Saturday, December 25, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாண்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே = பாதாளங்கள் என்று பூமிக்குக் கீழே ஏழு இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது. மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம் என்பவை அவை. இவ்வாறு இத்தனை பாதாளங்களுக்கும் கீழே கீழே ஈசனின் திருவடி வியாபித்திருக்கிறது. அப்படியும் அதைக் காண இயலவில்லை. எல்லாவற்றுக்கும் கீழே சொல்லுக்கும் அடங்காத நிலையைப் பெற்ற அந்தத் திருவடிகளையும், அழகிய புத்தம்புது மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அவன் திருமுடியையும் எல்லாப் பொருள்களுக்கும் ஆரம்பமும், முடிவும் அதுவே எனப் படுகிறது.

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்= அவன் உடலின் ஒருபாகத்தில் அம்பிகையும் இடம்பெற்றிருக்கிறாள். ஆகவே அவனுடைய திருமேனியும் ஒரே விதமானது அல்ல. ஒரு பக்கம் ஆணின் மேனியும், இன்னொரு பக்கம் பெண்ணின் மேனியும் கொண்டு விளங்குகிறான். இந்த அர்த்தநாரீசுவரத் தத்துவம் உள்ளார்ந்த பொருள்பொதிந்த ஒன்று. ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஆண், பெண் தன்மைகள் கலந்தே இருக்கின்றன். ஈசன் மேல் பக்தி மீதூறி, அவனைத் தியானித்து, அவன் பஞ்சாக்ஷரத்தை ஓதும் அடியார்களுக்கு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தங்களுக்குள்ளே உள்ள பெண் வடிவைக் காணவும் இயலும். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கண்டது போல. ஆகவே அவ்வளவு ஆழ்ந்து ஊறிப் போய் பக்தி செய்யவேண்டும்.

இப்படிப் பக்குவப்பட்ட ஆன்மா, பக்குவப்படாத மற்றவர்களைப் பார்த்து நீங்களும் விழித்தெழுங்கள், உங்களுள்ளே இருக்கும் சோதியைக் கண்ணார, மனமாரக் கண்டு மகிழுங்கள் என்பதே திருவெம்பாவையின் முழுத் தத்துவம், இது என்னோட கருத்து மட்டுமே. மாற்றுக்கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்= வேதங்களுக்கு முதல்வன் இவனே. விண்ணோரான தேவாதிதேவர்களும் சரி, மண்ணுலகில் வாழும் மக்களும் சரி, இவனைப் புகழ்ந்து எவ்வளவு பாராட்டிப் பாடினாலும்

ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்= ஈசனின் புகழ்ச்சி என்பது முற்றுப் பெறா ஒன்றாகும். தொண்டர்களுக்கு எல்லாம் இவன் தோழனாகவே இருக்கிறான். சுந்தரருக்காகத் தூது போனதை அறிவோம் அல்லவா?

கோதில் குலத்து அரன் தன் கோய்ல் பிணாப்பிள்ளைகாள்= ஏ, பெண்களே, இவ்வளவு பெருமையும், புகழும் வாய்ந்த சொல்லுக்கடங்கா ஈசனின் திருக்கோயிலில் தொண்டு செய்வதையே உங்கள் முழுநேர வேலையாகக் கொண்டு சிவத் தொண்டு செய்யும் பெண்களாகிய நீங்கள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்= ஈசனின் சொந்த ஊர் எது? அவனுடைய உண்மையான பெயர் என்ன?? அவனுடைய உற்றார் உறவினர் யார்? அவனுக்கு அயல் மனிதர்கள் எவர்?

இங்கே சொல்லி இருப்பது, முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான ஈசனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, உற்றார், உறவினரும் இல்லை. அவனுக்குப் பெயரும் நாம் சூட்டியதே. மேலும் இவர் உற்றார், இவர் அயலார் என்று அவன் பேதம் காட்டுவதில்லை. எல்லாருக்குமே ஒரே மாதிரியாகத் தன் அருள் மழையைப் பொழிகிறான். அவனிடம் பேதம் ஏதும் இல்லை.

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்= இவ்வளவு புகழ் வாய்ந்த ஈசனைப் பாடும் தன்மை கூட நமக்குப் புரியவில்லை. நாம் ஏதோ பாடுகிறோம், அவனோ அதையும் ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் செய்வது ஒன்றே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.

2 comments:

  1. தலைவி என்ன ஆச்சு திடிரென்னு ஒரே நாள்ல 10 பதிவு ;)

    ReplyDelete
  2. ஹிஹிஹி, கோபி, நேரம் இன்மையால் உடனுக்குடன்பதிவைப் போட முடியலை, ஏற்கெனவே மின் தமிழில் மட்டும் போட்டுட்டு இருந்தேன். இப்போ ஊரிலே இருந்து வந்ததும் எல்லாத்தையும் இதிலேயும் ஏத்தினேன், அம்புடுதேன்! :)))))))))

    ReplyDelete