Tuesday, March 1, 2011

நந்தன் புகழ் பாடிய கோபாலகிருஷ்ண பாரதி!

கோபாலகிருஷ்ண பாரதியார் காலத்தில் வாழ்ந்தவர் தமிழ்ப் பண்டிதர் மகாவித்வான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் நந்தன்
சரித்திரம் எழுதப் பட்டிருந்த வேளை. சேக்கிழாரால் எழுதப் பட்டிருந்த பெரிய
புராணத்தில் வரும் "திருநாளைப் போவார்" என்னும் சரித்திரம் தான் பாரதியார்
அவர்களால் நந்தன் சரித்திரமாய் எழுதப் பட்டது. அந்நாளில் பிரபலமாகக் கவி பாடும்
திறன் பெற்றிருந்த கோபாலகிருஷ்ண பாரதி அவர்கள் சேக்கிழாரின் திருநாளைப் போவார்
சரித்திரத்தில் உள்ள உண்மைக்கு மாற்றாகத் தாம் எழுதிய நந்தன் சரித்திரத்தில்
பண்ணை மிராசுதார் நந்தனைத் தில்லைக்குப் போகாமல் தடுத்ததாய் எழுதி இருந்தார்.
உண்மையில் நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார்
சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல்,
வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப்
போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான்
சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியார் வாழ்ந்த காலத்தில் தஞ்சை ஜில்லாவின் சில
மிராசுதார்கள் தங்கள் வயல்களில் "பண்ணையம்" (விவசாயம்) செய்யும் உழவர்களை
ரொம்பவே துன்புறுத்தி வந்ததைக் கண்டு மனம் வெதும்பிக் கொண்டிருந்தார். அந்த ஏழை
மக்களும் பெரும்பாலும் துன்பத்தைச் சகித்துக் கொண்டே இருந்ததையும் கண்டார்.
ஏற்கெனவே நந்தனார் என்னும் கீழ்க்குலம் என்று சொல்லப் படும் குலத்தைச் சேர்ந்த
ஒரு நாயன்மாரின் வாழ்க்கைச் சரிதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட அவரின் இரக்க
உள்ளமானது, இந்த வாழ்க்கைச் சரிதத்தைக் கவிதையாக எழுத வைத்தது. அந்தக்
கவிதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் சிருஷ்டித்தார் ஒரு வேதியரை. அந்த வேதியரை
மிக்கக் கொடூர மனம் படைத்தவராய்ச் சித்தரித்தார். உண்மையில் சொந்தமாய் விவசாயம்
பண்ணிக் கொண்டு ஊர், ஊராகச் சிவன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த நந்தனாரை
ஒரு வேதியரின் கூலி ஆளாக மாற்றி, அந்த வேதியரின் கொடுமையால் அவரின் பக்தி
நிரம்பப் பெறாமல் அவர் இறைத் தொண்டு செய்ய முடியாமல் பாதிக்கப் பட்டதாய் எழுதி
விட்டார். ஆயிற்று. கவிதையும் எழுதி முடித்தாயிற்று.

நந்தன் சரித்திரக் கீர்த்தனை தயார் நிலையில். அதைப் பாடப் பெரிய
கதாகாலட்சேபக் காரர்கள், அந்தக் கால கட்டத்தில் தேச அபிமானிகள் பலரும்
இம்மாதிரியான ஆன்மீகப் பாடல்களோடு தேசபக்தியையும் இணைத்துப் பாடத் தயாராய்
இருந்தவர்கள் என அனைவரும் தயார் நிலையில். ஆனால் கோபாலகிருஷ்ண பாரதியாருக்கோ இந்தக் கவிதைத் தொகுப்புக்கு ஒரு சிறப்புப் பாயிரம் தயார் செய்து கொண்டே
வெளியில் விட ஆசை. அதற்குத் தகுதியான ஆள் யாரென யோசித்தபோது அவர் நினைவில்
வந்தவர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே. அவரிடம் சென்று
சிறப்புப் பாயிரம் வாங்கிச் சேர்த்து விடலாம் என்று நேரிலேயே அவரிடம் சென்றார்
பாரதியார். சிறப்புப் பாயிரமும் கேட்டார். ஆனால் பிள்ளை அவர்கள் சொன்ன பதில்:
இல்லை என்பதே!

