Friday, December 25, 2009

என் பயணங்களில் ரத்தினகிரி முருகனக் காண்போமா??

குன்றின் உச்சிதோறும் குமரன் இருப்பதற்கு யோக முறையில் கூறும் காரணம் அறிந்திருக்கலாம். நம் உடலின் உச்சியில் உச்சந்தலையில் இருக்கும் சஹஸ்ராரத்தை நினைவு படுத்தும் விதமாகவே குன்றுதோறும் குமரன் குடி கொண்டிருக்கிறான். குமரனின் ஆறுமுகங்களுமே ஆறு சக்கரங்களாகும். இதுக்கு மேலே விளக்குவது சரியில்லை. ஒவ்வொரு சக்கரமும் நம் உடலில் உள்ளன. கடைசியில் கிடைக்கும் சச்சிதாநந்தப் பேரொளியே சிவசக்தி ஐக்கிய சொரூபமான குமரன். அதை நினைவூட்டும் விதமாய் ஏற்பட்ட கோயில்களில் இந்த ரத்தினகிரியும் ஒன்று. படம் கிட்டே எடுக்க அநுமதி இல்லை வழக்கம்போல். கீழே இருந்தே எடுத்தோம். ஜூம் பண்ணி எடுத்த படங்கள் சரியாய் இல்லை. அதனால் இருப்பதற்குள் சுமாரான படங்களே போட்டிருக்கேன். இனி கீழே ரத்தினகிரி வரலாறு.
அடுத்தும் கடைசியாவும் நாங்க போனது ரத்தினகிரி பாலமுருகனைத் தரிசிக்க. இங்கே தான் மின்வாரிய ஊழியர் ஒருவர் முருகனால் ஆட்கொள்ளப் பட்டதாயும், அதன் பின்னர் அவர் துறவறம் மேற்கொண்டு இங்கேயே வசித்து வருவதாயும் எங்கள் சுற்றுலா நடத்துநர் கூறினார். மேலும் மாலை ஏழு மணி அளவில் நாங்கள் தரிசனத்துக்குச் செல்வதால் பாலமுருகனடிமை(அந்தத் துறவிக்கு இப்போது இதான் பெயர் என்று சொன்னார்கள்) அவர்களே முருகனுக்கு வழிபாடு நடத்துவார் என்றும் விருப்பம் இருந்தால் யாரையேனும் அழைத்தும் பேசுவார் என்றும் சொன்னார். நாங்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றோம். சின்னஞ்சிறு மலைதான் என்றாலும் ஏற்கெனவே நடந்து நடந்து அலுத்துக்களைத்துப் போயிருந்ததால் ஏறமுடியாது என்று நடத்துநர் கூறி இருந்தார். மேலும் கீழே இருந்து மேலே மலைக்குச் செல்ல ஆட்டோக்களுக்குச் சொல்லி இருப்பதாகவும் ஒரு ஆட்டோவில் நாலு பேர் அமரலாம் என்றும் சொல்லி இருந்தார். ஆட்டோ கட்டணமும் சொல்லிவிட்டார். ஆகவே நாங்க போய் எங்க பேருந்தை விட்டு இறங்கினதுமே ஆட்டோக்கள் வரிசையா வந்து நின்றது. அனைவரும் ஏறிக் கொண்டோம். ஆட்டோ மேலே சென்று அங்கே உள்ள வாயிலுக்கு அருகே நின்றது. அடிவாரத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. அதைத் தரிசித்துக் கொண்டே சென்றோம்.

படிகள் என்றால் கிட்டத்தட்ட ஆயிரம் அல்லது ஆயிரத்தைந்நூறு இருக்கலாமோ என்னமோ தெரியலை. என்றாலும் மேலே வந்தும் பத்து, இருபது படிகள் ஏறியே செல்லவேண்டி இருந்தது. இந்தக் கோயிலில் முருகன் குழந்தை முருகனாக பால முருகனாக இருக்கிறான். இங்கே சூர சம்ஹாரம் இல்லை என்று சொன்னார்கள். இந்தக் கோயில் பற்றி அருணகிரியார் பாடிய திருப்புகழ்ப் பாடல் கீழே/

பத்தியால் யான்உனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே!


