Tuesday, October 27, 2009

என் பயணங்களில் - காஞ்சி காமாக்ஷி 2

காமாக்ஷி சந்நிதிக்கு நேரே அவளை வணங்கிய கோலத்தில் துண்டீர மகாராஜாவின் சந்நிதி இருக்கிறது. உற்சவ காமாக்ஷி சந்நிதியில் இருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரையிலும் மெளனமாய்ச் செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கே பிரமனால் பூஜிக்கப் பட்ட முழுதும் தங்கத்தால் ஆன சொர்ண காமாக்ஷி இருந்தாள். பிரமன் அம்பிகைக்கும், அப்பனுக்கும் திருமண உற்சவம் காணவேண்டிப் பிரார்த்திக்க, ஏகாம்பரேஸ்வரருக்கு உகந்த ஏகாம்பிகை அம்பிகையின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினாள். பின்னர் அதே போன்ற தங்கத்தாலான மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்ய அவளே பங்காரு காமாக்ஷி எனப்பட்டாள். இந்த பங்காரு காமாக்ஷியை முகமதியர் படை எடுப்பின் போது அவர்களிடமிருந்து காக்க எண்ணி, அப்போது காஞ்சி பீடத்தின் பீடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பங்காரு காமாக்ஷியைக் கோயில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு உடையார்பாளையம் ஜமீனுக்குக் கொண்டு சென்றார். வழியில் தஞ்சையை ஆண்ட மராட்டி அரசன் பிரதாப சிம்மனது விருப்பத்தின் பேரில் அங்கே தங்க, மன்னனின் வேண்டுகோளின்படி புதிதாய்க் கட்டப் பட்ட ஆலயத்தில் அந்த பங்காரு காமாக்ஷி பிரதிஷ்டை செய்யப் பட்டாள். காஞ்சி அர்ச்சகர்களில் சிலரே இங்கும் குடி வந்து வழிபாட்டைத் தொடர்ந்தனர். சியாமா சாஸ்திரிகள் இந்த மரபில் வந்தவரே.

பாரதம் முழுதும் கால்நடையாகவே பயணம் செய்து இந்துமதத்தின் வழிபாடுகளை ஆறுவகையாகப் பிரித்து அத்வைதத்துக்குப் புத்துயிர் கொடுத்த ஆதிசங்கரர் காஞ்சியில் காமாக்ஷியின் முன்பாக ஸ்ரீசக்ர யந்திரத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்போது காஞ்சியை ஆண்ட மன்னனிடம் அம்பாளை நடுவில் வைத்து ஸ்ரீசக்ர வடிவில் காஞ்சியைப் புனர் நிர்மாணமும் செய்யச் சொன்னார். ஸ்ரீசங்கரர் அங்கேயே மன்னனின் வேண்டுகோளின்படி சர்வக்ஞபீடமும் ஏறினார். காஞ்சியிலேயே முக்தியும் அடைந்தார். காமாக்ஷி கோயிலில் ஆதிசங்கரருக்குத் தனிச் சந்நிதியும், உற்சவர் சிலையும் உண்டு. காஞ்சிமரமே இந்தக் கோயிலின் தல விருக்ஷம் ஆகும். இந்தக் கோயிலின் ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு திசையில் அமைந்துள்ளது. இங்குள்ள எந்தச் சிவன் கோயிலிலும் அம்பாள் சந்நிதியே கிடையாது. காமாக்ஷி ஒருவளே அனைத்துச் சக்தியையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அனைத்துக் கோயில்களுக்கும் ஒரே சக்தியாக விளங்குகிறாள். கையில் கரும்பு வில்லை வைத்துக் கொண்டு காக்ஷி அளிக்கும் காமாக்ஷி அந்த மன்மதன் திரும்ப உயிர் பெறக் காரணம் ஆனவள்.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் முக்கோண வடிவக் கருவறை ஆகும். பிரகாரம் மூன்றரைச் சுற்றுக் கொண்டது. ஸ்ரீசக்ரத்தின் பிந்துமண்டலத்தில் முக்கோணத்தில் உறைபவள் என்பதைக் குறிக்கும் வண்ணம் கருவறை முக்கோண வடிவிலும், நம் உடலில் சுருண்டிருக்கும் குண்டலினி மூன்றரைச் சுற்று என்பதைச் சுட்டும் வண்ணம் மூன்றரைச் சுற்றுப் பிராகாரமும் அமைந்துள்ளது என்பார்கள். இந்தக் கோயிலில் அம்மன் பிராகாரத்தைச் சுற்றி வலம் வர முடியாது. காமாக்ஷி கோயிலின் ஒரு புறம் வரதராஜப் பெருமாள் கோயிலும் மறுபுறம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் அமைந்திருப்பது அம்பாளின் திருக்கல்யாணத்தை நினைவு படுத்துவதாக அமைகிறது. குமரகோட்டமோ எனில் காமாக்ஷி கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் அமைந்து சோமாஸ்கந்த மூர்த்தியை நினைவு மூட்டுகிறது. அடுத்து அஞ்சன காமாக்ஷி எனப் பெயர் சூட்டப் பட்ட ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மியும், அவளைக் காணத் திருட்டுத் தனமாக அங்கே வந்த கள்ளனையும் காணலாமா???

