Thursday, June 24, 2010

ஒரு மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்

இந்த வித்யாரண்யரைப் பற்றிய பல கதைகள் இருக்கின்றன. என்றாலும் அவர் ஒரு ஸ்ரீவித்யா உபாசகர் என்பதிலும் தேவியை ஆராதனை செய்தவர் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தே இல்லை. இவர் பூர்வாசிரமப் பெயர் மாதவர் என்றும், சிலர் இவருடன் படித்த சீடர்களில் ஒருவரே மாதவர் என்றும் சொல்கின்றனர். என்றாலும் எவரும் இவருடைய தவத்தையும், சீலத்தையும், உறுதியையும், மறுக்கவில்லை. முதலில் காஞ்சி மடத்தின் மூலம் தெரிந்து கொண்ட வரலாற்றைப் பார்க்கலாம். மற்றவற்றில் சிறிதே மாற்றம் இருக்கும்.


வித்யாரண்யர் பற்றிய கதைகள் பலவிதமாய்க் கூறப் படுகின்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தண குலத்தவர் எனவும், திருமணம் ஆனவர் எனவும் சிலர் கூற்று. வறுமையில் வாடிய அவர் காஞ்சி மடத்தில் வேத, வேதாந்தங்களைப் படித்து வந்ததாகவும் கூறுவார்கள். தன்னுடைய வறுமையைப் போக ஸ்ரீவித்யா வழிபாடு செய்து வந்திருக்கிறார். ஆனால் அவருக்கு இப்பிறவியில் செல்வம் கிட்டாது எனவும், அடுத்த பிறவியில் தான் செல்வம் கிட்டும் எனவும் அன்னை கூறியதாகவும், சொல்கின்றனர். ஆனால் செல்வம் வேண்டும் என ஆசைப்பட்ட அவரோ அன்னையைக் குறித்துத் தவம் இருந்தார். இந்தப் பிறவியிலேயே தனக்குச் செல்வம் வேண்டுமெனப் பிரார்த்தித்து வந்தார். தேவியோ முன் பிறவியில் வித்யாரண்யர் செய்த பெரும்பாவத்தினால் இப்பிறவியில் அவருக்குச் செல்வம் கிடைக்காது, தானம் என்பதே செய்ததில்லை முன் பிறவியில், அதன் பலனை அநுபவித்தே ஆகவேண்டும் என்கிறாள். கோபம் கொண்ட மாதவர் தான் வழிபட்டு வந்த ஸ்ரீசக்கரத்தை எரித்ததாயும், பாதி உடை எரிந்த நிலையில் அவர் முன் தேவி தோன்றியதாகவும் கூறுகின்றனர். அப்போதும் தேவி அடுத்த பிறவியில் தான் கேட்டது கிடைக்கும் எனக் கூறி மறைகின்றாள். ஆனால் வித்யாரண்யருக்கோ இந்தப் பிறவியிலேயே எப்படியேனும் வாங்கிவிடவேண்டும் என்ற ஆவல். என்ன செய்யலாம்????