ரத்தினகிரித் திருப்புகழ்னு கேட்டதுக்குக் கூகிளார் இதான் கொடுத்தார். கோயில் அருணகிரி நாதருக்கும் முன்னாலே இருந்ததாகவும், அருணகிரியார் இந்த முருகன் மேல் திருப்புகழ் பாடிப் பல வருஷங்கள் சென்றும், இங்கே வழிபாடுகள் சரிவர நடக்காமல் இருந்ததாகவும் சொல்கின்றார்கள். சிறிய குன்றாய் இருந்தாலும் கோயிலுக்குச் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாம். ஒருவேளை அர்ச்சகர் வந்து வழிபட்டுச் செல்வார் என்றும், நாற்பது வருடங்கள் முன் வரையிலும் இந்நிலைமையே என்றும் சொன்னார்கள். அறுபதுகளின் கடைசியில் ஒருநாள் பக்தர் ஒருவர் தற்செயலாக மலை ஏறி மேலே சென்று முருகனை தரிசித்திருக்கிறார். அப்போது அங்கிருந்த அர்ச்சகரிடம் கற்பூர தீப ஆராதனை காட்டித் தரிசனம் செய்து வைக்கச் சொல்லி இருக்கிறார். அர்ச்சகரோ கற்பூரம் இல்லை என்றும், ஊதுபத்தி போன்ற எந்தவித வாசனைப் பொருட்களும் இந்த முருகனுக்குக் காணிக்கை செலுத்துபவர் இல்லை என்றும் சொல்லி விட்டாராம். அடக் கடவுளே, உனக்கே இந்நிலைமையா என எண்ணிய அந்த பக்தர் இப்படிப்பட்ட நிலைமையில் உனக்கு எதுக்குக்கோயில் என நினைத்தாராம்.

அப்போது அங்கேயே திடீரென அவர் மயக்கம் போட்டு விழப் பயந்து போன அர்ச்சகர், அங்கே உதவிக்கு ஆட்கள் இல்லாமையால் மலை அடிவாரம் சென்று ஆட்களை அழைத்து மேலே ஏறி வந்திருக்கிறார். வந்து பார்த்தால் சற்று முன்பு மயக்கமாய்க் கிடந்தவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, தான் அணிந்து வந்த உடைகளைக் களைந்துவிட்டுக் கொண்டு வந்த ஒரு துண்டை மட்டும் உடுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரைக் கண்ட அர்ச்சகர் நடந்தது பற்றி விசாரிக்க அவரோ பேசாமலேயே இருந்தார். பின்னர் அங்கிருந்த மணலில், “முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான். இனி இந்த முருகன் கோயிலின் திருப்பணி ஒன்றே என் வாழ்நாளில் லட்சியம். மலையை விட்டுக் கீழே இறங்க மாட்டேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே உட்கார்ந்துவிட்டார். அவருடைய இடைவிடா முயற்சியால் பின்னர் அங்கு முருகனுக்குக் கோயில் எழுப்பப் பட்டு கும்பாபிஷேஹம் நடந்திருக்கிறது.

அதன் பின்னர் கோயிலைப் பலவிதங்களிலும் மேம்படுத்தி இருக்கிறார். இப்போது பாதைகள் நன்கு செப்பனிடப் பட்டு நல்ல சாலை மேலே வரையிலும் செல்கிறது. இங்குள்ள முருகனுக்கு ஆறு வகை மலர்கள், ஆறு நேரம் அர்ச்சனைகள், வழிபாடுகள் முதலியன ஆறு அர்ச்சகர்களால் செய்யப்படுவதாயும் இது இந்தக் கோயிலின் சிறப்பு என்றும் சொல்கிறார்கள். ஐப்பசி மாதப் பெளர்ணமியில் சிவன் கோயில்களில் நடக்கும் அன்னாபிஷேஹம் போல் இங்கே முருகனுக்கு அன்னாபிஷேஹம் நடக்குமாம். சிவாம்சம் பொருந்தியவர் என்பதால் அன்னாபிஷேஹம் நடத்துவதாய்ச் சொன்னார்கள். கோயிலின் ராஜ கோபுரம் எல்லாமும் பாலமுருகனடிமை அவர்கள் நிர்வாகம் ஏற்றுக் கொண்டபின்னரே கட்டப் பட்டிருக்கிறது. உற்சவரை ஷண்முகர் என்று அழைக்கின்றனர். இவர் கல்லினால் ஆன தேரில் காட்சி கொடுக்கிறார். இங்கும் மொட்டை போடுதல், காவடி எடுத்தல் போன்றவை சிறப்பாய் நடக்கின்றன. இங்கே உள்ள வாராஹியும் தோஷங்களைப் போக்குபவள் என்று சொல்கிறார்கள். சிறிய அதே சமயம் அழகான பார்க்க வேண்டிய கோயில்.

