Tuesday, December 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


தனது பக்தனுக்காகத் தாமே வந்து கடன் அடைத்துச் சென்றது சாக்ஷாத் அந்த ஸ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை புரிந்து கொண்ட தானீஷா, தான் மஹாபாபியாக இருந்து இறைவனே நேரில் வந்ததைத் தெரிந்து கொள்ளவில்லையே என நினைத்து நினைத்து ஏங்கினான்.  அங்கே சிறையில் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோபன்னா எழுந்து பார்த்தபோது விஷக்கிண்ணம் கவிழ்ந்து கிடப்பதையும் தானீஷா கையொப்பம் இட்டுக் கடன் தீர்ந்துவிட்டதாக அறிவித்த ரசீதையும் பார்த்தார்.  திகைத்தார்.  ஏதோ அதிசயம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். ராமன் திருவடியை அடைய முடியாமல் வந்து தடுத்துவிட்டானே என ஏங்கினார். ராமனைத் தாம் நிந்தித்ததால் இவ்வாறு செய்துவிட்டான் போலும் என எண்ணினார்.  அதனால் தான் விஷத்தைக் கொட்டி விட்டான் போலும் என எண்ணினார். அப்போது சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன.  தானீஷா பரிவாரங்களோடு அங்கே வந்து கொண்டிருந்தான்.  மறு விநாடிக் கதவு திறந்து தானீஷா எதிரே நின்றான்.  கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கோபன்னாவின் கர்ருணையால் அன்ன்று தாம் இறைவனையே கண்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  கோபன்னாவுக்கோ, ஸ்ரீராமனே நேரில் வந்தானா, தானீஷாவுக்குக் காட்சி கொடுத்தானா என எண்ணித் தமக்கு அந்தக் காட்சி கிட்டவில்லையே என ஏங்கினார்.  தானீஷாவோ அவர்கள் வந்ததையும், தம்முடன் பேசியதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  பிரசாதத்துக்கு ஆசைப் பட்டு கோபன்னாவிடம் பணி புரிவதாய்க் கூறினார்களே என  அதிசயித்தான்.  கோபன்னாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தானீஷாவைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, “நீர் செய்த பாக்கியம் தான் என்னே!  இறைவனைக் காணும் பேறு கிடைத்தது.  பனிரண்டு வருடமாய்க் கதறிக் கதறி அழைத்து இந்த நடுநிசியில் மூட்டை தூக்கி வந்து என் கடனை அடைத்துச் சென்றுவிட்டானா?  எனக்குக் காட்சி கிடைக்கவில்லையே! ஏ, ராமா, எனக்குக் காட்சி கொடுக்க மாட்டாயா?” எனக் கதறினார்.  தானீஷா, அவரிடம், நீர் சாதாரண கோபன்னா இல்லை;  ராமதாஸர்! ராமன் திருவடிக்கே தொண்டு பூண்ட பெரியவர். உம் அருமை தெரியாமல் நான் உம்மைத் துன்புறுத்தி மஹா பாவத்தைச் செய்து விட்டேன்.”  என்றான்.  எல்லையற்ற மன நிறைவோடு மீண்டும் பத்ராசலம் வந்தார் ராமதாஸரான கோபன்னா.  தானீஷா ராமனுடைய சேவைக்காக ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினான்.  நெடுநாட்கள் அதன் பின்னர் ராமனின் புகழைப் பாடி வந்தார் ராமதாஸர்.  ஒருநாள் பொன்மயமானதொரு தேர் விண்ணிலிருந்து இறங்கியது.  ராமதாஸர் வீட்டு வாசலில் நின்றது.  தன் மனைவியையும் அழைத்தார் ராமதாஸர்.  கைவேலையை முடித்துவிட்டு வருவதாய் அந்த அம்மாள் சொல்ல, “நீ கொடுத்து வைக்கவில்லை!” எனச் சொல்லிக் கொண்டே தேரின் மீது ராமதாஸர் ஏறிக் கொண்டு ராம நாம உபதேசத்தைக் கூறிக் கொண்டே தேரோடு விண்ணில் எழும்பிச் சென்றார். அவர் மனைவி உள்ளிருந்து வந்து பார்க்க, “நீ உன் மகனுக்குப் பணிசெய்யும் பொருட்டே உன்னைத் தங்க வைத்தோம்!” என அசரீரி வாக்குக் கேட்க அந்த அம்மாளும் தன் விதியை நினைந்தபடி தங்கிவிட்டார்.  பத்ராசல ராமதாஸர் ராமன் மேல் எண்ணற்ற பாடல்களைப் புனைந்து பாடினார்.  பாரதத் திருநாட்டில் ஹைதராபாத்திலே செல்வம் கொழித்திருப்பதன் காரணமும் பத்ராசல ராமதாஸருக்கு ராமன் அளித்த செல்வம் என்றே கூறப்படுகிறது.

பத்ராசலம் ராமதாஸர் கதை நிறைந்தது.

Sunday, December 9, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


விஷம் குடிப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை ஸ்ரீராமனையும், அவன் பிரிய மனைவியான சீதம்மாவையும் நினைத்த கோபன்னா, சீதம்மா நீயாவது உன் கணவனிடம் போய்ச் சொல்ல மாட்டாயா?  இன்னும் எத்தனை காலம் எனக்கு இந்த தண்டனை? என மனமுருகிப் பிரார்த்தித்தார்.  தியானத்திலும் ஆழ்ந்து போனார்.  அங்கே சீதம்மா மாயம்மாவுக்கு மனதில் ஒரே வேதனை.  இந்த கோபன்னா இத்தனை தூரம் மனமுருகிப் பிரார்த்தனைகள் பல செய்தும் நம் கணவர் வேடிக்கை பார்க்கிறாரே இது என்ன நியாயம் என மனதிலேயே கேட்டுக் கொண்ட கேள்வியை இன்று நேரிலும் கேட்டுவிட்டாள்.  “சுவாமி, கோபன்னா எத்தனை நல்லவன்?  நம் கோயிலுக்காக அன்றோ அவன் உழைத்தான்!  ஒரு காசு கூட சொந்தமாக எடுத்துக் கொள்ளவில்லையே.  அதோடு நம்மிடம் எவ்வளவு பக்தியுடனும் பிரேமையுடனும் இருக்கிறான்.  அவனை இப்படிப் பரிதவிக்க விட்டு விட்டுத் தாங்கள் இங்கே ஆனந்தமாய்க் காலம் கழிக்கலாமா?” என வினவ, ஸ்ரீராமனின் முகத்தில் இளநகை பூத்தது.  “சீதே, போன பிறவியிலும் பரம பக்தன் ஆன இவன், ஒரு கிளியைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்து வந்தான்.  பனிரண்டு ஆண்டுகள் அவ்விதம் வளர்த்து வந்ததால் அதே பனிரண்டு ஆண்டுகள் இவனும் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.  இன்றோடு அந்தச் சிறை வாசம் முடிவடைகிறது.  நானும், லக்ஷ்மணனுமாய் நாளை தானீஷாவைப் போய்ப் பார்த்து இவன் கடன்களை அடைக்கப் போகிறோம். “ என்றான் ஸ்ரீராமன்..

