Thursday, September 29, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளல் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையினுள் தாம் யோகத்தில் அமரும் திருவறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு திருவிளக்கின் முன் அமர்ந்து கண்மூடி யோகத்திலாழ்ந்தார். பின்னர் தீபத்தை நோக்கிக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் இறைவனால் தமக்குக் கிட்டிய பலன்களை எல்லாம் நினைந்து நினைந்து உருகினார். தன் பிள்ளையாய்த் தம்மை ஏற்றுக்கொண்ட இறைவனின் பெருங்கருணையை நினைந்து மகிழ்ந்தார். அடிமுடி காட்டியும், சூட்டியும், இறைவனின் திருக்கரத்தைத் தம் தலைமீது வைத்து தீக்ஷை அருளியதையும், நயன, ஸ்பரிச, வாக் தீக்ஷைகள் அளித்ததையும் எண்ணி எண்ணி அதற்காகத் தாம் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்தாலும் போதாது என எண்ணினார். ஆனால் இறைவனோ சற்றும் தயங்காது தம் உடல் பொருள் ஆவியைத் தமக்குக் கொடுத்து சுத்த, பிரணவ, ஞான தேகங்களை அளித்ததை எண்ணி வியந்தார். கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி போன்ற மூவகைச் சித்திகளோடு எல்லாம் வல்ல சித்தியையும் அருளிய பெருமான் தமக்கு ஐந்தொழில் ஆற்றலையும் கொடுத்ததையும் எண்ணி, மரணமில்லாப் பெருவாழ்வில் வைத்தருளியதை நினைந்து மனமுருகப் பாடினார்.



“காற்றாலே புவியாலே ககனமதனாலே

கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே

கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தை அருட்பெரும்சோதி இறைவனைச் சார்வீரே.”



இதைப் பாடிய வண்ணமே மீண்டும் யோகநிலையில் ஆழ்ந்தார். சன்மார்க்கக் கொடி கட்டிய ஒருமாதத்தில் ஒரு நாள் முன்னிரவு. தம் திருவறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கைக் கூடத்தில் வைத்துவிட்டு கூடியிருந்தோரைப் பார்த்து, “இந்த விளக்கை அருட்பெரும்சோதி ஆண்டவரின் நினைவாக இங்கே வைத்துள்ளேன். இதைத் தடைபடாது வழிபட்டு வாருங்கள். ஆண்டவர் இப்போது தீபமுன்னிலையில் விளங்குகிறார். உங்கள் காலத்தை வீணாகக் கழிக்காதீர். “நினைந்து, நினைந்து” எனத் தொடங்கும் இருபத்தெட்டுப் பாடல்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்த தீபத்தில் செய்துவாருங்கள். நான் இப்போது இந்த உடம்பில் உள்ளேன். இனி, எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன். இப்போது நான் எனது அறைக்குள்ளே சென்று கதவைச் சார்த்திக்கொள்வேன்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்று கதவைச் சார்த்தினார். கூடியிருந்தோர் அனைவரும் செய்வதறியாது திகைத்தாலும் வள்ளலார் கூறிச் சென்றபடி தீபத்தை ஆராதித்துப் பாடல்களைப் பாடி வந்தனர்.



பெருமானோ ஈசனோடு இரண்டறக் கலப்பதற்கான சாதனைகளைச் செய்து வந்தார். பலநாட்கள் உள்ளே இருப்பார். நடுவில் சில நாட்கள் வெளியே வருவார். ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து நான்காம் ஆண்டு, ஜனவரி மாதம் முப்பதாம் நாள்; ஸ்ரீ முக ஆண்டு தைத்திங்கள் பத்தொன்பதாம் நாள், பூசமாக இருந்தது. முன்னிரவு நேரம். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் இருந்த அனைவரையும் நோக்கிப் பேசலானார்.

“கார்த்திகை மாதம் தொடங்கி இரு மாதங்களாக இந்த தீப ஆராதனை செய்து வருகின்றீர்கள். இனியும் அவ்வாறே செய்து வரவும். இன்று தைப்பூசம். வடலூரில் ஜோதி தரிசனம் கண்டு களித்து, தீப ஆராதனை செய்து வருகிறீர்கள். நான் இப்போது என் தனி அறைக்குச் சென்று கதவை சார்த்திவிட்டு உடம்பை மறைத்துக்கொள்ளப்போகிறேன். யார் கண்களுக்கும் தோன்ற மாட்டேன். இந்தத் திருமாளிகையை வெறும் வீடாகவே காண்பீர்கள். என் ஆண்டவர் என்னைக் காட்டிக்கொடுக்கமாட்டார். இனி நீங்கள் எல்லோரும் நான் கூறியவாறு நடந்து அருட்பெரும்சோதி ஆண்டவரை வழிபட்டுப் பேரானந்தப் பெருவாழ்வு அடையுங்கள். நான் சென்று அறைக்கதவைச் சார்த்திக்கொள்கிறேன்.” பெருமான் உள்ளே சென்று கதவைச் சார்த்தினார்.



அசரீரியாகப் பெருமான் குரலில் திருவருட்பா ஒலித்தது.



“பெற்றேன் என்றும் இறவாமை

பேதம் தவிர்ந்தே இறைவன் எனை

உற்றே கலந்தான் நானவனை

உற்றே கலந்தேன் ஒன்றானோம்

எற்றே அடியேன் செய்ததவம்

யாரே புரிந்தார் இன்னமுதம்

துற்றே உலகீர் நீவீர் எலாம்

வாழ்க வாழ்க துனி அற்றே.”



அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை

தனிப்பெரும் கருணை அருட்பெரும்சோதி.



துணை நூற்கள்: திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு, எழுதியவர் குறிஞ்சி, ஞான. வைத்தியநாதன், ரவி ராமநாதன் தயாரிப்பில் பிரேமா பிரசுரம் வெளியீடு.


http://www.vallalar.org/


http://en.wikipedia.org/wiki/Ramalinga_Swamigal



http://www.vallalar.net/

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இந்த அருட்பெரும்சோதியான அகண்டத்தின் ஒளியானது ஆறடி ஒன்பதங்குல உயரமும், நான்கடி இரண்டங்குல அகலமும் உள்ள நிலைக்கண்ணாடியில் மாபெரும் பேரொளியாகப் பிரதிபலிப்பதையே ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் செய்து வரும் அருட்பெரும்சோதி தரிசனம் எனச் சொல்லப் படுகிறது. வள்ளலார் இதற்காகவே அந்தக் கண்ணாடியைச் சென்னையில் இருந்து தருவித்து மேட்டுக்குப்பத்தில் சித்திவளாக மாளிகையில் ஒரு மண்டலம் வழிபாட்டில் வைத்துவிட்டுப் பின்னர் சபையில் அதை நிறுவச் செய்தார். ஜோதியை நடுவில் அமைத்ததன் காரணம், இந்த அகண்டத்தின் ஒளியே ஞானமாகிய அருட்பெரும்சோதி. நம் மனமே நிலைக்கண்ணாடியாகும். மனத்தை மறைக்கும் மாயையே ஏழு திரைகள் ஆகும். ஜீவகாருண்யம், தோத்திரப் பாடல்கல் போன்றவற்றால் இந்த மனமாகிய கருங்கல் கரைந்து, பாறை உருகி, ஓட ஓட, இம்மாயைத் திரைகள் ஏழும் ஒவ்வொன்றாக விலக்கப்படும். மனம் தூய கண்ணாடியாய் விளங்க, அதன் மூலம் அருட்பெரும்சோதியின் தரிசனம் கிடைக்கப் பெற்று மரணமிலாப் பெருவாழ்வு பெறலாம் என்பதே இதன் தத்துவம் ஆகும்.



“நினைந்து நினைந்துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே

நிறைந்து நிறைந்தூற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு

நனைந்து நனைந்தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும் நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியஞ்சொல்கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.”



இதுவே வள்ளலார் அமைத்த சத்திய ஞானசபையாகும். இதை நிறுவியதுமே வந்த முதல் தைமாதம் பதின்மூன்றாம் நாள் வியாழக்கிழமை தைப்பூச நன்னாளில் முதன் முதலாக வழிபாடு தொடங்கப் பட்டது. தமிழகத்தின் அனைத்துத் தொலைதூர நகரங்களில் எல்லாம் இதுவே பேச்சு. சுற்றுவட்டாரம் முழுதும் இந்த தரிசனத்திற்காகவே காத்துக்கிடந்தது. வடற்பெருவெளியும், சத்திய ஞானசபையும், பார்வதிபுரமும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த வருடம் பனி அதிகம் இருந்ததையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் கூடியது. இதோ! நேரம் வந்துவிட்டது. கீழ் வானில் சூரியன் உதயம் ஆகும் அதே நேரம் மேல்வானில் சந்திரன் அஸ்தமனம் ஆகி இருவரும் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அதிகாலை நேரம் ஆறுமணி. சபையினுள் கிழக்குச் சாளரத்தில் கட்டப்பட்டிருந்த காண்டாமணி ஓம், ஓம், ஓம் என ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியது. அதன் எதிரொலி போல் சுற்றுவட்டார மரங்களின் கிள்ளைகள் இனிமையாகப் பாடல் இசைத்தன. சபையின் திருக்கதவம் திறக்கப்பட்டுக் கருப்புத் திரை தெரிந்தது. பின்னர் கருப்புத் திரை விலகியதை மாயை விலகியதாய்க் குறிப்பிட்டு க்ரியாசக்தியான நீலத்திரை தெரிந்தது. பின்னர் அதுவும் விலகி பராசக்தியான பச்சைத் திரை தெரிந்தது. அது விலக, இச்சாசக்தியான சிவப்புத் திரை தெரிந்து, பின்னர் அதுவும் விலகி ஞான சக்தியான மஞ்சள் திரை தெரிந்தது. ஞாசக்தியும் விலகி ஆதிசக்தியான வெள்ளைத் திரை தெரிந்தது. இப்படியே அனைத்துத் திரைகளும் விலகிக் கலப்புத் திரை தெரிந்தது.



