Sunday, December 27, 2009

வெங்கையா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு!

ரொம்ப நாளாச்சா அரசியலில் சுறுசுறுப்பாவும் ஊக்கத்தோடும் ஈடுபட்டு?? தொண்டர்கள் எல்லாம் ரொம்பவே விரக்தியிலே மூழ்கிப் போயிட்டாங்க. தொண்டர்களை உற்சாகப் படுத்தறதுக்காகக் கொஞ்சம் அரசியல் நடவடிக்கையிலே மூழ்கலாமானு நினைச்சேன். என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ கிடைச்சது பாருங்க எதிர்பாராமல் ஒரு சான்ஸ்! வெங்கை(கா)(ஹிஹிஹி)யா நாயுடுவுடன் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. எதுக்குனு நினைக்கறீங்க??? எல்லாம் தெலங்கானா, ஆந்திரா விஷயமாத் தான். அதோட நம்ம கட்சியோட கூட்டணி வச்சுக்கவும் ஆசைப்படறதாக் கேள்வி. இரண்டு பேரும் ஒரு பொது இடத்திலே சந்தித்துக் கொண்டோம். பேச்சு வார்த்தையே இல்லாமக் கொள்கை முடிவுகளை வைத்தே கூட்டணி முடிவு செய்யப் பட்டது. விபரங்கள் மதியமா. நேத்திக்கு அலைச்சலில் உடம்பு முடியலை. அதோட இன்னிக்கு ஏகாதசி வேறே சேர்ந்துடுச்சு.

எல்லாரும் புதுமையான பொருட்காட்சி பார்க்க வாங்க

Friday, December 25, 2009

என் பயணங்களில் ரத்தினகிரி முருகனக் காண்போமா??

குன்றின் உச்சிதோறும் குமரன் இருப்பதற்கு யோக முறையில் கூறும் காரணம் அறிந்திருக்கலாம். நம் உடலின் உச்சியில் உச்சந்தலையில் இருக்கும் சஹஸ்ராரத்தை நினைவு படுத்தும் விதமாகவே குன்றுதோறும் குமரன் குடி கொண்டிருக்கிறான். குமரனின் ஆறுமுகங்களுமே ஆறு சக்கரங்களாகும். இதுக்கு மேலே விளக்குவது சரியில்லை. ஒவ்வொரு சக்கரமும் நம் உடலில் உள்ளன. கடைசியில் கிடைக்கும் சச்சிதாநந்தப் பேரொளியே சிவசக்தி ஐக்கிய சொரூபமான குமரன். அதை நினைவூட்டும் விதமாய் ஏற்பட்ட கோயில்களில் இந்த ரத்தினகிரியும் ஒன்று. படம் கிட்டே எடுக்க அநுமதி இல்லை வழக்கம்போல். கீழே இருந்தே எடுத்தோம். ஜூம் பண்ணி எடுத்த படங்கள் சரியாய் இல்லை. அதனால் இருப்பதற்குள் சுமாரான படங்களே போட்டிருக்கேன். இனி கீழே ரத்தினகிரி வரலாறு.
அடுத்தும் கடைசியாவும் நாங்க போனது ரத்தினகிரி பாலமுருகனைத் தரிசிக்க. இங்கே தான் மின்வாரிய ஊழியர் ஒருவர் முருகனால் ஆட்கொள்ளப் பட்டதாயும், அதன் பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு இங்கேயே வசித்து வருவதாயும் எங்கள் சுற்றுலா நடத்துநர் கூறினார். மேலும் மாலை ஏழு மணி அளவில் நாங்கள் தரிசனத்துக்குச் செல்வதால் பாலமுருகனடிமை(அந்தத் துறவிக்கு இப்போது இதான் பெயர் என்று சொன்னார்கள்) அவர்களே முருகனுக்கு வழிபாடு நடத்துவார் என்றும் விருப்பம் இருந்தால் யாரையேனும் அழைத்தும் பேசுவார் என்றும் சொன்னார். நாங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றோம். சின்னஞ்சிறு மலைதான் என்றாலும் ஏற்கெனவே நடந்து நடந்து அலுத்துக்களைத்துப் போயிருந்ததால் ஏறமுடியாது என்று நடத்துநர் கூறி இருந்தார். மேலும் கீழே இருந்து மேலே மலைக்குச் செல்ல ஆட்டோக்களுக்குச் சொல்லி இருப்பதாகவும் ஒரு ஆட்டோவில் நாலு பேர் அமரலாம் என்றும் சொல்லி இருந்தார். ஆட்டோ கட்டணமும் சொல்லிவிட்டார். ஆகவே நாங்க போய் எங்க பேருந்தை விட்டு இறங்கினதுமே ஆட்டோக்கள் வரிசையா வந்து நின்றது. அனைவரும் ஏறிக் கொண்டோம். ஆட்டோ மேலே சென்று அங்கே உள்ள வாயிலுக்கு அருகே நின்றது. அடிவாரத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. அதைத் தரிசித்துக் கொண்டே சென்றோம்.

படிகள் என்றால் கிட்டத்தட்ட ஆயிரம் அல்லது ஆயிரத்தைந்நூறு இருக்கலாமோ என்னமோ தெரியலை. என்றாலும் மேலே வந்தும் பத்து, இருபது படிகள் ஏறியே செல்லவேண்டி இருந்தது. இந்தக் கோயிலில் முருகன் குழந்தை முருகனாக பால முருகனாக இருக்கிறான். இங்கே சூர சம்ஹாரம் இல்லை என்று சொன்னார்கள். இந்தக் கோயில் பற்றி அருணகிரியார் பாடிய திருப்புகழ்ப் பாடல் கீழே/

பத்தியால் யான்உனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே!


ரத்தினகிரித் திருப்புகழ்னு கேட்டதுக்குக் கூகிளார் இதான் கொடுத்தார். கோயில் அருணகிரி நாதருக்கும் முன்னாலே இருந்ததாகவும், அருணகிரியார் இந்த முருகன் மேல் திருப்புகழ் பாடிப் பல வருஷங்கள் சென்றும், இங்கே வழிபாடுகள் சரிவர நடக்காமல் இருந்ததாகவும் சொல்கின்றார்கள். சிறிய குன்றாய் இருந்தாலும் கோயிலுக்குச் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாம். ஒருவேளை அர்ச்சகர் வந்து வழிபட்டுச் செல்வார் என்றும், நாற்பது வருடங்கள் முன் வரையிலும் இந்நிலைமையே என்றும் சொன்னார்கள். அறுபதுகளின் கடைசியில் ஒருநாள் பக்தர் ஒருவர் தற்செயலாக மலை ஏறி மேலே சென்று முருகனை தரிசித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அர்ச்சகரிடம் கற்பூர தீப ஆராதனை காட்டித் தரிசனம் செய்து வைக்கச் சொல்லி இருக்கிறார். அர்ச்சகரோ கற்பூரம் இல்லை என்றும், ஊதுபத்தி போன்ற எந்தவித வாசனைப் பொருட்களும் இந்த முருகனுக்குக் காணிக்கை செலுத்துபவர் இல்லை என்றும் சொல்லி விட்டாராம். அடக் கடவுளே, உனக்கே இந்நிலைமையா என எண்ணிய அந்த பக்தர் இப்படிப்பட்ட நிலைமையில் உனக்கு எதுக்குக்கோயில் என நினைத்தாராம்.

அப்போது அங்கேயே திடீரென அவர் மயக்கம் போட்டு விழப் பயந்து போன அர்ச்சகர், அங்கே உதவிக்கு ஆட்கள் இல்லாமையால் மலை அடிவாரம் சென்று ஆட்களை அழைத்து மேலே ஏறி வந்திருக்கிறார். வந்து பார்த்தால் சற்று முன்பு மயக்கமாய்க் கிடந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, தான் அணிந்து வந்த உடைகளைக் களைந்துவிட்டுக் கொண்டு வந்த ஒரு துண்டை மட்டும் உடுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைக் கண்ட அர்ச்சகர் நடந்தது பற்றி விசாரிக்க அவரோ பேசாமலேயே இருந்தார். பின்னர் அங்கிருந்த மணலில், “முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். இனி இந்த முருகன் கோயிலின் திருப்பணி ஒன்றே என் வாழ்நாளில் லட்சியம். மலையை விட்டுக் கீழே இறங்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே உட்கார்ந்துவிட்டார். அவருடைய இடைவிடா முயற்சியால் பின்னர் அங்கு முருகனுக்குக் கோயில் எழுப்பப் பட்டு கும்பாபிஷேஹம் நடந்திருக்கிறது.

அதன் பின்னர் கோயிலைப் பலவிதங்களிலும் மேம்படுத்தி இருக்கிறார். இப்போது பாதைகள் நன்கு செப்பனிடப் பட்டு நல்ல சாலை மேலே வரையிலும் செல்கிறது. இங்குள்ள முருகனுக்கு ஆறு வகை மலர்கள், ஆறு நேரம் அர்ச்சனைகள், வழிபாடுகள் முதலியன ஆறு அர்ச்சகர்களால் செய்யப்படுவதாயும் இது இந்தக் கோயிலின் சிறப்பு என்றும் சொல்கிறார்கள். ஐப்பசி மாதப் பெளர்ணமியில் சிவன் கோயில்களில் நடக்கும் அன்னாபிஷேஹம் போல் இங்கே முருகனுக்கு அன்னாபிஷேஹம் நடக்குமாம். சிவாம்சம் பொருந்தியவர் என்பதால் அன்னாபிஷேஹம் நடத்துவதாய்ச் சொன்னார்கள். கோயிலின் ராஜ கோபுரம் எல்லாமும் பாலமுருகனடிமை அவர்கள் நிர்வாகம் ஏற்றுக் கொண்டபின்னரே கட்டப் பட்டிருக்கிறது. உற்சவரை ஷண்முகர் என்று அழைக்கின்றனர். இவர் கல்லினால் ஆன தேரில் காட்சி கொடுக்கிறார். இங்கும் மொட்டை போடுதல், காவடி எடுத்தல் போன்றவை சிறப்பாய் நடக்கின்றன. இங்கே உள்ள வாராஹியும் தோஷங்களைப் போக்குபவள் என்று சொல்கிறார்கள். சிறிய அதே சமயம் அழகான பார்க்க வேண்டிய கோயில்.

இத்துடன் எங்கள் பயணம் இனிதே முடிந்தது. இரவுச் சாப்பாடு நாங்க கையிலே கொண்டு போயிருந்தோம். அம்பத்தூர் போக இரவு பதினோரு மணி ஆகும் என்றதால் ரத்தினகிரியில் இருந்து கிளம்பும்போதே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். மிக மிக செளகரியமான பயணமாகவும், இனிமையான பயணமாகவும், சற்றும் மனவேறுபாடுகள் இல்லாத பயணமாகவும் அமைந்ததுக்கு சுற்றுலா நடத்துநருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம்.
ட்ராவல்ஸ் விலாசம் K.M.S. Tourist,
250/2, M.T.H.Road, Venkatapuram, Ambattur.
Chennai – 53. 94441 09566/ 93818 16226

Tuesday, December 15, 2009

என் பயணங்களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்!


பழங்காலத்தில் இங்கே சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி மஹரிஷி சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டிருக்கிறார். பிற்காலத்தில் லிங்கம் மறைந்து வேல மரங்களால் ஆன காடு உருவாகி இருந்தது. இந்தப் பகுதியை ஆண்ட பொம்மி என்பவருக்கு வேலங்காட்டில் ஈசன் இருப்பதைக் கனவில் வந்து சொல்ல, காட்டை அழித்து லிங்கத்தைக் கண்டுபிடித்தான். சுற்றிலும் நீரால் சூழப் பட்டிருந்த அந்த இடத்தில் பெரிய கோட்டை ஒன்றையும் கட்டிக் கோயிலையும் அமைத்து லிங்கத்தைப் பிரதிஷ்டையும் செய்தான். ஆரம்பத்தில் பக்தர்களின் பிணியைப் போக்கும் இவருக்கு ஜுரகண்டேஸ்வரர் என்ற பெயரே இருந்து வந்துள்ளது. பின்னர் அதுதான் ஜலகண்டேஸ்வரர் என மாறிவிட்டதாய்ச் சொல்கின்றனர். சிலர் இப்போதும் இரு பெயர்களாலும் அழைக்கின்றனர். கோட்டையின் உள்ளே அமைந்த இந்தக் கோயிலின் அமைப்பும், கோட்டையின் அமைப்பும் வியக்கும்படியாக உள்ளது. வேலூர் என்றாலே கோட்டையை நினைவுறுத்தும் வண்ணம் அமைந்த இந்தக் கோட்டையின் ஜலகண்டேஸ்வரருக்குப் பல வருஷங்கள் வழிபாடுகள் இல்லாமல், அரசன் இல்லாக் கோட்டை, ஈசன் இல்லாக்கோயில், நீர் இல்லா ஆறு” என்னும் வழக்குச் சொற்களுக்குப் பாத்திரமாக இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டிலே விஜயநகர அரசர்களின் பிரதிநிதியான சின்ன பொம்மியால் கட்டப் பட்டது. மிக அழகான சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோட்டைக் கோயில், பின்னால் சந்தா சாகிபின் மைத்துனன் ஆன மொர்தாஸா அலி என்பவனால் கைப்பற்றப் பட்டது. சந்தாசாகிபின் வாரிசும் ஆற்காட்டின் உரிமையும் தனக்குத் தான் என்று சொன்ன மொர்தாஸா அலியிடமிருந்து பின்னர் ஆதில்ஷா என்னும் பீஜப்பூர் சுல்தானிடம் போய்ச் சேர்ந்தது. பின்னர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தின் போது மராட்டியரிடம் சில வருடங்கள் இருந்து, பின்னர் தெளத்கான் என்னும் டில்லி சுல்தானிடம் போய்ப் பின்னர் ஆங்கிலேயர் திப்பு சுல்தானின் மரணத்திற்குப்பின்னர் இந்தக் கோட்டைக் கோயிலை 1760-ம் ஆண்டு எடுத்துக் கொண்டார்கள். பல நூற்றாண்டுகள் இந்தக் கோயிலில் மூர்த்தப் பிரதிஷ்டை இல்லாமலும் வழிபாடுகள் நடைபெறாமலுமே இருந்து வந்தது.

மிக மிக சமீபத்தில் தான் இந்தக் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டு திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேஹமும் முடிந்தது. இந்தக் கோட்டையைச்சுற்றிலும் இருபத்து ஐந்து அடி ஆழத்தில் உள்ள அகழி நீர் நிறைந்து காணப்படுகிறது. அகழியின் மேலே இருந்து கீழே இறங்கச் சிலபடிகளைக் கடந்தே கோயிலுக்குள் நுழையவேண்டும். கோயிலின் கல்யாணமண்டபம் வித்தியாசமான சிற்பங்களோடு கலையம்சமும், தெய்வீகமும் பொருந்திக் காட்சி அளிக்கிறது. இதிலுள்ள கிளிகளின் சிற்பங்கள், வெண்ணைத் தாழிக் கிருஷ்ணர், சரபர் போன்றவர்களின் சிற்பங்களின் அழகை இன்று முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். படம் எடுத்தால் துரத்துகிறார்கள். மாலைவேளையில் சென்றதால் கூட்டம் வேறே. இந்தக் கல்யாண மண்டபத்துத் தூண்களிலே எண்கள் பொறித்துள்ளதைக் காணும்போது வியப்பாய் இருந்தது. நம்ம சுற்றுலா நடத்துநர் இந்த மண்டபத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல ஆங்கிலேயத் தளபதி ஒருவர் மிகவும் முயன்றாராம். தூண்கள் வரிசை மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே எண்களையும் பொறித்து வைத்தாராம். கப்பல் ஒன்றையும் வரவழைத்திருக்கிறார் மண்டபத்தை எடுத்துச் செல்ல. ஆனால் அந்தக் கப்பல் ஐரோப்பாவில் இருந்து வரும் வழியிலேயே முழுகி விட்டதாம். அதன் பின்னரே அவர் திட்டத்தைக் கைவிட்டார். நமக்குத் தெரியறதில்லை நம்ம ஊர்ச் சிற்பங்களின் அருமை, பெருமை எல்லாம். எங்கிருந்தோ வரும் ஆங்கிலேயர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் தெரியுது.

மூலஸ்தானத்தின் ருத்ராக்ஷப் பந்தல் மிக அழகாய்க் காட்சி அளிக்கிறது. அந்த ருத்ராக்ஷப் பந்தலின் கீழேயே ஜலகண்டேஸ்வரர் அருள் பாலிக்கிறார். உற்சவர் காலசம்ஹாரமூர்த்தி. திருக்கடையூரில் இருப்பவரே இங்கே உற்சவராகக் காணப்படுகிறார். இந்தக் கோயிலிலும் சஷ்டி அப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம், ஆயுஷ்ஹோமம், திருமணங்கள் போன்றவையும் நடந்து வருவதாயும், ஜலகண்டேஸ்வரருக்கு ருத்ராபிஷேஹம் செய்து வைப்பதாய் பக்தர்கள் நேர்ந்து கொள்வதாயும் தெரிய வருகிறது. பெண்கள் திருமாங்கல்யக் காணிக்கைகளும் செலுத்துவதுண்டு எனத் தகவல் பலகை தெரிவிக்கிறது. பிராகாராத்தில் உள்ள கிணற்று நீர் கங்கையின் நீராகவே கருதப் படுகிறது. அருகேயே கங்காபாலாறு ஈஸ்வரர் என்னும் பெயரில் ஒரு லிங்கமும் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. கிணற்றுக்குள் இந்த லிங்கம் இருந்ததாகவும், வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் கூறுகின்றனர். லிங்கத்தின் பின்னாலேயே பைரவரும் காணப்படுகிறார். கங்கையான கிணறு, லிங்கம், பைரவர் மூவரும் ஒரே இடத்தில் காட்சி கொடுப்பதால் வேலூர் காசி என்றும் இந்த ஊரைச் சொல்லுகின்றனர்.

Saturday, December 12, 2009

தங்கக் கோயில் பார்க்க வாங்க!

பறவைப்பார்வையில் தங்கக் கோயில் அமைப்பு.