“வெகு அழகு ஸ்வாமி, ஆயுளையே உங்கள் சேவையில் கழித்து வரும் கோபன்னாவை விட்டுவிட்டு, தானீஷாவுக்குப் போய் தரிசனம் கொடுக்கப்போகிறீர்களே!” என்றால் சீதை ஏமாற்றமுடன். 
“சீதே, தானீஷா கோபன்னாவைச் சிறையில் அடைத்த குற்றம் ஒன்று மட்டுமே செய்தான்.  ஒரு நல்ல அரசனாகக் குடிமக்களை நன்கு பேணி வருகிறான்.  நீதிமானாகவும், நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும் உள்ளான்.  மேலும் அவன் போன பிறவியில் காசியில் அந்தணனாகப் பிறந்து ஈஸ்வரனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேஹம் செய்யப் பிரார்த்தித்துக் கொண்டவன்.  இதன் மூலம் பெரிய பதம் கிடைக்கும் என எண்ணினான்.  ஆனால் 999 –வது குடம் வந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை, என ஆயிரமாவது குடத்தை அந்த ஈசன் தலையிலேயே போட்டு உடைத்துவிட்டான்.  அந்த வினைப்பயன் தான் அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.  மேலும் அவனுக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் என ஈசனே வாக்குக் கொடுத்துள்ளார்.  ஈசன் வாக்குப் பொய்யாகலாமா?”  என்றான் ஸ்ரீராமன்.

மறுநாள் நடு நிசி. தானீஷாவின் அந்தப்புரத்திலே அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.  ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தான்.  அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்தப்புர பாராக் காவலையும் தாண்டிக் கொண்டு இரு சிப்பாய்கள் கையிலே ஒரு பெரிய பணப்பையோடு இடையிலே கால் சராய் தரித்து, வாளை இடுப்பிலே ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்கள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அரசகுமாரர்களோ என்னும்படி இருந்தது.  இருவரும் பாராக் காவற்காரர்களிடம் வந்தபோது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  சிரித்துக்கொண்ட இருவரும் அந்தப்புரக் கதவில் கை வைக்கக் கதவு தானாகத் திறந்தது.  கனவு கண்டதில் விழித்த தானீஷா அந்தப்புரக் கதவு திறப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் பார்க்க எதிரே இரு சுந்தரபுருஷர்கள் நின்றனர்.  அறையே கோடி சூரியப் பிரகாசமாக ஜொலித்தது.  அந்த வெளிச்சத்தையும் இரு இளைஞர்களின் அழகையும், அவர்களின் தேஜஸையும் கண்ட தானீஷா இருவரையும் பார்த்து யார் எனக் கேட்க, அவர்கள், “நாங்கள் கோபன்னாவின் வேலையாட்கள்.  என் பெயர் ராம்ஜி. இவன் பெயர் லக்ஷ்மண்ஜி. பத்ராசலத்திலிருந்து வருகிறோம்.”  என்றனர்.

“வேலையாட்களா?  எத்தனை வருடங்களாகச் செய்கிறீர்கள்? என்ன சம்பளம் உங்களுக்கு?” தானீஷா கேட்டான்.

“ஐயா, நாங்கள் பல தலைமுறைகளாகச் செய்து வருகிறோம்.  சம்பளமெல்லாம் கிடையாது.  அந்த ராமர் கோயில் பிரசாதத்துக்காகச் செய்கிறோம்.”
“ஆச்சரியமாய் உள்ளதே.  இப்போது என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“ஐயா, கோபன்னா உங்களிடம் கடன் பட்டிருக்கிறாராமே.  அதை அடைக்கச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்.  பணத்தைக் கொண்டு வந்துவிட்டோம்.  இதோ உமக்குச் சேர வேண்டிய ஆறு லக்ஷம் பொன்கள். “ கையிலிருந்த பணப்பையைப் பிரித்து அவிழ்த்துக் கொட்ட, கலகலவென சப்தித்துக்கொண்டு தங்க நாணயஙக்ள் உருண்டோடின.  “இவற்றைச் சரி பார்த்துக் கொண்டு, கடன் தீர்ந்ததற்கான ரசீதைக் கொடுங்கள் ஐயா, “ என அவர்கள் அவசரப் படுத்த இந்த நட்ட நடுநிசியில் இந்த இருவரும் எங்கிருந்தோ வந்து கோபன்னாவின் கடனைத் தீர்ப்பதை எண்ணி எண்ணிப் பார்த்த தானீஷாவுக்கு வியப்புத் தாங்கவில்லை.  அது சரி இவர்களை உபசரிக்கக் கூட இல்லையே.  எப்படி உபசரிப்பது?  தானீஷா குழப்பத்துடன் அவர்களிடம் இந்த நடுநிசியில் உங்களை எப்படி உபசரிப்பது எனத் தெரியவில்லை, என்று சொல்ல, இருவரும் வேலைக்காரர்களான தங்களுக்கு எந்த விதமான உபசாரமும் வேண்டாம் எனவும், ரசீதைக் கொடுக்கும்படியும் திரும்பக் கேட்டனர்.  தானீஷா ரசீதைக் கொடுக்க இருவரும் இருண்ட சிறையிலிருந்து கோபன்னாவைப் பார்க்கப் போனார்கள்.  கோபன்னாவைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு மனம் உருக, அண்ணனிடம், “நீ செய்தது அநியாயம், நமக்கு வானளாவக் கோயில் எடுத்தவன் சிறையில் வாடுகிறான்.  அவன் நிலைமையைப் பாருங்கள்.  எலும்பும் தோலுமான உடலுடனும், குழி விழுந்த கண்களோடும், சடாமுடியோடும், தாடியோடும் பிச்சைக்காரனைப் போல் நிர்க்கதியாய்ப் படுத்திருக்கிறான்.  நீங்கள் இன்னும் முன்னமே உங்கள் கருணையைக் காட்டி இருக்கலாகாதா?” என்று சொல்ல, ஸ்ரீராமனோ, “அப்பனே, இது பூர்வ ஜன்ம வினை. இதை இவன் அனுபவித்தே தீர வேண்டும்.  ஊழ்வினையைத் தடுக்க என்னாலும் இயலாது.  சரி, நீ இப்போது  உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்த்து வா!” எனச் சொல்ல லக்ஷ்மண்ஜியும் ஆதிசேஷனாக மாறி உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்க்கிறான்.  ரசீதை கோபன்னாவின் பக்கத்திலே வைக்கிறார்கள்.  பின்னர் இருவரும் மறைந்தனர்.