அப்போது சிற்சக்தி விலகியதாய் ஐதீகம். கலப்புத் திரை விலகியதுமே அருட்பெரும்சோதியை பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்து தாங்கள் பெற்ற பெரும்பேற்றை எண்ணி மகிழ்ந்து ஆடிப் பாடினார்கள். ஜோதியைக் குறித்த வழிபாட்டுப் பாடல்கள் பாடப்பட்டன. அனைவரும் மனமகிழ்வோடு தங்கள் இருப்பிடம் சென்றனர். சில நாட்களில் வள்ளலார் சித்திவளாக மாளிகை முகப்பில் நின்ற வண்ணம் பக்தர்களுக்கு அருளுரை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே மீனவர் இருவர் வந்தனர். சுவாமிகளை வணங்கித் தம்மை மன்னிக்கும்படி வேண்டினர். விஷயம் என்னவென சுவாமிகள் கேட்க, இவர்கள் மீன்பிடிக்கச் சென்ற ஒரு நாள் சுவாமிகள் அவர்கள் இருவரையும் அழைத்து இந்தத் தொழிலை விடுமாறு கேட்டுக்கொண்டதை நினைவூட்டினார்கள். ஆனாலும் அவர்கள் கேட்காமல் வலைத்தொழிலுக்கே போய்க்கொண்டிருக்க, மீண்டும் அவர்களை அழைத்த அடிகளார், சிறுவலை வீசிச் சின்னச் சின்ன மீன்களைப் பிடித்துச் சிறு பொருளையே பெற முடிகிறது உங்களால். பெரும் பொருள் பெற்றுப் பெருவாழ்வு வாழப் பெரிய வலையை வீசுங்கள் எனக் கூற அவர் கூறியதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாத மீனவர்கள் இருவரும்பெரிய வலையைத் தந்து உதவுமாறு கேட்க, அன்பாகிய வலையையே தான் பெரிய வலை என்றதாகவும் அன்பு வலையை வீசினால் ஆண்டவன் அதற்குள் அகப்படுவான் என்று கூறியதாகவும் சொல்லவே மீனவர் இருவரும் ஏமாற்றம் அடைந்தனர்.



அதன் பின்னர் அன்றைய தினத்தில் இருந்துஎத்தனை முறை போய் வலை வீசினாலும் மீன்கள் கிட்டாமல் வலைகள் அறுந்து இருவரும் துன்பம் அடைந்தனர். பல நாட்கள் இவ்வாறு சென்றபின்னரே சுவாமிகள் கூறியதன் உட்பொருள் புரிந்துகொண்டனர். ஆகவே சுவாமிகளின் அடியாராக மாறி அவரின் ஆசிகளைப் பெறவே வந்திருப்பதாய்க் கூறி வணங்கினர். அவர்களுக்கு ஆசிகள் கூறி வாழ்த்திய வள்ளலார் இவர்களுக்காக இறைவனிடம் முறையிட்டுத் தாம் அழுததைக் கூறினார். கூடி இருந்த மக்கள் கூட்டமும் அடியார் கூட்டமும் வள்ளலாரை வாழ்த்தி மகிழ்ந்தனர். பின்னர் ஓர் நாள் சரணாலய சுவாமிகளைச் சந்திக்க வேலாயுத முதலியார் வந்தார். அடிகளாரை எங்கே காணோம் என்று கேட்டார். இரண்டு நாட்கள் முன்னர் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு யோகத்தில் அமர்ந்த அடிகள் வெளியே வரவே இல்லை எனச் சரணாலய சுவாமிகள் கூற வேலாயுத முதலியாருக்குக் கவலை வந்தது. வள்ளலார் வரும்வரையிலும் இருவரும் சன்மார்க்கக் கொள்கைகள் குறித்த கலந்துரையாடலைச் செய்தனர். பின்னர் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி மூன்றாம் ஆண்டு அக்டோபர் திங்கள் இருபத்திரண்டாம் தேதியில் சன்மார்க்கக்கொடியை வள்ளலார் ஏர்றினார்.



பின்னர் அனைவரையும் நோக்கி வீண் பொழுது போக்காமல் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் நம்முடைய நிலையைக் குறித்து விசாரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் கூடிப் பேசிக்கொண்டு இருக்குமாறு கூறினார். ஆன்ம அறிவை விளக்கம் ஏதுமின்றி மறைத்துக்கொண்டிருக்கும் திரைகளில் ஒன்றாகிய பச்சைத் திரை நீங்கும் என்றும் அது விலகினால் மற்றத் திரைகள் சடுதியில் விலகும் எனவும் கூறினார். மேலும் அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை, தனிப்பெரும் கருணை என்னும் திருமந்திரத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டிருக்கும்படியும் கூறினார். இவ்வண்ணம் சாதனம் செய்து வந்தால் சாதனம் முதிர்ந்து முடிவான இன்பானுபவம் கிடைக்கும் என்றார். உடனே சரணாலயர் சன்மார்க்கக் கொடியின் பொருளையும் கூறும்படி கேட்க, வள்ளலார் அதையும் கூறலானார்.



சன்மார்க்கக் கொடி யாதெனில் நம் உடலில் தொப்புள்கொடி முதல் புருவ மத்தி வரையிலும் உள்ள ஒரு நாடியின் நுனியில் புருவ மத்தியில் உட்புறத்தில் தொங்கும் சவ்வின் அடிப்புறம் வெள்ளை வர்ணமாகவும், மேற்புறம் மஞ்சள் வர்ணமாகவும் காட்சி அளிக்கும் என்றார். அந்தச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் உள்ளதாகவும், இக்கொடியை நாம் சாதாரணக்கண்களால் காண்பது அரிது எனவும், அனுபவத்தின் காரணமாகவே விளங்கும் என்றும் கூறினார். இந்த அடையாளங்களைக் கருத்தில் கொண்டே சன்மார்க்கக் கொடி கட்டப் பட்டதாகவும் கூறினார். அனைவரும் வள்ளலார் கூறிய விளக்கத்தில் மனம் மகிழ்ந்து அருட்பெரும்சோதி, அருட்பெரும் சோதி, தனிப்பெரும் கருணை, தனிப்பெரும் கருணை என்ற மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தனர்.

Saturday, September 24, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

மண்டபத்தை அடுத்துள்ள திருச்சபை மண்டபத்தின் மேற்புறம் பளபளவென ஜொலிக்கும் வெள்ளி ஒளியோடு விளங்குவதுதான் சிற்சபை எனச் சொல்லப்படும் வெள்ளியம்பலமாகும். கீழ்ப்புறம் அதே அமைப்பில் பொன்னிறத்தில் விளங்குவது கனகசபை எனப்படும் பொன்னம்பலம் ஆகும். இவற்றுக்கு வடக்கே தென்புறமாய்த் திகழ்வது சத்திய ஞானசபையாகும். ஞானசபைக்கு மூன்று கண்ணாடிக்கதவுகள் உண்டு. அவை சூரியன், சந்திரன்,அக்கினி ஆகியவற்றைக்குறிக்கும். இவற்றை அடைய அமைக்கப்பட்ட ஐந்து படிகளும் “சிவாய நம” என்னும் பஞ்சாக்ஷரத்தைக்குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பஞ்சாக்ஷரத்தைக் குறிக்கும் திருவருட்பா பாடல் பின்வருமாறு:



பெற்றதாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே!” என்று பாடியுள்ளார் வள்ளல் பெருமான்.



சத்திய ஞான சபையின் பிரகாரத்தில் பதினான்கு சாளரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை நமது சைவ சித்தாந்த சாத்திரங்களைக் குறிக்கும். சபையின் உள் அமைப்பில் கண்டால், உள்ளே அமைந்துள்ள பனிரண்டு தூண்களும் மெய்கண்டாரின் சிவஞானபோதத்தில் அருளியுள்ள பனிரண்டு சூத்திரங்களைக்குறிக்கும். உள்ளே அதிட்டான பீடத்திற்கு நடுவே உள்ள நாற்கால் மண்டபம் ஜோதி ஞானபீடம் என அழைக்கப்படும். அப்பீடத்துக்கு நான்கு படிகள் உள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் ஞான பாதங்கள் நான்கைக் குறிப்பன. அதன் வடதிசையில் உள்ள ஒங்கார வளைவுக்கு நடுவே உள்ள ஞானவெளியில் தான் ஆண்டவன் அருட்பெரும் சோதியாக விளங்குகிறான்.



“அருட்பெரும் சோதி என் ஆருயிரில் கலந்தாடுகின்ற

அருட்பெரும் சோதி என் அன்பிற் கலந்தறிவாய் விளங்கும்

அருட்பெரும் சோதித்தெள்ளார் அமுதாகி உள் அண்ணிக்கின்ற

அருட்பெரும் சோதி நின் ஆசை ஒன்றே என்னுள் ஆர்கின்றதே.”



இந்த அருட்பெரும் சோதியை மறைத்தவண்ணம் தொங்கும் வண்ணத் திரைகள் ஏழாகும். ஏனெனில் ஆண்டவனைக் காணவிடாமல் ஆன்மாவைத் தடுப்பவை மாயாசக்திகள். இவை ஏழு சக்திகளாகும். அவை மாயாசத்தி, கிரியாசத்தி, பராசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, ஆதிசத்தி, சிற்சத்தி என்னும் ஏழாகும். அவை ஏழுக்கும் முறையே கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை நிறம், கலப்பு நிறங்களில் திரைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஏழு திரைகளும் விலகியதும் பிரணவ வடிவான வட்டத்தினுள்ளே ஞானபீடத்தின்மீது அருட்பெரும்சோதி தனிப்பெரும் கருணாமூர்த்தியாகக் காட்சி அளிப்பதைக் காணலாம்.



கரைவின்மா மாயைக் கரும்பெருந்திரையால்

அரைசதுமறைக்கும் அருட்பெரும் சோதி

பெருறு நீலப்பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெரும்சோதி

பச்சைத்திரையால் பரவெளி அதனை

அச்சுற மறைக்கும் அருட்பெரும் சோதி

செம்மைத்திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

பொன்மைத்திரையால் பொருளுறு வெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

வெண்மைத்திரையால் மெய்ப்பதிவெளியை

அண்மையின் மறைக்கும் அருட்பெரும்சோதி

கலப்புத்திரையால் கருதனுபவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெரும்சோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடர்புற மறைக்கும் அருட்பெரும்சோதி

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்

அத்திறம் மறைக்கும் அருட்பெரும்சோதி

திரைமறைப்பெல்லாம் தீர்த்தாங்காங்கே

அரைசுறக் காட்டும் அருட்பெரும்சோதி

தோற்றமா மாயைத் தொடர்பறுத்தருளின்

ஆற்றலைக் காட்டும் அருட்பெரும் சோதி.”

