Saturday, December 25, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 3


முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

முத்தன்ன வெண்ணகையாய்= முத்துப் போன்ற வெள்ளைச் சிரிப்புடையவளே, முத்து ஒளிர்வது போல் உள்ளத்தில் கள்ளமில்லாமல் வெள்ளைச் சிரிப்புடையவளே என்றும் கூறலாம்.
தோழியை இவ்வாறு அழைத்து மேலும் கூறுகிறாள்.
முன் வந்து எதிர் எழுந்து= எங்களுக்கெல்லாம் முன்னாடியே நீ எழுந்துவிடுவாயே?

என் அத்தன் ஆநந்தன் அமுதன் என்றள்ளூறி= ஈசனை என் அப்பன், என் தந்தை இன்பமே வடிவானவன், அமுதமானது அதை உண்டவரை எவ்வாறு வாழ்விக்கிறதோ அவ்வாறே ஈசனின் நாமத்தை நினைப்பவரையும், சொல்பவரையும் வாழ்விப்பவன் என்று உன் வாயில் எச்சில் ஊறும் வண்ணம்

தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடைதிறவாய்= இனிமையான மொழிகளைப் பேசுவாயே, இப்போது வந்து உன் வீட்டு வாசல் கதவைக் கூடத் திறக்காமல் இருக்கிறாயே?? வந்து கதவைத் திற.

என்று இவ்விதம் தோழிப் பெண்கள் கூற வீட்டினுள் இருப்பவள் உள்ளே இருந்த வண்ணமே கூறுகிறாள்.
பத்துடையீர்= இந்தப் பத்துடையீருக்கு இருவிதமான பொருள் சொல்லப் படுகிறது. ஒரு பொருளானது ஈசன் மேல் தீராத பற்றுடைய பக்தர்கள் என்றும், மற்றொரு பொருள், சிவனடியார்களுக்குப் பத்து குணங்கள் உண்டு எனவும் அதைச் சுட்டுவதாயும் கூறுகின்றனர். எது சரியான பொருள் எனக் கற்றறிந்த அறிஞர்களே தெளிவாக்கவேண்டும். அடியார்களுக்கான பத்து குணங்களாய்ச் சொல்லப்படுபவை:
1.நீறும், சிவமணியும் அணிதல்
2.குருவழிபாடு
3.சிவதோத்திரம் செய்தல்
4.மந்திரம் செபித்தல்
5.இறைவழிபாடான சிவபூசை செய்தல்
6.பதிபுண்ணியங்களைச் செய்தல்
7.சிவபுராணம் கேட்டல்
8.சிவாலய பரிபாலனம் செய்தல்
9.சிவனடியாரிடம் உணவு அருந்துதல், அருந்துவித்தல்,
10.அடியார்களுக்கெல்லாம் அடியானாக இருத்தல். மேற்கண்ட பத்து குணங்களையும் உடையவர்கள் என்று உள்ளிருப்பவள் தன் தோழிப்பெண்களைச் சொல்வதாயும் பொருள் வருகிறது.
ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்= ஈசனின் பழமையான அடியார்களான நீங்கள் அனைவரும் எனக்குத் தோழிகள் ஆவீர்கள்.
புத்தடியோம் புன்மை தீர்த்து= ஆ, ஆ, நானோ இப்போது தான் புதியவளாக ஈசனின் அடியாராக ஆகியுள்ளேன். அத்தகைய புத்தடியாரான எங்கள் சிறு சிறு குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு எம்மை மன்னித்து ஆட்கொண்டால் பொல்லாதோ=ஆட்கொண்டால் அது உமக்கு ஒருக்காலும் தீங்காகாதே?" என்று கேட்க, அழைக்க வந்த தோழிகள் மறுமொழியாய்
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ= நீ எவ்வளவு அன்புள்ளவள் என்பதை நாங்கள் அறியாமலா இருப்போம்?

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை= உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் அந்த ஈசனையே நினைப்பதால் அழகியான பெண்கள் சிவனைப் பாடாமல் இருப்பார்களா?

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்= உன்னை அழைக்க வந்த எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும், சரி, போனால் போகட்டும் நீ எழுந்து வா பெண்ணே!

No comments:

Post a Comment