இத்துடன் எங்கள் பயணம் இனிதே முடிந்தது. இரவுச் சாப்பாடு நாங்க கையிலே கொண்டு போயிருந்தோம். அம்பத்தூர் போக இரவு பதினோரு மணி ஆகும் என்றதால் ரத்தினகிரியில் இருந்து கிளம்பும்போதே இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம். மிக மிக செளகரியமான பயணமாகவும், இனிமையான பயணமாகவும், சற்றும் மனவேறுபாடுகள் இல்லாத பயணமாகவும் அமைந்ததுக்கு சுற்றுலா நடத்துநருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டோம்.
ட்ராவல்ஸ் விலாசம் K.M.S. Tourist,
250/2, M.T.H.Road, Venkatapuram, Ambattur.
Chennai – 53. 94441 09566/ 93818 16226

8 comments:

  1. சின்னஞ்சிறு மலை ஆனா 1000 படிகளா? இதெல்லாம் உங்களுக்கு சின்னஞ்சிறு மலைன்னா பெரிசு எது? ஓ கைலாஷ் போயிட்டு வந்தவங்க இல்லே?
    :-))

    //ட்ராவல்ஸ் விலாசம் K.M.S. Tourist,//
    என்ன கமிஷன்? ;p;p;p

    ReplyDelete
  2. //ட்ராவல்ஸ் விலாசம் K.M.S. Tourist,//
    என்ன கமிஷன்? ;p;p;p//

    ஹிஹிஹி, அடுத்த பய்ணம் ஓசியாய் இருக்குமோன்ற நப்பாசைதான்! :))))))))))))))

    ReplyDelete
  3. Miga Arumai Geetha madam. Kelvi patruken ana innum ponathu illa

    -LK

    http://lksthoughts.blogspot.com/2009/12/blog-post_24.html

    ReplyDelete
  4. http://shanthiraju.wordpress.com/2008/06/13/kottamalai/

    intha kovilku poirukengala.. illana oru murai poitu vanga

    ReplyDelete
  5. வாங்க எல்கே, கஷ்டப் பட்டு வழி கண்டுபிடிச்சுட்டு வந்துட்டீங்க இங்கேயும். ரொம்ப நன்றிங்க. கட்டாயமாய் இன்னிக்கு மதியம் உங்களோட பதிவுகளில் என்னோட பின்னூட்டத்தைப் பதிவு செய்கிறேன்.நன்றிங்க உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  6. 1000 padinnaa sollareenga? enakku athaivida kuraivaa than irukkum nu thonarathu.thirukazhukunram, panakala narasimha swami vida kuraichal thaan illaiyo? anyhow, beautiful kovil.

    ReplyDelete
  7. ஜனவரி 9 ம் தேதி ஸ்ரீ பாலமுருகன் அடிமை ஸ்வமிகளை சந்திக்கும் வாய்பை தெய்வம் தந்தது. அவர் பேசுவதில்லை. எழுதி காண்பித்து சொல்கிறார். அந்த பாகியம் எங்களுக்கும் கிடைத்தது.நல்ல தேஜஸ். பழுத்த துறவி.எங்கள் ஆன்மீக பயணத்தை தொடர விடைகள் கிடைத்தன .மனம் நிறைந்தது. உங்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //படிகள் என்றால் கிட்டத்தட்ட ஆயிரம் அல்லது ஆயிரத்தைந்நூறு இருக்கலாமோ என்னமோ தெரியலை //

    சுமார் 150 படிகள் இருக்கும்

    ReplyDelete