Sunday, December 9, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


ஹைதராபாத் நகரில் அவரைக் காவலில் வைத்தனர் சேவகர்கள்.  கோபன்னாவின் மாமன்மாருக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  இருண்ட சிறைச்சாலையில் மாமன்மார் வந்து பார்த்து கோபன்னாவைக் கோபம் பொங்கத் திட்டித் தீர்த்தனர்.  தானீஷாவின் முன்னிலையில் கோபன்னா விசாரணைக்கு வந்தார்.  மன்னனிடம் தாம் மன்னனைக் கேளாமல் செய்தது தவறே என ஒப்புக் கொண்ட கோபன்னா, இந்தத் திருப்பணியை மன்னனே முன்னின்று நடத்தி இருக்க வேண்டும் என்றும் இதனால் விளைந்த, விளையப் போகிற நற்பலன்கள் அனைத்தும் அரசுக்கே ஏற்படும் என்றும் கூறிய கோபன்னா ஸ்ரீராமனின் மகத்துவத்தையும் பக்தியின் பெருமையையும் அதன் விளைவாய் ஏற்படும் ஞானத் தத்துவங்களையும் மன்னனிடம் எடுத்து உரைத்தார்.  ஆனால் மன்னன் மனம் மாறவில்லை.  கோபன்னாவின் அறிவாற்றலும், ஞானத்தையும் கண்டு உள்ளூர வியந்தாலும் பண விஷயத்தில் இம்மியும் விட்டுக் கொடுக்க மன்னன் தயாராக இல்லை.  மேலும் கோபன்னா ஒருவரை விட்டு விட்டால் பின்னர் இம்மாதிரியே எல்லாரும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  எல்லாரும் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திருப்பணி என்பார்கள்.  ஆகவே இந்த கோபன்னாவிடம் நயந்தும், பயந்தும் பேசியே பணத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.  கோபன்னாவ்விடமிருந்து ஆறு லக்ஷம் வராஹன்கள் வரும் வரையிலும் சிறையில் அடைக்குமாறு கூறி மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டான் தானீஷா.  மக்கள் செய்தியறிந்து வீதிக்கு வீதி இது குறித்தே விவாதித்து வந்தனர்.

கோபன்னா சிறையில் இருந்தார்.  கரடுமுரடான தரை.  கிழிந்ததொரு பாய்.  போர்த்திக்கொள்ள மிக மோசமானதொரு கம்பளி.  அந்த அறையில் படுக்கவே முடியவில்லை. ஆனால் அங்கே படுக்கையிலே காட்டிலே ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமன் கட்டாந்தரையிலே புற்படுக்கையிலே படுத்தது அவர் மனதில் வந்தது.  ஆஹா, அந்த ஸ்ரீராமன் காட்டில் புழுதியிலே கட்டாந்தரையிலே புற்களால் ஆன படுக்கையில் அல்லவா படுத்திருந்தான்.  அதுவும் ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா!  ப்தினான்கு ஆண்டுகள். ஸ்ரீராமா நீ எப்படித்தான் தூங்கினாய் அப்பா. என மனம் உருகினார்.  உணவும் சரியாக அமையவில்லை கோபன்னாவுக்கு.  உப்பும் அரிசியும் சரிசமமாகக் கலக்கப்பட்ட அன்னத்தைக் காவலன் கொடுக்க அதுவும் ஸ்ரீராமன் அருளால் கிடைத்த பிரசாதமே என மனம் உருகி வாங்கி உண்டார் கோபன்னா.  தன் மனதுக்குள்ளாக ஸ்ரீராமனுக்கு மானஸ பூஜை செய்து கொண்டே இருந்தார்.  அவர் உடல் தான் சிறையில் இருந்ததே தவிர உள்ளம் முழுதும் ஸ்ரீராமனிடம் மூழ்கி இருந்தது.  ஆகவே சிறைச்சாலையின் துன்பங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை.  சிறையிலும் ஆனந்தமாக அவர் இருப்பதைக் கேள்விப் பட்ட தானீஷா, ஆஹா, இது சரியில்லை;  இவனை முச்சந்தியிலே நிறுத்துக் கசையடி கொடுங்கள்.  பணத்திற்கு அப்போதானும் வழி சொல்லுவான் எனக் கூறினார்.