நாட்டில் அப்போது ஒரு கஷ்டமான கால கட்டம் கடந்து கொண்டிருந்தது. முகலாயர் கண்களில் பட்ட கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி அதன் செல்வத்தைக் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தனர். அப்போது வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு முகலாயர் கூட்டம் கூட்டமாய்ப் படை எடுத்து வந்து கொண்டிருந்தனர். இதனாலும் கிட்டத் தட்ட எண்ணூறு ஆண்டுகளுக்கும் மேல் சிருங்கேரியில் மடாதிபதிகள் எவரும் சரியாக இல்லாமலும் சநாதன தர்மம் கொஞ்சம் கொஞ்சமாய் க்ஷீணித்துக்கொண்டிருந்தது. காஞ்சி மடாதிபதியாக அப்போது இருந்தவர் வித்யாதீர்த்தேந்திர சரஸ்வதி என்பவர்,. அவரிடமே மாதவன் என்ற பூர்வாசிரமப் பெயர் பெற்றிருந்த வித்யாரண்யரும், சாயனர் என்பவரும் படித்துக் கொண்டிருந்தார்கள். சிருங்கேரி மடத்தின் நிலைமையையும், அந்நியர் படை எடுப்பையும் உணர்ந்த காஞ்சி மடாதிபதி மாதவனுக்கு வித்யாரண்யர் என்ற பெயரை அளித்து சிருங்கேரிக்கு அனுப்புகிறார். இங்கே வந்த வித்யாரண்யரோ தவம் செய்வதில் ஈடுபட்டுக் கலைமகளிடமும், அலைமகளிடமும் செல்வம் வேண்டிப் பிரார்த்திக்கிறார். சந்நியாசம் என்பது மறுபிறவிக்குச் சமானம் என்பதால் அலைமகளும் அவருக்கு அளப்பரிய செல்வத்தை அளித்துச் செல்கிறாள்.

திடீரென ஏற்பட்ட இத்தனை செல்வத்தையும் கண்ட வித்யாரண்யர் திகைத்துப் போய் என்ன செய்வது என்று யோசிக்கிறார். பின்னர் சநாதன தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டவேண்டி இந்தச் செல்வத்தைப் பயன்படுத்த எண்ணிக் கலைமகளிடம் அநுமதி வேண்ட, அவளோ இப்போது அவசரம் வேண்டாம், இப்போது நிர்மாணிக்கும் அரசு வெகுகாலம் நிலைத்து நிற்காது. ஆகவே அடுத்த பிறவியில் முயலவும் என்கிறாள். ஆனால் வித்யாரண்யரோ பிடிவாதமாகத் தன் விருப்பம் நிறைவேறப் பிரார்த்தனையும் தவமும் செய்ய அவ்வாறே ஆசி அளித்து மறைகிறாள் கலைமகள். செல்வமும், வித்யையும் சேர்ந்திருக்கிறது. ஆனாலும் வித்யாரண்யரால் நாட்டை ஏற்படுத்தி ஆள முடியாதே? அவரோ துறவறம் மேற்கொண்டிருக்கிறாரே? என்ன செய்யலாம்? யாரிடம் போய்க் கேட்பது?

ஒரு நாள் அந்தக் காட்டில் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தான் ஒருவன். பார்க்க என்னமோ வாட்டம் சாட்டமாய்ப் போர்வீரன் போல் இருந்தான். ஆனால் மாடு மேய்க்கிறானே?

Friday, June 11, 2010

ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!


ராமாயணத்தின் கிஷ்கிந்தாவான இங்கே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஒரு குகையில் சீதையின் நகைகளைக் கண்டெடுத்த சுக்ரீவன் பாதுகாத்து வைத்ததாய்ச் சொல்லப் படுகிறது. இலங்கைக்குச் செல்லத் திட்டம் வகுக்கும்போது ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் தங்கி இருந்ததாய்ச் சொல்லப் படும் குகையும் இங்கே உள்ளது. அருமையான குகை. குளிரூட்டப் பட்ட இடம் போல் இயற்கையின் குளுமை அங்கே தனி ஆட்சி செலுத்துகிறது. இரு பக்கமும் துங்க-பத்ரா ஓட நடுவே உள்ள குகையில் இருந்து எதிரே பார்த்தால் வாலி ஒளிந்திருந்ததாய்ச் சொல்லப் படும் குகை தென்படும். இங்கே இருந்து அம்பு போட்டால் விழும் தூரம் அது எனவும் ராமர் எங்கே இருந்து அம்பை எய்திருக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். எதிரே உள்ள வாலி குகைக்குச் செல்லக் கீழே இறங்கி ஆற்றைப் படகில் கடந்து செல்லவேண்டும். அந்தப் பக்கம் எதிரே தென்படும் மலைகளை ரிஷ்யமுகம் எனவும், மதங்க பர்வதம் என்ற பெயராலும் அழைக்கின்றனர். இப்போது சாம்ராஜ்யம் எப்படி யாரால் ஏற்படுத்தப் பட்டது என்பதைப் பார்ப்போமா?

