Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளல் பெருமானின் புகழ் மேன்மேலும் பரவியது. அவரின் சொற்பொழிவுகளையும், அருட்பிரசங்கங்களையும் கேட்ட மக்கள் தாமாகவே வலிய வந்து கொல்லாமை விரதம் பூண்டனர். பலரும் வள்ளல் பெருமானிடம் வந்து அவரை நமஸ்கரித்து அவருடைய பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து தாங்கள் கொல்லாமை விரதம் பூண்டிருப்பதைச் சொல்லி மகிழ்ந்தார்கள். வள்ளலாரும் கருணையுடன் அவர்களை ஆசீர்வதித்தார். ஒரு சிலர் சத்தியமும் செய்தனர். இன்னும் சிலர் தாங்கள் கொல்லாமை விரதம் பூண்டதில் இருந்து தங்கள் வயல்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதாயும் கூறினார்கள். விளைச்சலில் கால் பங்கு தானியத்தை மிகவும் மனம் உவப்போடு தருமச் சாலையின் அன்னதானத்திற்கு தானமாகவும் வழங்கினார்கள். ஒரு நாள் இவற்றைப் பற்றி எல்லாம் வள்ளலார் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கையில் அங்கிருந்த அமாவாசை என்னும் பணியாள், சற்றே ஒதுங்கி நிற்க வள்ளலார் அவரை அழைத்து என்ன விஷயம் என விசாரித்தார்.



அமாவாசை எல்லாரும் பேசிக்கொண்டிருந்ததைத் தானும் கேட்டதாகவும், அனைவரையும் போல் தனக்கும் அதிர்ஷ்டம் அடித்திருப்பதாயும் கூறினார். அங்கிருந்த வேலாயுத முதலியாரும் இதைக் கேட்டு உற்சாகத்துடன் மேற்கொண்டு கேட்கத் தயாரானார். அப்போது அமாவாசை அடிகளோடு புலவர் வேலாயுத முதலியாரும் சேர்ந்தே தனக்கு அறிவுரை கூறியதாக நினைவூட்டவே, முதலியார் தாம் அந்த விஷயம் என்னவென்பதை அடியோடு மறந்துவிட்டதாகவும், மீண்டும் கூறும்படியும் கேட்டார். அமாவாசை அதற்கு ஆறுமாசம் முன்னால் சுவாமிகள் அமாவாசையிடம் மாடுகளைச் செத்தபின்னர் சாப்பிடும் வழக்கத்தை விடும்படி கூறியதை நினைவூட்டினார். அப்படியே தான் செய்து வந்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் சுவாமிகள் அழைத்து மாமிசம் மாட்டினுடையது மட்டுமல்லாமல், மீன், ஆட்டு மாமிசம் என எவ்வகையில் ஆனாலும் உண்ணக்கூடாது எனவும் அறிவுறுத்தியதாய்ச் சொன்னார். அப்போது அமாவாசை தாங்கள் இருக்கும் சேரியில் பங்காய்க் கிடைக்கும் மாமிசத்தை விட்டுவிட்டால் தான் செலவுக்குத் திண்டாடும்படி நேர்ந்துவிடுமே எனக் கவலைப்பட்டதாயும், சுவாமிகளோ, கொல்லாமை விரதம் கடைப்பிடிப்பதை வலியுறுத்தியதையும், புலவரும் அப்போது அங்கே இருந்தவர் சுவாமிகள் சொன்னபடியே செய்யுமாறு அமாவாசையைக் கட்டாயப் படுத்தினதையும் நினைவூட்டினார். வேலாயுத முதலியாருக்கு இப்போது நினைவில் வந்தது.



அமாவாசை மேலே தொடர்ந்து அதன் பின்னர் சுவாமிகள் அரை ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து தன்னிடம் கொடுத்துப் பெட்டியில் வைத்துக்கொள்ளச் சொன்னதாகவும், அன்றிலிருந்து தினம் அரை ரூபாய் கிடைக்கும் என உறுதியாகச் சொன்னதையும் நினைவூட்டினார். அதேபோல் அமாவாசை கொல்லாமை விரதம் கடைப்பிடித்து அடிகளாரின் அறிவுரைகளின்படியே இருந்துவர அன்றிலிருந்து தினமும் எப்படியாவது அரை ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிட்டுவதாயும் கூறி அடிகளின் காலில் விழுந்தார். மேலும் அன்று வரை தான் மட்டுமே கொல்லாமை விரதம் கடைப்பிடித்ததாகவும், இனி தன் குடும்பத்தினரையும் இருக்கச் சொல்லிச் செய்யப் போவதாகவும், இனி அவர் குடும்பத்தினர் அனைவரும் மாமிசமே உண்ணாமல் இருப்பார்கள் எனவும் உறுதி அளித்தார். அமாவாசையை ஆசீர்வதித்து அனுப்பினார் அடிகளார்.



ஒருநாள் காலைவேளையில் தியானம் முடித்து, பூஜை முடித்து, அன்னதானமும் முடித்து வேலாயுத முதலியாருடன் தருமச்சாலையில் வந்து அமர்ந்த அடிகளின் முன்னால் ஆறுமுக முதலியார் ஓட்டமாய் ஓடி வந்து முதல்நாள் இரவு அடிகள் போர்த்தி இருந்த போர்வையைக் கள்வன் களவாடிக்கொண்டு போய்விட்டான் என்ற செய்தி தெரிந்து தாம் ஓடோடி வந்ததாய்க் கூறினார். மிகுந்த பதட்டத்துடன் இருந்தார் ஆறுமுக முதலியார். சுவாமிகள் அவரைச் சாந்தப் படுத்த ஆறுமுக முதலியார் நடந்தது என்ன எனக் கேட்டார். சுவாமிகள் முதல் நாள் கூடலூர் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து குள்ளஞ்சாவடி வந்தபோது அங்குள்ள சத்திரத்துத் திண்ணையில் தங்கியதாகவும் கூறினார். சத்திரக் காவல்காரன் சுவாமிகளைக் கண்டு இன்னார் எனத் தெரிந்து கொண்டு போர்வை ஒன்றைப் போர்த்திக்கொள்ளக் கொடுத்ததாயும் கூறினார். மேலும் அந்தக் காவல்காரர் முஸ்லீம் அன்பர் எனவும், அடிகளுக்குத் துணை யாரும் இல்லை எனத் தெரிந்து கொண்டு அடிகளோடு தங்கியதாகவும் கூறினார். இருவரும் திண்ணையிலேயே படுத்திருக்கையில் கள்வன் ஒருவன் வந்து அடிகளின் போர்வையை இழுக்க, உடனே விழித்துக்கொண்ட அடிகள் , தாம் விழித்தது கள்வனுக்குத் தெரிந்தால் போர்வை அவனுக்குக் கிடைக்காது என எண்ணிப் புரண்டு படுத்ததாகவும் கள்வன் போர்வையை எடுத்துக்கொண்டு விட்டான் எனவும் கூறினார். காவலர் விழித்து எழுந்தவர் கள்வனை அதட்ட, அடிகள் போனால் போகட்டும் எனக் காவலரைச் சமாதானம் செய்துவிட்டுப் போர்வையைக் கள்வனிடம் கொடுத்து, “இனி திருட்டுத் தொழில் வேண்டாம்.” என்று அறிவுரை கூறியதாகவும் சொன்னார். பின்னர் காலை எழுந்து தருமச்சாலைக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். ஆறுமுக முதலியாரிடம் இதற்காகப் பதட்டம் அடைய வேண்டாம் எனவும் அன்புடன் கூறினார். அப்போது வேலாயுத முதலியார், இம்மாதிரி நடப்பது இது முதல் முறை அல்ல;ஏற்கெனவே இருமுறை நடந்துள்ளது என்று கூற ஆறுமுக முதலியார் ஆச்சரியமடைந்தார்.

ஆனால் வள்ளலார் இவை எல்லாம் வேண்டாம் எனத் தடுக்க, வேலாயுத முதலியாரோ தான் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்ட, அவர் இஷ்டம் போல் செய்யச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார் அடிகளார். வேலாயுத முதலியார் தொடர்ந்தார்:



ஒரு சமயம் மஞ்சக்குப்பம் கோர்ட்டில் வேலை பார்க்கும் சிரஸ்தேதார் ராமச்சந்திர முதலியார் வடலூருக்கு வந்து அடிகளைத் தம்மூருக்கு வந்து தங்கும்படி அழைத்ததாகவும், அதன் பேரில் அடிகளும் அவருடன் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறினார். இருவரும் வண்டியில் சென்றிருக்கிறார்கள். இதே குள்ளஞ்சாவடி அருகில் இரவு கள்வர் இருவர் வண்டியை மறித்திருக்கின்றனர். வண்டியில் சிரஸ்தேதார் சேவகன் இருந்தும், அவனும், வண்டியை ஓட்டி வந்த வண்டிக்காரனும் பயந்து போய் அருகே இருந்த முந்திரிக்காட்டுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டார்கள். கள்வர்கள் வண்டியின் பின்புறம் வந்து வண்டியுள்ளே அமர்ந்திருப்பவர்களைக் கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்த, முதலில் சிரஸ்தேதார் கீழே இறங்கினார். அவர் கை விரலில் வைர மோதிரம் இருந்தது. கள்வர்கள் அதைக் கழட்டச் சொல்லி அதட்டினார்கள். அப்போது பெருமான் அவர்களைப் பார்த்து, “என்ன அவசரமோ?” என்று கேட்க, அவர்கள் பெருமானை அடிப்பதற்காகத் தடியை உயர்த்தினார்கள். உயர்த்தின கைகள் அப்படியே செயலற்று நிற்கக் கண்ணும் தெரியவில்லை அவர்களுக்கு.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

