Sunday, December 11, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! ஆறுமுக நாவலர் 1

நாவலர் என அனைவராலும் போற்றிப் பாராட்டப்பட்ட யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் 1822-ஆம் ஆண்டு சைவ வேளாளக் குடும்பத்தில் கந்தர் என்னும் பரம்பரைச் சிவபக்திச் செல்வருக்கும், சிவகாமி அம்மைக்கும் மகனாய்ப் பிறந்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்த இவர் வடமொழியும், தமிழும் படித்தார். இரண்டிலும் நல்ல புலமை பெற்று விளங்கினார். நல்லூரில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் சேர்ந்து ஆங்கிலமும் கற்று அதிலும் புலமை பெற்றார். படிப்பு முடிந்ததும் ஜஃப்னாவில் உள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆங்கிலமும், தமிழும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். கூடவே பள்ளியின் நிறுவனரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கிங் ஜேம்ஸ் பைபிளையும் மற்றக் கிறிஸ்துவ இலக்கியங்களையும் மொழி பெயர்க்கும் வேலையைச் செய்து வந்தார். 1841-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரையிலும் அந்தப் பள்ளியில் வேலை பார்த்ததன் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை அலசி ஆராய்ந்து தெரிந்து கொண்டார். அதிலும் அப்போது கிறிஸ்துவ மிஷனரிகளின் பிரசாரங்களால் மக்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது. மொழிபெயர்ப்புக்காக பெர்சிவல் பாதிரியுடன் சென்னைக்கு வந்து பைபிளை அச்சிட்டுக்கொண்டு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினார்.

வேதம், ஆகமம், புராணங்கள் போன்றவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்ற நாவலர் சைவர்களுக்குத் தங்கள் சமயம் பற்றிய அடிப்படை அறிவே இல்லாமல் இருப்பதையும், சரியானதொரு வழிகாட்டி அமையவில்லை என்பதையும் கண்டார். அதோடு வாத, விவாதங்களிலே பங்கு பெற்றுத் தம் சமயத்தைக் குறித்து ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்கும் இயலாமல் இருப்பதையும் புரிந்து கொண்டார். ஆகவே சைவ சமயத்திற்குத் தொண்டாற்றுவதையே தம் வாழ்நாளின் குறிக்கோளாய்க் கொள்ள நினைத்து வெஸ்லி மிஷன் பள்ளியின் நிறுவனர் அதிகச் சம்பளத்தோடு தந்த வேலையையும் மறுத்துப் பள்ளி ஆசிரியர் வேலையையே உதறி எறிந்தார். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றும் நிச்சயித்துக்கொண்டு தம் குடும்பத்தையும் துறந்து சொத்து சுகங்களையும் துறந்தார். தம் நான்கு சகோதரர்களிடமும் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அன்றிலிருந்து இறுதி வரையிலும் அவருடைய கொள்கைகளில் உறுதியும், உண்மைத்தன்மையும் இருப்பதாய்க் கருதும் நபர்களிடமிருந்து மட்டுமே தேவையான உதவிகளைப் பெற்றார். கோயில்களுக்குச் சென்று தேவார, திருவாசகங்களைப் பாடி மக்கள் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டினார். இவருடைய முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீசுவரன் கோயிலில் நடந்தது. 1847-ஆம் ஆண்டு நடந்த இதைத் தொடர்ந்து ஏழு வருடங்கள் இவ்வாறு சைவ சமயத்தைக் குறித்தும் அதன் சித்தாந்தம் குறித்தும் பேசிச் சொற்பொழிவாற்றி வந்தார். யாழ்ப்பாணத்து சைவ மக்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். பைபிளின் மொழிபெயர்ப்புத் தொடர்ந்து கொண்டிருந்ததால் அதிலுள்ள கேள்விகளுக்கும் சரியான மறுமொழியை இவரால் தர முடிந்தது. சொல்லப் போனால் பைபிளின் மூலம் நடந்து வந்த பிரச்சாரத்திற்கு ஒரு மாற்றாகவே இவருடைய பிரசாரம் அமைந்தது.

