Thursday, October 1, 2009

பச்சைக்கலரு ஜிங்குச்சா! மஞ்சக் கலரு ஜிங்குச்சா!


வழக்கம் போல் இந்த வருஷமும் தீபாவளிக்குத் துணி எடுக்க தி.நகருக்கே போகணும்னு முடிவு பண்ணியாச்சு. என்னது??? ஏக மனதாவா? அது நம்ம வீட்டிலே கிடையாதுங்க. முடிவெல்லாம் நம்ம ரங்ஸ் எடுப்பார். நாம பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டுவோம். எனக்கு என்னமோ தருமமிகு சென்னைக்குப் போய் ரத்தன் பஜாரில் "ஹாண்ட்லூம் ஹவுஸ்" போய் அங்கே எடுத்துக்கணும்னு ஒரு விபரீத ஆசை வந்தது போன வருஷமே. போன வருஷம் அந்த ஆசை வந்ததுமே கை தூக்க முடியாமல் போய்க் கைக் கட்டுக் கட்டிக்கவே, நம்ம ரங்கனாருக்குக் கேட்கவா வேணும்? இதான் சாக்குனு அம்பத்தூரிலேயே எடுக்கலாம்னு சொல்லிட்டார்.

ஆனால் பாருங்க, அதுவும் போக முடியாம ஏதோ இடைஞ்சல். என்னனு நினைவிலே இல்லை. அதோட அடிக்கடி ஆர்த்தோ தரிசனம், பிசியோதெரபிஸ்ட் பயமுறுத்தல், (அது தனிக்கதை, அப்புறமா வரேன்) அப்படினு வேறே இருந்ததா? இருக்கிற புடவையிலே கட்டாத ஒண்ணைக் கட்டிக்கலாம்னு பேசாம(அவர் கிட்டே பேசிட்டுத் தான்) இருந்துட்டேன். ஆனால் பாருங்க, பாசத்தில் சிவாஜியையும் மிஞ்சும் என்னோட அண்ணனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வர,ஹிஹிஹி, ஒரு ஓசிப் புடைவை கிடைச்சு, போன வருஷ தீபாவளிக்குப் பிறந்தவீட்டுப் புடைவையோட கொண்டாடியாச்சு. இந்த வருஷமும் வாங்கித் தாங்கனு கேட்கமுடியுமா?? ஹிஹிஹி, தப்பாய் நினைப்பாங்க இல்லை???

போகணும்னு முடிவு பண்ணியாச்சோ இல்லையோ, உடனேயே sealed tender வேணும்னு ரங்கு சொல்ல, open tender தான் கொடுப்பேன்னு நான் சொல்ல, எப்படியோ தொலை, சொன்னதே கேட்காத இது ஒரு ஜென்மம்னு அவர் மனசுக்குள்ளே நினைக்க, நான் வழக்கம்போல் எதையும் கண்டுக்காமல் பட்ஜெட் போட ஆரம்பிச்சேன். ஸ்கூல்லே படிக்கிறச்சேயே கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஒத்துக்காது. இப்படி ஒரு கணக்காளரைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா அவங்களைக் கொஞ்சம் காக்காயோ, குருவியோ பிடிச்சிருக்கலாம். நான் போடற கணக்குக்கும், கடைக்குப் போனால் வர பில்லுக்கும், அதுக்கு அப்புறமா நான் வாங்கிக் கட்டிக்கிற கணக்குக்கும் அளவே சொல்ல முடியாது. என்றாலும் நானும் தைரியமாய்க் கணக்குப் போட ஆரம்பிச்சேன். இந்த வருஷம் அதிசயமா ரங்கு பாண்ட் தைச்சுக்கப் போறேன்னு வேறே அறிவிப்பு விட்டிருந்தார். அதுக்கு எப்படியும் ஆயிரம் ரூபாயாவது வேண்டும். என்ன புடைவை? எத்தனை ரூபாய்? எத்தனை புடைவை? மில்லியன் டாலர் கேள்வி? எத்தனை புடைவைனு கூடச் சொல்லிடலாம். மூன்றுனு சொல்லிட்டு இரண்டு எடுக்கலாம். ரெண்டுனு சொல்லிட்டு ஒரே புடைவையோட திருப்தி ஆயிடலாம். ஆனால் எத்தனை ரூபாய் இருக்கே! அதுதான் எகிறும். என்னமோ நான் தான் நெசவு போடும்போது கிட்டே இருந்து நூல் வாங்கிக் கொடுத்து, நெசவாளர் கிட்டே இருந்து புடைவையையும் வாங்கிக்கறேன்னு இவரோட அபிப்பிராயம். பனிரண்டு வயசிலே இருந்து புடைவை கட்டிக்கிறேன்னு சொல்லறே? இது தெரியலையே? அப்படினு ஒரு கிண்டல், நக்கல். எல்லாம் நேரம்.