Tuesday, September 20, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

ஒரு சமயம் இறப்புக் குறித்து சுவாமிகளைச் சரணாலயர் கேட்டபோது, அவர் பிரதம பத்திரிகை ஒன்று எழுதிக் கொடுத்ததாயும், அதில், “திருச்சிற்றம்பலம். இஃது தூற்றாமல் வைக்க. சமரச வேத சன்மார்க்க சங்கம் கூடி விளங்கும் காலம் எது? அது நமக்கு அறிவு வந்த நாள் தொட்டு இந்நாள் பரியந்தம் இறந்து போன நமது சிநேகர் உறவினர் அடுத்தோர் வார்திபர் வாலிபர் பாலியர் குமாரர் ஆண்மக்கள் பெண்மக்கள் என்பவர் எல்லாம் உயிர்பெற்று எழுந்து மேற்குறித்த சங்கத்தில் கூடி விளங்கும் காலமாகும். இது விஷயத்தில் தருக்கம் செய்யப்படாது. உண்மை!” என எழுதிக் கொடுத்திருந்தார். சரணாலயர் மேற்கண்ட செய்தியைச் சொன்னதுமே வேலாயுத முதலியார், சன்மார்க்க சங்கம் விளங்கும் காலம் என்பதற்கு சுவாமிகள் விளக்கம் சொல்லி இருப்பது சரி என்றாலும் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுந்து வருவர் என்ற சுவாமிகளின் கொள்கை விளங்கவே இல்லை என்று கூறினார். சரணாலயர் இப்போதைக்கு இதைக் குறித்து நாம் எந்தத் தருக்கமும் செய்யாமல் இதைத் தூற்றாமல் இருப்பதே நன்மை எனக் கூறி வற்புறுத்த அதை அவ்வாறே வேலாயுத முதலியாரும் ஏற்றுக்கொண்டார்.



மேலும் சரணாலயர் கூறியதாவது வள்ளல்பெருமான் எழுதிய திருமுகம் ஒன்றில் சுவாமிகள் சாலை சம்பந்திகளுக்கு எழுதிய சமாதிக்கட்டளை பற்றிக்கூறலானார். அது வருமாறு:

“திருச்சிற்றம்பலம். சுவாமிகளுக்குத் தெரிவிப்பது. சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும். இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் தன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமயபேதங்களும் சாத்திரப் பேதங்களூம் ஜாதிபேதங்களும் ஆசார பேதங்களும் போய், சுத்த சன்மார்க்கப் பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம். இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக்கர்த்தர்கள் மூர்த்திகள் கடவுளர் தேவர் அடியார் யோகிஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்ஹ்ட்திகளும் எல்லாத்தேவர்களும் எல்லாக்கடவுளரும் எல்லாத்தலைவர்களும் எல்லா யோகிகளும் எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக்குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப்பெரும்பதி. இது உண்மையாயின் அந்தப்பதியின் அருளை நான் பெறுவேன், பெறுகின்றேன், பெற்றேன். என்னையடுத்த தாங்களும் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை. பெறுவீர்கள், பெருகின்றீர்கள், பெற்றீர்கள், அஞ்சவேண்டாம்.” இது தான் அந்தக் கடிதத்தில் கண்ட வாசகம் என சரணாலயர் முடித்தார். அதன் மேல் வேலாயுத முதலியார் விடைபெற்றுக்கொண்டு தருமச்சாலை வழிபாடுகளில் கலந்து கொள்ளச் சென்றார்.



வருடம் 1872. வருடத் துவக்கம் அப்போதே ஆரம்பமாகி இருந்தது. ஓர் நாள்………



வடலூரும், பார்வதிபுரமும் கோலாகலமாகக் காட்சி அளித்தது. புதிதாய் வள்ளலார் ஏற்படுத்திய கட்டிடத்தின் முன்னே வெட்டவெளியில் ஊர்மக்களும், சன்மார்க்கிகளும் அமைதியாகவும் ஆர்வமாகவும் காத்திருக்க வள்ளலார் தம் உரையைத் தொடங்கினார். சன்மார்க்க சங்கம் காண விரும்பியபோதே அதை ஒட்டிய ஒளித்திருக்கோயில் ஒன்றையும் காணவிரும்பி அருட்பெரும்சோதியான ஆண்டவரிடம் விண்ணப்பித்துக் காத்திருந்தாய்க் கூறினார். ஆகவே உத்தரஞானசித்திபுரம் அல்லது உத்தரஞான சிதம்பரம் என்று திருவருளால் ஆக்கப்பட்ட சிறப்புப் பெயர்களை உடைய பார்வதிபுரம் என்றும், வடலூர் எனவும் சொல்லப்படும் குறிப்புப் பெயர்களும் உடைய இந்தப் பதியில் தருமச் சாலைக்கு வடமேற்கே திருவருளின் சம்மதத்தைப் பெற்று, வள்ளலார் வரைந்து கொடுத்த வரைபடத்தின்படி சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் ஒன்று கூடி அருட்பெரும்சோதியான ஆண்டவரைத் தரிசிக்க வேண்டி இத்திருக்கோயிலைக் கட்டுவித்ததாய்க் கூறினார். இந்தத் திருக்கோயிலுக்கு சத்தியஞானசபை எனப் பெயரிட்டிருப்பதாயும், அந்தப்பெயராலேயே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். கடவுள் தாமே திருவுள்ளங்கொண்டு இந்த சுத்த ஞானசபையைத் தம் திருவருள் கூட்டிய சம்மதத்தோடு ஏற்படுத்திக்கொண்டிருப்பதாயும், இக்காலம் தொட்டு அளவு குறிக்கப்படாத நீண்ட நெடுங்காலம் இறைவன் தாமே அங்கே அமர்ந்து விளையாடச் சம்மதித்திருப்பதாயும், இந்தத் திருக்குறிப்பை ஆண்டவர் வெளிப்படுத்தி அங்கே அருட்பெரும்சோதியாய் வீற்றிருப்பதாயும் மிகுந்த பரவசத்துடன் கூறினார். வருகிற தைப்பூசத்திருநாள் அன்று அனைவருக்கும் இந்த ஜோதி தரிசனம் கிடைக்கும் எனவும் கூறிய வள்ளலார் மனம் உருகப் பாடல் ஒன்றைப் பாடினார்.



அருட்சோதித்தெய்வமெனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்

பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவாறெனக்கருளும் தெய்வம்

தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.”



வள்ளலார் சித்திவளாகத்திருமாளிகைக்குச் செல்ல மக்கள் சத்திய ஞானசபையின் அமைப்பைக் கண்டு வியந்து பாராட்டினார்கள். அகத்தே காண்பதற்குரிய அனுபவமான உள்ளார்ந்த ஜோதி தரிசனத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதற்காக வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞானசபை ஓர் இயற்கை விளக்கம். திரைகள் எல்லாம் தத்துவப்படலங்கள் எனப்படும் மாயாத்திரைகள். நம்மிடமுள்ள அஞ்ஞானமே இங்கே திரைகளாய்க் குறிக்கப்படுகின்றன. அஞ்ஞானமென்னும் திரைகள் நீங்கினால் நம்முள்ளே ஆன்மஒளியாக அருட்பெரும் சோதியைக்காணமுடியும். அகத்தே தாம் பெற்ற அருட்பெரும்சோதி அனுபவத்தையே புறத்தே ஞானசபையாக அமைத்து மக்களுக்குக் காட்டினார் வள்ளலார். இந்த சத்திய ஞானசபையில் கட்டிடக்கலை நுணுக்கச் சிறப்பு மட்டுமல்லாமல் தத்துவச் சிறப்பும் ஒருங்கே கொண்டமைந்தது.



தாமரை மலர் போல் அமைக்கப்பெற்றிருக்கும் சபையின் தோற்றம் எண்கோணவடிவில் உள்ளது. உலகின் எட்டுத்திசைகளையும் இது சுட்டிக்காட்டும். இது அவற்றுக்கெல்லாம் பொதுவானதும் கூட. செங்காவி நிறத்தில் கட்டியுள்ள இந்தக் கோயிலின் கட்டிட அமைப்பு வியக்கத்தக்கதாய்க் காணமுடியும். சபையைச் சுற்றி வெளிப்புறம் இரும்புச் சங்கிலித் தொடர் வளைந்து வளைந்து தொங்கிக் காணமுடியும். அது அன்பு என்னும் சங்கிலியில் நாம் அகப்படுவதைக் குறிக்கும். நாம் அன்பு என்னும் சங்கிலியில் அகப்படுவதோடு அல்லாமல் அருட்பெரும்சோதியையும் அந்த அன்புச் சங்கிலியில் பிணைக்கிறோம். அன்புக்கு அகப்படுபவன் ஆண்டவன். இதைச் சுவாமிகளின் அருட்பா ஒன்றின் மூலம் காணமுடியும்.



அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட்படுபரம்பொருளே

அன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள்ளமைந்தபேர் ஒளியே

அன்புருவாம்பர சிவமே.



இரும்புச் சங்கிலித்தொடரை அடுத்து இடையிடையே அறிவு வடிவைச் சுட்டிக்காட்டும் வேற்படையின் குறியுள்ள இரும்புக்கம்பிகளுடன் கூடிய ஐம்பத்திரண்டு கட்டைகள் காணப்படும். அவை ஓம் என்ற பிரணவ மூல மந்திரத்துடன் கூடிய “அகாராதி க்ஷகாராந்த”மாக உள்ள அனைத்து மாத்ருகா மந்திரங்களையும் குறிக்கும். இது உபாசனையும் வழிபாட்டு முறையும் கை கூடி வந்தவர்களுக்கே புரியும் ஒன்று. தெற்கு நோக்கி அமைந்துள்ள ஞானசபையில் முகப்பில் மூன்று வாயில்கள் இருக்கின்றன. இவைகளின் தத்துவமானது கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் ஆகியவற்றைக்குறிப்பதுவே. சாளரங்கள் இரண்டும் பாசஞானம், பசுஞானம் ஆகியவற்றைச் சொல்வது. இவற்றைக்கடந்து உள்ளே நுழைந்ததும் காணப்படும் மண்டபத்தின் இருபக்கமும், கிழக்கில் ஓர் வாயிலும், மேற்கில் ஓர் வாயிலும் காணமுடியும். இவை பரஞானம், அபரஞானம் ஆகியவற்றைக்குறிக்கும். மண்டபத்திலுள்ள நான்கு சாளரங்களும் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை கூடுதல் ஆகிய நான்கின் வழியாகவே உண்மைப் பரம்பொருளை உணரவேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

அதைக் கேட்ட சிவாசாரியார் விபரமாய்க்கூறும்படி கேட்க, செட்டியாரும் கூறலானார். வள்ளல் பெருமானின் தேகம் சுத்த தேகம் எனவும், உலோகத்துண்டு ஒன்றையோ அல்லது வெள்ளி நாணயம் ஒன்றையோ அவர் கையில் வைத்து மூடித் திறந்தால் அவை உருகி ஓடிவிடும் எனவும் அந்த அளவுக்கு அகச்சூடு உள்ளவர் வள்ளலார் எனவும் கூறிய செட்டியார், மேலே கூறினார். அப்படி இருந்தும் அவ்வளவு சூடும்போதாது எனக் கருதிய சமயங்களிலே சுவாமிகள் புறத்தே இப்படி தீச்சட்டிகளை வைத்த வண்ணம் புறச்சூட்டால் தமது அகச்சூட்டை பிரமதண்டிகா யோகம் செய்வதன் மூலம் அதிகப்படுத்திக்கொள்வதாய்த் தாம் நினைப்பதாய்க் கூறினார். சிவாசாரியாரும் அதை ஆமோதித்தார். மேலும் செட்டியாரிடம் தமக்கு நெருப்புத்துண்டுகள் உடலில் பட்டதுமே தீப்புண்கள் ஏற்பட்டன எனவும், சுவாமிகளுக்கோ எதுவும் நடக்கவில்லை என்பதையும் ஆச்சரியத்தோடு குறிப்பிட்டார்.



