Wednesday, August 21, 2013

அப்பா 2!

அந்த வீட்டில் இது எழுதப்படாத விதி.  முதலில் ஜெயராமன் தான் சாப்பிட வேண்டும்.  அதன் பின்னர் அவன் இரவுக்குத் தனக்குத் தேவையானவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வான்.  சாதம் மட்டும் இரவு சூடாக வடிக்க வேண்டும்.  ஆகவே மிகுந்தவைகளையே ஜெயராமனின் மனைவி, குழந்தைகள் சாப்பிடலாம். அதோடு வீட்டில் ஊறுகாய் போட்டிருந்தாலோ அல்லது மாவடு போட்டிருந்தாலோ குழம்பு ஜெயராமனுக்கு மட்டும் தான் வைக்க வேண்டும்.  மற்றவர் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டோ, மாவடு ஜலத்தை ஊற்றிக் கொண்டோ சாப்பிடலாம்.  இல்லை எனில் வெறும் ரசம் சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இந்த வீடு ஜெயராமன் சம்பாத்தியத்தில் நடக்கிறது.  அவன் தான் குடும்பத் தலைவன்.  அவனுக்குத் தான் முன்னுரிமை.  மீறி நடந்தால் மனைவி, குழந்தைகள் எனப் பார்க்காமல் வெளியேற்றிவிடுவான்.  இதுவரை சந்திரா அப்படி எத்தனையோ முறை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் பிறந்த வீட்டில் சென்று நிற்கையில் அவள் மனமும், உடலும் கூசும். ஒரு முறை அவள் பெரிய பிள்ளையையும் ஜெயராமன் இப்படி அடித்து விரட்ட அவன் பெரியப்பா வீட்டில் போய்த் தங்கினான்.  அது முதல் ஜெயராமன் அடித்துத் துரத்துவதும், அவர்கள் பெரியப்பா வீட்டில் போய்த் தங்குவதும் வழக்கமாகப் போய்விட்டது.  எதற்கு என்றெல்லாம் இல்லை;  சின்னக் காரணம் கிடைத்தால் போதும்.  இது வரையிலும் சசியைத் தான் துரத்தவில்லை.  பெண் என்ற ஒரே காரணம்.  இதோ இப்போது சாப்பிட அமர்ந்திருக்கிறான். வெண்கலப்பானையில் கரண்டியைப் போட்டு சாதம் எடுக்கையில் அந்தப் பாழாய்ப் போன குழம்புக் கிண்ணம் சத்தப் படுத்திக் காட்டிக் கொடுத்துவிட்டதே! என்ன நடக்கப் போகிறதோ! மெதுவாக அங்கிருந்து வெளியே செல்ல யத்தனித்த சந்திராவின் மேல் சூடாக எதுவோ வந்து விழக் கண்களும், மூக்கும் எரிச்சலாக எரிந்தன.  என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள்ளாக அங்கிருந்த ஒரு கம்பை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்த ஜெயராமன் அவள் தலைப்பின்னலைப் பிடித்துக் கொண்டு கம்பால் அடித்து நொறுக்கினான்.

"அப்படி என்ன, வாய்க்கு ருசியாகச் சாப்பிடணும்!  அதுவும் பொம்பளைக்கு!  ஏண்டி, நீ என்ன வெட்டி முறிக்கிறே இந்தக் குடும்பத்துக்கு!  வடிச்சுக் கொட்டின நேரம் போக மீதம் இருக்கும் நேரம் வெட்டியாத் தானே பொழுதைக் கழிக்கிறே!  அதுக்கு உனக்கு வெறும் சோறு போதாது? வித, விதமாக் குழம்பு, ரசம்னு சாப்பிடக் கேட்குதோ! இது எத்தனை நாளா நடக்கிறது!  எவ்வளவு புளி செலவு பண்ணி இருக்கே?  குழம்புப் பொடி உன் அப்பன் வீட்டுக் காசிலேயே பண்ணினது? சாம்பாரில் போட்டிருக்கும் காய்கள் எங்கிருந்து வந்தது?  என் காசிலே சாப்பிட்டுக் கொண்டு எனக்கா துரோகம் பண்ணறே?  இன்னிக்கு உன்னை ரெண்டிலே ஒண்ணு பார்த்துட்டுத் தாண்டி மறு வேலை!" அடிகள் அதிகமாக விழுந்தன.  எதற்கும் வாயே திறக்கவில்லை சந்திரா. வாயைத் திறந்தால் அடி தான் இன்னும் மோசமாகும்.  சொல்வது எதுவும் அவன் காதில் ஏறப் போவதில்லை.
*********************************************************************************

