Tuesday, January 11, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந்து அருளிய பரனே !
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்= தொடக்கம் இல்லாதவன் இறைவன். அதே போல் முடிவும் இல்லாதவனும் அவனே. முன்னைப் பழம்பொருள்கட்கும் முன்னைப் பழமையானவன். அதே சமயம் பின்னைப்புதுமைக்கும் புதுமையானவன் ஆவான். தோன்றி, மறையும் உயிர்களின் முதலும், நடுவும், முடிவுமாக ஈசன் இருந்து வருகிறார்.
இப்படித் தானே எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்து, அவற்றின் முடிவுக்கும் காரணமாக அமைந்திருக்கும் ஈசனின் இந்த இருமையான நிலைப்பாட்டை பிரம்மாவோ, விஷ்ணுவோ அல்லது ருத்ரனோ அறியமாட்டார்கள். அவ்வாறிருக்கும்போது உன்னை வேறொருவரால் எளிதில் அறியமுடியுமா?


பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந்து அருளிய பரனே != இங்கே பந்து வந்து அணையும் விரல்களை உடைய உமை என்ற பொருள் வந்தாலும், நம்முடைய ஆன்மாவையும் குறிக்கும். ஆன்மாவைச் சிவத்தோடு சேர்த்து இணைக்க உதவுவது சக்தியே. அந்தச் சக்தியின் விரல்கள் என்ற பொருளிலும் வரும். அந்தச் சக்தியும், நீயும் இந்தப் பழைய ஓட்டைக் குடிசையில் வசிக்கும் என் போன்ற அடியார்களுக்கு அருளவென்று எழுந்தருளும் பராபரனே/ இங்கே பழங்குடில் என்பது நம் உடலைக் குறிக்கும். பிறவி தோறும் ஈசன் நம் உடலில் குடிகொண்டே இருப்பதால், நம்முடைய உடல் என்னும் குடிசை ஈசனுக்குப் புதியது அல்ல. ஏற்கெனவே அவர் குடியிருந்த இடமே ஆகும். நாம் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ஆகையால் நம் ஆன்மாவைச் சிவத்தோடு ஒன்ற வைக்கும் சக்தி வாய்ந்த உமை அம்மை பந்தங்களில் இருந்து நம்மை விடுவித்து ஈசனோடு சேர்த்து வைக்கவேண்டும்.


செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி= . சிவந்த தழல் போன்ற திருமேனியைக் காட்டித் திருப்பெருந்துறையையும், அந்த ஊரின் கோயிலையும் காட்டி. அதாவது மாணிக்கவாச்கருக்குத் தம் உள்ளே இருக்கும் ஜோதி சொரூபமான இறைவனையும், அவன் இருக்குமிடமே சிற்றம்பலம் என்பதையும் காட்டித் தந்தது ஈசனே ஆவான்.
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !=இங்கே மாணிக்கவாசகர் அந்தணனாக ஈசன் அவர் முன்னே வந்து அவரை வலிய ஆட்கொண்டதைக் குறிப்பிடுகிறார். ஞானாசிரியனாகக் குருந்த மரத்தின் நிழலில் மாணிக்கவாசகருக்காகக் காத்திருந்து அவருக்கு உண்மைப்பொருளை உபதேசம் செய்ததை இங்கே கூறுகிறார்.
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே ! =இத்தகைய பெருமை வாய்ந்த அடைவதற்கு அமுதமான பரம்பொருளே, பள்ளி எழுந்தருள்வாயாக!

No comments:

Post a Comment