அதை ஆமோதித்த செட்டியாரும் இதிலிருந்து என்ன தெரிகிறதெனில் சுவாமிகளின் திருமேனியே கனல்மேனியாகும் எனவும், அந்தக் கனல் சாதாரணக் கனல் அல்லவென்றும், ஞானக்கனல் எனவும், கூறினார். மேலும் அத்தகையதொரு ஞானக் கனலை இந்தச் சாதாரண தீக்கனலால் என்ன செய்ய முடியும்? எதுவும் முடியாது. அதனாலேயே சுவாமிகளைத் தீ எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. காற்று, புவி, ககனம், புனல், அனல் என எதனாலும் அழியாத திருமேனி சுவாமிகளின் திருமேனி என பரவசம் மீதூறக் கூறினார். சிவாசாரியாரும் கண்ணீர் பொங்க அதை ஆமோதித்தார். செட்டியார் மேலும் இறைவன் ஒருநாள் மாலை ஒரே நாழிகையிலே யோகநிலையை சுவாமிகளுக்கு உணர்த்தி மறுநாளே யோகப்பயனையும் அளித்ததாகவும் கூறிவிட்டு, இதைச் சுவாமிகள் தம் பாடல் ஒன்றின் மூலம் தெரியப் படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டார். “ஒரு நாழிகையில் யோகநிலையை யுணர்த்தி, மாலையே, யோகப்பயனை முழுதும் அளித்தாய்! எனத் திருவருட்பாவில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார்.



நம்மைப் போன்ற சாமானியர்களின் சிற்றறிவிற்கு எட்டமுடியாத இந்த விஷயங்களை நம் காலத்தில் நாம் பார்த்து மகிழக் கொடுத்து வைத்திருக்கிறோம் எனப் பேசிக்கொண்டனர் இருவரும். அதன் மேல் சிவாசாரியார் ஜோதிவழிபாட்டுக்கு தருமச்சாலைக்குப் போவதாய்க் கூறிக்கொண்டு கிளம்பினார். சிலநாட்களின் தருமச்சாலையை ஒட்டி சமரச வேதபாடசாலை ஒன்றையும் சுவாமிகள் ஏற்படுத்தி சன்மார்க்கப் பாடங்களைக் கற்பித்து அதன்படி நடக்கும் இளைஞர்களுக்கு பயிற்சிக்காலத்திலும் அதன் பின்னரும் தக்க பொருளுதவி செய்யப் போவதாயும் அறிவித்தார். இளைஞர்கள் பதினைந்து வயதுக்குள் இருக்கவேண்டும் எனவும், நல்லொழுக்கம், கடவுள் பக்தி, ஜீவகாருண்யம், பொதுத் தொண்டு செய்வதில் விருப்பம் உள்ளவர்களாய் இருத்தல், உண்மையே உரைத்தல், ஐம்புலன்களையும் அடக்கி ஆள்தலில் விருப்பம் உள்ளவர்கள், இன்சொல்லே பேசுதல், அனைவருக்கும் உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுதல் போன்ற நற்பண்பு நிறைந்தவர்களாய் இருத்தல் வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்தார்.



அனைவருமே இந்தத் திட்டத்தை வரவேற்றதோடு மாணாக்கர்களுக்குப்பொருளுதவி செய்வது எல்லாருமே செய்வதுதான். ஆனால் அவர்தம் குடும்பத்திற்கும் சேர்த்து உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வள்ளலாரைத் தவிர வேறு யாருக்கும் தோன்றாது என வியந்து பாராட்டினர். இப்படிப் பயின்ற மாணவர்களை நாடெங்கும் அனுப்பி சன்மார்க்கத்தைப் பரப்புவதே சுவாமிகளின் குறிக்கோள் எனவும் புரிந்து கொண்டனர். தருமச்சாலையில் ஒருநாள் வேலூரில் இருந்து ஆனந்தநாத சண்முகசரணாலய சுவாமிகள் வந்திருந்தார். அவர் வள்ளலாரோடு நெருங்கிய தொடர்புடையவர். அது குறித்த சிந்தனைகளில் மூழ்கி இருந்தவரை சித்திவளாக மாளிகையில் இருந்து வேலாயுத முதலியார் காண வந்தார். அவரைக் கண்டு வணங்கிய வேலாயுத முதலியாரை வரவேற்ற சரணாலய சுவாமிகள் வள்ளல் பெருமானைத் தரிசித்து பலநாட்களாகிவிட்டதாயும், தருமச்சாலைக்கு முன்போல் ஏன் வருவதில்லை எனவும் விசாரித்தார்.



அதற்கு வேலாயுத முதலியார் பெருமான் சன்மார்க்க சங்கம்தோற்றுவிக்க விரும்பிய காலத்திலேயே அதைச் சார்ந்த ஒளித்திருக்கோயில் கட்ட வேண்டும் என விரும்பியதாகவும், அதற்கென இப்போது கோயில் அமைப்புப் படம் ஒன்றைத் தம் கரத்தால் வரைந்து வைத்திருப்பதாயும், அது புதிய கட்டிட அமைப்பாகவும், வெகு அருமையாகவும், அற்புதமாகவும் இருக்கிறதாயும் கூறினார். கலா வல்லவராகிய சுவாமிகள் கட்டிடக் கலையிலும் வல்லவராக இருக்கிறதைக் கண்டு இருவரும் வியந்து பேசிக்கொண்டனர். பின்னர் வேலாயுத முதலியார் சரணாலய சுவாமிகளிடம் அவர் வந்த விஷயம் குறித்து விசாரித்தார். தமக்கும் சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்ததாய்க் கூறினார் சுவாமிகள். அது குறித்துத் தமக்கு எதுவும் அதிகம் தெரியாது எனவும், தெரியாத விஷயங்களைச் சொல்லும்படியும் வேலாயுத முதலியார் கேட்டுக்கொண்டார். அனைத்துமே முதலியார் அறியாத விஷயங்களே எனக் கூறின சரணாலய சுவாமிகள் மேலே பேசினார்.



வள்ளல்பெருமானிடம் சரணாலய சுவாமிகள் ஒருமுறை தேவாரம், திருவாசகம் மட்டுமின்றி வள்ளல் பெருமானின் செய்யுட்களிலும் சில கருத்து விளங்காது மயக்குகின்ற சொற்றொடர்களைக் காண்பதாகவும், வழுக்களையும் காண்பதாகவும் முறையிட்டதாகக் கூறினார். அதற்கு வள்ளலார் ஒரு சில இடங்களில் நால்வர் பெருமக்கள் வழுவியிருப்பதாகவும் இவ்வழுக்கள் விசாரத்தாலும், சிவாநுபவ மேலீட்டாலும் தற்செயலாக ஏற்பட்டவை என்றும் கூறினார். பின்னர் திருவருட்பாவில் உள்ள மயக்குகின்ற சொற்றொடர்களைக் குறித்து விளக்கம் தந்தார் சுவாமிகள். சுவாமிகள் சரணாலய சுவாமிகளிடம் தாம் எழுதிய திருவருட்பாவில் அளவிறந்த குற்றங்கள் இருப்பதாயும், விசாரவசத்தால் தவறுகள் ஏற்பட்டதாயும், இறைவன் தமது பெருங்கருணையால் அனைத்தையும் மன்னித்ததாயும், மற்றவர்களும் அவ்வாறே மன்னித்தல் வேண்டும் எனவும், தாம் புழுவினும் சிறியேன் எனவும் இது குறித்து மிகவும் நாணுவதாயும் மிகத் தாழ்மையுடன் கூறினார்.



இதைக் கேட்டுக்கொண்டே வந்த வேலாயுத முதலியார் தாம் முன்னர் ஒருமுறை பெருமானைச் சோதித்தது குறித்து நினைந்து நாணம் மிகக் கொண்டார். பின்னர் மேலே சரணாலய சுவாமிகள் பேசியதைக் கேட்கத் தொடங்கினார். அகர உயிர்க்கு நாற்பத்தைந்து வினாக்களைக் கூறிய சுவாமிகள் ஓரு எழுத்திற்கே பற்பல இலக்கண நியாய விசார வினாக்கள் உள்ளது எனில் தம் போன்றோர் எவ்விதம் அவ்வினாக்களுக்கு விடை தோற்றுவிக்க முடியும்?? கற்றோம் என்ற செருக்கை முழுதும் விடுத்து விசார வசத்தவராகிச் சிவன் திருவருளையே சிந்தித்து இருக்க வேண்டும் என்று என்னையோரு பொருளாகக் கருதிக் கூறியருளினார் சுவாமிகள். இதைக் கேட்ட சரணாலய சுவாமிகள் கற்றலில் செருக்கடைதல் பொருந்தாது என்னும் பேருண்மையைத் தாம் சுவாமிகளின் பேச்சால் உணர்ந்து கொண்டதாயும் தெரிவித்தார். அப்போது வேலாயுத முதலியார் இந்தப் பேருண்மையை சுவாமிகள் மட்டும் உணரவில்லை எனவும் அதை முதலில் தாம் உணர்ந்து கொண்டதாகவும் அதன் பின்னர் கணக்கில் அவதானி தேவிபட்டினம் முத்துசாமிப் பிள்ளை எனவும் அதன் பின்னர் புதுச்சேரி தந்தி அலுவலக மேலாளர் பிநாகபாணி முதலியார் எனவும் தெரிவித்தார். ஆகவே நாம் அனைவருமே பெருமானின் அருளால் வித்வத் கர்வம் அடங்கியவர்களே என்று கூறினார்.



