Tuesday, January 4, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

இங்கே ஈசனின் திருவடித் தாமரைகளின் சிறப்புக்களையும் அவை செய்யும் அருள் பற்றியும் பேசப்படுகிறது. பிரமனும், திருமாலும் எவ்வளவு முயன்றும் அடி,முடி காண முடியாமல் வியாபித்து சோதி வடிவில் எழும்பி நின்ற ஈசன், அடியார்களுக்கு எனத் தன் திருவடிகளைக் காட்டி அவர்களைக் காத்து அருள்கிறான். திருவடி தரிசனம் பொதுவாகவே சிறப்புப்பெற்றது. ஈசனின் திருவடிகளைச் சரணம் எனப் பிடித்தவர்களை உய்விக்க வந்த ஐயனின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ?

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்= ஆதியும் ஈசனே, அந்தமும் ஈசனே, அவனே முதலும், முடிவும் ஆவான். அத்தகைய ஈசனின் பாதாரவிந்தங்கள் இவ்வுலகில் ஆதியொ தோன்றியவை. எல்லாவற்றுக்கும் முதலாகிய அந்தத் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பாடுவோம். ஈசன் நமக்கு அருள் செய்வான்.

போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்= சம்ஹார காலத்தில் இந்தப்பாதங்களே சம்ஹாரத் தாண்டவம் ஆடி அனைத்தையும் தன்னுள் ஒடுங்கச் செய்யும், ஆகவே அந்தமும் இந்தப்பாதாரவிந்தங்களே. நம்மைப் பாதுகாக்கும் இந்தப் பாதாரவிந்தங்களிலேயே கடைசியில் நாம் சரணும் அடைகிறோம். அத்தகைய சிவந்த திருவடிகளை எமக்கு அருள்வாய் ஈசனே.

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்= சிருஷ்டி ஆரம்பிக்கும்போது அனைத்து உயிர்களுக்கும் தோற்றமாய் அருளுவதும் ஈசனின் இந்தப்பொற்பாதங்களே ஆகும். அத்தகைய பாதங்களுக்குப் போற்றி பாடி வாழ்த்துவோம். ஈசனே எம்மைக்காத்தருளுக

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்= உயிர்கள் தோன்றக் காரணமாய் இருந்த அந்தப் பொற்பாதங்களே, கொன்றை மலர்கள் அணிந்த அந்த வீரக் கழல்களே உயிர்களின் போக உணர்ச்சிக்கும் காரண்மாய் அமைந்தது. அத்தகைய திருவடிகளுக்குப் போற்றி. எம்மைக் காத்தருள்வாய் ஈசனே.

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்=பிரளயம் வந்து உலகு ஒடுங்கும் வேளையில் அனைத்து உயிர்களையும் தம்முள் ஒடுங்கி ஓய்வு கொடுக்கும் இந்தத் திருவடிகளுக்குப் போற்றி.

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் = நான்முகனும், திருமாலும் எவ்வளவு முயற்சித்தாலும் உன்னுடைய முடியையோ, அடியையோ காணமுடியவில்லையே. அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளை உன்னடியார்களாகிய எங்களுக்காகக் காட்டி அருள் செய்கின்றாயே?

போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்=எங்கள் தலைவா, எங்கள் ஈசா, உன் திருவடிகளுக்குப் போற்றி. எங்களை ஆட்கொண்டு எங்களைக் கடைத்தேற்றும் திருவடிகளுக்குப் போற்றி. உன் பொன் போன்ற திருவடிகள் எம்மைக் காத்து அருளட்டும்.

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.= ஈசனே, நாங்கள் மார்கழிநீர் ஆடும் இந்தப் பொய்கையோ நீயும் உமை அன்னையும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியத்தை நினைவூட்டுகிறது. உன் அருளைப் பெற்று பக்தியாகிய சாகரத்தில் மூழ்கி நாங்கள் உய்யும் பொருட்டே இந்தக் குளத்தில் நீராடி உன்னைக் குறித்த துதிகளைப் பாடி ஆடுகிறோம். ஈசா, எம்மைக் காத்தருள்வாய்.


\நாளையில் இருந்து திருப்பள்ளி எழுச்சி.

No comments:

Post a Comment