தங்கக் கோயிலை எழுப்பியதற்கு ஸ்ரீநாராயணி அம்மா சொல்லும் காரணம் என்னவெனில் பொதுவாக மக்களை ஆன்மீகம், பக்தி மார்க்கத்தில் திருப்ப இம்மாதிரியான பிரம்மாண்டமான தங்கக் கோயில் என்றால் உடனே வருவார்கள் என்பதாலும், அப்படி வரும் மக்கள் உள்ளே குடி கொண்டிருக்கும் அம்பிகையைத் தரிசிப்பதுடன், அங்கே எழுதப் பட்டிருக்கும் தத்துவார்த்தமான கருத்துக்களையும் படித்து மனதில் ஏற்றிக் கொள்வார்கள் என்பதாலேயே எழுப்பப் பட்டதாய்ச் சொல்லுகிறார். பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில் தங்கத்தால் கட்டப்பட்டது என்பார்கள். மற்றபடி சிதம்பரம், மதுரை, திருப்பதி , பழநி போன்ற கோயிலின் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தகடுகள் வேய்ந்தவை. இதில் சிதம்பரம் மட்டும் கூரையே தங்கத்தால் ஆனது. ஆனால் இந்தக் கோயிலோ ஐந்தாயிரம் சதுர அடியில் முழுதும் தங்கத்தால் இழைக்கப் பட்டுள்ளது. 1,500 கிலோவுக்கு மேல் தங்கமும், 350 கோடி ரூபாய் செலவிலும் கட்டப் பட்டுள்ள இந்தக் கோயிலின் உள்ளே நுழைவோமா??

உள்ளே நுழையும்போதே இலவச தரிசனம் என்றால் வலப்பக்கம் உள்ள நட்சத்திரப் பாதையில் செல்லவேண்டும் என்றார்கள். நடக்க முடியாதவர்களுக்கு என சக்கர நாற்காலி இருப்பதாகவும் தேவையா என்றும் கேட்டனர். என் கணவர் வழக்கம்போல் என்னைப் பார்க்க, நான் அவருக்கு முன்னால் நடையைக் கட்டினேன். சரியாக மதியம் 3-15 ஆகி இருந்தது. நடக்க ஆரம்பித்தோம். பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம், கைப்பைகள் கூடத் தடை செய்யப் பட்டுள்ளது. ஆகையால் எல்லாவற்றையும் பத்திரமாய் வண்டியிலேயே வைத்துவிட்டுச் சென்றோம். தின்பண்டங்கள் வெளியே வாங்கிச் செல்லுபவை உள்ளே அநுமதி கிடையாது. உள்ளே நுழைந்து சிறிது தூரம் நடந்ததும் நாலு, ஐந்து கொட்டகை போட்ட அமருமிடங்கள் திருப்பதியில் ஏற்படுத்தி இருப்பது போன்ற கூண்டு போன்ற அமைப்புகள் வருகின்றன. அவற்றில் முதலாவதில் ஏற்கெனவே மக்கள் நிரம்பி இருந்தனர். காலியாய் இருக்கும் இடங்களில் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பெரிய கூடாரம் நிரம்பியது. திறக்க அரைமணி ஆகும் என்று சிலரும், ஒரு மணி நேரம் ஆகலாம் என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்க அறிவிப்புப் பலகை குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிடும் என்றும், கூட்டத்தைப் பொறுத்து பத்து நிமிஷங்களில் கூடத் திறக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப் பட்டு எங்கும், எதிலும் ஸ்ரீநாராயணி அம்மா தெரிந்தார். அங்கே ஒவ்வொரு கூடார அறைக்கும் வெளியே காபி, டீ விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தால் அநுமதிக்கப் பட்டவர்களே அங்கு விற்க முடியும். கோயில் நிர்வாகமே வெளியே காண்டீன் ஒன்றையும் நடத்துவதாயும் சொன்னார்கள். காபி வாங்கிக் கொண்டோம். நன்றாகவே இருந்தது, சுவையும், விலையும். அரை மணி நேரம் சென்றதும் கதவு திறக்கப் பட்டது. நாங்கள் செல்ல முடியுமா என யோசிப்பதற்குள் அங்கே உள்ளே நுழைந்த பணியாளர் அனைவரையும் அநுமதித்தார். கிட்டத் தட்ட ஐநூறு பேர் இருந்தோம் அந்த அறையில். அனைவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். நீண்ட தாழ்வாரங்கள். இருபக்கமும் கிரானைட் பதிக்கப் பட்ட அமரும் மேடைகள் நீளமாய்க் கூடவே வந்தன. கால் வலித்தால் அவற்றில் அமர்ந்து செல்லலாம். * குறியிள்ள பாதை அதே போல் வளைந்து சென்றது.

ஒவ்வொரு திருப்பத்திலும் கோயில் பணியாளர்கள் க்ளூகோஸ் பிஸ்கட், மாரி பிஸ்கட், பால் போன்றவை விற்றனர். தாழ்வாரங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டால் காபி, டீ அநுமதி இல்லை. அங்கேயே ஒவ்வொரு திருப்பங்களிலும் கழிப்பறைகளும் இருந்தன என்பதற்கான அடையாளக்குறிகளையும் காண முடிந்தது. பெரிய பெரிய புல் தரைகள். அவற்றில் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, மாரியம்மன் போன்ற கடவுளர் சிலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய கரும்பலகைகளில் புராணங்கள், இதிஹாசங்கள், ஸ்ரீநாராயணி அம்மாவின் பேச்சுக்களில் இருந்து எடுக்கப் பட்ட பொன்மொழிகள் எழுதப் பட்டிருந்தன. ஸ்வாமியைக் கிட்ட இருந்து தரிசிக்கவேண்டுமானால் ஐநூறு ரூபாய் கொடுத்துச் சீட்டு வாங்க வேண்டும். கொஞ்சம் தள்ளி இருந்து பார்க்க இருநூறு ரூபாய்க் கட்டணம். நாங்கள் இலவச தரிசனம் என்பதால் தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளி இருந்தே பார்க்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.

செல்லும்போதே ஒவ்வொரு கோணத்திலும் கோயில் கோபுரத்தின் தரிசனம் கிடைக்கிறது. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படியான அமைப்பில் கட்டப் பட்டிருப்பதும், கட்டட அமைப்பும், நிர்வாகத்தின் நேர்த்தியும் பிரமிக்க வைத்தது. செல்லும் வழியெல்லாம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. மாலை நேரமாகையால் வெயில் அதிகம் இல்லை. ஐயாயிரத்துக்கும் குறையாத மரங்கள் பராமரிப்பில் இருக்குமென நினைக்கிறேன். காடு வளம் பாதுகாக்கப் படுவது மகிழ்ச்சியைத் தந்தாலும் இவ்வளவு பெரிய இடமா? இவ்வளவு செலவில் கோயிலா என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் வேண்டாத பேச்சுக்கள் பேசுவதும் தடை செய்யப் பட்டுள்ளது. ஆங்காங்கே நவீன விளக்குகள் பல இருந்தாலும் பழமையைப் போற்றும் விதமாகவா அல்லது அலங்காரத்துக்கா தெரியலை, மாட விளக்குகளும், கல்லினால் ஆனவை பொருத்தப் பட்டுள்ளன.

கோயில் சுற்றிலும் செயற்கையாக உருவாக்கப் பட்ட தாமரை மலர்கள் நிறைந்த அழகான பொய்கையால் சூழப் பட்டுள்ளது. மாலைக்கதிரவனின் கதிர்கள் கோயில் கோபுரத்தில் விழுந்து அவற்றின் பிரகாசம் ஏற்கெனவே கண்ணைக் கூச வைத்துக் கொண்டிருந்தது. அந்த நிழல் அப்படியே பொய்கையிலும் தெரிந்து இரண்டும் ஒன்றோ என்னும் மாயாஜாலத் தோற்றமும் ஏற்பட்டு மனதை மயங்க அடிக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு அலங்காரத்தில் இன்னும் பிரகாசமாய் இருக்கும் என்றும் தெரிய வந்தது. கூட்டம் அதிகம் இருக்கும் என்றனர். நடக்க முடியாது என்றும் சொன்னார்கள். கூட்டம் அதிகம் இல்லை. ஆயிரம் பேர் இருந்தால் அதிகம். அரைமணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் நடந்து கொண்டே இருந்தோம். ஆனால் நடப்பது கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. அதுவும் சிறு குழந்தைகள் தூக்கிக்கவும், முடியாது, நடக்கவும் முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகள் ரொம்பச் சிரமப் பட்டு அழுதனர். மற்றச் சின்னஞ்சிறு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடக்கும் பெண்களும், ஆண்களும் சிரமப்படவே செய்தனர். ஆனாலும் சிரமத்தையும் பொறுத்துக் கொண்டே அனைவரும் வந்தனர். ஆங்காங்கே தங்கி வந்தவர் பலர். நாங்கள் தங்கிட்டு எழுந்தால் மறுபடி நடக்கக் கஷ்டமாயிடும்னு நடந்துட்டே இருந்தோம். கிட்டத் தட்ட நாலு மணி ஆகும்போது சந்நிதிக்குக் கிட்டே வந்தோம்.

உள்ளே நுழையும்போதே நீர் வீழ்ச்சி போல் ஏற்படுத்தப் பட்ட அமைப்புகள், எதிரே ஒரு மண்டபம் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் முழுதும் தங்கச்சுவராலேயே கட்டப் பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த கோயிலும், எதிரே நாராயணி அம்மனின் சந்நிதியும். அலங்கார வளைவுகள், மண்டபங்கள் முகப்புகள் எல்லாவற்றிற்கும் தங்கப் பெயிண்ட். மனிதனின் பதினெட்டுக் குணங்களைச் சுட்டும் வகையில் பதினெட்டு வாயில்கள் என்கிறார்கள். மூலஸ்தானத்தில் தங்கத் தாமரையில், வைரம், வைடூரியம், முத்து, பவளம் ஆகியவற்றால் ஆன நகைகள் அணிந்தவண்ணம், தங்கக் கவசத்துடனும், தங்கக் கிரீடத்துடனும் ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள். மகாமண்டபம் தங்கத்தால் ஜொலிக்கிறது. அங்கே நின்றுகொண்டு தான் இலவச தரிசனம் செய்ய முடியும். தரிசனம் செய்து கொண்டோம். சீட்டு வாங்கியவங்களுக்கு மட்டுமே குங்குமப் பிரசாதம் என்பது சற்றல்ல ரொம்பவே நெருடல். ஆனால் வெளியே சென்றதும் கோயில் மடப்பள்ளியில் செய்யப் பட்ட பிரசாதம் வழங்குவார்கள் என்றும் இது அனைவருக்கும் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். தினமும் சாம்பார் சாதமே கொடுப்பதாகவும் சொன்னார்கள். கோயிலைச் சுற்றி உள்ள பொய்கையின் அகலம் பத்து அடி, ஆழமும் பத்து அடிக்கு இருக்கலாம். அங்கே காசுகள் போடவேண்டாம் என்ற அறிவிப்புப் பலகை உள்ளது. நம் மக்கள் கையில் கிடைக்கும் காசுகளைத் தூக்கி வீசிக் கொண்டிருந்தனர். நாங்க தான் கைப்பையே கொண்டு போகலையே. ஜாலியாக் கை வீசி நடந்தோம், அவரோட சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அநுமதிப்பலகையில் எழுதப் பட்டிருப்பதை மீறிக் காசு எதையும் போடவில்லை. திரும்ப வெளியே செல்ல நடக்க ஆரம்பித்தோம்.

செல்லும் வழியில் கோயில் நிர்வாகம் நடத்தும் கடைகள் வருகின்றன. நம்ம மாநகரக் காவல் தடுப்பு ஆங்காங்கே ஏற்படுத்தி இருப்பது போல் கடைகள் இருக்குமிடங்களில் இவங்களும் தடுப்புகள் ஏற்படுத்திக் கடைக்கு உள்ளே நுழைந்தே வெளியே வரும்படிக்குச் செய்திருக்கின்றனர். அவங்க தட்டியிலே நுழைந்தால் நாம கோலத்திலே நுழைய மாட்டோமா? கடைக்குள்ளே நுழைந்துட்டு வெறும் கையை வீசிக் கொண்டு வந்துட்டோம். ஆங்காங்கே நன்கொடைகள் வசூலிக்கும் கவுண்டர்கள். எதுவும் கொடுக்கணும்னு தோணலை. வந்துட்டோம். ஐந்து முப்பதுக்கு வெளியே வந்தோம், சாம்பார் சாதம் வாங்க ஒரே அடிதடி. அடச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் வந்து இன்னொரு காபி வாங்கிச் சாப்பிட்டுட்டு மத்தவங்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். பக்தி???? ம்ஹும்! பிக்னிக் போய் வந்த உணர்வு! இது எங்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

ஆனால் தனி மனிதன் ஒருவரால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயில் மனித சக்தியின் அசாதாரண ஆற்றலையும் வேலை வாங்கும் திறமையையும் எண்ணி வியக்க வைக்கிறது. முயன்றால் முடியாதது இல்லை என்பதும், வானம் கூட எல்லை இல்லை, அதையும் தாண்டி பயணிக்க முடியும் என்பதும் விளங்குகிறது. பொது நிர்வாகங்களில் இத்தகையதொரு ஆற்றல், திறமை, சுத்தம், கட்டுப்பாடு ஆகியவை பரிமளிக்க முடிந்தால் என்ற எண்ணமும், ஆசையும் ஏற்பட்டதையும் தவிர்க்கமுடியவில்லை. அப்படி ஒருநாள் வந்தால் அதுவே இந்நாட்டின் பொன்னாள். உண்மையான சுதந்திரம் கிட்டியது என்னலாம்.

Friday, December 11, 2009

எங்கெங்கு காணினும் தங்கமடா! ஸ்ரீபுரம்!


நந்தகோபால் என்பவருக்கும், ஜோதி அம்மா என்பவருக்கும் ஜனவரி, 1976ம் ஆண்டு பிறந்த குழந்தையே இப்போது சக்தி அம்மா என அனைவராலும் அழைக்கப் படும் நாராயணி அம்மா என்பவர். பிறந்ததில் இருந்தே குழந்தை தனித்தன்மை வாய்ந்ததாய் இருந்ததாகச் சொல்கின்றனர். சங்கு சக்ரம் மார்பில் இருபக்கமும் இருக்கிறது என்றும் சொல்கின்றனர். நெற்றியிலும் திருமண்காப்பு இருந்ததாம். குழந்தையும் பிறந்ததில் இருந்தே ஆன்மீகத்திலும், பக்தியிலும் ஈடுபாடு கொண்டிருந்தது. பஜனைகள், வழிபாடுகளே அதன் நித்திய விளையாட்டுகள். பள்ளிக்கு அனுப்பினார்கள். ஆனாலும் பெரும்பாலான நேரத்தைக் கோயிலிலேயே செலவு செய்தது இந்தக் குழந்தை. 1992-ம் வருடம் மே மாதம் எட்டாம் தேதி, இவர் தம்மை ஸ்ரீநாராயணி அம்மன் என அறிவித்துக் கொண்டார். தாம் உலகில் திரு அவதாரம் செய்ததின் காரணமும் நாராயணி அம்மனாகத் தாம் உலக மக்களுக்குத் தொண்டு செய்யப் போவதையும் அறிவித்தார். அவரைக் கேள்வி கேட்ட ஒரு பெண்மணிக்கு இவர் தம்முடைய சுயரூபத்தை நாராயணி அம்மன் உருவில் காட்டியதாகச் சொல்லப் படுகிறது. பெரியதொரு சிங்கத்தின் மேல் ஆரோஹணித்த அம்மனைப் பார்த்து அந்தப் பெண்மணி வியந்ததாகவும் சொல்லப்படுகிறது. தர்மம் அழிந்து அதர்மம் அதிகமாகிக் கொண்டு செல்வதால் தாம் அவதாரம் எடுக்க உரிய நேரம் வந்துவிட்டதாகவும், அதனாலேயே தாம் இவ்வுலகில் பிறந்ததாகவும், தாம் நாராயணியாகவே பிறந்திருப்பதாகவும், தம்முடைய பெயர் இனிமேல் சக்தி அம்மா என்றும் அறிவித்தார்.

மனித வாழ்வை மேம்படுத்தவும், வாழ்க்கை நெறிமுறைகளைச் செம்மைப் படுத்தி மனிதரை ஒழுங்கான சீரான நெறியில் வாழ வைப்பதும், உண்மையை வெல்ல வைப்பதும், மக்களை மேன்மேலும் அன்புடனும், சகிப்புத் தன்மை நிறைந்தவர்களாய் மாற்றுவதுமே தம் முக்கியவேலை என்றும், அறிவித்தார். இவர் ஏற்படுத்தி இருக்கும் நாராயணி பீடம் இருக்கும் இடம் திருமலைக்கொடி அல்லது மலைக்கொடி என அழைக்கப் படும் ஒரு கிராமத்தின் அருகில் உள்ளது. வேலூருக்கு அருகே இருக்கும் கைலாசகிரி என்னும் மலை அடிவாரத்தில் உள்ள இந்த ஊர் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து கண்ணுக்கு அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்து உள்ளது. இந்த ஊர் இருக்கும் அமைப்பு மிகவும் வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. திருப்பதி, திருவண்ணாமலை, திருமலைக்கொடி ஆகிய மூன்று ஊர்களுக்கும் நேராக ஒரு கோடு போட்டால் மூன்று நகரங்களும் ஒரு முக்கோணத்தை உருவாக்குவது புரியும். இந்தத் திருமலைக்கொடியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல சித்தர்களும், ரிஷி, முனிவர்களும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்கின்றனர்.

இந்த ஊரில் ஏற்கெனவே ஒரு நாராயணி அம்மன் கோயில் இருந்து வந்துள்ளது. அந்தக் கோயிலில் அர்ச்சகராய் இருந்து வந்த ஸ்ரீநாராயணி அம்மா ஸ்ரீநாராயணியின் பெருமையை அனைவரும் அறியும் வண்ணம் கோயிலைப் பெரிது படுத்தி பொன்னால் இழைக்க விரும்பினார். ஆனால் பழைய கோயிலைப் புதுப்பித்தாலும் அவர் நினைத்த மாதிரிக் கட்ட முடியவில்லை. ஆகவே கோயிலுக்கு எதிரேயே அவருக்குக் கிடைத்த நூறு ஏக்கர் நிலத்தில் ஒரு அற்புதமான கோயிலை உருவாக்கினார். நூறு ஏக்கரில் கோயில் நட்டநடுவே மிக மிக அழகான ஒரு பொய்கைக்கு நடுவே உருவாக்கப் பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழி நட்சத்திர வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சுற்றிலும் இயற்கையான சூழலில் அந்த நட்சத்திரப் பாதையில் பல மணி நேரம் நடந்து சென்றே பிரதானக் கோயிலை அடையவேண்டும். செல்லும் வழியெல்லாம் அழகான பூங்காக்களும், அதில் புராணங்கள், இதிகாசங்களில் இருந்தும், ஸ்ரீநாராயணி அம்மா சொன்ன பொன்மொழிகளும் பலகைகளில் எழுதப் பட்டுள்ளன.