அரசன் தங்க நாணயங்களைப் பார்த்துப் பார்த்து அதிசயித்தான்.  அவற்றின் முத்திரையைச் சோதிக்க ஸ்ரீராம் என அவற்றில் எழுதி இருந்தது.  இயன்றவரை பல நாணயங்களைச் சோதித்தும் அனைத்திலும் ராமன் பெயரே இருக்கவும்.  தானீஷாவுக்கு உண்மை புரிந்தது.  கோபன்னாவுக்காக வந்தது சாக்ஷாத் ஶ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை உணர்ந்தான்.  கோபன்னா எத்தனை பெரிய மஹான் என்பதும் புரிந்தது அவனுக்கு.  

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


ஹைதராபாத் நகரில் அவரைக் காவலில் வைத்தனர் சேவகர்கள்.  கோபன்னாவின் மாமன்மாருக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  இருண்ட சிறைச்சாலையில் மாமன்மார் வந்து பார்த்து கோபன்னாவைக் கோபம் பொங்கத் திட்டித் தீர்த்தனர்.  தானீஷாவின் முன்னிலையில் கோபன்னா விசாரணைக்கு வந்தார்.  மன்னனிடம் தாம் மன்னனைக் கேளாமல் செய்தது தவறே என ஒப்புக் கொண்ட கோபன்னா, இந்தத் திருப்பணியை மன்னனே முன்னின்று நடத்தி இருக்க வேண்டும் என்றும் இதனால் விளைந்த, விளையப் போகிற நற்பலன்கள் அனைத்தும் அரசுக்கே ஏற்படும் என்றும் கூறிய கோபன்னா ஸ்ரீராமனின் மகத்துவத்தையும் பக்தியின் பெருமையையும் அதன் விளைவாய் ஏற்படும் ஞானத் தத்துவங்களையும் மன்னனிடம் எடுத்து உரைத்தார்.  ஆனால் மன்னன் மனம் மாறவில்லை.  கோபன்னாவின் அறிவாற்றலும், ஞானத்தையும் கண்டு உள்ளூர வியந்தாலும் பண விஷயத்தில் இம்மியும் விட்டுக் கொடுக்க மன்னன் தயாராக இல்லை.  மேலும் கோபன்னா ஒருவரை விட்டு விட்டால் பின்னர் இம்மாதிரியே எல்லாரும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  எல்லாரும் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திருப்பணி என்பார்கள்.  ஆகவே இந்த கோபன்னாவிடம் நயந்தும், பயந்தும் பேசியே பணத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.  கோபன்னாவ்விடமிருந்து ஆறு லக்ஷம் வராஹன்கள் வரும் வரையிலும் சிறையில் அடைக்குமாறு கூறி மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டான் தானீஷா.  மக்கள் செய்தியறிந்து வீதிக்கு வீதி இது குறித்தே விவாதித்து வந்தனர்.

கோபன்னா சிறையில் இருந்தார்.  கரடுமுரடான தரை.  கிழிந்ததொரு பாய்.  போர்த்திக்கொள்ள மிக மோசமானதொரு கம்பளி.  அந்த அறையில் படுக்கவே முடியவில்லை. ஆனால் அங்கே படுக்கையிலே காட்டிலே ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமன் கட்டாந்தரையிலே புற்படுக்கையிலே படுத்தது அவர் மனதில் வந்தது.  ஆஹா, அந்த ஸ்ரீராமன் காட்டில் புழுதியிலே கட்டாந்தரையிலே புற்களால் ஆன படுக்கையில் அல்லவா படுத்திருந்தான்.  அதுவும் ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா!  ப்தினான்கு ஆண்டுகள். ஸ்ரீராமா நீ எப்படித்தான் தூங்கினாய் அப்பா. என மனம் உருகினார்.  உணவும் சரியாக அமையவில்லை கோபன்னாவுக்கு.  உப்பும் அரிசியும் சரிசமமாகக் கலக்கப்பட்ட அன்னத்தைக் காவலன் கொடுக்க அதுவும் ஸ்ரீராமன் அருளால் கிடைத்த பிரசாதமே என மனம் உருகி வாங்கி உண்டார் கோபன்னா.  தன் மனதுக்குள்ளாக ஸ்ரீராமனுக்கு மானஸ பூஜை செய்து கொண்டே இருந்தார்.  அவர் உடல் தான் சிறையில் இருந்ததே தவிர உள்ளம் முழுதும் ஸ்ரீராமனிடம் மூழ்கி இருந்தது.  ஆகவே சிறைச்சாலையின் துன்பங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை.  சிறையிலும் ஆனந்தமாக அவர் இருப்பதைக் கேள்விப் பட்ட தானீஷா, ஆஹா, இது சரியில்லை;  இவனை முச்சந்தியிலே நிறுத்துக் கசையடி கொடுங்கள்.  பணத்திற்கு அப்போதானும் வழி சொல்லுவான் எனக் கூறினார்.

தண்டனைச் செய்தி ஹைதராபாத் நகரம் முழுதும் பரவியது. மக்கள் துடிதுடித்தனர்.  ஆஹா, கோபன்னா எத்தகைய ராமபக்தர்!  அவருக்கா இத்தகைய தண்டனை! பணத்தை அவரா எடுத்துக் கொண்டார்.  தம் மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்தாரா!  இல்லையே.  அல்லது தமக்கென நிலம், நீச்சு என வாங்கிச் சேர்த்தாரா.  அதுவும் இல்லையே.  பத்ராசலம் கோயிலுக்கன்றோ செலவழித்தார்.  கோபன்னா திருப்பணிக்கு முன்னர் பத்ராசலம் எப்படி இருந்தது!  இப்போதோ, பூலோக வைகுண்டம் போல் அல்லவா ஒளிர்கிறது.  கோயில் மட்டுமா அழகாக அமைந்துள்ளது!  வழிபாடுகளில் என்ன விமரிசை, என்ன பக்தி.  இப்படி எல்லாம் நடக்க ஏற்பாடு செய்த ஒரு பரமபக்தரை இப்படியா தண்டிப்பது.  இது தகாது.  அநியாயம்.  என ஓலமிட்டனர் மக்கள்.  “ஏ ராமா, இது என்ன நீயும் தானீஷாவுடன் சேர்ந்து வேடிக்கையா பார்க்கிறாய்.  அல்லது இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றோ! என ஸ்ரீராமனையே பலரும் கேட்டனர்.  கோபன்னாவும் வீரர்கள் காவலுடன் முச்சந்தியை நோக்கி அழைத்து வரப் பட்டார்.  ஊரார் சிலர் வேடிக்கை பார்க்க, பெரும்பான்மை மக்கள் கதறி அழ கோபன்னாவுக்கு தண்டனை நிறைவேறத் தொடங்கியது.  ஸ்ரீராமன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார் கோபன்னா.  அடியோ மேன்மேலும் விழுந்தது.  முதுகிலே ரத்தம் பீறிட பத்துப் பிரம்புகளுக்கும் மேல் முறிந்து விழ, ராமசந்திரனுக்கு மங்களம் என்ற வார்த்தையையே கோபன்னா திரும்பத் திரும்பக் கூற அவரை அடிப்பதிலும் பயனில்லை என உணர்ந்த சேவகர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  அடிக்குப் பயந்து பணத்துக்கு ஏற்பாட்டு செய்வார் என தானீஷா எதிர்பார்த்ததும் நடக்காமல் போகவே தலையில் பாறாங்கல்லைச் சுமந்து கொண்டு நகர் முழுவதும் வலம் வரச் சொல்லி தண்டனை கொடுத்தான் தானீஷா.

