Monday, March 28, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை ! 3

சபாபதியால் முதலில் இந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. தன் தம்பியாவது சொற்பொழிவாற்றுவதாவது? அதுவும் இலக்கியத்தில், பெரிய புராணத்தில்?? என்ன தெரியும் அவனுக்கு?? ஏதோ கட்டுக்கதை என்றே நினைத்தார் அவர். அங்கு கூடி இருந்த மக்கள் பாராட்டினார்கள் என்பதும் அவருக்கு விந்தையாகவே இருந்தது. இல்லை, இல்லை, ஜுரவேகத்தில் நாம் கனவு காண்கின்றோம் என்றே நினைத்தார். ஆனால் இது கனவில்லை, உண்மைதான். அவருடைய மனசாட்சி உறுத்தியது அவருக்கு. பள்ளிக்கே செல்லாத தன் தம்பி இப்படி ஒரு அருமையான பொருள் பொதிந்த ஆன்மீகச் சொற்பொழிவை எப்படிக் கொடுக்கமுடிந்தது?? ம்ம்ம்ம்ம்??? சரி, சரி, அவன் போகட்டும், நாமும் யாருமறியாமல் சென்று கவனிப்போம். சபாபதி ஒரு முடிவுக்கு வந்தார்.



தம்பி அடுத்தநாள் சொற்பொழிவாற்றச் சென்றபோது யாருமறியாவண்ணம் அந்தப் பெரிய கூடத்தின் ஒரு மூலையில் தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்து தம்பியின் சொற்பொழிவைக் கேட்டார். இப்போது அவருக்கு மயக்கமே வந்தது. இப்படி ஒரு மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சை அவரால் கூட இதுவரையிலும் தர முடிந்ததில்லை. மீண்டும் கனவோ? தம்மைத் தாமே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். இது உண்மைதான். தாம் காண்பது கனவல்ல. சொற்பொழிவாற்றுவதும் அவருடைய அருமைத் தம்பியே தான். வேறு யாரும் அல்ல. வீட்டிற்குச் சென்ற அவர் தம் மனைவியிடம் நடந்தவற்றைத் தெரிவித்தார். அவர் மனைவி தாம் இந்த உண்மைகளைத் தவிர இன்னும் பல உண்மைகளை அறிந்திருப்பதாய்க் கூறினார். மனைவி கூறிய செய்திகளில் இருந்து தம் தம்பி ஒரு சாதாரண மனிதன் அல்ல. இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்டவன், அல்லது இறைவனின்பிரதிநிதியாக இங்கே வந்துள்ளான் என்று புரிந்து கொண்டார். தாம் இத்தனை நாட்கள் தம் தம்பியிடம் நடந்து கொண்ட கடுமையான நடத்தைகளுக்கு மனம் வருந்தினார் சபாபதி.



சொற்பொழிவை முடித்துவிட்டு ராமலிங்கம் வீட்டிற்கு வந்தார். சபாபதி அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு தாம் செய்த அடாத செயல்களுக்காக உளம் வருந்தினார். தம்மை மன்னிக்கும்படி தம்பியிடம் வேண்டினார். ராமலிங்கமோ அவற்றால் தாம் மனம் வருந்தவில்லை என்பதைக் காண்பிக்கும் வண்ணம் சற்றும் கலங்காமல் மெளனமாகத் தம் மனதுக்குள்ளேயே இறைவனை இவ்வளவு நாள் வழிபட்டாற்போல் அன்றும் வழிபட்டு இந்த நேரமும் இனிமையான நேரமாய்க் கடக்கவேண்டிக் கொண்டார். அவருடைய அண்ணனுக்கும் அவருக்கும் நேரவிருந்த ஒரு பெரிய மனஸ்தாபத்தையும், அதன் விளைவான நடத்தைகளையும் இவ்விதம் தடுத்தார் ராமலிங்கம்.