உலவச் செல்கையில் கூட்டத்திலிருந்து பிரிந்து தூரம் செல்வதும், கிட்டே இருப்பது போல் தோற்றமளிப்பதுவும், தகுதியற்றவர்கள் உபதேசம் கேட்க நினைத்தால் விலகிச் செல்வதுமாக சுவாமிகளின் எண்ணற்ற திருவிளையாடல்களை மக்கள் பேசி மகிழ்ந்தனர். ஒரு சமயம் சமைத்த உணவு இரவு நேரம் குறைவாக இருக்கையில் திடீரெனப் பலர் பசியோடு வர, சுவாமிகள் அந்த உணவைத் தாமே தம் திருக்கரங்களால் அனைவருக்கும் பரிமாற அமுதசுரபி போல் உணவு வந்து கொண்டே இருந்ததோடு அனைவரும் உண்டு முடித்தும் மீதம் இருந்தது. அரிசி தீர்ந்து போய் விட்டதே என தருமச் சாலைக்காப்பாளர் கவலைப்பட்டால், சுவாமிகள் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு மறுநாளே அரிசியும், உணவுப்பொருட்களும் வரும் எனச் சொல்வாராம். அதே போல் மறுநாள் ஏதேனும் ஓர் அடியார் அரிசியும், உணவுப் பொருட்களும் அனுப்பி வைப்பார்கள். தருமச் சாலையில் இருந்தவர்களை சாலையின் ஒரு பகுதியிலேயே திரையிட்டுவிட்டுப் பின்னர் அதை விலக்கிக் காட்டி சிதம்பர தரிசனத்தைக் கண் குளிர தரிசனம் செய்ய வைத்தார். இவ்விதம் பல்வேறு சித்து விளையாட்டுக்களை அநாயாசமாய் சுவாமிகள் செய்து வந்தார்.



ஒரு சமயம் முன்பகலில் தருமச்சாலையின் முன் வராந்தாவில் அமர்ந்திருந்த வள்ளலார் எவரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். அங்கே இருந்த வேலாயுத முதலியாருக்கும், அவரது மகனுக்கும் ஏதோ அதிசயம் அல்லது புதுமை நடக்கப் போகிறது என்ற உணர்வு தோன்றியது. பெருமானும் உடனே முதலியாரிடம், “புலவரே, சற்று நேரம் வேடிக்கை பாரும்; ஒரு மேதாவி வருகிறார்.” என்று கூறவே முதலியார் அவர் யாரென விசாரித்தார். அதற்கு வள்ளலார் அவர் பெயர் பிநாகபாணி முதலியார் என்றும் புதுச்சேரி தபால், தந்தி அலுவலக மேலாளர் எனவும் கூறினார். பன்மொழி விற்பன்னரான அவர் வள்ளலாரின் மொழியறிவைப் பரிசோதிக்க வேண்டி இங்கே வருவதாகவும் கூறினார். முதலியாருக்கு வருத்தமும், கோபமும் மேலிட்டது. நம் சுவாமியை ஒருவர் சோதிப்பதா என்ற எண்ணமும் ஏற்பட்டது. என்றாலும் பொறுத்துக்கொண்டு, அவர் சுவாமிகளுக்குப்புத்தி சொல்ல வரவில்லை என்றும், சுவாமிகளிடம் அறிவுரைகள் கேட்டுப்புத்தி சரியாக்கிக் கொண்டு போகவே வருவதாயும் கூறிவிட்டு அமைதியாக வருபவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.



பிநாகபாணி முதலியாரும் வந்து வள்ளலாரை வணங்கி நின்றார். அவரை அமரச் செய்த வள்ளலார் தாமும் பதில் வணக்கம் செய்தார். பின்னர் பிநாகபாணி முதலியார் வந்த நோக்கத்தை வினவ அவரும், தம்முடைய மொழி ஆராய்ச்சியில் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை சுவாமிகளைக் கேட்டுத்தெரிந்து கொள்ள வந்திருப்பதாய்க்கூறினார். வெளிப்படையாய் இப்படிப்பணிவைக் காட்டினாலும் உள்ளுக்குள் சுவாமிகளை நோக்கி நகைக்கிறார் என்பது வேலாயுத முதலியாருக்கும் புரிந்தது. சுவாமிகளோ அமைதியே காத்தார். பிநாகபாணி முதலியாரிடம்வேலாயுத முதலியாரைக் காட்டி, இவர் உபயகலாநிதி தொழுவூர் வேலாயுத முதலியார். ஆறு மொழிகளில் நல்ல புலமைகொண்டவர் என அறிமுகம் செய்து வைத்தார். பிநாகபாணி முதலியாரும் வேலாயுத முதலியாருக்கு வணக்கம் செய்ய அவரும் பதில் வணக்கம் செய்தார். பின்னர் புலவரின் மகனைக் காட்டி வள்ளலார் இவன் புலவர் மகன் நாகேஸ்வரன், ஐந்து வயதுச் சிறுவனானாலும் ஆறு மொழிகளில் வல்லவன் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். நாகேஸ்வரனும் பிநாகபாணி முதலியாரை வணங்க, அவரும் இந்தச் சிறுபிள்ளையும் ஒரு புலவரா என எண்ணிக் கொஞ்சம் கலங்கினார். ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் குழந்தையை ஆசீர்வதித்தார்.



வள்ளலார் பிநாகபாணி முதலியாரிடம் அவரின் சந்தேகங்களை அந்தச் சிறுவனிடம் கேட்குமாறும் அவனால் தீர்த்து வைக்க இயலும், என்றும் எந்த மொழியிலும் கேட்கலாம் எனவும் கூற பிநாகபாணி முதலியார் நடுங்கிப்போனார். அச்சம் மேலேற, அவர் உடல் வெட வெடத்து நடுங்க, வள்ளலார் காலில் விழுந்து வணங்கினார். தன்னுடைய அகம்பாவத்தை ஒப்புக்கொண்டு வள்ளலாரின் மொழி ஞானத்தைத் தாம் பரிசோதிக்க வந்ததையும் ஒப்புக்கொண்டு அது எவ்வளவு பெரிய தவறு எனத் தாம் உணர்ந்துவிட்டதாயும், பால் மணம் மாறாப்பாலகனை வைத்துத் தம் அகந்தையை அகற்றியதற்கு வள்ளலாருக்கு நன்றி கூறியதோடு அல்லாமல் தம் அக்ஞானம் அகன்றதாயும் கூறி மேலும் மேலும் வணங்கினார். வள்ளலார் அமைதியுடன் அவரிடம், “பிநாகபாணி முதலியாரே! கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு என்பதைப்புரிந்து கொண்டிருந்தால், உணர்ந்து கொண்டிருந்தால் இந்த அகந்தையும் கர்வமும் உம்மை ஆட்டிப் படைத்திருக்காது. போனது போகட்டும். உண்மையை உணர்ந்துவிட்டீர். “ என்று அவரைத் தேற்றி அன்றைய பூஜையைப் பார்த்துவிட்டு உணவும் உண்டு ஓய்வெடுத்துக்கொண்டு மாலை ஊர் திரும்புமாறு அன்புக்கட்டளையும் இட்டார்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

சில தினங்கள் சென்றன. ஒரு முற்பகலில் கணக்கிலவதானி முத்துசாமிப் பிள்ளையவர்கள் வடலூருக்கு வண்டியில் வந்து இறங்கினார். தருமச்சாலை வீதி முகப்பில் இறங்கிய அவர் அப்படியே வீதியில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்கினார். தருமச்சாலை இருக்கும் திசை நோக்கி வணங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார். கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகப் பெருக தருமச் சாலை நோக்கி நடந்தவண்ணமே, “சமரச சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பவும், போதிக்கவும் வந்த வள்ளல் பெருமான் நடக்கும் இந்தத் திருவீதியிலே நானும் நடக்க என்ன தவம் செய்தேன்! என் உடல் இந்தப்புண்ணியமான வீதியிலே நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து எழவும் நான் செய்த புண்ணியம் தான் என்ன! என் அகந்தை அழிந்தது; கர்வம் ஒழிந்தது. மனமாயை அகன்றது; மமதை அடியோடு அற்றுப் போனது. என் மனமாகிய குகையில் இருந்த அந்தகாரம் அகன்று அருட்பேரொளி வீச ஆரம்பித்து விட்டது. ஐயனே! என் தெய்வமே! வள்ளல் பெருமானே! தங்கள் திருவருளைப் பெற வேண்டியே நான் வந்திருக்கிறேன். “ என்று கூறிக்கொண்டே தருமச் சாலையை அடைந்தார்.