முஹமது பின் துக்ளக்கின் ஆட்சி நடந்த காலம். ஹொய்சளர்களின் ஆட்சி நடந்த காலம். .மூன்றாம் வல்லாளனுடைய படையின் ஒரு பகுதிக்குத் தலைவனாக சங்கமன் என்னும் (குறும்பர் இனத்தைச் சேர்ந்தவன் எனச் சிலரால் கூறப்படுகிறது.) வீரன் இருந்தான். அப்போது நாட்டில் நடந்து கொண்டிருந்த அந்நியர் ஆதிக்கத்தை ஹொய்சளமும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தது. அவ்வளவு ஏன் தத்தளித்துக்கொண்டிருந்தது என்றும் சொல்லலாம். வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தாலும் அந்நியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு முன்னால் ஹொய்சள வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சங்கமனின் இரு வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களும் முழு உத்வேகத்துடன் தென்னாட்டை ஆக்கிரமிக்க வரும் அந்நியர்களை எதிர்த்தனர். தக்ஷிண பீடபூமியில் துக்ளக்கின் அதிகாரத்தை எவ்வாறேனும் குறைக்கவேண்டும் என்பதே அவ்விரு இளைஞர்களின் நோக்கம். ஆனால், அந்தோ! என்ன பரிதாபம்! இரு இளைஞர்களும் சிறை பிடிக்கப் பட்டனர்.

சிறை பிடிக்கப் பட்ட இளைஞர்கள் டில்லிக்குக் கொண்டு செல்லப் பட்டு கட்டாயமாய் மதம் மாற்றப்பட்டு அடிமைகளாக நடத்தப் பட்டனர். ஆனால் இளைஞர்களின் வீரத்தையும், விவேகத்தையும் கண்ட டில்லி சுல்தான் அவர்களைத் தென்னாட்டைக் காக்கவேண்டி தெற்கே அனுப்பினான். தென்னாட்டுக்கு வந்த இரு இளைஞர்களும் அப்போது சுல்தான்களை எதிர்த்துப் புரட்சி செய்து கொண்டிருந்த வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டனர். இளைஞர்கள் அதற்கு முன்னரே தங்கள் மதம் மாற்ற அடையாளங்களைத் துறந்திருந்தனர். எனினும் வல்லாளனால் தோற்கடிக்கப் பட்டதில் மனம் வெறுத்துக் காட்டில் சுற்றித் திரிந்தனர். ஒரு நாள் ஹரிஹரன் கனவில் ரவணசித்தர் தோன்றி மதங்க மலையில் தவம் செய்து கொண்டிருக்கும் வித்யாரண்யரின் உதவியையும் வழிகாட்டுதலையும் கேட்குமாறு கூறி மறைந்தார்.

Wednesday, June 9, 2010

ஒரு மறந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை!