புனிதமான ஸ்ரீசக்ரத்தை நினைவு கூரும் வகையில் ஏற்படுத்தப் பட்ட இந்த நட்சத்திரப்பாதையில் செல்லுபவர்களுக்கு தெய்வீக சக்தியானது பூமியிலிருந்து ஈர்த்து அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும் என்ற எண்ணமே இத்தகையதொரு பாதையை உருவாக்கக் காரணம் என்று ஸ்ரீநாராயணி அம்மா கூறுகிறார். செல்லும் வழியெங்கும் ராமாயணம், மஹாபாரதம், வேதங்கள் போன்றவற்றிலிருந்து பொறுக்கி எடுத்த வசனங்களைப் படிப்பவர்களுக்கு அவர்கள் உலகில் தோன்றியதன் உண்மையான காரணத்தைப் புரிய வைத்து இயற்கையோடு ஒன்றிய தெய்வீக வாழ்வு வாழத் தூண்டும் என்கிறார்.

கோயில் முழுதும் கட்டுவதற்கும், கட்டுமான வேலைகளுக்கும் ஆலோசனைகள் சொன்னது முழுக்க முழுக்க ஸ்ரீநாராயணி அம்மாவே என்று சொல்கின்றனர். அவருக்குக் கிடைத்திருக்கும் தெய்வீக சக்தியானது இப்படி ஒரு அருளை அவருக்கு வாரி வழங்கியதாகவும், அதன் மூலம் தெய்வீகக் காட்சிகளைக் கண்டு உணர்ந்து அவர் சொன்னபடியே கோயில் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். கோயில் கட்ட ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஊர் மக்கள் கூட இப்படி ஒரு கோயில் கட்டப் படுகிறது என்பதை அறியமாட்டார்கள். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களும் தாங்கள் அறிந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை என்று சொல்கின்றனர். முக்கியக் கோயில் முழுக்க முழுக்கத் தங்கத்தாலேயே எழுப்பப் பட்டது. ஒன்பதில் இருந்து பதினைந்து வரையில் ஆனதங்கத் தகடுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் ஏற்படுத்தப் பட்டத் தங்க மடிப்புகளால் ஆன தங்கத் தகடுகள் ஆகும், அவையே இந்தக் கோயிலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றிலேயே சிற்பங்கள், அலங்கரிக்கப் பட்ட தூண்கள் என உள்ளன. எங்கெங்கு காணினும் தங்கமடா!

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தங்குமிடம், வண்டிகள் நிறுத்துமிடம், நடக்கமுடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சக்கர நாற்காலிகள், குடிநீர், பால், பிஸ்கட் விற்கும் கடைகள், சுத்தமாகப் பராமரிக்கப் படும் கழிப்பறைகள், நட்சத்திரப் பாதையில் நடந்து செல்லும்போது ஆங்காங்கே அமர்ந்து செல்ல வசதிகள். காபி, டீ கடைகள், பொதுமக்கள் தொடர்பு ஆகியன உள்ளன. இது 2007-ம்வருஷம் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி பொதுமக்கள் தரிசனத்துக்காகத் திறக்கப் பட்டது. அப்போதிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருகின்றனர். இந்தக் கோயில் இங்கே வந்ததும் வேலூருக்குச் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் பலவிதமான முன்னேற்றங்கள் வேலூருக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இனி கோயிலைச் சுற்றி என் பார்வை நாளை பார்ப்போமா?

Sunday, December 6, 2009

என் பயணங்களில் - திருப்புட்குழியும் தன்வந்திரி பீடமும்!

ராவணன் சீதையை அபகரித்துச் செல்லும் வழியில் ஜடாயு ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்கப் போராடியது நினைவிருக்கலாம். அப்போது ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி அதைக் கீழே வீழ்த்திவிட்டுச் சென்றுவிடுகிறான். சிறகுகளை இழந்த ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டு மரணத் தருவாயில் இருக்கும்போது ஸ்ரீராமர் சீதையைத் தேடிக் கொண்டு அவ்வழியே வந்தார். அவரிடம் ராவணனைப் பற்றிய விஷயத்தைச் சொன்ன ஜடாயு, தான் இறக்கப் போவதாயும் தனக்கு ஈமக்கிரியைகளை ஸ்ரீராமரே செய்யவேண்டும் எனவும் சொல்லிவிட்டு உயிரை விட்டது. உயிரை விடும் முன்னர் பகவத் தரிசனம் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்தித்த ஜடாயுவுக்கு முன்னால் மஹாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்த் தோற்றம் தந்தார்.

ஜடாயுவைத் தன் வலப்பக்கம் வைத்தித் தீ மூட்டி ஈமக்கிரியைகளைச் செய்தார் பகவான். இதனால் ஏற்பட்ட வெப்பத்தை ஸ்ரீதேவியால் தாங்க முடியாமல் அவள் இடப்புறம் சென்றுவிட, பூமாதேவி பொறுமையின் சிகரமாய் இடப்புறம் இருந்து வலப்புறம் மாறிக் கொள்கின்றாள். இந்தக் கோயிலில் தாயார் சந்நிதியும் பெருமாள் சந்நிதிக்கு வலப்புறமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆண்டால் இடப்பக்கமாய்க் காட்சி தருகிறாள். ஜடாயுவின் வேண்டுகோளின்படி ஸ்ரீராமர் தன் அம்பினால் தீர்த்தம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தத் தீர்த்தத்திலேயே ஈமக்கிரியைகள் செய்தார். தீர்த்தம் ஜடாயுவின் பெயராலேயே வழங்கப் படுகிறது. மரியாதைக்குரிய பறவையான ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்த தலம் என்பதால் திருப்புட்குழி என்னும் பெயரால் இந்தத் தலம் வழங்கப் படுகிறது. மூலவரின் மேல் உள்ள விமானம் விஜய வீரகோட்டி விமானம் என்று வழங்கப் படுகிறது.

தாயாருக்கு வறுத்த பயிறை முளைக்க வைக்கும் அற்புத சக்தி உண்டு எனச் சொல்லுகின்றனர். மரகதவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் விளங்கும் தாயாருக்கு வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பெண்கள், ஜடாயு தீர்த்ததில் நீராடி, இங்குள்ள மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை வாங்கித் தங்கள் மடியில் கட்டிக் கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்த உடனே அந்தப் பயிறு முளைத்திருக்கவேண்டும். அப்போது கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம், நம்பிக்கை. ஸ்ரீராமாநுஜரின் குருவான யாதவப்ரகாசர் இங்கு தான் வசித்தார் எனச் சொல்கின்றனர். இத்தலத்தில் இருக்கும் கல் குதிரை வாகனம் மிகவும் அதிசயமான ஒன்று. இதன் உறுப்புகள் உண்மையான உயிருள்ள குதிரைகளுக்கு அசைவது போலவே அசையும் என்கின்றனர். நாங்கள் போகும்போது மூடி இருந்தது. இதைச் செய்து கொடுத்த சிற்பி இது போல் இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்துவிட்டு உயிரை விட்டு விட்டாராம். இவரது உறுதியைப் பாராட்டும் விதமாய் பெருமாள் வருடா வருடம் நடக்கும் திருவிழாவின் எட்டாம் நாளன்று சிற்பியின் பெயரைக் கொண்ட வீதிக்கு எழுந்தருளுவதாய்ச் சொல்கின்றனர்.

அடுத்து நாங்கள் சென்றது வாலாஜாபேட்டையில் மேல்புதுப்பேட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ முரளீதரஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி ஆரோக்யபீடத்திற்கு. இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் கட்டிடவேலைகள் நடந்தாலும் சந்நிதி இருப்பதால் போய்த் தரிசித்தோம். எல்லாச் சந்நிதிகளிலும் ஒருவரோ, இருவரோ அர்ச்சகர்கள் இருந்தனர். போகும் வழியில் நல்ல வெயில். ஓரமாய்ச் செல்லவேண்டி இருந்தது. உள்ளே போனால் ஒரு பெரிய கூடத்தில் தன்வந்திரி ஹோமம் தினசரி இருபத்து நாலுமணிநேரமும் நடக்கிறது எனச் சொன்னார்கள். அங்கே சென்றோம். பெரிய ஹோமகுண்டத்தில் மருந்து மூலிகைகள் மணக்க ஹோமம் நடந்து கொண்டிருந்தது. இஷ்டப் பட்டால் அங்கேயே விற்கும் மூலிகைகளை வாங்கி நாமும் நம் கையாலேயே ஹோமத்தில் இடலாம். மூலிகைகள் விலை யானைவிலைமட்டுமே. அதிகம் இல்லை. ஆகையால் நாங்க வாங்கலை.

இந்த ஆஸ்ரமம் அல்லது கோயில் அல்லது ஆரோக்ய பீடம் தன்வந்திரிக்காக தனி மனிதர் ஒருவரால் ஏற்படுத்தப் பட்டது. ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிகள் கோயில் ஒன்றின் குருக்கள்/அர்ச்சகராக இருந்துவந்தபோது அவரின் தாய் கடுமையான புற்று நோயால் அவதிப்பட, தந்தைக்கோ நீரிழிவு நோய். தாயை இழந்த ஸ்வாமிகள் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கியும், அவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக்காக்கவும் ஏற்படுத்தியதே இந்த ஆரோக்யபீடம் என்கின்றனர். தன்வந்திரி ஹோமம் நடக்கும் இடமெல்லாம் தன்வந்திரியின் சிலை எடுத்துச் செல்லப் படுகிறது என்கின்றனர். தன்வந்திரிக்கெனத் தனி சந்நிதியும் உள்ளது. மற்ற தெய்வங்கள் பரிவார தேவதைகளாய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. மூன்று அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப் பட்டுவருவதாய்ச் சொல்கின்றனர். இதற்கடுத்து வேலூர் சென்று சாப்பாட்டுக்கு வண்டி நிறுத்தப்பட்டது. வேலூரில் சாப்பாட்டுக்குப் பின்னர் நாங்கள் சென்றது ஸ்ரீபுரம் என அழைக்கப் படும் பொற்கோயில்.

Saturday, November 28, 2009

என் பயணங்களில் - திருப்புட்குழி!

காஞ்சிபுரத்தை முடித்துக் கொண்டு அடுத்துத் திருப்புட்குழிக்குப் பயணம் ஆகவேண்டும். வரதராஜர் கோயில் சந்நிதித் தெரு பூராவும் துணிக்கடைகள். எங்க பேருந்து நின்ற இடத்திலும் ஒரு துணிக்கடை. மற்றவர்கள் வர நேரம் பிடிக்க, வழக்கம்போல் சீக்கிரமாய் வந்திருந்த நாங்க இரண்டு பேரும், பொழுது போகாமல் தவித்துக் கொண்டிருந்தோம். துணிக்கடை அப்போத் தான் திறந்து பணியாளர்கள் வந்துட்டு இருந்தாங்க. உள்ளே போய்ப் பார்க்கலாம் என்பது ரங்ஸின் விருப்பம். ஆனால் வாங்கறதா இருக்கணும், இல்லாட்டிப் போகக் கூடாது, அதுவும் காலங்கார்த்தாலே போய்ட்டு ஒண்ணும் வாங்காம வரது சரியில்லைனு என்னோட வாதம். கடைசியில் வழக்கம்போல் ரங்ஸ் தான் ஜெயிச்சார். ஹிஹிஹி, கடைக்குள்ளே போனோம். ஏதோ பத்து லக்ஷம் ரூபாய்க்குப் புடவை வாங்கப் போறோம்னு நினைப்பிலே கடைக்காரங்க ஏக உபசாரம். நான் அழுத்தம் திருத்தமாய் பருத்திப் புடவைகள்தான் வேண்டும் என்றும், வேறு புடவைகள் வேண்டாம் என்றும் முதலிலேயே சொல்லிட்டேன். குறைந்த பக்ஷம் 250ரூபாயிலிருந்து பருத்திப்புடவைகள் போட்டார்கள். கைத்தறி என்பது பார்த்ததுமே புரிந்தது. அம்பி வஸ்த்ரகலா புடைவையை என்ன கலரில் வாங்கறாரோனு ஒரே கவலை. இருந்தாலும் பரவாயில்லை அது பட்டு, இது காட்டன் தானேனு, க்ரே கலரில் ஒரு புடைவையை எடுத்துக் கொண்டேன். 350ரூ ஆச்சு. இன்னிக்கு இதை எழுதும்போதும் அந்தப் புடைவைதான் கட்டிக் கொண்டு எழுதறேன். அதிலேயே ப்ளவுஸ் இருக்குங்கறாங்க. ஆனால் ப்ளவுஸ் கட் பண்ணினால் புடைவை நீளம் போதாது. ரன்னிங்கிலே இருந்தால் கட் பண்ணாமல் கட்டுவதே சரியாய் இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் புடைவை யோகம் அடிச்சது. அதுக்குள்ளே மத்தவங்க வர ஆரம்பிச்சுட்டாங்க. வேலூர் போறோமே, அங்கே ஆரணி புடைவை பார்த்திருக்கலாமேனு ஒரு எண்ணம் வந்தது. சரி, அப்புறமாப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆரணிப் புடைவையும் நல்லா இருக்கும். புடைவை கட்ட ஆரம்பிச்ச நாளிலே முதல்லே கட்டிய பட்டுப்புடைவைகள் எல்லாமே ஆரணிதான். தகதகவென்று இருக்கும். இப்போ அந்தத் தரம் இருக்குமா தெரியலை. பார்க்கணும். அடுத்த தீபாவளிக்கு அம்பி அலையவேண்டாம் பாருங்க.

இப்போ பேருந்தில் எல்லாரும் ஏறியாச்சு. திருப்புட்குழியை நோக்கிப் பேருந்து போயிட்டு இருக்கு. அதன் தலபுராணத்தை சுற்றுலா நடத்துநர் எல்லாருக்கும் சொல்லிட்டு இருந்தார். திருப்புட்குழியை முடிச்சதும், அடுத்து வாலாஜாபேட்டையில் தன்வந்திரி ஆலயம். ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸவாமிகள் நடத்தும் ஆலயம் அது. அங்கே போயிட்டு பின்னர் வேலூர் போய்ச் சாப்பாடு. அதன் பின்னர் ஸ்ரீபுரம். தி.வா. கவனிச்சுக்குங்க. இன்னும் இரண்டுபதிவுக்கு அப்புறம் தான் ஸ்ரீபுரம் வரும். பேருந்து திருப்புட்குழியை வந்தடைந்தது. திருப்புட்குழி நூற்றி எட்டு திவ்யதேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்ட கோயில். ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் தகனம் செய்து ஈமக்கிரியைகள் புரிந்த இடம் என்று சொல்கின்றது தலவரலாறு. பெருமாளின் பெயர் விஜயராகவப் பெருமாள். மரகதவல்லித் தாயார் அருள் பாலிக்கிறாள். மூலவரின் தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள் பாலிக்கிறார். உற்சவரின் திருவீதி புறப்பாடுகளில் ஜடாயுவுக்கும் சகலவிதமான மரியாதைகளும் செய்யப் படுகின்றன. ஜடாயுவிற்கு ஈமக்கிரியைகள் செய்த தலமாதலால், கொடிமரம் கோயிலின் உள்ளே கிடையாது. பலிபீடமும் கோயிலுக்கு வெளியே காணப்படுகிறது. தலவரலாறு நாளை காண்போமா?

Thursday, November 26, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே எல்லாம் ஒளிஞ்சிருக்கே!


ஆற்காடு யுத்தம் நடக்கும்போது ராபர்ட் கிளைவிற்கு உடலநலமில்லாமல் போக, இந்தக் கோயிலின் துளசிதீர்த்தம் பருகக் கொடுத்தனராம். நோய் தீர, நன்றிக்கடனாக ராபர்ட் கிளைவ், தான் போரில் வெற்றி வீரனாய்த் திரும்பும்போடு வரதார்ஜருக்கு விலை உயர்ந்த மகரகண்டியைக் கழுத்தில் அணிவிக்க அன்பளிப்பாய் அளித்தாராம். மேலும் பிரம்மோற்ச்வத்தின்போது காஞ்சிக்கு வந்து பெருமாளையும் தரிசிக்கும் வழக்கமும் கிளைவிற்கு இருந்திருக்கிறது. ஒருமுறை அத்தகைய பிரம்மோற்சவத்தின்போது பெருமாளின் அழகில் மயங்கிய கிளைவ் தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்குக் கொடுத்துவிட்டாராம். இன்றளவும் அந்தச் சங்கிலியை கருடசேவையின்போது சார்த்துவது வழக்கம் என்கின்றனர். கிளைவ் தவிர ஆங்கிலேய அதிகாரியான ப்ளேஸ்துரை என்பவரும் ஸ்ரீவரதருக்குத் தலையில் அணியும் ஆபரணத்தை அன்பளிப்பாய்த் தந்து மகிழ்ந்தாராம். ஸ்ரீவரதராஜர் கோயில் என்று சொன்னாலும் மூலவர் பெயர் தேவராஜப் பெருமாள். உற்சவருக்கே வரதராஜர் என்ற திருநாமம். உற்சவருக்கு இருக்கும் இரு தேவியருமே பூமாதேவியர் என்றும் சொல்கின்றனர். இதன் காரணமாய்ச் சொல்லப் படுவது, முகமதியர் படை எடுப்பின்போது விக்கிரஹங்களை மறைக்கவேண்டி, உடையார்பாளையம் ஜமீனுக்கு விக்கிரஹங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. பின்னர் அங்கிருந்து மீண்டும் வரும்போது விக்கிரங்கங்கள் மாறிவிட்டதாயும், இரு தேவியருமே பூமிப் பிராட்டியாக அமைந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். மேலும் உடையார்பாளையம் ஜமீனில் காஞ்சி வரதர் தவிர ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் அங்கே அடைக்கலம் புகுந்ததால், திரும்ப எடுத்து வரும்போது அடையாளம் காணமுடியாமல், சலவைத் தொழிலாளி ஒருவர் காஞ்சி வரதரின் ஆடையின் மணத்தை வைத்துக் கண்டு பிடித்ததாயும் கூறுவார்கள். இதன் காரணமாக சலவைத் தொழிலாளி வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவராத்திரியில் மரியாதைகள் செய்யப் பட்டு வருகின்றன.