அங்கே வள்ளலார் வேலாயுத முதலியாருடனும், ஆறுமுக முதலியாருடனும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவதானியார் அங்கே போய்ச் சேர பேச்சை நிறுத்தி விட்டு வள்ளலார் அவதானியாரைப் பார்த்தார். அவதானியார் தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வள்ளலாரை வணங்கினார். வள்ளலாரும் பதில் வணக்கம் செலுத்திவிட்டு அவரை அமரச் செய்தார். அவரோ பக்திப் பரவசம் மீதூற ,” என் ஐயனே, என் தெய்வமே! ஞான தீபமே! அருட்பெரும் சோதியே! தனிப்பெரும் கருணையே! வள்ளலே! என் அகந்தை மீதூறி நான் இறுமாப்புடன் உமக்கு எழுதிய வெண்பாவிற்கு நான் கருதிய உரை மட்டுமின்றி, வேறொரு விசேஷ உரையையும் எழுதித் தாங்கள் அந்தப் பூட்டை அவிழ்த்ததைக் கண்டேன். ஐயா, தாங்கள் எழுதிய விசேஷ உரையின் பொருள் நான் முற்றிலும் அறியாதது; எனக்கு விளங்காததும் கூட. ஐயா, என் அகந்தையால் நான் செய்த இந்தத் தவறைப் பொறுத்தருள வேண்டும். தங்களை வித்துவான் என்றே நினைத்திருக்க, தாங்களோ அற்புதங்களை நிகழ்த்தும் பரிபூரணமான ஞானி என்பதை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். ஐயா, நான் திருந்திவிட்டேன். மதுரை மாநகர் விட்டு வடலூர் வந்தது தங்கள் திருவடியில் என் முடிபட வணங்கி, தங்களிடம் மன்னிப்புக் கேட்டு என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதற்காகவே!” ஓவென்று கதறி அழுத அவதானியார், திரும்பத் திரும்ப, “என் ஞானகுருவே!” “என் ஞானகுருவே!” என்றே புலம்பிய வண்ணம் இருந்தார்.



வள்ளலாரும் அன்பு பொங்க, “ஐயா, எழுந்திரும்; வீண் ஆணவம் கூடாது என்பதை உணர்ந்துவிட்டீர்கள் அல்லவா? அது போதும்!” என்று சொல்லிக்கொண்டே அவரை எழுப்பினார். இரு முதலியார்களும் அவதானியாரைக் கண்டு முதலில் அவர் செய்கையால் கோபமுற்றாலும், அவர் இப்போது மன்னிப்புக் கேட்கவே வந்திருப்பது உணர்ந்து அவர் பால் கனிவும், இரக்கமும் கொண்டார்கள். அவரை வணங்கி இருவரும், பெருமான் முன் நாம் என்றென்றும் சிறியவர்களே எனக் கூற அவதானியாரும் முழு மனதோடு அதை ஒத்துக்கொண்டார். பின்னர் இன்னமும் மனம் வருந்திக் கொண்டிருந்த அவதானியாரை வள்ளல் பெருமான் தேற்றி அவரையும் அழைத்துக்கொண்டு அவதானியாரின் அஞ்ஞான நோய் தீர்ந்ததால் உணவுக்கூடம் சென்று வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ளலாம் என அழைத்துச் சென்றார். இதைப் போன்ற சித்துக்களும், அற்புதங்களையும் செய்து வந்த வள்ளலாரைப் பற்றி ஊர் மக்கள் மிகவும் பெருமையுடன் பேசிக்கொண்டனர்.



தருமச்சாலை நிர்வாகத்தை அப்பாசாமிச் செட்டியார் என்பவர் பார்க்க, மற்றப் பொறுப்புக்களுக்கென்று நமச்சிவாயப் பிள்ளை என்பவரும், சண்முகம் பிள்ளை என்பவரும் இருந்தனர். அவர்கள் இருவரில் சண்முகம் பிள்ளை வள்ளலார் சுவாமிகள் உச்சிப் போதில் வெயிலில் அமர்ந்து நிஷ்டையில் இருக்கையில் வள்ளலாரின் தலைக்கும் உச்சி சூரியனுக்கும் இடையே தீப்பிழம்பு ஒன்று தோன்றி அக்னி ஸ்தம்பமாக நிற்பதைக் கண்டு பிரமித்து சாலையின் அனைத்து ஊழியர்களுக்கும், பக்தர்களுக்கும் அதைக் கூறி வியந்தார். இதே போல் இன்னொரு நாள் அதே சண்முகம் பிள்ளை உச்சிப்போதில் வள்ளலார் வெளியே சென்றவர் வரவில்லையே எனக் கவலைப்பட்டுப் பார்க்கையில் சுவாமிகளின் அங்கங்கள் தனித்தனியே துண்டு துண்டாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய் மயங்கி விழுந்து விட்டார். அப்போது சுவாமிகளின் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து அவரெதிரே வந்து, இனி இம்மாதிரி வராதீர் என்று சொல்லி அவரைத் தேற்றி தருமச் சாலைக்கு அழைத்துச் சென்றார். இதைக் கேட்ட மக்களில் சிலர் ஆச்சரியம் அடைந்தனர்; சிலருக்குப் பயமாகவும் இருந்தது.



ஆனாலும் முழுக்க முழுக்க இப்படி சித்து வேலைகள் மட்டுமின்றி நோயையும் குணப்படுத்தி வந்தார் வள்ளலார். கூடலூரில் இருந்து வரும் அடியாரான தேவநாதம் பிள்ளை என்பவரின் மகன் ஐயாசாமிப் பிள்ளைக்குத் தொடையில் கட்டி வந்தபோது சுவாமிகள் மந்திரித்த திருநீறோடு தோத்திரம் செய்ய ஒரு மருத்துவப் பாடலும் எழுதி அனுப்பி வைக்க, பாடலில் கூறிய மருத்துவத்தையும் செய்து கொண்டு, திருநீற்றையும் பூசிக்கொண்ட ஐயாசாமிப் பிள்ளைக்குக் கட்டி ஆறிக்குணம் பெற்றார். இதே ஐயாசாமிப் பிள்ளை கடும்நோயால் கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குப் போக, தேவநாதம் பிள்ளை மகனின் நிலை கண்டு பதறிப்போய் சுவாமிகளை வேண்டிக்கொண்டார். அப்போது வடலூரில் தருமச் சாலையில் அன்பர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் வள்ளலார் பெருமான். ஆனால் கூடலூரில் தேவநாதம் பிள்ளையின் வீட்டுக்கதவு தட்டப் பட அவர் கதவைத் திறந்தால் வள்ளலார் எதிரே நின்றார். ஆச்சரியத்தோடு அவரை உள்ளே அழைத்துச் சென்றார் தேவநாதம் பிள்ளை. உள்ளே சென்ற வள்ளலார் ஐயாசாமி பிள்ளைக்குத் திருநீறு இட்டுச் சற்று நேரம் அங்கிருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டார். அதிசயிக்கத் தக்க வகையில் ஐயாசாமிப் பிள்ளை அன்றிரவே குணமடைந்தார். மறுநாள் பிள்ளையை அழைத்துக்கொண்டு தேவநாதம் பிள்ளை சாலைக்கு வர, அங்கே அருள் உபதேசம் செய்து கொண்டிருந்த பெருமான் தேவநாதம் பிள்ளையைக் கண்டதும் உடனே எழுந்து வந்து, தனியே அழைத்துச் சென்று, நேற்றுத் தாம் கூடலூர் வந்ததை இங்கே தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.



சந்தேகம் கொண்ட தேவநாதம் பிள்ளை தருமச்சாலையில் இருந்தவர்களை விசாரித்த போது நேர்று முழுதும் சுவாமிகள் சாலையிலேயே இருந்ததாகவும், வெளியே எங்குமே செல்லவில்லை எனவும் தெரிவித்தனர். அப்போது தவிர்க்க இயலாமல் கூடலூருக்கு சுவாமிகள் வந்ததையும், தம் மகனைக் குணப்படுத்தியதையும் தேவநாதம் பிள்ளை தெரிவிக்க வேண்டியதாயிற்று. அதைக்கேட்ட அனைவரும் ஒரே நேரத்தில் தருமச் சாலையிலும், கூடலூரிலும் பெருமான் காட்சி அளித்த விபரம் கேட்டு ஆனந்தமும், ஆச்சரியமும் கொண்டனர். இதே போல் திருவதிகையிலும் ஒரு விழாவில் வழிபடச் சென்ற சுவாமிகள் மக்கள் கூட்டம் நெருக்க சுவாமிகள் மக்களின் விருப்பத்திற்கிணங்க, கூட்டத்தில் பல இடங்களிலும் ஒரே நேரம் தோன்றிக் காட்சி கொடுத்து மக்களை மகிழ்வித்தார்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

அவதானியார் கடிதத்தை வாங்கிப் படித்தார். அப்போது சந்நிதானம் அந்தக் கடிதத்தை உரக்கப் படிக்க வேண்டுமென அவதானியாரை வற்புறுத்த வேண்டாவெறுப்பாக அவதானியாரும் அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார். கடிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.

“உணர்ந்தோரா னியல் வகைய வின்ன வென்றவற்றிற் பின்மொழி மதிக்கு முன்மொழி மறைக்கு முதலீறு விளங்க முடிப்பதாய பின்மொழியடைசார் முன்மொழி ஞாங்கர் விளங்கிய ஞானிகட்கு பொய்யற் கெதிர்சார்புற்ற மூலியொன்று வளைத்து வணக்கஞ்செய்த சுகநநீ ரெழிலென்றும் வான் வழங்கு பண்ணிகார மென்றும் நாகச்சுட்டு மீனென்றும் வேறு குறிப்ப தொன்று.