ஹம்பி! அடிக்கடி கேட்டிருக்கும் ஒரு பெயர் இல்லையா?? சரித்திரப் பாடங்களிலும் படிச்சிருக்கோம். இதைப் பற்றி ஆராயப் போனால் ராமாயண காலத்துக்கே போகணும். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆம், ராமாயணத்தில் பம்பா நதிக்கரையில் கிஷ்கிந்தாவில் ராமர் சுக்ரீவனுடனான நட்பை ஏற்படுத்திக்கொண்டதாய்ப் படிச்சிருக்கோம். அந்தப் பம்பா நதி தான் இன்றைய துங்க பத்திரா நதி. கிஷ்கிந்தை என அழைக்கப் படும் இடமும் மலைகளுக்கு இடையே துங்க பத்திரை நதிக்கரையில் காணக்கிடைக்கும். அங்கே வாலியை வதம் செய்த இடமும், ராமர் கிஷ்கிந்தையின் மழைக்காலத்தில் தங்கி இருந்த குகையும் காணலாம். வாலி மறைந்துவிட்டான் என எண்ணி சுக்ரீவன் மூடி விட்டு வந்த குகையும் அங்கே உள்ளது. அந்தக் குகைக்கு நாங்க போகமுடியலை. ஆனாலும் ராமர் தங்கின குகையைப் பார்த்தோம். எந்த இடத்தில் இருந்து ராமர் அம்பை எய்திருப்பார் என்பதையும் பார்த்தோம். இப்போ ஹம்பியும், கிஷ்கிந்தையும் ஒன்றாகவே கருதப் படுகின்றன என்றே சொல்லலாம். ஹம்பியின் சரித்திர ஆதாரங்கள் கி.,மு. முதல் நூற்றாண்டுக்கும் முன்னால் செல்கிறது.

பெரும்பாலோர் இதை விஜயநகரத்துடன் சம்பந்தப்படுத்திக்கொண்டு இதுதான் விஜயநகரம் எனவும் நினைக்கின்றனர். அல்ல. விஜயநகரம் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. விஜயநகரத்தின் ஒரு சிறு கிராமமே ஹம்பி எனலாம். ஹம்பியில் விஜயநகரக் கட்டிடக் கலையின் சான்றுகளும், அதன் அழிவுகளும் காணக்கிடைப்பதால் இதை விஜயநகரம் என்றே நினைக்கின்றனர். ஏன் ஹம்பியைச் சுற்றி நகரை நிர்மாணித்தார்கள் என்றால் துங்கபத்திரை கொடுத்த பாதுகாப்பு எனலாம். ஒரு பக்கம் துங்கபத்திரை நதி பாதுகாத்தாள் எனில் மற்ற மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்கள் பாதுகாப்பு அளித்து இயற்கை அரணாகச் செயல்பட்டன. ஹம்பியின் தற்போதைய இடிபாடுகளிலும் ஒவ்வொரு பர்லாங்குக்கும் ஹிந்துக் கடவுளரின் எதேனும் உருவச் சிற்பங்களை இடிபாடுகளுடன், அல்லது சில சிற்பங்கள் அதிசயமாய்த் தப்பி இடிபாடு இல்லாமலும் காணப் படுகிறது. இதை ஐநாவின் உலகப் பாரம்பரியக் கலைச்சின்னங்களில் ஒன்றாகச் சேர்த்திருக்கின்றனர்.

இனி ஹம்பியைச் சுற்றித் தோன்றிய விஜயநகரத்தையும், அதன் சாம்ராஜ்யத்தையும் பற்றி அறிவோமா??

Tuesday, June 1, 2010

என்ன பேருனு சொல்றீங்களா இல்லையா???

