. இருபக்கங்களிலும் இருக்கும் அறைகளைப் பார்த்தால் பிட்சுக்களின் தங்குமிடங்களாய் இருந்திருக்கும் வாய்ப்பு உண்டெனத் தெரிகின்றது. நம் வழிகாட்டியும் அதே சொல்கின்றார். புத்தருக்குப் பின்னால் இது என்ன ஒரு ஆள் நுழையும் அளவுக்கு இடைவெளி??? இந்த இடைவெளியின் பின்னால் மறைந்து கொள்ளவும் முடியும், அங்கே இருக்கும் மற்றொரு வழியாக வேறு வழியில் செல்லவும் முடியும்! அப்பாடி??? அப்போ அந்தக் காலத்தில் புத்த பிட்சுக்கள் ராஜவம்சத்தினரைப் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டே? அப்போ இப்படித் தான் ஒளிந்து கொண்டிருப்பார்களோ????? அல்லது ஏதேனும் சதித்திட்டம் நிறைவேற்றப் போயிருப்பார்களோ?? ஆவல் அதிகரிக்கின்றது போய்ப் பார்க்க. ஆனால் வழிகாட்டியின் கண்டிப்பான கட்டளையால் புத்தர் சிலையின் பின்னால் சென்று பிரதட்சிணமாய் வர மட்டுமே முடிகின்றது நம்மால்.

புத்தரின் உருவங்களை பெரியதாக அமைத்ததின் காரணம் புரியவில்லை என்றாலும் அதன் அருகே நிற்கும்போது, நாம் எத்தனை சிறியவர் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதலில் இருக்கும் இந்தச் சில குகைகள் "தேராவாரா" குகைகள், அல்லது "தேதாவதா" குகைகள் என்றும் அழைக்கப் பட்டதாய்த் தெரிய வருகின்றது. தேரா என்றால் புத்தமதப் பிரசாரகர்கள் அல்லது ஆசிரியர்கள் எனவும் தெரிய வருகின்றது. பக்கத்துக்கு நான்காக இருபக்கமும் சேர்த்து, எட்டுத் தங்குமிடங்கள் அங்கே இருக்கின்றன. சிலது பூட்டி வைத்துள்ளது. திறந்தவற்றில் எட்டிப் பார்த்தால் இரு பக்கமும் இரு கல் திண்ணைகள், (நம்ம ஊர் மாப்பிள்ளைத் திண்ணை போல் அமைப்பில்) இருப்பதைக் காணலாம், ஒரு அறையில் இரு பிட்சுக்கள் வீதம் தங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு அறைக்கும் வெளியே தரையில் பெரிய, சிறிய அளவிலான குழிகள். சிலவற்றில் விளக்கு ஏற்றப் படும், சிலவற்றில் ஓவியத்திற்கான வண்ணங்கள் கரைக்கப் படும். எதிரே மாலைச் சூரியன் மயங்க, இங்கேயோ வண்ணங்கள் மயங்க, மெலிதான வெளிச்சத்தில் ஓவியங்கள் மட்டும் பிரகாசிக்க, அந்தக் காட்சி எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகின்றது அல்லவா??? ஓவியங்களையும் சிற்பங்களையும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. வெளியே வந்தால் பாறைகள், இந்தப் பாறைகளில் என்ன அழகு இருந்தது??? அதை எப்படி யோசித்தனர்?? எப்படி உயிரோட்டத்துடன் கூடிய சிற்பங்களை அமைத்தார்கள்??? யோசிக்க வேண்டிய விஷயம் இது! அடடா??? முதல் குகையிலேயே இத்தனை நேரம் ஆக்கினால் மிச்சம்??? இதோ அடுத்ததுக்குப் போவோமா??? சீக்கிரமாய் எல்லாம் வர முடியாது. ஏற வேண்டும், ஏறுவோம் வாருங்கள்!