அண்மைச் சுட்டடுத்த வேழாவதன் பொருண்மையும்மையடுத்த பல்லோர்வினாப்பெயர்ப் பொருள் குறிஞ்சி யிறைச்சிப் பொருளொன்றனோடு புணர்ப சேய்மைச் சுட்டடுத்த வத்திறத்தியல் யாது



இரண்ட னுருபொடு புணர்ந்த தன்மைப் பன்மையாறாவதன் பொருட்டாக்கினார்க் குய்த்த கற்பிய லதிகரிப்பின் வருந்தலைமகட் பெயர விரண்டினோ டிரண்டிரண்ட் டூகக் கழிவிலைப் பெயரவு மகார வீற்று முதனிலைத் தனிவினைச் செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சத்தனவாகக் கலம்பகச் செய்யுளுறுப்பாற் சிறத்தும்



இருவகை முதற்பொரு ளொன்றன் பாகுபாட்டுறுப்பிற் குறித்த வைம்பெரும் பூதத்தோர் விசேடனத் தெதிர்மறை நடுக்குறை யியற்சொற் பெயர வுயிர்ப் பெயராக வெதிர்காலங் குறித்து நின்றது சிலவினைச் சார்பான் விலங்கு சூடிய வரையில் வெளியாம்.



இதனோ டீரிரு வகைப்பட்ட வோர் சார் புது நிலஞ் செலவுய்த்தனம். வேண்டுழி வேண்டியாங் குய்க்க மற்றைய பின்னர் வரைதும்.



இற்றே விசும்பிற் கனைச்சலம்

பார்வதிபுரம் இங்ஙனம் நங்கோச் சோழன்

சுக்கில வருஷம் வீரமணி சூடியார்

துலாரவி திருவாணைப்படிக்கு அடிமை

உஎவ தொழுவூர் வேலாயுதம்

இந்தக் கடிதத்தைப் படித்த அவதானியார் திரும்ப சந்நிதானத்திடம் கொடுக்க சந்நிதானமோ விடாமல் கடிதத்தின் பொருளைப் பற்றிக் கேட்க அவதானியாரோ கடிதம் எழுதியவர் ஒரு வித்வான் தான் எனத் தான் ஒப்புக் கொள்வதாயும், கடிதம் புரியாமல் இருக்கிறபடியால் அதைக் குறித்துச் சொல்ல ஒன்றுமில்லை என்றும், இந்தக் கடிதம் வேண்டுமென்றே அவரைப் பழிவாங்கவென வடலூர்ப் பெருமானும், அவரது ஆணைப்படி வேலாயுதமும் எழுதி இருப்பதாகவும் அது மட்டும் தனக்கு நன்கு புரிவதாயும் கோபத்துடன் கூறினார். மேலும் இந்தத் திருமுகத்தின் அமைந்த வார்த்தைகளின் பொருளை முழுமையாக விளங்கிக் கொள்வது கடினம் எனவும் கூறினார்.



உள்ளுக்குள்ளாகச் சிரித்துக்கொண்ட சந்நிதானம் ராமலிங்க சுவாமிகளின் கடிதம் புரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுமாறு அவதானியாரைக் கேட்க, அவதானியாரோ அதை ஒத்துக்கொள்ளாமல், சாதுர்யமாக ஒரு வித்துவான் வார்த்தை விளையாட்டுப் போட்டுப் பூட்டிவிட்டால் எவராலும் திறக்க இயலாது என்றும், அதைத் தான் இங்கே வள்ளலார் செய்திருப்பதாகவும் கூறினார். உடனே ஞானியார் சுவாமிகள் அவதானியாரிடம் அவரையும் இப்படி ஒரு பூட்டுப் போடச் சொல்லிக் கூறினார். மேலும் அவதானியார் போடும் அந்தப் பூட்டை வள்ளலார் எளிதாய்த் திறப்பார் என்றும் சவால் விடுத்துக் கூறினார். சந்நிதானமும் இது நல்ல ஏற்பாடு தான் என ஆமோதித்தார். அவதானியாரோ ஆணவம் மீதூறத் தாம் பூட்டுப் போடுவதாயும் இதுவரை தாம் போட்ட பூட்டைத் திறக்க எவரும் முன்வந்ததில்லை எனவும் கூறி, தான் போட்ட பூட்டைத் தன்னைத் தவிர எவரும் திறக்க இயலாது என்றும் கூறிப் பதிலுக்குச் சவால் விட்டார். ஞானியாருக்கு வெளிப்படையாகவே இப்போது கோபம் வர, அவதானியாரிடம் இது அகந்தைப் பேச்சு என்றும் அவரின் அகந்தை அழிய வேண்டும் எனத் தாம் விரும்புவதாயும் கூறிவிட்டு அவதானியார் போடும் பூட்டை வள்ளலார் திறப்பதோடு அல்லாமல் பூட்டின் சாவியையும் சேர்த்தே அனுப்பி வைப்பார் என்றும் கூறினார்.



பார்க்கலாம் என்று சவால் விட்ட அவதானியாரின் கோபத்தைக் கண்ட சந்நிதானம் ஞானியாரையும் அவரையும் சமாதானப் படுத்த எண்ணி, அவதானியாரைச் சீக்கிரம் பூட்டுப் போடச் சொல்லி, அதை உடனே வடலூருக்கு அனுப்பலாம் என்றும் அவரிடம் சமாதானமாகக் கூற அவதானியாரோ பூட்டுத் தயாராக இருப்பதாயும், தாம் இப்போதே படிப்பதாகவும் கூறிப் படிக்க ஆரம்பித்தார்.

“தகரவரிக் கூந்தலர்கா மாதிமுந்நீர் தாழும்

தகரவரி நாலைந்து சாடும்- தகரவரி

மூவொற்றி யூர் பொருளை மூன்று மங்கை யேந்துமொரு

சேவொற்றி யூரானைச் செப்பு.”



இந்த வெண்பா தான் பூட்டு என்றும் இதைத் திறக்கவும், திறப்பதற்கான சாவியை அனுப்பி வைக்கவும் இன்றே வடலூருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அவதானியார் கூறினார். கடிதம் வடலூருக்கு அனுப்பப் பட்டது.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இங்கே தருமச் சாலை இருக்கும் வடலூரில் ஓர் முன்பகல் பொழுதில் வள்ளல் பெருமானோடு வேலாயுத முதலியாரும், ஆறுமுக முதலியாரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் தபால்காரர் வந்து அன்றைய தபால்களை வள்ளல் பெருமானிடம் கொடுத்துச் சென்றார். அவற்றில் ஓர் கடிதத்தைப் பார்த்த வள்ளல் பெருமான் சற்றே வெறுப்புக் கலந்த கேலியோடு அந்தக் கடிதத்தைத் தனியாகப் போட்டுவிட்டார். வேலாயுதமுதலியாருக்குத் திகைப்பு மீதூற வள்ளலாரிடம் காரணம் கேட்டார். வள்ளலார் அந்தக் கடிதத்தை எடுத்து முதலியாரையே படிக்குமாறு கூறினார். அதை எடுத்துப் படித்துப் பார்த்த முதலியார் ஆச்சரிய வசப்பட்டார். ஏனெனில் மதுரை ஆதீனத்தில் இருந்து கொண்டிருந்த திருச்சிற்றம்பல ஞானியார் எழுதிய கடிதம் அது. அதை ஏன் பெருமான் தூக்கிப் போட்டார்?? மீண்டும் காரணம் வினவினார் வேலாயுத முதலியார். கடிதத்தின் கடைசியில் எழுதி இருப்பதைப் படிக்குமாறு வள்ளலார் கூறினார். அவ்விடத்தில் நடக்கும் சுகுணங்களையும், அற்புதங்களையும் இலக்கண சுத்தமாய்த் தமக்குக் கடிதம் எழுதும்படி வேண்டிக்கொண்டிருந்தார் திருச்சிற்றம்பல ஞானியார்.



முதலில் அதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியாமல் திகைத்த முதலியார், பின்னர் புரிந்து கொண்டார். வள்ளலார், புருஷோத்தமரெட்டியார் விஷயமாய் எழுதிய கடிதம் இலக்கண சுத்தமில்லாமல் இருந்தது என இதன் மூலம் தெரிவிக்கின்றனர் அதனாலேயே வள்ளல் பெருமானின் மனம் வருந்தியது எனப் புரிந்து கொண்டார். ஆனாலும் வேலாயுத முதலியாருக்குத் திருச்சிற்றம்பல ஞானியார் தாமாக இப்படி ஒரு கடிதம் எழுதி இருக்க மாட்டார் என்றும், வேறு யாரோ சந்தேகப் பட்டோ அல்லது கேள்விகள் கேட்டோ தான் இப்படி எழுதி இருப்பார் என்றும் உறுதியாக நம்பினார். அதை வள்ளலாரிடம் குறிப்பிட்டும் கூறினார். மேலும் அப்போது அங்கே மதுரை மடத்தில் இதனால் விவாதம் நிகழ்ந்திருக்கலாம் எனவும், இப்போது வள்ளல் பெருமான் தன் புலமையைக் காட்டித் தெளிவு படுத்த வேண்டியே இவ்வகைக் கடிதம் வந்திருக்குமெனத் தாம் நம்புவதாயும் கூறினார். ஆறுமுக முதலியாரும் அதை ஆமோதித்தார்.