வேலாயுத முதலியார் வள்ளலார் இளமையில் முப்பதாண்டுகள் சென்னையில் வித்துவானாக விளங்கி வந்தது அப்படியே தொடர்ந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பது குறித்து இரண்டு தமிழறிஞர்கள் தமக்குள் பேசிக்கொண்டதைக் கூற ஆரம்பித்தார். மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஒரு சமயம் ஆறுமுக நாவலரிடம் பேசிக்கொண்டிருந்த போது வள்ளலார் மட்டும் துறவறம் ஏற்காமல் தொடர்ந்து நாவலர் வித்துவான் போன்ற பெயர்களை ஏற்றிருந்தால் தாமும் சரி, ஆறுமுக நாவலரும் சரி முறையே இலக்கிய வித்துவான் எனவும் இலக்கண வித்துவான் எனவும் பெயர் கிடைத்திருக்காது என்று கூறினாராம். அம்மாதிரி இல்லாமல் வள்ளலார் துறவறம் ஏற்றதாலேயே அவர்களால் இலக்கண, இலக்கிய வித்துவான்களாகப் பரிமளிக்க முடிந்தது என்றாராம். அதன் மேல் சரணாலயர் மேலும் பேசத் தொடங்கினார்.

அருட்பெருசோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளலார் தன் தொண்டை விரிவு செய்து கொண்டே இருந்தார். தருமச்சாலையில் சாப்பாடு போடுவதோடு மக்களுக்கு மருத்துவமும் செய்து வந்தார். பசிப்பிணி போக்குவதோடு உடற்பிணிக்கும் மருத்துவம் தேவை எனக் கருதிய வள்ளலார் அவர்கள் சுமார் நானூற்று எண்பது மூலிகைகளுக்கும் மேல் குண அட்டவணையை எழுதி வைத்தார். சித்த வைத்தியத்தில் நிபுணரான அடிகளார், பல மருந்துகளைச் செய்து வைத்துக்கொண்டு அவற்றை மக்களுக்குத் தேவையான சமயம் கொடுத்து வந்தார். அது மட்டுமல்லாமல் சிரஞ்சீவி மூலிகைகள் பற்றியும் மருத்துவக்குறிப்புக்களும் எழுதி வைத்தார். இவை இத்தனையும் போதாது என நினைத்தோ என்னவோ, தொழுவூர் வேலாயுத முதலியாரை ஆசிரியராக நியமித்து தருமச்சாலையில் திருக்குறள் வகுப்பையும் நடத்தினார். அங்கே படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் எனப் பாகுபாடின்றி எல்லோருக்கும் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப் பட்டது.



ஆனால் வேலாயுத முதலியார் போன்ற பெரும்புலமை படைத்தவர்கள் பாடம் நடத்தியதால் ஒரு சிலரால் பாடத்தைப் புரிந்து கொள்ளவும் முடியாமல் போயிற்று. ஆகவே வள்ளலார் வேலாயுத முதலியாரை அழைத்து சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகப்பாடம் எடுக்கும்படி அறிவுறுத்தினார். நாட்கள் சென்றன. நாட்கள் ஓட ஓட, தருமச்சாலைக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தது. வள்ளலாரால் தனிமையில் ஏகாந்தத்தில் தியானத்தில் அமரமுடியவில்லை. யோக சாதனைகள் செய்யத் தடைகள் ஏற்பட்டன. ஆகையால் வடலூருக்குத் தெற்கே மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்திற்குச் சென்று வசிக்க ஏர்பாடுகள் செய்து கொண்டார். அந்த ஊர் மக்களும் கிராமத்து மணியக்காரரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வள்ளலார் தங்குவதற்கு வேண்டிய தேவையான வசதிகளைச் செய்து தந்தனர். வள்ளலார் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்த திருமாளிகை ஒரு காலத்தில் வைணவ ஆசாரியர்கள் எழுந்தருளித் தங்கி மக்களுக்கு வைணவ தீக்ஷை, உபதேசம் போன்றவை செய்து வைத்துக்கொண்டிருந்த இடமாக இருந்து வந்தது. காலப்போக்கில் வைணவ ஆசாரியர்கள் வரவு குறைய மாளிகை காலியாக இருக்கவே அங்கே தங்கித் தம் யோக சாதனைகளைச் செய்ய வள்ளலார் ஒப்புக்கொண்டார். அந்த மாளிகையை, “சித்திவளாகத் திருமாளிகை” என அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



எல்லாருக்கும் இந்தப்பெயரின் காரணம் விளங்கவில்லை. எனினும் வேலாயுதமுதலியாரே தைரியமாய்க் காரணத்தைக் கேட்டார். சித்தி வளாகம் சகல சித்திகளையும், அதாவது வீடுபேற்றைத் தரும் என்பதால் அந்தப்பெயர் வைத்ததாய் வள்ளலார் கூற அனைவரும் மகிழ்ந்தனர். வள்ளலாரும் சித்திவளாகத் திருமாளிகையில் வாசம் செய்து தம் யோகசாதனைகளைத் தொடர்ந்தார். ஆனால் மக்களுக்கு அவர் தரிசனம் கொடுக்கவில்லை. பலநாட்கள் பொறுத்த மக்கள் ஒருநாள் வேலாயுதமுதலியாரிடம் சென்று, சித்திவளாக மாளிகைக்கு வந்தது முதல் அடிகளைப் பார்க்க முடிவதில்லை எனப் புகார் தெரிவித்தனர். எங்கு சென்றார்? என்ன செய்கிறார் என்பதே விளங்கவில்லை என்றும் கவலையுடன் கூறினர். அதற்கு வேலாயுத முதலியார் பெருமான் எங்கும் செல்லவில்லை என்றும் அவர்களோடே இருப்பதாகவும், ஆனால் புறக்கண்களுக்குத் தெரியமாட்டார் எனவும் உருவத்தை மறைத்துக்கொண்டு அருவமாக உலவி வருகிறார் என்றும் தெரிவித்தனர். அனைவருக்கும் ஆச்சரியம் மேலிட்டது.



வேலாயுத முதலியாரோ இத்தகைய அற்புத சாதனைகளைப் பயில வேண்டியே வள்ளலார் தனித்துப் பயிற்சி செய்யவேண்டி இந்த மாளிகைக்கு வந்ததாகவும், இப்போதும் அது போலவே தம் திருமேனியை மறைத்துக்கொண்டு அருவநிலையில் விளங்குவதாகவும் தெரிவித்தார். இதைக் கண்டு சிலர் அஞ்சலாம் என்பதால் அடிகளே, ஓர் அறிவிப்பையும் வெளியிட்டிருப்பதாய்க் கூறிவிட்டு அந்த அறிவிப்பைப் படித்தார்.



“திருச்சிற்றம்பலம். அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது. ஒருவனைப்பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச காலத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுவேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நானாகவே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். தருமச்சாலையை நன்கு நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.”



இதைப் படித்த வேலாயுத முதலியார் இதற்கு முன்னரும் சுவாமிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், பலநாட்கள் சென்றபின்னரே வெளிப்பட்டதாகவும் கூறிவிட்டு சுவாமிகள் இவ்வாறு மறைவதும் வெளிப்படுவதும் இனிப் பலமுறை நிகழ்த்தலாம் எனத் தாம் நினைப்பதாகவும் இது குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் கூறினார். வடலூரில் தருமச்சாலையை நிர்வகித்து வரும் புதுச்சேரி சதாசிவம் செட்டியாரைக் காண ஒரு நாள் ஆடூர் சபாபதி சிவாசாரியார் வந்தார். சிவாசாரியாரின் முகம், கைகள், கால்கள் போன்றவற்றில் தீக்காயம் பட்டது போல் காணப்படவே சதாசிவம் செட்டியார் பதறிப் போனார். என்ன ஆயிற்று என அவரை விசாரித்தார். சபாபதி சிவாசாரியாரும் தன் மனம் சரியில்லை எனவும், மனதைக் கொஞ்சமாவது ஆற்றிக்கொள்ள வேண்டியே இங்கே வந்ததாகவும் கூறினார். மீண்டும் சதாசிவம் செட்டியார் தீக்காயங்களின் உண்மையான காரணத்தைக் கூறும்படி வற்புறுத்த, இது குறித்து எவரும் அறியாமலேயே பேச வேண்டும் என்று சபாபதி சிவாசாரியார் கூறிவிட்டு அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டார்.



வேறு எவரிடமும் இது குறித்துப் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு சபாபதி சிவாசாரியார் வேலாயுத முதலியாரிடம் பிரமதண்டிகா யோகம் குறித்து அவர் அறிந்திருக்கிறாரா என விசாரிக்க, செட்டியாரும் தெரியும் என்று சொல்லிவிட்டுத் தீச்சட்டிகளுக்கு நடுவே அமர்ந்து செய்யும் மிகக் கடினமான யோகமாயிற்றே அது எனத் தன் வியப்பையும் தெரிவித்தார். அப்போது சிவாசாரியார் சித்திவளாகத்தின் உள்ளே உள்ள திருவறையில் வள்ளலார் தமக்கு இருபக்கமும் இரும்புச் சட்டியை வைத்துக்கொண்டு சீமைக்கரியை எரியவிட்டுக்கொண்டு, கதவைத் தாழிட்டுக் கொண்டு பிரமதண்டிகா யோகம் செய்வதாய்த் தாம் அறிந்து கொண்டதாய்க் கூறினார். செட்டியார் வியப்புடன் கேட்டுக்கொண்டிருக்க, மேலும் சிவாசாரியார் கூறியதாவது: தாம் இரண்டு நாட்கள் முன்னர் சித்திவளாகம் சென்றிருந்ததாயும், சுவாமிகள் அறையில் இருந்ததாய்த் தெரிவித்தார்கள் என்றும் அதன் மேல் தாம் அவசரத்துடன் அறைக்குள் நுழைந்ததாயும் கூறினார்.



