Monday, January 18, 2010

தாம்பரத்தை நோக்கிய பயணத்தில் 2

தேனுபுரீஸ்வரர் கோயில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் அவனுக்கு முதல் மந்திரியாய் இருந்த அநிருத்த பிரமாதி ராயரால் கட்டப் பட்டது. ஹிஹிஹி, பொன்னியின் செல்வனில் வருவாரே?? நம்ம ஆழ்வார்க்கடியானோட குருவே தாங்க! கஜப்ருஷ்ட விமானம். கற்றளியாகவே கட்டப் பட்டிருக்கிறது. ஆனால் இங்கே ஏற்கெனவே ஒரு கோயில் இருந்துள்ளது. கபில முனிவர் சகரனின் மக்களைச் சபிச்ச கதை, அதனால் அவங்க எல்லாரும் எரிஞ்சு சாம்பலானது, அவங்களுக்கு முக்தி கொடுக்க பகீரதன் கங்கையைக் கொண்டுவந்ததுனு எல்லாம் உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். சகர புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம் தலைமுறை தலைமுறையாகத் தொடரவே பகீரதன் கங்கையைக் கொண்டு வர நேர்ந்தது. தனது கோபத்தினால் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு மனம் வருந்திய கபில முனிவர் தாமும் சிவ பூஜை செய்து பிராயச்சித்தம் செய்து கொள்ள நினைத்தார். இடக்கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு வலக்கையால் மலர்களைத் தூவி அர்ச்சிக்க, ஈசன் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு சொல்ல, மணலில் வைக்க மனமில்லை என மறுக்கிறார் கபிலர். லிங்கத்தைக் கையில் வைத்து வழிபட்ட முறை சரியல்ல என்று சொல்லி அவரைப் பசுவாகப்பிறக்கச் செய்தார். பசுவாகப் பிறந்த கபிலர் தன் கொம்புகளால் மணலில் புதையுண்டு கிடந்த லிங்கத்தைத் தேடி எடுத்து வழிபட்டதாகவும், அதன் பின்னரே கபிலருக்கு முக்தி கிடைத்ததாகவும் வரலாறு. பின்னர் இந்தப் பகுதியை ஆண்ட மன்னனால் கோயில் எழுப்பப் பட்டு அதன் பின்னர் அநிருத்த பிரமராயரால் கஜப்ருஷ்ட விமானத்தில் எழுந்தருளினார் தேனுபுரீஸ்வரர்.

கையில் வைத்து வழிபட்ட லிங்கம் என்பதாலோ என்னமோ மூலஸ்தானத்தில் லிங்கம் மிகச் சிறியது. ஒரு சாண் உயரம் தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. பீடம் சதுர வடிவம். சந்நிதிக்கு இடப்பக்கம் கபிலர் இடக்கையில் லிங்கத்தை வைத்து வழிபட்ட வண்ணம் காட்சி கொடுக்கிறார். அதே தூணின் மற்றொரு பக்கம், பூவராஹர் காட்சி கொடுக்கிறார். மடியில் ஸ்ரீ, சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடை உடுத்தி அமர்ந்திருக்கிறாள். ஈசனை வழிபடும் பெருமாளையும் காணமுடியும். இங்கே முருகன் யானை மீது அமர்ந்த வண்ணம் இடக்கையில் சேவலை ஏந்திக் காட்சி கொடுக்கிறார். பைரவர் மனைவியுடன் காட்சி கொடுக்கிறார்.