வள்ளலார் தாமும் அதை அப்படியே தான் புரிந்து கொண்டதாயும், இந்த விவகாரத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றே தாம் கடிதத்தைத் தூக்கிப் போட்டதாயும் கூறினார். ஆனால் வேலாயுத முதலியார் திரும்பத் திரும்ப வேண்டியதால் வள்ளலார் இதை எல்லாம் லக்ஷியம் பண்ணாமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கூறினார். இந்தமாதிரியான சந்தடி, சச்சரவுகள் வேண்டாமென்றே தாம் இவ்வளவு தொலைவு வந்து தனிமையையும் நிம்மதியையும் நாடிச் சென்னையை விட்டு வந்ததையும் சுட்டிக் காட்டிவிட்டு மீண்டும் அத்தகையதொரு பிரச்னைக்குள் தாம் புக விரும்பவில்லை என்றார். ஆனால் ஆறுமுக முதலியாரும், வேலாயுத முதலியாரும் வள்ளலார் தமக்காக இல்லை எனினும் மதுரை மடத்தில் வள்ளலாரின் திருமுகத்தை எதிர்பார்த்துத் தினம் தினம் காத்திருக்கும் திருச்சிற்றம்பல ஞானியாருக்காகவேனும் எழுதவேண்டும் என மிகவும் வேண்டிக்கொண்டனர். இதைச் சொல்வதற்குள்ளாக வேலாயுத முதலியாருக்குக் கண்ணீர் வந்துவிடவே அவர் கண்ணீர் விடலாயினார்.



அதைக் கண்ட வள்ளலாரின் மனம் நெகிழ்ந்தது. காகிதமும் எழுதுகோலும் வாங்கிக்கொண்டு அதில் சில வரிகள் எழுதிவிட்டு வேலாயுத முதலியாரிடம் கொடுத்து மீதியை அவர் எழுதி முடித்துத் திருச்சிற்றம்பல ஞானியாரின் விலாசத்திற்கு அஞ்சலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். கைகள் நடுங்கின வேலாயுத முதலியாருக்கு. ஆனால் வள்ளலாரோ அஞ்சாமல் எழுதும்படி அவரைப் பணித்துவிட்டு உச்சிக்காலம் ஆனதால் தாம் வழிபாடு முடித்துக்கொண்டு பசித்தவருக்கு அன்னமிட தருமச்சாலைக்குச் செல்வதாய்க் கூறிவிட்டுக் கீழ்க்கண்ட பாடலைப் பாடிக்கொண்டே நடந்தார்.



“காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும்பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒரு பகலில் தந்ததனிப் பதியே

சமரசன் மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்த மொழிமாலை அணிந்தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற்றருளே


அதே முன்பகல் பொழுது. மதுரை ஆதீனமடம். சந்நிதானம் அவர்கள் கைகளில் பிரிக்கப் படாத ஒரு கடிதம் காணப்பட்டது. அதைப்பார்த்துத் தமக்குள் சிரித்துக்கொண்டார் சந்நிதானம் அவர்கள். அங்கே திருச்சிற்றம்பல ஞானியார் வந்து சந்நிதானத்தை வணங்கி நின்றார். அவரை அமரச் சொன்ன சந்நிதானம் வடலூர் சுவாமிகளிடமிருந்து வந்திருப்பதாய்க்கூறி அந்தப் பிரிக்கப்படாத கடிதத்தைக் கொடுத்தார். மகிழ்ந்த ஞானியாரிடம் சந்நிதானம் அவர்கள் கணக்கிலவதானி தேவிபட்டினம் முத்துசாமிப் பிள்ளையை அழைத்து வரவும் ஆள் அனுப்பி இருப்பதாய்க் கூறினார். அதற்குள்ளாகபிள்ளை அவர்களே வேகமாய் வந்து கொண்டிருந்தார். ஞானியார் கடிதத்தைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தார். மகிழ்வோடு அற்புதம் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி மீண்டும் மீண்டும் கடிதத்தைப் பார்த்தார். அவதானியாருக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம் எனக் கேட்கக் கடிதத்தை சந்நிதானத்திடம் கொடுத்தார் ஞானியார். படித்த சந்நிதானம் அவர்களும் மனம் மகிழ்ந்து சொற்கள் துள்ளி விளையாடி இருப்பதாயும், எழுத்து ஓர் அற்புத நீரோட்டமாய் அமைந்திருப்பதாயும், இத்தகையதொரு எழுத்துக்கொண்ட திருமுகத்தைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும், இன்றுவரை பார்த்ததுமில்லை எனவும் கூறி மகிழ்ந்தார்.


ஞானியார், "சந்நிதானம் அவர்களே, கடிதம் முழுதும் சுவாமிகளால் எழுதப் படவில்லை. சுவாமிகள் சொற்படி வேலாயுத முதலியார் எழுதி உள்ளார்." என்றார். அதற்கு சந்நிதானம் அவர்கள் "ஆம் , அதனால் என்ன?? முழுக்கடிதமும் சுவாமிகளே எழுதி இருந்தால் அதைப் பாராட்டவே முடிந்திருக்காது. இதுவே இப்படி இருந்தால் அது இன்னமும் அருமையான கடிதமாக அமைந்திருக்குமே.. " என்று கூறினார். காத்திருந்த அவதானியாரின் பொறுமை பறி போயிற்று,; ஆகவே கடிதம் அவரிடம் கொடுக்கப் பட்டது.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

மதுரை திருஞானசம்பந்தர் மடம். மிகப்புராதனமான மடம். சந்நிதானம் பீடத்தில் அமர்ந்து தமக்கு வந்த கடிதங்களைப் பரிசீலித்துக்கொண்டிருந்தார். அங்கே கணக்கில் அவதானியாக தேவிபட்டினத்தைச் சேர்ந்த முத்துசாமிப்பிள்ளை என்பவர் இருந்தார். அவரும் உடன் இருந்தார். அங்கே அப்போது திருக்கழுக்குன்றம் திருச்சிற்றம்பல ஞானியார் வந்து சந்நிதானத்தை வணங்கினார். சந்நிதானமும் வரவேற்று அமர வைத்து என்ன விஷயம் என விசாரித்தார்கள். பின்னர் அவரிடம் ஞானியாரை விசாரித்து வந்திருக்கும் திருமுகம் பற்றிக் கூறினார் சந்நிதானம் அவர்கள். ஞானியார் ஆச்சரியத்துடன் யாரிடமிருந்து வந்திருக்கிறது என வினவ, வடலூர் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகளிடமிருந்து ஞானியாரை விசாரித்துக் கடிதம் வந்திருப்பதாய்த் தெரிவித்தார். கடிதத்தில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென ஞானியார் விண்ணப்பித்துக் கேட்க அதன் மேல் சந்நிதானமும், கூடலூர் ஜில்லாவின் கருங்குழியிலிருந்து வந்திருக்கும் புருஷோத்தம ரெட்டியாரைக் காணோம் என அவர் குடும்பத்தினர் கலங்கிப் போய் விசாரித்ததில் அவர் இங்கே நம் மதுரை ஆதீனம் மடத்திற்குவந்திருக்கலாம் எனக் கண்டு பிடித்திருக்கின்றனர். அதன் பேரில் வடலூர் பெருமானிடம் இது குறித்து விண்ணப்பிக்க அவரும் அது குறித்து எழுதிக் கேட்டிருக்கிறார். புருஷோத்தம ரெட்டியார் இங்கிருந்தால் அவரை உடனே அனுப்பி வைக்கும்படி ஆலோசனைகளும், புத்திமதிகளும் கூறும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.



அப்போது ஞானியார் புருஷோத்தம ரெட்டியார் இங்கே தான் இருப்பதாகவும், அவரைத் திரும்ப அனுப்பும் இந்தப்பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாய்ச் சொல்ல, சந்நிதானமும் ஒப்புக்கொண்டார். ஆனால் அது வரை அங்கிருந்து இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த அவதானியார் குறுக்கிட்டுப் பணிவுடன் தாம் சொல்லுவதையும் கேட்டுக்கொள்ள வேண்டுமென வேண்டிக்கொண்டார். அதன் பேரில் ஆச்சரியமடைந்த சந்நிதானமும், என்ன விஷயம் எனக் கேட்க, கடிதம் ஸ்ரீராமலிங்க சுவாமிகளால் எழுதப் பட்டதைத் தாம் அறிந்ததில் இருந்து அந்தக் கடிதத்தைத் தாமும் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டிருப்பதாயும் ஆகையால் கடித்ததைத் தம்மிடமும் பகிர்ந்து கொள்ளும்படியும் வேண்டிக்கொண்டார். மாமுனிவர் என்றும் அட்டமாசித்திகளெல்லாம் பெற்ற மாசித்தர் எனவும் பலரும் பலவிதமாய்ப் போற்றிய ஈடுஇணையற்ற ஞான வள்ளலான சுவாமிகளின் திருக்கரங்களால் எழுதப்பட்ட கடிதத்தைத் தாமும் படிக்க வேண்டும் என ஆசைப்படுவதாய் அவதானியார் தெரிவிக்க சந்நிதானம் கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பணிவோடு அதை வாங்கிப் படித்த அவதானியாருக்கு படித்து முடித்ததும் கேலிப்புன்னகை தோன்ற அலட்சியமாக அதைத் திரும்ப சந்நிதானம் அவர்களிடம் கொடுக்க சந்நிதானத்தின் ஆச்சரியம் மிகுந்தது.