தண்டனைச் செய்தி ஹைதராபாத் நகரம் முழுதும் பரவியது. மக்கள் துடிதுடித்தனர்.  ஆஹா, கோபன்னா எத்தகைய ராமபக்தர்!  அவருக்கா இத்தகைய தண்டனை! பணத்தை அவரா எடுத்துக் கொண்டார்.  தம் மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்தாரா!  இல்லையே.  அல்லது தமக்கென நிலம், நீச்சு என வாங்கிச் சேர்த்தாரா.  அதுவும் இல்லையே.  பத்ராசலம் கோயிலுக்கன்றோ செலவழித்தார்.  கோபன்னா திருப்பணிக்கு முன்னர் பத்ராசலம் எப்படி இருந்தது!  இப்போதோ, பூலோக வைகுண்டம் போல் அல்லவா ஒளிர்கிறது.  கோயில் மட்டுமா அழகாக அமைந்துள்ளது!  வழிபாடுகளில் என்ன விமரிசை, என்ன பக்தி.  இப்படி எல்லாம் நடக்க ஏற்பாடு செய்த ஒரு பரமபக்தரை இப்படியா தண்டிப்பது.  இது தகாது.  அநியாயம்.  என ஓலமிட்டனர் மக்கள்.  “ஏ ராமா, இது என்ன நீயும் தானீஷாவுடன் சேர்ந்து வேடிக்கையா பார்க்கிறாய்.  அல்லது இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றோ! என ஸ்ரீராமனையே பலரும் கேட்டனர்.  கோபன்னாவும் வீரர்கள் காவலுடன் முச்சந்தியை நோக்கி அழைத்து வரப் பட்டார்.  ஊரார் சிலர் வேடிக்கை பார்க்க, பெரும்பான்மை மக்கள் கதறி அழ கோபன்னாவுக்கு தண்டனை நிறைவேறத் தொடங்கியது.  ஸ்ரீராமன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார் கோபன்னா.  அடியோ மேன்மேலும் விழுந்தது.  முதுகிலே ரத்தம் பீறிட பத்துப் பிரம்புகளுக்கும் மேல் முறிந்து விழ, ராமசந்திரனுக்கு மங்களம் என்ற வார்த்தையையே கோபன்னா திரும்பத் திரும்பக் கூற அவரை அடிப்பதிலும் பயனில்லை என உணர்ந்த சேவகர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  அடிக்குப் பயந்து பணத்துக்கு ஏற்பாட்டு செய்வார் என தானீஷா எதிர்பார்த்ததும் நடக்காமல் போகவே தலையில் பாறாங்கல்லைச் சுமந்து கொண்டு நகர் முழுவதும் வலம் வரச் சொல்லி தண்டனை கொடுத்தான் தானீஷா.