முக்கியமான விசேஷம் இங்கே பின்னாட்களில் , பிற்காலச் சோழர் காலத்தில் சாளுக்கிய சம்பந்தத்தின் காரணமாய் சரப வழிபாடு ஆரம்பித்து இன்று வரை நடந்து வருவதே. இந்தக் கோயிலில் உள்ள சரபரை மிகவும் சிறப்பாகச் சொல்கிறார்கள். இந்தக் கோயிலின் தூண்களே சிற்பங்கள் நிறைந்தவையே. ஆனாலும் படம் எடுக்க அநுமதி இல்லை. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சரபர் சந்நிதியில் ராகு காலத்தில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். சரபருக்கு எனத் தனி உற்சவரும் இருப்பதாய்ச் சொன்னார்கள். பார்க்க முடியலை. கூட்டம் இருந்தது. கோயில் அமைப்பைப் பார்த்தாலே ஆயிரம் வருஷங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப் புரிகிறது. பிராகாரம் சுற்றும்போதே நம்ம ரங்க்ஸ் அட, கஜப்ருஷ்ட விமானம், பாருனு சொன்னார். அப்புறம் தான் கவனிச்சேன் விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைக்கப் பட்டிருக்கிறது. தக்ஷிணாமூர்த்தியும் மனைவியோடு காட்சி கொடுக்கிறார். தனி சந்நிதி தக்ஷிணாமூர்த்தி ஆலமரம் இல்லாமல் இருக்கிறார். துர்கையோ கையில் கிளி கொஞ்ச காட்சி கொடுத்தாள்.

தூணில் மட்டுமல்லாமல் தனியாகவும் வடுக பைரவர் இருக்கிறார். வடுக பைரவருக்கு திராட்சை மாலை போடுகிறார்கள். இங்கே காட்சி கொடுக்கும் பிரம்மாவிற்கு ஐந்து முகங்களைப் பார்க்க முடியும். சீதா, ராமரும் அனுமன் வணங்கும் கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தைச் சுற்றி ஏதோ மண்டபம் போன்ற அமைப்பு இருப்பதாய்ச் சொல்கிறார்கள். அது பற்றி சரியாய்த் தெரியவில்லை. கிட்டே போய்ப் பார்க்கணும். முடியவில்லை. பலவிதமான சிற்ப அதிசயங்கள் நிறைந்துள்ள கோயில். கோயிலுக்குப் பெரிய குளம். குளக்கரையில் சுற்றி அனைவரும் வீடு கட்டிக் கொண்டு குடி இருப்பதைப் பார்த்தால் அங்கேயே போய் விடவேண்டும் போல் இருக்கு. அவ்வளவு அருமையான இயற்கைச் சூழல். எதிரே வெட்டவெளி. வயல்கள். அதைத் தாண்டினால், கிழக்குக் கடற்கரைச் சாலை, நீலாங்கரை செல்லும் சாலை, மஹாபலிபுரம் செல்லும் சாலை எல்லாம் வரும் என்றும், பாண்டிச்சேரி அங்கே இருந்து மிக அருகே இருப்பதாயும் சொன்னார்கள்.

நகரின் சந்தடியை விட்டுத் தள்ளி ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்தாலும் கோயிலுக்கு மக்கள் கூட்டம் வந்துகொண்டு தானிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மாலையில் கூட்டம் நிறைய இருக்கும் என்றும் சொன்னார்கள். கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. கோயிலின் படம் தேடுகிறேன். கிடைச்சால் போடுகிறேன். அங்கே இருந்து எதிரே இருக்கும் தெருவில் வலப்பக்கம் திரும்பி நடந்தால் பதினெட்டு சித்தர்கள் இருக்கும் பீடம். அது பற்றிய தகவல்கள், நாளை.

Sunday, January 17, 2010

தாம்பரம் நோக்கிய ஒரு பயணத்தில்!!


தாம்பரம் சேலையூருக்கு அருகே மானம்பாக்கம் என்னும் இடத்தில் இருக்கிற உறவினர் பல வருடங்களாக அவர் வீட்டுக்குக் கூப்பிட்டுட்டு இருந்தார். தம்பி அங்கே காம்ப் ரோடு பக்கத்திலே இருக்கும்போதே போகணும்னு நினைச்சுப் போகவே முடியலை. திடீர்னு இந்த மாதம் ஒரு ஞாயிறன்று போக முடிவு செய்தோம். நாங்க திடீர்னு முடிவு செய்தாலும் எங்க வீட்டிலே வேலை செய்யற பொண்ணு இந்தத் திடீர் முடிவுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டா. அவளோட வசதியையும் பார்த்துக்கணுமே. முதல்நாளில் இருந்தே அவளைத் தாஜா பண்ணி, (என்னங்க?? நல்ல ஃபில்டர் காபியாக் கொடுக்கச் சொல்றீங்களா??ஹிஹிஹி, தினமும் நல்ல காபிதான் கொடுக்கிறோம். அதுக்கெல்லாம் ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்க! )மறுநாள் காலம்பர ஆறு மணிக்கே வரச் சொன்னால் ஒருவழியா ஏழு மணிக்கு வந்து சேர்ந்தாள்.