ஒருசமயம் வைகுந்தவாசன் ஆன மஹாவிஷ்ணுவோடு உற்சாகமாயும், உல்லாசமாயும் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ என்னும் மஹாலக்ஷ்மி, விளையாட்டாகத் தன் நாதனைக் கறுப்பன் என அழைக்க, மஹாவிஷ்ணுவோ, கறுப்பனை ஏன் திருமணம் செய்து கொண்டாய்? எனக் கேட்டார். பாற்கடல் தேவியின் பொன்வண்ணத்தினால் பொன் மயமாய் ஜொலிக்க அந்த ஜொலிப்பில் மாயக் கண்ணனான மஹாவிஷ்ணுவின் நிறமும் தங்கமாய் ஜொலித்ததாயும், அதில் ஏமாந்துவிட்டதாகவும் சொன்னாள் ஸ்ரீ. மஹாவிஷ்ணுவும், இப்போது கொஞ்சம் நம் திருவிளையாடல்களைக் காட்ட நேரம் வந்துவிட்டது என எண்ணி, இவ்வுலகில் தங்கள் மேனி அழகை மெய்ம்மறந்து ரசிக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு, “லக்ஷ்மி, உனக்கு கர்வம் அதிகமாகிவிட்டது. நீ அழகாய் இருப்பதால் தானே இந்த அளவுக்குப் பெருமை? உன் அழகெல்லாம் இழந்து நீ பூவுலகில் திரிவாய்.” என்று சொல்ல, பதறிய லக்ஷ்மி, இதற்கு என்ன விமோசனம் எனக் கேட்க, இப்போது என் அருமை சகோதரி காமாக்ஷியைப் போய்க் கேள், அவள் உனக்கு உதவுவாள் என்று அனுப்பிவிடுகிறார்.

காஞ்சி வந்த லக்ஷ்மி காமாக்ஷியை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தாள். காமாக்ஷி கறுத்த லக்ஷ்மியை “அஞ்சன காமாக்ஷி “ என அன்போடு அழைத்தாள். மேலும் அவளைத் தன் அருகிலேயே வைத்துக் கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அளிக்கப் படும் குங்குமப் பிரசாதத்தை அவர்கள் அஞ்சனகாமாக்ஷிக்குச் சார்த்தியபின்னரே இட்டுக் கொள்ளுவார்கள். இப்படி பக்தர்கள் இட்ட குங்குமத்தினால் நீ இழந்த உன் பொன் வண்ணமும் பெறுவாய் . உன் திருமேனியைத் தொட்டு வணங்கும் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் நீ வழங்குவாய்!”எனச் சொல்கிறாள். அதன்படி சாப விமோசனம் பெற்றுப் பொன் வண்ணம் அடையும் லக்ஷ்மியைக் காணவேண்டும் என்ற எண்ணம் விஷ்ணுவுக்கு உண்டாக, அவர் எவரும் அறியாமல் திருட்டுத் தனமாய் அங்கே வர, சகோதரிக்குத் தெரியாதா என்ன?

அண்ணனைக் கண்டு அவள், வாராய் கள்ளா! என அழைக்க, மாதவனும், லக்ஷ்மியும் சேர்ந்தனர். ஆகவே இங்கே அஞ்சனகாமாக்ஷி, செள்ந்தர்ய லக்ஷ்மி ஆகியோரோடு மஹாவிஷ்ணுவையும் காணமுடியும். ஆனால் இவை எல்லாமும் நாம் உள்ளே சென்றால்தான் பார்க்கமுடியும். வெளியே இருந்து பார்க்கமுடியாது. ஒருவேளை மஹாவிஷ்ணுவையாவது பார்த்துவிடலாம். அஞ்சன காமாக்ஷி உள்ளே காமாக்ஷிக்கு வெகு அருகிலேயே இருப்பதால் நம்மால் பார்க்க இயலவில்லை. கோயில் நிர்வாகம் தான் பக்தர்களுக்கு இவற்றைத் தரிசனம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். மஹாவிஷ்ணு இருப்பது 108 திவ்யதேசங்களில் ஒன்றாய்க் கூறப் படுகிறது. விஷ்ணுவின் திருநாமம் கள்வர் பெருமாள் என்றே சொல்கின்றனர். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டிருக்கிறது.

