Friday, January 14, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!


புவனியில் போய்ப்பிறவா மையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி
திருப்பெருந் துறைஉறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருனையும் நீயும்
அவனியில் புகுந்துஎமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !


புவனியில் போய்ப்பிறவா மையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி= இந்த பூவுலகத்து மாந்தர்கள் அனைவருமே புண்ணியம் செய்தவர்கள். ஈசனின் அருள் நேரடியாக அவர்களுக்குக் கிட்டி விடுகிறது. அவன் அவர்களை ஆட்கொண்டு அருள் புரிகிறான். ஆனால் விண்ணுலகில் இருக்கும் நாமோ பூவுலகில் போய்ப் பிறந்து ஈசனைத் துதிக்கும் நாள் எது எனப் புரியாமல் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருக்கிறோமே. இந்த பூமியே சிவன் ஆட்கொள்ளவேண்டியே அன்றோ ஏற்பட்டிருக்கிறது!

திருப்பெருந் துறைஉறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்= திருப்பெருந்துறையில் இருக்கும் ஈசனை நினைந்து இவ்வாறு திருமாலும், பிரமனும் ஆசை கொள்கின்றனர். அத்ஹகைய பெருமை வாய்ந்த பெருந்துறை வாழ் ஈசனே!

நின் அலர்ந்த மெய்க் கருனையும் நீயும்
அவனியில் புகுந்துஎமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே ! =நீயும் உன்னுடன் கூடவே இருக்கும் உன்னை விட்டு எந்நாளும் பிரியாத சக்தியாகிய உமை அன்னையும் இந்த பூமிக்கு வந்து எம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறோம். கிடைக்காத பேரமுதே, ஈசனே பள்ளி எழுந்தருள்வாயாக. குண்டலினி யோகத்தில் குண்டலினியைச் சக்தியாகவும், அது மேலே சென்று சஹஸ்ராரத்தைச் சென்றடைவதை சிவசக்தி ஐக்கியம் என்றும் கூறுவார்கள். தம் உள்ளத்தையே திருப்பெருந்துறை என்னும் ஊரில் இருக்கும் கோயிலாகக் கொண்ட மாணிக்கவாசகர், தம் உடலில் உள்ள சக்தி சிவனோடு சேர்ந்து ஐக்கியம் அடைந்து தாமும் இறைவனோடு ஒன்றுபடவேண்டும் என்று விரும்புகிறார். அதற்காகவே உள்ளக் கோயிலில் ஈசனைப் பள்ளி எழுந்தருளச் செய்கின்றார்.


உரை எழுத உதவி செய்த நூல்: திருவாசகம் எளிய உரை பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள், சிங்கப்பூர் திருமுறை மாநாட்டுக்குழுவினரால் வெளியிடப் பட்டது.

No comments:

Post a Comment