Friday, December 11, 2009

எங்கெங்கு காணினும் தங்கமடா! ஸ்ரீபுரம்!


நந்தகோபால் என்பவருக்கும், ஜோதி அம்மா என்பவருக்கும் ஜனவரி, 1976ம் ஆண்டு பிறந்த குழந்தையே இப்போது சக்தி அம்மா என அனைவராலும் அழைக்கப் படும் நாராயணி அம்மா என்பவர். பிறந்ததில் இருந்தே குழந்தை தனித்தன்மை வாய்ந்ததாய் இருந்ததாகச் சொல்கின்றனர். சங்கு சக்ரம் மார்பில் இருபக்கமும் இருக்கிறது என்றும் சொல்கின்றனர். நெற்றியிலும் திருமண்காப்பு இருந்ததாம். குழந்தையும் பிறந்ததில் இருந்தே ஆன்மீகத்திலும், பக்தியிலும் ஈடுபாடு கொண்டிருந்தது. பஜனைகள், வழிபாடுகளே அதன் நித்திய விளையாட்டுகள். பள்ளிக்கு அனுப்பினார்கள். ஆனாலும் பெரும்பாலான நேரத்தைக் கோயிலிலேயே செலவு செய்தது இந்தக் குழந்தை. 1992-ம் வருடம் மே மாதம் எட்டாம் தேதி, இவர் தம்மை ஸ்ரீநாராயணி அம்மன் என அறிவித்துக் கொண்டார். தாம் உலகில் திரு அவதாரம் செய்ததின் காரணமும் நாராயணி அம்மனாகத் தாம் உலக மக்களுக்குத் தொண்டு செய்யப் போவதையும் அறிவித்தார். அவரைக் கேள்வி கேட்ட ஒரு பெண்மணிக்கு இவர் தம்முடைய சுயரூபத்தை நாராயணி அம்மன் உருவில் காட்டியதாகச் சொல்லப் படுகிறது. பெரியதொரு சிங்கத்தின் மேல் ஆரோஹணித்த அம்மனைப் பார்த்து அந்தப் பெண்மணி வியந்ததாகவும் சொல்லப்படுகிறது. தர்மம் அழிந்து அதர்மம் அதிகமாகிக் கொண்டு செல்வதால் தாம் அவதாரம் எடுக்க உரிய நேரம் வந்துவிட்டதாகவும், அதனாலேயே தாம் இவ்வுலகில் பிறந்ததாகவும், தாம் நாராயணியாகவே பிறந்திருப்பதாகவும், தம்முடைய பெயர் இனிமேல் சக்தி அம்மா என்றும் அறிவித்தார்.

மனித வாழ்வை மேம்படுத்தவும், வாழ்க்கை நெறிமுறைகளைச் செம்மைப் படுத்தி மனிதரை ஒழுங்கான சீரான நெறியில் வாழ வைப்பதும், உண்மையை வெல்ல வைப்பதும், மக்களை மேன்மேலும் அன்புடனும், சகிப்புத் தன்மை நிறைந்தவர்களாய் மாற்றுவதுமே தம் முக்கியவேலை என்றும், அறிவித்தார். இவர் ஏற்படுத்தி இருக்கும் நாராயணி பீடம் இருக்கும் இடம் திருமலைக்கொடி அல்லது மலைக்கொடி என அழைக்கப் படும் ஒரு கிராமத்தின் அருகில் உள்ளது. வேலூருக்கு அருகே இருக்கும் கைலாசகிரி என்னும் மலை அடிவாரத்தில் உள்ள இந்த ஊர் சுற்றிலும் மலைகள் சூழ்ந்து கண்ணுக்கு அழகான இயற்கைக்காட்சிகள் நிறைந்து உள்ளது. இந்த ஊர் இருக்கும் அமைப்பு மிகவும் வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது. திருப்பதி, திருவண்ணாமலை, திருமலைக்கொடி ஆகிய மூன்று ஊர்களுக்கும் நேராக ஒரு கோடு போட்டால் மூன்று நகரங்களும் ஒரு முக்கோணத்தை உருவாக்குவது புரியும். இந்தத் திருமலைக்கொடியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பல சித்தர்களும், ரிஷி, முனிவர்களும் வாழ்ந்து வந்ததாகவும் சொல்கின்றனர்.