டிஸ்கி: இந்த சஹ்யாத்திரி மலைத் தொடர்கள் "எரிமலைப் பாறைகள்" நிறைந்தவை என்பதை மறந்துவிட்டோம், நாங்கள் செல்லும்போது. வன வளம் கோடைநாட்களில் இருக்காது என்பதும் மறந்துவிட்டோம், மற்ற மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் போல் இதுவும் வன வளம் நிரம்பியது என நினைத்து ஏப்ரல், மேயில் சென்றால் வறண்ட பாறைகளையும், காயந்த மரங்களையுமே பார்க்க முடியும். ஆனால் இதுவும் ஓர் அழகுதான். எப்படி முதியோருக்குப் பல் போய், இருந்தாலும் சிரிக்கும்போது அழகு தெரியுமோ, அதுபோல் காய்ந்த இந்த மொட்டைப் பாறைகளும் அழகாகவே தெரிந்தது. எனினும் மழைக்குப் பின்னர் ஒரு முறையாவது போகவேண்டும்,மேகங்கள் தவழ்வதையும், மேலிருந்து அருவிகள் கொட்டுவதையும், செடிகளின் பச்சையையும், கீழே ஓடும் ஆற்றில் நீர் நிறைந்து ஓடுவதையும் பார்த்துக் கொண்டே, மலைப்பாதையின் விளிம்பில் முன்னங்கால்களை மட்டும் வைத்து ஏறிக் கொண்டே ஒவ்வொரு குகையாகப் பார்க்க வேண்டும். போவதாய் இருந்தால் மழை முடிந்து ஆகஸ்டிலோ, செப்டம்பரிலோ போவதே சிறப்பு.

Monday, June 9, 2008

சித்திரம் பேசுதடி - எல்லோரா தொடர் 2


முதலில் நாம் காணப் போவது எல்லோரா குகைக் கோயில்கள் ஆகும். எல்லோரா சஹ்யாத்திரி மலைத் தொடரில் அமைந்துள்ள குகைக் கோயில்கள் ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த சஹ்யாத்திரி மலைத் தொடரில் தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்தக் குகைக் கோயில்கள், புத்தமதக் குகைகள், இந்து மதக் குகைகள், ஜெயினர்களின் குகைகள் என மூவகைக் குகைக் கோயில்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 40க்கு மேல் என்று சொல்லப் பட்டாலும், சில குகைக் கோயில்கள் மட்டுமே பார்க்கும்படியான நிலைமையில் உள்ளன என்பது மிகவும் வருந்தத் தக்க செய்தி ஆகும். மலைக்குன்றுகளில் குடையப் பட்ட இந்தக் கோயில்கள், தெற்கு வடக்காக வளைந்து செல்கின்றது. முகப்பு மேற்குப் பக்கத்தில் வருகின்றது. குறைந்த பட்ச அளவிலான வெளிச்சத்துக்காகவும், சிற்பங்கள் காற்றினால் வீணாவதைத் தடுக்கவும் இம்மாதிரித் தேர்ந்தெடுத்ததாயும் சொல்லப் படுகின்றது.

வடக்கு, தெற்காக வளைந்து செல்லும் அரை வட்டத்தின், தென்கோடியில் புத்த மதக் கோட்பாடுகளைக் குறிக்கும் குகைகள் அமைந்துள்ளன. மொத்தம் ஒன்றரை மைலுக்கு நீளம் உள்ள இந்த அரைவட்டப் பாதையின் நடுவில் இந்துமதக் கோட்பாடுகளைக் குறிக்கும் குகைகளும், அதன் பின்னர் வட பாகத்தில், இன்னும் சற்று தூரம் சென்றால் சமணர்களின் குகைகளும் வருகின்றன. சற்றுத் தூரத்தில் இன்னும் மேடான இடத்தில் அமைந்திருக்கும் சமணக் குகைகளுக்கு வண்டியிலேயே செல்ல வேண்டி உள்ளது. மொத்தம் உள்ள 47 குகைகளில், பார்க்கும்படியான குகைகள் பத்துக்குள் தான் என்றாலும் அவற்றையும் பார்க்க ஒரு நாளின் சில மணித் துளிகள் நிச்சயம் போதாதுதான். ஆனால் அங்கே தங்கி இருந்து பார்க்க முடியாது. அருகில் உள்ள நகரம் ஆன ஒளரங்காபாத்தில் இருந்து தினம் வரவேண்டும். 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, ஒளரங்காபாத்தில் இருந்து எல்லோரா குகைக் கோயில்கள். 12 புத்த மதக் குகைகள் தான் முதன் முதல் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படும் இந்தக் கோயில்களில், "சைத்தியம்" என்று அழைக்கப் படும் வழிபாட்டு தலம், விஹாரம் என்று அழைக்கப் படும், பிட்சுக்களின் தங்குமிடங்கள் அடங்கும்.

