Sunday, August 25, 2013

அப்பா 3!

கணவன் வந்துவிட்டதை அறிந்து மாமியார், மாமனாருக்குக் காஃபி கொண்டு கொடுத்த கலா கணவனுக்கும், தனக்கும் காஃபி கலந்து கொண்டாள்.  தங்கள் அறைக்குச் செல்லக் கிளம்பினாள்.  இத்தனை நேரம் உள்ளே உட்கார்ந்திருந்த அவள் மாமியாரும், மாமனாரும், எப்படியோ ஊகித்தாற்போல் இப்போது ஹாலில் வந்து உட்கார்ந்திருந்தனர்.  அவள் செல்வதைப் பார்த்த மாமனார் கண்களால் ஜாடை காட்ட  அவள் மாமியாரோ, " ஆச்சு, இப்போ மந்திரம் ஓதியாகும். அவன் என்னிக்கோ வந்துண்டிருந்தான்.  இப்போத் தான் நிரந்தரமா இங்கே இருக்கப் போறான்.  அவனே பார்த்துக்கட்டும், இங்கே நடக்கிற அநியாயத்தை!  இவள் அடிக்கிற கொட்டத்தை நேர்லே பார்த்தாத் தான் புரியும் அவனுக்கும்." என்று சத்தமாகச் சொன்னாள்.  காதில் விழாதது போல் சென்றுவிட்டாள் கலா.

உள்ளே ராகவன் ஏதோ அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.  கதவு திறந்த சப்தம் கேட்டுத் தன் தாய் தான் வராளோ என நிமிர்ந்தவன், கலாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.  "வந்துட்டியா? எப்போ வந்தே?  வரச்சே கீழே விசாரிச்சேன்.  ஏதோ புது கேஸ் வந்திருக்குனு சொன்னாங்க.  யார் அது?  ஆணா, பெண்ணா? பிரசவ கேஸா?  இல்லை ஆர்டினரியா?" என்று கேள்விகளை அடுக்கினான்.

"முதல்லே காஃபியைப் பிடிங்க!" என்று அவன் கையில் காஃபியைக் கொடுத்த கலா, உரிமையோடு அவன் அருகில் உட்கார்ந்தாள்.  சற்று நேரம் பேசாமல் காஃபியை அருந்தியதும், அவள்,"இன்னிக்கு வந்த கேஸ் ஆண் தான்.  யார்னு தெரிஞ்சா ஆச்சரியப் படுவீங்க!" என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள். அவள் முகத்தைப் பார்த்து எதுவும் புரியாத ராகவன், "ம்ம்ம்ம்ம்ம், சாயந்திரமா வரேன்." என்றான்.  "குழந்தைங்க வந்துட்டாங்களா?" என்றும் விசாரித்தான்.  "வர நேரம் தான்!  இப்போ வந்துடுவாங்க. அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் பண்ணணும்." என்றவாறு எழுந்தாள் கலா. "ம்ம்ம்ம், அங்கே ஆஸ்பத்திரியிலும் நோயாளிகளோடு மன்னாடிட்டு, இங்கேயும் வந்து வேலை செய்யறியே!  உன் உடம்பையும் கவனிச்சுக்க வேண்டாமா?  உனக்கு ஏதானும் ஒண்ணுனா எனக்குத் தாங்க முடியாது.  ஒரு ஆளைப் போட்டுக்கறது தானே! நீ இல்லைனால் நாங்கல்லாம் என்ன செய்வோம்!" என்றான்.

அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்த கலா, "என் சிநேகிதியிடம் சொல்லி இருக்கேன். அனுப்பறதாச் சொல்லி இருக்கா!" என்றவள் கொஞ்சம் தயங்கினாள். "என்ன யோசனை?  அந்த ஆளை முடிச்சுடு! யோசிக்காதே!" என்றான் ராகவன்.  "இல்லை" என்று மீண்டும் கலா தயங்க, "அப்பா, அம்மாவுக்காக யோசிக்கிறாயா?" என்றான் ராகவன்.  நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கலா.  அந்த ஒரு பார்வையிலேயே அனைத்தும் புரிந்தது அவனுக்கு.  "யோசிக்காதே!  அந்த ஆள் வரட்டும். அவங்களையே நியமிச்சுடு.  நான் இனி இங்கே தான் இருக்கப்போறேன்.  அடுத்து மாற்றல் வந்தாலும் வேறே துறைக்கு மாறிடலாம்னு ஒரு எண்ணம். பார்ப்போம்.இல்லைனா, வேலையை விட்டுட்டு, உன்னோட ஆஸ்பத்திரி மேனேஜ்மென்டைப் பார்த்துண்டு உட்காரலாமானு இருக்கேன்." என்றான்.

"அப்பா, சாமி, அந்த வேலை மட்டும் வேண்டாம்.  அப்புறமா நான் இந்த வீட்டிலேயே இருக்க முடியாது!" என்றாள் கலா.  அதற்குள்ளாகக் குழந்தைகளின் கூக்குரல் கேட்க, அவங்க வந்துவிட்டது தெரிஞ்சு கலா மீதம் பேச்சு வார்த்தையை இரவில் வைச்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினாள்.  ராகவனுக்கும் கலாவுக்கும் ஒரு பெண், ஒரு ஆண் .  பெண் பெரியவள், பையன் சின்னவன்.  பெண் ஐந்தாம் வகுப்பிலும், பையன் முதல் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.  அன்று பள்ளியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருந்தது.  அதில் பங்கேற்கச் சென்ற கலாவின் பெண் அதில் பரிசு வாங்கி இருந்தாள்.  அந்த உற்சாகம் தான் இருவருக்கும்.  சந்தோஷத்தோடு பாட்டியிடம் அதைக் காட்டினாள் ஷோபா.  முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்ட பாட்டி, "என் மேலே பட்டுடாதே.  உன் அம்மாதான் ஆஸ்பத்திரித் தீட்டை எல்லாம் கொண்டு வரான்னா, நீயும் என் மேலே இடிச்சு, என்னை ராத்திரிச் சாப்பிட விடாமப்பண்ணிடாதே!" என்றாள்.