உற்சவரின் திருமுகத்தில் காணப்படும் வடுக்கள் பிரம்மாவின் யாகத்தின் வெப்பம் தாங்காமல் ஏற்பட்டவை என்கின்றனர். இங்கே இருக்கும் வையமாளிகை என்னும் இடத்தில் உள்ள இரு பல்லிகளின் தரிசனம் மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுவது. ஸ்ருங்கிபேரர் என்னும் முனிவரின் குமாரர்கள் ஹேமன், சுக்லன் இருவரும் கெளதம முனிவரின் சீடர்கள். குருகுலத்தில் இருந்த இவர்கள் குருவுக்கெனக் கொண்டு வரும் தீர்த்தத்தில் சுத்தமில்லாமையால் இரு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியே வர, சீடர்களின் கவனக்குறைவைக் கண்ட குருவானவர் இருவரையும் பல்லிகளாய்ப்பிறக்கும்படி சாபம் கொடுக்கிறார். சாபவிமோசனம் வேண்டிய இருவரையும் சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் இந்தப் பல்லிகளைத் தொட்டுப் பிரார்த்திப்போருக்கு சகல தோஷங்களும் விலகும் என்றும் சொல்கின்றனர்.

இங்கு பாஞ்சராத்திரமுறைப்படி மந்த்ராஸநம் என்னும் திருப்பள்ளி எழச் செய்தல், ஸ்நாநாஸநம் என்னும் திருமஞ்சனம் அல்லது அபிஷேஹம், அலங்காரஸநம் என்னும் ஆடை, ஆபரணங்கள் அணிவித்து மலர்மாலைகள் சூட்டல், போஜ்யாஸநம் என்னும் உணவு படைத்தல், புநர் மந்த்ராஸநம் என்னும் துளசியால் அர்ச்சனையும் பர்யாங்காஸநம் என்னும் பள்ளியறை வழிபாடு போன்றவை நடைபெறுகின்றன. வருடத்தின் பனிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் உண்டு. மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்குவது போல் இங்கே ஸ்ரீவரதராஜர் பாலாற்றில் இறங்குகிறார். இதற்குக் காரணமாய்ச் சொல்லப் படுவது:

மொகலாயர் படை எடுப்பின்போது வரதராஜர் காஞ்சிக்கு அருகே பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு என்னும் ஊரில் லக்ஷ்மிநரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். ஒரு வருஷத்துக்குக் காஞ்சி வரதருக்கு அந்தக் கோயிலிலேயே திருமஞ்சனம் மற்றும் அனைத்து உற்சவங்களும் நடைபெற்று வந்துள்ளது. இதன் அடையாளமாகவே ஒவ்வொரு சித்ரா பெளர்ணமிக்கும் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி லக்ஷ்மி நரசிம்மரை வலம் வந்து நன்றி தெரிவித்துச் செல்வதாய் ஐதீகம். இதே போல் வைகாசிமாசம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் சோளிங்கபுரத்தில் வசித்த ஒரு பக்தனுக்காக பெருமாள் அங்கே சேவை சாதிப்பதாக ஐதீகம் ஒன்று உண்டு. அதற்காக மூன்றாம் நாள் உற்சவத்தின் போது அதிகாலை சூரியோதயத்தில் கருடவாகனத்தில் இரட்டைக்குடைகளோடு எழுந்தருளும் பெருமாளை சில நிமிட நேரம் அந்தக் குடைகளால் மறைக்கின்றனர். அந்த மறைக்கும் சில நிமிடங்கள் பெருமாள் சோளிங்கபுரத்தில் வசித்து வந்த தோட்டாச்சார் என்பவருக்காக அங்கே தரிசனம் கொடுப்பதாய் ஐதீகம். வருடா வருடம் கருடசேவைக்குக் காஞ்சி வந்த தோட்டாசாரியாருக்கு ஒரு வருஷம் வரமுடியாமல் போக மனம் வருந்தி பகவான் நினைவாகவே தவித்துக் கொண்டு இருக்க, பகவான் அவருக்கு அங்கேயே தன் தரிசனத்தைக் காட்டி அருளினார். அதன் நினைவாய் இது இன்றளவும் நடந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜருக்கு யக்ஞமூர்த்தி என்பவ்ருடன் நடந்த வாதத்தில் வெல்ல உதவியதும் இங்கேதான். கூரத்தாழ்வார் இழந்த தன் கண்களைத் திரும்பப் பெற்றதும் இங்கேதான். ஸ்ரீவரதாராஜஸ்தவம் என்னும் பாடல்களைப் பாடிப் பெற்றார் என்பார்கள். திருக்கச்சிநம்பிகள் ஸ்ரீவரதராஜருக்கு விசிறி கைங்கரியம் செய்து பெருமாளுடன் நேரடியாகப் பேசி அவர் கட்டளைகளை ஸ்ரீராமாநுஜருக்குத் தெரிவித்து வந்தாய்ச் சொல்லுகின்றனர். கவி காளமேகமும் கஞ்சி வரதரின் கருடசேவையைப் பார்த்துவிட்டு நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.

அடுத்ததாய் திருப்புட்குழி என்னும் தலம்.

Sunday, November 22, 2009

வஸ்த்ரகலா வந்தாச்சு! ராமலக்ஷ்மிக்கு நன்றி!

கஞ்சி வரதப்பரைப் பத்தி எழுதும்போது இது என்ன மொக்கைனு கேட்காதீங்க. போன வாரம் அம்பி திடீர்னு தொலைபேசியில் அழைத்தப்போ எனக்கும் என்னடானு ஆச்சரியமா இருந்தது. கடைசியிலே பார்த்தால், (முதல்லே இருந்துதான்) ராமலக்ஷ்மியோட வேலை அது. வல்லி சிம்ஹனோட பதிவிலே நான் அவங்களைச் சமாதானப்படுத்த அம்பி வாங்கித் தரப் போற வஸ்த்ரகலாவைப் பத்திச் சொன்னேனா? அதை அம்பி பார்க்கவே இல்லையா? ராமலக்ஷ்மி வேலை மெனக்கெட்டு(ஹிஹிஹி, வீட்டிலே சமையல் ரங்ஸாம், சொன்னாங்க:P) அதை எல்லாம் ஜி3 பண்ணி(ஜி3 நான் உங்களை நினைக்கவே இல்லை, ரொம்ப நாளாச்சேனு பீலிங்ஸா இருந்துச்சு இல்லை, இப்போ சரியா) அம்பிக்கு அனுப்பி இதை எல்லாம் கண்டுக்கறதே இல்லையானு கேட்டிருக்காங்க. அதான் அம்பி தொலைபேசியில் அழைச்சிருக்கார். அதுவும் சொந்தத் தொலைபேசியா? எங்கே?? அம்பியாவது? சொந்தத் தொலைபேசியில் பேசறதாவது? எல்லாம் மாமனார் வீட்டுத் தொலைபேசிதான்.

அப்புறமா ஒருவழியா அம்பியை வஸ்த்ரகலா வாங்கித் தர ஒத்துக்க வச்சுட்டேன். எனக்கும், வல்லிக்கும் முதல்லே வந்துடும். அப்புறமா மத்தவங்களுக்கு. நாங்க ரெண்டு பேரும்தான் அம்பியோட பதிவை எத்தனை மொக்கையாய் இருந்தாலும் ஆதரிச்சு இத்தனை பிரபலமா ஆக்கி இருக்கோமே. அதுக்கான நன்றி அறிவிப்புத் தான் இந்த வஸ்த்ரகலா. அம்பி நான் கேட்ட நீலம் அல்லது க்ரே கலர் எனக்கு. வல்லி என்ன கலர் கேட்டாங்க தெரியலை. பச்சையோ மஞ்சளோ எனக்கு வேண்டாம். அதையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போச்சு!

Friday, November 20, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!

மன்னனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டான். உடனேயே ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு காஞ்சியை விட்டுச் சென்ற திருமழிசை ஆழ்வாரையும், கணிகண்ணனையும் தேடிக் கொண்டு சென்றான். அருகில் இருந்த ஓர் சிறிய கிராமத்தில் தங்கி இருந்த இருவரையும் கண்டான். மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இருவரையும் காஞ்சிக்குத் திரும்பச் சொன்னான். மன்னனின் மன்னிப்பு மனதார இருப்பதை உணர்ந்துகொண்ட ஆழ்வாரும் காஞ்சிக்குத் திரும்ப முடிவு செய்தார். அவர் மட்டும் திரும்பினால் போதுமா? கூடவே கணிகண்ணனும், எல்லாத்துக்கும் மேலே பெருமாளும் அல்லவோ திரும்பணும்? அதுக்கும் ஆழ்வார்தான் மனசு வைக்கணும். ஆழ்வார் உடனேயே பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”
என்று வேண்டிக் கொள்ள பெருமாளும் ஆழ்வாரின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து காஞ்சிக்குத் திரும்பினாராம். அன்று முதல் இவருக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இதே கதையில் கணிகண்ணனை மன்னன் பாடச் சொன்னான் என்பதற்குப் பதிலாக வேறு மாதிரியும் சொல்கின்றார்கள்.

திருமழிசை ஆழ்வாருக்கும், கணிகண்ணனுக்கும் சேவைகள் செய்து வந்த மூதாட்டியின் அன்பிலும், அவள் குணத்திலும் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போன திருமழிசை ஆழ்வார் அந்த மூதாட்டி இளமையில் சிறப்போடும், செல்வத்தோடும் வாழமுடியவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். அவருடைய பக்தியின், தவத்தின் உதவியால் பெருமாளை வேண்டி அந்த மூதாட்டிக்கு இளமை திரும்பக் கிடைக்கச் செய்கிறார். இந்தத் தகவல் மன்னனின் அரண்மனை வரையிலும் எட்ட, தானும், தன் ஆசைக்கிழத்தியும் வயது முதிர்ந்து வருவதை எண்ணிய மன்னன், நமக்கும் இளமை திரும்பினால் இன்னமும் பலநாட்கள் ஆநந்தம் அநுபவிக்கலாமே என எண்ணினான். திருமழிசை ஆழ்வாரை இதற்காக வேண்ட, ஆழ்வார் மறுக்கிறார். மூதாட்டியின் இறை பக்தியையும், மன்னனின் சுயநலத்தையும் சுட்டிக் காட்டிய அவர் திட்டவட்டமாய் மன்னன் கோரிக்கைக்கு மறுக்கிறார். மன்னன் விடாமல் கணிகண்ணனைக் கேட்க தன் குரு மறுத்த ஒரு விஷயத்திற்குத் தான் எங்கனம் உதவுவது என அவனும் மறுக்கிறான். கோபம் கொண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த அன்பு சீடனைப் பிரிய மனமில்லாமலும், பெருமாளையும் பிரிய மனமில்லாமலும் இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். பின்னர் மன்னன் வேண்டுகோளின்படி திரும்புகிறார். இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் இந்தப் பெருமான் பேரில் அடைக்கலப் பத்து என்ற பாசுரங்களைப் பாடி உள்ளார். இந்தப் பாசுரங்கள் வெள்ளிப்பதக்கங்களில் பொறிக்கப் பட்டு ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். அடைக்கலப் பத்து தவிர, அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச்சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார் ஸ்ரீதேசிகர். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் கூட இந்தப் பெருமாளின் பெயரில் ஒரு கீர்த்தனை பாடியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பெருமாள் தங்கக் கொண்டையுடன் காட்சி அளிப்பார். இந்தத் தங்கக் கொண்டையை இவருக்கு அளித்தது வெங்கடாத்ரி என்னும் தெலுங்கு அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வைணவர் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தின் பெருமாளுக்கு ஆப்ரணங்கள் வழங்கி உள்ளதாய்த் தெரிய வருகிறது. ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் தங்கக் கொண்டை செய்யவேண்டி, போதிய பணம் பெற யாசகம் செய்து பொருள் சேர்த்தார் வெங்கடாத்திரி. நகை செய்யும் ஆசாரியிடம் பொருளைக் கொடுத்துப் பொன் வாங்கி கொண்டை செய்யச் சொல்ல, அதில் நட்ட நடுவில் பதிக்கவேண்டிய எமரால்ட் கற்களைப் பார்த்த ஆசாரியின் ஆசை மனைவியான நடன நங்கை அதைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டாள். இந்த் அவிஷயம் அறிந்த வெங்கடாத்ரி அந்த மாது எங்கே இருக்கிறாள் எனக் கேட்டறிந்து அவள் வசித்து வந்த தஞ்சைக்கே சென்று அங்கே அவள் வீட்டு வாயிலில் உண்ணாவிரதம் இருந்து அந்தக் கற்களை மீட்டு வந்தார். பின்னர் பெருமாள் அவர் கனவில் வந்து ஸ்ரீதேவி, பூதேவிக்கு அவ்வாறே செய்து கொடுக்கும்படிச் சொல்ல அவ்வாறே இரு நாச்சிமார்களுக்கும் இதே போல் யாசகம் செய்து பொருளீட்டி ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கிறார் வெங்கடாத்ரி.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் சிலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிக்குப் பண உதவி, ஆபரணங்கள் என நன்கொடையாகக் கொடுத்திருக்கின்றனர்.

Thursday, November 19, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே போனாயோ?

பெருந்தேவித் தாயாரின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. விமானத்தின் பெயர் கல்யாணகோடி விமானம். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைச் சேவிக்கவேண்டுமாம். ஆனால் நாங்க முதல்லே பெருமாளைத் தான் பார்த்தோம். அப்புறமாய்த் தாயாரைப் பார்த்தோம். எழுதறது மட்டும் முதல்லே தாயார் பத்தி. கிழக்கு நோக்கி தாமரை மலர்களைக் கையில் ஏந்தியவண்ணம் அபயஹஸ்தம் காட்டும் தாயாருக்கு அரித்ரா தேவி, மகாதேவி என்ற திருநாமங்களும் உண்டு என்றார் பட்டாசாரியார். அருகில் உற்சவர். இந்தட் தாயாரின் அவதாரம் பற்றிய பட்டாசாரியார் சொன்ன புராணக் கதையானது.

பிருகு மகரிஷி பிள்ளை வரம் வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய யாகத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் அவதரித்தார் என்கின்றனர். அவர் பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரைப் பூஜித்து வழிபட்டு வர, அவருக்கு அருள் புரிய எண்ணிய பெருமான், சிவன், பிரம்மா, பிருகுமஹரிஷி, காசியபர், கண்வர், காத்யாயன ரிஷி, ஹரித ரிஷி போன்றோர் முன்னிலையில் அம்பாளின் கரம் பிடித்து மணம் புரிந்து கொண்டார். அப்போது உள்ளே சென்ற அம்பாள் இன்று வரை படிதாண்டுவதில்லை. படிதாண்டாப் பத்தினி எனப் படும் அம்பாள் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளும் பெருமாளுடன் கூட திருவீதி உலாவுக்குச் செல்வதில்லை. ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்ரீவேதாந்த தேசிகருக்காகப் பொன்மழை பொழியச் செய்தாள் பெருந்தேவித் தாயார். வேதாந்த தேசிகரின் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை எவ்விதமாவது அவமானப் படுத்த எண்ணினார்கள். காஞ்சிக்கு வந்த வறிய பிரம்மசாரி ஒருவனை வேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும் எனக் கேட்கும்படி ஏவினார்கள். அவனும் அவ்விதமே அவரிடம் சென்று பொருள் கேட்க, தேசிகரோ அம்பாளை வேண்டினார். ஸ்ரீதுதி பாடினார். அவரின் ஸ்ரீதுதிகளால் மனமகிழ்ந்த அம்பாள் அங்கே பொன்மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை நிலைநாட்டினாள்.

அது மட்டுமா? ஸ்வாமிக்குனு தயார் செய்யப் பட்ட வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளையும் தனக்கென வாங்கிக் கொண்டுவிட்டாள். பின்னர் வேறு வெள்ளித் தகடுகள் வேய்ந்த புதுக்கதவுகள் செய்து பெருமாளுக்குக் கதவுகள் பொருத்தப் பட்டது என்கின்றனர். தாயார் சந்நிதியில் இருந்து உள்பிரஹாரத்துக்கு வந்தால் அங்கே நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் போன்றோர் காணப்படுகிறார்கள். இங்கே விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே காணப்படுகிறார். இங்கிருந்து இப்போ நாம் ஏறப் போவது அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு.

இருபத்து நான்கு படிகள் என்கின்றனர். காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு தத்துவங்களையும் குறிக்கும் வண்ணம் எழுப்பப் பட்டது என்று சிலர் கூற்று. விமானம் புண்ணியகோடி விமானம். மூலவர் தேவராஜர். இவருக்கு தேவப் பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், தேவாதிராஜன். கஜேந்திர வரதன், தேவராஜப் பெருமாள், மாணிக்கவரதன் போன்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. திருப்பதியின் வெங்கடாசலபதியைக் கிருஷ்ணரின் அம்சம் என்றும் வகுளா தேவிதான் யசோதை என்றும் சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். ஒவ்வொரு வருஷமும் சித்ரா பெளர்ணமி அன்று பிரம்மா இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். சித்ரா பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பதினான்கு நாட்களும் மாலைக்கதிரவனின் கிரணங்கள் மூலவரின் பாதங்களைத் தொட்டுச் செல்லும். இவர் சொன்னால் சொன்னபடி செய்யும் பெருமாள் ஆவார்.