இந்து மதக் குகைக் கோயில்களில் பதினேழு இருக்கின்றன. அவற்றில் தசாவதாரத்தைச் சிறப்பிக்கும் குகையும், கைலாசநாதர் கோயிலும் சிறப்பான ஒன்று. அதிலும் கைலாசநாதர் கோயில் உள்ள குகை ஒரே கல்லால் செதுக்கப் பட்ட உலகின் ஒரே பெரிய குகைக் கோயில் என்ற மாபெரும் சிறப்பைப் பெற்றது. இந்தக் கைலாசமலைக் கோயிலை மையமாக வைத்தே, தென் பக்கம் 16 குகைக் கோயில்களும், வடப்பக்கம் அதேபோல் 16 குகைக் கோயில்களும் அமைந்துள்ளதாய்ச் சொல்லப் படுகின்றது. அஜந்தாவின் ஓவியங்கள் காலப் போக்கில் மறைந்து, பின்னர் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது போல் இல்லாமல், எல்லோரா குகைக் கோயில்கள் தொடர்ந்து மனிதர்களால் பார்வை இடப் பட்டு வந்திருக்கின்றது. "வெருல்" என்று முன்னாட்களில் அழைக்கப் பட்ட இந்த எல்லோரா குகை இருக்கும் ஊர் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இன்றளவும் ஈர்த்து வருகின்றது.


இதோ இப்போது மேலே ஏறவேண்டும், ஏறும்போது சற்று நிதானமாகவே ஏறவேண்டி உள்ளது. படிகள் எல்லாம் உளியால் எப்போதோ செதுக்கப் பட்டவை. அதுவும் மலைப் பாறைகளின் போக்குக்கு ஏற்ப ஒரு இடத்தில் உயரமாயும், ஒரு இடத்தில் உயரம் குறைந்தும், ஒரு இடத்தில் அகலமாயும், ஒரு இடத்தில் அகலமே இல்லாமல் சும்மா கால் விரல்களை மட்டுமே ஊன்றி ஏறும்படிக்கும் உள்ளது அல்லவா? பார்த்து கவனமாய் ஏறவேண்டும். கடைசிப் படி மேலே ஏறும்போது உயரம் அதிகம். ஆனால் நாம் கால் வைத்திருக்கும் படியோ அகலமே இல்லை. எப்படி ஏறுவது? அம்மா, ஒரு வழியாய் ஏறியாச்சு, பின்னால் தள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் ஒரு 200 அடிக்கு மேல் கீழே விழுந்துடுவோம். ஏறி வந்தாச்சா??? எதிரே???? ஆஹா, எவ்வளவு பெரிய புத்தர்?????

