Friday, July 3, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!! தொடர்ச்சி!

திகைத்துப் போனான் கணவன். இது நிஜமா??? தன்னால் இனி குழந்தை பெற முடியாதா??? எதுக்கும் உள்ளூர் மருத்துவரிடமும் காட்டிடலாமா?? ஆமாம், அதான் சரி, இங்கே பெரிய ஆஸ்பத்திரி. நிறையப் பேர் பரிசோதனைக்கு வருவாங்க. ஆகையால் தவறு நேரிடச் சந்தர்ப்பம் இருக்கு. தனக்கு அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. எந்தக் குறையும் இல்லாமல் இருக்கும் எனக்கு. ஊருக்குத் திரும்பி வந்தான். உள்ளூர் மருத்துவரிடம் சென்றான். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தைச் சொன்னான். ஆறு மாதங்களாக முயன்றும் தன் மனைவி கர்ப்பம் தரிக்கவில்லை என்றும், தனக்கு இது கவலை அளிப்பதாகவும் குறை யாரிடம் எனத் தெரிந்து கொள்ளவேண்டும் எனவும் சொன்னான். லண்டன் சென்று திரும்பிய தகவலைக் கூறவில்லை. அவன் மனைவியையும் வரவழைத்தார் மருத்துவர். குடும்ப மருத்துவர் என்பதால் உரிமையோடும், கேலியோடும் இருவரையும் ஏதோ சண்டையினால் இணையவில்லை, இப்போப் பேசிப் பார்த்தால் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் பேச்சுக் கொடுத்தால்..... அவன் சொல்வது உண்மையே. ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கணவன் தன்னை இன்னொரு குழந்தை பிறப்புக்குத் தயார் படுத்தியும் தான் கருவுறவில்லை என்றும், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொள்ளவில்லை என்றும் கூறுகின்றாள் மனைவி. இருவரையும் சோதனை செய்து பார்த்த மருத்துவர் முகத்தில் அதிர்ச்சி. கணவனுக்கு எப்படியோ ஸ்டெரிலைஸேஷன் நடந்துள்ளது.

மனைவியிடம் விஷயத்தை மெல்லத் தெரிவிக்கின்றார் மருத்துவர். அவளுக்கும் அதிர்ச்சி. ஆனால் அவள் நினைத்ததோ. லண்டனுக்கு நண்பனைப் பார்க்கப் போவதாய்ப் பொய் சொல்லிவிட்டுக் கணவன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பானோ??? அப்படித் தான் இருக்கும். இந்த ஒரு குழந்தையை நாம் வளர்ப்பதால் இவன் இந்த முடிவுக்கு வந்துவிட்டானோ?? இருக்கும், இருக்கும். இந்தக் குழந்தையைப் பிடிக்காது என்பதால் மூன்று குழந்தைகளையும் மறைமுகமாய் இறக்க உதவியவன் இவனாய்த் தான் இருக்கணும். என்ன ஆனாலும் சரி, இந்தக் குழந்தையை விடக் கூடாது. இருக்கும் ஒரே பெண்ணையும் பாதுகாக்கணும். மனைவி முடிவெடுத்தாள். பரிசோதனையின் முடிவு அவளிடம் சொல்லப் பட்டதும் கணவன் இருக்கும் திசை கூடத் திரும்பால் வீட்டை நோக்கிச் சென்றாள்.

கணவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. என் ஆருயிர் மனைவி, எனக்கு இப்படியானதுக்குக் காரணம் கூடக் கேட்கவில்லை. அவள் பாட்டுக்குப் போயிட்டாளே? எல்லாம் இந்தப் பாழும் குழந்தையால் வந்தது தானே?? இது என்ன குழந்தை? பிசாசுக் குழந்தை! அனைவரின் ரத்தத்தையும் உறிஞ்சி வாழும் குழந்தையாக இருக்கிறதே. ம்ம்ம்ம்?? ஒரு பறவை கூட இப்படித் தானே?? சட்டெனத் தான் காட்டிற்குத் தன் வேலை விஷயமாய் சில படங்கள் பிடிக்கச் சென்ற போது பார்த்த ஒரு அதிர்ச்சிக் காட்சியையும், தன்னையும் அறியாமல் தான் அதைப் படம் பிடித்து வைத்திருப்பதையும் நினைவில் கொண்டு வந்தான். வீட்டை நோக்கி நடந்தான். மனைவியிடம் எப்படியாவது அந்தப் படத்தைப் போட்டுக் காட்டவேண்டும். ஒரே நினைவுடன் வீட்டிற்கு வந்தான்.