அங்கே சுவாமிகள் பிரமதண்டிகா யோகத்தில் இருந்திருக்கிறார். இது விஷயம் அங்கே உள்ள எவரும் அறியவும் இல்லை. மேலும் கதவும் சரியாகச் சார்த்தப்படாமல் கொஞ்சம் திறந்திருக்கவே அவசரத்துடன் உள்ளே நுழைந்த தமக்குப் போன வேகத்தில் தம் கால்கள் பட்டு நெருப்புத்துண்டங்கள் சிதறி மேலே விழுந்ததாயும், சுவாமிகள் மேலும் விழுந்ததாகவும் கூறிவிட்டு நிறுத்தினார். மேலும் சிவாசாரியார் கூறியதாவது: “இதை நீர் எவருக்கும் கூறக்கூடாது. நெருப்புத் துண்டங்கள் விழுந்ததில் எனக்கு மட்டுமே தீக்காயங்கள் ஏற்பட்டன. சுவாமிகளுக்கு எதுவும் நடக்கவில்லை. என் உடலே எரிச்சல் தாங்க முடியாமல் தீக்காயங்கள் ஏற்பட்டன. நான் உடனே பயந்து போய் வெளியே வந்து கதவைச் சார்த்திவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். எவருக்கும் இது குறித்துச் சொல்ல வேண்டாம்.” என்றும் கேட்டுக்கொண்டார். செட்டியாரும் எவரிடமும் தான் தெரிவிப்பதில்லை என உறுதியளித்துவிட்டு வேலாயுத முதலியார் இம்மாதிரியானப் பல விஷயங்களை சுவாமிகள் பற்றித் தம்மிடம் சொல்லி இருப்பதாய்க் கூறினார்.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இலங்கை யாழ்ப்பாணத்திலே நல்லூர் என்னும் கிராமத்திலே, கார்காத்த வேளாளர் மரபில் பிறந்தவர் ஆறுமுக நாவலர் என அழைக்கப்பட்ட சிவத் தொண்டர். தம் பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாகப்பிறந்த இவர் இருபது வயதிற்குள்ளாகத் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் பாண்டித்தியம் பெற்று விளங்கினார். இவர் இலங்கை யாழ்ப்பாணத்தில் மட்டுமின்றித் தமிழ்நாட்டிலும் சைவசமயப் பிரசாரங்களை மேற்கொண்டு சைவ சமயத்திற்காக அருந்தொண்டாற்றியும் வந்தார். தம் வாழ்நாட்களை அதற்கெனவே செலவிட்ட இவர், தில்லைச் சிதம்பரமே சைவர்களின் முக்கியமான கோயில் என்பதால் அங்கேயும் ஓர் பாடசாலையை நிறுவினார். சைவ சமயத்தை அன்றி வேறு சமயத்தைக் கண்ணெடுத்தும் பாராதவரான இவர் பல தமிழ் நூல்களை அச்சிற்பதிப்பித்த்தார் எனச் சொல்லப் படுகிறது. பழைமையான பல பாடல்களின் உரைகளைத் திருத்திப் புதுப்பித்து வெளியிட்டதோடல்லாமல், சிலவற்றிற்குப்புதிதாகவும் உரைகள் எழுதினார். இவர் வள்ளலாரின் சமகாலத்தவர். சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் வள்ளலாரின் திருஅருட்பாக்கள் பாடப்படுவதையும், அவற்றையும் திருமுறைகள் எனச் சொல்லப்படுவதையும் இவர் விரும்பினாரில்லை.



திருமுறைகள் என்றால் அவை பன்னிரு திருமுறைகள் மட்டுமே. வள்ளலாரின் பாடல்கள் திருமுறை என்ற பெயரால் அழைக்கப்படக்கூடாது. மேலும் அவற்றை அருட்பா எனவும் அழைத்தல் தகாது. அவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்பதே அவர் கட்சி.



மேலும் வள்ளலாரின் சர்வசமயசமரச சன்மார்க்கத்தினால் மக்கள் வேற்றுமதங்களுக்கு ஆதரவுகளை நல்கி மதம் மாற்றப்பட்டுவிடுவார்கள் என்றும், வேற்று மதத்தினருக்கு இது ஆதரவு அளிக்கும் விதமாய் உள்ளதென்றும் முழுமையாக நம்பினார். ஆகவே பலவழிகளிலும் வள்ளலாரை எதிர்த்து வந்த இவருக்கும், வள்ளலாருக்கும் வழக்கு ஏற்பட்டது. இந்த வழக்கு நாளடைவில் முற்றிப் போய் நீதிமன்றப்படிகளையும் அடைந்தது. வழக்கு தினம். வாதியான ஆறுமுக நாவலர் பிரதிவாதியான ராமலிங்க அடிகளையும், அவர் வகுத்துள்ள சன்மார்க்கக் கொள்கைகளையும் எதிர்த்து வழக்காடுகிறார் என்று தெரிந்து கொண்ட பொதுமக்கள் கூட்டம் நீதி மன்றத்தில் அலை மோதியது. வாதியான ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்துவிட்டார். நீதிபதியும் தம் ஆசனத்தில் வந்து அமர்ந்து விட்டார். வள்ளலார் சற்றே தாமதமாக வந்தார். அவரைக்கண்டதும் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நிற்கத் தம்மையும் அறியாமல் நீதிபதியும், ஏன்? ஆறுமுக நாவலரும் கூடவே எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள். நீதிபதி ஆறுமுக நாவலர் எழுந்து மரியாதை செய்வதையும் கவனித்துக்கொண்டார்.



வழக்குத் தொடங்கியது. தம் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார் நாவலர். தாம் சிவத்தொண்டு செய்யும் சிவனடியார் எனவும், சைவ சமயத்தைப் பரப்பி வரும் தமக்கு வள்ளலாரின் இத்தகைய செயல்கள் மனதைப் புண்படுத்தி வருவதாயும், கூறினார் நாவலர். வள்ளலாரின் பாடல்களுக்கு அருட்பாக்கள் என்ற பெயரைச் சூட்டுவது தவறு என்றும் அவற்றிற்கு ராமலிங்கம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்ற பெயரே பொருத்தம் எனவும் கூறினார். வள்ளலார் கடைப்பிடிக்கும் மதமான சன்மார்க்கக் கொள்கைகளால் புறச் சமயத்தார் அதிகப் பலன் பெறுவார் என்றே தாம் எண்ணுவதாயும், இதனால் மதக் கலவரங்கள், மதமாற்றங்கள் நடைபெறும் என அஞ்சுவதாயும் கூறினார். இதன் பேரில் வள்ளலாரை நீதிபதி விசாரிக்கத் தொடங்கினார். வள்ளலார் எழுந்து நின்று தாம் பாடி வரும் பாடல்கள் அனைத்தும் இறைவன் அருளால் தம்முள்ளே இருந்து ஊறி வெளியே வரும் அருட்பாக்களே எனக் கூறிவிட்டுக் கீழ்க்கண்ட பாடலைப் பாடினார்.



“நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் தன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான் உரைத்த மணிமன்றில் நடம்புரியும் எம்பெருமான்

வரவெதிர்கொண்டவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே

தேன் உரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன் எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர்தான் அடைதல் குறித்தே.”

தம் இனிய குரலால் மேற்கண்ட பாடலைப்பாடிய வள்ளலார், தாம் செய்த குற்றம் தான் என்னவென வினவினார். மக்களின் நல்வாழ்க்கைக்காகத் தாம் பாடிய இந்த அருட்பாக்கள் மக்கள் நல்வழியே செல்லவும் ஜீவகாருண்யத்தோடும், ஒழுக்கத்தோடும் சாதிசமயபேதமற்ற சன்மார்க்கவழியைப் பின்பற்றவுமே பயன்படும் எனவும், இது மக்களை நல்வழியில் தானே செலுத்துகிறது? என் கடன் மக்களுக்குப் பணி செய்து கிடப்பதுவே என்றும் இறைவன் ஆணையால் தாம் செய்யும் இந்தப் பணிக்குத் தமக்குக் கிடைத்த பரிசு இதுவோ என வேதனையுடன் கூறி மனம் மிகவும் வருந்தினார். மேலும்

வாதுபேசிய மனிதர்காள் ஒரு

வார்த்தை கேண்மின்கள், வந்துநும்

போதுபோவதன் முன்னரே அருட்

பொதுவிலே நடம் போற்றுவீர்

தீது பேசினீர் என்றிடாதுமைத்

திருவுளங்கொளும் காண்மினோ

சூது பேசிலன் நன்மை சொல்கின்றேன்

சுற்றம் என்பது பற்றியே!” என்று அறை கூவல் விடுத்தார்.



நீதிபதி சந்தோஷத்தை அடக்கமுடியாமல் தவித்த வண்ணம் ஆறுமுக நாவலரைப் பார்த்தார். வள்ளலார் மேலும், தாம் மக்களின் மூடப்பழக்கவழக்கங்களையே அகற்றப் பாடுபடுவதாயும். ஒழுக்கத்தோடும் ஜீவகாருண்யத்தோடும் வாழ்ந்தால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம் என்றே மக்களிடம் கூறி வருவதாயும், பொய் வேடம் போட்டுப் புனைந்து பாடிப் பிழைக்கவில்லை எனவும் கூறினார். மற்ற மதவாதிகளுக்கு எதிராகப் போரிடும்படி மக்களைத் தாம் ஒருபோதும் வற்புறுத்தியதில்லை என்றும் மெய்யுணர்வோடு ஆண்டவனை அடையவே தாம் பாடிவருவதாயும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி ஆறுமுக நாவலரிடம் இதற்கு அவர் பதில் என்ன என்று கேட்க, நாவலர் பதிலொன்றும் கூறமுடியாமல் தவித்தார்.