பெயரிலே என்ன இருக்குனு சிலர் சொல்றாங்க. ஆனால் பெயரிலே தான் எல்லாமே இருக்கு இல்லையா? எங்க வீட்டிலே பாருங்க எந்தப் பெயரைச் சொன்னாலும் அந்தப் பெயரிலே யாராவது ஒருத்தர் இருக்காங்க. இப்போப் பாருங்க, அன்னிக்கு ஒருநாள் அம்பி அங்கிள் தொலைபேசிலே கூப்பிட்டு ஸ்டைலா ஸ்ரீராம்னு சொல்லி இருக்கார். ஸ்ரீராம்ங்கற பேரிலே எங்களுக்கு சொந்தங்கள் நாற்பது பேர்னா நண்பர்கள் பத்துப் பேராவது இருப்பாங்க. யாருனு எடுத்துக்கறது? நம்ம ரங்ஸுக்கு அந்தக் கவலையே இல்லை, குழப்புவார். என்னங்கறீங்க?? ஸ்ரீராமை,பொருத்தமே இல்லாத வேறே பெயராலே, கிருஷ்ணன், சேகர்னு ஆக்கிடுவார். அதோட இல்லாமல் அழுத்தம் திருத்தமா நம்மட்டே அடிச்சுச் சொல்லுவார். அவங்க வீட்டிலேயே போய் அவர் புரிஞ்சுட்ட பேராலேதான் கூப்பிடுவார். அவங்களும் பாவம்னு வந்துடுவாங்க. சிலர் மட்டும் அசடு வழிஞ்சுண்டே(நியாயமாப் பார்த்தா இவர் வழியணும், இங்கே எல்லாமே மாறிடும்) ஹிஹிஹி, என் பேர் சேகர் இல்லை ஸ்ரீராம்னு சொல்லுவாங்க. ஓஹோ, அப்படியானு கேட்டுப்பார். ஆனாலும் விடாம இவர் வச்ச பேராலே தான் கூப்பிடுவார்ங்கறது வேறே விஷயம்.

இதைவிடக் கூத்து ஒண்ணு நடந்துச்சே. ஒருநாளைக்கு திராச சார் கூப்பிட்டார். அவர் திராசனு சொல்லி இருந்தாலே இவர் புரிஞ்சுட்டிருக்க மாட்டார்ங்கறது வேறே விஷயம். அவரோ சந்திரசேகர்னு சொல்லிட்டார். சந்திரசேகர்ங்கற பேரிலே எனக்கு அக்காவீட்டுக்காரர் ஒருத்தர் இருக்கார். அதோட இவரோட நெருங்கின நண்பர்கள் இரண்டு பேர் சந்திரசேகர். இவங்க எல்லாரும் அவரை விடப் பெரியவங்க. ஆனாலும் இவர் நண்பர்கள்ங்கற ஹோதாவிலே ரொம்ப உரிமையா, "என்னப்பா, எப்படி இருக்கே??" னு எல்லாம் கேட்டுட்டு இருந்தார். சரிதான் அவரோட நண்பராக்கும்னு நினைச்சேனா?? தொலைபேசியை என் கையிலே கொடுத்து சந்திரசேகர்டி, உன்னோட பேசணுமாம். ஹிஹி அவர் நினைச்சது சந்திரமெளலியைப் போல. சரினு நானும் தொலைபேசியை வாங்கிட்டு ஹலோனு சொன்னால் எதிர்முனையில் திராச சார் பேசறார். இப்போ அசடு வழியவேண்டிய முறை என்னோடதாச்சு. இத்தனைக்கும் நம்மாளு அசரவே இல்லை. ஹிஹிஹி,இது பங்களூரிலே இருக்காரே உன்னோட நண்பர் மெளலி, அவர்னு நினைச்சேனேனு சமாளிப்பு.

நல்லவேளையாக் கொத்தனார் கூப்பிட்டப்போ "கொத்தனார் பேசறேன்னே சொல்லிட்டார். அவர் பேரிலே எங்க வீட்டிலே "என்னடா, டேய்"னு அதட்டற ரேஞ்சுக்குப் பசங்க இருக்காங்களா? பேர் சொல்லி இருந்தா மனுஷன் முழி முழினு முழிச்சிருப்பார். தி.வா.வேறே ஒருநாள் வாசுதேவன்னு சொல்லவே,அன்னிக்குத் தொலைபேசியை நான் தான் எடுத்தேன், இருந்தாலும் அது என்னோட ஓர்ப்படி பையர்னு நினைச்சுட்டேன். டேய் வாசுனு கூப்பிட்டிருக்கணும், (நல்லவேளையா, எனக்குத் தான் நல்லவேளை! :P) அப்புறம் தான் ஏதோ குரலில் மாற்றம் இருக்கேனு நினைச்சுட்டு, "யாரு"னு திரும்பக் கேட்டால் கடலூர்னு பதில் வந்ததோ பிழைச்சேன். இல்லாட்டி அன்னிக்கு ஒரு வழி பண்ணி இருப்பேன் எங்க பையர்னு நினைச்சு.