என்ன விஷயம் என ஆச்சரியமாக சந்நிதானம் கேட்க, அவதானியார் தயங்கினார். மேலும் மேலும் ஞானியார் சுவாமிகளும், சந்நிதானமும் வற்புறுத்த வள்ளலாரின் கடிதத்தில் கற்றுணர்ந்த அறிஞரின் பாண்டித்தியம் துளிக்கூட இல்லையே, இவரின் படிப்பு இலக்கணமில்லாப் படிப்போ எனக் கேட்க, ஞானியார் சுவாமிகளுக்குப் படபடப்பு ஏற்பட்டது. சந்நிதானம் குறுக்கிட்டு, விவாதம் செய்யும் வழக்கம் உள்ள தேவிபட்டினம் முத்துசாமி பிள்ளையின் விவாதத்தினால் நன்மையே விளையும் என்றபடி அந்த விவாதத்தை ஊக்குவித்தார். முத்துசாமிப்பிள்ளை ராமலிங்க சுவாமிகளின் கடிதம் கற்றுக்குட்டித்தனமாக இருந்ததாய்க்கூற ஞானியாருக்கு இன்னமும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் ஏதோ பூடகமாகச் சொல்கிறார் என்றவரை புரிந்து கொண்ட ஞானியார் விளக்கமாய்ச் சொல்லும்படி வேண்ட சந்நிதானமும் அவதானியார் விளக்கமாய்ச் சொல்லட்டும் என ஆமோதித்தார். மீண்டும் வள்ளலாருக்கு இலக்கண சுத்தமில்லாப் படிப்பே அமைந்திருப்பதாய்க்கூறினார் அவதானியார்.



ஒரே ஒரு கடிதத்தை வைத்து எடைபோடுவதா என ஞானியார் அதை மறுக்க உடனே அவதானியார் ஞானியாரிடம் வள்ளலாரின் இலக்கண சுத்தமான படிப்பை அவர் தக்க ஆதாரங்களோடு மெய்ப்பிக்கவேண்டும் எனக் கேட்கின்றார். அதற்கு நடுவராக சந்நிதானத்தையும் நியமித்துக் கூறினார். சந்நிதானமோ இளநகை மாறாமலேயே ஞானியாரிடம் வள்ளலாரிடமிருந்து அவதானியாரின் மனதிற்கு ஏற்ற வகையில் இலக்கண சுத்தமான ஒரு கடிதத்தை வரவழைக்கும்படி கூற ஞானியாரும் அவ்வாறே செய்யப் போவதாய்க் கூறினார். பின்னர் புருஷோத்தம ரெட்டியாரை அவர் வீட்டிற்குத் திரும்பச் செல்லும்படி புத்திமதி கூறும்படி ஞானியாரிடம் கூறிவிட்டு சந்நிதானம் ஓய்வுக்குச் சென்றார். ஞானியார் வள்ளலாரிடமிருந்து இலக்கண சுத்தமான கடிதத்தைப் பெறும் விதம் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார்.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலார் சுவாமிகள் தம் சன்மார்க்க சீடரே ஆயினும் அவரது திருமண நிகழ்ச்சிகளில் தாம் நேரில் கலந்து கொள்ள முடியாது எனக் கூறி நீண்ட செய்யுள் வடிவில் கடிதம் அனுப்பிவிடுவார். அவற்றிற்குக் ‘குடும்ப கோரம்’ என்னும் பெயரும் இட்டிருந்தார். என்றாலும், தம் அண்ணன் சபாபதிப் பிள்ளையின் மருமகன் புராணீகர் பொன்னேரி சுந்தரம் பிள்ளையைச் சிதம்பரம் வரச் சொல்லி அவர் ஏழ்மையை நீக்கவேண்டி அம்பலவாணனைப் பிரார்த்தனைகளும் செய்தார். இங்கே தருமச் சாலையில் உணவு அளிக்கும் அறம் மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமிகளைப்பார்க்க திருப்புகழ்ச் சுவாமிகள், முருகதாச சுவாமிகள் என்னும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளும் நேரே வடலூருக்கே வந்து அவரைத் தரிசித்துச் சென்றனர். தண்டபாணி சுவாமிகள் ஒன்பது வயதிலே கவி பாடும் ஆற்றல் பெற்றவர் எனவும், சிறு கல்லாடையை அரையில் சுற்றிக்கொண்டு கையில் தண்டு பிடித்துக்கொண்டு பெயருக்கேற்ப தண்டபாணியாகவே காட்சி அளித்ததாகவும் அனைவரும் பேசிக்கொண்டனர். தென்னாடெங்கும் சுற்றி வீரத்துடனும், பக்தியுடனும் பல பாடல்களைப் பாடிக்கொண்டு வீரத் துறவியாக விளங்கியதாகவும் தெரிய வருகிறது.



தண்டபாணி சுவாமிகள் பாடிய திருப்புகழைக் கேட்ட வள்ளலார் அவரை அருணகிரிநாதரின் மறுபிறவி எனப் பாராட்டினார் எனவும் தெரியவருகிறது. தண்டபாணி சுவாமிகளுக்கு தியானத்தில் முருகன் தோன்றி வள்ளலாரைப் பற்றிச் சொல்லி அவர் முன் பிறவியில் தாயுமான சுவாமிகளாக இருந்ததாய்க் கூறினார் எனவும் தண்டபாணி சுவாமிகள் வள்ளலாரிடம் கூறி இருக்கின்றார். பின்னர் வள்ளலாரோடு தருமச் சாலையிலேயே சில நாட்கள் தங்கி இருந்து இருவரும் அளவளாவி ஆநந்தம் அடைந்தனர் என்பதும் தெரிய வருகிறது. இவர்களைத் தவிரவும் மாயூரம் முன்சீபாக இருந்த வேதநாயகம் பிள்ளையவர்கள், திருவாவடுதுறை மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள் போன்றோரும் சுவாமிகளை வடலூரில் தரிசித்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்கள், எழுதிய நீதி நூலுக்கு சுவாமிகள் சாற்றுக்கவி எழுதிக் கொடுத்ததாகவும், பிள்ளை அவர்கள் எழுதிய சமய சமரசக் கீர்த்தனைகளை பிள்ளை அவர்கள் சுவாமிகள் எதிரே வடலூரில் அரங்கேற்றியதாகவும் தெரிய வருகிறது.



ஒரு நாள் வேங்கட ரெட்டியார் சுவாமிகளிடம் வந்து தம் தம்பியான புருஷோத்தம ரெட்டியாரைக் காணோம் என வருந்தி அழுதார். வள்ளலார் மேலும் தூண்டி விசாரிக்க, புருஷோத்தம ரெட்டியார் அடிக்கடி இப்படிக் காணாமல் போவதாகவும், பின்னர் மனம் திருந்தி தானே வந்து கொண்டிருந்ததாயும் சொன்ன வேங்கட ரெட்டியார், இம்முறை நாட்கள் அதிகம் ஆகிவிட்டன எனவும், இருக்குமிடம் தெரியவில்லை எனவும் வருந்தினார். இருவருக்கும் சண்டை ஏதானும் மூண்டதா என வள்ளலார் கேட்டதற்கு ரெட்டியார், களத்து மேட்டில் நெல்லைக் காவல் காக்கப் போகச் சொன்னதாகவும், புருஷோத்தம ரெட்டியார் அதை அலக்ஷியம் செய்ததால் இருவருக்கும் வந்த வாக்குவாதத்தில் அவர் கோவித்துக்கொண்டு சென்றிருப்பதாயும் கூறினார். தன் மனைவி முத்தியாலு, பெற்ற மகனைப் போல் வளர்த்த கொழுந்தனாரைக் காணோம் என்றதில் இருந்து மனம் வருந்தி அன்ன, ஆகாரம் இறங்காமல் அழுதுகொண்டே இருப்பதாயும் கூறினார். சுவாமிகள் இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டே அவர் போயிருக்கும் இடங்கள் எனச் சந்தேகம் வரக்கூடியவற்றை விசாரித்தார். அப்போது மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்தில் சேர விரும்புவதாய்த் தம் தம்பி புருஷோத்த ரெட்டி பண்ணையாளிடம் சொல்லிக்கொண்டிருந்ததாயும், இன்று காலையே பண்ணையாள் அதைத் தெரிவித்ததாகவும் கூறி வள்ளலாரை மதுரை மடத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பும்படி வேண்டிக்கொண்டார். சுவாமிகளின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு புருஷோத்த ரெட்டியார் வந்துவிடுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.



