Tuesday, March 15, 2011

சொல்லடி அபிராமி! அபிராமி பட்டர்!

இங்கே பட்டருக்கு மன்னன் சென்றதுமே தாம் செய்த பெருந்தவறு புரிந்தது. ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர், உடனேயே அன்னையின் அருளால் மனம் தெளிவுற்று, இதுவும் ஒரு நன்மைக்கே எனத் தெளிந்து அன்னையின் அருளைத் துதித்துப் பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் அநுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அருவி போலப் பொழியலாயிற்று. அங்கே கண் விழித்து எழுந்த மன்னருக்கு அபிராமி பட்டர் பெரும் ஞாநி என்பது புலப்பட்டது. உடனேயே பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் அளித்தார். அவ்விளை நிலங்களை ஏற்க மறுத்த அபிராமி பட்டரிடம் அவரின் பிற்காலச் சந்ததிகளின் நல்வாழ்வை உத்தேசித்து ஏற்குமாறு வற்புறுத்தி ஏற்கச் செய்தார். இவ்வுரிமை 1970களின் கடைசி வரையிலும் அபிராமி பட்டரின் பரம்பரை அநுபவித்து வந்தது. தற்போதைய நிலவரம் சரிவரத் தெரியவில்லை.



மேற்சொன்ன நிகழ்வைச் சிலர் வேறு விதமாயும் கூறுகின்றனர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாய்க் கூறாத பட்டருக்கு அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் பட்டருக்கு மரண தண்டனை எனத் தீர்ப்புச் சொன்னதாய்ச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்னியை மூட்டி அதற்கு மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, “அம்பிகை எனக்குக் காக்ஷி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாடியதாகவும் கூறுவார்கள். “உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்” என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், “விழிக்கே அருளுண்டு “ என்ற 79-வது பாடலின் போது மயங்கும் மாலைப் பொழுதில் அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் தெரியும் வண்ணம் காக்ஷி கொடுத்துத் தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் சொல்லுவார்கள். எங்கனமாயினும் பட்டரின் பக்தியும், பெருமையும் சற்றும் குறைந்தது அல்ல. அதே போல் மன்னன் எவ்வாறோ அன்னையின் அருளைப் பூரணமாய் உணர்ந்திருந்தான் என்பதும் உண்மையே.






அன்னையின் முகமண்டலமே பூரண சந்திரன் போல் ஜொலிக்க அவள் காதின் தாடங்கம் மற்றொரு பூரணசந்திரனாக விளங்க அந்த அமாவாசை இருளானது, அனைவரின் மனத்து அறியாமை இருட்டையும் போக்கி அனைவரையும் பேராநந்தப் பேரின்பத்தில் ஆழ்த்தியது. தாம் கண்ட அந்த அதிசய ஆநந்ததைப் பட்டரும், “கூட்டியவா என்னை” என்ற 80 வது பாடலில் சொல்லி மேலும் இருபது பாடல்களைப் பாடி அந்தாதியைப் பூர்த்தி செய்தார். அன்று முதல் அவர் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அவர் சந்ததியினருக்கு பாரதியார் என்ற பட்டமும் மன்னரால் வழங்கப் பட்டது.



“விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே! அபிராமி அந்தாதி பாடல் 79



கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை

ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா

ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!”

No comments:

Post a Comment