Tuesday, December 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


தனது பக்தனுக்காகத் தாமே வந்து கடன் அடைத்துச் சென்றது சாக்ஷாத் அந்த ஸ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை புரிந்து கொண்ட தானீஷா, தான் மஹாபாபியாக இருந்து இறைவனே நேரில் வந்ததைத் தெரிந்து கொள்ளவில்லையே என நினைத்து நினைத்து ஏங்கினான்.  அங்கே சிறையில் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோபன்னா எழுந்து பார்த்தபோது விஷக்கிண்ணம் கவிழ்ந்து கிடப்பதையும் தானீஷா கையொப்பம் இட்டுக் கடன் தீர்ந்துவிட்டதாக அறிவித்த ரசீதையும் பார்த்தார்.  திகைத்தார்.  ஏதோ அதிசயம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். ராமன் திருவடியை அடைய முடியாமல் வந்து தடுத்துவிட்டானே என ஏங்கினார். ராமனைத் தாம் நிந்தித்ததால் இவ்வாறு செய்துவிட்டான் போலும் என எண்ணினார்.  அதனால் தான் விஷத்தைக் கொட்டி விட்டான் போலும் என எண்ணினார். அப்போது சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன.  தானீஷா பரிவாரங்களோடு அங்கே வந்து கொண்டிருந்தான்.  மறு விநாடிக் கதவு திறந்து தானீஷா எதிரே நின்றான்.  கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கோபன்னாவின் கர்ருணையால் அன்ன்று தாம் இறைவனையே கண்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  கோபன்னாவுக்கோ, ஸ்ரீராமனே நேரில் வந்தானா, தானீஷாவுக்குக் காட்சி கொடுத்தானா என எண்ணித் தமக்கு அந்தக் காட்சி கிட்டவில்லையே என ஏங்கினார்.  தானீஷாவோ அவர்கள் வந்ததையும், தம்முடன் பேசியதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  பிரசாதத்துக்கு ஆசைப் பட்டு கோபன்னாவிடம் பணி புரிவதாய்க் கூறினார்களே என  அதிசயித்தான்.  கோபன்னாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தானீஷாவைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, “நீர் செய்த பாக்கியம் தான் என்னே!  இறைவனைக் காணும் பேறு கிடைத்தது.  பனிரண்டு வருடமாய்க் கதறிக் கதறி அழைத்து இந்த நடுநிசியில் மூட்டை தூக்கி வந்து என் கடனை அடைத்துச் சென்றுவிட்டானா?  எனக்குக் காட்சி கிடைக்கவில்லையே! ஏ, ராமா, எனக்குக் காட்சி கொடுக்க மாட்டாயா?” எனக் கதறினார்.  தானீஷா, அவரிடம், நீர் சாதாரண கோபன்னா இல்லை;  ராமதாஸர்! ராமன் திருவடிக்கே தொண்டு பூண்ட பெரியவர். உம் அருமை தெரியாமல் நான் உம்மைத் துன்புறுத்தி மஹா பாவத்தைச் செய்து விட்டேன்.”  என்றான்.  எல்லையற்ற மன நிறைவோடு மீண்டும் பத்ராசலம் வந்தார் ராமதாஸரான கோபன்னா.  தானீஷா ராமனுடைய சேவைக்காக ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினான்.  நெடுநாட்கள் அதன் பின்னர் ராமனின் புகழைப் பாடி வந்தார் ராமதாஸர்.  ஒருநாள் பொன்மயமானதொரு தேர் விண்ணிலிருந்து இறங்கியது.  ராமதாஸர் வீட்டு வாசலில் நின்றது.  தன் மனைவியையும் அழைத்தார் ராமதாஸர்.  கைவேலையை முடித்துவிட்டு வருவதாய் அந்த அம்மாள் சொல்ல, “நீ கொடுத்து வைக்கவில்லை!” எனச் சொல்லிக் கொண்டே தேரின் மீது ராமதாஸர் ஏறிக் கொண்டு ராம நாம உபதேசத்தைக் கூறிக் கொண்டே தேரோடு விண்ணில் எழும்பிச் சென்றார். அவர் மனைவி உள்ளிருந்து வந்து பார்க்க, “நீ உன் மகனுக்குப் பணிசெய்யும் பொருட்டே உன்னைத் தங்க வைத்தோம்!” என அசரீரி வாக்குக் கேட்க அந்த அம்மாளும் தன் விதியை நினைந்தபடி தங்கிவிட்டார்.  பத்ராசல ராமதாஸர் ராமன் மேல் எண்ணற்ற பாடல்களைப் புனைந்து பாடினார்.  பாரதத் திருநாட்டில் ஹைதராபாத்திலே செல்வம் கொழித்திருப்பதன் காரணமும் பத்ராசல ராமதாஸருக்கு ராமன் அளித்த செல்வம் என்றே கூறப்படுகிறது.

பத்ராசலம் ராமதாஸர் கதை நிறைந்தது.

3 comments:

  1. நன்றி. படித்தேன்.

    ReplyDelete
  2. கதை சுவாரசியமாகவே இருக்கிறது. எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்று வியந்து விக்கித்துப் போகிறேன்!

    ReplyDelete