ஒரு வழியாப் பட்ஜெட் போட்டேன். கூடவே பாதுகாப்புக்காக என்னோட பர்ஸிலே இருந்த பணத்தையும் பர்ஸோட எடுத்து வச்சுண்டேன். அவரையும் எதுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கூடவே வச்சுக்கச் சொன்னேன். அப்புறமாக் கடையிலே போய் ரெண்டு பேரும் ஜல்லிக்கட்டு மாடுங்க மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சீறவேண்டாம் பாருங்க! அதுக்குத் தான். எல்லாம் முடிஞ்சது. அப்புறமா சாப்பிட்டுட்டுப் போகறதா? வந்து சாப்பிடறதானு பிரச்னை. கிளம்பறது தான் பெரிசா இருக்குமே தவிர, கடைக்குள்ளே போனால் மிஞ்சினால் அரை மணி நேரம் தான் செலக்ஷன். கடைக்காரங்க பில் போட்டு பாக்கிங் செய்து தரத் தான் நேரம் ஆகும்.


சாப்பிட்டுட்டே போகலாம்னு ஏகமனதாய் முடிவு பண்ணிச் சாப்பிட்டுட்டு, ரெயிலில் போகணும்னு குழந்தை மாதிரி நான் அழுதுட்டே வர, அவர் என்னை விடாப்பிடியாய்ப் பேருந்திலே கூட்டிப் போனார். நல்லவேளையாய் தி.நகருக்கு மூன்று பேருந்துகள் நின்னுட்டு இருக்கக் கூட்டம் இல்லாததாய்ப் பார்த்து உட்கார்ந்தோம். நல்லி கடைக்குத்தானே போகப் போறோம். கடை வாசலுக்குக் கொஞ்சம் முன்னாலே இறங்கலாம்னு நினைச்சப்போத் தான் தி.நகரில் வழியை எல்லாம் மாத்தி இருக்காங்களேனு நினைப்பு வந்தது. எங்கே இறங்கறதுனு யோசிக்கிறதுக்குள்ளே கண்டக்டர் விவேக்குக்கும் முன்னாடி உஸ்மான் ரோடு ஆரம்பத்திலே இறங்கச் சொல்லிட்டார்.

புடைவை எடுத்தது பத்தித் தனியா வரும் பாருங்க!

6 comments:

  1. நான் பதினைஞ்சே நிமிஷத்தில் புடவையைச் செலக்ட் பண்ணிருவேன்,அடுத்தவங்களுக்கு வாங்கும்போது!

    ReplyDelete
  2. அதானே பார்த்தேன்...என்ன பதிவு ரொம்ப குட்டியாக இருக்கேன்னு பார்த்தேன். !! ;))

    ReplyDelete
  3. வாங்க துளசி, அதானே பார்த்தேன்! :)))))))))))

    ReplyDelete
  4. ஹிஹிஹி, கோபி, நாமளாவது குட்டியா எழுதறதாவது??? :P

    ReplyDelete
  5. சண்டே னா இரண்டு என்பது போல், தீபாவளி னா இரண்டா ;)

    அதுவும் கலர் எல்லாம் சும்மா அதிருதுதே ;)

    ReplyDelete
  6. வாங்க புலி, உங்களுக்கும் பழக்கம் ஆகிடும், அடுத்த தீபாவளி தலை தீபாவளி ஆச்சே! :P:P:P வந்ததுக்கு நன்னிங்கோ!

    ReplyDelete