எப்படினு கேட்கறீங்களா? திருமழிசை ஆழ்வார் இந்த நகரில் தன் சீடனான கணிகண்ணன் என்பவருடன் வசித்து வந்தார். பல்லவ மன்னர்கள் காஞ்சியை ஆட்சி புரிந்த காலம் அது. கணிகண்ணனின் தமிழ்ப் பாடல்களின் அழகைப் பார்த்து ரசித்த மன்னர், இந்தப் பாடல்கள் தன்னைப் பற்றிப் போற்றிப் பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என எண்ண ஆரம்பித்தார். கணிகண்ணனைத் தன் அவைக்கு வரவழைத்துத் தன்னைப் போற்றிப் பாடச் சொன்னார். ‘மாதவனைப் பாடும் வாயால், மனிதர்களைப்பாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக மறுத்தார் கணிகண்ணன். மன்னன் அவரைப் பல்லவ நாட்டை விட்டே வெளியே போகச் சொல்லி நாடு கடத்தினான். கணிகண்ணனும் காஞ்சியை விட்டும் பல்லவநாட்டை விட்டும் வெளியேறினார். தன் அருமைச் சீடன் நகரை விட்டுச் செல்வது அறிந்த திருமழிசை ஆழ்வார் துக்கம் பொங்கப் பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”

என்று சொல்லிவிட்டார். திருமழிசை ஆழ்வாரும் காஞ்சியை விட்டுக் கிளம்ப பெருமாளும் ஆழ்வார் கேட்டுக்கொண்டபடிக்கு தன் பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஆழ்வாரைத் தொடர்ந்து போய்விட்டார். காஞ்சியை இருள் சூழ்ந்து கொண்டது. மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் இல்லை. மன்னன் நடுங்கிப் போனான். ஏற்கெனவே நகரம் இருளில் ஆழ்ந்திருந்தது. இப்போ இங்கே பெருமாளையே காணோம். எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். என்றாலும் இங்கே திரும்பி வந்தாரானு மட்டும் நாம இப்போ தெரிஞ்சுக்கலாமா? நாளைக்கு கணினி ஆக்கிரமிப்போ, ஆற்காட்டார் வரவோ இல்லைனா வருவேன்.

Wednesday, November 11, 2009

கடும் ஆக்கிரமிப்பு!

கடந்த பத்து நாட்களாக என்னோட கணினி கடுமையான ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இது எந்த நாட்டுச் சதி என ஆராய்ந்ததில் யு.எஸ்ஸில் இருந்து வந்திருக்கும் சிலரின் ஆக்கிரமிப்பு எனத் தெரிய வருகிறது. இதைத் தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போய்விட்டது. இதுக்காக டாடா கம்யூனிகேஷன்ஸ்காரங்க இணையத்தை இணைப்புக் கொடுக்காமல் செர்வரை டவுன், டவுன் என்றே ஒரு மூணு நாள் ஓட்டினாங்க. அப்புறமா வேறே வழியில்லாம நேத்திக்கு இணைப்பைக் கொடுத்துட்டாங்க. ஆனால் நமக்கு கணினியே கிடைக்கலையே! ஆண்டவா, இந்த சோகக்கதையை யார் கிட்டே போய்ச்சொல்றது?? நாளைக்குக் கணினி கிடைச்சாத் தான் கஞ்சி வரதப்பர் வருவார். மெதுவா வரேன், அது வரையில் எஞ்சாய் பண்ணுங்க எல்லாரும். சிஷ்யகே(கோ)டிங்க எல்லாம் கொஞ்சம் பொறுத்துக்குங்கப்பா!

Monday, November 2, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!


மலையாக மாறிய கஜேந்திரனின் மேல் பெருமாள் எழுந்தருளி இருப்பதால் மேலே பல படிகள் ஏறிச் சென்றே பெருமாளைத் தரிசிக்கவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு மாடக்கோயில் என்றே சொல்லலாம். இந்தக் கோயிலுக்கு தேவகுரு பிரஹஸ்பதியும் வந்து வழிபட்டிருக்கிறார். இந்திரன் கொடுத்த சாபத்தால் ஏழ்மை நிலையடைந்த பிரஹஸ்பதிக்கு இங்கேதான் சாப விமோசனம் கிடைத்தது என்கின்றனர். ஐந்து பிராஹாரங்களுடன் இருக்கும் இந்தக்கோயில் கட்டுமலை அமைப்புடன் கூடியது. கட்டுமலைகளை முறையே வாரணகிரி அத்திகிரி எனச் சொல்லுகின்றனர். முதலில் மேலே ஏறுவது வாரணகிரியில். அங்கே அழகிய சிங்கரைத் தரிசனம் செய்து கொண்டே பின்னர் அத்திகிரிக்கு இன்னும் மேலே ஏற வேண்டும். மேலே ஏறினால் தேவராஜப் பெருமாள் என்ற பெயரில் மூலவர் எழுந்தருளி உள்ளார். ஆனால் இங்கே உற்சவர் ஆன வரதராஜருக்கே சிறப்பு அதிகம். அதோடு இந்தக் கோயிலில் தாயாருக்குச் சிறப்பும், செல்வாக்கும் அதிகம் என்கின்றனர். ஆகையால் முதலில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கவேண்டும். அதுக்கு முன்னால் அத்தி வரதர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அத்தி வரதர் மிகவும் பிரபலமானவர். அவரை நாம் தினமும் தரிசிக்க முடியாது. அவர் இருப்பதும் வெளியே ஏதோ சந்நிதியில் இல்லை. கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே உள்ள அநந்த சரஸ் என்னும் தீர்த்தத்தில் உள்ள நீராழிமண்டபத்தின் அடியில் நீருக்குள்ளே நிரந்தரமாய் சயனக் கோலத்தில்வெள்ளிப் பேழையில் இருப்பவர் அத்தி வரதர். பெரிய அத்திமரத்தால் செய்யப் பட்ட இவர் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் உடல் வெப்பத்தால் தகிப்பதாகவும், தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங்களில் திருமஞ்சனம் செய்யவேண்டும் என்று பட்டாசாரியார் ஒருவரது கனவில் வந்து சொன்னதாகவும், தினமும் திருமஞ்சனம் மூன்று வேளை செய்ய முடியாவிட்டால், தன்னை நிரந்தரமாய் அநந்த சரஸில் மூழ்க வைக்கும்படியும் பெருமாள் சொன்னதாகவும், நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்துத் தினமும் மூன்று வேளை திருமஞ்சனம் செய்ய முடியாது என்பதால் வரதரை நீரில் மூழ்கும்படிச் செய்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. மற்றோர் தகவலின் படி கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் வசம் இந்தக் கோயில் போய்விட, இங்கே இருந்த மூல விக்ரஹங்கள் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டன/கடத்தப் பட்டன. நரசிம்மர், ஹரித்ராதேவி தாயார், வரதர் போன்ற அனைவரும் பாடலிபுத்திரம் போய்விட, சில நாட்கள் கோயில் வழிபாட்டிலேயே இல்லை எனச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் கோயிலில் ஏற்கெனவே வழிபாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில், உற்சவர் இல்லையே என கோயிலின் பட்டர் ஒருவரும் ராமாநுஜரும் கூடி யோசித்து அத்திமரத்தால் வரதராஜரின் சிலா உருவை உருவாக்கியதாகவும், அந்நியர் கண்களில் இருந்து தப்பவேண்டி அநந்த சரஸில் வைத்திருக்கலாமெனவும் சொல்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப் பட்ட அத்திவரதர் நீருக்குள் போய் மறைந்தார். இனி மூலவரும் இல்லை, உற்சவரும் இல்லையே என்ன செய்வது? என யோசித்த அர்ச்சகர்களுக்கு பெருமாளே மீண்டும் கனவில் வந்து பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே இன்னொரு வரதர் இருப்பதாகச் சொல்லி அவரைக் கண்டு பிடித்துப் பிரதிஷ்டை செய்யச் சொல்லி இருக்கின்றனர். அவரைக் கண்டுபிடித்து இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து எழுந்தருளப் பண்ணி இருக்கின்றனர். அத்தி வரதரை பெருமாளின் ஆக்ஞைப்படியே நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனைகள் செய்து பின்னர் மீண்டும் நீருக்குள்ளேயே விடுவார்கள்.

கடைசியாய் 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வெளியே வந்திருக்கார். (அட, நாங்க செகந்தராபாத்தில் இல்லை இருந்திருக்கோம்?) மீண்டும் 2019- வருவாராம். ஹிஹிஹி, இருக்கோமோ, இல்லையோ? யாருக்குக் கொடுத்து வைக்கிறதோ தெரியலை, போகட்டும்! ஜெயஸ்ரீ கேட்ட சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சனர் இங்கே தான் குளக்கரையில் சேவை சாதிக்கிறார். மிகப் பெரிய சக்கரத்தாழ்வார் என்று சொல்கின்றார்கள். அநந்த சரஸ் தீர்த்தம் தவிரவும் வேகவதி ஆற்றையும் சேர்த்து மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வேணுகோபாலன், பூவராகன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தை நம்மாழ்வார் பெயரில் ஆழ்வார் வீதி என அழைக்கின்றனர். பெருமாள் கருடசேவையின் போது இந்த ஆழ்வார் வீதிக்குத் தான் முதலில் வருகின்றார். மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இன்னும் பல அடியார்கள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரையும் தரிசித்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமானது இங்கே உள்ள அம்மாள் காலட்சேபக் கூடம். வேதாந்த தேசிகரின் குருவான நடாத்தூர் வரதாசாரியார் என்பவர் தினமும் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார்.
அவர் செய்யும் நைவேத்தியங்களில் பாலும் இடம் பெறும். சூடாகக் காய்ச்சப்பட்ட பாலைச் சூடு போக நன்கு ஆற்றி, ஆற்றி இளஞ்சூடாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.. ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி சூடு பொறுக்காது எனக் கவனமாகச் செயல் படுவாளோ அதைப்போல் கவனமாகவும், பொறுமையாகவும் தினமும் இதைச் செய்து வந்ததால் பெருமாளே இவரை, “அம்மையே” என அழைத்ததாகவும், அது முதல் இவர் பெயர் நடாத்தூர் அம்மாள் என அழைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர்.

நாலாம் பிரஹாரத்தில் மடைப்பள்ளி. அங்கிருந்து பெருந்தேவி தாயார் சந்நிதிக்குப் போகும் வழியில் மீண்டும் பிரசாத விநியோகம் நடந்தது. இதுவும் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு மடைப்பள்ளியில் இருந்து வந்ததே. ஆனால் வெளியில் வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் கேட்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் தலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் கேட்கலை, நாங்களாகவே தீர்மானம் பண்ணிக் கொடுத்தோம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை விநியோகிக்கப் பட்டது. எந்தப் பெருமாள் கோயிலுக்கு எப்போது சென்றாலும் பிரசாதம் கிடைக்காமலோ அல்லது சாப்பிடாமலோ வரவே முடியாது. காக்கும் கடவுள் என்பதாலோ என்னமோ பெருமாள் கோயில்களுக்குப் போனால் வயிற்றைக் கவனிச்சுட்டுத் தான் அனுப்பறார் பெருமாள். இனி பெருந்தேவித் தாயாரின் சந்நிதி. அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். நிஜமாவே காஞ்சியைப் பத்தி ஓரளவு சுருக்கமாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, விரிவா எழுத ஆரம்பிச்சால் சிதம்பர ரகசியத்தை விடப் பெரிசாய் வரும்.

ஒண்ட வந்த பிடாரியா, ஊர்ப்பிடாரியா??

ரிமோட்டைக் குடு,

மாட்டேன், எனக்கு விஸ்வரூபம் சீரியல் பார்க்கணும்.

அது ஒம்போது மணிக்குத் தானே, இப்போக் கொடு,

இப்போ ஆரம்பிச்சுடும், ராஜ் டிவியிலே சீக்கிரம் ஆரம்பிக்கும்.

க்ர்ர்ர்ர்ர்ர் கொடுன்னா, நான் இந்த சீரியல் பார்த்துட்டு இருக்கேனில்லை?

பாருங்க, யார் வேண்டாம்னது?? நீங்கதானே இப்போ விளம்பர இடைவேளைனு சானல் மாத்தினீங்க? அது மட்டும் பரவாயில்லையா?

விளம்பர இடைவேளைம்போது இந்த சானலில் வர சீரியல் பார்ப்பேன்.

எத்தனை சீரியல் பார்ப்பீங்க?

ஏன்? உனக்கு ஒண்ணும் கம்ப்யூட்டரில் வேலை இல்லை? யாரும் மாட்டிக்கலையா சாட்டிங்குக்கு?

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஏன், நான் இருந்தா உங்களுக்குக் கஷ்டமா இருக்கோ?

நீ போய் உன்னோட எழுத்து வேலை ஏதும் இருந்தாப் பாரு, அது சரி, ராஜகோபாலன் போன் பண்ணினார் போலிருக்கே? அவருக்கு அனுப்ப மறந்துட்டியா?

அவர் ஒண்ணும் அதுக்கு போன் பண்ணலை. வேறே சந்தேகம் கேட்டுட்டு இருந்தார், அதான் நீங்க தான் கேட்டுண்டு இருந்தீங்களே?

எங்கே? நீ பேசிண்டிருந்ததிலே சீரியல்லே என்ன பேசிண்டாங்கங்கறதே புரியலை, நீ பேசினதும் என்னனு புரியலை. உள்ளே போய்ப் பேச மாட்டியோ??

நான் டிவி பார்க்க வந்தாலே உங்களுக்குப் பிடிக்கலை..

நான் உன்னோட கம்ப்யூட்டர் கிட்டே வரேனா?

நான் வேண்டாம்னு சொல்லலையே?

எங்கே? கொஞ்சம் தூசி தட்டிக் கொடுப்போம்னா, குய்யோ, முறையோனு அலறுகிறே??

ஆமாம், முன்னாடி தூசி தட்டறேன்னு எல்லா கனெக்ஷனையும் எடுத்துட்டுத் திரும்பப் போடறதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடுத்து. போன தடவை லோகல் ஏரியா கனெக்ஷனே வரலை. அப்புறம் எந்த வயர் விட்டுப் போயிருக்குனு ஆராய்ச்சி பண்ணிண்டிருந்தீங்க??

கண்டு பிடிச்சேனா இல்லையா? அதுக்குள்ளே டாடா கம்யூனிகேஷன்ஸ் ஃபீல்டு இஞ்சினியரைக் கூப்பிட்டு, ஒரே அமர்க்களம் பண்ணிட்டே.

அது சரி, விஸ்வரூபம் இன்னும் ஆரம்பிக்கலை??

ஆரம்பிக்கலையா?? முடிஞ்சுடுத்தே? இத்தனை நாழி என்ன நடந்ததுனு நினைக்கறே??

சரியாப் போச்சு போங்க, நான் சரியாவே பார்க்கலை! அந்த ருக்குவுக்குக் கல்யாணம் ஆயிடுத்தா?

ருக்குவுக்கும், வெங்குட்டுவுக்கும் கல்யாணம் ஆகி ஆலத்தி எடுத்து உள்ளே அழைச்சாங்களே? பார்க்கலையா?

ம்ஹும் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை, எப்போவோ சீரியல் பார்க்க வரேன், அதுவும் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு, அதுவும் சரியாப் பார்க்க முடியாம.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அதான் முன்னாடி வந்தது தானே, இது ஒண்ணும் புதுசா வரலையே??

எங்கே?? அப்போவும் சரியாப் பார்க்கமுடியலை, அதோட முடிவும் சொல்லாம பட்டுனு நிறுத்திட்டாங்க, இப்போவாவது முடிவு சொல்றாங்களானு பார்க்கவேண்டாமா? இப்போவும் பார்க்கமுடியலைனா??? ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்!

என்ன பார்க்க முடியலை, நீ பார்க்கலைனா நான் என்ன பண்றது?? நான் கோலங்கள் பார்க்கிறதைக் கூட விட்டுட்டேன் உனக்காக. இந்த நேரத்தில் நான் கோலங்கள் தான் பார்ப்பேன். ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரியை விரட்டின கதையா!!!!!!...............

என்னது நான் பிடாரியா??? எங்கே, என்னைப் பார்த்துச் சொல்லுங்க!

பதிலே வரலை, இதுக்கு மட்டும் காதே கேட்கலை போலிருக்கு. ஊர்ப் பிடாரி யாரு, ஒண்ட வந்த பிடாரி யாருனு புரிஞ்சிருக்குமே! இன்னிக்கு இதான்! ஒரு வாரம் முன்னாலே நடந்தது இது! இரண்டு நாளா இணையமும் இல்லை, இணையம் பக்கம் வரவும் முடியலையா, எதுவுமே அப்லோட் பண்ணலை. நாளைக்குப் பார்க்கலாம்.

Saturday, October 31, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! 1


நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்றும், ஸ்ரீஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீவித்யையை உபதேசித்ததும், சக்தி பீடங்களில் ஒன்றுமானது காஞ்சி என முன்னரே பார்த்தோம். காஞ்சி ஸ்ரீமந்நாராயணனின் இடுப்புப் பகுதியாகத் திகழ்வதாய்ச் சொல்லுவார்கள். அயோத்தி தலையாகவும், காசி மூக்காகவும், மதுரா கழுத்தாகவும், ஹரித்வார் மார்பாகவும், துவாரகை தொப்புளாகவும், அவந்தி காலடியாகவும் சொல்லப் படும். பஞ்சாமிர்த க்ஷேத்திரங்களில் ஒன்றாயும் சொல்லுவார்கள் காஞ்சியை. மற்றவை திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி, திருநாராயணபுரம் என அழைக்கப் படும் மேல்கோட்டை. ஸ்ரீ ராமாநுஜர் திருமஞ்சன கைங்கர்யம் இங்கே செய்து வந்த வேளையிலேயே பரந்தாமன் வைணவத் தலைமையை அவர் ஏற்கும் பொருட்டு ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி வைத்தான் என்றும் சொல்லுவார்கள். பரந்தாமனுக்கு இணக்கமான ராமாநுஜரைத் தியாகம் செய்ததால் தியாக மண்டபம் எனவும் வரதராஜப் பெருமாள் கோயில் அழைக்கப் படுகிறது.

பரமஞாநிகள் வாழ்ந்த இடமான காஞ்சியில் அருள் பாலிக்கும் ஸ்ரீவரதராஜப் பெருமாளைக் கிருத யுகத்திலேயே பிரமன் வழிபட்டதாகச் சொல்கின்றனர். திரேதா யுகத்தில் கஜேந்திரனும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும் கலியுகத்தில் அநந்த சேஷனும் வழிபட்டனர். சரஸ்வதியின் கோபத்தைப் பரந்தாமன் போக்கிய தலம் இது. நாரதர், ஆதிசேஷம், பிருகு முனிவர், இந்திரன் ஆகியோரும் வழிபட்டிருக்கின்றனர். மஹாபாரதத்தில் குறிப்பிடப் படவில்லை என்றாலும் வில்லி பாரதத்தில் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையில் காஞ்சிபுரம் வந்து தீர்த்த ஸ்நாநம் செய்து மற்றும் ஏழு நதிகளில் நீராடியதாயும் சொல்லப் பட்டுள்ளது. பொய்கை ஆழ்வார், ஸ்ரீஸ்வாமி தேசிகன் ஆகியோர் அவதரித்தது இங்கேயே. பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார், கூரத்தாழ்வார், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீநிமாந்த மஹாதேசிகர், அப்பய்ய தீக்ஷிதர், புரந்தரர், அப்புள்ளார் நடாத்தூர் அம்மா ஆகியோரால் வழிபாடுகள் செய்யப் பட்டும் போற்றிப் பாடப்பட்டும் சிறப்புப் பெற்ற தலம்.