ஏழு மணிக்கு வந்தால் போதும்தான், ஆனால் அதைச் சொன்னால் எட்டுமணிக்கு வந்து நிப்பாளே? அதான் ஆறு மணிக்குக் கிளம்பணும்னு சொல்லிடுவேன். ஏழு மணிக்குள்ளாவது வந்துடுவா. நாங்க அதுக்குள்ளே குளிச்சு, முடிச்சு, முதல்லே ஒரு காபி சாப்பிட்டு, அப்புறம் டிபனும் சாப்பிட்டு, இரண்டாம் காபி குடிச்சு, ஒரு சண்டையும் போட்டு முடிச்சுட்டு அலுத்துப் போய் உட்கார்ந்தோம். அவளும் வந்தாள். அவளோட எல்லாம் சண்டை போட முடியாது, நாமதான் போட்டுக்கணும். அவள் கிளம்ப அரை மணி ஆச்சு. அதுக்கப்புறமாக் கிளம்பி, ரயிலா, பஸ்ஸா? னு ஒரு நீண்ட விவாதம். முதல்நாளே பையர் தொலைபேசியில் ரயிலில் போங்கனு அதட்டி இருந்தார். அதனால் ரயில்தான்னு நான் நினைச்சுட்டு இருந்தா காலம்பர எழுந்துக்கும்போதே கால் தகராறு. இந்தக் காலோடயா போறதுனு மனசுக்குள்ளே நினைப்பு. ஆனால் அவங்க கிட்டே சொல்லியாச்சு வரோம்னு. மாத்தினால் நல்லா இருக்காது. நான் தத்தித் தத்தி குழந்தை போல் நடந்ததைப்பார்த்த நம்ம ரங்க்ஸ், கால் டாக்ஸியைக் கூப்பிடுவாரோனு ஒரு நப்பாசை. ஆனால் அவரோ அவரோட புஷ்பகத்தைத் தான் வெளியே எடுத்தார்.

கீழே இறக்கிட்டு, என்னையும் கீழே இறக்க வழியும் பார்த்து வைச்சார். (தெரு இன்னமும் அப்படியே தான் இருக்கு, ஆனாலும் விடாமல் போக நாங்க பழகிக்கிட்டோம்)ஒரு வழியா நானும் கீழே இறங்கினதும், இங்கே அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்திலிருந்து நுங்கம்பாக்கம் போயிட்டு அங்கே இருந்து ரயிலில் போகலாம் என்று ஒரு அற்புதமான ஐடியாவைக் கொடுத்தார். தலையில் அடிச்சுக்கலாமானு நினைச்சேன். கஷ்டப்பட்டு அடக்கிண்டு, ஏன் அதுக்கு தாம்பரம் பஸ்ஸிலேயே போயிடலாமேனு சும்மா சொல்லி வைச்சேன். உடனே சரி, அதுவும் நல்ல ஐடியாதான்னு சொல்லிட்டார். கேட்டால் உனக்கு ஓவர் பிரிட்ஜ் எல்லாம் எப்படி ஏறமுடியும்? ரயிலிலே போனால்?? அதோட பீச் வண்டி கிடைக்கலைனா செண்டரலில் சுரங்கப்பாதையிலே வேறே போகணும், அவ்வளவு தூரம் நடப்பியானு கேள்வி. வேறே வழியே இல்லை. பேருந்துதான். இந்தத் தாம்பரம் பேருந்து கொஞ்சம் வசதியாவே இருக்கும். ஏசி பஸ்ஸும் இருக்கு. மனசை சமாதானம் செய்துட்டு வழக்கம்போல் அடுத்த தெரு முக்கு வரை நடந்து போய் வண்டியிலே ஏறி அம்பத்தூர் பேருந்து நிலையம் போயாச்சு.

