பேருந்திலேதான் போகணும்னு அவர் அடம் பிடிச்சு, ஏறியாச்சு. அது ஆவடியிலே இருந்து வர பேருந்து வேறே. நான் ஒரு பக்கமா ஏறிட்டேன். அவர் வேறே பக்கமா ஏறி இருக்கார். நானோ கையிலே எதுவுமே வச்சுக்கலை, ஒரு கை துடைக்கும் துண்டைத் தவிர. என்னோட இன்ஹேலர் உள்பட அவர் கையிலே இருக்கும் பையிலே இருந்தது. கூட்டத்திலே எங்கே இருக்கார், ஏறினாரா தெரியலை. நான் ஏறி உட்கார்ந்துக்கவும் இடம் கிடைச்சு உட்கார்ந்துட்டேன். கையிலே பைசா கிடையாதுனா கிடையாது. கண்டக்டர் என்னமோ என்னைப் பார்த்தும் டிக்கெட் கேட்கலை. போயிட்டார். பக்கத்திலே இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்துட்டு என்னை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. நான் பின்னாலே டிக்கெட் எடுக்கிறாங்கனு அவங்க கேட்காமலேயே விளக்கமும் கொடுத்தாச்சு. ஆனால் அவர் எடுத்தாரா இல்லையானு தெரியலை.
எங்கே இறங்கணும்?? கல்யாணச் சத்திரம் மெயின் ரோடிலேயே இருக்குனு சொன்னாங்க. மெயின் ரோடிலே மூணு சத்திரம் இருக்கே. சத்திரம் பேர் கூடப் பார்த்து வச்சுக்கலையே! உத்தேசமா இதுவாய் இருக்குமோ?? இறங்கலாமானு யோசிச்சுட்டு, முன்னால் இருந்தவங்க கிட்டே கொஞ்சம் நகருங்க, நான் இறங்கணும்னு சொல்லிட்டே எழுந்தால் பின்னாலே இருந்து அவர் குரல், இந்த ஸ்டாப் இல்லை, அடுத்ததுனு வருது. அப்பாடா! பெருமூச்சு விட்டேன். இல்லாட்டி ஜீவி சார் எழுதி இருந்த மாதிரிக் கணவனைத் தொலைத்த காரிகையா இல்லாம, அவர் மனைவியைத் தொலைத்த காரிகன்?? நல்லா இல்லையே, கணவன்னே வச்சுக்கலாமே. கணவனாக என்னைத் தேடிட்டு இருந்திருப்பார். ஆனாலும் அவர் கிட்டே எல்லாப்பணமும் இருந்ததே. நான் தான் பைசா இல்லாமல், என்ன பண்ணறதுனு முழிச்சுட்டு இருந்திருப்பேன்.
அப்பாடி, நம்ம கதைக்கு வருவோமே. முருகன் இட்லிக் கடைக்கு முன்னாலே இறக்கி விட்டுட்டாங்க. இதான் பனகல் பார்க், பாண்டி பஜார் எல்லாம்னு சொல்லி. சரி, கொஞ்ச தூரம் தானே நடக்கலாம்னு நடக்க ஆரம்பிச்சா நடக்கவே முடியாமல் நெரிசல் தாங்கலை. மேலே இடிக்கிறாப்போல ஆட்டோ, கார், சைக்கிள், ட்ரக், இன்னும் என்ன என்னமோ வண்டி எல்லாம் போகுது. வேறே வழியே இல்லை. செர்விஸ் லைன் அது. கீழே போகும் வண்டிங்க எல்லாம் போயே ஆகணும். நடைபாதைக்கும், சாலைக்கும் (சாலை???) நடுவே பெரிய பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம் தோண்டி வச்சிருந்தாங்க. எதுக்குனு புரியலை?? யாருக்கும் சொல்லவும் தெரியலை. ஒரு இடத்தில் அவர் பள்ளி நினைப்பில் பச்சைக் குதிரை தாண்டி அந்தப் பக்கம் போயிட, எனக்குத் தாண்ட முடியலை. விழுந்துட்டேன்னா என்ன பண்ணறதுனு பயம்! அப்புறமா ஒரு தூணைப் பிடிச்சுண்டு தாண்டப் போனா அவர் ஒரே அலறல். மின் கம்பம், வயர் எல்லாம் தொங்குது, தொடாதேனு.