கணேசன் கேட்கவே வேண்டாம், எக்கச்சக்கமா இருக்காங்க. டேய்னு கூப்பிடறதிலே இருந்து மரியாதையாக் கூப்பிடற வரைக்கும் இருக்காங்க. பாலாங்கற பேரும் ரொம்ப காமன். அந்தப் பேரிலே நல்லவேளையா இணையத்திலே யாரும் அதிகமா இல்லையோ பிழைச்சாங்க. எங்க பால்காரர் பேரு என்னமோ முனுசாமினு. ஆனால் இவர் வச்சிருக்கிற பேரு என்னமோ அன்பழகன். அன்பழகன் இல்லை முனுசாமினு சொன்னாலும், பால்காரரைப் பார்த்தால் அன்பழகன்னு தான் தோணுதாம். ஆனால் என்ன பேரு அவங்க வீட்டிலே வச்சிருந்தாலும் நம்ம ரங்க்ஸ் கூப்பிடறதென்னமோ அவர் தானாய் செலக்ட் பண்ணிண்ட ஒரு பெயரிலே தான். இப்படி எத்தனை பேரைக் குழப்பி இருக்கார்னு நினைச்சீங்க? எல்லார் பேரையும் இஷ்டத்துக்கு மாத்திடுவார். இது வரைக்கும் அவர் மாத்தாத பேர் என்னோடதுதான்னு நினைக்கிறேன். மாத்தினாச் சும்மா விட்டுடுவோமா???

இப்போ எல்கே தாத்தா வேறே கார்த்திக்னு பேரிலே வந்திருக்காரா? கார்த்திக் என்னோட அண்ணா பையர் பேரு. இவர் கார்த்திக்னு சொன்னால் அவ்வளவு தான். என்னடானு கேட்போம். மீனாங்கற பேரிலே எங்க வீட்டிலே தடுக்கி விழுந்தால் ஒருத்தர் இருக்காங்க. அதனாலே ஒவ்வொரு மீனாவுக்கும் ஒரு அடைமொழி உண்டு. யு.எஸ்ஸிலே மட்டும் எங்களுக்குத் தெரிஞ்சு 3,4 மீனா உண்டு எங்க பொண்ணைச் சேர்க்காமல். இதிலே நம்ம கவிநயா தொலைபேசினாங்கன்னா எதிர்ப்பக்கம் சத்தமே வராது. நம்ம பேச்சுத் தான் எதிரொலிக்கும். அப்போப் புரிஞ்சுடும் அவங்கதான்னு. மத்தவங்க யாரானும் மீனானு சொன்னால் எந்த மீனானு கேட்டுக்கணும். அவ்வளவு ஏன்? என்னோட ஒரிஜினல் பேரான சீதாலக்ஷ்மிங்கறதே எங்க அப்பா வீட்டிலே பிறக்கிற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வச்சிருக்காங்களா? ஒரே சீதாலக்ஷ்மி மயம் தான் வீட்டிலே. நல்லவேளையாக் கூப்பிடற பேரு எல்லாருக்கும் மாத்தி மாத்தி வச்சுட்டாங்களோ பிழைச்சோம். இல்லைனா சீதாலக்ஷ்மினு கூப்பிட்டால் குறைந்தது நாங்க ஐந்து, ஆறு பேர் திரும்பிப் பார்ப்போம். இது ஒரு பரம்பரைத் தொடர்கதை! இரண்டு தலைமுறையா வந்துட்டு இருக்கு. :D

ஹிஹிஹி, இந்தப் பயங்கர ஆராய்ச்சிக்கட்டுரை தொடர்ந்தாலும் தொடரும்! எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க!