Monday, March 14, 2011

சொல்லடி அபிராமி! அபிராமி பட்டர்:

சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களில் ஒன்று திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். அந்த ஆலயத்தின் வழிபாடுகள் நடத்தும் அத்யான பட்டர் என்னும் தலைமை பட்டர் ஆன அமிர்தலிங்க ஐயர் என்பவருக்கு கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் சுப்பிரமணியன் என்ற புதல்வன். தம் புதல்வனுக்கு சங்கீதப் பயிற்சியும், குடும்பத்தின் பரம்பரை யான தேவி உபாசனையும் அறியச் செய்தார் அமிர்தலிங்க ஐயரவர்கள். இளமை முதலே ஸ்ரீ அபிராமி அம்மையின் பால் தனிப்பற்றும், பக்தியும் பூண்டு வழிபட்டு வந்தார் சுப்பிரமணிய ஐயர். தமிழ் தவிர வடமொழியிலும், சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார் சுப்பிரமணிய ஐயரவர்கள். தம் உள்ளத்தே அன்னையின் பால் தோன்றும் அன்பின் விளைவாக பல துதிகளைத் தாமே இயற்றிப் பாடி வந்தார்.



யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்பவற்றைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை திருக்கோலத்தைக் கண்ணாரக் கண்டு இன்புற்று இடைப்பட்ட கிரந்திகளை எல்லாம் தாண்டிச் சென்று ஸஹஸ்ராரத்தில் ஒளிரும் ஒளிமயமான லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆநந்தத்தில் திளைத்து இன்புற்று இருந்தார். ஆனால் உலகத்தவருக்கு அவருடைய ஆனந்த நிலையும், அதன் காரணமும் புரியாமல் போகவே இவர் ஏதோ துர்தேவதையை ஆராதித்து வந்த காரணத்தால் இப்படைப் பைத்தியமாய் ஆகி, ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுக் கெட்டுப் போய்விட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர். அதைக் காதில் வாங்காமலும், சற்றும் லக்ஷியம் செய்யாமலுமே அபிராமியைத் துதிப்பதும், அவள் பால் துதிகள் இயற்றிப் பாடுவதுமாய் இருந்தார் சுப்ரமணிய ஐயர். தினமும் கோயிலில் அன்றைய திதிகளைக் கூறி அதற்கேற்றவாறு வழிபாட்டு நியமங்களை ஏற்பாடு செய்வதும் அத்யான பட்டரின் நித்ய கடமைகளில் ஒன்றாகும்.



அப்படி இருக்கையில் ஒரு நாள் தஞ்சையின் அரசன் ஆன ராஜா சரபோஜி தை அமாவாசை அன்று பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடி, திருக்கடவூருக்குத் தரிசனம் செய்ய வந்தார். திருக்கோயிலில் தரிசனம் செய்யும் வேளையில் அங்கே அபிராமி அம்மன் சந்நதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதுமாய் இருந்தார். தானே சிறிது சிரித்தும் கொள்ளுவார். சிரிப்பது அன்னையின் பரிபூரணப் பேராநந்தப் பேரொளியின் தரிசனத்தைக் கண்டு. ஆனால் சுற்றி இருப்பவர்களோ தங்களுக்குள்ளாகக் கிசுகிசுவெனப் பேசிக் கொண்டனர். மன்னர் வந்திருப்பதும் அறியாமல், மன்னரை வணங்கவும் வணங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே என நினைத்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், “இவர் ஒரு பைத்தியம். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுகிறார்.” என்று சொல்லிவிட்டனர். மன்னர் இது எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கக் கூடும் என நினைத்த வண்ணம் அதைச் சோதிக்க எண்ணியவர் போல் சுப்ரமணிய ஐயரிடம், “ இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?” என்று கேட்டார்.



அப்போதுதான் பரிபூரணப் பேரொளியாய் ஸஹஸ்ராரத்தில் ஒளிமயமாய் ஜொலிக்கும் அன்னையைக் கண்டு ஆனந்தம் கொண்டு அந்தச் சுடரின் பேரொளியிலே தன்னை இழந்து கொண்டிருந்தவர் காதில் அமாவாசையா என்ற சொல் மட்டுமே விழ, “ ஆஹா, இன்று பெளர்ணமி அல்லவோ?” என்று சொல்லிவிட்டார். சுற்றிலும் இருந்தவர்களில் சிலர் கைகொட்டிச் சிரிக்காத குறையாய் அவரை ஏளனத்துடன் பார்க்க, மன்னர் சுற்றிலும் இருந்தவர்கள் கூறியது உண்மையே என நினைத்த வண்ணம் பட்டரை மதிக்காமல் அலக்ஷியத்துடன் சென்று விட்டார். சென்றாரே தவிர மன்னனுக்கு அவருடைய தோற்றமே கண்ணெதிரே வந்தது. திரும்பத் திரும்ப அன்று பெளர்ணமி என பட்டர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னை அறியாமல் கண்ணயர, கர்ப்பகிருஹத்து அபிராமி அவர் கண்ணெதிரே தோன்றினாள். “இதோ பார், “ என்று சொல்லிக் கொண்டே தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். “ஆஹா, இது பூரண நிலவு அன்றோ! முழுமதி சுடர் விடுகின்றது பாருங்கள்,” என சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தான். கனவா? நனவா??? மன்னர் உடல் எல்லாம் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

No comments:

Post a Comment