Thursday, July 9, 2009

பிகாபூ!!!! ஐ ஸீ யூ!!!!! முடிவு!

ஆயிற்று. எல்லாம் முடிந்துவிட்டது. கணவன் தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அழக் கூடத் தெம்பில்லை அவனுக்கு. அவன் மனைவியும் அவனை விட்டுப் பிரியப் போகிறாள். பிரிந்து வெகு தூரம் போகின்றாள். இதோ அவள் சாமான்கள் எல்லாம் கட்டி வச்சாச்சு. பிரிவுக்குச் சம்மதமில்லை அவனுக்கு. ஆனால் அவளோ, பிரிந்தால் தான் இருக்கும் இந்த ஒரு குழந்தையையாவது தன்னால் வளர்க்க முடியும் என்று சொல்லி விட்டாள் தீர்மானமாய். இந்த ஒரு குழந்தையையும் இழக்கத் தான் தயாராய் இல்லை என்றும் இதைத் தொடர்ந்து வளர்க்கப் போவதாயும் சொல்லிவிட்டாள்.

இந்தக் குழந்தையின் திட்டமே அதுதான் என்பதை அவன் விளக்கியும் அவள் புரிந்து கொள்ளவில்லை. குழந்தைகள் இறந்தது தன்னால் மறக்கவோ, ஆறுதல் அடையவோ முடியாது எனினும், அது தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை கணவன் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட்டிருந்தால், இந்தக் குழந்தையைக் கண்காணிப்பதை நிறுத்தி இருந்தால் எல்லாம் சரியாய் இருந்திருக்குமோ என்னமோ? ஆனால் இந்தக் குழந்தையைச் சந்தேகத்துடனும், துவேஷத்துடனும் பார்க்கும் கணவனோடு சேர்ந்து இதை வளர்க்கத் தயாராய் இல்லை அவள். பிரிவதே நல்லது என முடிவெடுத்து விட்டாள்.

கனத்த இதயத்துடனேயே இதைச் சொல்லுவதாகவும், அவனோடு வாழ்ந்த வருஷங்களைத் தன்னால் மறக்கவே முடியாது என்றும், இனிமையான நாட்களாகவே கழிந்ததையும் நினைவு கூர்ந்தாள். அப்படிப்பட்ட மென்மையான சுபாவம் கொண்ட அவன் இவ்வாறு மாறியது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் சொல்லிவிட்டுத் தான் தன் குழந்தையுடன் தனியாகப் போவதாகவும், சீக்கிரமே விவாகரத்துக்கு அறிவிப்பு வரும் எனவும், அவள் மறு விவாகம் செய்து கொள்ளப் போவதில்லை எனவும் சொன்னாள். பிரியப் பட்டால் அவன் செய்து கொள்ளலாம் என்பதற்காகவே தான் விவாகரத்துக் கொடுப்பதாகவும் சொன்னாள்.

பிரியும்படியாகவா வாழ்ந்தோம்? அடிப்பாவி! உன்னோடு வாழ்ந்த ஒவ்வொரு கணத்தையும், நிமிஷத்தையும், மணியையும், நாட்களையும், மாதங்களையும், வருஷங்களையும் பெரும் பொக்கிஷம் போல் பாதுகாத்து மனதுக்குள்ளாகப் பூட்டி வைத்திருக்கின்றேனே? நீ அறிய மாட்டாயா? உன்னை முதன்முதல் பார்த்தபோது என்ன உடை அணிந்திருந்தாய் என்பதில் இருந்து இன்று கடைசி நாளான இன்று நீ அணியும் உடை வரையில் என் விருப்பத்தை மதித்தும், எனக்குப் பிடித்தமானதாகவும் அல்லவோ இருந்தது??? என்னை மறந்துவிட்டாயே?? எப்படி நீ என்னைப் பிரிந்து வாழ்வாய்? அழுது அரற்றினான் அவன். கெஞ்சினான் மனைவியிடம். அவள் மட்டுமே போதும் என்றும், வேறு ஒன்றும் வேண்டாம் எனவும், அந்தக் குழந்தையை மட்டும் விட்டுவிடும்படியாகவும் கூறினான்.

எதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள். இதோ தயாராகிவிட்டாள். செல்லப் போகின்றாள். மூட்டை முடிச்சுகள் தயாராகிவிட்டன. எப்படி மனசு வந்து அவனைப் பிரியத் தயாராகிவிட்டாள் அவள்??? தாங்கவில்லை அவனுக்கு. வண்டியில் ஏறும் முன்னர் அவனிடம் வந்து, அவனை அவள் அழைக்கும் அந்தரங்கமான செல்லப் பெயரால் அழைக்கவும் இருவர் கண்களில் இருந்தும் அருவி போல் கண்ணீர் பெருகியது. ஓடிப் போய் அவளை அணைக்கப் போனான். தடுத்தாள் அவள். அருகில் நின்றிருந்த அந்தக் குழந்தையைக் கைகளில் தூக்கிக் கொண்டாள். இனி எனக்கு இவள் தான் உலகம். நான் பெற்றெடுக்காவிட்டாலும், பெற்ற குழந்தையைப் போல் இவளை வளர்க்கப் போகின்றேன். உனக்கு அது சம்மதமாய் இராது. ஆகவே உன்னைப் பிரிகிறேன். இனியேனும் அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள். மாசற்ற அன்பை உனக்கு நான் கொடுத்தேன். ஆனால் எனக்கு நீ கொடுத்ததோ?? 4 உயிர்கள்! இனி உன் வழி வேறு, என் வழி வேறு. நான் போகிறேன்.

திரும்பி நடந்தாள். அவள் கையில் அந்தக் குழந்தை அவளை அம்மாவென அழைத்துக் கட்டிக் கொண்டது. அவன் நிமிர்ந்து பார்த்தான். இப்போது குழந்தையின் முகம் அவள் தோளில். நிமிர்ந்தது குழந்தையும். அவனைப் பார்த்துச் சிரித்தது. வெற்றிச் சிரிப்பு.

அவன் துவண்டு சரிந்தான்.

**********************************************************************************

பல வருஷங்களுக்கும் முன்பு படித்த கதை இது. நாவல் என்றே சொல்லலாம். கதைக் கருவை மாற்றவில்லை. சம்பவங்கள் முன்பின்னாக இருந்திருக்கலாம். கதையின் பெயரோ, எழுதிய ஆசிரியரோ நினைவில் இல்லை. நான்காவது குழந்தை தொட்டிலில் இருந்து விழுந்து இறப்பதும், அவனுடைய ஒரே பெண் லூசி(?)யை அந்தப் பிசாசுக் குழந்தை அவன் கண்ணெதிரே கொல்லுவதையும் படித்த நினைவு இருக்கிறது. மற்றவை முன்பின்னாக இருக்கலாம். ஒரிஜினல் படிச்சவங்களும் சரி, இனி தேடிப் பிடிச்சுப் படிக்கப் போறவங்களும் சரி, என்னை மன்னிக்கணும். என்னை மிகவும் பாதித்த மூன்று கதைகளில் இதுவும் ஒன்று. மற்ற இரண்டு தமிழில் நீல.பத்மநாபனின் தலைமுறைகளும், ஆங்கிலத்தில் A Stone for Danny Fisher நாவலும். இந்தக் கதை ரொம்பவே ஆழமாய் மனசில் பதிந்துள்ளது. பொறுமையாப் படிச்ச புலிக்கும், கோபிக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நடுவில் வந்து கொஞ்சமே கொஞ்சம் படிச்ச வல்லி, திவா, நானானி ஆகியோருக்கும் நன்னிங்கோ!

Wednesday, July 8, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!!!!