அந்த தண்டனையையும் ஸ்ரீராமன் பெயரைச் சொல்லிக் கொண்டே நிறைவேற்றினார் கோபன்னா.  பின்னர் கைகால்களைக் கட்டி மணலில் உருட்டினர்.  அப்போதும் மனம் தளராமல் ஸ்ரீராமன் பெயரைச் சொன்ன வண்ணம் நிறைவேற்றினார்.  இப்படியே வருடங்கள் உருண்டன.  கோபன்னாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  தண்டனைகளும் நிற்கவில்லை.  கோபன்னாவின் மன உறுதியும் தளரலாயிற்று.  இந்த ஸ்ரீராமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறானே.  அவனும் ஒரு மனிதனாகத் தானே இருந்தான்.  மனிதன் படும் துயரம் எத்தகையது எனப் புரிந்து கொள்வான் என நினைத்தேனே.  நான் அவனை இறைவன் என நினைத்தது தவறு.  எல்லாப் பொருட்களையும் எனக்கா செலவு செய்து கொண்டேன்.  ஏ, ராமா, உனக்கல்லவோ செலவு செய்தேன்.  உன் கோயில் பிராகாரங்களுக்கே லக்ஷம் பொன் செலவிட்டேனே.  உனக்குத் தான் ஆடை, ஆபரணங்கள், நகைகள் போன்றவை வாங்கினேன்.  அத்தனையையும் நீ தானே அனுபவிக்கிறாய்.  எவ்வளவு வாங்கினேன்.  உன் மாமனாரான ஜனகனா கொடுத்தான்.  அத்தனையும் தானீஷாவுக்குச் சேர வேண்டிய வரிப்பணம்.  உனக்காகத் தானே செலவழித்தேன்.  அப்போது நீ பேசாமல் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு இருந்துவிட்டு இப்போதும் வேடிக்கையா பார்க்கிறாய்!  என் துன்பம் உனக்குப் புரியவில்லையா!  இந்த கோபன்னாவுக்கு இன்னும் எத்தனை அடிகளும், தண்டனைகளும் இருக்கிறதோ அத்தனையும் தாங்கட்டும் என நினைக்கிறாயா?

இவ்வாறே அவர் ஸ்ரீராமனைப் போற்றியும் நிந்தித்தும் பல பாடல்களைப் புனைந்து பாடினார்.  அப்போது ஒரு நாள் திடீரென அவருக்கு சீதையின் தோற்றம் கண்களில் தெரிந்தது.  “அம்மா, தாயே, உன்னை மறந்துவிட்டேனே.  என் துன்பத்தை நீயாவது உன் கணவனுக்கு எடுத்துச் சொல்லமாட்டாயா. என் கடவுள் என உன் கணவன் ஸ்ரீராமனை நான் எண்ணியது அத்தனையும் வீண்.  அவனுக்கும் உனக்கும் தானே நான் செலவு செய்தேன்.  அவனாவது ஒரு வார்த்தை தானீஷாவிடம் போய்ச் சொல்லக் கூடாதா!  அவன் சொல்லவில்லை;  சொல்லவும் மாட்டான்.  தாயே, நீ தான் எனக்காக எடுத்துச் சொல்லக் கூடாதா?  நானும் எத்தனை வருடங்கள் இன்னமும் பொறுப்பது!  உன் கணவனுக்குக் கல் நெஞ்சம் அம்மா.  அவன் இரக்கமே காட்ட மாட்டான்.  கடினமான மனம் இருந்ததால் தானே, உன்னை, “தீக்குளித்துவிட்டு வா!” என்று சொன்னான். அதோடு விட்டானா!  நிறை கர்ப்பிணியான உன்னைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னானே.  அப்போதே அவன் குணம் எல்லாருக்கும் புரிந்துவிட்டது.  நான் தான் புரிந்து கொள்ளவில்லை.  அவன் கருணையே இல்லாதவன் அம்மா;  இவனைப் போய்க் கருணாசாகரன் எனச் சொல்வது தப்பு. வேண்டாம் தாயே, வேண்டாம்.  நீயும் அருள் புரிய வேண்டாம்.  உன் கணவனும் உதவி செய்ய வேண்டாம். நான் விஷம் குடித்து உயிரை விட்டு விட்டு நேரிலேயே வந்து உன் கணவனைக் கேட்கிறேன்.  ஆம் அது தான் சரி. இவ்வாறெல்லாம் எண்ணிய கோபன்னா எங்கிருந்தோ விஷம் எடுத்து வர ஏற்பாடு செய்து அதை நீரிலே கரைத்துவிட்டுக் குடிக்க ஆயத்தமானார்.  சீதம்மா, நீயாவது உன் கணவனிடம் சொல்ல மாட்டாயா எனக் கேட்டுக் கொண்டே விஷத்தைக் குடிக்க ஆயத்தம் ஆனார்.


Saturday, November 10, 2012

ஸ்ரீமஹா பக்த விஜயம்! பத்ராசலம் ராமதாஸர்!


தங்கத் தகடுகளால் கொடிமரம் வேயப் பட்டது.கோபுரங்களில் தங்கக் கலசங்கள் பதிக்கப்பட்டன. பீடங்களோ வெள்ளியால் ஆனவை. ஆராதனைக்கான உபகரணங்கள், பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப் பட்டன. பஞ்சலோகங்களால் ஆன ஸ்ரீராமனின் உற்சவ விக்ரஹத்திற்கு நவரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் சூட்டப்பட்டன. அனைத்தும் முடிந்து முறைப்படியான யாகங்கள் செய்து கோயிலில் கும்பாபிஷேஹமும் முடிந்தது. இயற்கையான மலை அழகிலே ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமன் இப்போது தன் பக்தன் ஆன கோபன்னா செய்த செயற்கையான அலங்காரங்களையும் ஏற்று அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருந்தான். கோயிலின் நந்தவனத்தில் ஜாதிப்பூக்கள், சண்பகப் பூக்கல், வில்வம், துளசி போன்றவை வளர்க்கப் பட்டு முறையே இறைவனுக்குச் சார்த்தப் பட்டது. பழங்கள் வித விதமாகப் படைக்கப்பட்டன. சந்தனம், ஊதுபத்தி, தசாங்கம் போன்றவற்றின் சுகந்தம் வேறு மனதையும் மூக்கையும் நிறைத்தட்து. கோபன்னா ஆனந்தத்தில்திளைத்தார். கோயிலுக்கு பக்தர்கள் வருகையும் பெருகியது.

இது இவ்வாறிருக்க, ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியும் பத்ராசலம் தாலுகாவின் வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை தானீஷா அறிந்தான். கோபன்னாவின் மாமன்மார்களை அழைத்து, கோபன்னாவை நம்பிக்கையானவன் எனக் கூறி ராஜ சேவகத்துக்கு சிபாரிசு செய்தீர்களே! இப்போது வரிப்பணம் வரவில்லையே எனக் கேட்க, தங்கள் மருமகனால் தங்கள் பெயர் கெடுகிறதே எனக்கவலையுற்ற அவ்விருவரும் ஒரு தூதுவனை பத்ராசலத்துக்கு அனுப்பி வைத்தனர். தூதுவனும் கோபன்னாவைக் கண்டு மன்னன் கொடுத்த ஓலையைக் கொடுத்தான். கோபன்னா அந்த ஓலையைப் படித்துவிட்டு தூதுவனை ஸ்ரீராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் பண்ண வைத்தார். தாம் செய்துள்ள திருப்பணிகளை எல்லாம் காட்டினார். தூதுவன் ஆச்சரியக்கடலில் முழுகினான்.  அருமையான பணியைச் செய்திருந்தாலும் இதற்குப் பெயரும் புகழும் கிடைத்திருந்தாலும் அனைத்தும் அரசாங்கப் பணத்தில் செலவிடப் பட்டவை. ஆகவே இது திருட்டுக் குற்றமே.  அரசனின் கோபத்திற்கும் ஊராரின் பழிக்கும் ஆளாகி இருக்கும் கோபன்னா என்ன பதில் சொல்ல முடியும் எனக் கேட்டான். கோபன்னாவோ தனக்கு எதுவுமே விளங்கவில்லை என்றும், இது அரசனே முன்னின்று செய்திருக்க வேண்டிய ஒன்று என்றும், தான் தனக்கு என ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார். மேலும் தான் ஸ்ரீராமனையே நம்பி இருப்பதால் அவன் தன்னை எந்த அவமானமும் துன்பமும் நேராமல் காப்பான் என நம்புவதாயும், தானீஷா பெருந்தன்மையாகத் தன்னை மன்னிப்பார் எனவும் கூறினார். பின்னர் எதற்கும் இந்த விஷயத்தை முதலில் தம் மாமன்மாரிடமே சொல்லும்படியும் அவர்கள் பின்னர் ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனவும் கூறினார் கோபன்னா.

தூதுவனும் அவ்வாறே வந்து மாமன்மாரிடம் கோபன்னா கூறியவற்றைக் கூறத் திகைத்த மாமன்மார் எப்படியும் இங்கே வந்து தான் ஆகவேண்டும்; அதுவரை பொறுப்போம் என எண்ணினார்கள். தானீஷாவின் சபை கூடி வரவு, செலவுகள் குறித்த விவாதங்கள் நடந்தன.  எங்கெங்கே வரவு பாக்கி இருக்கிறது என்பது குறித்தும் பேசப்பட, பத்ராசலம் தாலுகாவில் பாக்கி உள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்த தானீஷா, கோபன்னா இன்னமும் பாக்கி வைத்திருக்கிறாரா? ராஜபக்தி உள்ள மனிதன் ஆயிற்றே என தூதுவர்களை அழைத்து விசாரிக்க பத்ராசலம் சென்று வந்த தூதுவன் தான் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தானிஷாவிடம் தெரிவித்தான். தானிஷாவின் முகம் சுருங்கியது. எவ்வளவு பாக்கி என விசாரிக்க ஆறு லக்ஷம் வராஹன்கள் பாக்கி என அறிந்த தானீஷா கோபம் எல்லை மீற பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் விசாரணைக்கு வரவேண்டும் எனவும் தக்க காவலுடன் கைது செய்து அழைத்து வரவேண்டும் எனவும் கட்டளை இட்டான். ராஜ சேவகர்கள் பத்ராசலம் சென்று அரசனின் கட்டளையைத் தெரிவிக்க கோபன்னாவோ, சேவகர்களுக்கு விருந்து படைக்க ஆயத்தம் செய்தார். வந்த வேலை முடியும் முன்னர் உணவு உண்ண மாட்டோம் என மறுத்தனர் சேவகர்கள்.  அவர்களிடம் தன்னிடம் செப்புக்காசு கூடக் கிடையாது எனக் கூறிய கோபன்னாவை இந்த விஷயத்தை அரச சமூகத்தில் வந்து தெரிவிக்குமாறு சேவகர்கள் கூறினர். ஏவலாளர் புடை சூழக் கிளம்பிய கோபன்னாவை, இப்போது குற்றவாளியாகச் செல்வதால் இம்மாதிரி வர முடியாது எனவும், தக்க காவலுடன் தாங்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினர் சேவகர்கள் அதற்குள் ஊர்மக்களுக்கு விஷயம் தெரிந்து சத்யாக்ரஹம் செய்ய முன் வந்தனர். மக்களை சமாதானம் செய்த கோபன்னா தன் மனைவியிடமும், மகனிடமும் விஷயத்தைத் தெரிவித்து, ஸ்ரீராமன் இருப்பதாகவும் அவன் தம்மைக் காப்பான் எனவும் கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

Sunday, October 28, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்-- பத்ராசலம் ராமதாஸர் !

வருமானம் இல்லாமல் வந்த விருந்தினர்க்கு உணவு படைத்துக் கொண்டே இருந்தால்
எத்தனை நாட்களுக்கு வரும்?  நாளாவட்டத்தில் கோபன்னாவின் வீட்டில் வறுமை
தாண்டவம் ஆடியது.  அடியார்களை உபசரிக்க முடியாமல் வருந்திய கோபன்னாவுக்கு
ஹைதராபாத் மன்னனான தானீஷாவின் அமைச்சரவையில் உயர்ந்த பதவிகள் வகித்த தனது
தாய் மாமன்களின் நினைவு வந்தது.  அவர்கள் மூலம் தானும் அரசாங்க வேலை
ஏதேனும் ஒன்றைப் பெற்று வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொண்டால்
வருங்காலத்துக்கு மட்டுமின்றி அடியார்களையும் தக்க முறையில் உபசரிக்கலாம்
என நினத்தார் கோபன்னா.  ஹைதராபாத் சென்று தன் மாமன்களான அக்கன்னா,
மாதன்னா இருவரையும் வணங்கித் தன் கோரிக்கையை முன் வைத்தார்.  தானீஷா
நல்லவனாக இருந்தாலும் பண விஷயத்தில் படு கஞ்சன் எனக் கூறிய மாமன்மார்கள்
வரி வசூல் போன்ற வேலைகளில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என
புத்திமதியும் கூறினார்கள்.  பின்னர் மறுநாள் தர்பாரிலே தங்கள் மருமகனை
அறிமுகம் செய்வித்து வந்த நோக்கத்தையும் தெரிவித்தனர்.  அப்போது
பத்ராசலம் தாலுகாவில் வேலை காலியாக இருந்ததால் தானீஷா உடனே அந்தத்
தாலுகாவின் தாசில்தாராக கோபன்னாவை நியமித்தார்.  கிஸ்தியை ஒழுங்காக
வசூலிக்க வேண்டும் எனக் கண்டிப்பாய்க் கூறி முத்திரையிட்ட கடிதமும்
கொடுத்து அனுப்பி வைத்தார்.

பத்ராசல க்ஷேத்திர மஹிமையையும், அங்குள்ள ஶ்ரீராமர் கோயிலின் புகழையும்
குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த ராமதாஸர் தனக்கு அளிக்கப்பட்ட
பல்லக்கில் ஏறி அந்த ஊரை அடைந்து, ஊருக்கு முன்னால் கீழே இறங்கி மலையை
வலம் வந்தார்.  கோயிலுக்குச் சென்று தன் குடும்பத்தோடு குடியிருந்த
ஶ்ரீசீதாராமரை, பரத, லக்ஷ்மண, சத்ருக்கன, ஆஞ்சநேயரோடு தரிசனமும்
செய்தார்.  புதிய தாசில்தாரைக் குறித்தும், அவர் கண்டிப்பைக் குறித்தும்
கவலையுற்றிருந்த பத்ராசலம் மக்கள் பக்திப் பரவசத்தோடு காட்சி அளித்த
இவரைப் பார்த்து மகிழ்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.  பதவி ஏற்ற நாள் முதல்
சிறப்பாகப் பதவிக்கு உரிய வேலைகளைத் தவறாது செய்துவந்தார் கோபன்னா.
குடிகளைத் தம்மிலிருந்து பிரித்து நினையாமல் இருந்து வந்ததால் எப்போதும்
ஊர் பாடல்,  ஆடல், பஜனை, வழிபாடுகள் எனக் கோலாகலமாக இருந்து வந்தது.
மக்களும் தவணை தவறாமல் கிஸ்தியைச் செலுத்தி வந்தனர்.  மற்ற தாலுகாவின்
தாசில்தார்களுக்கு எல்லாம் ஓர் நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார் கோபன்னா.

பத்ராசலம் கோயில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது.  அதற்குத்
திருப்பணி செய்ய வேண்டும் என நினைத்தார் கோபன்னா.  அதற்கு முன்னால் அதன்
பூர்வ சரித்திரம் என்ன என்பதை ஆராய்ந்தார்.  “தம்மக்கா என்னும் அந்தணப்
பெண் தன் மகளோடு இவ்வூரில் வாழ்ந்து வருகையிலே அவள் கனவிலே ஸ்ரீராமர்
தோன்றித் தாம் மலை மீது இருப்பதைச் சொல்ல, மலை ஏறிப் பார்த்தபோது ஒரு
புதரில் சீதாசமேத ஶ்ரீராமர், பரத, லக்ஷ்மண, சத்ருக்ன, அநுமனோடு காட்சி
கொடுத்தார்.  அவர்களுக்குக்கோயில் கட்டி இந்த விக்ரஹங்களைப் பிரதிஷ்டை
செய்ய வேண்டும் என நினைத்த தம்மக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினாள்.
நகரில் வாழ்ந்து வந்த பத்திர ரெட்டி என்பவரும், மற்றும் ஊராரும் பண உதவி
செய்ய, கோயில் வேலைகள் நடந்தன.  அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றோடு
ஸ்ரீராமர் அங்கே தன் குடும்பத்தோடு கோயில் கொண்டார்.  நாளடைவில் தம்மக்கா
ஶ்ரீராமரோடு ஐக்கியமானாள்.  பின்னர் ஒரு அரசன் ஏதோ திருப்பணி என்ற
பெயரில் செய்தான்.  ஆனால் இப்போதோ கோயில் முட்புதர்களும், செடிகொடிகளும்
மண்டி சுவற்றிலேயும் மரங்கள் வேரோட ஆரம்பித்துவிட்டிருந்தது.  இத்தகைய
நிலைமையைக் கண்ட கோபன்னாவுக்குக் கண்ணீர் வந்தது.

யோசித்தார்.  தானீஷாவுக்கு பத்ராசலம் தாலுகாவின் வசூல் என்பது ஒன்றும்
பெரிய விஷயம் அல்ல.  பத்ராசலம் அவன் ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதியே ஆகும்.
பார்க்கப் போனால் இது தானீஷாவே முன்னின்று ஏற்று நடத்தி இருக்க வேண்டிய
பணி.  இந்தக் கோயிலைச் சீர்திருத்திக் கட்டினால் எத்தனை மக்கள்
பயனுறுவார்கள்.  ஆகவே இதை நாமே ஏற்று நடத்திவிடலாம். என நினைத்தார்
கோபன்னா. உடனே தனக்கு உதவியாக  இருந்த கணக்கனிடம் வரிப்பணம் எவ்வளவு எனக்
கேட்க, அவன் ஆறு லக்ஷம் பொன் இருப்பதாய்த் தெரிவித்தான்.  கோயில்
திருப்பணிக்கு எவ்வளவு தேவை எனக் கணக்குப் போட்டால் ஆச்சரியவசமாக அதுவும்
ஆறு லக்ஷம் பொன்னாக இருந்தது.  கோபன்னா உடனே திருப்பணியை ஆரம்பிக்க அந்த
மலைப் பிரதேசத்தில்  உளியின் சப்தமும், ஆட்களின் கூக்குரலும்
சம்மட்டிகளின் ஓசையும் கேட்க ஆரம்பித்தது.  திருப்பணி வேலைகள் வெகு
சுறுசுறுப்பாக நடந்தது.  பல ஊர்களில் இருந்து சிற்பிகளும், ஆட்களும்
வந்து வேலை செய்தனர்.  மிகப் பிரம்மாண்டமாகக் கோயில் எழுந்தது.
தூண்களில் செதுக்க வேண்டிய சிற்பங்களைத் தெரிவு செய்தார் கோபன்னா.
அலங்கார மண்டபம், கர்பகிரஹம், பலிபீடங்கள், கொடிமரம், எல்லாம் உருவாகின.
ராமாயணக் கதையையே சிற்பங்களாக வடித்தார் ஒரு சிற்பி.

Thursday, October 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்!--பத்ராசலம் ராமதாஸர்!


