Tuesday, June 1, 2010

என்ன பேருனு சொல்றீங்களா இல்லையா???

பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.

இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.

நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.

கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???

இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D

ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!

6 comments:

  1. தொடருங்க தலைவி.....;)))

    விரைவில் நானும் கூப்பிடுவேன் ;)))

    ReplyDelete
  2. அட " யூம் கயா, யூம் ஆயானு போயிட்டு வரத்துக்குள்ள இத்தனை போஸ்ட் போட்டாச்சா!!

    ReplyDelete
  3. வாங்க கோபி, கோபின்னா கொஞ்சம் குழப்பம் தான், கோபிநாத்னா புரிஞ்சுப்பேன் நான். அவர்?? ம்ஹும், சான்ஸே இல்லை! :))))))))

    ReplyDelete
  4. @திவா, இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, சொல்றது கொஞ்சம் தானாக்கும்! :))))))

    ReplyDelete
  5. வாங்க ஜெயஸ்ரீ, பார்த்து ரொம்ப நாளாச்சு.

    ReplyDelete
  6. ஹ ஹா இந்த லட்சணத்தில் இன்னைக்கு நான் போன் செய்து யாருன்னு கண்டு பிடுங்கோ என்று
    வேறு என் பங்குக்கு சொல்ல .................
    நீங்க சரியா கண்டு பிடிச்சுடீங்களே கீதாம்மா :)

    சரி நீங்க சொன்ன கதை எந்த வருடத்தில் எந்த மாதத்தில் இருக்கிறது என்பதை விம் போட்டு சொல்லவும் :))))

    ReplyDelete