அந்த தண்டனையையும் ஸ்ரீராமன் பெயரைச் சொல்லிக் கொண்டே நிறைவேற்றினார் கோபன்னா.  பின்னர் கைகால்களைக் கட்டி மணலில் உருட்டினர்.  அப்போதும் மனம் தளராமல் ஸ்ரீராமன் பெயரைச் சொன்ன வண்ணம் நிறைவேற்றினார்.  இப்படியே வருடங்கள் உருண்டன.  கோபன்னாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  தண்டனைகளும் நிற்கவில்லை.  கோபன்னாவின் மன உறுதியும் தளரலாயிற்று.  இந்த ஸ்ரீராமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறானே.  அவனும் ஒரு மனிதனாகத் தானே இருந்தான்.  மனிதன் படும் துயரம் எத்தகையது எனப் புரிந்து கொள்வான் என நினைத்தேனே.  நான் அவனை இறைவன் என நினைத்தது தவறு.  எல்லாப் பொருட்களையும் எனக்கா செலவு செய்து கொண்டேன்.  ஏ, ராமா, உனக்கல்லவோ செலவு செய்தேன்.  உன் கோயில் பிராகாரங்களுக்கே லக்ஷம் பொன் செலவிட்டேனே.  உனக்குத் தான் ஆடை, ஆபரணங்கள், நகைகள் போன்றவை வாங்கினேன்.  அத்தனையையும் நீ தானே அனுபவிக்கிறாய்.  எவ்வளவு வாங்கினேன்.  உன் மாமனாரான ஜனகனா கொடுத்தான்.  அத்தனையும் தானீஷாவுக்குச் சேர வேண்டிய வரிப்பணம்.  உனக்காகத் தானே செலவழித்தேன்.  அப்போது நீ பேசாமல் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு இருந்துவிட்டு இப்போதும் வேடிக்கையா பார்க்கிறாய்!  என் துன்பம் உனக்குப் புரியவில்லையா!  இந்த கோபன்னாவுக்கு இன்னும் எத்தனை அடிகளும், தண்டனைகளும் இருக்கிறதோ அத்தனையும் தாங்கட்டும் என நினைக்கிறாயா?

இவ்வாறே அவர் ஸ்ரீராமனைப் போற்றியும் நிந்தித்தும் பல பாடல்களைப் புனைந்து பாடினார்.  அப்போது ஒரு நாள் திடீரென அவருக்கு சீதையின் தோற்றம் கண்களில் தெரிந்தது.  “அம்மா, தாயே, உன்னை மறந்துவிட்டேனே.  என் துன்பத்தை நீயாவது உன் கணவனுக்கு எடுத்துச் சொல்லமாட்டாயா. என் கடவுள் என உன் கணவன் ஸ்ரீராமனை நான் எண்ணியது அத்தனையும் வீண்.  அவனுக்கும் உனக்கும் தானே நான் செலவு செய்தேன்.  அவனாவது ஒரு வார்த்தை தானீஷாவிடம் போய்ச் சொல்லக் கூடாதா!  அவன் சொல்லவில்லை;  சொல்லவும் மாட்டான்.  தாயே, நீ தான் எனக்காக எடுத்துச் சொல்லக் கூடாதா?  நானும் எத்தனை வருடங்கள் இன்னமும் பொறுப்பது!  உன் கணவனுக்குக் கல் நெஞ்சம் அம்மா.  அவன் இரக்கமே காட்ட மாட்டான்.  கடினமான மனம் இருந்ததால் தானே, உன்னை, “தீக்குளித்துவிட்டு வா!” என்று சொன்னான். அதோடு விட்டானா!  நிறை கர்ப்பிணியான உன்னைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னானே.  அப்போதே அவன் குணம் எல்லாருக்கும் புரிந்துவிட்டது.  நான் தான் புரிந்து கொள்ளவில்லை.  அவன் கருணையே இல்லாதவன் அம்மா;  இவனைப் போய்க் கருணாசாகரன் எனச் சொல்வது தப்பு. வேண்டாம் தாயே, வேண்டாம்.  நீயும் அருள் புரிய வேண்டாம்.  உன் கணவனும் உதவி செய்ய வேண்டாம். நான் விஷம் குடித்து உயிரை விட்டு விட்டு நேரிலேயே வந்து உன் கணவனைக் கேட்கிறேன்.  ஆம் அது தான் சரி. இவ்வாறெல்லாம் எண்ணிய கோபன்னா எங்கிருந்தோ விஷம் எடுத்து வர ஏற்பாடு செய்து அதை நீரிலே கரைத்துவிட்டுக் குடிக்க ஆயத்தமானார்.  சீதம்மா, நீயாவது உன் கணவனிடம் சொல்ல மாட்டாயா எனக் கேட்டுக் கொண்டே விஷத்தைக் குடிக்க ஆயத்தம் ஆனார்.


No comments:

Post a Comment