இந்த ஊரில் ஏற்கெனவே ஒரு நாராயணி அம்மன் கோயில் இருந்து வந்துள்ளது. அந்தக் கோயிலில் அர்ச்சகராய் இருந்து வந்த ஸ்ரீநாராயணி அம்மா ஸ்ரீநாராயணியின் பெருமையை அனைவரும் அறியும் வண்ணம் கோயிலைப் பெரிது படுத்தி பொன்னால் இழைக்க விரும்பினார். ஆனால் பழைய கோயிலைப் புதுப்பித்தாலும் அவர் நினைத்த மாதிரிக் கட்ட முடியவில்லை. ஆகவே கோயிலுக்கு எதிரேயே அவருக்குக் கிடைத்த நூறு ஏக்கர் நிலத்தில் ஒரு அற்புதமான கோயிலை உருவாக்கினார். நூறு ஏக்கரில் கோயில் நட்டநடுவே மிக மிக அழகான ஒரு பொய்கைக்கு நடுவே உருவாக்கப் பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழி நட்சத்திர வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. சுற்றிலும் இயற்கையான சூழலில் அந்த நட்சத்திரப் பாதையில் பல மணி நேரம் நடந்து சென்றே பிரதானக் கோயிலை அடையவேண்டும். செல்லும் வழியெல்லாம் அழகான பூங்காக்களும், அதில் புராணங்கள், இதிகாசங்களில் இருந்தும், ஸ்ரீநாராயணி அம்மா சொன்ன பொன்மொழிகளும் பலகைகளில் எழுதப் பட்டுள்ளன.

புனிதமான ஸ்ரீசக்ரத்தை நினைவு கூரும் வகையில் ஏற்படுத்தப் பட்ட இந்த நட்சத்திரப்பாதையில் செல்லுபவர்களுக்கு தெய்வீக சக்தியானது பூமியிலிருந்து ஈர்த்து அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்லும் என்ற எண்ணமே இத்தகையதொரு பாதையை உருவாக்கக் காரணம் என்று ஸ்ரீநாராயணி அம்மா கூறுகிறார். செல்லும் வழியெங்கும் ராமாயணம், மஹாபாரதம், வேதங்கள் போன்றவற்றிலிருந்து பொறுக்கி எடுத்த வசனங்களைப் படிப்பவர்களுக்கு அவர்கள் உலகில் தோன்றியதன் உண்மையான காரணத்தைப் புரிய வைத்து இயற்கையோடு ஒன்றிய தெய்வீக வாழ்வு வாழத் தூண்டும் என்கிறார்.

கோயில் முழுதும் கட்டுவதற்கும், கட்டுமான வேலைகளுக்கும் ஆலோசனைகள் சொன்னது முழுக்க முழுக்க ஸ்ரீநாராயணி அம்மாவே என்று சொல்கின்றனர். அவருக்குக் கிடைத்திருக்கும் தெய்வீக சக்தியானது இப்படி ஒரு அருளை அவருக்கு வாரி வழங்கியதாகவும், அதன் மூலம் தெய்வீகக் காட்சிகளைக் கண்டு உணர்ந்து அவர் சொன்னபடியே கோயில் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். கோயில் கட்ட ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையில் ஊர் மக்கள் கூட இப்படி ஒரு கோயில் கட்டப் படுகிறது என்பதை அறியமாட்டார்கள். கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களும் தாங்கள் அறிந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை என்று சொல்கின்றனர். முக்கியக் கோயில் முழுக்க முழுக்கத் தங்கத்தாலேயே எழுப்பப் பட்டது. ஒன்பதில் இருந்து பதினைந்து வரையில் ஆனதங்கத் தகடுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனால் ஏற்படுத்தப் பட்டத் தங்க மடிப்புகளால் ஆன தங்கத் தகடுகள் ஆகும், அவையே இந்தக் கோயிலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றிலேயே சிற்பங்கள், அலங்கரிக்கப் பட்ட தூண்கள் என உள்ளன. எங்கெங்கு காணினும் தங்கமடா!

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தங்குமிடம், வண்டிகள் நிறுத்துமிடம், நடக்கமுடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் சக்கர நாற்காலிகள், குடிநீர், பால், பிஸ்கட் விற்கும் கடைகள், சுத்தமாகப் பராமரிக்கப் படும் கழிப்பறைகள், நட்சத்திரப் பாதையில் நடந்து செல்லும்போது ஆங்காங்கே அமர்ந்து செல்ல வசதிகள். காபி, டீ கடைகள், பொதுமக்கள் தொடர்பு ஆகியன உள்ளன. இது 2007-ம்வருஷம் ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி பொதுமக்கள் தரிசனத்துக்காகத் திறக்கப் பட்டது. அப்போதிலிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தக் கோயிலுக்கு வருகின்றனர். இந்தக் கோயில் இங்கே வந்ததும் வேலூருக்குச் சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் பலவிதமான முன்னேற்றங்கள் வேலூருக்கும், சுற்றுவட்டார கிராமங்களுக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இனி கோயிலைச் சுற்றி என் பார்வை நாளை பார்ப்போமா?

2 comments:

  1. கோவிலைப் பற்றி படிச்சோன்ன, பார்க்கணும்கிற ஆவல் வந்திருச்சு. நீங்க போயிருந்தீங்களா அம்மா?

    ReplyDelete
  2. அப்பாடா! ஒரு வழியா தங்க கோவிலுக்கு வந்தாச்சா?
    ஆமா ..
    //ஒன்பதில் இருந்து பதினைந்து வரையில் ஆனதங்கத் தகடுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. //
    அப்படின்னா என்ன தகடோட கனமா? gauge?

    ReplyDelete