நீதிபதி மேலும் நாவலரிடம், கடவுளுக்குப் பரத்துவம் சொல்லும் அனைவரும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றே கூறிவருவதை அவர் ஒப்புக்கொள்கிறாரா எனக் கேட்டார். நாவலரும் தமது சமய ஞானிகள் பலகாலமாக வற்புறுத்தி வரும் பேருண்மை இதுவே எனக் கூறி ஒத்துக்கொண்டார். அப்போது நீதிபதி அப்படிப் பார்த்தால் சைவக் குரவர்களான நால்வரைப் போலவே இறையருள் பெற்றே வள்ளல் பெருமானும் பாடல்களைப் பாடி வருவதாகவும் இல்லை எனில் இத்தகைய அற்புதமான பாடல்களை அவரால் பாட இயலாது என்றும் தாம் கருதுவதாய்க் கூறினார். மேலும் நீதிமன்றத்தினுள் வள்ளலார் நுழைகையில் நாவலரும் எழுந்திருந்து மரியாதை செய்தது ஏன் எனக் கேட்க நாவலருக்குப் பேச்சு எழவில்லை. பின்னர் வள்ளலாரைக் கண்டதுமே தம்மை மீறிய உணர்வால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்கு மரியாதை கொடுத்ததாய் ஒப்புக்கொண்டார். உடனே நீதிபதி நாவலர் கூறியது போல் வள்ளலாரின் பாடல்கள் மருட்பாக்கள் என்றால் வழக்குத் தொடுத்த வாதியான நாவலரே எழுந்திருந்து பிரதிவாதிக்கு மரியாதை செய்திருக்க மாட்டார்; ஆகவே இவை அருட்பாக்கள் தாம் என்றே தாம் தீர்ப்பளிப்பதாய்க் கூறினார். அத்தோடு வழக்கும் முடிந்தது.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

இதன் நடுவே வேட்டவலம் என்னும் ஊரில் ஜமீந்தார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அருணாசல, வசந்த, கிருஷ்ண, வாணாதராய அப்பாச்சாமி பண்டாரியார். அவர் மாளிகைக்கு அடிகளார் விஜயம் செய்வதாக ஏற்பாடுகள் நடந்தன. அழகான சிங்காதனம் அலங்கரித்து வள்ளலாரை வரவேற்கத் தயாரானார் ஜமீந்தார். வள்ளலாரும் வேலாயுத முதலியாருடன் வந்து சேர்ந்தார். அடிகளாரை வணங்கி வரவேற்ற ஜமீந்தாரிடம் தம்முடன் வந்த வேலாயுதம் முதலியாரை அறிமுகம் செய்து வைத்தார் அடிகளார். பின்னர் அடிகளார் ஜமீந்தாரிடம், “ஜமீந்தாரே, நீர் இந்தக் கூடத்தில் இரண்டு ஆசனங்கள் போட்டிருக்கிறீர். இதில் தாங்கள் விரும்பிய ஆசனத்தில் நான் அமர்ந்து கொள்கிறேன். மற்றதில் தாங்கள் அமரலாம். “என்று கூறிக்கொண்டே ஜமீந்தார் நினைத்த ஆசனத்தில் வள்ளார் அமர்ந்தார். ஜமீந்தாருக்குத் திகைப்பும், பயமும் ஏற்பட்டது. அப்படியே பெருமானின் திருவடிகளில் விழுந்துவிட்டார்.



வள்ளலார் பதறிக்கொண்டே அவரை எழுப்பினார். எழுந்த ஜமீந்தார் கண்கள் கலங்கி நீரைப் பொழிந்தன. வள்ளலாரிடம் தம்மை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். சுவாமிகளின் பெருமையை முற்றிலும் அறியாத தாம் அவரைப் பரிசோதனை செய்ய இருந்ததையும், அதற்காகவே இங்கே இரு ஆசனங்கள் போட்டதாயும் கூறினார். மேலும் தாம் நினைத்த ஆசனத்தில் வள்ளலார் அமர்ந்தால் அவரே தம்மை ஆட்கொள்ள வந்த ஈசன், தேவன் என அவரை ஏற்றுக்கொள்ள இருந்ததாயும் கூறினார். இது அனைத்தையும் கண்ட வேலாயுத முதலியார், ஜமீந்தாரிடம் அவர் அழைப்பை ஏற்றுக்கொண்டே பெருமான் வந்து தம்மைப் பரிபூரணமாக ஜமீந்தார் உணரும்படி காட்டிக்கொண்டு விட்டார் என்று பெருமிதம் கொண்டு அதை ஜமீந்தாரிடம் கூறவும் செய்தார். ஜமீந்தாரும் தாம் தம் தவறை உணர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தம் ஞானகுரு இனி வள்ளலார் பெருமான் தான் என்றும், இவரின் பணிகளைச் செய்வதையேத் தம் வாழ்நாளின் லக்ஷியமாய்க் கொள்ளப் போவதாயும் சங்கல்பம் எடுக்கப் போவதாயும் கூறினார். அதைக் கேட்டுக்கொண்ட வேலாயுத முதலியாரும் , வள்ளலாரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். ஆனால் அவர்களுக்கு அங்கே ஜமீனைக் காண வந்ததில் இருந்து ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று ஜமீந்தாரிடம் கூறினார்கள். ஜமீந்தாரும் என்ன சந்தேகம் எனக் கேட்க வேலாயுத முதலியார் ஜமீன் ஆட்கள் ஆடுகள், கோழிகளை நிறையக் கொண்டு போவதைப் பார்த்து எதற்கு எனத் தாங்கள் இருவரும் சந்தேகம் கொண்டதாய்த் தெரிவித்தார்.



அதற்கு ஜமீந்தார் தம்முடைய இரு மனைவியராலும் தமக்குப் பெரும் தொல்லையே, எந்தவிதமான சுகமும் இல்லை எனக்கூறி வருந்த, மேலே கூறும்படி வேலாயுத முதலியார் தூண்ட, ஜமீந்தார் தம் மூத்த மனைவியை பிரம்ம ராக்ஷஸ் பிடித்துக்கொண்டு ஆட்டுவதாயும், இளைய மனைவியை மஹோதரம் பீடித்திருப்பதாயும் கூறி வருந்தியதோடு அல்லாமல் கண்களும் கலங்கினார். அனைத்தையும் மெளனமாய் வள்ளலார் கேட்டுக்கொண்டிருந்தார். ஜமீந்தார் மேற்கொண்டு தம் இரு மனைவியரில் மூத்தவளை இரும்புச் சங்கிலியில் கட்டி வைத்திருப்பதாயும், இளையவள் மற்றோர் அறையில் படுத்த படுக்கையாய் இருப்பதாயும் கூறினார். வேலாயுதமுதலியார் இந்தக் கொடுமையைக் கேட்டதும் மனம் பரிதவித்துப் போனார். மேலே பேசிய ஜமீந்தார் இருவரின் உடல்நலமும் சரியாக வேண்டிக் காளிகோயிலுக்குப் பரிகார பூஜைகள் செய்யவேண்டும் என்று காளிகோயில் பூசாரி கூறினதாகவும் தெரிவித்தார்.



அவ்வளவு நேரமும் அமைதியாய்க் கேட்டுக்கொண்டிருந்த வள்ளல் பெருமானுக்கு இப்போது கோபம் மிகுந்தது. “அப்படி என்றால்?’ என்று கோபமாய்க் கேட்டுவிட்டு ஜமீந்தாரையும் கோபமாய்ப் பார்த்தார். ஜமீந்தாருக்கு விஷயம் சரியாய்ப் புரியாமல் வள்ளலாரிடம், “ காளிக்குப் பலி கொடுக்கவேண்டியே ஆடுகளும், கோழிகளும் செல்வதாகவும், அவற்றைத் தான் ஜமீன் ஆட்கள் கொண்டு போவதாயும் கூறினார். வள்ளலார் மனம் பதறியது. உடல் துடித்தது. மனம் வேதனையில் ஆழ்ந்தது. வேதனை பொறுக்க முடியாமல் கதற ஆரம்பித்தார். “பண்டாரியாரே, மாபெரும் தவறு செய்கிறீர். மன்னிக்க முடியாத தவறு!” என்று கடுமையாகக் கூறினார். ஜமீந்தாருக்கு ஒரு பக்கம் காளி கோயில் வழிபாடு நின்றுவிடுமோ என அச்சம்; அதே சமயம் வள்ளலாரின் வார்த்தைகளை மீற முடியாதே என்ற கவலையும் மீதூற அவரும் அழுதுவிடுவார் போல் இருந்தது. வள்ளலாரிடம் தாம் செய்ய வேண்டியது என்ன என்று கேட்க, பெருமானின் பொறுமை எல்லை கடந்தது.



இந்தப் பலி கொடுக்கும் கொடிய வழக்கம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அறியாமையாலும், மூட நம்பிக்கையாலும் மக்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் கொடுமை உலகை விட்டே செல்ல வேண்டும் என்றும் சங்கல்பங்கள் செய்து ஜமீந்தாரிடம் ஆணையிட்டார். ஜமீந்தாருக்கோ தம் இரு மனைவியரின் உடல்நிலை குறித்துக் கவலை. பரிதாபமாய்ப் பெருமானைப் பார்த்தவண்ணம், “பெருமானே, தாங்கள் சொல்வது சரியே. ஆனாலும் என்னைத் தவறாக நினைக்காதீர். என்னிரு மனைவிகளையும் நான் எவ்வாறு காப்பாற்றுவேன்? எனக்கு வேறு வழி தெரியவில்லையே! தாங்களே இதற்கொரு வழிகாட்டியருள வேண்டும் சுவாமிகளே!” என்று ஜமீந்தார் வேண்டினார். வள்ளலார் தாம் பின்னர் அவர் மனைவிகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதாயும் தற்சமயம் இந்தப் பலியென்னும் பெயரில் நடைபெறப்போகும் உயிர்வதையை நிறுத்தும்படியும் ஆணையிட்டார். சுவாமிகளின் பேச்சில் நம்பிக்கை வரப்பெற்ற ஜமீந்தார் பணிவோடு தாம் அங்கே சென்றதுமே இவை ஆரம்பம் ஆகும் என்பதால் தாம் கோயிலுக்குச் செல்லாமல் நின்றுவிடுவதாய்க் கூற, அப்படியும் பெருமான் மனதில் நிம்மதி வரவில்லை. என்றாலும் ஜமீந்தார் மேலும் மேலும் உறுதியுடன் கூறிச் சத்தியம் செய்யப் பெருமான் அமைதியடைந்து அவர் மனைவியரில் முதல் மனைவியை முதலில் அழைத்துவரச் சொன்னார்.



அவளை அழைத்து வந்தால் ஏதேனும் தொந்திரவு கொடுப்பாளே என ஜமீந்தார் பயப்பட, வள்ளலார் அச்சமில்லாமல் அழைத்து வரச் சொன்னார். வேலாயுத முதலியாரும் வள்ளல் பெருமான் சொன்னபடி செய்யுமாறு அறிவுரை கூற ஜமீந்தாரும் முதல் மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார். அவள் கைகளில் இருந்த விலங்குகளை அகற்றும்படி வள்ளலார் கட்டளையிட அங்கனமே விலங்குகள் அகற்றப்பட்டன. சுவாமிகள் தம் கண்கள் மட்டுமின்றி உடல் முழுதும் கருணை பொங்கி வழிய அவளைப் பார்த்து, “தாயே சுகமா?” என்று ஒரே வார்த்தைதான் பேசினார். அவ்வளவுதான் அவள் ,”சுவாமி, சுவாமி, என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நான் இந்த க்ஷணம் ஓடிவிடுகிறேன்.” என்று துடிதுடித்துக்கொண்டு கூற, அவள் குரலோ ஆணைப் போன்ற கட்டைக்குரலாக இருந்தது. வள்ளல் பெருமான், “ஓடிப் போ, ஓடிப் போ, ஓடிப்போ!” என்று கூற, “போனேன், போனேன், போனேன்!” என்று கர்ணகடூரமான ஓலக்குரலில் கூறிக்கொண்டே அந்த ஓலம் வெகு தூரத்தில் போய்க் கரைந்தே போனது. வள்ளலார் பெரும் கருணை உள்ளத்தோடு அந்த அம்மையாருக்குத் திருநீறு அளித்து அதை நெற்றியில் இட்டுக்கொள்ளும்படி கூறி இனி எந்தத் துன்பமும் அவருக்கு வராது என உறுதியும் கூறினார். அந்த அம்மையாரும் இப்போது சாந்தமாய்க் காணப்பட்டார்.