காஞ்சியில் நடை அழகு, வடை அழகு, குடை அழகு என்று சொல்லுவார்கள். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலின் பிரசாதமான மிளகுவடையும், அருமையாக இருக்கும் என்பதோடு பல நாட்கள் ஆனாலும் வீணாய்ப் போகாது என்பது இதன் தனிச்சிறப்பு. கோயிலின் குடையின் அழகும், வரதராஜர் பவனி வரும் பல்லக்கின் பல்லக்குத் தூக்கிகள் நடக்கும் நடை அழகும் மிகவும் பிரசித்தி பெற்றவை. வடை பிரசாதம் நேரடியாகக் கோயில் மடப்பள்ளியில் இருந்து வாங்கிச் சாப்பிடணும். எங்களுக்கு அன்று பிரசாதமாகக் காஞ்சிபுரம் இட்லி கிடைத்தது. சந்நிதிக்குள் நுழையும் இடத்தில் அன்றைய காலை வழிபாட்டின் நைவேத்யப் பிரசாதத்தை பட்டாசாரியார் விநியோகித்துக் கொண்டிருந்தார். அபூர்வமாய்க் கிடைத்தது. வெளியே ஸ்டால்களில் விற்பது பிரசாதம் அல்ல.

வரதராஜப் பெருமாள் கோயில் வாசலில் போய் இறங்கியதுமே பலவிதமான துணிக்கடைகள். எல்லாமே கைத்தறிக் கடைகள் ஒவ்வொரு முறை செல்லும்போது பார்ப்பேன். பெரிய காஞ்சியை விட இந்த விஷ்ணு காஞ்சியிலேயே நிறையக் கடைகள் கைத்தறித் துணி விற்பவையாக உள்ளன. கடைகள் திறந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே தரிசனத்துக்குச் சென்றோம். தல வரலாறை பிரம்மாண்ட புராணத்தில் காணலாம் என்று சொல்கின்றனர். ஹஸ்திகிரி வரலாறு எனவும் சொல்லப் படுகிறது. பிருகு முனிவர் கேட்க நாரதர் சொன்ன அந்தத் தல வரலாறு பின் வருமாறு:

திருமகளுக்கும், கலைமகளுக்கும் யார் பெரியவங்க என்பதில் போட்டி வந்தது. பிரம்மாவிடம் போய்ச் சந்தேகம் கேட்க திருமகளே பெரியவள் என பிரம்மா தீர்ப்புச் சொல்லிவிடுகிறார். சரஸ்வதிக்குக் கோபம் வந்து சிருஷ்டிக்குப் பயன்படுத்தும் சிருஷ்டி தண்டத்தை எடுத்துக் கொண்டு பிரமனை விட்டுப் பிரிந்து விடுகிறாள். சிருஷ்டி தண்டம் இல்லாமையால் படைப்புத் தொழிலே நின்று போக மஹாவிஷ்ணுவின் உதவியை நாடுகிறார் பிரமன். அவரை நூறு அஸ்வமேத யாகம் செய்யச் சொன்ன விஷ்ணு, பின்னர் திவ்யக்ஷேத்திரமான காஞ்சியில் ஒரு முறை செய்தாலே நூறு முறை செய்தாற்போல் ஆகும் எனச் சொல்லி அங்கே போகச் சொல்ல, பிரமனும் காஞ்சிக்கு வருகிறார். காஞ்சியில் யாகத்தைத் துவக்கிய பிரமன் சரஸ்வதியை யாகம் செய்யத் துணைக்கு அழைக்க, சரஸ்வதி வர மறுக்கிறாள். உடனே சாவித்திரியின் உதவியோடு யாகத்தைத் துவக்கினார் பிரமன். கோபம் கொண்ட சரஸ்வதி, அக்னி, அசுரர்கள் மூலம் யாகத்தைத் தடுக்க முயல, விஷ்ணுவின் உதவியால் அவை தடுக்கப் படுகின்றன. ஆனால் சரஸ்வதியோ நதியாக மாறி தனது நீர் உருவெடுத்து வேகமாய் வேகவதியாகப் பெருக்கெடுத்து ஓடி வருகிறாள். அவள் செய்யப் போவதை உணர்ந்த விஷ்ணு அங்கே தம் கால், கைகளைப் பரப்பிப் படுத்துக் கொண்டு அணை போல் குறுக்காகப்ப் படுத்துக் கொண்டு வெள்ளத்தின் வேகத்தைத் தடுத்தார். தன் வழியில் குறுக்கிட்ட விஷ்ணுவைக் கண்டு நாணம் அடைந்த சரஸ்வதி ஒரு மாலை போல் அவரைச் சுற்றிக் கொண்டு போய் பூமியில் அந்தரவாஹினியாக மறைந்தாள். யாகம் இனிதாய் முடிவடைய, யாகத்தில் ஜோதிப் பிழம்பாய், தீபப் பிரகாசராய் விஷ்ணு தோன்றினார். சிருஷ்டி தண்டத்தை பிரமனிடம் ஒப்படைக்க, பிரமன் அவரை அங்கேயே புண்யகோடி விமானரூடராக எழுந்தருளப் பிரார்த்திக்கிறார். பெருமாளும் அவ்வண்ணமே அங்கே எழுந்தருளுகின்றார்.

சிருஷ்டி தண்டத்தை பிரமனுக்கு அளித்த நாள் கிருத யுகம் ஐந்தாவது மன்வந்தரத்தில் யுவ வருஷம், விருஷப மாதம், சுக்லபக்ஷ சதுர்த்தசி அஸ்வ நக்ஷத்திரம் என்ரு சொல்லுவார்கள். மேற்கண்ட கேள்வியை இந்திரனிடமும் கேட்டதாகவும் இந்திரனும் திருமகளையே உயர்த்திப் பேசியதால் சரஸ்வதி அவனை யானையாக மாறும்படி சபித்ததாகவும், இன்னொரு வரலாறு கூறுகிறது. மகாலக்ஷ்மி இந்திரனை பிரஹலாதனிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்று ஸ்ரீவரதராஜ க்ஷேத்திரத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெறும்படிச் சொன்னதாகவும், அதன் படி இந்திரன் இங்கே வந்து சாப விமோசனம் பெற்றதாகவும் கூறுகின்றனர். இந்திரனுக்கு ஸ்ரீநரசிம்மர் பிரத்யட்சமாகி அவனுடைய கஜரூபத்தை இரண்டாய்ப் பிளந்து சுயரூபத்தை அருளினார். அந்த நரசிம்ம மூர்த்தி, கஜரூபத்தையே மலையாகக்கொண்டு அங்கேயே குகை நரசிம்மராக எழுந்தருளி இருக்கிறார். ஹஸ்தி என்னும் யானை மலையாக மாறியதால் இந்தப்பகுதி ஹஸ்திகிரி எனப் படுகிறது.

நாங்க எடுத்த படம் சரியா வரலை என்பதாலும் அப்லோட் ஆவதில் நேரம் எடுப்பதாலும் போடமுடியவில்லை. வேலூர் ஜலகண்டேஸ்வரர், ரத்தினகிரி படங்கள் முடிந்தால் போடுகிறேன். :( காஞ்சியைக் குறித்த தகவல்கள் இன்னொரு புத்தகம் எழுதலாம் போல் நிறையவே இருக்கின்றன.

Friday, October 30, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பன் 2


இப்போ இருக்கும் மாமரம் பழைய மாமரம் இல்லைனு ஆதாரபூர்வமாய்த் தெரிய வந்தது. ஆனாலும் இதன் பழங்களும் வித்தியாசமான சுவையோடு இருக்கு, பழைய மரத்தின் கிளை அல்லது விதையிலிருந்து வந்ததுனு சொல்றாங்க. இந்த விஷயம் எனக்குப் புதுசு. போகட்டும். மூலவர் தழுவக் குழந்த நாதரையும், மூலஸ்தானத்திலேயே அம்மன் ஈசனை அணைத்த கோலத்திலேயே லிங்கம் காட்சி கொடுப்பதையும் கவனித்துத் தரிசனம் செய்யவேண்டும். அம்பாளே பிரதிஷ்டை செய்த மணல் லிங்கம் என்பதால் இந்த லிங்கத்திற்கு தேவிக லிங்கம் என்று பெயர். அபிஷேஹம் கிடையாது. காமாக்ஷி அம்மன் கோயிலின் ஸ்ரீசக்ரத்தை ஈசனை ஸ்தாபனம் செய்யச் சொன்னாளாம் அம்பிகை. முதன்முதல் இங்கே ஸ்ரீசக்ரம் ஸ்தாபனம் செய்தது ஈசனே என்றும், அம்பாளே இந்தப் பீடத்திற்குக் காமகோடி பீடம் என்ற பெயரில் விளங்கட்டும் என்று சொன்னதாகவும் தெரியவருகிறது. பூஜை முறைகளும் துர்வாச வடிவத்தில் ஈசனையே வகுத்துக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டாள் என்கின்றனர். ஈசன் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரத்திற்கே காமாக்ஷி கோயிலில் வழிபாடுகள், ஆராதனை எல்லாம் நடக்கும். இந்த ஸ்ரீசக்ரம் கிருத யுகத்தில் துர்வாசரும், த்ரேதாயுகத்தில் பரசுராமரும், த்வாபர யுகத்தில் தெளம்யரும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் பொலிவூட்டி வழிபட்டிருக்கின்றனர்.

பொதுவாக சிவசக்தி பிரிவதில்லை என்பதால் எல்லாச் சிவன் கோயில்களிலும் லிங்கத்தின் பக்கம் அம்மன் இருப்பது ஐதீகம். ஆனால் ஏகாம்பரேஸ்வரரின் லிங்கத்திலேயே அம்மனும் சேர்ந்து காட்சி கொடுக்கிறாள். அதோடு காஞ்சியில் எந்தச் சிவன் கோயிலிலும் அம்பிகை சந்நிதி கிடையாது. சிற்பங்களும், அழகாய் இருந்தாலும் படம் எடுப்பது தடை செய்யப் பட்டுள்ளது. வாரம் ஒருநாள் அம்மன் ஈசனைத் தழுவிய கோலம் தெரியும்படியான கவசத்தினால் அலங்கரிக்கின்றனர் என்றும் சொல்கின்றனர். உற்சவ அம்மனுக்கு ஏலவார் குழலி என்று பெயர். இந்தக் கோயிலில் தற்சமயம் இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் முன்னாட்களில் நூற்றுக் கால் மண்டபமாக இருந்து, பின்னர் பிற்காலச் சோழர்களால் ஆயிரக்கால் மண்டபமாய் மாற்றப் பட்டது என்றும் சொல்கின்றனர். தற்சமயம் காணப்படும் தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப் பட்டது என ஒரு கல்வெட்டுக் கூறுவதாயும் தெரியவருகின்றது. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு கண் பார்வை இங்கே கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.

இங்கே உள்ள கொடிமரத்தின் முன்னே, சிவகங்கை தீர்த்தத்தின் தென்கரையில் உள்ளது கச்சிமயானம் எனச் சொல்லப் படும் சந்நிதி. இங்கேதான் யாகசாலையில் பண்டாசுர வதம் நடந்தது எனச் சொல்லப் படும். சிவகங்கைத் தீர்த்தமே அம்மனும் ஈசனும் வளர்த்த நெய்க்குண்டம் தான் என்று சொல்லுகிறார்கள். இந்தக் கச்சி மயானத்தின் லிங்கத் திருமேனி யாகசாலை நெருப்பிலிருந்து உண்டானது என்றும் சொல்கின்றனர். இங்கே உள்ள விநாயகர் விகட சக்ர விநாயகர் என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். வெளிப்பிராஹாரம் பெரியதாய் உள்ளது. நாங்க நிறையத் தரம் வந்து சுத்தி இருப்பதாலும், மேலும் பார்க்க, நடக்க நிறைய இடங்கள் இருப்பதாலும் வெளிப்ரஹாரம் சுத்தவில்லை. வெளியே வந்து வண்டி இருக்குமிடம் தேடினோம். நம்ம ஆகிரா இருக்கும் தெருவில் தான் வண்டியை நிறுத்தி இருந்தாங்க. அங்கே போய் உட்கார்ந்து கொண்டு மத்தவங்க வரதுக்குக் காத்திருந்தோம். எல்லாரும் வந்ததும், நாங்க கிளம்பினது திருப்புட்குழி. ஆனால் நாம் காஞ்சிபுரத்தின் வரதராஜரைப் பார்க்கலையே இன்னும். வரதராஜரைப் பார்த்துட்டுத் தான் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கே வந்தோம். ஆனால் வசதிக்காக் ஏகம்பனைப் பத்தி எழுதியாச்சு. அடுத்து கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா!

படங்களே கொஞ்சம் தான் எடுக்க முடிஞ்சது. அதுவும் சரியா அப்லோட் ஆகலை, என்னமோ எந்தப் படமும் போடமுடியலை, ஓரளவுக்கு சிவகங்கை தீர்த்தம் படம் வந்திருக்கு, அதைப் போட்டிருக்கேன்.

Thursday, October 29, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பர்! 1


திருக்கச்சி ஏகம்பம் என அழைக்கப் படும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ காஞ்சி நகரைப் பற்றிய இன்னும் சில பெருமைகளைப் பார்ப்போமா?

முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சியும் ஒன்று என ஏற்கெனவே நாம் பார்த்தோம். அதோடு பஞ்ச பூதத் தலங்களில் பூமி அல்லது மண்ணுக்குரிய தலமாகவும் காஞ்சி சொல்லப் படுகிறது. இங்கே மூலஸ்தானத்தில் இருப்பவர் மணலால் பார்வதி பிடித்து வைத்த லிங்கமே எனவும் சொல்லப் படுகிறது. பிரளய காலத்திலும் அழியாத தலமாகச் சொல்லப் படுகிறது. ஆகையால் பிரளய சித்து எனவும் அழைக்கப் படுகிறது. அம்பிகை கம்பை நதியின் வெள்ளப்பருக்கைக் கண்டு அஞ்சி இறைவனைத் தழுவியதால் சிவபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. இங்கே பிரமனும் தவம் செய்திருக்கிறான். அந்தக் கதை வரதராஜர் கோயில் பத்திச் சொல்லும்போது வரும். ஆகக் கூடி பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இங்கே வாசம் செய்ததாலும், இன்னமும் திரிமூர்த்திகளின் அருள் இங்கே நிறைந்து இருப்பதாலும் திரிமூர்த்தித் தலம் அல்லது திரிமூர்த்தி வாசம் எனவும் அழைக்கப் படுகிறது.

கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே பழங்காலச் சோழர்களுக்கு இது தலைநகராய் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. அதன் பின்னரே பல்லவர்களும், அதற்குப் பின்னர் பிற்காலச் சோழர்களும் காஞ்சியைத் தலைநகராய்க்கொண்டு ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய,( நாம் இன்றும் படிக்கும்) பரிமேலழகர், சக்ரவர்த்தியாக வட நாட்டில் ஆட்சி புரிந்த ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் முன்னோடி காஞ்சி பல்கலைக் கழகம் எனவும், ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் இங்கே தான் கல்வியும், ஞானமும் பெற்றுச் சிறப்படைந்த தலம் இது. இத்தனை பெரியோர்களைச் சான்றோர்களாகக் கொண்ட காஞ்சிக்கு, “கல்வியிற்சிறந்த காஞ்சி” என்னும் பெயர் கிடைத்ததில் ஆச்சரியமே இல்லை அல்லவா?

இங்கே உள்ள சிவ காஞ்சியில் நாவுக்கரசர் காலத்துக்கு முன்பிருந்தே ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டிருந்திருக்கிறார். அதற்குச் சான்றாக இந்தக் கோயில் வளாகத்திலேயே சில கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கற்றளிக் கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப் பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பின்னர் கற்றளியாக மாறி இருக்கக் கூடும் எனவும், அதற்கு முன் செங்கல்லால் கட்டப் பட்ட கோயில் ஒன்று இருந்திருக்கிறது என்றும் அந்தக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது. எப்படி ஆனாலும் கிட்டத் தட்ட ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வருமாறு சொல்லப் படுகிறது.

ஈசனின் கண்களை விளையாட்டாகப்பொத்திய அம்பிகை மீண்டும் ஈசனை அடைய வேண்டி பூவுலகுக்கு வர நேர்ந்தது. முதலில் மாங்காடு என்னும் இடத்தில் பஞ்சாக்னி வளர்த்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த அம்மை, பின்னர் ஈசனைப் பூஜிக்க வேண்டி, காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றுக்கு அருகே மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தாள். அங்கேயும் ஈசனின் சோதனை தொடர்ந்தது. அம்பிகை மாமரத்தின் நிழலில் இருந்து ஈசனை வழிபட்டு வந்தாள். அப்போது அங்கேயும் வெப்பம் அதிகரிக்கச் செய்தார் ஈசன். தன் சகோதரனின் உதவியை நாடிய அம்பிகைக்கு ஈசனின் சடாமுடியில் இருந்த சந்திரனின் அமுத கிரணங்களால் குளிர்ச்சி ஊட்டினார் விஷ்ணு. அப்போது கங்கையை ஏவ, கங்கை தன் சகோதரி என்பதால் அவளைச் சமாதானம் செய்து கொண்டாள் அம்பிகை. ஆனால் வேகவதியாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்குமாறு ஈசன் செய்ய தான் மணலால் கட்டிய லிங்கம் அடித்துச் சென்றுவிடுமோ என பயந்த அம்பிகை தன் இரு கைகளாலும் அந்த லிங்கத்தை அணைத்துக் கொண்டார். அம்பிகையின் ஸ்பரிசம் பட்டதுமே உள்ளம் குளிர்ந்த ஈசன், அவளுக்குக் காட்சி கொடுத்தார். அம்பிகை தழுவியதால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரும் பெற்றார் ஈசன்.