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ்ப்பற்றோடு, சிவபக்தியும்
நிரம்பப் பெற்றவர். பெரிய புராணத்தை உள்ளும், புறமும் நன்கு கற்றுத்
தெளிந்தவர். தம் தமிழ்ப் புலமையாலேயே திருவாவடுதுறை ஆதீனத்தின் மகாவித்வானாக
இருந்து, பல தம்பிரான்களுக்கும், தமிழ் கற்பித்து, சைவ மடங்களின் ஆதீனத்
தலைவர்களாக ஆக வழி காட்டியவர். இவருக்குக் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன்
சரித்திரம்" பற்றிய தகவல்கள் கிடைத்தன. என்னதான் தமிழ் அபிமானியாக இருந்தாலும்,
கோபாலகிருஷ்ண பாரதியாரின் "நந்தன் சரித்திரம்" நன்கு இசைக் காப்பியம் ஆக எழுதப்
பட்டிருந்தாலும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு இந்த விஷயத்தில் முழுச்
சம்மதம் இல்லை. எங்கோ ஓரிரு இடங்களில் நிலச் சுவான் தாரர்கள், தங்கள் குடி,
மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள் தான். இல்லை எனச் சொல்ல முடியாது.
எளிய மக்களிடம் நமக்கும் அனுதாபம் உண்டு தான், ஆனால் கற்பனை என்ற பெயரில்
காலம், காலத்துக்கும் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு காப்பியத்தில் -அதுவும் சைவத்
திருமுறைகளிலேயே முதன்மைத் தகுதியில் வைத்துப் பாராட்டப் படும் பெரிய
புராணத்தை- மாற்றி அமைத்துக் கவிதை பாடுவது என்பதை ஏற்கவே முடியாது என்பதே
அப்பெரியவரின் தீர்மானமான கருத்து. தம் கருத்தை தம்முடைய உளம் நெருங்கிய
மாணாக்கராக இருந்த மகா வித்வான் உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் சொல்லி வருத்தப்
பட்டார்.

ஆனால் பாரதியாருக்கோ சிறப்புப் பாயிரம் வாங்க வேண்டும், அதுவும், பிள்ளை
அவர்களிடம் இருந்து என்ற எண்ணத்தில் மாற்றமே இல்லை. தினம் தினம் பிள்ளை
அவர்களிடம் வந்து கேட்டபோதிலும் பிள்ளை அவர்களோ, தமக்கு சங்கீதத்தில் நாட்டம்
இல்லை என்பதால் சங்கீதமும், தமிழும் அறிந்த வேறு யாரிடமாவது சென்று பாயிரம்
வாங்கச் சொல்லித் திருப்பி அனுப்புவதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பாயிரமே
தேவை இல்லை என்று சொல்லியும் திருப்பி அனுப்பினார். ஆனால் பாரதியார் விடவில்லை.
ஒருநாள் மதியம் பிள்ளை அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு, சிரமப் பரிகாரம்
செய்து கொண்டிருக்கும் வேளையில் வந்தார் பாரதியார். பிள்ளை அவர்கள்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் செய்தி அவர் காதை எட்டியது. வரும்போது வரட்டும்
என்று வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டார், கோபால கிருஷ்ண பாரதியார்.
உட்கார்ந்தவரால் சும்மா இருக்க முடியவில்லை.