கொஞ்சம் கொஞ்சமாய்ச் செய்தி சுற்றுவட்டாரங்களில் பரவியது. மக்கள் தினமும் ராமலிங்கத்தைக் காண வரத் தொடங்கினார்கள். ஒரு பார்வை பார்த்தாலோ அல்லது அவன் குரலைக் கேட்டாலோ போதும் என எண்ணிய மக்கள் தேனுள்ள பூக்களை மொய்க்கும் வண்டுகளைப் போல் மொய்த்தனர். பல்வேறு இலக்கியகர்த்தாக்களும், மதத்தலைவர்களும் ராமலிங்கத்தின் பேச்சில் மயங்கி அவருக்குச் சீடர்களானார்கள். தொழுவூர் என்னும் ஊரைச் சேர்ந்த வேலாயுத முதலியார் என்பவர் சென்னை ராஜதானிக்கல்லூரியின் தமிழ் இலக்கியப் பேராசிரியராக இருந்துவந்தார். அவர் முதலில் ராமலிங்கத்தைத் தம் குருவாக ஏற்றுக் கொள்ள அவரைத் தொடர்ந்து அனைவரும் அவரைப் பின்பற்றினார்கள். ராமலிங்கம் அப்போது முதல் ராமலிங்க அடிகள் என்றே அழைக்கப் பட்டார்.



ராமலிங்கம் தினமும் திருவொற்றியூர் சென்று அங்குள்ள தெய்வத்தை வழிபடுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். பல பாடல்களைப் புனைந்து தம் சீடர்களுக்கு இவற்றைத் தொகுத்து மக்களுக்கு அளிக்கும்படி செய்தார். இதைத் தவிர தம்மை நாடி வருபவர்களின் ஆன்மீக சந்தேகங்கள், தியான வழிமுறைகள், தியானங்களில் ஏற்படும் சந்தேகங்கள் போன்றவற்றையும் தீர்த்து வைத்தார். சென்னையில் இருந்து அவர் பல இடங்களுக்குப் புனித யாத்திரை சென்று அங்குள்ள தெய்வங்களின் பேரிலெல்லாம் பாடல்கள் புனைந்தார். பாடல்கள் இரண்டு பெரிய தொகுப்பாகத் தொகுக்கப் பட்டு மக்கள் வாயில் மட்டுமல்லாமல் மனதிலும் இடம் பெறத் தொடங்கின. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் சென்ற ராமலிங்கம் நெய்வேலிக்கு அருகே உள்ள கருங்குழி என்னும் ஊரில் போய்த் தாம் அங்கேயே நிரந்தரமாய்த் தங்க முடிவு செய்தார். ஒன்பது வருடங்கள் அங்கே தங்கினார். திருஅருட்பா என்ற பெயரில் இரண்டு பாகங்களாக அவரது பாடல்கள் தொகுக்கப் பட்டன. பாடல்கள் தவிர, அவற்றில் சில கட்டுரை வடிவிலும், சில சீடர்களுக்கு அடிகளார் எழுதின கடித வடிவிலும் இருந்தன. அவை எல்லாமே திருஅருட்பா என்ற பெயரிலேயே தொகுக்கப் பட்டு அவரது சீடர்களால் படிக்கப் பட்டன. இரண்டாம் பாகத்தில் உள்ள அருள் விளக்க மாலையும், அநுபவ மாலையும் மிகவும் முக்கியமானவையாகச் சொல்லப் படுகின்றன.

4 comments:

  1. நல்ல பதிவு
    சுவாமிஜியின் வாழ்க்கையை, பதிவுகளை படிப்பதன் மூலம் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  2. அக்கா
    நான் வெகு நாட்களாக தேடிகொண்டு விஷயம் தங்கள் மூலமாக கிடைத்தது மிகவும் நன்றி

    ReplyDelete
  3. அக்கா
    நான் வெகு நாட்களாக தேடிகொண்டு விஷயம் தங்கள் மூலமாக கிடைத்தது மிகவும் நன்றி

    ReplyDelete