குழந்தை முகம் சுருங்கியது.
*********************************************************************************
சந்திரா வாயே திறக்கவில்லை.  அத்தனை குழம்பையும் கொட்டினான்.  நினைவாகத் தனக்குத் தேவையானதை எடுத்து வைத்துக்கொள்ள மறக்கவில்லை.  குழந்தைகள் வாய் திறவாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவன் கத்திக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.  அந்த வீட்டில் அவன் தான் தலைவன்.  குடும்பத் தலைவன்.  அவர்கள் அனைவருக்கும் அவன் தான் சோ'று போட்டுக் காப்பாற்றி வருகிறான். ஆகவே அவனுக்குத் தான் முதலிடம்.  அவனுக்குத் தெரியாமல் யாரும் எதுவும் பண்ண முடியாது.  அவனுக்குத் துரோகம் செய்வதாம் அது. வயிறு நிறையச் சாப்பிடவும் கூடாது. அவனாகப் பார்த்து இதைச் சாப்பிடுங்கனு சொன்னால் சாப்பிடணும்.  இல்லைனால் பார்த்துக் கொண்டே பேசாமல் இருக்கணும்.  சந்திராவும் குழந்தைகளும் அப்படியே பழகி விட்டனர். பண்டிகை, விசேஷ நாட்களில் குழந்தைகள் பாவம் என்று அக்கம்பக்கத்திலிருந்து ஏதேனும் தின்பண்டமோ, வேறு ஏதேனுமோ கொண்டு வந்து கொடுத்தால் அப்படியே திருப்பி விடுவான். ஒரு தரம் அவங்க வீட்டில் பண்டிகை இல்லை.  ஆடிப்பெருக்குச் செய்த கலந்த சாதங்களை ஒரு டிபன் காரியரில் போட்டுக் கூடவே ஒரு பாத்திரத்தில் அப்பளம், கறிவடாமும் எடுத்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமி வந்து கொடுத்துப் போனார்.  சந்திராவும் சகஜமாக வாங்கிக் கொண்டு விட்டாள்.

அவன் வந்ததும் சாப்பிட அமர்ந்தான்.  வீட்டுச் சாப்போடு இருந்த அந்தப் புதிய உணவு வகைகளைப் பார்த்தவன், "ஏது இது?" என்று உறுமினான்.  சந்திரா, பக்கத்துப் போர்ஷன் மாமி குழந்தைகளுக்குனு கொடுத்ததாகச் சொல்லவே, அந்த உணவு அப்படியே பாத்திரத்தோடு வீசி எறியப் பட்டது.  தன் போர்ஷனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாமிக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது.  அவனை வந்து ஏன் இப்படிப் பண்ணறீங்கனு கேட்டதுக்குக் கன்னாபின்னாவென்று பேசிவிட்டான்.  அதிலிருந்து அந்த மாமி சந்திராவிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை. இதெல்லாம் சந்திராவுக்குப் பழக்கம் ஆகிவிட்டது.  ஆனால் குழந்தைகள் என்ன செய்யும்?

அவன் சாப்பிட்டு விட்டு எழுந்ததும், குழந்தைகளைச் சாப்பிட அழைத்தாள் சந்திரா. ஒருத்தருக்கும் சாப்பிடணும்னு தோணலை.  ஆனால் சாப்பிடலைனு சொன்னாலும் அதுக்கும் திட்டுவான். வாயே திறக்காமல் மூவரும் வந்து அமர்ந்தனர். குழந்தைகளுக்கு மாவடுவைப் போட்டுவிட்டு சாதத்தைப் போட்டு ரசத்தை ஊற்றினாள்.  எங்கே!  குழம்பை எல்லாம் தான் கொட்டியாச்சே! காய் பண்ணினதில் அவள் எடுத்து வைக்கும் முன்னரே அவன் வந்துவிட்டான்.  ஆகவே அவன் சாப்பிட்டது போக மிச்சத்தை ராத்திரிக்கு வைத்துக் கொண்டு  அவன் சிநேகிதமாய் இருக்கும் எதிர் வீட்டிற்கு அவனே நேரில் கொண்டு கொடுத்தான்.  அந்த வீட்டம்மா, "உங்க குழந்தைங்களுக்கு வேண்டாமா?" னு கேட்டதுக்கு,
"ஒண்ணும் கேட்காதீங்கம்மா!" என்று ஜெயராமன் அழ ஆரம்பித்தான்.  அந்த அம்மா திகைத்துப் போனாள்.

3 comments:

  1. அடுத்த பகிர்வு வந்தால் தான் புரியும்...!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. டிடி, எனக்கும் புரியலை! :))))

    ReplyDelete
  3. மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பது ஜெயராமன் என்று நினைத்தேன். சந்திரா - ஜெயராமன் கதை flashback தானே?

    ReplyDelete