குழந்தை போனது என்னமோ போனதுதான்.  ஆனால் பக்தர்களோ இன்னும் சாப்பிடவே இல்லை.  இப்போது போய்க் குழந்தை போனதைச் சொன்னால் அத்தனை பக்தர்களும் பட்டினி கிடக்க நேரிடும்.  எல்லாம் வீணாவதோடு குழந்தை ஒன்றும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை.”  ஒரு முடிவுக்கு வந்த ராமதாஸரின் பத்தினி குழந்தையை, அதாவது குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் ஓர் அறையிலே கொண்டு வைத்துப் போர்வையால் மூடிவிட்டு எதுவுமே நடவாதது போல் தன் காரியங்களைக் கவனிக்கலானாள்.  சமாராதனை முடிந்தது.  அனைவரும் தாம்பூலம் பெற்றுச் சென்றனர்.  மெல்லக் கணவனிடம் வந்த ராமதாஸரின் பத்தினி தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள்.  பின்னர் அழைத்துச் சென்று குழந்தையைக் காட்டினாள்.  அந்தக் குழந்தையின் உடலை எடுத்து வந்த பத்ராசல ராமதாஸர் குழந்தையைச் சந்நிதியில் கிடத்தினார்.  “ஏ, ராமா, இதுவும் உன் சோதனையா?  அடியவரைக் காப்பது, இடர் தீர்ப்பது என்பது உன் கடமையன்றோ!  நின் கடன் அடியேனைத் தாங்குதலும் சேர்ந்தன்றோ! இதெல்லாம் பொய்யா?  இப்படியும் நடக்குமா?  இந்தச் செல்வம் நீயன்றோ எங்களுக்குத் தந்தாய்!  நீயே இப்படித் திரும்பப் பிடுங்கலாமா?” என்றெல்லாம் கதறி அழுதார்கள்.  பல மணி நேரம் கதறி அழுத அவர்களைக் குழந்தையின் குரல் அப்பா, அம்மா என அழைப்பது கேட்டது.  திடுக்கிட்ட அவர்கள் பார்த்தபோது இறந்த குழந்தை உயிருடன் வந்திருப்பதைக் கண்டனர்.  இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லில் அடங்காத ஒன்று. இதன் மூலம் ஸ்ரீராமன் மேல் அவர்கள் வைத்த பக்தி மேலும் பெருகிற்று.

ஸ்ரீராமனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவல் ராமதாஸரின் நெஞ்சில் இருந்து வந்தது. தன் குருவான கபீர்தாஸரின் நினைவு வந்தது.  “எப்போது நீ நினைத்தாலும் அப்ப்போது நான் வருவேன்.” என்று தன்னிடம் கூறிச் சென்றிருந்த குருநாதரஇ நினைத்தார் கோபன்னா.  நினைத்த மாத்திரத்தில் வந்து நின்றார் கபீர்தாஸர்.  ஸ்ரீராமனைத் தரிசிக்கவேண்டும்; நேரிலே தரிசனம் கிடைக்கும்படி என்ன வழி எனக் கேட்ட கோபன்னாவிடம் கபீர்தாசர் அது அதற்கென்று உரிய காலத்திலே தான் கிடைக்கும் எனவும், அதுவரை ராமதாஸர் தனக்கென விதித்துள்ள செயல்களைச் செய்து வரவேண்டும் எனவும் கூறினார்.  ஆனால் இந்த பதில் கோபன்னாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை.  கபீரோ,” புலன்களை அடக்கித் தவம் செய்து வரும் மாமுனிவர்களுக்கெல்லாம் கூட எளிதில் கிட்டாத பொருள் ஸ்ரீராம தரிசனம்.  அதை இப்போதே பார்க்க வேண்டும் என்றால் இயலுமா? முதலில் உன் பக்தியை மேம்படுத்திக்கொள்ளும் வழியைப் பார்.” என்றார்.  ராமதாஸருக்கோக் காத்திருக்க விருப்பம் இல்லை;  பொறுமையும் இல்லை.  இப்போதே, இங்கேயே உடனே பார்க்க வேண்டும் எனக் கபீர்தாசரை வற்புறுத்த, “நாளைப் பகல் ஒருமணிக்குக் காட்சி கொடுப்பார்.” என்று சொல்லிவிடுகிறார்.  இந்தச் செய்தி எப்படியோ ஊரெல்லாம் பரவ ராமதாஸரின் இல்லத்தில் ஊர் மக்கள் கூட்டம் தாங்கவில்லை.  

கபீரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது.  ஸ்ரீராமரிடம் தன் சீடனான கோபன்னாவின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படியும் அவனுக்கு ஶ்ரீராமர் மறுநாள் உச்சி வேளையில் தரிசனம் கொடுப்பார் எனத் தான் வாக்களித்திருப்பதையும் கூறித் தன் வாக்கைக் காப்பாற்றும்படி ஸ்ரீராமனை வேண்டினார்.  ஸ்ரீராமரோ கோபன்னாவுக்கு இன்னமும் தெளிவோ, மனம் பண்படுதலோ ஏற்படவே இல்லை எனக் கூறிப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என மறுக்கக் கபீரோ ஒரு பக்தனாகிய தன் வாக்கை எவ்வாறேனும் காக்கவேண்டியது ஸ்ரீராமரின் கடமை எனக் கெஞ்சினார். கோபன்னாவின் வீடு திமிலோகப் பட்டது.  பஜனை, பூஜைகள், என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.  ஆங்காங்கே மக்கள் மிருதங்கம், ஜால்ரா முதலியனவற்றை ஒலிக்கச் செய்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.  உச்சி வேளை நெருங்க நெருங்க, அங்கே சூழ்நிலையில் பரபரப்புக் கூடலாயிற்று.  நடுக் கூடத்திலே இறைவனுக்கெனத் தனியானதொரு ஆசனம் அமைக்கப் பட்டிருந்தது.  இறைவனின் சேவைக்கு வேண்டிய மலர்கள், பழங்கள், நிவேதனங்கள், அதோடு ஷோடச உபசாரங்களுக்கு ஏற்பட்ட சாமக்ரியைகள் முதலியனவும் தயாராகக் காத்திருந்தது.  அப்போது பார்த்து ஒரு எருமை மாடு அங்கே வந்தது.  அதன் உடல் முழுக்கச் சேறு. கொம்பெல்லாம் சேற்று மண் ஒட்டிக் கொண்டிருந்தது.  அந்த்அ மாடு நேரே நடந்து இறைவனுக்கு அமைக்கப் பட்டிருந்த ஆசனத்துக்கு அருகே சென்றட்து.  செல்லும்போதே கீழே இருந்த நிவேதனங்கள், மலர்கள், பழங்கள், ஷோடச உபசார சாமக்ரியைகள் என அனைத்தையும் உருட்டிக் கொண்டே சென்றது.  கூடி இருந்த அனைவருக்கும் பொறுமை போயிற்று.  கோபம் பொங்கியது.  ஒரு தடியை எடுத்து மாட்டை நன்றாக அடித்து விரட்டினார்கள்.  மாடும் “அம்மா” எனக் கத்திக் கொண்டே ஓடிப் போய்விட்டது.

கபீரிடம் சென்ற ஸ்ரீராமர், “கபீர், உன் சீடன் என்னை நன்றாக அடித்துவிட்டான்;  இதோ பார்!  அடித்த அடையாளங்கள்.  அவன் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை.” எனக் கூற, கபீர் கோபத்துடன், “ராமா, நீ எருமையாகப் போவாய் என அவனுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க, “அவனுக்கு இன்னும் உரிய பக்குவ நிலை வரவில்லை கபீர்.  அது வந்ததும் அவனுக்கு நான் காட்சி தருவேன்.”  எனக் கூறி மறைந்தான்.

Monday, September 17, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம்--பத்ராசலம் ராமதாஸர்!


ஆத்தங்குடி மாளிகைச் சித்திரங்களில் காணப்பட்டவை பத்ராசல ராமதாஸர் கதை எனச் சொல்ல, ராஜம் அம்மாவும் அதை உறுதிப்படுத்தினார்.  உடனே நம் காளைராஜன் அவர்கள் அந்தக் கதையைக் கூறுமாறு கேட்டிருந்தார்.  இரண்டு நாட்களாக இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தேன்.  இப்போது தான் எழுதலாம் எனக் கொஞ்சம் தைரியம் வந்தது.

சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவரான சத்குரு தியாகப் பிரம்மம் அவர்களால் போற்றப் பட்ட பெரியார் பத்ராசலம் ராமதாஸர்.  தம்மை "ராமதாஸ தாஸன்" எனச் சொல்லிக் கொண்டவர் தியாகப் பிரம்மம்.  ராமதாஸருக்கு அருள் புரிந்து அவரது துன்பங்களைப் போக்கி அருளியது போல் எனக்கும் அருள் செய்வாய் எனப் பாடி இருக்கிறார். அத்தகைய பெருமை வாய்ந்த பத்ராசலம் ராமதாஸர் காலம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலம் ஆகும். கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்த காலத்தில் கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கன்னா என்னும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  இவரது மனைவி காமாம்பாள் என்பவர்.  இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கோபன்னா என்னும் பெயர் கொண்ட பின்னால் ராமதாஸர் என அழைக்கப்படப் போகும் பக்தர் ஆவார்.

கோபன்னா இளவயதிலேயே புராணப்ரவசனம் நடக்கும் இடங்களிலே முன் வரிசையிலே அமர்ந்து ராமாயணக் கதையை ஆவலுடன் கேட்பார். ராமரிடம் எல்லையற்ற அன்பு கொண்டார்.  ராமரை வழிபடுவதே தம் வாழ்க்கையின் முக்கிய லக்ஷியமாய்க் கொண்டார்.  தாயும், தந்தையும் ஒருவர் பின் ஒருவராக மறைய குடும்பத்தில் பெரியோர் வழிபட்டு வந்த ஶ்ரீராமரின் விக்ரஹம் இவருக்கு வந்து சேர்ந்தது.  அந்த விக்ரஹத்தை வைத்து வழிபட்டு வந்த சமயம் ஒரு நாள் முதியவர் ஒருவர் அங்கே வந்தார்.  இவரது பக்தியைக் கண்டு வியந்தார் அவர்.  ஶ்ரீராமரின் விக்ரஹத்தின் மேல் கோபன்னா வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு உள்ளூர ஆனந்தம் அடைந்த அந்தப் பெரியவர் அவரைச் சோதிக்க எண்ணி அந்த விக்ரஹம் இருந்த பெட்டியை விக்ரஹங்களோடு குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார்.  இதை அறியாத கோபன்னா விக்ரஹங்களைக் காணாமல் தவித்தார்; துடித்தார்.

அப்போது முதியவர் அவரிடம் என்ன விஷயம் எனக் கேட்க, தான் வழிபட்டு வந்த ஶ்ரீராமர் விக்ரஹத்தைக் காணவில்லை என கோபன்னா கூற, தாம் வேறு விக்ரஹம் தருவதாய்ச் சொல்லிச் சமாதானம் செய்து பார்க்கிறார். கோபன்னா, தாம் வழிபட்டு வந்த விக்ரஹம் தான் தனக்கு வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.  அதன் பின்னர் இவருக்கும் முதியவருக்கும் வாக்குவாதம் நடக்க முடிவில் பெரியவர் ஶ்ரீராமநாமத்தைச் சொல்லிப் பேழையைக் குளத்திலிருந்து மீட்டுக் கொடுத்துத் தாம் கபீர்தாசர் என்பதையும் அவருக்குத் தெரிவித்து, கோபன்னாவின் தலை மீது கைவைத்து ஸ்பரிச தீக்ஷையும் கொடுத்து அருளிச் சென்றார்.

பின்னரும் தெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டு அடியார்களுக்கு அன்னமும் இட்டு வந்தார் ராமதாஸர்.  ஊர் மக்கள் இவை எல்லாம் இல்லறத்திலிருந்து கொண்டு செய்வதே மேன்மை தரும் என வற்புறுத்திச் சொல்ல, கோபன்னா ஒருவழியாகத் திருமணத்துக்குச் சம்மதம் கொடுத்தார்.  திருமணமும் நடந்தது.  இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.  ஒரு முறை ஶ்ரீராமநவமி சமயம்.  பஜனையும், சமாராதனையும் பெரிய அளவில் செய்வதற்கான ஏற்பாடுகளை கோபன்னாவும், அவர் மனைவியும் செய்து கொண்டிருந்தனர்.  சமையல் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அன்னம் வடிக்கப் பட்டுக் கஞ்சி ஓடி, ஓடி, ஒரு குழியிலே வந்து தேங்கி இருந்தது.  ஶ்ரீராமனது திவ்ய மங்கள விக்ரஹம் சகல அலங்காரங்களுடன் பூஜை முடிந்து கற்பூர ஆரத்தியை ஏற்றுக் கொண்டிருந்த நேரம்.  நாமாவளிகளின் கோஷம் ஊரையே நிறைத்தது.  ஆயிற்று;  சிறிது நேரத்தில் இலை போட்டுப் பரிமாற வேண்டியதுதான்.

அப்போது ஏதோ வேலையாக வீட்டின் பின்புறம் சமையல் நடக்கும் இடத்துக்குச் சென்றாள் கோபன்னாவின் மனைவி.  கையில் குழந்தை.  குழந்தை துள்ளி விளையாடும் பருவம்.  அவளே எதிர்பாராமல் கஞ்சி நிரம்பியிருந்த குழியில் குழந்தை விழுந்துவிட்டது.  துடித்துப் போன கோபன்னாவின் மனைவி குழந்தையை உடனே தூக்கினாள்.  ஆனாலும் குழந்தையின் உடல் துவண்டது.  உயிரில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.  செய்ய வேண்டியது என்ன? சற்றே நிதானித்தாள் அவள்.