பயத்துடன் தாண்டவே இல்லை. அப்பாடியோ, அம்பத்தூரே சொர்க்கம் போலிருக்கேனு நினைச்சேன். எந்த வயர் எங்கே தொங்குதுனு புரியும், எந்தப் பள்ளம் புதுசுனும் புரியுமே! பழைய பள்ளம் ஆழமா, புதுசு ஆழமானும் தெரியும் இல்லையா? மெல்ல மெல்ல ஒரு வழியா பனகல் பார்க் பகுதிக்கு வந்தால், ஒரே பெட்ரோல் நாற்றம். வரிசையாக வண்டிகள், வண்டிகள், வண்டிகள். வாய், மூக்கு எல்லாத்தையும் மூடிட்டு அதுக்கு ஊடாகப் புகுந்து போய் அந்தப் பக்கம் போனோம். ஏண்டா வந்தோம்னு ஆயிடும். மெதுவாய் நடைபாதைக் கடைகளைத் தாண்டிக் கொண்டு, நல்லிக்குப் போனோம். அதுக்குள்ளே மணி 12-15 ஆகி இருந்தது.
நேரே புடைவையில் நான் போகவேண்டிய செக்ஷனுக்குப் போனேன். ஏற்கெனவே ஒப்பன் டெண்டரில் கொடேஷன் கொடுத்துட்டேன். நல்லவேளையாக் கொடுத்த கொடேஷனைவிடக் குறைச்சலாவே புடைவைகள் கிடைத்தன. :P (கொஞ்சம் புத்திசாலித் தனமாய் யோசிச்சுக் கூடுதல் விலையை வச்சுக் கொடேஷன் கொடுத்துட்டேன்.)
புடைவைகளைப் பார்த்தோம். வழக்கம்போல் எனக்கு ஒரு கலர் பிடிக்க, அவருக்கு பச்சை தவிர வேறே கலர் பிடிக்கவே இல்லை. பச்சையிலேயே கொஞ்சம் வெளுத்த பச்சையில் ஒரு புடைவையும்,
செங்கல் பொடிக் கலரில் இன்னொரு புடைவையும் எடுத்தோம். மணி 12-20 ஆகிவிட்டது. மாடியில் தான் பாண்ட் செக்ஷன் என்று சொல்ல மாடிக்கு லிஃப்டுக்கு நின்னால் வரவே இல்லை. படிகள் ஏறினால், போறவங்க, வரவங்க எல்லாம் என்னைப் பார்த்து ஏங்க, இப்படி சிரமப் பட்டு மாடி ஏறணுமா? லிஃப்டில் மெதுவா வரக் கூடாதுனு கேட்க, வெட்கம் அடைந்த நான் கொஞ்சம் சுறுசுறுப்பாயும் வேகமாயும் நடக்க முயலக் கால் ஒத்துழைக்காமல் இழுக்க, ஒருவழியாய் மாடி ஏறி, மறுபடி லிஃப்டில் கீழிறங்கி, ஏறி, அப்பாடி தலை சுத்துதா? எங்களுக்கும் தான். ஒரு வழியா பாண்ட் செக்ஷன் போனால் எடுத்துப் போட ஆளே இல்லை. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு ஆளைக் கூப்பிட்டுக் காட்டச் சொல்லிக் காட்டனில் ஒரு பாண்ட் எடுத்துக் கொண்டு பணம் கட்டிட்டுக் கீழே வந்து அப்பாடா, இந்த வருஷம் தீபாவளி பர்சேஸ் முடிஞ்சதுனு பெருமூச்சு விட்டோம். அங்கே இருந்து பாண்டி பஜார் காதிக்குப் போய் வேஷ்டிகள் எடுத்துக் கொண்டு, கீதா கஃபேயில் காஃபி சாப்பிட்டுவிட்டுப் பொடி நடையாய் நாயர் ரோடு வந்து அம்பத்தூர் பேருந்தைப் பிடிச்சு வந்து சேர்ந்தோம். இந்த வருஷம் தீபாவளிக்கு பச்சைக் கலர் ஜிங்குச்சா! சிவப்புக் கலர் ஜிங்குச்சா! ம்ம்ம்ம்ம்., ஒரு காலத்தில் தீபாவளிக்குனு ஒரு நாள் செலவு செய்ஞ்சு போய் எங்க வீட்டு நாய்க்குட்டியிலே இருந்து, எல்லாருக்கும் துணி எடுப்போம். நாங்க எப்போடா திரும்பி வருவோம்னு எல்லாரும் காத்திருப்பாங்க, பார்க்கிறதுக்கு.இப்போ எங்க இரண்டு பேருக்கும் எடுக்கவே இத்தனை கஷ்டமாய் இருக்கு.

