Friday, December 31, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!

திருப்பாவையில் நான்காம் பாடலைப் போல் இந்தப்பாடலும் மழை வேண்டிப் பாடும் ஒரு பாட்டு.

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்= மழை மேகமானது கடல் நீர் ஆவியாவதில் தோன்றுகிறதல்லவா! அதைச் சுட்டுகிறது. கடல் நீரைச் சுருக்கி கடலின் நீர் குறையுமாறு நீரை உன்னுள் முகந்து கொண்டு ஏ, மேகமே நீ எழுந்து மேலே போய் விண்ணில் மழைமேகமாகி

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்= எம்மை ஆட்கொண்டு அருள் பார்வையை எம்மேல் செலுத்திக் கடாக்ஷிக்கும் அன்னையின் மெல்லிய இடையில் தரித்திருக்கும் மேகலாபரணங்களின் ஒளி மின்னல் போல் மின்னுகிறதே, அவ்வாறு நீயும் மின்னலைத் தோற்றுவித்து, மேலும் எம் பிராட்டியாரின் சிறிய திருவடிகளில்

பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்= திருவடிகளில் அன்னை அணிந்திருக்கும் சிலம்பின் சப்தங்கள் போன்ற சப்தங்களை உண்டாக்கி, மேலும் அவளுடைய பிறைச்சந்திரன் போன்ற நெற்றியில் காணப்படும் வில் போன்ற புருவங்களைப் போல் விண்ணில் வானவில் கோலங்களையும் உருவாக்கி

தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு= பிராட்டியை கணநேரமும் பிரியக்கூடாதெனத் தன் உடலில் அவளுக்கும் ஒரு பாகம் அளித்து எந்நாளும் அவளைப் பிரியாத எம் கோமான் , நம் போன்ற பக்தர்களுக்கு

முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே= அன்னை முன்னின்று அருள் செய்யத் தாமும் அருள் செய்யவென எழுந்தருளி இருக்கிறார். அத்தகைய அருள் மழையை ஈசனும், இறைவியும் நம் போன்ற பக்தர்களுக்குக் கேட்காமலே கொடுக்கிறார்கள் அன்றோ.

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!=அத்தகைய கருணை மழை போல நீயும் பொழிவாய் மழையே! இங்கு கருணாமூர்த்தியாகிய ஈசனின் கருணையை மழையோடு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருப்பதாயும் கொள்ளலாம்.

No comments:

Post a Comment