தாம்பரம் பேருந்தும் கிடைச்சுப் போய்ச் சேர்ந்தாச்சு.நினைச்ச நேரத்துக்கு முன்னாலேயே போயாச்சு. உறவினர் கிட்டே பேருந்தில் ஏறியதுமே கைபேசி மூலம் தகவல் சொல்லிட்டதாலே, அவர் காம்ப்ரோடிலே வந்து காத்திருப்பதாகவும், அங்கே இருந்து ஸ்கந்தாஸ்ரமம் போயிட்டுப் பின்னர் வீட்டுக்குப் போகலாமென்றும் சொல்லி இருந்தார். அதனால் இறங்கினதும் மறுபடி உறவினரைக் கூப்பிட்டு, வந்திருப்பதைத் தெரிவித்துவிட்டு ஆட்டோ ஒண்ணு பிடிச்சு காம்ப்ரோடு போனோஓஓஓஓஓஓஓஒ,ம். அப்பாடி, எவ்வளவு தூரம் இருக்கு??? போயிட்டே இருக்கே? ஆனால் ஆட்டோக்காரர் குறைந்த பணத்துக்குத் தான் வந்திருக்கார். அம்பத்தூருக்கு இது தேவலை போலிருக்கே? அங்கே போனதும் உடனே உறவினரும் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் வந்து சேர்ந்தார். அங்கே இருந்து இன்னொரு ஆட்டோ பிடிச்சு ஸ்கந்தாசிரமம் போனோம்.

சென்னையின் ஆரவாரக்கூட்டத்திலிருந்து விலகி, சேலையூரின் கம்பர் தெருவில் இருக்கிறது ஸ்கந்தாஸ்ரமம். முற்றிலும் ஒதுக்குப் புறமான இடம். ராஜகீழ்ப்பாக்கம் என்று இந்தப் பகுதிக்குப் பெயர். ஸ்ரீ சாந்தாநந்த ஸ்வாமிகளால் ஏற்படுத்தப் பட்டது. முதல் முதல் ஸ்கந்தாஸ்ரமம் சேலத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. சாந்தாநந்த ஸ்வாமிகள் அவதூதர்களின் பரம்பரையில் வந்தவர் என்கின்றனர். சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் அறுபதுகளின் கடைசியில் சேலத்தில் முதலில் ஸ்கந்தாசிரமம் ஏற்படுத்திய பின்னர் சென்னையில் கட்டி இருக்கின்றனர். சென்னையிலும் 2000-ம் ஆண்டு வரையிலும் கூட இங்கே விநாயகர், முருகன், மற்றும் அம்பாள் போன்ற சில கடவுளர் விக்ரஹங்களே இடம் பெற்றிருக்கின்றன. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்துக் கடவுளருக்கும் சந்நிதி ஏற்படுத்தி இருக்கின்றனர். நட்ட நடுவில் மகாமேருவை வைத்துச் சுற்றி மற்ற சந்நிதிகள் இருக்குமாறு அமைப்பு செய்யப் பட்டுள்ளது.

உள்ளே நுழைந்ததும் கோபுர தரிசனம். பின்னர் முதலில் ஹேரம்ப கணபதி ஐந்து முகங்களோடு காட்சி கொடுக்கிறார். அதன் பின்னர் சித்திவிநாயகர். சித்தி விநாயகருக்குப் பின்னே அம்மை புவனேஸ்வரி மாதா. அருமையாக அலங்காரம் செய்திருந்தனர். ஏற்கெனவே வெளியே இருந்த பஞ்சமுக ஹேரம்ப விநாயகரையும், இன்னும் சிலரையும் எடுத்துவிட்டு உள்ளே வந்திருந்தோம். புவனேஸ்வரியைப் படம் எடுக்கும்போது ஸ்கந்தாஸ்ரம நிர்வாகிகள் வந்துட்டாங்க. காமிரா பிடுங்கப் பட்டது. படங்கள் அழிக்கப் பட்டன. அதோடு ஆன்மீகக் கண்காட்சியில் எடுத்த சிலபடங்களும் சேர்ந்து போயிடுச்சு. வெங்கையா நாயுடுவின் படமெல்லாம் அதான் போடமுடியலை. போகட்டும்.

