Wednesday, March 23, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை! 1


நெய்வேலிக்கு அருகே பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் ராமையா பிள்ளை என்பவரும் அவர் மனைவி சின்னம்மையும் வாழ்ந்துவந்தனர். குடும்பத்தில் இயல்பாகவே சைவ சித்தாந்தத்தில் பிடிப்பு அதிகம் இருந்தது. ஒருநாள் ராமையா பிள்ளை வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சாது அவர் வீட்டுக்கு வந்தார். சின்னம்மை சாதுவைக் கண்டதும், வணங்கி வரவேற்று அவருக்குத் தகுந்த உபசாரங்கள் செய்து அருமையான சாப்பாடும் கொடுத்தார். சாதுவும் அம்மையின் உபசாரங்களால் மனம் மகிழ்ந்து செல்லும்போது விபூதிப் பிரசாதம் கொடுத்தார். அப்போது அம்மையை ஆசீர்வதித்தார். ஆசீர்வதிக்கும்போது, "உனக்கு ஒரு பையன் பிறப்பான், இறவாமை என்பதை மற்றவர்களுக்கு அவன் போதிப்பான். இந்த உலக மக்கள் அவன் சொல்லுவதை நல்லுபதேசமாக ஏற்பார்கள்." என்று சொல்லி மறைந்தார். இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்ச்சி என அனைவராலும் ஒப்புக் கொள்ளப் பட்டாலும், இதில் உள்ள முக்கிய விஷயம் என்னவெனில் அந்த அம்மையார் சாது தனக்கு ஒரு பிள்ளை பிறப்பான் என்று சொல்லும்போதே ஏதோ ஓர் ஒளிமயமான ஒன்று தன் கர்ப்பத்துக்குள்ளே பிரவேசித்ததாய் உணர்ந்தாள். இம்மாதிரியான கர்ப்பத்தை சம்புபக்ஷ சிருஷ்டி எனச் சொல்லுவதாய் ஆன்றோர் சொல்லுகின்றனர். சாதாரணமாய் கணவன், மனைவி உடல் ரீதியான உறவினால் ஏற்படும் கர்ப்பம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. ஆனால் அவதார புருஷர்களோ அப்படிப்பிறப்பதில்லை. இதற்கு சாட்சியே வள்ளலார். சாதுவின் வார்த்தைகள் காதில் விழுந்த கணமே அவரின் உயிர்த்துளி அம்மையாரின் கர்ப்பத்தில் குடிகொண்டது எனலாம். பிறக்கும்போது ஞாநியாகப்பிறக்கும் அவதாரபுருஷர்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்கவேண்டும் என்ற நியதிக்குட்பட்டே பிறந்தாலும் அவர்களின் அவதார மகிமையை அவர்களால் மறைக்கவே முடியாது.

எட்டுமாதங்களில் ஆண்குழந்தையும் பிறந்தது. சிலர் பூரணமாய்ப் பத்துமாதங்கள் ஆனதுமே பிறப்பு நேர்ந்தது என்றும் சொல்கின்றனர். எப்படி ஆனாலும் பிறந்த குழந்தைக்கு "ராமலிங்கம்" என்ற பெயரைச் சூட்டிப் பெற்றோர் மிக்க அன்புடனும், கவனத்துடனும், பாசத்துடனும் வளர்த்துவந்தனர். குழந்தைக்கு ஐந்து மாதங்கள் ஆனபோது முதன்முதல் அருகிலிருந்த சிதம்பரம் கோயிலுக்குக் குழந்தையை எடுத்துவந்தனர் பெற்றோர். கோயிலில் மூலஸ்தானத்தில் தீப ஆராதனை காட்டப் பட்டது. தீப ஆராதனையைப் பார்த்த குழந்தை வாய்விட்டுக் கடகடவெனச் சிரித்தது. அனைவரும் குழந்தை தீபஒளியைப் பார்த்து அதிசயித்துச் சிரித்தது என எண்ணினார்கள். ஆனால் வள்ளலாராக பின்னால் அறியப்போகும் ராமலிங்கமோ, தீப ஜோதியைக் கண்டதுமே தன்னுள்ளே உள்ள உள் ஜோதியையும் அறிந்து கொண்டார் என்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். இந்த உணர்வை வள்ளலார் பின் நாட்களில் தம்மால் இயற்றப் பட்ட பாடல்களில் சொல்லி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

குழந்தையின் ஆரவாரமான சிரிப்பில் மகிழ்ந்த உற்றாரும், உறவினரும், பெற்றோரும் மனமகிழ்வோடு இருந்தார்கள். ஆனால் அந்த மகிழ்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. குழந்தைக்கு எட்டுமாதம் நிறைவதற்குள்ளேயே ராமையா பிள்ளை இறந்துவிட்டார். குழந்தைக்குத் தந்தையின் முகம் நினைவில் வந்து புரிந்துகொள்ளும் முன்னரே இறந்து போனது அனைவருக்கும் மிகவும் துயரத்தைத் தந்தது. தாயார் சின்னம்மை மனம் உடைந்து போனார். என்ன செய்வது எனப் புரியவில்லை. இனி குடும்பம் நடப்பது எவ்வாறு? யோசித்து யோசித்து மனம் கலங்கினார். பின்னர் மருதூரை விட்டு வேறு இடங்களுக்குத் தான் செல்லவேண்டும் என நினைத்து மருதூரிலிருந்து கிளம்பி செங்கல்பட்டில் அவர் தாயாரின் ஊரான சின்னகாவனம் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கே இருந்த தன் தாயின் உறவினர்களின் துணையோடு வாழ்க்கையை நடத்த முடிவு செய்தார். ஏற்கெனவே வள்ளலாருக்கு முன்னால் அம்மையாருக்கு நான்கு குழந்தைகள் இருந்தன. அவர்களில் மூத்த பிள்ளைக்கு வயதானதும் குடும்பப் பொறுப்பை ஏற்க முன்வந்தார். அவர் குடும்பம் நடத்தச் சென்னை நகரமே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தார். அவரோடு மொத்தக் குடும்பமும் சென்னைக்குக் குடியேறியது.

2 comments:

  1. மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகளை படிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்
    படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது கீதாம்மா !

    ReplyDelete
  2. ஆமாம், அதுவும் வள்ளலாரின் வாழ்க்கைச் சரித்திரம் எழுத எழுதத் தொடர்கிறது. அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன அவர் வாழ்க்கையில்.

    ReplyDelete