சித்திரம் பேசுதடி - எல்லோரா தொடர் 1

"சித்திரம் பேசுதடி,எந்தன் சிந்தை மயங்குதடி" என்று சித்திரங்களைக் கண்டு மயங்காதவர்கள் யார்? சிற்பங்களைக் கண்டு ரசிக்காதவர்கள் யார்? அதிலும் பழைய தொன்மையான சிற்பங்களும், சித்திரங்களும் இன்றும் மக்களைப் பலவிதங்களிலும் வசீகரிக்கின்றது. முன்னே எல்லாம் யாராவது அழகாக இருக்கின்றார்கள் என்று சொல்வது என்றால், "அஜந்தாச் சித்திரம்" போல அழகு என்று சொல்லுவதாய்க் கேள்விப்பட்டிருக்கின்றோம். அத்தனை அழகா என வியந்திருக்கின்றோம். திரு கல்கி அவர்களின் எழுத்தில் "சிவகாமியின் சபதம்" நாவலில், அஜந்தா ரகசியத்தை அறிய ஆயனச் சிற்பி துடித்த துடிப்பைப் பார்த்துப் படித்து ரசித்திருக்கின்றோம், நம்மில் அனைவரும். அந்த அஜந்தாவை நாம் பார்த்து ரசிக்க நினைத்திருப்போம், ஆனால் அனைவருக்கும் கை கூடாது. அப்படி என்ன அழகு அந்தச் சித்திரங்களில்? என்ன விதமான வண்ணக்கலவையினால் இவ்விதம் நூற்றாண்டுகள் கடந்து இவை நிலைத்து நிற்கின்றன. (பல சித்திரங்கள் அழிந்து விட்டன என்பதே உண்மை, பராமரிப்பு போதாது என்பதும் ஒரு வருத்தமான விஷயம்) இத்தனை அபூர்வமான ஒரு விஷயத்தை ஏன் இன்றளவும், உலக அதிசயங்களில் ஒன்றாய்ச் சேர்க்கவில்லை என்பது, அங்கே போய்ப் பார்த்ததும் எங்களுக்குள் எழுந்த ஒரு தவிர்க்க முடியாத கேள்வி. அவை அமைக்கப் பட்டிருக்கும் மலைத் தொடர்களின் அமைப்பும், அதில் எப்படி இத்தனை ஓவியங்களை குகைகளைச் செதுக்கி வரைந்தார்கள் என்பதும், நேரில் பார்த்தால் மட்டுமே அதிசயம் என்பது புரியும், அவ்வளவு கடினமான மலைப்பாதையில், கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் முயன்று, ஒவ்வொரு குகையாகச் செதுக்கி, அவற்றில் ஓவியங்களையும் வரைந்து, பின்னர் ஒரு கால கட்டத்தில் அவை முழுதும் மறைந்து இருக்க, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தற்செயலாக வேட்டை ஆட வந்த ஒருவரால் கண்டுபிடிக்கப் பட்டு உலகுக்கு இவை பற்றித் தெரிய வந்தது. அப்போதும் போகக் கொஞ்சம் கடினமான மலைப்பாதைகளின் வழியாகவே போய் வந்திருக்கின்றனர். இப்போதும் போகக் கொ ஞ்சம் கடினம் தான் என்றாலும் சறுக்குப் பாதையில் ஏறுவதால் சிரமம் தெரிவதில்லை. எனினும் மேலே போய் ஒவ்வொரு குகையாக ஏறி, இறங்கும்போது, இவற்றைப் பார்க்கவே நம்மால் முடியவில்லையே, முன்னோர்கள் தினமும் இவற்றில் ஏறி, இறங்கி, இங்கேயே, படுத்து, தூங்கி, சாப்பிட்டு, குளித்து, வாழ்நாளைக் கழித்து, ஆஹா, நாம் என்ன செய்திருக்கின்றோம்? அவர்களின் இந்த அற்புத வேலைகளைக் குறைந்த பட்சம் அழியாமலாவது காப்பாற்றி இருக்கின்றோமா? இல்லையே? சித்திரங்களில் பென்சிலாலும், கத்தியாலும் கீறுவதும், சித்திரம் வரைந்த ஓவியனின் பெயர் கூட அங்கே காண முடியாது, ஆனால் நம் பெயரைப் பொறிப்பதும், இந்தக் கொடுமையைக் குற்றாலம் சித்திரசபையின் நடராஜர் கூட ஆடக் கூட முடியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். இப்போவும் அப்படியே இருக்கின்றது என்று சமீபத்தில் வந்த "குமுதம் பக்தி" இதழின் தலையங்கமும் குறிப்பிடுகின்றது. ஆடிய பாதத்தை நிறுத்திவிட்டு நடராஜர் எங்கேயாவது ஓடினால் தான் உண்டு. அப்போவும் துரத்திப் போய் அழிப்போமே??அப்படித் தான் இருக்கின்றன அஜந்தாவின் சித்திர, விசித்திரமும், எல்லோராவின் சிற்ப அதிசயங்களும், உலகிலேயே ஒரே கல்லில் கட்டப் பட்ட குடைவரைக் கோயில் எல்லோராவில் தானாம்.. சொல்கின்றனர், ஆனால், நாம் அதை எவ்வாறேனும், காப்பாற்ற உறுதி எடுக்க வேண்டும், இல்லையா? அழிய ஆரம்பித்திருக்கின்றன இவை எல்லாம், இனியாவது நாம் விழித்துக் கொள்ளவேண்டும், அஜந்தாவின் ஓவியங்கள் பற்றியும், எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் பற்றியும் சிறிது பார்ப்போமா? முதலில் அதன் சரித்திர காலம் பற்றிய சிறு குறிப்பு நாளை கொடுத்துவிட்டுப் பின்னர் தேவகிரிக்கோட்டை என்று அழைக்கப் பட்ட, இப்போதைய தெளலதாபாத் கோட்டை பற்றியும், அட, இது என்ன?? தாஜ்மஹால் இங்கே? இங்கே இருக்கின்றதே அதன் அப்பட்டமான காப்பி, சிறிய வடிவில்??ஆச்சரியமாய் இருக்கின்றதா? ஆச்சரியமே இல்லை. ஒளரங்கசீபின் மகன் ஒருவன், தன் தாயின் நினைவுக்காகக் கட்டியது, "பீபி கா மக்பரா" என்னும் மினி தாஜ்மகால். வங்காளத்தின் பொறி இயல் நிபுணர் ஒருவர் பல மாதங்கள் தாஜ்மகாலைப் பார்த்து ஆராய்ந்து அதன் வடிவத்தையும், அதன் கட்டிட அமைப்பையும் மட்டுமின்றி, அதன் முகப்பு, பக்கத்து இரு சிவப்பு மண்டபங்கள் என அப்படியே ஒரு தாஜ்மகாலின் மாதிரி வடிவை இங்கேயும் கொடுத்திருக்கின்றார். இவை பற்றிய குறிப்புகள் நாளை!