வள்ளலார் மதுரைக்குக் கடிதம் எழுதி அனுப்புவது சிரமம் ஒன்றுமில்லை எனவும், தம் நண்பரும் பேரன்புக்கும் உரியவரான திருக்கழுக்குன்றாம் திருச்சிற்றம்பல ஞானியாரும் கூட மதுரை மடத்திலேயே தங்கி இருப்பதாயும் கூறினார். உடனே வேங்கட ரெட்டியாருக்கு திருச்சிற்றம்ப ஞானியாருக்கு வள்ளலார் உபதேசம் செய்ய மறுத்தது நினைவில் வந்தது. திருச்சிற்றம்பல ஞானியார் கல்லாடைத் துறவி. அவருக்கு வெள்ளாடைத் துறவியான தாம் உபதேசம் செய்தால் அது தகாது என்ற காரணத்தாலேயே வள்ளலார் மறுத்ததாகக் கூறினார். அப்போது மீண்டும் மீண்டும் வற்புறுத்திய ஞானியாருக்குத் தன் நிலையைப் புரிய வைக்க வேண்டி சுவாமிகள் எழுதிய கவிதையை நினைவிலிருந்து கூறினார் வேங்கடரெட்டியார்.



“நின் நிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்

என்னிலையை அந்நிலையே எய்துதிகாண்-முன்னிலையை

இற்குருவி காட்டாதே என்றுரைத்தான் ஏரகம் வாழ்

சற்குரு என் சாமி நாதன்.”

என்ற அந்தப் பாடலை நினைவு கூர்ந்தார் வேங்கடரெட்டியார். அதன் பின்னரே திருச்சிற்றம்பல ஞானியார் மதுரை சென்று ஞானசம்பந்த சுவாமிகள் திருமடத்தில் தங்கினதையும் நினைவு கூர்ந்தார்.



அப்போது வள்ளலார் ஞானியார் புருஷோத்த ரெட்டிக்கு அனைத்தையும் புரிய வைத்துத் திருப்பி அனுப்புவார் என்று உறுதி கூறினார். பின்னர் அவ்வண்ணமே மதுரை மடத்துக்குச் செய்தியும் எழுதி அனுப்பினார்.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

முத்தியாலுவிடமிருந்தும்,வேங்கட ரெட்டியாரிடமிருந்தும் பிரியாவிடை பெற்று வந்த அடிகளார் தருமச் சாலையிலேயே தங்கினார். வெள்ளாடை உடுத்திக் கொண்டு மெலிந்த செந்நிற உடலுடனும், நடுத்தர உயரமும், நிமிர்ந்த தோற்றத்தோடும், அழகிய திருமுகத்தோடும், ஒளி வீசும் திருக்கண்களிலே அருட்பார்வையோடும் காணப்பட்டார். அவரின் திருவுருவை நேரில் கண்டு உணர்ந்த அனைவருக்கு அவரின் திருமேனியின் அழகையும் அதில் ஒளி வீசிப்பிரகாசித்த ஞான ஒளியையும் கண்டவர்கள் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் தவித்தனர். அங்கே அடிகளைக் காண வந்த குருமூர்த்தி என்பவரும் சிவராமன் என்பவரும் தங்கள் நிலத்து விளைச்சல் சுவாமிகள் அருளால் அமோகமாய் இருப்பதால் தருமச் சாலையின் அன்னதானத்திற்கு ஆறுகலம் நெல் கொடுக்கவேண்டும் எனப் பேசிக்கொண்டனர். அப்போது சுவாமிகளின் திருவடிவையும் அதில் ஒளிர்ந்த அருட்பிரகாசத்தையும் கண்டு வியந்தனர்.



சாதாரணமாகத் துறவிகள் என்றால் காவி உடை தான் தரிப்பார்கள். துறவுக்கு முதல் அறிகுறியும் காவி உடைதான். ஆனால் இங்கேயோ அடிகளார் காவி உடை கடின சித்தர்களுக்கே வேண்டுவது என்றும், போர்க்கொடியின் நிறத்தைக் குறிப்பதாகவும், வெள்ளாடையோ வெற்றிக்கொடி எனவும், தத்துவத்தை வென்றோர்க்கு வெள்ளாடையே உகந்தது எனவும் சுவாமிகள் விளக்கமளித்ததாய்ப் பேசிக்கொண்டனர். அதே போல் உணவிலும் அடிகளாருக்குப் பக்குவம் வந்துவிட்டதாயும் பேசிக்கொண்டனர். சிறு வயதிலிருந்து உணவில் அதிக நாட்டம் இல்லாதவரான அடிகள் சிலகாலம் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டும் வந்திருக்கிறார். ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு வந்த பிள்ளைப் பெருமான் இப்போது இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் உணவு உட்கொள்ளுகிறார். அதுவும் அரை வயிறு அல்லது சில கவளங்கள் தான். சில நாட்களில் வெந்நீரில் சர்க்கரை போட்டுக் கலந்து குடிப்பதோடு நிறுத்திவிடுகிறார் எனப் பேசிக்கொண்டார்கள். இவ்வாறு பேசிக்கொண்ட அவர்கள் சுவாமிகளை வணங்கி விடை பெற்றனர்.



தருமச் சாலையின் வெளி வராந்தாவில் நின்றிருந்த சுவாமிகள் தம்மெதிரே தம்மைக் காண வந்த சன்மார்க்க சங்கத்துச் சாதுக்கள், அன்பர்கள், பொதுமக்கள் என நிறையப் பேரைப் பார்த்துவிட்டு அவர்கள் வேண்டியதற்கென ஒரு சின்னச் சொற்பொழிவைச் செய்தார். சன்மார்க்க சங்கத்துக் கொள்கைகளை விளக்கினார். அதிலும் அன்று புதியதாய்ச் சிலர் சன்மார்க்கத்திலே சேர்ந்திருந்தார்கள். ஆகவே அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டி சன்மார்க்கக் கொள்கைகளை அடிகள் விளக்க ஆரம்பித்தார். அடிகள் சன்மார்க்க சங்கத்து முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் ஒருவரே என்பதாகும் என்றார். தெய்வம் ஒன்று என்று அறியாமல் பெரும்பாலான மக்கள் எம் தெய்வம், உம் தெய்வம் எனப் பல தெய்வங்களைச் சொல்லுகின்றனர். அவர்கள் கூறுவது கண்ணில்லாதவன் யானையைக் கண்டது போல் ஆகும். தெய்வம் ஒன்றே அதுவே அருட்பெருஞ்சோதி வடிவானவராகக் கருதப் படுகிறது. அருட்பெருஞ்சோதி வழிபாடு எக்காலத்துக்கும் பொருந்தி வரும் தன்மையை உடையது. எந்தச் சமயத்தாரும் தயக்கமின்றி ஏற்கலாம். அது உருவ வழிபாடும் இல்லாமல், அருவ வழிபாடும் இல்லாமல் அருவுருவ வழிபாடாக அமைந்துள்ளது. அதை மெய்யாக உணர்தல் மிகவும் முக்கியமானதாகும். என்றார் அடிகள்.



அப்போது கிராமத்துச் சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பது குறித்து ஒருவர் கேட்க, அடிகளார் அவ்வாறு உயிர்ப்பலி கொடுத்தல் வன்மையாகக் கண்டிக்கப் படத் தக்கது என்றார். பலியிடுவோர் காட்டில் வசிக்கும் முரட்டு மிருகங்களான புலி, சிங்கம் போன்றவற்றைப் பலி இடுவதில்லையே! வீட்டு விலங்குகளான எருமை, ஆடு, பன்றி, கோழி போன்றவை அன்றோ பலியாகின்றன. அவை பலியிடுவதை நினைக்கையிலேயே உயிர் நடுங்குகிறது என்று கூறிய வள்லலாருக்கு உண்மையிலே உடல் நடுக்கம் எடுத்தது. அப்போது அவர் வாயிலிருந்து ஒரு பாடல் கிளம்பியது.



நலி தரு சிறிய தெய்வமென்றையோ

நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடு பன்றிகுக்குடங்கள்

பலிகடா முதலிய உய்ரைப்

பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே

புந்தி நொந்துள நடுக்குற்றேன்

கலியுறு சிறிய தெய்வவெங்கோயில்

கண்டகாலத்திலும் பயந்தேன்.”


அடிகளார் கண்ணீர் பெருக்குவதைக் கண்ட அனைவருக்கும் கண்ணீர் வந்தது. வாய்விட்டு அழுதனர். அடிகளார் அவர்களைச் சிரமத்துடன் சமாதானம் செய்துவிட்டு, ஜீவகாருண்யமே சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியம் என்பதால் உயிர்ப்பலியைத் தவிர்க்க வேண்டும் என்றார். அடுத்த முக்கியக் கொள்கை பசி தவித்தல், புலால் மறுத்தல் ஆகும் என்றார் அடிகளார். உயிர்க்கொலையும், புலால் புசிப்பவர்களும் நம் உறவினத்தாராய்க் கொள்ளக் கூடாது. அவர்கள் புற இனத்தவர்கள். சன்மார்க்கிகள் அல்லர். மேலும் அடிகள் தத்துவ நியாயத்தை அநுசரித்துச் சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனவும், தொழில் நியாயத்தை வைத்தே ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன எனவும், கூறிய அடிகளார் சன்மார்க்கத்தின் முக்கிய அடுத்த லக்ஷியம் ஆன்ம நேய ஒருமைப்படுரிமை. ஆகவே ஜாதி, சமய, மத வேறுபாடுகள் இல்லாமல் இருப்பவரே சன்மாக்கிகள் என்றார். தயவு என்பது வெறும் தயவு அல்ல. அது ஜீவ தயவு. அது அனைத்து உயிர்களிடத்தும் காட்டப் படவேண்டும். மேலும் சன்மார்க்கிகள் இறந்தால் உடலை எரிக்கக் கூடாது. புதைக்கவேண்டும். என்றும் விளக்கி அருளினார். அவ்வளவில் அனைவரும் வள்ளலாருக்கு வாழ்த்துகள் தெரிவித்து முழக்கமிட சபை கலைந்தது.