வந்திருந்த வெளி நோயாளிகளைக் கவனித்து முடித்த கலாவுக்கு அலுப்பாக இருந்தது.  அங்கிருந்த ஒரு அனுபவம் மிக்க நர்சிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவசர கேஸ் என்றால் மட்டுமே தன்னை அழைக்கும்படி சொல்லிவிட்டு அங்கேயே மாடிப் பக்கமாக இருந்த தன்னுடைய வீட்டிற்குச் செல்லப் படியேறினாள்.  மாடி வராந்தாவில் இருந்த கணவனுடைய செருப்புக்கள் அவன் வீட்டிற்கு வந்துவிட்டதை உறுதி செய்தன.  அவள் கணவன் மத்திய அரசு அதிகாரி. ஊருக்கு ஊர் மாறும் வேலை.  ஆகையால் அவள் மட்டும் மாமியார், மாமனார் குழந்தைகளுடன் இங்கே சொந்த வீடு கட்டிக் கொண்டு கீழே மருத்துவமனையும், மேலே வீடுமாக இருந்து வந்தனர்.  அவள் கணவன் அவ்வப்போது விடுமுறையில் வந்து செல்லுவான்.  இப்போது சில மாதங்களாகச் சென்னையிலேயே ஒரு அலுவலகத்திற்கு மாற்றம்.  அங்கேயே நிரந்தரமாகத் தங்கும்படியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இதே அலுவலகம் இல்லை எனினும் வேறு துறையில் இதே பதவிக்கான அலுவலகங்களில் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஊர், ஊராக மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுச் சுற்றியதில் அவனுக்கும் மனம் மிகுந்த அலுப்புடனும், வருத்தத்துடனும் இருக்கிறது.  அதிலும் கலா அவன் காதலித்து மணந்த மனைவி.


இருவரும் ஒரே குலம் தான்.  ஜாதகப் பொருத்தங்களும் பார்த்தார்கள் தான் என்றாலும் கலாவின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை.  ராகவனுக்கோக் கலாவை மிகவும் பிடித்து விட்டது.  ஆகவே தன் பெற்றோர், கலாவின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறிக் கலாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று செய்து கொண்டான்.  இப்போதும் ராகவனுடைய அப்பா, அம்மாவிற்குக் கலாவிடம் நிஷ்டூரம் தான் காட்டத் தெரியும். சேர்ந்து இருக்கிறார்களே தவிரத் தன் பெற்றோர் பற்றி ராகவன் நன்கறிவான்.  ஆனாலும் மருத்துவம் படித்த கலா அதைத் திறமையாகச் சமாளித்து வந்தாள். கூடியவரை என்றோ வரும் ராகவன் காதுகளுக்கு எந்த விஷயமும் போகாமல் பாதுகாத்து வந்தாள்.  இதை எல்லாம் எண்ணிப்பெருமூச்சு விட்டவாறு உள்ளே சென்ற கலாவுக்குத் தன்னைக் கண்டதுமே உள்ளே சென்று கதவைச் சாரத்திக் கொண்ட மாமியாரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

மங்களம்மாள் ஹாலில் தான் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.  கலா உள்ளே நுழைவதைக் கண்டதுமே உள்ளே சென்று இழுத்துப் போர்த்துக் கொண்டாள்.  பத்மநாப ஐயர் மனைவியைப் பார்த்து, "என்ன மஹாராணி வந்துட்டாளா?" என்று நக்கலாகக் கேட்க, பதில் பேசாமல் தலையை அசைத்தாள் மங்களம்.  "நீ பேசாமல் படு, சொல்கிறேன்.  அவளுக்கென்ன, கேஸ், கேஸ் அப்படினு நாக்கூசாமல் சொல்லிக் கொண்டு அங்கே வெறுமனே உட்கார்ந்துட்டுப் பொழுதைக் கழிக்கிறா.  பார்த்துக்கறதெல்லாம் நர்சுங்க.  இங்கே வந்ததும் வேலை செய்ய முடியாதாமா அவளுக்கு?  அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் அவளே செய்ஞ்சுக்கட்டும்.  நீ ஏன் போறே?"  என்றார்.

"இல்லை, ராகவன் வந்திருக்கான்.  அவன் ஏதேனும் நினைச்சுக்கப் போறானே!" என்றாள் மங்களம் மெல்ல.   "அவன் என்ன நினைச்சுக்கறது!  உனக்கு உடம்பு சரியில்லை;  வயசாச்சு; செய்ய முடியலைனா ராகவன் கோவிச்சுக்கப் போறானா என்ன! பேசாமல் படு! காஃபி வருதானு பார்ப்போம். நமக்கில்லைனாலும் ராகவனுக்காக அவள் பண்ணித் தானே ஆகணும்.  இல்லைன்னாலும் அவளுக்குப் போட்டுக்கணுமே!  என்ன தான் செய்யறானு பார்த்துடுவோம்!"

கதவு தட்டப்பட்டுப் பின் திறக்கப் பட்டது. கலா ஒரு தட்டில் இரண்டு காபி தம்ளர்களோடு வந்து அவற்றையும் இன்னொரு தட்டில் தின்பதற்கு ஏதுவாக முறுக்கு, தட்டை வகைகளும் வைத்து விட்டு நகர்ந்தாள்.

"ஏண்டிம்மா, ஒவ்வொண்ணாக் கொண்டு வரக் கூடாதோ! இப்படி ஹோட்டலில் கொடுக்கிறாப்போல எல்லாத்தையும் மொத்தமாக் கொண்டு வைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம்!  இல்லை என்ன அர்த்தம்ங்கறேன்!" மங்களம் நிஷ்டூரமாகக் கேட்க, பத்மநாபன், "அவள் கடமை முடிஞ்சது! ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்துச் செய்ய நாம் என்ன அவள் அப்பா, அம்மாவா? மாமியார், மாமனார் தானே!  அதான் ராகவன் வந்திருக்கானே!  இனி இங்கே தானே இருக்கப் போறான்!  எல்லாத்தையும் பார்த்துப் புரிஞ்சுக்கட்டுமே!" என்றார்.

கலா பதிலே பேசாமல் நகர்ந்தாள்.  குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.  அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் தயார் செய்யணும்.  அவளுக்கு வேலை இருந்தது.  இரவுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துட்டு., ஆறுமணிக்கப்புறமா கீழே போய் நோயாளிகளைப் பார்த்துட்டு வரணும்.  ராகவன் இங்கேயே வந்துட்டானானால் ஒரு சமையல்காரியைப் போட்டுடலாம்னு சொல்லி இருக்கான்.  அதைக் குறித்தும் முடிவு செய்யணும்.  வருகிற சமையல்காரங்க எல்லாம் மங்களத்தம்மாளின் மிரட்டல்களிலும், அதிகாரத்திலும் நிற்காமல், சொல்லிக் கொள்ளாமல் போயிடறாங்க.  இனி வருகிறவளாவது சரியாய் அமையணும்.

கலாவுக்கு ஆயிரம் கவலை இருந்தன. 

2 comments:

  1. ம்ம்ம்ம், கதையின் போக்கு எப்படிப் போகும்னு எனக்கே இப்போச் சொல்ல முடியலை! பார்க்கலாம். :)))))

    ReplyDelete