Tuesday, December 15, 2009

என் பயணங்களில் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்!


பழங்காலத்தில் இங்கே சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி மஹரிஷி சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டிருக்கிறார். பிற்காலத்தில் லிங்கம் மறைந்து வேல மரங்களால் ஆன காடு உருவாகி இருந்தது. இந்தப் பகுதியை ஆண்ட பொம்மி என்பவருக்கு வேலங்காட்டில் ஈசன் இருப்பதைக் கனவில் வந்து சொல்ல, காட்டை அழித்து லிங்கத்தைக் கண்டுபிடித்தான். சுற்றிலும் நீரால் சூழப் பட்டிருந்த அந்த இடத்தில் பெரிய கோட்டை ஒன்றையும் கட்டிக் கோயிலையும் அமைத்து லிங்கத்தைப் பிரதிஷ்டையும் செய்தான். ஆரம்பத்தில் பக்தர்களின் பிணியைப் போக்கும் இவருக்கு ஜுரகண்டேஸ்வரர் என்ற பெயரே இருந்து வந்துள்ளது. பின்னர் அதுதான் ஜலகண்டேஸ்வரர் என மாறிவிட்டதாய்ச் சொல்கின்றனர். சிலர் இப்போதும் இரு பெயர்களாலும் அழைக்கின்றனர். கோட்டையின் உள்ளே அமைந்த இந்தக் கோயிலின் அமைப்பும், கோட்டையின் அமைப்பும் வியக்கும்படியாக உள்ளது. வேலூர் என்றாலே கோட்டையை நினைவுறுத்தும் வண்ணம் அமைந்த இந்தக் கோட்டையின் ஜலகண்டேஸ்வரருக்குப் பல வருஷங்கள் வழிபாடுகள் இல்லாமல், அரசன் இல்லாக் கோட்டை, ஈசன் இல்லாக்கோயில், நீர் இல்லா ஆறு” என்னும் வழக்குச் சொற்களுக்குப் பாத்திரமாக இருந்தது.

பதினாறாம் நூற்றாண்டிலே விஜயநகர அரசர்களின் பிரதிநிதியான சின்ன பொம்மியால் கட்டப் பட்டது. மிக அழகான சிற்பவேலைப்பாடுகள் நிறைந்த இந்தக் கோட்டைக் கோயில், பின்னால் சந்தா சாகிபின் மைத்துனன் ஆன மொர்தாஸா அலி என்பவனால் கைப்பற்றப் பட்டது. சந்தாசாகிபின் வாரிசும் ஆற்காட்டின் உரிமையும் தனக்குத் தான் என்று சொன்ன மொர்தாஸா அலியிடமிருந்து பின்னர் ஆதில்ஷா என்னும் பீஜப்பூர் சுல்தானிடம் போய்ச் சேர்ந்தது. பின்னர் மராட்டிய சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தின் போது மராட்டியரிடம் சில வருடங்கள் இருந்து, பின்னர் தெளத்கான் என்னும் டில்லி சுல்தானிடம் போய்ப் பின்னர் ஆங்கிலேயர் திப்பு சுல்தானின் மரணத்திற்குப்பின்னர் இந்தக் கோட்டைக் கோயிலை 1760-ம் ஆண்டு எடுத்துக் கொண்டார்கள். பல நூற்றாண்டுகள் இந்தக் கோயிலில் மூர்த்தப் பிரதிஷ்டை இல்லாமலும் வழிபாடுகள் நடைபெறாமலுமே இருந்து வந்தது.