இந்தக் கோயிலின் தல விருஷம் மாமரம். நான்கு கிளைகள் கொண்ட இந்த மாமரத்தில் நான்கு பருவங்களில் நான்கு வித சுவையோடு கூடிய வித்தியாசமான மாங்கனிகள் பழுக்கும். நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் எனச் சொல்லப் படுகிறது. இந்த மாமரம் மூவாயிரம் வருஷங்களுக்கும் முற்பட்டது என்று சொல்லுகின்றனர். நான் முதலில் பார்த்தபோது மாமரம் பரந்து விரிந்து இருந்தது. இப்போ அதன் கிளைகள் வெட்டப் பட்டுச் சுற்றிலும் கட்டடங்கள் எழுப்பப் பட்டு., நடுவில் அம்பிகையும், ஈசனும் இருக்குமிடம் ஒரு கோயில் போல் மாற்றப் பட்டு, அதற்குத் தனிச் சீட்டு என வைக்கப் பட்டு! கொடுமைடா சாமி! இத்தனையையும் பார்த்துண்டு இருக்கே, உனக்கே வேண்டி இருக்கோனு தோணுதே!

கோயிலுக்குள் நுழையும் இடம் முன்னாடி கடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இப்போக் கடைகளை அனுமதிச்சிருக்காங்க. :( படம் வெளிப் பிரகாரத்தில் மட்டுமே எடுக்க முடிஞ்சது. உள்ளே காமிராவைக் கொண்டு போக முடியலை!

Tuesday, October 27, 2009

என் பயணங்களில் - காஞ்சி காமாக்ஷி 2

காமாக்ஷி சந்நிதிக்கு நேரே அவளை வணங்கிய கோலத்தில் துண்டீர மகாராஜாவின் சந்நிதி இருக்கிறது. உற்சவ காமாக்ஷி சந்நிதியில் இருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரையிலும் மெளனமாய்ச் செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கே பிரமனால் பூஜிக்கப் பட்ட முழுதும் தங்கத்தால் ஆன சொர்ண காமாக்ஷி இருந்தாள். பிரமன் அம்பிகைக்கும், அப்பனுக்கும் திருமண உற்சவம் காணவேண்டிப் பிரார்த்திக்க, ஏகாம்பரேஸ்வரருக்கு உகந்த ஏகாம்பிகை அம்பிகையின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினாள். பின்னர் அதே போன்ற தங்கத்தாலான மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்ய அவளே பங்காரு காமாக்ஷி எனப்பட்டாள். இந்த பங்காரு காமாக்ஷியை முகமதியர் படை எடுப்பின் போது அவர்களிடமிருந்து காக்க எண்ணி, அப்போது காஞ்சி பீடத்தின் பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பங்காரு காமாக்ஷியைக் கோயில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு உடையார்பாளையம் ஜமீனுக்குக் கொண்டு சென்றார். வழியில் தஞ்சையை ஆண்ட மராட்டி அரசன் பிரதாப சிம்மனது விருப்பத்தின் பேரில் அங்கே தங்க, மன்னனின் வேண்டுகோளின்படி புதிதாய்க் கட்டப் பட்ட ஆலயத்தில் அந்த பங்காரு காமாக்ஷி பிரதிஷ்டை செய்யப் பட்டாள். காஞ்சி அர்ச்சகர்களில் சிலரே இங்கும் குடி வந்து வழிபாட்டைத் தொடர்ந்தனர். சியாமா சாஸ்திரிகள் இந்த மரபில் வந்தவரே.

பாரதம் முழுதும் கால்நடையாகவே பயணம் செய்து இந்துமதத்தின் வழிபாடுகளை ஆறுவகையாகப் பிரித்து அத்வைதத்துக்குப் புத்துயிர் கொடுத்த ஆதிசங்கரர் காஞ்சியில் காமாக்ஷியின் முன்பாக ஸ்ரீசக்ர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது காஞ்சியை ஆண்ட மன்னனிடம் அம்பாளை நடுவில் வைத்து ஸ்ரீசக்ர வடிவில் காஞ்சியைப் புனர் நிர்மாணமும் செய்யச் சொன்னார். ஸ்ரீசங்கரர் அங்கேயே மன்னனின் வேண்டுகோளின்படி சர்வக்ஞபீடமும் ஏறினார். காஞ்சியிலேயே முக்தியும் அடைந்தார். காமாக்ஷி கோயிலில் ஆதிசங்கரருக்குத் தனிச் சந்நிதியும், உற்சவர் சிலையும் உண்டு. காஞ்சிமரமே இந்தக் கோயிலின் தல விருக்ஷம் ஆகும். இந்தக் கோயிலின் ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு திசையில் அமைந்துள்ளது. இங்குள்ள எந்தச் சிவன் கோயிலிலும் அம்பாள் சந்நிதியே கிடையாது. காமாக்ஷி ஒருவளே அனைத்துச் சக்தியையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அனைத்துக் கோயில்களுக்கும் ஒரே சக்தியாக விளங்குகிறாள். கையில் கரும்பு வில்லை வைத்துக் கொண்டு காக்ஷி அளிக்கும் காமாக்ஷி அந்த மன்மதன் திரும்ப உயிர் பெறக் காரணம் ஆனவள்.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் முக்கோண வடிவக் கருவறை ஆகும். பிரகாரம் மூன்றரைச் சுற்றுக் கொண்டது. ஸ்ரீசக்ரத்தின் பிந்துமண்டலத்தில் முக்கோணத்தில் உறைபவள் என்பதைக் குறிக்கும் வண்ணம் கருவறை முக்கோண வடிவிலும், நம் உடலில் சுருண்டிருக்கும் குண்டலினி மூன்றரைச் சுற்று என்பதைச் சுட்டும் வண்ணம் மூன்றரைச் சுற்றுப் பிராகாரமும் அமைந்துள்ளது என்பார்கள். இந்தக் கோயிலில் அம்மன் பிராகாரத்தைச் சுற்றி வலம் வர முடியாது. காமாக்ஷி கோயிலின் ஒரு புறம் வரதராஜப் பெருமாள் கோயிலும் மறுபுறம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் அமைந்திருப்பது அம்பாளின் திருக்கல்யாணத்தை நினைவு படுத்துவதாக அமைகிறது. குமரகோட்டமோ எனில் காமாக்ஷி கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்து சோமாஸ்கந்த மூர்த்தியை நினைவு மூட்டுகிறது. அடுத்து அஞ்சன காமாக்ஷி எனப் பெயர் சூட்டப் பட்ட ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மியும், அவளைக் காணத் திருட்டுத் தனமாக அங்கே வந்த கள்ளனையும் காணலாமா???

ஒருசமயம் வைகுந்தவாசன் ஆன மஹாவிஷ்ணுவோடு உற்சாகமாயும், உல்லாசமாயும் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி, விளையாட்டாகத் தன் நாதனைக் கறுப்பன் என அழைக்க, மஹாவிஷ்ணுவோ, கறுப்பனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? எனக் கேட்டார். பாற்கடல் தேவியின் பொன்வண்ணத்தினால் பொன் மயமாய் ஜொலிக்க அந்த ஜொலிப்பில் மாயக் கண்ணனான மஹாவிஷ்ணுவின் நிறமும் தங்கமாய் ஜொலித்ததாயும், அதில் ஏமாந்துவிட்டதாகவும் சொன்னாள் ஸ்ரீ. மஹாவிஷ்ணுவும், இப்போது கொஞ்சம் நம் திருவிளையாடல்களைக் காட்ட நேரம் வந்துவிட்டது என எண்ணி, இவ்வுலகில் தங்கள் மேனி அழகை மெய்ம்மறந்து ரசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, “லக்ஷ்மி, உனக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ அழகாய் இருப்பதால் தானே இந்த அளவுக்குப் பெருமை? உன் அழகெல்லாம் இழந்து நீ பூவுலகில் திரிவாய்.” என்று சொல்ல, பதறிய லக்ஷ்மி, இதற்கு என்ன விமோசனம் எனக் கேட்க, இப்போது என் அருமை சகோதரி காமாக்ஷியைப் போய்க் கேள், அவள் உனக்கு உதவுவாள் என்று அனுப்பிவிடுகிறார்.

காஞ்சி வந்த லக்ஷ்மி காமாக்ஷியை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தாள். காமாக்ஷி கறுத்த லக்ஷ்மியை “அஞ்சன காமாக்ஷி “ என அன்போடு அழைத்தாள். மேலும் அவளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளிக்கப் படும் குங்குமப் பிரசாதத்தை அவர்கள் அஞ்சனகாமாக்ஷிக்குச் சார்த்தியபின்னரே இட்டுக் கொள்ளுவார்கள். இப்படி பக்தர்கள் இட்ட குங்குமத்தினால் நீ இழந்த உன் பொன் வண்ணமும் பெறுவாய் . உன் திருமேனியைத் தொட்டு வணங்கும் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் நீ வழங்குவாய்!”எனச் சொல்கிறாள். அதன்படி சாப விமோசனம் பெற்றுப் பொன் வண்ணம் அடையும் லக்ஷ்மியைக் காணவேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவுக்கு உண்டாக, அவர் எவரும் அறியாமல் திருட்டுத் தனமாய் அங்கே வர, சகோதரிக்குத் தெரியாதா என்ன?

அண்ணனைக் கண்டு அவள், வாராய் கள்ளா! என அழைக்க, மாதவனும், லக்ஷ்மியும் சேர்ந்தனர். ஆகவே இங்கே அஞ்சனகாமாக்ஷி, செள்ந்தர்ய லக்ஷ்மி ஆகியோரோடு மஹாவிஷ்ணுவையும் காணமுடியும். ஆனால் இவை எல்லாமும் நாம் உள்ளே சென்றால்தான் பார்க்கமுடியும். வெளியே இருந்து பார்க்கமுடியாது. ஒருவேளை மஹாவிஷ்ணுவையாவது பார்த்துவிடலாம். அஞ்சன காமாக்ஷி உள்ளே காமாக்ஷிக்கு வெகு அருகிலேயே இருப்பதால் நம்மால் பார்க்க இயலவில்லை. கோயில் நிர்வாகம் தான் பக்தர்களுக்கு இவற்றைத் தரிசனம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். மஹாவிஷ்ணு இருப்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாய்க் கூறப் படுகிறது. விஷ்ணுவின் திருநாமம் கள்வர் பெருமாள் என்றே சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டிருக்கிறது.

அம்பாள் சந்நிதி நுழையும் இடத்தில் மேலே நெமிலி ஸ்ரீபாலாவின் சித்திரம் இடம்பெற்றுள்ளது. காமாக்ஷி அவதாரம் சிறப்பு வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. சக்தியின் அம்சமான காமாக்ஷி என்ற பெயரின் அர்த்தத்துக்கு பக்தர்கள் விரும்பியதைத் தருவாள் என்ற பொருளில் வரும். காமாக்ஷியின் கண்களின் திரிவேணிசங்கமமும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். கண்மணி கறுப்பு விழிகள் வெண்மை, அதில் ஓடும் செவ்வரிகள் முறையே கங்கை, யமுனை,சோனபத்ரா என்று சிலரும் /சரஸ்வதியைக் குறிக்கும் என்று சொல்கின்றனர். 24 அக்ஷரங்களைக்கொண்ட காயத்ரி பீடத்தின் நடுவே பஞ்ச பிரம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகாமாக்ஷி நம் ஐம்புலன்களையும் வசப்படுத்தி நம்மைத் தன்பால் ஈர்ப்பதற்காகவே அவதரித்திருக்கிறாள். அனைவரும் ஸ்ரீகாமாக்ஷியின் பாதங்களில் பணிவோம். அழகான காஞ்சியில் புகழாக வீற்றிடும் அன்னை காமாக்ஷி உமைக்கு நம் நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.

இதற்கடுத்துக் காலை உணவு அருந்தியபின்னர் முறையே வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் சென்றோம். முதலில் ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்துவிடுவோமா???

Sunday, October 25, 2009

என் பயணங்களில் - காஞ்சிபுரம் காமாக்ஷி! 1

சுருக்கம்னு சொன்னதும் கொத்தனார் பயந்துட்டார். நிஜமாவே சுருக்கிடுவேனோன்னு. நமக்குத் தான் அது வழக்கமே இல்லையே. இந்த ட்ராவல்ஸ்காரர் இருக்காரே, இவர் தான் இதுவரைக்கும் நாங்க போனதிலேயே சிறந்த சுற்றுலா நடத்துநர். ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டார் எல்லாரையும். முக்கியமாச் சாப்பாடு விஷயத்திலே ஏமாத்தலை. மந்திராலயம், நவ பிருந்தாவனம் முதல் முறை போனப்போ ட்ராவல்ஸ்காரர் மூன்று நாட்களும் கிட்டத் தட்ட எங்களை விரதமிருக்கச் சொல்லலை. சாப்பாடே சரியாக் கொடுக்கலை. பலரும் திண்டாடினாங்க. இங்கே அதுமாதிரி நடக்கலை. ட்ராவல்ஸ் விலாசம். கடைசியிலே கொடுக்கிறேன். இப்போ காமாக்ஷி அம்மன் பற்றிய ஒரு குறிப்பு.

சக்தி பீடங்களில் ஆகாயத் தலமாகவும், பஞ்ச பூதத் தலங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாகவும் விளங்குவது காஞ்சிபுரம். “நகரேஷு காஞ்சி” என்று பாரவி /( சிலர் காளிதாஸன் என்று சொல்கிறார்களே?? நான் படிச்சது பாரவினு தான்.) என்னும் மஹாகவியாலும், “கல்வியிற் சிறந்த காஞ்சி” என்று தமிழ்நாட்டுக் கவிஞர்களாலும், (யாருங்க சொன்னது??) புகழப்பட்ட காஞ்சி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலத்திலேயே தோன்றியது. காஞ்சி புராணமே எழுதலாம். சிதம்பர ரகசியத்துக்குப் போட்டியா அமையும். செண்பகவனம் என ஒரு காலத்தில் செண்பகக்காடாக இருந்த இடமான காஞ்சிக்குப் பல பெயர்கள் உண்டு. அதை எழுதினா மத்தது எழுத முடியாது. சுருக்கமா அம்பிகையின் நாபி விழுந்த இடம் காஞ்சி என்று சொல்லுவார்கள். மோக்ஷபுரிகளில் ஒன்றாகவும் காஞ்சி மட்டுமே தென்னிந்தியத் தலங்களில் இடம் பெற்றுள்ளது.

பாலாற்றங்கரையில் அமைந்த காஞ்சி நான்கு கோட்டங்களைக் கொண்டது. புண்ணியகோட்டம் என்னும் விஷ்ணு காஞ்சி, ருத்ர கோட்டம் என்னும் சிவகாஞ்சி, குமரகோட்டம் என்னும் சுப்ரமண்யரின் திருக்கோயில் இருக்குமிடம், காமகோட்டம் என்னும் ஸ்ரீகாமாக்ஷியின் கடைக்கண் பார்வை கிடைக்குமிடம் ஆக நான்கு கோட்டங்கள். மற்ற ஊர்க்கோயில்கள் அனைத்தும் கிழக்கோ, மேற்கோ பார்த்து அல்லது வடக்குப் பார்த்து அமைந்தால் காஞ்சியின் கோயில்கள் அனைத்துமே அன்னையின் கடைக்கண் பார்வைக்காக காமாக்ஷி அம்மன் கோயிலையே பார்த்த வண்ணம் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களின் உற்சவங்களின் போது வீதி உலா வரும் மூர்த்தங்கள் காமாக்ஷி அம்மன் கோயிலைச் சுற்றியே செல்லும் எனக் கேள்விப் படுகிறோம். மேற்குறிப்பிட்ட நான்கு கோட்டங்கள் தவிர, ஜைனகாஞ்சி, புத்த காஞ்சி என்றும் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இதில் புத்த காஞ்சியானது தற்போதைய பெரிய காஞ்சிபுரத்திலே அடங்கிவிட்டது எனவும், ஜைனகாஞ்சி அருகில் உள்ள திருப்பருத்திக்குன்றதைச் சொல்லப் படுகிறது என்றும் சொல்கின்றனர். ஜைனர்களின் கோயில்கள், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்குமிடங்கள் என இன்றும் அங்கே ஜைனர்கள் இருப்பதாயும் சொல்லுகின்றனர்.

காமாக்ஷி அம்மன் பிலத்துவாரத்தில் இருந்து தோன்றியவள் . பண்டாசுரனை அழிக்கத் தோன்றிய அன்னை, பண்டாசுரனை வதைத்ததும், அம்பாளின் கட்டளைப்படி காயத்ரி மண்டபம் அமைக்கப் பட்டு, கன்னியான அம்பிகை அங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டாள். பின்னர் அந்த மண்டபம் மூடப் பட்டு, இரவு முழுதும் அம்பிகையை துதித்தவண்ணம் அனைவரும் வெளியிலேயே நின்றார்கள். அருணோதய காலத்தில் கதவு திறக்கப் பட்டது. உள்ளே பார்த்தால் கன்யா ரூபமாய் உள்ளே சென்ற அம்பிகை, சர்வாலங்கார பூஷிதையாக, நான்கு புஜங்களுடன், பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டனர். இப்படித் தோன்றிய காமாக்ஷியைத் தான் இன்றும் நாம் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஈசனைத் திருமணம் செய்து கொள்ளுவதற்காகத் தன்னைச் சுற்றிப் பஞ்சாக்கினி வளர்த்து தவத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை மணலால் சிவலிங்கம் பிடித்துப் பூஜை செய்ய, இறைவன் அம்பிகையின் பக்தியைச் சோதிக்க எண்ணிக் கம்பாநதியில் வெள்ளப் பெருக்கை உண்டாக்க, சிவலிங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் போல் ஆகிவிட்டது. அம்பிகை மாசி மாதமும், பங்குனி மாதம் கூடும் சமயம் இருக்கும் விரதமான காரடையான் நோன்பு இருந்து, மணல் லிங்கத்தை அணைத்தவண்ணமே வழிபாடுகள் செய்ய, இறைவன் அருள் கிடைத்தது. அடுத்து நாம் பார்க்கப் போகும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில், லிங்கத்தை அணைத்த வண்ணமே அம்பாள் இருக்கும் மூலஸ்தானத்தைத் தான் பார்க்கப் போகிறோம்.

