Wednesday, December 29, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம் பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்= இங்கே ஈசன் திருநாமத்தைச் சொல்லும்போதும் அதை நினைக்கும்போதும் சிவனடியார்கள் அடையும் நிலை பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதிலும் இந்தப் பாவை நோன்பு வழிபாட்டு முறையில் ஈடுபட்டிருக்கும் அழகான கச்சணிந்த, ஆபரணங்களைப் பூண்ட பெண்கள் இருக்கின்றனரே அவர்களில் ஒருத்தி, ஓரொரு சமயம் ஈசன் நாமத்தைக் கூறும்போதெல்லாம் எம்பெருமான் அவன் நம்பெருமான் என்று பெருமூச்சு விடுகிறாள். மனதினுள்ளே சிவநாமத்தின் இனிமையில் தன்னை மறக்கிறாள்.

சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர= அவள் மனம் மகிழ்ந்து ஈசன் புகழை நினைத்ததை எல்லாம் வாய் ஓயாமல் கூறி இன்புறுகிறாள். அவளிடமிருந்து வேறு பேச்சுக்களே வருவதில்லை. எந்நேரமும் சிவநாமத்தை நினைப்பதோடல்லாமல் அதன் ஈடு, இணையற்ற சிறப்புக்களை எடுத்துச் சொல்லவும் செய்கிறாள்.

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்= அவ்வாறு கூறும்போது அவள் உள்ளம் ஈசன் மேல் கொண்ட காதலால் கனிந்து கண்களில் கண்ணீர் பனிக்கிறது. வாயோ தழுதழுக்கிறது. உள்ளத்தில் நிறைந்திருக்கும் சிவாநந்தப்பெருவெள்ளம் கண்களின் வழியே தாரைதாரையாகக் கொட்டுகிறது.

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள்= செய்வதென்ன என அறியாமல் நிலத்தில் விழுந்து பலமுறை என் ஈசனே, என் பெருமானே, என் சிவனே என்றெல்லாம் கூறிக்கொண்டு வணங்கி எழுகிறாள். மற்றத்தெய்வங்களோ, தேவர்களோ அவள் கண்களில் படுவதில்லை. பட்டாலும் அவர்களை வணங்குவதும் இல்லை.

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்= அரசனுக்கெல்லாம் அரசனான, ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான மாபெரும் அரசனாகிய சிவபெருமானுக்கு அடியார்கள் ஆனால் இப்படித்தான் பித்துப்பிடித்தவர் செயல்கள் போல் இருக்குமோ? அவ்வளவு ஆழமாக அவன் மேல் பக்தி மீதூறி பித்தர்கள் போல் நடந்துகொள்கின்றனரே!

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்= ஆஹா, இவ்வண்ணம் தன் பக்தர்களை ஆட்கொள்ளும் வித்தகரன்றோ நம்பெருமான்.

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி= அழகிய கச்சணிந்த ஆபரணங்களால் அழகு செய்து கொண்ட பெண்களே, வாருங்கள்,

ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!= இந்த அழகான மலர்கள் நிறைந்திருக்கும் பொய்கைநீரில் துள்ளிக்குதித்துப் பாய்ந்து பாய்ந்து நீரைக் குடைந்து நீராடுவோம். ஈசன் புகழைச் சொல்லிப் பாடுவோம், ஆடுவோம்.


பத்துடையீர் : இதற்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். உடலின் கண் தோன்றும் மெய்ப்பாடுகள் :(1) இறைவனைப் போற்றிப்பாடும் பொழுது மிடறு (தொண்டைப்பகுதி) பெருக்கம்.
(2) நாதழுதழுத்தல்
(3) இதழ் துடித்தல்
(4) உடல் குலுங்குதல்
(5) மயிர்சிலிர்த்தல்
(6) வியர்த்தல்
(7) சொல்லெழாமை
(8) கண்ணீர் அரும்புதல்
(9) வாய்விம்முதல்
(10) மெய்ம் மறத்தல்

திரு கன்னியப்பன் அவர்கள் கூறிய மேற்கண்ட விளக்கம் இந்தப் பாடலுக்கு முற்றும் பொருந்துகிறது. நன்றி திரு வடிவேல் கன்னியப்பன் அவர்களுக்கு.

No comments:

Post a Comment