மிக மிக சமீபத்தில் தான் இந்தக் கோயில் புனர் நிர்மாணம் செய்யப் பட்டு திருப்பணிகள் நடந்து கும்பாபிஷேஹமும் முடிந்தது. இந்தக் கோட்டையைச்சுற்றிலும் இருபத்து ஐந்து அடி ஆழத்தில் உள்ள அகழி நீர் நிறைந்து காணப்படுகிறது. அகழியின் மேலே இருந்து கீழே இறங்கச் சிலபடிகளைக் கடந்தே கோயிலுக்குள் நுழையவேண்டும். கோயிலின் கல்யாணமண்டபம் வித்தியாசமான சிற்பங்களோடு கலையம்சமும், தெய்வீகமும் பொருந்திக் காட்சி அளிக்கிறது. இதிலுள்ள கிளிகளின் சிற்பங்கள், வெண்ணைத் தாழிக் கிருஷ்ணர், சரபர் போன்றவர்களின் சிற்பங்களின் அழகை இன்று முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். படம் எடுத்தால் துரத்துகிறார்கள். மாலைவேளையில் சென்றதால் கூட்டம் வேறே. இந்தக் கல்யாண மண்டபத்துத் தூண்களிலே எண்கள் பொறித்துள்ளதைக் காணும்போது வியப்பாய் இருந்தது. நம்ம சுற்றுலா நடத்துநர் இந்த மண்டபத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்து செல்ல ஆங்கிலேயத் தளபதி ஒருவர் மிகவும் முயன்றாராம். தூண்கள் வரிசை மாறாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே எண்களையும் பொறித்து வைத்தாராம். கப்பல் ஒன்றையும் வரவழைத்திருக்கிறார் மண்டபத்தை எடுத்துச் செல்ல. ஆனால் அந்தக் கப்பல் ஐரோப்பாவில் இருந்து வரும் வழியிலேயே முழுகி விட்டதாம். அதன் பின்னரே அவர் திட்டத்தைக் கைவிட்டார். நமக்குத் தெரியறதில்லை நம்ம ஊர்ச் சிற்பங்களின் அருமை, பெருமை எல்லாம். எங்கிருந்தோ வரும் ஆங்கிலேயர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் தெரியுது.

மூலஸ்தானத்தின் ருத்ராக்ஷப் பந்தல் மிக அழகாய்க் காட்சி அளிக்கிறது. அந்த ருத்ராக்ஷப் பந்தலின் கீழேயே ஜலகண்டேஸ்வரர் அருள் பாலிக்கிறார். உற்சவர் காலசம்ஹாரமூர்த்தி. திருக்கடையூரில் இருப்பவரே இங்கே உற்சவராகக் காணப்படுகிறார். இந்தக் கோயிலிலும் சஷ்டி அப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம், ஆயுஷ்ஹோமம், திருமணங்கள் போன்றவையும் நடந்து வருவதாயும், ஜலகண்டேஸ்வரருக்கு ருத்ராபிஷேஹம் செய்து வைப்பதாய் பக்தர்கள் நேர்ந்து கொள்வதாயும் தெரிய வருகிறது. பெண்கள் திருமாங்கல்யக் காணிக்கைகளும் செலுத்துவதுண்டு எனத் தகவல் பலகை தெரிவிக்கிறது. பிராகாராத்தில் உள்ள கிணற்று நீர் கங்கையின் நீராகவே கருதப் படுகிறது. அருகேயே கங்காபாலாறு ஈஸ்வரர் என்னும் பெயரில் ஒரு லிங்கமும் ஸ்தாபிக்கப் பட்டுள்ளது. கிணற்றுக்குள் இந்த லிங்கம் இருந்ததாகவும், வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்திருப்பதாகவும் கூறுகின்றனர். லிங்கத்தின் பின்னாலேயே பைரவரும் காணப்படுகிறார். கங்கையான கிணறு, லிங்கம், பைரவர் மூவரும் ஒரே இடத்தில் காட்சி கொடுப்பதால் வேலூர் காசி என்றும் இந்த ஊரைச் சொல்லுகின்றனர்.

2 comments:

  1. god willing ஜலகண்டேஸ்வரரை , கோவிலை கொஞ்சம் நிதானமா நேரம் எடுத்துண்டு பார்க்கணும், அழகு கோவில்

    ReplyDelete
  2. வாங்க ஜெயஸ்ரீ, நேரில் சந்திக்கும் நாளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete