Thursday, October 1, 2009

பச்சைக்கலரு ஜிங்குச்சா! சிவப்புக் கலரு ஜிங்குச்சா!

இந்தப் பேருந்துப் பயணம் இருக்குப் பாருங்க, அதுவும் தருமமிகு சென்னைப் பேருந்துகளில் பயணம். எனக்கு எப்போவுமே அலர்ஜிதான். ஆனால் நாம என்ன அம்பானி வம்சமா?? (இப்போல்லாம் டாடா, பிர்லா இல்லை போலிருக்கே!) ஏறும்போது இங்கே பேருந்து நிலையம்கறதாலே பரவாயில்லை, ஏறி ஏதோ உட்காரவும் இடம் கிடைச்சுடும். சில சமயம் எனக்கு ஒரு இடமும், அவருக்கு ஒரு இடமும் கிடைக்கும் பாருங்க. அப்போத் தான் கொஞ்சம் பிரச்னையா இருக்கும். எந்த நிறுத்தத்துக்குச் சீட்டு வாங்கி இருக்கார், எங்கே இறங்கப் போறார்னு சில சமயம் புரியாது. அதுவும் நான் கையிலே கைப்பை வைச்சுட்டு வந்தேன்னாலே அவருக்கு அப்படியே என்னனு தெரியாமக் கோபம் வரும். அந்தக் கைப்பையைக்கண்டாலே பிடிக்காது. இதை ஏன் எடுத்துட்டு வரேனு சொல்லுவார். அதனால் சில சமயம் கையை வீசிட்டு வந்துடுவேன். அப்படித் தான் ஒரு சமயம் சொந்தக்காரங்க கல்யாணம் , பல்லாவரத்திலே. நல்லவேளையா கூடுவாஞ்சேரியிலே வைக்கலை.

பேருந்திலேதான் போகணும்னு அவர் அடம் பிடிச்சு, ஏறியாச்சு. அது ஆவடியிலே இருந்து வர பேருந்து வேறே. நான் ஒரு பக்கமா ஏறிட்டேன். அவர் வேறே பக்கமா ஏறி இருக்கார். நானோ கையிலே எதுவுமே வச்சுக்கலை, ஒரு கை துடைக்கும் துண்டைத் தவிர. என்னோட இன்ஹேலர் உள்பட அவர் கையிலே இருக்கும் பையிலே இருந்தது. கூட்டத்திலே எங்கே இருக்கார், ஏறினாரா தெரியலை. நான் ஏறி உட்கார்ந்துக்கவும் இடம் கிடைச்சு உட்கார்ந்துட்டேன். கையிலே பைசா கிடையாதுனா கிடையாது. கண்டக்டர் என்னமோ என்னைப் பார்த்தும் டிக்கெட் கேட்கலை. போயிட்டார். பக்கத்திலே இருக்கிறவங்க எல்லாம் டிக்கெட் எடுத்துட்டு என்னை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. நான் பின்னாலே டிக்கெட் எடுக்கிறாங்கனு அவங்க கேட்காமலேயே விளக்கமும் கொடுத்தாச்சு. ஆனால் அவர் எடுத்தாரா இல்லையானு தெரியலை.

எங்கே இறங்கணும்?? கல்யாணச் சத்திரம் மெயின் ரோடிலேயே இருக்குனு சொன்னாங்க. மெயின் ரோடிலே மூணு சத்திரம் இருக்கே. சத்திரம் பேர் கூடப் பார்த்து வச்சுக்கலையே! உத்தேசமா இதுவாய் இருக்குமோ?? இறங்கலாமானு யோசிச்சுட்டு, முன்னால் இருந்தவங்க கிட்டே கொஞ்சம் நகருங்க, நான் இறங்கணும்னு சொல்லிட்டே எழுந்தால் பின்னாலே இருந்து அவர் குரல், இந்த ஸ்டாப் இல்லை, அடுத்ததுனு வருது. அப்பாடா! பெருமூச்சு விட்டேன். இல்லாட்டி ஜீவி சார் எழுதி இருந்த மாதிரிக் கணவனைத் தொலைத்த காரிகையா இல்லாம, அவர் மனைவியைத் தொலைத்த காரிகன்?? நல்லா இல்லையே, கணவன்னே வச்சுக்கலாமே. கணவனாக என்னைத் தேடிட்டு இருந்திருப்பார். ஆனாலும் அவர் கிட்டே எல்லாப்பணமும் இருந்ததே. நான் தான் பைசா இல்லாமல், என்ன பண்ணறதுனு முழிச்சுட்டு இருந்திருப்பேன்.

அப்பாடி, நம்ம கதைக்கு வருவோமே. முருகன் இட்லிக் கடைக்கு முன்னாலே இறக்கி விட்டுட்டாங்க. இதான் பனகல் பார்க், பாண்டி பஜார் எல்லாம்னு சொல்லி. சரி, கொஞ்ச தூரம் தானே நடக்கலாம்னு நடக்க ஆரம்பிச்சா நடக்கவே முடியாமல் நெரிசல் தாங்கலை. மேலே இடிக்கிறாப்போல ஆட்டோ, கார், சைக்கிள், ட்ரக், இன்னும் என்ன என்னமோ வண்டி எல்லாம் போகுது. வேறே வழியே இல்லை. செர்விஸ் லைன் அது. கீழே போகும் வண்டிங்க எல்லாம் போயே ஆகணும். நடைபாதைக்கும், சாலைக்கும் (சாலை???) நடுவே பெரிய பள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளம் தோண்டி வச்சிருந்தாங்க. எதுக்குனு புரியலை?? யாருக்கும் சொல்லவும் தெரியலை. ஒரு இடத்தில் அவர் பள்ளி நினைப்பில் பச்சைக் குதிரை தாண்டி அந்தப் பக்கம் போயிட, எனக்குத் தாண்ட முடியலை. விழுந்துட்டேன்னா என்ன பண்ணறதுனு பயம்! அப்புறமா ஒரு தூணைப் பிடிச்சுண்டு தாண்டப் போனா அவர் ஒரே அலறல். மின் கம்பம், வயர் எல்லாம் தொங்குது, தொடாதேனு.

பயத்துடன் தாண்டவே இல்லை. அப்பாடியோ, அம்பத்தூரே சொர்க்கம் போலிருக்கேனு நினைச்சேன். எந்த வயர் எங்கே தொங்குதுனு புரியும், எந்தப் பள்ளம் புதுசுனும் புரியுமே! பழைய பள்ளம் ஆழமா, புதுசு ஆழமானும் தெரியும் இல்லையா? மெல்ல மெல்ல ஒரு வழியா பனகல் பார்க் பகுதிக்கு வந்தால், ஒரே பெட்ரோல் நாற்றம். வரிசையாக வண்டிகள், வண்டிகள், வண்டிகள். வாய், மூக்கு எல்லாத்தையும் மூடிட்டு அதுக்கு ஊடாகப் புகுந்து போய் அந்தப் பக்கம் போனோம். ஏண்டா வந்தோம்னு ஆயிடும். மெதுவாய் நடைபாதைக் கடைகளைத் தாண்டிக் கொண்டு, நல்லிக்குப் போனோம். அதுக்குள்ளே மணி 12-15 ஆகி இருந்தது.

நேரே புடைவையில் நான் போகவேண்டிய செக்ஷனுக்குப் போனேன். ஏற்கெனவே ஒப்பன் டெண்டரில் கொடேஷன் கொடுத்துட்டேன். நல்லவேளையாக் கொடுத்த கொடேஷனைவிடக் குறைச்சலாவே புடைவைகள் கிடைத்தன. :P (கொஞ்சம் புத்திசாலித் தனமாய் யோசிச்சுக் கூடுதல் விலையை வச்சுக் கொடேஷன் கொடுத்துட்டேன்.) புடைவைகளைப் பார்த்தோம். வழக்கம்போல் எனக்கு ஒரு கலர் பிடிக்க, அவருக்கு பச்சை தவிர வேறே கலர் பிடிக்கவே இல்லை. பச்சையிலேயே கொஞ்சம் வெளுத்த பச்சையில் ஒரு புடைவையும், செங்கல் பொடிக் கலரில் இன்னொரு புடைவையும் எடுத்தோம். மணி 12-20 ஆகிவிட்டது. மாடியில் தான் பாண்ட் செக்ஷன் என்று சொல்ல மாடிக்கு லிஃப்டுக்கு நின்னால் வரவே இல்லை. படிகள் ஏறினால், போறவங்க, வரவங்க எல்லாம் என்னைப் பார்த்து ஏங்க, இப்படி சிரமப் பட்டு மாடி ஏறணுமா? லிஃப்டில் மெதுவா வரக் கூடாதுனு கேட்க, வெட்கம் அடைந்த நான் கொஞ்சம் சுறுசுறுப்பாயும் வேகமாயும் நடக்க முயலக் கால் ஒத்துழைக்காமல் இழுக்க, ஒருவழியாய் மாடி ஏறி, மறுபடி லிஃப்டில் கீழிறங்கி, ஏறி, அப்பாடி தலை சுத்துதா? எங்களுக்கும் தான். ஒரு வழியா பாண்ட் செக்ஷன் போனால் எடுத்துப் போட ஆளே இல்லை. கெஞ்சிக் கூத்தாடி, ஒரு ஆளைக் கூப்பிட்டுக் காட்டச் சொல்லிக் காட்டனில் ஒரு பாண்ட் எடுத்துக் கொண்டு பணம் கட்டிட்டுக் கீழே வந்து அப்பாடா, இந்த வருஷம் தீபாவளி பர்சேஸ் முடிஞ்சதுனு பெருமூச்சு விட்டோம்.

அங்கே இருந்து பாண்டி பஜார் காதிக்குப் போய் வேஷ்டிகள் எடுத்துக் கொண்டு, கீதா கஃபேயில் காஃபி சாப்பிட்டுவிட்டுப் பொடி நடையாய் நாயர் ரோடு வந்து அம்பத்தூர் பேருந்தைப் பிடிச்சு வந்து சேர்ந்தோம். இந்த வருஷம் தீபாவளிக்கு பச்சைக் கலர் ஜிங்குச்சா! சிவப்புக் கலர் ஜிங்குச்சா! ம்ம்ம்ம்ம்., ஒரு காலத்தில் தீபாவளிக்குனு ஒரு நாள் செலவு செய்ஞ்சு போய் எங்க வீட்டு நாய்க்குட்டியிலே இருந்து, எல்லாருக்கும் துணி எடுப்போம். நாங்க எப்போடா திரும்பி வருவோம்னு எல்லாரும் காத்திருப்பாங்க, பார்க்கிறதுக்கு.இப்போ எங்க இரண்டு பேருக்கும் எடுக்கவே இத்தனை கஷ்டமாய் இருக்கு.

பச்சைக்கலரு ஜிங்குச்சா! மஞ்சக் கலரு ஜிங்குச்சா!


வழக்கம் போல் இந்த வருஷமும் தீபாவளிக்குத் துணி எடுக்க தி.நகருக்கே போகணும்னு முடிவு பண்ணியாச்சு. என்னது??? ஏக மனதாவா? அது நம்ம வீட்டிலே கிடையாதுங்க. முடிவெல்லாம் நம்ம ரங்ஸ் எடுப்பார். நாம பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டுவோம். எனக்கு என்னமோ தருமமிகு சென்னைக்குப் போய் ரத்தன் பஜாரில் "ஹாண்ட்லூம் ஹவுஸ்" போய் அங்கே எடுத்துக்கணும்னு ஒரு விபரீத ஆசை வந்தது போன வருஷமே. போன வருஷம் அந்த ஆசை வந்ததுமே கை தூக்க முடியாமல் போய்க் கைக் கட்டுக் கட்டிக்கவே, நம்ம ரங்கனாருக்குக் கேட்கவா வேணும்? இதான் சாக்குனு அம்பத்தூரிலேயே எடுக்கலாம்னு சொல்லிட்டார்.

ஆனால் பாருங்க, அதுவும் போக முடியாம ஏதோ இடைஞ்சல். என்னனு நினைவிலே இல்லை. அதோட அடிக்கடி ஆர்த்தோ தரிசனம், பிசியோதெரபிஸ்ட் பயமுறுத்தல், (அது தனிக்கதை, அப்புறமா வரேன்) அப்படினு வேறே இருந்ததா? இருக்கிற புடவையிலே கட்டாத ஒண்ணைக் கட்டிக்கலாம்னு பேசாம(அவர் கிட்டே பேசிட்டுத் தான்) இருந்துட்டேன். ஆனால் பாருங்க, பாசத்தில் சிவாஜியையும் மிஞ்சும் என்னோட அண்ணனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வர,ஹிஹிஹி, ஒரு ஓசிப் புடைவை கிடைச்சு, போன வருஷ தீபாவளிக்குப் பிறந்தவீட்டுப் புடைவையோட கொண்டாடியாச்சு. இந்த வருஷமும் வாங்கித் தாங்கனு கேட்கமுடியுமா?? ஹிஹிஹி, தப்பாய் நினைப்பாங்க இல்லை???

போகணும்னு முடிவு பண்ணியாச்சோ இல்லையோ, உடனேயே sealed tender வேணும்னு ரங்கு சொல்ல, open tender தான் கொடுப்பேன்னு நான் சொல்ல, எப்படியோ தொலை, சொன்னதே கேட்காத இது ஒரு ஜென்மம்னு அவர் மனசுக்குள்ளே நினைக்க, நான் வழக்கம்போல் எதையும் கண்டுக்காமல் பட்ஜெட் போட ஆரம்பிச்சேன். ஸ்கூல்லே படிக்கிறச்சேயே கணக்கு டீச்சருக்கும் எனக்கும் ஒத்துக்காது. இப்படி ஒரு கணக்காளரைக் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா அவங்களைக் கொஞ்சம் காக்காயோ, குருவியோ பிடிச்சிருக்கலாம். நான் போடற கணக்குக்கும், கடைக்குப் போனால் வர பில்லுக்கும், அதுக்கு அப்புறமா நான் வாங்கிக் கட்டிக்கிற கணக்குக்கும் அளவே சொல்ல முடியாது. என்றாலும் நானும் தைரியமாய்க் கணக்குப் போட ஆரம்பிச்சேன். இந்த வருஷம் அதிசயமா ரங்கு பாண்ட் தைச்சுக்கப் போறேன்னு வேறே அறிவிப்பு விட்டிருந்தார். அதுக்கு எப்படியும் ஆயிரம் ரூபாயாவது வேண்டும். என்ன புடைவை? எத்தனை ரூபாய்? எத்தனை புடைவை? மில்லியன் டாலர் கேள்வி? எத்தனை புடைவைனு கூடச் சொல்லிடலாம். மூன்றுனு சொல்லிட்டு இரண்டு எடுக்கலாம். ரெண்டுனு சொல்லிட்டு ஒரே புடைவையோட திருப்தி ஆயிடலாம். ஆனால் எத்தனை ரூபாய் இருக்கே! அதுதான் எகிறும். என்னமோ நான் தான் நெசவு போடும்போது கிட்டே இருந்து நூல் வாங்கிக் கொடுத்து, நெசவாளர் கிட்டே இருந்து புடைவையையும் வாங்கிக்கறேன்னு இவரோட அபிப்பிராயம். பனிரண்டு வயசிலே இருந்து புடைவை கட்டிக்கிறேன்னு சொல்லறே? இது தெரியலையே? அப்படினு ஒரு கிண்டல், நக்கல். எல்லாம் நேரம்.

ஒரு வழியாப் பட்ஜெட் போட்டேன். கூடவே பாதுகாப்புக்காக என்னோட பர்ஸிலே இருந்த பணத்தையும் பர்ஸோட எடுத்து வச்சுண்டேன். அவரையும் எதுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கூடவே வச்சுக்கச் சொன்னேன். அப்புறமாக் கடையிலே போய் ரெண்டு பேரும் ஜல்லிக்கட்டு மாடுங்க மாதிரி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சீறவேண்டாம் பாருங்க! அதுக்குத் தான். எல்லாம் முடிஞ்சது. அப்புறமா சாப்பிட்டுட்டுப் போகறதா? வந்து சாப்பிடறதானு பிரச்னை. கிளம்பறது தான் பெரிசா இருக்குமே தவிர, கடைக்குள்ளே போனால் மிஞ்சினால் அரை மணி நேரம் தான் செலக்ஷன். கடைக்காரங்க பில் போட்டு பாக்கிங் செய்து தரத் தான் நேரம் ஆகும்.


சாப்பிட்டுட்டே போகலாம்னு ஏகமனதாய் முடிவு பண்ணிச் சாப்பிட்டுட்டு, ரெயிலில் போகணும்னு குழந்தை மாதிரி நான் அழுதுட்டே வர, அவர் என்னை விடாப்பிடியாய்ப் பேருந்திலே கூட்டிப் போனார். நல்லவேளையாய் தி.நகருக்கு மூன்று பேருந்துகள் நின்னுட்டு இருக்கக் கூட்டம் இல்லாததாய்ப் பார்த்து உட்கார்ந்தோம். நல்லி கடைக்குத்தானே போகப் போறோம். கடை வாசலுக்குக் கொஞ்சம் முன்னாலே இறங்கலாம்னு நினைச்சப்போத் தான் தி.நகரில் வழியை எல்லாம் மாத்தி இருக்காங்களேனு நினைப்பு வந்தது. எங்கே இறங்கறதுனு யோசிக்கிறதுக்குள்ளே கண்டக்டர் விவேக்குக்கும் முன்னாடி உஸ்மான் ரோடு ஆரம்பத்திலே இறங்கச் சொல்லிட்டார்.

புடைவை எடுத்தது பத்தித் தனியா வரும் பாருங்க!

Monday, September 21, 2009

முப்பெரும் தேவியர் சந்திப்பு!

நவராத்திரினாவே அது பெண்களுக்கானது, அதுவும் மூன்று தேவியர்க்கானதுனு எல்லாரும் அறிவார்கள். அந்த மூன்று தேவிகளுமே நேரில் சந்தித்தனர். என்ன ஆச்சரியமா இருக்கா?? பதிவுலகப் பிதாமஹியும், அதுக்கப்புறமாய்ப் பதிவுலகுக்கு வந்த இரண்டு பேரும் இன்று ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டனர். நேற்று மதியம் போல் பிதாமஹியிடமிருந்து தலைவிக்கு அழைப்பு. நாளைக்கு வரோம், அப்படினு. வல்லி? னு கேட்டப்போ, அவங்களையும் பிக் அப் பண்ணிக் கொண்டே வரோம்னு சொன்னாங்க. இன்னிக்குக் காலம்பர வல்லி கூப்பிட்டு உறுதியும் செய்தாங்க. 12 மணி சுமாருக்கு அழைப்பு வந்தது. இந்த இடத்திலே இருக்கோம், எப்படி வருதுனு கேட்டாங்க. அப்புறமா வழி சொல்லி வாசலில் காத்திருந்தோம்.

பிதாமஹிக்குப் பிடிக்குமேனு மசால் வடை பண்ணி வச்சா, அவங்க தொடவே இல்லை! :P சாப்பிட்டுட்டு வந்துட்டோம்னு சொல்லிட்டுப் பேருக்குக் கொறிச்சாங்க. கோபால் நல்ல மனுஷன், ஓரளவு கொடுத்ததை வேண்டாம்னு சாப்பிட்டார். வல்லி தான் ஸ்வீட் வேண்டாம்னு மத்ததைச் சாப்பிட்டாங்க. எல்லாம் படங்களோட வரும் பாருங்க. எல்லாரும் அவங்க அவங்க போன இடங்கள் பத்தி அலசி ஆராய்ந்தோம். இதிலே நம்ம அனுபவங்களைச் சொன்னதும் எல்லாரும் ஆடிப் போயிட்டாங்கல்ல! நமக்குத் தான் ஸ்பெஷலா அனுபவங்கள் ஏற்படுமே. அவங்க அனுபவங்களைச் சொல்ல இடமே வைக்காமல் நாமளே எல்லாத்தையும் சொல்லிக்கொண்டோம் என்பது இங்கே கவனிக்கத் தக்கது. :P

நேரம் போனதே நிஜமாவே தெரியலை. ஏதோ ஏற்கெனவே பார்த்துப் பழகினவங்களைத் திரும்பப் பார்க்கிறாப்போல் இருந்ததே தவிர, புதுசா எதுவும் தெரியலை. ஜிகே பத்தி, ஜெயஸ்ரீ பத்தி, ஜெயஸ்ரீ வீடு நியூசியில் எங்கே இருக்குனு, ஜெயஸ்ரீ என்னை நியூசிக்கு வரச் சொன்னதுனு எல்லாத்தையும் பேசியாச்சு. அப்படியும் இன்னும் விஷயம் இருக்கேனு இருந்தது. இப்போதைக்குப் பதிவுலகில் நாங்க தான் முப்பெரும் தேவியர்னு எங்களுக்கு நானே பட்டம் கொடுத்துட்டேன். பின்னே வேறே யாரு கொடுக்கப் போறாங்க?? இதிலே யார் எந்த தேவினு நீங்களே முடிவு பண்ணிக்குங்க! அவசரப் பதிவு, நம்ம வழக்கமான ஸ்டைல் இருக்காது. அடுப்பிலே சுண்டல் இருக்கு. வரேன், இந்த பொம்மை எல்லாம் வேறே கலாட்டா பண்ணிட்டு இருக்கு! இடம் பத்தலையாம்! என்னனு பார்க்கணும்!

Wednesday, September 16, 2009

என்ன தவம் செய்தேன்!

பார்க்கிறவங்க எல்லாம் கேட்கிறாங்களே! என்னத்தைச் சொல்றது? ரேவதியோட பிரண்டை ரேவதி குண்டா இருக்கிறதைக் கேட்டுத் தொந்திரவு பண்ணினதை எழுதினப்போ இருந்தே இதையும் சொல்லணும்னு. இன்னிக்குத் தான் நேரம் வந்துது. எங்கே? மொக்கை போடக் கூட நேரம் இல்லாம என்ன வெட்டி முறிக்கிறேனு கேட்கிறீங்களா? எல்லாம் நம்ம வழக்கமான கதைதான். 4-வது நாளாக வேலை செய்யற பொண்ணு வரலை. தெருவுக்கு அந்தப் பக்கம் வேலைக்குப் போறாளாம். பார்த்தவங்க சொல்றாங்க, நமக்கு வரலை, நேரம், முகராசி, எதுவேணா வச்சுப்போமே, காசா, பணமா! அதைவிடுங்க, இப்போ நம்ம கதைக்கு வருவோம்.

பார்க்கிறவங்க எல்லாம் கேட்கும் கேள்வி, என்ன உன்னோட கணவர் இப்படி இளைச்சுத் துரும்பா ஆயிட்டாரேனு தான். கூடவே என்னைப் பார்த்து, "நீ இன்னும் இளைக்கணும், சாப்பாட்டைக் குறை! ஆமா, அது என்ன மூக்கிலே கறுப்பா ஒட்டிண்டு? நெத்தியிலே என்ன கருநீலமா பட்டை மாதிரி? கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினாப்போல " அப்படினு விதவிதமாக் கேள்விகள். என்னமோ நான் வேண்டிண்டு குண்டாய் இருக்கிறாப்போலவும், சாப்பாட்டை வெளுத்துக் கட்டறாப்போலயும் நினைப்பு அவங்களுக்கு. அதோட நிறம் பத்தியும் நிற நிறமாய் விமரிசனம் வரும். ரொம்பவே ஆசைப்பட்டு இந்த மாதிரி ஆயிருக்கேன்னு நினைக்கறாங்களோனு தோணும் சில சமயம். அதுக்கு மட்டும் வேணும்னு தான் இப்படி வேஷம் போட்டிருக்கேன்னு சொல்லலாமானு தோணும். அதுக்குள்ளே நம்ம ம.பா. விடமாட்டார். "அதெல்லாம் அவ ஒண்ணும் சாப்பிடறதில்லை. டாக்டர் 2 இட்லி சாப்பிடச் சொன்னா ஒண்ணு தான் சாப்பிடறா. சாதமும் கம்மிதான் சாப்பிடறா. அது என்னமோ உடம்பு இளைக்க மாட்டேங்குது. சரும வைத்தியர் கிட்டே போனோம், தோலுக்குனு, கடைசியிலே அந்தப் பெண் டாக்டர் தலையிலே கையை வச்சுண்டு உட்கார்ந்துட்டா! ஒண்ணும் பண்ண முடியாதுனு, நான் என்ன மருந்து கொடுத்தாலும் உங்களுக்கு ஒத்துக்க மாட்டேங்குதே! " என்று சொல்லுவார். இதைக் கேட்டதுமே உற்றமும், சுற்றமும் என்னைப் பார்த்து உடனே, "வீட்டிலே நல்லா வேலை செய்யணும், நடக்கணும், தினமும் எக்ஸர்சைஸ் பண்ணணும், யோகா கத்துக்கறது தானே" னு அடுத்த ஆலோசனை. வேலைக்கு ஆளை வச்சுட்டு வாரம் ஏழுநாட்கள் நான் தான் செய்யறேன்னு சொன்னா நம்பவா போறாங்க?? அப்போப் பார்த்து எங்க வீட்டு வேலை செய்யும் பொண்ணு வேலைக்கு வந்து நிக்கும் அதிசயமா! அப்புறம் தோலுக்கு விதவிதமான மருந்துகள், களிம்புகள். எல்லாம் அக்கறையிலே தான் சொல்றாங்கனு தெரியும். என்றாலும் சில சமயங்களில் ரேவதி சொல்றாப்போல் அலுப்பாய் ஆயிடுது.

தினம் தினம் அவருக்கும் சேர்த்து நான் நடக்கிறது அவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? யோகா கத்துட்டு ஏழு வருஷமாச் செய்யறேன்னு சொன்னா உடனே ஒரு தேர்வு வைப்பாங்க, என்ன என்ன யோகா தெரியும் அப்படினு! அதோட பேரெல்லாம் கேட்பாங்க. அவங்க யோகா செய்யறேன்னு சொன்னப்போ நான் பேசாமத் தான் கேட்டுப்பேன் இப்படி எல்லாம் கேட்டதில்லை, கேட்கத் தோணவும் இல்லை, ஆனால் நம்ம மூஞ்சியிலே ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கோனு தோணுது. நம்மளை இல்லாத கேள்வி கேட்பாங்க. போகிற போக்கிலே உன் உடம்பு இப்படி இருக்கிறது தான் அவருக்குக் கவலை! அப்படினு வேறே சொல்லிடுவாங்க. எனக்குக் கவலை பிச்சுக்கும். அவரைத் தொந்திரவு செய்வேன், நல்லாச் சாப்பிடுங்க, நல்லா நடங்கனு. உடனேயே கோபம் வந்துடும் அவருக்கு. "இதுக்கு மேலே சாப்பிட நான் என்ன பகாசுரனா? அதான் நினைச்ச உடனே நீ அதை வாங்கிண்டு வா, இதை வாங்கிண்டு வானு சொல்றே. நடந்து தானே போய் வாங்கிண்டு வரேன்." அப்படினு சந்தடி சாக்கிலே நான் அடிக்கடி கடைக்கு அனுப்பறேன்னு ஓங்கி ஒரு குட்டுக் குட்டுவார்.

நான் நடக்கிறதுக்கும், சாப்பாடை அளவாச் சாப்பிடறதுக்கும் சேர்த்து வச்சு அவர் இளைச்சுட்டே இருக்கார். இது என்ன அதிசயம்னு தோணிச்சு எனக்கு. இப்படி ஈருடலும், ஓருயிருமா நாங்க இருக்கோமானு நினைச்சுப் பூரிச்ச பூரிப்பிலே இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டேன். கடைசியில் உண்மையாவே அவருக்குக் கவலைதான் தாங்கலைனு புரிஞ்சது. என்ன கவலைங்கறீங்களா? கஸ்தூரியின் நிலைமை பற்றிக் கவலை. அடுத்துக் கண்ணன் பற்றிக் கவலை. இந்த சகுந்தலா இப்படிப் புகுந்த வீட்டுக்காரங்க கிட்டே நடந்துக்கறாளேனு வருத்தம். நந்தினி கதி என்ன ஆகப் போறதோ, சகுந்தலா அவ வாழ்க்கையைக் கெடுத்துடப் போறாளே அம்மா பேச்சைக் கேட்டுண்டு. அடுத்து அர்ச்சனாவின் தங்கை கல்யாணத்துக்குச் சேமிச்சு வச்ச 4 லக்ஷம் ரூபாய் திருடு போயிடுச்சே, கல்யாணம் எப்படி நடக்குமோனு ஒரே குழப்பம். ரேவதி, (இது வேறே ரேவதி) யோட அம்மாவுக்கு இருதய சிகிச்சை நல்ல படியா நடக்கணுமேனு வேண்டாத தெய்வம் இல்லை. எல்லாத்துக்கும் மேலே சந்தியாவின் அப்பாவுக்கு இரண்டாம் திருமணமே நடக்காதப்போ ஏன் அவர் பொய் சொல்லணும்னு ஆத்திரம். கடைசி, கடைசியா இத்தனை வருஷம் ஆகியும் அபி இன்னமும் ஆதியாலே இப்படிக் கஷ்டப் படறாளேனு இது எதிலே போய் முடியும்? அவ தங்கைங்க இரண்டு பேரும் கூடக் கஷ்டப் படறாங்களேனு கவலை, வருத்தம். சாயந்திரம் ஆறரை மணிக்கு ஆரம்பிச்சா ராத்திரி எல்லாம் தூங்காம முழிச்சுட்டு யோசிக்கிறார். அதுவும் ஒரு வருஷம், இரண்டு வருஷமாவா?? கிட்டத் தட்ட ஆறு வருஷமா இப்படிக் கவலைப் படறாரா? உடம்பு இளைச்சே போச்சு. தொந்தியாவது ஒண்ணாவது, எல்லாம் கரைஞ்சு போச்சு! அதிசயம் தான். ஆனால் பாருங்க நான் குண்டாகிட்டே இருக்கேனே,அவருக்காகக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு. இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா??? ஒருவேளை அவ்ருக்காகக் கவலைப்படாமல் நானும், சாயந்திரம் ஆறு மணியிலே இருந்து மேலே சொன்னவங்களுக்குக் கவலைப்பட்டால் இளைப்பேனோ??? :P

Saturday, September 5, 2009

காஞ்சிபுரம் பட்டுப் புடவை கட்டி இருக்கீங்களா?

நேத்திக்கு ஜிமெயில் ஒரே தகராறு பண்ணிட்டு இருந்தது. வலைப்பூக்களைப் பார்க்கலாம்னா அதுவும் சரியா வரலை. சரினு மனசைத் தேத்திட்டு, தொலைக்காட்சி பார்க்க உட்கார்ந்தேன். புத்தகம் படிக்கிறதுக்கு என்னமோ தோணலை. ஒவ்வொரு தொலைக்காட்சி சானல் நிகழ்ச்சிகளையும் பார்த்தப்போ, விஜய்(?) சானலில் ஏதோ நல்ல படம் மாதிரித் தெரிஞ்சது. பிரகாஷ்ராஜ் நடிச்சுட்டு இருந்தார். நான் பார்க்கும்போது, படம் ஏற்கெனவே ஆரம்பிச்சுடுத்து. வழக்கம்போல் நான் படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் கழிச்சே பார்க்க ஆரம்பிச்சேன். நல்லெண்ணெய் சித்ரா அரிசி புடைச்சுட்டு இருந்தார். பிரகாஷ் ராஜுக்கு மனைவியா, அக்காவா? யோசிக்கிறதுக்குள்ளே, சித்ராவே நாலு நாளா புருஷனைக் காணோம்னு வருத்தப் பட்டுட்டு இருந்தார் பிரகாஷ் ராஜ் கிட்டே. அவரைச் சமாதானம் செய்துட்டே பிரகாஷ் ராஜ் அன்னம் எங்கேனு கேட்கிறார். என்ன படம்னு யோசனை? படம் கறுப்பு, வெள்ளை, ஆனால் நடிகர்கள் இப்போதையவர்கள். வீடாக நடிச்சிருந்தது ஒரு குடிசை. மிகப் பழசு. உண்மையான ஒரு குடிசையோனு நினைக்கிறேன். பார்த்தால் செட் மாதிரித் தோணலை. அப்படி செட்டாக இருந்தால் ஆர்ட் டைரக்டரைத் தான் பாராட்டணும்.

உள்ளே சமீரா ரெட்டி, அப்பாடி, இவங்க தான் சமீரா ரெட்டியா? இப்படி ஒரு வேஷத்தில் நடிக்க, அதுவும் பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக நடிக்க நிச்சயம் துணிச்சல் அதிகம் தான் இவங்களுக்கு. கண்கள் பேசுது இவங்களுக்கு. திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு அப்புறமாத் தன் வேலையிலேயே கவனமாய் இருக்காங்க. என்ன சமையல் வேலைதான். விறகு அடுப்பு. ஊதுகுழல் வச்சு ஊதினாங்க. இந்தப் படம் கதைக்களத்தின் நிகழ்வு சுதந்திரத்துக்கு முன்னால், இரண்டாம் உலகப் போர் சமயம்னு அப்புறமாத் தெரிஞ்சது. ஆனாலும் இந்த விறகு அடுப்பு இன்னமும் நம் நாட்டில் இருக்கத் தான் செய்யுது. எனக்கு என் புக்ககத்தில் நானும் விறகு அடுப்பை ஊதியது எல்லாம் நினைவில் வந்தது. சிலசமயம் ஊதுகிற ஊதலில் அடுப்பு எரியுதோ இல்லையோ, அடுப்பின் சாம்பல் எல்லாம் உள்ளே போயிடும். இருமல் வந்துடும். இவங்க எப்படி டூப்பா போட்டிருக்காங்கனு பார்த்தா இல்லை. கோபம் அவங்களுக்குக் கணவனான பிரகாஷ் ராஜ் கிட்டே. குழந்தை ஒண்ணு பிறந்திருக்கு. பெண் குழந்தை. தூளியில் தூங்கிட்டு இருந்தது. குழந்தையைப் பார்த்துக் கணவன் ஆன பிரகாஷ் ராஜ் மனைவியோடு பேச்சைத் துவங்க எண்ண,அவரோ கோபத்துடனேயே பேசாமல் இருக்கிறார். என்ன சண்டை, எதுக்கு, ஏன், எப்படினு புரியலை. முந்தைய சீனின் தொடர்ச்சியோ? யோசிக்கிறதுக்குள்ளே பிரகாஷ் ராஜ் அவரைச் சமாதானம் செய்யும் விதமாய் அவரை அழைத்துக் கொண்டு போய் வீட்டின் ஒரு மூலையில் புதைத்து வைத்திருந்த ஒரு உண்டியலைக் காட்டுகிறார். அதைக் குலுக்கிக் காட்டுகிறார். மனைவிக்குக் கொடுக்கவெனப் பட்டுச்சேலை நெய்ய ஆரம்பித்து அதில் பணம் சேர்ப்பதாகவும்,முடியாததால் பெண் பெரியவளாய் ஆகும்போது அவளுக்குக் கல்யாணத்திற்கு இதில் ஒரு பட்டுச் சேலை கூட எடுக்க முடியும் என்றும் சொல்கிறார். மனைவியின் கையில் ஒரு நாணயத்தைக் கொடுத்து (எத்தனை ரூபாய் நாணயம் அது? தெரியலை) உண்டியலில் போடச் சொல்லி உன்னிடம் மிஞ்சும் பணத்தை நீயும் சேமித்து வை. நம் பெண்ணுக்காக என்று சொல்கிறார்.

அப்புறம் தான் புரிகிறது இது காஞ்சீபுரம் என்னும் நெசவாளர்களின் நிலைமை பற்றிய படம் என்று. பிரகாஷ் ராஜ் ஒரு முதலாளியிடம் நெசவாளராக இருக்கிறார். அந்த முதலாளி பல தறிகள் வைத்துள்ளார். அதில் பல நெசவாளிகளை வேலைக்கு வைத்துப் பிழியப் பிழிய வேலை வாங்குகிறார். நெசவு செய்யும் இடம் ஏதோ பழைய கோயில் பிரஹாரமாய் இருக்கிறது. ஆட்களை நன்கு சோதனை போடுகிறார். வேலை முடிந்து போகும்போது அவங்க ஏதாவது பட்டு நூலோ, அல்லது ஜரிகையோ எடுத்துப் போகாவண்ணம் சோதனை போடப் பட்டு அனுப்பப் படுகின்றனர். அப்படியும் பிரகாஷ் ராஜ் தன் வாயில் நூல் பத்தையை அடைத்துக் கொள்கின்றார். வாய் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு அடைத்து எடுத்து வருகிறார் வீட்டுக்கு. யாரானும் ஏதானும் பேசினால் பதில் இல்லை. தலையாட்டல் தான். எப்படியோ தப்பிவிடுகிறார். அந்த நூல்களை மீண்டும் சுத்தம் செய்து, தன் வீட்டிலேயே பின் பக்கமாய்க் கொஞ்சம் தள்ளி இருக்கும் தன்னுடைய சொந்தத் தறியில் அந்த நூல்களை வைத்து ஒரு புடவை நெய்கின்றார். ஆனால் இந்த விஷயம் மனைவிக்கும், தங்கைக்கும் தெரியாமல் பாதுகாத்து வருகின்றார். மனைவியிடமும், தங்கையிடமும் அந்த இடத்தில் பாம்புகளும், பூரான்களும் நெளிவதாகவும் அங்கே போகவேண்டாம் எனவும் பயமுறுத்தி வைக்கின்றார். மெள்ள மெள்ள நீலமும், சிவப்பும், மஞ்சளும் கலந்து ஓர் அழகான கொடி போன்ற டிசைனில் சேலை உருவாக ஆரம்பிக்கிறது.

அப்போது ஒருநாள் எப்படியோ தங்கையின் கணவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிவர, அவரோ தன் கையில் பணம் இல்லை எனவும், அதனால் குடித்தனம் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட்டு, வேண்டுமானால் பிரகாஷ்ராஜ் முடிந்தால் உதவி செய்தால் தங்கையை அழைத்துச் செல்வதாய்ச் சொல்கின்றார். முதலில் பேசாமல் இருக்கும் பிரகாஷ்ராஜ் அவர் திரும்பிப் போவதில் உறுதி காட்டவும், வேறு வழி இல்லாமல் தன் உண்டியலை எடுத்து உடைக்கிறார். அவர் மனைவியின் மனம் உடைகிறது. எனக்குள்ளே மறுபடியும் ஃபளாஷ் பாக் ஓடுகிறது. இதே மாதிரி ஒரு தேவைக்காக நாங்களும் குழந்தைகளின் உண்டியலை உடைச்சோம். நாங்க உடைச்சது ப்ளாஸ்டிக் உண்டியல், இது பழங்காலத்து மண் உண்டியல். மற்றபடி தேவை ஒன்றுதான். )) என்ன நடக்கப் போகிறதோ என நினைக்க, மனைவி ஒண்ணுமே சொல்லலை. உண்டியலை உடைச்சது சரிதான் எனப்புரிந்து விடுகிறது அவளுக்கும்.  அப்புறம் குழந்தை வளர்ந்து பெரியவள் ஆகின்றாள்.

ஊருக்கு முதல்முதலாய் மோட்டார் வண்டி வருகிறது. முதலாளியே வாங்கி இருப்பதால் அதை ஓட்டி வரும்போது பார்க்க ஊரே செல்கிறது. அங்கே வண்டியைப் பார்த்த சந்தோஷத்தில் கூட்டம் ஓட்டமாய் ஓட, பிரகாஷ் ராஜ் தன் மகளுக்கு வேடிக்கை காட்டும் மும்முரத்தில் இருக்க, மனைவியோ கூட்டம் தள்ளிவிட்டதில் கீழே விழுந்துவிடுகிறாள். எழுந்திருக்க முயன்றாலும் கூட்டம் மேன்மேலும் வந்து அவளைக் கீழேயே தள்ளிவிடுகிறது. அனைவரும் அவளை மிதித்துத் துவைக்கின்றனர். மயக்கம் ஆனவளைத் தூக்கி வந்து நாட்டு வைத்தியம் செய்கின்றனர். ஓரளவு சுமாராகிறது என்றாலும் வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கிறது. தன் தோழன் ஆன ஒருவருடன் நெருங்கிப் பழகும் பிரகாஷ் ராஜ் அவன் மகனோடு தன் மகளையும் நன்கு பழக விடுகின்றான். இது நாளாவட்டத்தில் காதலாய் மாறுகின்றது. ஆனால் இது தெரியும் முன்னரேயே தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறாள். மனைவியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தன்னுடைய சொந்தத் தறியில் கொஞ்சம் கொஞ்சமாய்த் தயாராகும் சேலையைக் காட்டுகின்றார். இது மகளுக்குத் திருமணத்திற்கு எனச் சொல்லவும் மன நிறைவோடு(?) மனைவி இறந்துவிடுகிறாள்.

பெண்ணின் காதல் அப்பாவுக்குத் தெரிகிறது. ஆனால் பையனோ உலகமகா யுத்தம் நடப்பதால் யுத்தகளத்தில். பையன் இல்லாமலேயே அவனின் சம்மதத்துடன் இங்கே திருமண நிச்சயம் நடக்கின்றது. பெண்ணுக்குச் சீராகப் பட்டுச்சேலை கட்டி அனுப்புவதாய் வாக்குக் கொடுக்கின்றார் பிரகாஷ்ராஜ். அனைவருக்கும் ஆச்சரியம். இது எப்படி நடக்கும் என்று. இதன் நடுவில் கம்யூனிஸ்ட் ஒருவர் மறைந்து வாழவேண்டி அங்கே வருபவர் நெசவாளர்களை முதலாளிக்கு எதிராய்த் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தச் சொல்ல, இரு முறை கொடுத்த கோரிக்கைகளை முதலாளி நிராகரிக்க வேலை நிறுத்தம் தொடருகிறது. மூன்று மாதங்கள் ஆகியும் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை. இதற்குள் யுத்தகளத்தில் இருந்து 20 நாட்கள் விடுமுறையில் பையன் வர, பையனின் அப்பாவும், பிரகாஷ்ராஜின் தோழருமானவர் திருமணத்திற்கு அவசரப் படுத்துகின்றார். பிரகாஷ்ராஜ் கொஞ்சம் அவகாசம் கேட்டும் பையன் ஒத்துக்கவே இல்லை. விடுமுறை கழிந்து சென்றால் வர ஒருவருஷமோ, இரண்டு வருஷமோ என்று சொல்லிவிட வேறு வழியில்லாமல், பிரகாஷ்ராஜ் தன் சக நெசவாளிகளில் சிலரை வேலை நிறுத்தத்தைக் கைவிடச் செய்து தானும் வேலைக்குப் போகின்றார்.

வேலைக்குப் போனால் தானே பட்டு நூல் கிடைக்கும். தன் மகளுக்குப் புடைவை நெய்யமுடியும்? ஆனால் அவரின் தோழருக்கு இது அதிர்ச்சியைத் தருகிறது. பிரகாஷ்ராஜ் முதலாளியிடம் பணம் வாங்கி இருப்பதாய்ச் சந்தேகம். சண்டை வலுக்க அவர் பிரகாஷ்ராஜைக் கேள்வி மேல் கேள்வி கேட்க, நூல்கண்டை வாயில் அடக்கிக் கொண்டு தப்ப நினைத்த பிரகாஷ்ராஜ் வாயிலிருந்து நூல்கண்டாய்க் கொட்ட மாட்டிக் கொள்கின்றார். அனைவரும் வேறுபாடு இல்லாமல் அடித்து நொறுக்க, பெண்ணை அவர் நண்பர் அழைத்துச் செல்கின்றார். பிரகாஷ்ராஜ் சிறைக்குச் செல்ல, நண்பர் பெண்ணுக்கு அவர் பையனோடு திருமணம் முடித்துவிடுவார். இதுக்கும் அதுக்கும் முடிச்சுப் போடமாட்டார்னு நான் நினைச்சிருக்க, திருமணம் நடக்கவில்லை. பெண் கிணற்றில் விழுந்து, முதுகுத் தண்டில் அடிபட்டு அசைய முடியாமல் கிடக்கிறாள். பரோலில் வெளிவருகின்றார் பிரகாஷ்ராஜ். வந்து பெண்ணுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டுப் பின்னர் அரைப்பைத்தியம் ஆகிவிடுகின்றார். அந்த நிலைமையிலேயே மீண்டும் சிறைக்குச் செல்கின்றார். இது அவரோட நினைவலைகளில் வந்ததாய் எடுக்கப் பட்டிருக்கிறது என்று தெரிய வ்ருகின்றது. நாளை விமரிசனம்.

Wednesday, September 2, 2009

"அ"தர்மமிகு சென்னையே தான்! :(

கொஞ்சம் , கொஞ்சம்னு கூட இல்லை, அதிகக் களைப்படைந்துவிட்டேனோ?? ஆமாம், அப்படித் தானு நினைக்கிறேன். 23-ம் தேதி பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிச்சு அதிக அலைச்சல். ஓய்வு கம்மி. இந்த அழகிலே எல்லா இடத்துக்கும் போகும் ஆசைனு ம.பா. சொல்லுவார். போகலைனா தப்பாவும் நினைக்கறாங்க. அதுவும் புகுந்த வீட்டு மனிதர்கள் வீட்டு விசேஷம். எந்தக் காரணத்தைக் கொண்டும் விடமுடியாது. ஆகையால் போய்த் தான் ஆகவேண்டி இருக்கு. அங்கே சாப்பிடும் ரசம் சாதமும், அப்பளமும் வீட்டிலே இன்னும் நிதானமாய்ச் சாப்பிடலாம்தான். நாம் போகலைனா நம்ம வீட்டு விசேஷத்துக்கு ஒரு குஞ்சு, காக்கை கூட வராது. அதையும் பார்த்துக்கணும். அதுவும் இப்போ மறுபடியும் நேரே வந்து அழைக்கும் பழக்கம் வேறே ஆரம்பிச்சிருக்கா? நேரேயே வந்து கூப்பிட்டுடறாங்களே. என்ன காரணமோ, கொஞ்சமே கொஞ்சம் அசந்துதான் போயிருக்கேன். தூங்கலை, கொஞ்சம் அசட்டையாய் இருந்துட்டேன். அதுக்குள்ளே ஆட்டோ பறந்துடுத்து ஆர்யகெளடா ரோடு வரைக்கும்.

ஆட்டோ ஓட்டுநரிடம் நேரே ஏன் போறீங்கனு கேட்டதுக்கு, சைடிலே வர ரோடிலே திரும்பினால் ஹெல்த் செண்டர் கிட்டம்மா என்று பதில் வந்தது. ஒருவேளை அது கிட்டே இருந்துட்டா??? மாம்பலத்திலேயே குறுக்குச் சாலைகள் தானே நிறைய?? சரினு பொறுத்தேன். பார்த்தா ஜூபிலி ரோடு வருது. அட, இது எங்கே வருதுனு பார்த்தா? ஆர்யகெளடா ரோடு வந்துடுச்சு. எனக்கு ஏதோ தில்லுமுல்லு நடக்கப் போகுதுனு புரிஞ்சு போச்சு. உடனேயே சத்தம் கொடுத்து (கொஞ்சம் வேகமாவே)ஆட்டோவை நிறுத்திட்டு ஹெல்த் செண்டர்னு தானே கூட்டிட்டுப் போங்கனு சொன்னேன், இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்கனு கேட்டுட்டுக் கைப்பையில் வைத்திருந்த என்னோட கைத் தொலைபேசியை எடுத்துத் தம்பியைக் கூப்பிட்டேன். அதுவரையிலும் நான் எந்தவிதத் துணையுமில்லாமல், வழியும் தெரியாத ஒரு கிராமத்துக்காரினு நினைச்ச ஆட்டோ காரர் கைபேசியில் தம்பியிடம் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்ததுமே பேச்சை மாற்றினார். ஹெல்த் செண்டர்னு எங்கே சொன்னீங்க? அது இங்கே இருந்து ரொம்ப தூரத்திலே இருக்கு! அங்கே கொண்டு விடறதுனா இன்னும் 100ரூ அல்லது 200 ரூ ஆகும். அதோட நீங்க சொன்ன தெரு இதுதான் அப்படினு ஒரே அடியா அடிச்சுட்டார்.

ஒருவேளை நம்ம முகத்திலே படிக்காத நிரட்சர குட்சினு எழுதி வச்சிருக்கோனு எனக்கே சந்தேகம் வந்துடுச்சு. அதுக்காக பீட்டரா விடமுடியும்? ஒரு முடிவுக்கு வந்து தம்பி கிட்டே நான் எம்சிசி பாங்க் வாசலில் நிக்கறேன். யாரையாவது அனுப்புனு சொன்னேன். ஆட்டோவை விட்டு ஆட்டோக்காரரே எதிர்பார்க்காவண்ணம் இறங்கிட்டு பணத்தை அவர் வாங்க மாட்டேன்னு சொல்லியும் ஆட்டோவிலேயே வச்சுட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அந்த ஆட்டோக்காரர் கிட்டே பேசின பணத்தைக் கொடுத்தால் வாங்கவே இல்லை. சத்தம் போட ஆரம்பித்தார். நான் யோசித்துவிட்டு மறுபடி தம்பியைக் கூப்பிட்டு, நான் நடந்து அயோத்யா மண்டபம் பக்கம் வந்துட்டே இருக்கேன். அந்தப் பக்கமா வரச் சொல்லுனு சொல்லிட்டு அங்கே நிற்காமல் நடக்க ஆரம்பித்துவிட்டேன். பின்னால் துரத்திட்டு வருவாரோனு கொஞ்சம் உள்ளூர பயம் தான். ஆனால் நடமாட்டம் அதிகம் இருந்ததாலும், நான் கொஞ்சம் பயத்தை வெளிக்காட்டாமல் சென்றதாலும் வரலைனு நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அன்னிக்குப் பணமும் போச்சு, இறங்க வேண்டிய இடத்தில் இறக்கிவிடாமல் நடையும் அதிகம், அதோடு என்னை அழைத்துவரத் தம்பியின் பையருக்குப் பெட்ரோலும் ஆச்சு. ஆக அன்னிக்கு நஷ்டக் கணக்கே ! ஆனாலும் இதிலிருந்து என்ன தெரியுதுனா சாதாரணமாய் உடை உடுத்திட்டுப் போனால் ஒண்ணும் தெரியாதுனு ஏமாத்தறாங்க. ரொம்ப க்ராண்டாக உடை உடுத்திட்டுப் போனால் பைசா நிறையக் கறக்கலாம்னு ப்ளான் போடறாங்க. காலையிலே என் கணவரோட துணையோட போனப்போவும் வடக்கு மாடவீதிக்குப் பதிலா தெற்கு மாடவீதிக்குக் கொண்டு விட்டாங்க. கடவுளே, என்ன நடக்கிறது இந்தத் தருமமிகு சென்னையிலே???

இனிமேலே குடும்ப ஆட்டோக்காரரைத் தவிர மத்தவங்களைக் கூப்பிடக் கூடாதுனு முடிவு பண்ணியாச்சு. தி.நகர், மயிலைனு போக நேர்ந்தால் பேருந்தே சரியானதுனு தோணுது. என்ன உட்கார இடம் கிடைக்காது. கூட்டம், நெரிசல் அதிகம், எனக்கு மூச்சுத் திணறல் வரும். அதுக்குத் தான் ஆட்டோ, கீட்டோ எல்லாம் வேண்டி இருக்கு. ஆனால் எல்லா ஆட்டோக்காரங்களும் நல்லவங்களா இருக்கிறதில்லை. இது எப்போ மாறும்??? :((((((((((( பிப்ரவரியில் குஜராத் போனப்போ பேட் துவாரகா, மெயின் துவாரகாவில் இருந்து 30 கிமீக்கும் மேல். அப்படி இருந்தும், நாங்க ஏற்கெனவே உள்ளூர்க்காரங்க கிட்டேயும், தங்கின ஹோட்டலிலும் விசாரித்து வச்சிருந்த பணத்துக்கு ஐம்பது ரூ குறைவாகவே கொடுத்தோம். பரோடாவிலே கேட்கவே வேண்டாம். மச்சினர் வீட்டிலே இருந்து ரயில்வே ஸ்டேஷன் போக மினிமம் உள்ள பத்து ரூக்கு மேல் எடுத்துக்கறதில்லை. ஒருநாள் பத்துரூபாயாக இல்லைனு 20ரூ நோட்டைக் கொடுத்தோம், மிச்சம் பத்து ரூ இரண்டு ஐந்து ரூ நாணயங்களாக நாணயமாய்த் திரும்பி வந்துவிட்டது. அங்கேயும் விலைவாசி இதே தான்! பெட்ரோல் விலையும் இதே மாதிரித் தான். இங்கே மட்டும் ஏன் இப்படி? ஏன் இப்படி?? அதிலும் கடந்த ஒருமாதமாக இது மூன்றாவது முறையான அனுபவம். அனுபவம் கொஞ்சம் கடுமையாக இருந்ததால் எல்லாரும் தெரிஞ்சுக்கணும்னு எழுதினேன். :(((((((

தருமமிகு சென்னையா இது???? :((

தருமமிகு சென்னை,

ராமலிங்க அடிகள் ரொம்பவுமே புகழ்ந்து இருக்கார் சென்னைப் பட்டணத்தைப் பத்தி. திவாகரின் எஸ்.எம்.எஸ். எம்டனிலும் படிச்சேன், சென்னை புகழை. ஆனால் எனக்கு என்னமோ சென்னை பிடிக்கவே இல்லை. ஆனால் இங்கே தான் வாசம் செய்யவேண்டி ஆகிவிட்டது. முந்தாநாள் ஆகஸ்ட் முப்பது அன்று காலை மயிலையில் ஒரு உபநயனம், மாலை விருகம்பாக்கத்தில் ஒரு கல்யாண வரவேற்பு, ஆகவே காலையிலேயே அம்பத்தூரை விட்டுக் கிளம்பிட்டோம். நாங்க கிளம்பறதுனா சாமானியமா இல்லை. பால்காரன், வீட்டுவேலை செய்யும் பெண் எல்லார் கிட்டேயும் ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லி வைக்கணும். இல்லைனா கிளம்பற அன்னிக்கு அந்தப் பொண்ணு வேலைக்கு மட்டம் போடுவா, பால்காரரோ, அவர் கிட்ட கறக்கற பாலை எல்லாம் நாங்க தான் வாங்கிக்கணும்னு பிடிவாதம் பிடிப்பார். இந்த மாதிரிக் கல்யாணத்துக்குப்போறோம், பால் தேவை இல்லைனு அவர் கிட்டே சொன்னால் அவ்வளவு தான், “வயித்திலே அடிக்கிறியே அம்மா!’னு கேட்கிறார். அப்படிக் கேட்கலைனா முதல்நாள் வாங்காத பாலையும் சேர்த்து மறுநாள், (இல்லை, இல்லை அந்தப் பழைய பால் இல்லைங்க, அன்னிக்குக் கறந்த பால் தான் ஆனால் கணக்குச் சரியாக வரதுக்காகத் தண்ணீரைக் கூடச் சேர்த்துப்பார்) கொடுத்து வாங்கியே ஆகணும்னு பிடிவாதம் பிடிப்பார். கருணைக்கடல் ஆன என்னோட ம.பா. வாயே திறக்காம வாங்கிட்டு வருவார். ஏற்கெனவே மோர் செலவே இல்லை. அவர் ஒருத்தர் தான் இன்னும் ஆறு மாசத்துக்கு மோர் விட்டுக்கணும். அப்புறம் பால் என்ன அபிஷேஹமா பண்ணிக்கப் போறோம். சொன்னால் அந்தப் பால்காரருக்குப் புரியறதே இல்லை. அவருக்கு வேண்டியது முதல்நாள் விட்டுப் போன ஒரு லிட்டரையும் கொடுத்துச் சரிக்கட்டிடணும். மாசம் முப்பது நாளுக்கும் பணம் வந்துடணும். நீ பாலை என்ன வேணா பண்ணிக்கோ! இதான் அவர் கொள்கை போல!

இது எல்லாத்தையும் சமாளிச்சுட்டுத் தான் நான் வெளியே போகவேண்டி இருக்கு. அன்னிக்கு நாள் பூராவும் வெளியே இருப்பதால் பால்காரர், வேலைசெய்யும் பெண் எல்லாரையும் சமாளிச்சுட்டு மயிலை வந்தாச்சு. ஏற்கெனவேயே மயிலையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா நடப்பதாக அழைப்பு வந்திருந்தது. ஆனால் போக முடியுமானு தெரியலை. அதனால் எதுவும் சொல்லாமல் இருந்துட்டேன். இப்போ மயிலையிலேயே உபநயனம்னு தெரிஞ்சதும், விழா நடக்கும் இடம் எங்கே இருக்குனு என் தம்பி கிட்டே கேட்டுத் தெரிஞ்சுட்டேன்./ என்றாலும் விழாவுக்குப் போவது பத்தி யார் கிட்டேயும் மூச்சு விடலை, என் கணவரைத் தவிர, அவரோ, நான் உன்னை உன்னோட சிநேகிதி வீட்டிலே விட்டுட்டுத் திரும்ப மயிலையிலேயே உள்ள ஒரு சொந்தக்காரர் வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு 5-00 மணி அளவில் வந்து கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டார். சரினு எல்லாம் ப்ளான் பண்ணியாச்சு. உபநயனம் நடக்கும் இடத்தில் இருந்து எல்லாமுமே கிட்ட. உபநயனம் முடிஞ்சு நாங்க சாப்பிட்டுக் கிளம்பி வடக்கு மாடவீதியில் ஏதாவது பரிசுப் பொருள் வாங்கலாம்னு ஆட்டோகாரர் கிட்டே சொன்னால், அவரும் சரி, சரினு சொல்லிட்டு, தெற்கு மாடவீதியிலே கொண்டு நிறுத்திட்டார். இது என்னங்க சென்னை ஆட்டோ பழக்கமே இல்லையா நமக்கு? என்றாலும் இப்படிக் கேட்ட இடத்துக்குக் கூட்டிப் போகாமல் ஏமாத்துவாங்கனு புரியலைதான். அதுவும், நாங்க போன தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜத்திலே இருந்து தெற்கு மாடவீதி கூட்டி வர ஆட்டோவின் விலையை முதலில் எல்லாரும் கேட்டிருந்தாங்க. அப்புறமா அந்த ஆட்டோக்காரரையே கொஞ்சம் சமாதானம் செய்து கெஞ்சிக் கூத்தாடி வடக்கு மாடவீதிக்குப் போனால் அவர் மறுத்துவிட்டார். ஆனால் கொஞ்ச நாட்களாகவே ஆட்டோக்காரங்களுக்கும் எங்களுக்கு இப்படித்தான் ஏதாவது தகராறு நடந்து வருகிறது. போனவாரம் தி.நகர் போக் ரோடில் ஒரு கல்யாணத்துக்குக் கூட்டிப் போகச் சொன்னால் ஆட்டோக்காரர் என்னமோ பெட்ரோல் விலையை நாங்க தான் ஏத்திட்டாப்போல் சண்டை போட்டார். ரொம்ப பயமாப்போச்சு! :(

சரி, போ,இன்னிக்கு எழுந்த நேரம் சரியில்லைனு நினைச்சுட்டு, லஸ் சர்ச் ரோடில் உள்ள சிநேகிதி வீட்டுக்குப் போக இன்னொரு ஆட்டோ பிடிச்சோம். அதுக்குள்ளே என்னோட தம்பி தொலைபேசியில் அழைத்தார். இரண்டு பேரையும் வரச் சொல்ல, அவர் என்னை மட்டும் சிநேகிதி வீட்டில் விட்டுட்டு, அதே ஆட்டோவில் கிளம்பிப் போனார். அப்புறம் நான் அவங்க வீட்டில் இருந்து விழா நடக்கும் இடத்துக்கு சிநேகிதியுடன் சென்றேன். அவங்களும் விழாவுக்கு வரதாச் சொல்லி இருந்தாங்க. ஆகவே இரண்டு பேரும் போனோம். அங்கே விழாவில் பேச்ச்சாளர்கள் பேச்சை முடிக்கத் தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. அதுக்குள்ளே என் தம்பி என்னை வரச் சொல்லி அழைப்புக் கொடுத்துவிட்டான். ஒரு அரை மணி பார்த்துவிட்டு நான் பாதிவிழாவிலேயே கிளம்பிட்டேன். இனிமேல் தான் கிளைமாக்ஸே வரப் போகுது பாருங்க.

விழா நடக்கும் இடத்தில் இருந்து அருகே இருந்த தெருவில் 12 B பேருந்து தான் போயிட்டு இருந்தது. அது போத்தீஸில் தான் நிற்கும்னு சொல்லிட்டதாலே, நான் போகவேண்டியது மாம்பலம் பப்ளிக் ஹெல்த் செண்டர் கிட்டே என்பதாலே, அங்கே இருந்து இன்னொரு ஆட்டோ பிடிக்கிறதுக்கு, இங்கே இருந்தே ஆட்டோவில் போயிடலாம்னு ஆட்டோவை அழைத்தா, ஒவ்வொருத்தரும் கேட்கிற பைசா, முதல்லே கையிலே அவ்வளவு பைசா இருக்குமா பார்த்துக்குவோம்னு தோணுது. அவ்வளவு கேட்கிறாங்க. கேட்டால் பிள்ளையார் அன்னிக்கு ஊர்வலம் போறாராம், பிள்ளையாரப்பா, இது என்ன உன்னோட பக்தையை இப்படிச் சோதிக்கலாமானு நினைச்சுட்டு ஒருவழியா நான் சொன்ன பணத்துக்கு ஒத்துக் கொண்ட ஒருத்தர் ஆட்டோவில் ஏறினேன். ஆட்டோவும் கிளம்பியது. இப்போது பத்திரிகைகளில் பிரபலமாக எழுதிக் கொண்டிருக்கும் ஒரு இளம் சாமியாரின் படம் ஒட்டப் பட்டிருந்தது ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கைக்கு எதிரே. நான் எறினதுமே அந்த ஆட்டோகாரர் அந்த சாமியாரைக் காட்டி இவரைத் தெரியுமா? பார்த்திருக்கீங்களா? அப்படினு கேட்டார். ஆனந்தம் பொங்கும் அந்தச் சாமியாரின் ஆசிரமம் பற்றிக் காலைதான் பல கதைகளை என் உறவினப் பெண்ணொருத்தி உபநயனத்தில் சொல்லி இருந்தார். இருந்தாலும் இம்மாதிரியான வழிபாடு எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. கந்தர் சஷ்டி கவசத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டே எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டேன். அப்புறமா அவர் வாயே திறக்கலை. நல்லி தாண்டி, குமரன் தாண்டி துரைசாமி சப்வே வந்ததும் யூ டர்ன் அடிச்சுத் திரும்பினால் நான் போகவேண்டிய தெரு வந்துடும்.ஆனால் இது என்ன இந்த ஆட்டோ திரும்பாமல் நேரே இல்லை போகிறது???