புவனேஸ்வரிக்கு அப்புறம் அவளுக்கு இடப்புறமா சாந்தாநந்த ஸ்வாமிகள், பஞ்சமுக ஆஞ்சநேயர். அடுத்து சரபர். அதிலும் வீர சரபேஸ்வரர். இவரும் அருமையாக அலங்காரம் செய்து கொண்டிருந்தார். சனைசரர் அருமையாகத் தனி சந்நிதியில் காட்சி கொடுக்கிறார். எல்லாருக்குமே பெரிசு பெரிசா அறைகள். அதனாலே எல்லாக் கடவுளரும் தனித்தனி அறையிலே தனித்தனியா வாசம். முருகன், குகன் ஸ்வாமிநாதனாய்க் காட்சி கொடுத்தான். வடநாடுகளில் இருப்பதுபோல் இங்கேயும் தத்தாத்ரேயருக்கு முக்கியத்துவம். முதலில் தூரக்கே இருந்து பார்த்தப்போ பிரம்மானு நினைச்சேன். கிட்டே போனதும் தத்தாத்ரேயர்னு தெரிஞ்சது. சரபருக்கு எதிரே ப்ரத்யங்கிரா தேவி. இவங்களுக்கு நட்டநடுவே மகா ஸ்ரீசக்ரமேரு. ஐயப்பன், அருகே எட்டுக்கைகளுடன் கூடிய துர்கை, பட்டீஸ்வரம் துர்கையைவிடப் பெரிய துர்கைனு நினைக்கிறேன்.

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய லிங்கம், அதிலே சஹஸ்ரலிங்கங்கள், எதிரே நந்திகேஸ்வரர், சக்கரத்தாழ்வார், அவருடன் இணைந்த நரசிம்மமூர்த்தி, என அனைத்து தெய்வங்களுமே குடி கொண்டிருந்தனர். முக்கியமாய் துர்கைக்கும் பிரத்யங்கிரா தேவிக்கும் இங்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கலியுகத்திற்கு அவசியமான பெண்தெய்வங்கள் இவர்களே என்று சொல்லப் படுகிறது. ஆஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள தேவதைகளுக்கு தினமும் யாகம் செய்து வரப்படுகிறது. யாகசாலைக்கு அடுத்து, பெரிய அன்னதானக் கூடம் இருக்கிறது. வெளியில் இருந்தும் சிலர் உணவு எடுத்து வந்து அங்கே உண்ணுவதைக் கண்டோம். அன்னதானம் தினமும் உண்டுனு சொன்னாங்க. அங்கே எல்லாத்தையும் பார்த்து முடிச்சுட்டு, வழக்கம் போல் நம்ம ரங்ஸுக்குனு ஒரு சாமி படமும், எனக்கு ஒரு புத்தகமும் வாங்கினோம். அப்புறம் நினைவா காமிராவைக் கேட்டு வாங்கிட்டோம். கொடுத்துட்டாலும் அவருக்குச் சந்தேகம். வாசல்வரை வந்து வழி அனுப்பிட்டே உள்ளே போனார். க்ர்ர்ர்ர்ர்ர்ர் இதிலே சேர்த்திருக்கிற படங்கள் அவங்களோட அதிகாரபூர்வமான தளத்திலிருந்து எடுத்ததே. நாம எடுத்த படம் இல்லை. எல்லாத்தையும் சுட்டுட்டாங்க! :( இதை எல்லாம் பத்துமணிக்குள்ளே பார்த்து முடிச்சாச்சு. வீட்டுக்குப் போறதுக்குள்ளே மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்குப் போய் சரபரைப் பார்க்கணும்னு நம்ம ரங்க்ஸ் ஆசை. எனக்கு அது பக்கத்திலே இருக்கிற பதினெட்டு சித்தர்களைப் பார்க்கணும்னு. இரண்டும் அடுத்தடுத்தே இருக்கிறதாம். அங்கே போயிட்டு அங்கே இருந்து வீடு கிட்டேனு சொன்னார். சரினு வேறே ஒரு ஆட்டோவைப் பிடிச்சு, அங்கேயே காத்திருந்து வீட்டில் கொண்டுவிடும் வரை பேசிக் கொண்டு கிளம்பினோம் தேனுபுரீஸ்வரரைக்காண.