தன்னை அறியாமல் "நந்தன் சரித்திரம்" கீர்த்தனைகளை முணுமுணுக்கத் தொடங்கினார்.
ஏற்கெனவேயே அரைத் தூக்கமாய் இருந்த பிள்ளை அவர்களின் காதில் பக்தியோடு சேர்ந்த
இனிய இசை காதில் விழுந்ததும் எழுந்து உட்கார்ந்து விட்டார். கவிதைத் தொகுப்பில்
உள்ள இலக்கணப் பிழைகளை ஏற்கெனவேயே கவனித்திருந்த பிள்ளை அவர்களுக்கு, இப்போது இசையுடன் கேட்ட அந்தப் பாடல்களில் உள்ள இலக்கணப் பிழைகள் பற்றிய நினைப்பே இல்லை. பாரதியார் மெதுவாக ஒவ்வொரு பாடலாய்ப் பாடிக் கொண்டே வந்து, "வருகலாமோ" என ஆரம்பித்தார். இந்த வருகலாமோ என்பதே ஓர் இலக்கணப் பிழை என்பதாக பிள்ளை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார். "வரலாமோ" என்று சொல்லுவதற்குப் பதிலாக இது என்ன "வருகலாமோ" என்று கேட்டிருந்தார். ஆனால் இப்போது அந்தப் பாடலின் உருக்கமும், இறைவனைக் கண்ணாரக் காண நந்தன் துடித்த துடிப்பும், தன்னோட ஈனமான பிறவியை நினைத்து ஏங்கிய ஏக்கமும், நடராஜரைத் தன் மனக்கண்ணால் கண்டு, நேரில் காண எப்போது வருவோம் என்று உருகி, உருகிப் பாடிய பாட்டையும் கேட்ட பிள்ளை அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் மழை பொழிந்தது.

பாரதியாரைக் கூப்பிட்டு அனுப்பினார். "தங்கள் இசைக்காப்பியத்தைக் கேட்டேன்.
தாங்கள் இவ்வளவு சிவபக்தி உள்ளவர் என இப்போதே அறிந்தேன். சிவபக்திச் செம்மல் ஆன
நீங்கள், மற்றவரையும் அவ்வாறே சிவபக்தியில் நெக்குருகப் பண்ணுவதையும் உளமார
அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். ஆகவே உங்கள் இசைக் காப்பியத்துக்குச்
சிறப்புப் பாயிரம் தருகிறேன்," என்று சொல்லி அனுப்பி அதே போல் சிறப்புப்
பாயிரமும் எழுதிக் கொடுத்தார். ஆனால் அதே சமயத்தில் பாரதியார் நந்தன் கதையில்
ஒரு வேதியரை நுழைத்துக் கதையை மாற்றி எழுதி நந்தன் சரித்திரத்தை இன்னும் உருக
வைத்திருப்பதைக் குறித்து, ஒருவிதமான பாராட்டுச் சொல்லோ, அவர் அம்மாதிரி
எழுதிப் பெரிய புராணத்தை மாற்றி இருப்பது குறித்து, அவதூறுச் சொல்லோ இல்லாமலேயே
அந்தச் சிறப்புப் பாயிரம் அமைந்தது.

மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்களே.

ஆதாரம்: உ.வே.சா. நினைவு மஞ்சரி,
தெய்வத்தின் குரல்.

1 comment:

  1. நான் ஆன்மீக கட்டுரைகளை வெளியிடுபவன். என் வலை தளம் http://santhipriyaspages.blogspot.in
    இதை நான் வியாபார நோக்கோடு செய்யாமல் ஒரு ஆன்மீக சேவையாகவே செய்து வருகிறேன். நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்கள் கட்டுரைகள் சிலவற்றை -சிதம்பரம் ஸ்வாமிகள், வள்ளிமலை ஸ்வாமிகள் போன்றவற்றை- சிறியதாக்கி என் வலைதளத்தில் வெளியிட விருப்பம் கொண்டுள்ளேன். அனுமதி தருவீர்களா? என் ஈமெயில் முகவரி nrj1945@gmail.com

    ReplyDelete