அவள் அவனிடம் பேசவே இல்லை. எல்லாம் இயந்திரத்தனமாய் நடந்தது. ஆனாலும் அவன் தன் ஒரே மகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான். வேலைகளை முடித்து மனைவி ஓய்வாய் இருக்கும் சமயம் அவளை அழைத்து இந்தப் படத்தைப் பார் என்று சொன்னான். காட்டில் கிட்டத் தட்ட ஒரு மாதத்துக்கு மேல் அவன் தங்கி இருந்தபோது எடுத்த படம் அது. அவளுக்கும் ஓரளவு தெரியும். என்றாலும் வேண்டாவெறுப்பாய் அமர்ந்தாள் படத்தைப் பார்க்க. ஆண் குருவியும் பெண் குருவியும் சந்தோஷமாய்க் கூடு கட்டி முட்டை பொரிக்கின்றது. ஆண் குருவி வெளியே சென்றுவிடுகிறது. பெண் குருவியும் உணவுக்காகப் போயிருக்கையில் ஓர் குயில் பறவை, ஆங்கிலத்தில் Cuckoo என அழைக்கப் படும் பறவைகள் இரண்டு வந்து அந்தக் கூட்டில் குருவியின் முட்டைகளோடு தங்கள் முட்டையையும் இட்டன.
இது தெரியாத அப்பாவிக் குருவி அந்த முட்டையையும் சேர்த்தே அடைகாத்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சு வெளியில் வரும்போது அப்பாவிக் குருவி தன்னுடைய குஞ்சு என்றே நினைத்துக் குயில் குஞ்சுக்கும் உணவூட்டியது. உணவைப் பெற்றுக் கொண்ட குயில்குஞ்சோ அதற்குப் பரிகாரமாய் குருவியின் ஒரு குஞ்சைக் கீழே தள்ளியது.

கீழே விழுந்த குருவிக் குஞ்சு இறந்தது. தன்னுடைய ஒரு குஞ்சு இறந்துவிட்டதைக் கவனித்தும் அப்பாவியும், அசடும் ஆன குருவி செய்வதொன்றும் அறியாமல் பேசாமலே இருந்தது. மேலும் அதிகப் பாசத்துடனேயே குயில்குஞ்சிற்கு உணவூட்டியது. இப்படியே ஒவ்வொரு குஞ்சாகக் குருவிக் குஞ்சைக் கீழே தள்ளிக்கொன்று முடித்த குயில்குஞ்சிற்கு இப்போது பறக்கும் சக்தி வந்துவிடக் கூவிக் கொண்டே பறந்து சென்றது. அப்போதும் உண்மை அறியாமல் அசடாகவே அடுத்த முட்டை பொரிப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தது குருவி.

இந்தப் படத்தைப் போட்டுக் காட்டிவிட்டுக் கணவன் இந்தக் குயில் போலத் தான் இந்தப் பெண்ணும். நம் குழந்தைகளை ஒவ்வொன்றாய்க் கொன்றுவிட்டுத் தான் மட்டும் தனியாக இருக்க நினைக்கின்றாள். நம் அன்பு, பாசம், பணம், சொத்து எல்லாவற்றையும் அவளே அடைய நினைக்கிறாள். என்று பலவிதங்களிலும் எடுத்துச் சொன்னான். மனைவி அத்தனையையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டாள். பின்னர் சிரித்தாள்.

1 comment: