Thursday, July 3, 2008

காலமிது, காலமிது, மொக்கைகளின் காலமிது!!!

நல்லதுக்கே காலம் இல்லை, எல்லாம் இந்த சிஷ்ய கேடிங்க பண்ணற அடம் தான். ராமாயணம் எழுத ஆரம்பிச்சுட்டேனா? எல்லாம் கட்சி மாறிடுச்சுங்க, ஆனால் மொக்கைக்கு ஆபர் மேலே ஆபர் வந்துட்டே இருக்கே? என்ன செய்யறதுனு யோசிச்சேன்! எல்லாம் மொக்கைக்கே காலமாப் போச்சு, அட, ராமாயணத்துக்குத் தான் பின்னூட்டம் கொடுக்க மாட்டாங்க, சரி, போகட்டும்னா, எல்லாம் விழுந்து, விழுந்து, இந்த அம்பிக்கே, பின்னூட்டம் கொடுக்கிறதைப் பார்த்தால், ஹிஹிஹி, புகை எல்லாம் ஒண்ணும் இல்லை, கொஞ்சமே கொஞ்சம் தீசல் வாசனை தான் வரும்!! அப்படி என்னத்தைப் பெரிசா எழுதறார்? எல்லாம் சோகக் கதை, சொந்தக் கதை தான். அதிகம் வேறே ஒண்ணும் “ஜொள்”ளறதில்லை. ஒருவேளை அம்பி ரொம்பவே “ஜொள்”ளறதினாலேயே எல்லாரும் வராங்களோனு நினைக்க்கிறேன். புதுக்கடை ஆரம்பிச்சதை யார் கிட்டேயும் சொல்லலை, புதுசா வீடே இருக்கு, ஆனால் அது இன்னொருத்தர், பாவம் எனக்குத் , தானமாக் கொடுத்தது.. “தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடுங்கின கதை”யா ஆகிடும், அங்கே போய் மொக்கை போட்டால். அதான் இலவசமே போதும்னு இங்கே வந்துட்டேன். நாமதான் இலவசத்துக்கு அலைவோமே?? இ.கொ. உங்களை இல்லை! எதுக்கோ மூக்கிலே வேர்த்தாப்பலே வந்துடுவீங்களே இதுக்கு மட்டும்! :P

2 நாளா, 2 நாள் என்ன, இப்போ அடிக்கடி தொலைக்காட்சி பார்க்கிறதாலே, சில, படங்களும் பார்க்க முடிஞ்சது. ஹிஹிஹி, வேறே வழி இல்லை, தொலைக்காட்சியைப் பார்த்தாவது கொஞ்சம் மன ஆறுதல் அடையலாமே?? நல்ல படம்னு பார்த்தால், போன வாரம் பார்த்த, “KHOON BHARI MAANG” தான். ஏற்கெனவே தமிழ், ஹிந்தி எல்லா மொழியிலேயும் பார்த்தாச்சு. இருந்தாலும் ரேகாவின் நடிப்புக்காக இந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். சர்வ அனாயாசமான நடிப்பு. Born Actress? ம்ஹூம், அப்புறமா ஜெயபாதுரி சண்டைக்கு வருவாங்க, :P versatile actress??? இதான் சரியா இருக்குமோனு நினைக்கிறேன். “புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?” என்ற பழமொழிக்கும் ஏற்ப இவரின் நடிப்பு இருக்குனு சொன்னால் அதிலே தப்பில்லை. அதிலும் வில்லனாய் வரும் கபூர்??? என்ன கபூர்?? பேர் மறந்துட்டேனே??? ரொம்பவே பிரசித்தம் தான், என்றாலும் மறந்து போச்சு! கபூரிடம் அவரோட காதலை நிஜம்னு நினைச்சுத் தடுமாறுவதும், தன்னோட சிநேகிதியான அனிதா ராஜ்(?) இவர் தான்னு நினைக்கிறேன், தன் கணவரோட ஏற்கெனவே தொடர்பு வச்சிருக்கிறதும் தெரியாத அளவுக்கு ரொம்பவே அப்பாவி!!! முன்னாலே தெரியாது, சரி, கல்யாணத்துக்கு அப்புறமும் தெரியலை! அப்புறமாய் வில்லன் தன்னைத் தண்ணீரில் தள்ளிக் கொலை செய்ய முயற்சிக்கும்போதும், அப்புறமாய் அவனைப் பழி வாங்க நினைக்கும்போதும், பழிவாங்கும் விதமாய் வித, விதமாய் ஆடை, அலங்காரத்தில் வருவதுமாய்த் திரையை ஆக்கிரமிக்கின்றார். ஒரே பாட்டுத் தான். திரும்பத் திரும்ப வருது. முதலில் ராகேஷ் ரோஷனும், ரேகாவும் பாடும் அந்தப் பாட்டு, டூயட்னும் சொல்ல முடியாது, இல்லைனும் சொல்ல முடியாது. பின்னர் ராகேஷ் ரோஷன் இறந்ததும் குழந்தைகளோடு அதே பாட்டுத் திரும்ப வருது! “ஹன்ஸ்தே, ஹன்ஸ்தே”னு ஆரம்பிக்கும் அந்தப் பாட்டின் அர்த்தம் என்னமோ அருமை!!! ஆனால் முதலில் ஒண்ணுமே தெரியாமல் அப்பாவியாக இருந்த ரேகா திடீர்னு இத்தனை கெட்டிக்காரியாக ஆனதின் காரணம் அத்தனை அழுத்தமாய் இல்லை. பழிவாங்கறதுதான் காரணம் என்றாலும், கொஞ்சமாவது முன்னாலே தைரியசாலிதான்னு காட்டி இருக்கவேண்டாமா? திரைப்படங்களில் தான் இப்படி ஒரே இரவில், அல்லது ஒரே பாட்டில் பணத்தை அள்ளிக் குவிக்கவோ, தைரியம் அதிகம் பெறவோ முடியும். அது என்னமோ தெரியலை, திரைப்படத்திலேயும் சரி, தொலைக்காட்சித் தொடர்களிலேயும் சரி, இந்த மாதிரி கணவனுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருக்கிறதைத் தெரிஞ்சுக்காத அப்பாவி நல்லவளாகவே எல்லா ஹீரோயின்களும் வராங்க. அதிலும், ஜெயாவில் வருது பாருங்க, ஒரு அறுவைத் தொடர், “அலை பாயுதே?” நல்ல பேர், ஆனால் சீரியல் மகா, மகா தண்டம்!!! அபத்தக் களஞ்சியம்! கலெக்டர் மனைவியாம், ஆனால் ரொம்பவே அநியாயத்துக்கும் நல்லவளா இருக்காங்க கெளசல்யா! எங்கே இருந்து இப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தாங்கனு புரியலை! கணவன் காதலிக்கும் பெண்ணை வீட்டுக்கே அழைத்து வருவதில் ஆரம்பிச்சு, ஒரே வீட்டிலேயே இருந்தும் தன் கணவனின் குழந்தைதான் அவள் வயித்திலே வளருகின்றது என்றும் புரியலையாம்! அப்புறம் உண்மை தெரிஞ்சதும் ஆட்டோ டிரைவர் கிட்டேப் போய் உதவி கேட்கிறதும், அந்த ஆட்டோக்காரர் மூலமாய் வேலைக்குப் போறதும், என்ன இது? படிக்கலையா? இல்லை படிச்சதுக்கான சான்றிதழ்கள் இல்லையா? இத்தனைக்கும் தங்கையைக் காப்பாற்ற மலேசியாவுக்குத் தனியாப் போய் தங்கையைக் காப்பாற்றிக் கூட்டிட்டு வந்தாங்க. திடீனு தன்னோட விஷயத்திலே இப்படி அபத்தமா ஏன் நடந்துக்கிறாங்க புரியலை! அதிலும் அந்த ஆட்டோ டிரைவர் சொல்லி வச்சாப்பலே ஒவ்வொரு முறையும் இவங்க தெருவிலே இறங்க வேண்டியது தான் வந்துடுவார். அவருக்கு வேறே ஆள் கிடைக்கலையா?? இவங்களுக்கு வேறே ஆட்டோவே கிடைக்காதா? வீட்டுக்கே வந்து பார்த்து இவங்க கணவர் கிட்டேயும் சவால் விடுவார் அந்த ஆட்டோக் காரர். ஆட்டோ டிரைவர் கிட்டே குடும்ப விஷயங்களைப் பேசுகிறதும், அவர் மூலமாக் கிடைச்ச வேலையிலே வீடு, வீடாய்ப் போய் வீட்டு உபயோகப் பொருட்களை விக்கிறதும், தலையிலே அடிச்சுக் கொண்ட வேகத்திலே தலைவலியே வந்துடுச்சு எனக்கு. அப்புறம் அந்த நேரம் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலே உட்காருவதே இல்லைனு சபதமே எடுத்துக் கொண்டுவிட்டேன். பேசாமல் அந்த ஆட்டோக்காரரை அந்த சீரியலை எடுக்கிறவரை மிரட்டறதுக்கு நாமளே அனுப்பலாம்னு முடிவும் பண்ணிட்டேன்.

அடுத்து சிம்ரன் திரை. முதலில் நல்லாவே போயிட்டிருந்தது. தர்ம யுத்தம் கொஞ்சம் சொதப்பல். அது எப்படி குழந்தைக்கான தடுப்பு ஊசி மருந்துகளினால் குழந்தைகள் செத்துப் போவதற்கு விஞ்ஞானிதான் ஒரே காரணம்னு அவரை மட்டும் தேடிப் பிடிச்சுக் கைது பண்றாங்க? லாஜிக்கே புரியலை! அந்த மருந்து தரமானதுனு தரக்கட்டுப்பாடுக்குப் போய் அங்கே சோதனை செய்து பார்க்கலையா? அதுக்கப்புறம்தானே மருந்துக் கம்பெனிகள் அதைத் தயார் செய்திருக்கணும்? பின்னரும் அதை விநியோகஸ்தர்கள் மூலமே விநியோகிக்கணும். அப்போவும் அரசின் மருந்தாளுநர்களின் தரக்கட்டுப்பாடு அதிகாரி அதைப் பார்த்திருக்கணுமே? திடீர்னு மருந்துப் பெட்டிகள் இடம் மாறுவது என்றால் அதை ஏன் யாருமே கவனிக்கலை? என்னதான் எல்லாருமே விஞ்ஞானிக்கு எதிராக வேலை செய்யறாங்கனு வச்சுக் கொண்டாலும், ஒருத்தர் கூடவா அது தப்புனு உணராமல் இருந்திருப்பாங்க? அதுக்கப்புறம் அந்த ஊசி மருந்துகளை உபயோகித்த செவிலியர், மருத்துவர்கள். மருந்துகள் வந்திருக்கிறதென்னமோ அரசாங்க மருந்துக் கிடங்கிலே இருந்துதான். அப்படி இருக்கும்போது அங்கே இருக்கும் அதிகாரிகளையோ, மற்ற ஊழியர்களையோ விசாரணை என்பது பேருக்குக் கூடச் செய்யவில்லை. செவிலியர்களுக்கோ, மருத்துவர்களுக்கோ, மருந்து கையாண்டதோடு சரி, விட்டுடலாம். மத்தவங்க? ஏன் அவங்க யாரையுமே பிடிக்கலை?

விஞ்ஞானியை மட்டும் அதிலும் அவர் ஒருத்தரை மட்டும் குறி வச்சு ஏன் பிடிக்கணும்? இந்தச் சாதாரணச் சந்தேகம் யாருக்குமே வரலை! சிம்ரன், அவர் காதலிக்கும் போலீஸ் ஏ.சி. உள்பட. ஆனால் முதலிலேயே நமக்குப் புரிஞ்சுடுது, ஏ.சி.யின் அப்பாதான் வில்லன், அவர் தான் விஞ்ஞானிக்கு எதிரி, ஆனால் மறைமுக எதிரினு. அதற்கான காரணம் தான் சொதப்பலோ சொதப்பல்! வெறும் பொறாமை தான் காரணமாம். வெற்றிக்கு மேல் வெற்றி பெற்றது தான் காரணமாம். விருதுகள் கிடைச்சது தான் காரணமாம். அதுக்காக விஞ்ஞானியைத் தனிப்பட்ட முறையில் தாக்கி இருந்தாலோ, அவர் பெண்களுக்குத் தீங்கு இழைச்சிருந்தாலோ ஏத்துக்கவோ, மன்னிக்கவோ முடியும். ஆனால் இப்படியா அநியாயமாய்க் குழந்தைகள், அதுவும் பச்சிளங்குழந்தைகள், உயிரோடு விளையாடுறது? இதைப் பார்க்கிற யாரேனும் நிஜமா இப்படிப் பண்ணாம இருக்கணுமேனு கவலை வந்துடுச்சு. என்னவோ போங்க! சினிமாதான் பிதற்றல்னால் தொலைக்காட்சித் தொடர்கள் அதுக்கு மேலே பேத்தல்! இப்போ புதுசா வேறே ஒண்ணு வருது. நான் திரும்பிக் கூடப் பார்க்கிறதில்லைனு முடிவு எடுத்துட்டேன். என்னோட ம.பா. தான் ரொம்பவே ஆர்வத்தோட பார்த்துட்டு இருக்கார். என்னைக் கூப்பிட்டதுக்கு, நான் வரலை, இனிமேல் இந்த மாதிரி சீரியல் பார்க்க வந்தால் என்னை நானே, கிளிப்பச்சைக் கலர் சப்பலாலோ, இல்லை பஞ்சு மிட்டாய்க் கலர் சப்பலாலோ அடிச்சுக்கறேன்னு சொல்லிட்டேன். செருப்புக் கடையிலே போய்ப் பார்த்து இந்தப் பழைய செருப்பை விட்டுட்டு, புதுசை லவட்டிட்டு வரணும் அதுக்கு,!!!!!! என்ன ராமாயணம் எழுதலைனு கேட்காதீங்க! அது தனிக்கதை! வரும், வரும், கொஞ்சம் வேலை இருக்கா? மொக்கைனால் ஆன்லைனிலே போடலாம். இந்த ராமாயணம் மட்டும் கொஞ்சம் தயார் பண்ணிக்க வேண்டி இருக்கு! 2 நாளா ஆன்லைனிலே போட்டேன், ஆனால் எனக்குத் திருப்தியா இல்லை! வரேன், எழுதி வச்சுட்டு! வர்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆஆஆஆ????????

3 comments:

  1. கட்டாயம் இந்த மொக்கைக்குப் பதில் போட்டே ஆகணும்.:))
    கீதா கீதா கீதா, சீரியல் பக்கம் போவாதீங்க. மண்டை குடைச்சல், அப்புறம் காய்ச்சல் எல்லாம் வரும். டிஸ்கவரி ட்ராவல் அண்ட் லிவிங் பாருங்க. இல்லாட்ட கண்ணை மூடிட்டு ஓம் சொல்லுங்க. ஆனா சீரியல் மட்டும் வேண்டாம்:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))0

    ReplyDelete
  2. தலைவியின் சேவை எங்களுக்கு தேவை :-))

    ReplyDelete
  3. வாங்க வல்லி, சீரியல் பக்கம் எப்போவோ போறதுக்கே இந்தக் குடைச்சல்! தினம் பார்த்தால் அவ்வளவு தான்! அதெல்லாம் போறதில்லை, பயப்படாதீங்க! :))))) எப்போவோ ஒரு வாட்டி போவேன், அதுக்கே இங்கே அலறுவார், உனக்குத் தான் தனியா கம்ப்யூட்டர் இருக்கேனு! என்னத்தைச் சொல்றது?? :)))))))

    @கோபிநாத், வாங்க, வாங்க, சிஷ்யகேடிங்க தொந்தரவு தாங்க முடியலை!

    ReplyDelete