Sunday, January 2, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்= இறைவனின் திருவடித் தாமரைகளின் சிறப்பைச் சொல்லும் பாடல் இது. அண்ணாமலையில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடிகளில் மண்ணுலகத்தோர் மட்டுமில்லாமல் விண்ணுலகத்துத் தேவர்களும் வந்து தொழுது ஏத்துகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த அண்ணலின் திருவடித் தாமரைகளின் ஒளியின் முன்னே அந்த மன்னாதிமன்னர்களும், தேவாதி தேவர்களும் அணிந்திருக்கும் முடிகளில் உள்ள பல்வேறுவிதமான நவரத்தினமணிகளும் ஒளி இழந்து, சோபை இன்றிக் காணப்படுகிறது. அது போல

கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்= இருண்ட வானில் ஒளி வீசிக்கொண்டிருந்த விண்மீன்கள், அருணன் உதித்து சூரியன் மேலெழும்பத் தொடங்கியதும், இருள் நீங்கி வெளிச்சம் பரவ, விண்மீன்களின் ஒளி மங்கி, மறைவதைப்போல


பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்= ஈசன் ஒரு சமயம் பெண்ணாகி நிற்கிறான். ஒரு சமயம் ஆணாக நிற்கின்றான். வேறொரு சமயம் பெண்ணுமில்லாமல், ஆணுமில்லாமல் அலியாக மாறி நிற்கின்றான். அதைப் போலவே ஒரு சமயம் இருண்ட வானமாய்க் காட்சிதந்தது ஒளி மிகுந்த வானமாயும், ஒரு சமயம் வறண்ட பூமியானது, பசுமை நிறைந்த பூமியாகவும், இவை எல்லாவற்றுக்கும் மேல் அனைத்துக்கும் வேறுபட்டு நிற்கும் பரம்பொருளாகவும் எல்லாவற்றிலும் நிலைத்து நின்றும்

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். = இவை எல்லாவற்றையும் காட்டி, மறைத்து, அருளிச் செய்து இத்தனையும் செய்யும் பேரமுதமாய் நிற்கின்றான் எங்கள் ஈசன். அத்தகைய ஈசனைப் போற்றி அவன் புகழைப்பாட ஏ, பெண்ணே இந்தப் பூம்புனலில் பாய்ந்து ஆடிக் குளித்து வணங்கச் செல்லுவோம் வா.

No comments:

Post a Comment