Saturday, December 25, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருவெம்பாவை ஏழாம் நாள்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!

இவை வெளிப்படையாகத் தூங்கும் பெண்ணை எழுப்புவதைக் குறித்தாலும் நம் மனம் விழிப்புறுதலையே குறிக்கும். நம்முள்ளே உறையும் ஈசனை நாம் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் தூங்கும் ஒரு பெண்ணை எழுப்புவதுபோல் நம் அனைவரையும் ஈசனின் சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்க அழைக்கிறார்.

எவ்வளவு எழுப்பியும் இன்னமும் தூங்குகிறாள் அந்தப் பெண். மாயையில் நாம் ஆழ்ந்து கிடக்கிறதையே இது உணர்த்தும். எத்தனையோ சோதனைகள் மூலம் ஈசன் தன்னிருப்பைக் காட்டினாலும் நாம் எங்கே புரிந்து கொள்கிறோம்?? திரும்பத் திரும்ப இவ்வுலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலேயே மனம் செல்கிறது.

அன்னே இவையும் சிலவோ பல அமரர்=அம்மா, தாயே என்று சொல்வோம் அல்லவா, அத்தகையதொரு விளி இது. தாயே, இப்படியும் முன்னுக்குப் பின் முரணாகச் செய்வாயா நீயும்? உனக்கு இப்படியும் நடந்து கொள்ளத் தெரியுமா?

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்= ஈசனை உன்னி மனம் நினைக்கவும் அரியவன் ஆயிற்றே, தேவாதிதேவர்களாலும் இயலாத ஒன்றாயிற்றே, சீரும், சிறப்பும் நிறைந்தவன் அன்றோ,

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்= அத்தகைய பெருமை வாய்ந்த ஈசனின் திருச்சின்னங்கள் ஆன எக்காளம், சங்கு போன்றவற்றின் ஒலிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே நீ சிவன் நாமத்தைக் கூறுவாயே!

தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்=தென்னாடுடைய சிவன் என்பதற்காக, தென்னா என்று ஆரம்பிக்கும்போதே தீயிலிட்ட மெழுகைப் போல் உருகுவாளாம். அப்படி இருந்த நீயா இவ்வாறு மாறிவிட்டாய்?
என்னானை என் அரையன் இன்னமுதென்றெல்லோரும்= என் அப்பன், என் அரசன், என் இன்னமுது, என்று இங்கே உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு பெயரையும் சொல்லிவிட்டோம். அப்படியுமா தூக்கம்??

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்= இப்படி கடூரமான கடின இதயம் கொண்ட அறிவிலிகளைப் போல் சும்மா படுத்துக்கிடக்கிறாயே இன்னமும்?? இந்தத் தூக்கத்தின் வலிமைதான் எவ்வளவு ஆழமாய் உள்ளது?

எப்படிச் சொன்னாலும் திரும்பத் திரும்ப இருளாகிய அறியாமையின் பாலே மனம் செல்கிறது. அதிலே கிடைக்கும் அற்ப சுகங்களிலே மனம் லயிக்கிறது. ஆனந்திக்கிறது. அந்த மனத்தை விழிக்கச் செய்து தன்னுள்ளே ஒளிரும் ஒளியான ஈசனைக் காணச் செய்யவேண்டும்.

No comments:

Post a Comment