Sunday, December 26, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

சிறந்த சிவபக்திச் செல்வத்தில் சிறந்து விளங்கிய மணிவாசகர் திருவண்ணாமலையில் தங்கி இருக்கும்போது அங்கிருந்த பெண்கள் தினமும் காலையிலே குளித்து நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டதும், அவரையே நினைந்து நினைந்து உருகியதையும் கண்டு தம்மையும் ஒரு பெண்பாலாக நினைந்து அவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை என்ற ஒரு கூற்றும் உண்டு. மேற்சொல்லி இருக்கும் திருவெம்பாவையில் குளத்தில் பெண்கள் அதிகாலையில் குளிப்பது பற்றிச் சொல்கையில் குளத்து நீரைக் கைகளால் அடித்துச் சத்தம் வரும்படி நீருக்குள் புகுந்து, குளித்ததாய்ச் சொல்கிறார்.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடைந்து= குளத்து நீரெல்லாம் அசுத்தமாகாத பொற்காலம் அது. தாமரைகள் பூத்திருக்கும். தாமரைப் பூவின் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும். அப்படி வண்டுகள் நிறைந்திருக்கும் திருக்குளத்தில் அந்தத் தண்ணீரில் தங்கள் கைகளால் முகேர் என்ற சப்தம் வரும்படி நீரை அடித்துக்கொண்டு பாய்ந்து, நீருக்குள் புகுந்து, புறப்பட்டுக் குளித்து

உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்= என் ஈசனே, என் ஐயனே, உன் திருவடிகளின் புகழைப்பாடுகின்றோம்; பரம்பரை பரம்பரையாக உன் புகழன்றி நாங்கள் வேறொருவரை நினைத்ததில்லை. உன்னடியார்களாகவே உன்னாலேயே உன்னருளாலேயே நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

ஆரழல் போல் செய்யாவெண்ணீறாடி செல்வா= மாலுக்கும், அயனுக்கும் அடிமுடிகாணமுடியா அழல் போன்ற உருவெடுத்த உன் நிறமும் அத்தகைய நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையது அன்றோ, செக்கச் சிவந்த மேனியன் அன்றோ, வெண்மையான திருநீற்றினால் அன்றோ நீ குளிக்கிறாய்

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா= சிறுத்த இடையுடன் கூடிய, மை தீட்டப் பெற்ற அழகிய அகன்ற கண்களை உடைய மடந்தையாகிய உமையின் மணவாளனே

ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்= ஐயா, என் ஈசனே உன்னுடைய திருவிளையாடல்கள் எல்லையற்றவை. அவை அனைத்தும் எம்மை ஆட்கொள்ளவேண்டியே நீ நடத்துகிறாய்.

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோய்= அந்தத் திருவிளையாடல்களின் உய்யும் வழியெல்லாம் பெற்று அநுபவித்துக் கழித்துவிட்டோம்.

எய்யாமற்காப்பாய் எமையேலோர் எம்பாவாய்= எங்கள் வினையெல்லாம் தீர இனியேனும் நாங்கள் பிறவி என்னும் பெருங்கடலில் மூழ்கி இளைத்துச் சோர்ந்து போகாமல் எங்களைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுவாய்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி கீதாம்மா ., ஒரு ப்லோக்ளில் திருப்பாவை

    இந்த ப்லோக்ளில் திருவெம்பாவை !கலக்கறீங்க கீதாம்மா

    படித்து ரசித்தேன்.,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாங்க ப்ரியா, வரவுக்கு நன்றி.

    ReplyDelete