அம்பாள் சந்நிதி நுழையும் இடத்தில் மேலே நெமிலி ஸ்ரீபாலாவின் சித்திரம் இடம்பெற்றுள்ளது. காமாக்ஷி அவதாரம் சிறப்பு வாய்ந்ததாய்ச் சொல்லப் படுகிறது. சக்தியின் அம்சமான காமாக்ஷி என்ற பெயரின் அர்த்தத்துக்கு பக்தர்கள் விரும்பியதைத் தருவாள் என்ற பொருளில் வரும். காமாக்ஷியின் கண்களின் திரிவேணிசங்கமமும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். கண்மணி கறுப்பு விழிகள் வெண்மை, அதில் ஓடும் செவ்வரிகள் முறையே கங்கை, யமுனை,சோனபத்ரா என்று சிலரும் /சரஸ்வதியைக் குறிக்கும் என்று சொல்கின்றனர். 24 அக்ஷரங்களைக்கொண்ட காயத்ரி பீடத்தின் நடுவே பஞ்ச பிரம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீகாமாக்ஷி நம் ஐம்புலன்களையும் வசப்படுத்தி நம்மைத் தன்பால் ஈர்ப்பதற்காகவே அவதரித்திருக்கிறாள். அனைவரும் ஸ்ரீகாமாக்ஷியின் பாதங்களில் பணிவோம். அழகான காஞ்சியில் புகழாக வீற்றிடும் அன்னை காமாக்ஷி உமைக்கு நம் நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.

இதற்கடுத்துக் காலை உணவு அருந்தியபின்னர் முறையே வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் சென்றோம். முதலில் ஏகாம்பரேஸ்வரரைப் பார்த்துவிடுவோமா???

7 comments:

  1. நாங்க இதுவரை காமாக்ஷி பாத்ததே இல்லை. இந்த தடவை வந்தால் கட்டாயம் போய் பாக்க ஸ்வாமி ஆசிர்வாதம் பண்ணீருக்கணும். அப்போ அஞ்சன காமாக்ஷி பாக்க முடியதுங்கரேளா?அந்த கடைசி படம் எத்தனை அழகாய் இருக்கு. அசப்புல கன்யாகுமரி மாதிரியும் தெரியறது. சின்னஞ்சிறு பெண்போலே சித்தாடை உடை உடுத்தி சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை ... ... சீ. கோவிந்தராஜன் பாட்டு ஞ்யாபகம் வரது

    ReplyDelete
  2. ஒரு முறையாவது காஞ்சிபுரம் போய்ப் பாருங்க ஜெயஸ்ரீ, அஞ்சன காமாக்ஷியைப் பார்க்கணும்னா சிறப்பு தரிசனச் சீட்டு வாங்கணும்னு நினைக்கிறேன். இல்லைனா மதியத்துக்கு மேலே யாராவது கோயிலில் வேலை பார்க்கிறவங்களோ, மடத்தில் இருப்பவங்களோ தெரிஞ்சவங்க இருந்தால் அவங்க தயவிலே பார்க்கலாம். :D பல வருஷங்கள் காஞ்சிபுரம் போயும், நான் போன ஆகஸ்டில் தான் பார்க்க முடிஞ்சது. பாலா நெமிலியில் ஆறு அங்குலத்துக்குள்ளே தான் இருப்பாளாம். ஒரு வீட்டில் வைத்துப் பூஜை செய்கிறார்கள். எல்லாருக்கும் காணக் கொடுத்து வைக்காது என்று சொல்கின்றார்கள். என் கணவர் பார்த்துட்டார். நான் இன்னும் பார்த்ததில்லை நெமிலி பாலாவை. :)))))))

    ReplyDelete
  3. தங்க கோவிலுக்கு அழைச்சுட்டு போறேன்னு சொல்லிகிட்டு எங்கே எங்கேயோ பராக்கு காட்டறீங்க. இருந்தாலும் ஆட்சேபிக்கலைன்னு தாழ்மையோட சொல்லிக்கிறேன்.:-))

    ReplyDelete
  4. வாங்க திவா, சாவகாசமா வந்து காமாக்ஷியைத் தரிசனமா,, ம்ம்ம்ம் நடத்துங்க, வந்ததுக்கு நன்னிங்கோ. :D

    ReplyDelete
  5. எல்லாவற்றையும் கவர் பண்ணி, அதே நேரத்தில் சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க. நன்றி.

    ஜெயஸ்ரீ, நீங்க சொன்னபடி அந்த படம் க.குமரியம்மன் தான். நெமிலி பாலா அல்ல.

    ReplyDelete
  6. காமாக்ஷி பற்றிய தொடர் ஒன்று சில மாதங்கள் முன்னர் எழுதினேன். விருப்பமுள்ளவர்கள் படிக்க, அதன் ஒரு லிங்க் கிழே!.

    http://maduraiyampathi.blogspot.com/2009_07_01_archive.html

    ReplyDelete
  7. இங்கும் காமாக்ஷி கிடைத்தது ...அருமை மா

    ReplyDelete