ஆதிசக்தியை ராஜராஜேஸ்வரியாக வழிபட்ட பிரம்மன் பூஜித்த தாமரை மலர் ஒன்று மானுடனாக மாறி விண்ணில் இருந்து பூமிக்கு வர, அவனுக்கு ஆகாச பூபதி என்ற பெயருடன் காஞ்சியை ஆண்டுவரச் செய்தனர். அவன் குழந்தைப்பேறுக்காகத் தவம் இருக்க விநாயகரை அவனுக்கு மகவாகப் பிறக்கும்படி அருளுகின்றாள் அம்பிகை. குழந்தைக்குத் துண்டீரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த வேளையில், அரசன் நடத்திய சுமங்கலி போஜனத்தில் அவன் அறியாமல் காமாக்ஷியும் கலந்து கொள்ள, குழந்தையாய் வந்த விநாயகரை தாயைக் கண்டு தவழ்ந்து அவளிடம் செல்ல, அன்னை மறைந்தாள். அன்னை அருந்திய உணவில், அரசியின் மாலையின் முத்து ஒன்று பருப்போடு கலந்து அன்னையின் வயிற்றில் போக, தான் எடுத்துக் கொண்ட ஒரு தங்க முத்துக்காக, நகரம் பூராவும் தங்கமாய் வருஷிக்கச் செய்தாள் அன்னை. துண்டீரன் ஆண்டதாலேயே இந்தப் பகுதி தொண்டை நாடு என்ற பெயரும் பெற்றது.

படங்கள் கூகிளார் தயவுதான். படம் எடுப்பது கடுமையாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது. சில கோயில்களில் வெளியே உள்ள ராஜகோபுரம் மட்டுமே எடுக்க முடிந்தது.

Sunday, October 18, 2009

என் பயணங்களில் சில இடங்கள்!

சென்ற வாரம் ஞாயிறன்று ஒரு சிறு சுற்றுலா சென்றோம். அநேகமாய் நாங்க போன சுற்றுலாக்களில் எல்லாம் கசப்பான அனுபவங்களே நிறைய. ட்ராவல் டைம்ஸ், இந்திய ரயில்வேயின் சுற்றுலாவில் சென்றது தவிர. அதிலே கூட்டம் நிறைய. ஐந்நூறு பேர்கள் சென்றோம். ஆனாலும் ஒவ்வொரு பெட்டிக்கும் தனியான ஆட்கள் கவனிப்பு இருந்ததால் சமாளித்தார்கள். திறமையான நிர்வாகமும் சேர்ந்து கொண்டு சுற்றுலா பரிமளித்தது. தனியார் நடத்தும் சுற்றுலாவில் பெரும்பாலும் ஏமாற்றங்களே. கைலை யாத்திரையின் போதும் ஒருசில நடந்தாலும், மந்திராலயம், நவபிருந்தாவன் சென்ற சுற்றுலாவில் தான் அதிகமாய் ஏமாந்தோம். அந்தப் பிரயாணத்தில் பங்கு பெற்ற அனைவருக்குமே பிரயாணம் ரசிக்கவில்லை, என்பதோடு, யாருக்கும் சொன்னபடி சாப்பாடும் விநியோகிக்கப் படவில்லை. பலரும் பசியில் கஷ்டப்பட்டனர். அதனாலேயே நாங்க அநேகமாய்த் தனியாகவே போவோம். ஆனால் இப்போ சில நாட்களுக்கு முன்னர் வேலூர் ஸ்ரீபுரம் செல்லவேண்டும் என்ற ஆவலில் என்னோட கணவர் அம்பத்தூரில் இருந்தே கிளம்பும் ஒரு ட்ராவல்ஸிடம் முன் பதிவு செய்துவிட்டார்.

எனக்கு அரை இல்லை இல்லை கால் மனசு தான். உடனேயே தீபாவளி வருகிறது. ஏற்கெனவே வேறுவிதங்களில் அலைச்சல் அதிகம். இப்போ வேறே அலையணுமானு. ஆனாலும் அவருக்கு இது பணமும் மிகவும் குறைவு. நிறைய இடங்கள் கூட்டிச் செல்கிறார்கள் என்றும், அம்பத்தூரில் இருந்தே கிளம்புவதால் நமக்கும் வசதி என்றும் சமாதானம் செய்தார். கிட்டத் தட்ட இதை மறந்தே விட்டேன். திடீர்னு பார்த்தா போகும் நாள் நெருங்கிவிட்டது. அப்போ பார்த்து வலைப்பதிவர் ஒருவர் ஸ்ரீபுரம் போயிட்டு வந்து எழுதி இருந்தார். தற்செயலாக அது கண்ணில் பட, அங்கே போய்ப் படிச்சால் ஸ்ரீபுரம் கோயிலுக்குச் செல்லும் வழிமுறைகளைப் பார்த்தால் பல மைல்கள் நடக்கணும்னு தெரிஞ்சது. நம்மால் முடியுமா? வழக்கமான கேள்வி எழுந்தது எனக்குள்ளே. உடனேயே செய்தியை அஞ்சல் செய்தேன். அவரும் உடனேயே ட்ராவல்ஸ்காரர் கிட்டே கேட்டார். ட்ராவல்ஸ்காரரோ அதெல்லாம் ஒண்ணுமே இல்லை, தாராளமாய் நடக்கலாமென்று பச்சைக் கொடி காட்டிட்டார். இவரும் சரினு கிட்டத் தட்ட என்னை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.

முதல்நாளில் இருந்தே எல்லாவற்றுக்கும் மனசைத் தயார் செய்து கொண்டேன். கிளம்பும் அன்று காலை எழுந்து குளித்துமுடித்துக் காலை உணவுக்குத் தயார் செய்து வைத்துக் கொண்டு கிளம்பினோம். அவங்க எப்போ டிபன் கொடுப்பாங்கனு தெரியாதே? எதுக்கும் இருக்கட்டும்னு சாப்பாடு கையில். ஐந்து மணிக்கு வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கடை வாசலில் காத்திருக்கச் சொன்னாங்க. நடந்தே போய் அங்கே காத்திருந்தோம். சில நிமிஷங்களில் பேருந்தும் இல்லாமல், சிற்றுந்தும் இல்லாமல் ஒரு மகிழுந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டோம். எங்களுக்கு முன்னால் இன்னும் சிலர் ஏறி உட்கார்ந்திருந்தனர். பின்னர் மற்றும் சிலரை அழைக்கப் பேருந்து சென்றது. அம்பத்தூர் முடிஞ்சதும், வழியில் ஆவடியில் சிலர் ஏறிக் கொண்டனர். மொத்தம் பஸ் ஓட்டுநரையும் , ட்ராவல்ஸ் நடத்துநரையும் சேர்த்து இருபது பேர் இருந்தோம். இதற்குள்ளாக மணியும் ஆறு ஆகிவிட்டது. முதலில் காஞ்சி காமாக்ஷி அம்மனைத் தரிசிப்பதாகத் திட்டம். காஞ்சியை நோக்கி வண்டி சென்றது. காமாக்ஷி அம்மனைப் பல முறைகள் தரிசித்திருக்கிறேன். என்றாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி காக்ஷி கிடைக்கும். சென்ற வருடம் ஆகஸ்டில் சென்றபோது தான் அரூபலக்ஷ்மியைத் தரிசனம் செய்ய முடிந்தது. பஸ் போகட்டும். இப்போ காமாக்ஷி பத்தின சில விபரங்கள் பார்ப்போமா? கோயில் வந்து சேர்வதற்குள் சுருக்கமாய்ப் பார்ப்போம்.

Saturday, October 10, 2009

சங்கிலித் தொடரில் ஒரு மொக்கை!

கவிநயா மறுபடியும் ஒரு சங்கிலித் தொடர் கொடுத்திருக்காங்க. இதுக்கு யாரையானும் நானும் அழைக்கணுமாம். யாரை அழைக்கிறது? எல்லாரும் பேசக் கூட நேரமில்லாமல், மத்தவங்க போடற பதிவுகளைப் படிக்கவும் நேரமில்லாமல் இருக்காங்க. இந்த அழகிலே யாரைக் கூப்பிடறது? வழக்கம்போல் இதிலேயும் யாரையும் கூப்பிடலை. எண்ணங்கள் வலைப்பக்கத்திலேயும் போடலை. இங்கே போணியாகுதானு பார்க்கலாம்! :))))))))

முதல்லே காதல்: காதல் என்ற வார்த்தையின் அர்த்தமே மாறி இருக்கும் இந்நாட்களில் காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவதை மட்டுமே குறிக்கிறது. சமீபத்தில் இணையத்தில் தமிழமுதம் குழுமத்தில் இந்த வார்த்தையே இப்போ சமீபத்தில் வந்தது தான் என ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் எழுதி இருந்தார். திருஞானசம்பந்தர், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதை” அவர் தெரிந்து கொள்ளவில்லையா, மறந்துட்டாரானு புரியலை. திருவாசகத்தில் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் மாணிக்க வாசகர், “சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச்சரண் சரணாமெனக் காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!” என்று சொல்லிக் காதலால் ஈசனை ஓதியதைக் குறிப்பிடுகிறார். இம்மாதிரிப் பல உதாரணங்கள் காட்டமுடியும். தேவாரம், திருவாசகத்தில் இருந்து. இதிலேயே கடவுளும் வந்துவிடுகிறார். கடவுளிடம் மாறா பக்தியுடன் இருப்பதையே குறிப்பிடலாம், காதலுக்கும், கடவுளுக்கும். ஆகவே காதல் என்பது அன்பு செலுத்துவதைக்குறிக்கும் என்ற அளவில் புரிந்துகொண்டு எழுதுகிறேன். இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தலாம். மரம், செடி,கொடிகள், பறவைகள், பிராணிகள், மலை, மடு, நதி, கடல் என அனைத்திடமும் காதல் கொள்ளலாம். அதெல்லாம் உங்க இஷ்டம். எல்லாவற்றையும் மாறாக் காதலுடன் நேசிக்கக் கற்றுக் கொண்டோமானால் உலகில் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பதோ, பழி தீர்ப்பதோ, இருக்காது என்றும் தோன்றுகிறது.

கடவுள்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.”

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


அழகு: அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற பாடல் தான் முன்னாடி நினைவில் வருது. அழகு என்பது ஒவ்வொருத்தர் கண்ணோட்டத்திலும் மாறுபடும். நிறமோ, செம்மையான உடல்கட்டோ, முக அழகோ அழகோடு சேர்க்கமுடியாது என்பதையும் அனைவரும் அறிவார்கள். வயதான எம்.எஸ். அம்மாவின் முக காந்தியும், டி.கே.பட்டம்மாள் அம்மாவின் முக காந்தியும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அது அவங்க உள்ளுக்குள்ளே செய்த இசை என்னும் தவத்தால் வந்தது. அதுவும் இறை உணர்வோடு இசை என்னும் தவத்தை விடாமல் செய்தாங்க. ஆகையால் நாமும் அந்த உணர்வை விடாமல் நம் ஒவ்வொரு வேலையிலும் இறை உணர்வை நிரப்பினாலே போதும். வேலை செய்த களைப்பும் இருக்காது. அழகும் கூடும்.

பணம்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பணம் தேவைக்குக் கிடைப்பது கூட இறைவன் அருளாலேயே. அதையும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இப்படி நம் வாழ்க்கையில் காதலோ, அழகோ அல்லது பணமோ எதுவேண்டுமானாலும் அது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். என்றாலும் பணத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் அதிகமாய் எழுத நினைக்கிறேன். கூடியவரையில் பணத்தை நாம் துரத்தாமல் இருக்கப் பழகணும். தேவைக்குக் கிடைச்சால் அதுவே அதிகம் என்ற மனப்பான்மை வளரவேண்டும்.

அப்பா வீட்டில் அப்பா ஒரே சிக்கனம். தேவையானதுக்குக் கூட செலவு செய்யமாட்டார். ஆனால் ஒரு பட்டுப் புடைவை, நகை என்றால் அவர் உடனே வாங்குவார். எனக்கு இது விசித்திரமாய் இருக்கும். பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் சுணக்கம் காட்டி இருக்கார். தீபாவளிக்குப் பட்டுப் பாவாடை, புடைவை என்றால் தயக்கமே இன்றி வாங்குவார். இங்கே திருமணம் ஆகி வந்தாலோ, எல்லாமே நேர்மாறாக இருந்தது. இதிலே சிக்கனம் என்றால் நம்ம ரங்ஸோட சிக்கனம் தான். ஏற்கெனவே நான் இழுத்துப் பிடிக்கிற டைப். ட்ரெயினிங் அப்படி! இவரோ அலுவலகத்தில் மேஜர்களையும், கர்னல்களையும் கணக்குக் கேட்கும் மனுஷர். சபாஷ், சரியான போட்டினு சொல்றாப்போல இரண்டு பேரோட சிக்கன நடவடிக்கைகளாலேயே எல்லாரும் வெறுத்துப் போயிட்டாங்கனா பாருங்களேன்! இதிலே நான் செலவாளினு என்னை அவரும், நீங்க தான் இஷ்டத்துக்கு சாமான்களை வாங்கறீங்கனு நானும் சொல்லுவேன். எங்க வாழ்க்கையில் நாங்க பணத்துக்குத் தவிச்ச நாட்கள் , மாதங்கள், வருடங்கள் என உண்டு. ஆனாலும் சமாளிச்சோம்.

வேலையை விட்டிருக்கவேண்டாமேனு கேட்டவங்க உண்டு. எனக்கு மாநில அரசு வேலை. அவருக்கு அடிக்கடி மாற்றல் ஆகும் மத்திய அரசு வேலை. இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் தான் இது சாத்தியம். வேலை செய்வதன் மூலம் வரும் பணமா? இல்லை குடும்பமா? குழந்தையா? என்ற கேள்வி வந்தபோது நான் பின்னதையே தேர்ந்தெடுத்தேன். என்னோட அம்மா குழந்தையைப் பார்த்துக்கத் தயார்தான். அப்போ பெண் மட்டும் தான். ஆனாலும் எனக்கு விட இஷ்டமில்லை. மூன்று வயசு வரைக்கும் அந்தக் குழந்தைகள் செய்யும் செயல்களைக் கண்டு ரசிக்கணும். சின்ன வயசிலே இருந்து நான் குழந்தைகளோடேயே பழகினவள் வேறே. பெற்ற குழந்தை என்ன செய்யறது, எப்படி விளையாடறதுனு பார்க்கவேண்டாமா? அனுபவிக்க வேண்டாமா? மேலும் குழந்தைகளுக்கு அம்மாவின் அருகாமை பதினைந்து வயது வரையிலும் கட்டாயம் தேவை. ஒருவேளை வேலைக்குப் போயிருந்தால் இன்று பணம் நிறைய இருந்திருக்கும்தான்.

இத்தனை கடமைகளுக்கிடையிலேயும் நாங்க வீடு கட்டியதே ஒரு சாதனைனு சொல்லிக்கலாமோ? அது பத்தி எழுதினா நிறைய வரும். ஆனால் அதுக்கு அப்புறமாய் நிச்சயமாய்க் கஷ்டப் பட்டோம் பணத்துக்கு. அன்றாட நிர்வாகமே சில சமயம் ஸ்தம்பிக்கும்போல் பயமுறுத்தும். புடைவை வியாபாரம், ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது, தையல் சொல்லிக் கொடுப்பது, என் எஸ் சி ஏஜென்சி எடுத்து என வீட்டில் இருந்தே என்ன வகையில் முடியுமோ அப்படி எல்லாம் சம்பாதிக்க நேர்ந்தது. என்ன?? இதுக்கெல்லாம் வேலை நேரம் என்பது இல்லை. மதிய ஓய்வு நேரத்தில் தையல் வகுப்பு, புடைவை வியாபாரமும், காலையில் பத்து மணிக்கு அப்புறம் போஸ்ட் ஆபீஸுக்குப் போய் வாடிக்கையாளர் சேவையும்னு திட்டம் போட்டு வச்சுப்பேன். எங்கே போனாலும் மதியம் பனிரண்டு மணிக்குள் வீட்டுக்கு வந்துடுவேன். மாமியார், மாமனார் சாப்பிட்டாங்களா, தூங்கினாங்களானு தெரியணுமே! சாயந்திரம் டிபன், காப்பி, வேலைசெய்யற பொண்ணு வரலைனா, வேலைனு இருக்குமே.

எல்லாம் முடிஞ்சு, 5-00 மணிக்கு மேல் சாயங்காலமாய் ட்யூஷன், அந்தக் குழந்தைகளோடு என் குழந்தைகளும் படிப்பாங்க. ஒரே வேலையாக ஆயிடும். எப்படி அப்போ அவ்வளவு நேரம் கிடைச்சது? நானும் படிச்சேன் அப்போ. ஏற்கெனவே ஹிந்தியில் பட்டம் வாங்கி இருந்தாலும் சென்னை ஹிந்தி பிரசார சபா பரிக்ஷை எழுதணும்னு அதுவும் படிச்சுட்டு இருந்தேன். பையர் படிப்புக்கு என்ன செய்யப் போறோமோ, பெண் கல்யாணத்துக்கு என்ன செய்யப் போறோமோனு கொஞ்சம் கவலைதான். ஆனாலும் கடவுள் அருளால் பையருக்கு மெரிட்டில் குஜராத்தில் அரசாங்கக் கல்லூரியில் இடம் கிடைச்சு, குஜராத்திலேயே காம்பஸ் செலக்ஷனில் முதலில் வேலையும் கிடைத்தது. அதே கடவுள் அருளால் பெண்ணுக்கும் கடன்வாங்காமல் கையில் இருந்த சேமிப்பிலேயே கல்யாணமும் நடத்த முடிஞ்சது. வீடு கட்ட நாங்க வாங்கிய கடன் எல்லாம் முடிஞ்சு அப்பாடானு இருந்தப்போ வந்தது பாருங்க ஒரு பூதம்! திடீர்னு இரண்டு வருஷம் பயிற்சி முடிஞ்சு எக்சிக்யூடிவ் ஆக ஆகியிருந்த சமயம் பையர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நான் அமெரிக்கா போகப் போறேன்.” சரி, எல் அண்ட் டியில் தான் அனுப்பப் போறாங்களோனு நினைச்சால், இல்லையாமே! படிக்கப் போறாராம். அவரோட கூடப் படிச்சவங்க எல்லாரும், அங்கே ஏற்கெனவே போய் ஆறு மாசம் ஆயாச்சு. நானும் ஜிஆர்ஈ(தங்க மாளிகை இல்லைங்க) டோஃபெல் பரிக்ஷை கொடுக்கப் போறேன்னு சென்னை வந்தார். இதுக்கு மேலேயும் சொல்லணும்னா நேயர் விருப்பம் இருந்தால் சொல்லறேன். இல்லைனா விட்டுடலாம். :)))))))) ரொம்ப போரடிக்கிறேனோனு தோணுது!