Sunday, August 23, 2009

தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை -விக்னராஜன்!

சரி, சரி,வடமொழியிலே உள்ளதை மொழிபெயர்க்கும்போது தப்பு வருதே பிள்ளையாரே? இங்கே என்னன்னா கண்ணிலே வி.எ. கொட்டிண்டு இல்லை எல்லாரும் பார்க்கிறாங்க. நாம நம்ம தாய்மொழிக்குப் போயிடுவோமா?? அட??? அதுக்கும் சிவசிவா வந்துடுவாரே? என்ன பண்ணறது? பிள்ளையாரப்பா காப்பாத்துப்பா! இன்னிக்குத் தான் உனக்கு
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும்
கலந்துனக்கு நான் படைத்தேன்
கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா”

அந்த ஞாபகம் இருக்கட்டும். கூடவே கொழுக்கட்டையும் கொடுத்திருக்கேன். சங்கத் தமிழ் மூன்றும் எல்லாம் வேண்டாம். இப்போ எழுதப் போற விஷயத்திற்குத் துணையா இருந்தாப் போதும்பா!

இப்போ இயன்றவரை எளிய தமிழில் விநாயகரைத் துதித்துக் காசிபர் எழுதினதாய்ச் சொல்லப் படும் காரியசித்தி மாலை பத்திச் சொல்லப் போறேன். முதல்லே ஒரு முன்னுரை. இந்தக் காரிய சித்தி மாலையை நான் பல வருஷமாப் படிக்கிறேன். முதல்லே ஆரம்பிச்சது என்னமோ காரியம் ஒண்ணு நடக்கணும்னு தான். காரியம் சித்தி ஆனாலும் நம்ம பிள்ளையாரோடதாச்சேனு தினம் முடியாட்டியும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிப்பேன். நிச்சயமாய் மனசுக்கு ஆறுதலும் ஏற்படுது, கவலைகள், பிரச்னைகள் இருந்தால் மனம் லேசாக ஆகும். கவனிக்கவும், பிரச்னைகள் தீரும்னு சொல்லலை. நமக்கு வந்ததை நாம தான் தீர்த்துக்கணும். பிரச்னைகளைத் தாங்கும் அளவுக்கு மனவலிமை ஏற்பட்டு விடும். அதற்கு உத்திரவாதம் உண்டு.

“பந்தம் அகற்றும் அநந்தகுணப்
பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறைஆ கமலங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.”


நாம் அனைவருமே பந்த பாசங்களால் கட்டுண்டவர்களே. இது நம்முடையது என்ற எண்ணம் இல்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அந்தப் பந்த, பாசங்களை அகற்றும் குணமுள்ளவன் வேழமுகத்தான் ஒருவனே! மேலும் இந்த உலகை மட்டுமில்லாமல் அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவன் அவனே. அவனின் பெருத்த வயிற்றில் இருந்தே அனைத்து உலகும் தோன்றுகிறது என்பதைப் பார்த்தோமல்லவா? விநாயகனே ஓங்கார வடிவானவன். அத்தகைய ஓங்கார சொரூபியான விநாயகனிடமிருந்தே அனைத்துக் கலைகளும், வேதங்களும், ஆகமங்களும் அவனிடமிருந்தே வெளிப்படுகின்றன. இத்தனை பெருமை வாய்ந்த இறைவனாகிய கணபதியை நாம் உள்ளத்தில் அன்பு மீதூற வணங்கித் துதிப்போம்.

உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளி யாவன்?
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டுங் களைகண் எவன் அந்த
உலகமுதலைக் கணபதியை
உவந்து சரணம் அடைகின்றோம்.”

இந்த உலகில் அனைத்து உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன் மூலாதாரமாகிய கணபதியே! இறைவன் படைத்த இவ்வுலகில் நிறைந்திருக்கும் காம, குரோத, மத, மாற்சரியங்கள் எவையும் அவனிடம் ஒட்டுவதில்லை. அவன் எந்தவிதமான விருப்போ, வெறுப்போ இல்லாதவனாக இருக்கின்றான். பரிபூரணப் பேரொளியாய் நிறைந்துள்ளான். இந்த உலகில் உள்ள நாம் செய்யும் செயல்களின் வினப்பயனை நமக்குத் தருபவன் அவனே. தீவினைகளைக் களைகின்ற திறன் படைத்தவனும் அவனே. அத்தகைய உலகுக்கே ஆதிகாரணம் ஆன முழு முதல்வன் ஆன கணபதியை மனம் மகிழச் சரணம் எனத் துதிப்போம்.

“இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும்பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதிபொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.”

நெருப்பில் இட்ட பஞ்சு எப்படி உடனே இருந்த இடம் தெரியாமல் போகின்றதோ அவ்வாறே கணபதியைத் துதித்தால் நம் இடர்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் போகின்றன. கணபதியைத் துதித்து அவனைத் தொடர்ந்து நாம் சென்றோமானால் அந்த உயிர்கள் அனைத்தையும் தேவர்கள் வாழும் பதிக்கு எடுத்துச் சென்று நமக்கு நற்கதியை ஊட்டுவார். நாம் எடுத்த காரியங்களை தடையின்றி நிறைவேற்ற மற்ற எந்தக் கடவுளரையும் விட விக்னராஜன் ஆகிய கணபதியே துணை புரிவான். அவனாலேயே நம் காரியங்கள் அனைத்தும் முடித்து வைக்கப் படும். இனிதாகவும், எளிதாகவும், சிரமம் இன்றியும் நம் காரியங்களை முடித்து வைக்கும் ஏகதந்தன் ஆகிய கணபதியின் பொற்பாதங்களில் சரணம் எனச் சரணடைவோம்.

No comments:

Post a Comment