1848-ஆம் ஆண்டு பெர்சிவல் எனப்படும் வெஸ்லி பள்ளித் தலைமை ஆசிரியரைப் பிரிந்து தம்முடைய சொந்தப் பள்ளியை நிர்மாணித்தார். வண்ணார்பண்ணையில் ஏற்படுத்தப்பட்ட அந்தப் பள்ளிக்கு சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவரை மத்திய கல்லூரியில் 3 பவுன் சம்பளம் பெற்றுக்கொண்டு ஆசிரியராக இருந்ததையும் தூக்கி எறிந்து முழுநேர சமயப்பணியைத் துவக்கினார். பள்ளிப்பிள்ளைகளுக்குத் தேவையான பாடநூல்கள் அச்சிட யந்திரம்தேவையாக இருந்தது. ஆகவே 1949-ஆம் வருடம் மீண்டும் நல்லூர் சதாசிவம் பிள்ளையுடன் சென்னைக்கு வந்தார். வந்த சமயம் திருவாவடுதுறை ஆதீனத்தில் சமயச் சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார். அங்கேதான் அவருக்கு நாவலர் பட்டமும் வழங்கப்பட்டது. சிலகாலம் இந்தியாவில் சென்னையில் தங்கி சூடாமணி நிகண்டுரையும், செளந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதிப்பித்தார். பின்னர் யாழ்ப்பாணம் திரும்பினார். தமது இல்லத்திலேயே வித்தியா அனுபாலன யந்திரசாலை என்னும் பெயரில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். மாணாக்கர்கள் பயன்பெறும் விதத்தில் பாலபாடம், கொன்றைவேந்தன், ஆத்திசூடி, போன்றவைகளும், சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருமுருகாற்றுப்படையுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். திருத்தொண்டர் புராணத்தை வசன நடையில் எழுதி வெளியிட்டார். இவருடைய வசன நடையைப் புகழ்ந்து ஆசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி இவ்விதம் கூறியுள்ளார்.

“பழைய காலத்தில் தமிழ் வசனம் அபூர்வமாயிருந்தது. அபூர்வமாயிருந்த வசனமும் சங்கச் செய்யுள் நடையைவிட கடினமான நடையில் இருந்தது. இல்லையென்றால், இலக்கண வழுக்கள் நிறைந்த கொச்சைத் தமிழில் ஒரு பக்கம் முழுவதையும் ஒரே வாக்கியத்தினால் நிறைக்கும் அசம்பாவித வசன நடையாயிருந்தது. பிழையில்லாத எளிய தமிழ் வசன நடையை முதன் முதலில் கையாண்டு காட்டி வெற்றி பெரியார் ஸ்ரீ ஆறுமுக நாவலரே ஆவர்.”

மேலும் தமிழில் மறுமலர்ச்சி என்பதே இவராலேயே ஏற்பட்டது என்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.

4 comments:

  1. நாவலரைப் பற்றி எப்பவோ தமிழ் இரண்டாம் தாளுக்காகப் படித்தது. இப்பல்லாம் 'second paper' 'non detail' பாடம் உண்டா தெரியவில்லை.

    ReplyDelete
  2. haahaa! enakkum theriyalai! :)))))

    sent an email from the other id. check it.

    ReplyDelete
  3. நம்ம ஊர் தமிழ்அறிஞர்.

    அவர் பற்றி விரிவாக எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது.

    இவருக்கு யாழ்நல்லூரில் சிலையும் மண்டபமும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

    ReplyDelete
  4. வாங்க மாதேவி, வருகைக்கு நன்றி. நீங்க சொல்லி இருப்பவை குறித்து இணையத்திலும் தகவல்கள் கிட்டின. நன்றிம்மா.

    அவர் பற்றி விரிவாக எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது.//

    இன்னமும் முடியவில்லை.

    ReplyDelete