மட்டற்ற மகிழ்ச்சி அடைந்த ஜமீந்தார் தம் இரண்டாவது மனைவியை அழைத்து வரச் செய்ய அதற்குள் அவள் தானாகவே அங்கே வந்து பெருமான் திருமுன்னர் நின்று வணங்க அவளிடமும் திருநீறு அளித்த பெருமான் அவளை திருநீற்றை இட்டுக்கொள்ளச் செய்து, உடல்நலம் எப்படி இருக்கிறது என விசார்ரிக்க, அவளோ பெருமானின் திவ்யக் கருணையால் தன் உடல் நலமாகவே உள்ளது என்றும் மஹோதரம் முற்றிலும் குணமாகிவிட்டது சென்றும் கூறி பெருமானை வணங்கிச் சென்றாள். பின்னர் பெருமான் பண்டாரியாரிடம் உயிர்ப்பலியைத் தடுக்க வேண்டிய அறிவுரைகளைக் கூறி, கடவுளின் பெயரால் நடைபெறும் இத்தகைய அக்கிரமங்களைத் தடுக்க வேண்டும் என்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னையும், பிதாவுமான ஈசன் தன் குழந்தைகளைத் தனக்கே பலி கொடுக்கச் சொல்லுவானா? என்றும் கேட்டார்.

மேலும் பூசாரிகள் பணத்தாசை பிடித்துப் பித்தலாட்டங்களில் இறங்குவதையும் சுட்டிக்காட்டி, ஆண்டவன் பெயரால் நடைபெறும் இத்தகைய அநியாயங்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்றும் கூறினார். ஜமீந்தாரும் வள்ளலாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தார். அதன் மேல் அங்கிருந்து கிளம்பிய வள்ளலார் வடலூர் தருமச் சாலைக்கு வந்து சேர்ந்தார். அவர் பேரில் வழக்கு ஒன்று தொடுக்கப் பட்டிருந்தது. அதற்காகக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்திற்குப் பெருமான் வரவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

செயலற்றுப் போன கள்வர்கள் தங்கள் செயலுக்கு வருந்தி அடிகளாரிடம் மன்னிப்புக் கேட்டுத் தங்களை விடுவிக்கும்படி இறைஞ்ச, பெருமானும் மனமிரங்கி அவர்களை விடுவித்தார். வண்டியோடு அடிகளைச் சுற்றி வந்து நிலத்தில் விழுந்து வணங்கிய இருவரும் இனி திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு உழைத்துப் பிழைப்பதாக வாக்குக் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் ஓடிய சேவகனும் நடந்ததை எல்லாம் பார்த்துவிட்டு அடிகளின் பெருமையை அறிந்து கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.”



வேலாயுத முதலியார் தொடர்ந்து சென்னையில் இருக்கையிலும் இது போன்றதொரு சம்பவம் நடந்ததாய்க் கூறவே ஆறுமுக முதலியார் அது என்ன எனக் கேட்க, வேலாயுத முதலியார், “அப்போதெல்லாம் அடிகளின் காதில் கடுக்கன் போட்டிருந்தார். ஒரு நாள் தூங்குகையில் அடிகளின் ஒரு காதில் இருந்த கடுக்கனைக் கழற்றினான் கள்வன். அடிகளோ தூங்கவில்லை; ஆனாலும் கள்வனுக்கு வசதியாகத் திரும்பிப் படுத்து மறு காதையும் காட்டவே அவன் இரண்டு கடுக்கன்களையும் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். அதன் பின்னர் சுவாமிகள் கடுக்கனே அணியவில்லை என்று கூறினார். இருவரும் அடிகளின் வாழ்க்கையில் நடந்த இந்தத் திருவிளையாடல்களைக் குறித்து ஒருவருக்கொருவர் பேசிப் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது இருவரும் பேசுவதைக் கேட்ட வண்ணம் அடிகளாரே அங்கு வந்தார். அடிகளார் தம்மிடம் இருந்து திருடிச் சென்றதைத் தாம் பெரிய விஷயமாக நினைக்கவில்லை எனவும், தம்மை ஆண்டவன் அருள் காக்கும் எனவும் கூறினார். ஆனால் மிகவும் கடினமாக உழைத்துச் செல்வம் சேர்க்கும் மக்களிடமிருந்து இந்தக் கள்வர்கள் திருடிச் செல்வதைத் தான் தம்மால் தாங்க முடியவில்லை என்றும் கூறி வருந்தினார். அதை நினைத்தால் தம் உள்ளமும், உடலும் நடுக்குறுகிறது எனவும் கூறினார். அதைக் குறித்து ஒரு பாடலும் பாடினார்.

“இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த

இருப்பெல்லாம் கள்லர்கள் கூடிக்

கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்றெனது

காதிலே விழுந்தபோதெல்லாம்

விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி

வெதுப்பல்போல் வெம்பினேன் எந்தாய்

உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண்

டுளம் நடுக்குற்றான் பலகால்.”



சிலநாட்களில் சிதம்பர தரிசனத்திற்காகத் தில்லை சென்றார் அடிகளார். அங்கே நடராஜ மூர்த்தியின் சந்நிதியில் நின்று மெய்ம்மறந்து மனமுருகினார். ஈசனின் பேரருளை நினைத்து நினைத்து வியந்தார். தம்மை ஆட்கொண்ட விதத்தில் மனம் உருகினார். தம்மை இந்தச் சன்மார்க்க வழியில் செல்லுமாறு பணித்த இறைவனின் திருவிளையாடலை நினைத்து நினைத்து மனம் விம்மிப் பெருமிதமுற்றார். பல சமயங்கள், பல மதங்கள் என்று போராடி, வாதாடிக் களைப்புற்றுப் போர் செய்து ஏதும் அறியாமல் இறந்து வீணாகும் மக்களைத் தடுத்தாட்கொண்டு உண்மையை அறியச் செய்யவேண்டி தமக்கிட்ட பணியை நினைத்து ஆனந்தம் கொண்டார். தம்மைத் தன் பிள்ளை போல் கருதி இறைவன் இட்ட கட்டளையைத் தாம் சிரமேல் தாங்கி நடத்திச் செல்வதாகவும் உறுதி கொண்டார். சன்மார்க்க நெறியை, உண்மைப் பொருளை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய இறைவனின் அருளை வேண்டினார். இந்த நடராஜ மூர்த்தியின் கருணை இல்லாம் தாம் இவ்வாறு அரிய செயல்கள் செய்திருக்க முடியாது என்றுணர்ந்து உள்ளம் உருகி நடராஜ மூர்த்தியைப் போற்றிப் பாடினார்.

“உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்

உயிர்விடுவேன் கணந்தரியேன் உன் ஆணை இதுநீ

என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்

என்ன செய்வேன் எங்குறுவேன் எவருக்குரைப்பேன் எந்தாய்

அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்

அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாதென்றே

இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்

இது தருணம் அருட்சோதி எனக்கு விரைந்தருளே”

என்று பாடினார். அருகே இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்த சிவாசாரியார் ஒருவர், ஆஹா அற்புதமான மனதை மயக்கும் இனிய குரல். தாங்கள் தான் வள்ளல் பெருமான் எனத் தெரிகிறது. தங்கள் அருட்பாக்களைப் படித்திருக்கிறேன். நான்கு திருமுறைதான் தெரியும். இன்றுதான் இந்தத் தில்லை அம்பலத்திலே தங்கள் திருவாயால் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.” என மகிழ்ந்தார். அடிகளாரும் அவரை மரியாதை நிமித்தம் வணங்கினார். அந்த சிவாசாரியார் தமக்கு அருகிலுள்ள துக்குடி ஆடூர் என்னும் கிராமம் என்றும் தம் பெயர் சபாபதி சிவாசாரியார் எனவும் கூறி அறிமுகம் செய்து கொண்டார். தாமே அவரைச் சந்திக்க எண்ணம் கொண்டிருந்ததாய் அடிகளார் தெரிவிக்கவே சிவாசாரியாரும் தம்மைச் சந்திக்க விரும்பிதன் காரணத்தைக் கேட்டார்.


அப்போது அடிகளார் அவர் வேத ஆகமக் கடல் என்பதைத் தாம் அறிந்திருப்பதாய் சிவாசாரியாரின் பெருமையைப் போற்றிவிட்டுத் தம் தருமச் சாலைக்கு அருகே வடற்பெருவெளியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ஒன்றைத் தாம் ஏற்படுத்த வேண்டி ஆண்டவர் திருவருள் எனவும் அதற்கு ஆண்டவன் கட்டளை கிடைத்திருப்பதாயும் கூறினார். சிதம்பரம் எவ்வாறு பூர்வ ஞான சிதம்பரமாக இருக்குமோ அவ்வாறே தம் சத்திய ஞான சபை இருக்கப் போகும் வடலூர் உத்தர ஞான சிதம்பரமாக விளங்கும் எனவும் கூறினார். சத்திய தருமச்சாலை எவ்வாறு மக்களின் பசியைத் தீர்க்கிறதோ அவ்வாறே சத்திய ஞானசபை அருட்பெரும்சோதி, தனிப்பெரும் கருணையான ஈசனின் ஞான அருளைப் பெற்று அடியார்களை உய்விப்பதாகும். ஆகவே அந்தச் சத்திய ஞானசபையைத் தாம் ஏற்படுத்தப் போகும் காலம் சபாபதி சிவாசாரியாரின் சேவை தமக்குப் பயன்படும் எனவும் கூறினார். தாம் போய் சரியான தேதியைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவதாகவும் சிவாசாரியார் அவர்கள் வந்து பணி ஏற்றுத் தம்மைப் பெருமைப் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்