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில் வடலூர் பார்வதிபுரத்தின் வடற்பெருவெளியிலே கட்டப்பட்டிருக்கும் சத்திய தருமச்சாலையின் தொடக்கவிழாவிற்கு வந்திருந்த மக்களையும், அதற்கு இடம் கொடுத்த பார்வதிபுரத்து மக்களையும் பாராட்டிய வள்ளலார் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார். உணர்ச்சிவசப்பட்ட மக்கள் வள்ளலாருக்கு வாழ்த்துக் குரல் எழுப்பி மகிழ்ந்தனர். பின்னர் மீண்டும் பேச ஆரம்பித்த வள்ளலார் அந்த சத்திய தருமச்சாலையில் பசி என்று வருபவர்களுக்கு இல்லையெனாது மூன்றுவேளையும் அன்னதானம் அளிக்கப்படும் என்றும் ஜீவகாருண்யங்களிலேயே தலையானது அன்னதானமே ஆகும் என்றும் கூறினார். மேலும் தொடர்ந்த வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோதும், பசித்தவர்களையும், ஏழைகளையும் கண்டபோதும் தாமும் வாடி வேதனை அடைந்த்தாகவும் உள்ளம் உருகினார். அதைக் குறித்துத் தாம் எழுதிய பாடல் ஒன்றையும் உருக்கமான குரலில் பாடினார்.



“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோறிரந்தும் பசியுறாதயர்ந்த

வெற்றரைக்கண்டுளம் பதைத்தேன்

நீடிய பணியால் வருந்துகின்றோர் என்

நேர் உறக் கண்டுளந்துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”



மக்களின் துன்பத்தையும் பசியினால் ஏற்படும் அவலங்களையும் கொடுமைகளையும் கண்டே தாம் தருமச்சாலையை இறை அருளால் தோற்றுவித்ததாகவும் கூறினார் வள்ளலார். அப்போது அங்கிருந்த அன்பர்களில் ஒருவர் எழுந்து, தருமச்சாலைக்குப் பசி என எவர் வந்தாலும் உணவுகிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்ப, வள்ளலாரோ, “இது சத்தியம், சத்தியம், சத்தியம்” எனச் சத்தியம் செய்த வண்ணம், பசியினால் வருந்தும் மக்கள் எவராயினும், எந்த தேசத்தினர் ஆயினும், எந்தச் சமயத்தைச் சார்ந்திருந்தாலும் எந்தச் சாதியாய் இருந்தாலும், எந்தச் செய்கையாராயிருந்தாலும் அதைக் குறித்து எதுவும் கேட்காமல் இந்த தருமச்சாலையில் பசித்து வந்தவர் எவராயினும் அவர்க்கு உணவிடுவது என்பதை என்றென்றும் நடைமுறைப்படுத்தப் படும் என்று உறுதி கூறினார். வள்ளலாரின் இந்த பதிலால் மனம் மகிழ்ந்த மக்கள், இனி செய்யப் போகும் அருட்காரியங்களை இச்சபையோர் அறியக் கூறும்படி வேண்டினார்கள்.



வருங்காலத்தில் தர்மச்சாலையைச் சார்ந்து வைத்தியசாலை, சாஸ்திரசாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனாசாலை, யோகசாலை, விவகாரசாலை ஆகிய சாலைகளை அதன் கிளைகளாக நிறுவத் திட்டமிட்டுள்ளதாயும், மக்களின் பசி தீர்த்தலையும், புலால் மறுத்தலையும் குறித்தும் அவற்றை வற்புறுத்தியும் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூல் ஒன்றையும் எழுதி வருவதாயும் கூறினார். நூலின் முதற்பகுதி முற்றுப் பெற்றுள்ளதாயும், கூறிய வள்ளலார் மீண்டும் தொடர்ந்து பேசலுற்றார்.



“சன்மார்க்க போதினீ” என்னும் பாடசாலை ஒன்றையும் நிறுவ இருப்பதாயும், இப்பாடசாலையில் சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரையிலும் அனைவருக்கும் கல்வி கற்பிப்பது, தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளையும் கற்பிக்கும் மும்மொழிப் பாடசாலைகளாக ஏற்படுத்துவது என்ற திட்டத்தையும், தொழுவூர் வேலாயுத முதலியார் தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் பெற்றிருக்கும் பாண்டித்தியத்தை இந்தப் பள்ளிக்குச் செலவிடவேண்டும் என்று நினைப்பதாகவும் கூறினார். மேலும் வேலாயுத முதலியாருக்குக் கன்னடம், மஹாராஷ்டிரம், இந்துஸ்தானி ஆகிய மொழிகளும் தெரியுமாதலால் இங்கே ஏற்படுத்தப் போகும் பாடசாலைக்கு அவரையே தலைமையாசிரியராக நியமிக்க எண்ணம் கொண்டிருப்பதாயும் கூறினார். இன்னும் கற்றறிந்த மற்ற நண்பர்கள் உபாத்தியாயராக இருந்து அங்கே தொண்டு செய்யவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார். திருக்குறள் கற்பிக்க எனத் தனி வகுப்பும், பாடசாலையும் இருக்கும் எனவும் அனைவரும் திருக்குறளை நன்கு கற்றுத் தெளியும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப் போவதாயும் கூறினார். அனைவரும் வள்ளலாரை வாழ்த்த, விழா இனிதே முடிந்தது. அனைவருக்கும் அன்னம் பாலிக்க அனைவரையும் அழைத்துக்கொண்டு தருமச்சாலைக்குச் சென்றார் வள்ளலார்.



ஆனால் தருமச்சாலையை வள்ளலார் கட்டியதாலும் விழா ஏற்படுத்தி அங்கே அனைவருக்கும் உபசரணைகள் நடப்பதிலும் மனம் வருந்திய சிலரும் உண்டு. அது முத்தியாலுவும், வேங்கடரெட்டியாரும் ஆவார்கள். இருவருக்குமே தருமச்சாலை கட்டியதால் வள்ளலார் தங்கள் வீட்டை விட்டுவிட்டு நிரந்தரமாய்ப் பிரிந்து சென்று அங்கேயே தங்கிவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது. நாளாக, ஆக, அதுவே உண்மையாகப் போகிறது என்ற தெளிவும் ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு. மனதை வேதனை பிடுங்கியது. திருவருளால் தண்ணீர் விளக்கு எரிந்த நம்முடைய அந்த வீடு இப்போது கிரஹணம் பிடித்த சூரியனைப் போல் ஒளியிழந்து காட்சி அளிப்பதாய் நினைத்தனர். அவர்கள் நினைத்த்து போல் வள்ளலாரும் அவர்களிடமிருந்து விடைபெற வந்தார். முத்தியாலுவுக்கும், வேங்கட ரெட்டியாருக்கும் துக்கம் தாங்க முடியாமல் கண்கள் கலங்கி இருவரும் விம்மி விம்மி அழ ஆரம்பித்தனர்.தாங்கள் ஏதோ தவறு செய்ததாலேயே அடிகளார் நம்மை விட்டுப் பிரிகிறாரோ என வருந்தி அதை அடிகளிடம் கேட்கவும் செய்தனர்.


அவர்கள் தவறேதும் செய்யவில்லை எனவும், உண்மையில் பெற்ற தாயை விடவும் அதிகமாய்த் தம்மைக் கவனித்துக்கொண்ட ரெட்டியாரம்மாவுக்குத் தாம் கைம்மாறு செய்ய இந்த ஒரு ஜென்மம் போதாது எனவும் கூறிய வள்ளலார் தாம் வடலூரிலேயே தான் பக்கத்திலே இருக்கப் போவதால் நினைத்தமாத்திரத்தில் வந்து அவர்கள் தம்மைப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும் எனவும் கூறி வருந்தவேண்டாம் என்று தேற்றினார். ரெட்டியார் ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு ஆறுதல் அடைய வேறு வழியில்லாமல் முத்தியாலுவும், மனம் தேறினாள். ஆனாலும் நேரடியாக அடிகளுக்குப் பணிசெய்யும் பாக்கியம் கிடைக்காதே என்றும் வருந்தினாள். அடிகள் அவர்கள் இருவரும் தம்மை எந்தவிதமான மனவருத்தமும் இன்றிப் பூரண மகிழ்வோடு அனுப்பை வைக்கவேண்டும் என வேண்ட வேங்கட ரெட்டியார் இறைவன் கருணை அதுவானால் தடை இல்லை என்று கூறி மனம் அமைதி அடைந்தார். முத்தியாலும் அமைதி அடைந்து, அடிகளாரை அங்கிருந்து வடலூர் செல்ல முக மலர்ச்சியோடு வழி அனுப்பினார். ஞான வாழ்க்கையின் அடுத்த நிலைக்குச் செல்லவேண்டி அன்பர்களோடு கிளம்பினார் வள்ளலார்.