Friday, January 7, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

திருப்பள்ளி எழுச்சி நான்காம் பாடல்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே

நம்மைப் போல் ஈசனும் தூங்குவான் என எண்ணி அவனையும் பள்ளியறைக்கு அனுப்புவதை ஒரு மரபாகப் பின்பற்றி வருகிறோம். உண்மையில் ஈசன் எந்நேரமும் இயங்கிக்கொண்டே அல்லவா இருக்கிறான்?? பஞ்சபூதங்களால் ஆன இந்த மானுட உடல் அல்லவோ ஓய்வுக்குப் போகிறது?? அவ்வாறு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நாம் நமது உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்கக் கூடாது என்பதே இந்தப் பள்ளி எழுச்சியின் முக்கிய நோக்கம். நம் உள்ளே குடி கொண்டிருக்கும் ஈசனை எழுப்புவதான் ஐதீகத்தை முன்னிட்டு நம் உள்ளத்துள்ளே உறையும் இறை உணர்வை அன்றோ தட்டி எழுப்புகிறோம்.

இந்த அதிசயக்காட்சியில் வீணை இசைக்கிறது. யாழ் இசைக்கிறது. அதோடு வேத கோஷங்கள் எழும்புகின்றன.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்= வீணைகளைக்கையில் எடுத்துக்கொண்டும், யாழை மீட்டிக்கொண்டும் இசை பாடுகிறவர்கள் ஒருபுறமும், ரிக் முதலான வேதங்களில் இருந்து வேத கோஷங்களைப் பாடுபவர்கள் ஒருபக்கமும்,

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்= இறைவனுக்குச் சூடுவதற்கெனவே மலர்மாலைகளை ஏந்தியவண்ணம் சிலரும்,

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்= மலர்மாலைகள் இல்லாமல் தங்கள் பக்தியையே அவனுக்கு மாலையாகச் சூட்டி தங்களை மறந்த பக்தியில் ஈசனின் திருவுருவைப் பார்த்து அழுது, தொழுது, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குபவர்களும்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே= தங்கள் சிரத்துக்கும் மேல் இரு கைகளையும் கூப்பியவண்ணம் வணங்குபவர்கள் இன்னொரு புறமுமாகக் காண்கின்றனர். திருபெருந்துறை உறையும் சிவபெருமானே,

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்= இவ்வளவு பக்தர்களின் பக்திக்கு முன்னால் என் போன்ற சாமானியர்களின் பக்தியையும் ஏற்றுக்கொள்ளும் எம் ஈசனே, என்னையும் ஆட்கொண்டு அருளி, எனக்கென இன்னருளைப் பொழியும் தலைவனே,

எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே=என்னுள்ளே உள்ள இறை உணர்வைத் தட்டி எழுப்பச் செய், எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாய், என்னுள்ளே நீ உனக்குரிய இடத்தில் அமர்வாய்.

No comments:

Post a Comment