லூசிக்குப் பிடித்த விளையாட்டு இந்த ஒளிந்து விளையாடுவதுதான். குழந்தை எங்கே ஒளிஞ்சுண்டாலும் அவன் கண்டு பிடித்துவிடுவான். அது கொஞ்சம் ஏமாற்றமாய் இருக்கும் அவளுக்கு. அதனால் கொஞ்ச நேரம் தேடுவது போல அப்படியும், இப்படியுமாய் அலைந்துட்டுக் கண்டு பிடிச்சேன் என்று சொல்லிக் கண்டு பிடித்ததைக் காட்டிக் கொள்வான். மலர்ந்து சிரிப்பாள் குழந்தை. பூ ஒன்று மலருவதைப் போலவே சிரிப்பும் இருக்கும் அவளுக்கு. பூவிலே மொய்க்கும் வண்டுகள் போன்ற இரு கண்களால் அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது சொர்க்கமே கையில் வந்துவிட்டது போல் தோன்றும். பெருமூச்சு விட்டான் அவன். இந்தக் குழந்தையாவது நிலைத்து இருக்கவேண்டுமே. என்ன செய்யறது?? குழந்தையை ஒரு கணமும் பிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.

தாயிடம் போகாதே என எவ்வாறு சொல்லுவது? அங்கே தான் தர்மசங்கடம். என்ன இருந்தாலும் இன்னும் அவ்வளவு தூரம் மனைவியிடம் கோபம் இல்லை அவனுக்கு. அவள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே குழந்தை தாயைத் தேடிச் செல்லுவதைத் தடுக்கவில்லை. அன்று மாலையில் தோட்டத்தில் நீச்சல் குளத்தினருகே அமர்ந்திருந்தான். குழந்தைகளின் உற்சாகக் கூக்குரல் கேட்டது. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டுப் பின்னர் புரிந்து கொண்டான் தன் பெண் தான் அந்தப் பிசாசோடு விளையாடுகிறது என. எப்படியாவது பிரிச்சுக் கூட்டி வரவேண்டுமே?? எங்கே விளையாடுகின்றாள்?? சுற்றும் முற்றும் பார்த்தான். குரல் மட்டும் கேட்டது. உற்றுக் கவனித்த போது மேலே இருந்து கேட்டது குரல்கள். அவன் ஸ்டுடியோவில் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் பரண் ஒன்று இருந்தது. அங்கே இருந்தா குரல் கேட்கின்றது??

அட, ஆமாம், அடக் கடவுளே, அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?? சற்று நேரத்திற்கெல்லாம் விடையும் கிடைத்தது அவனுக்கு. குழந்தைகள் படுக்கும் அறை ஜன்னலில் இருந்து வரும் குறுகலான படிகளில் இறங்கி, இங்கே வந்து ஏறி இருக்கின்றனர். ஆனால் அந்த ஜன்னல் இப்போ அடைத்திருக்கிறதே? எப்படி??? யார் உள் தாழ்ப்பாள் போட்டார்கள்? குழந்தை மீண்டும் இறங்கி ஜன்னல் வழியாகச் செல்வது என்றால் அவளால் முடியாதே? பயத்தில் கீழே விழுந்துவிட்டால்?? படிகள் வேறே ஒழுங்கில்லை. கொஞ்சம் வழுக்கினாலும் அவ்வளவுதான். ஓட்டமாய் ஓடினான் வீட்டுக்குள்ளே. உள்ளே சென்று அந்தப் பிசாசுக் குழந்தையின் உண்மை சொரூபத்தைப் புகைப்படம் எடுத்துக் காட்டவேண்டிக் கையில் காமிராவும் எடுத்துக் கொண்டு ஓடினான் ஸ்டுடியோவை நோக்கி. விளையாட்டு முழுவீச்சில் ஆடப் பட்டுக் கொண்டிருந்தது.

லூசியை அந்தக் குட்டிப் பிசாசு ஒளிந்து கொண்டு தேடச் சொல்லி இருக்கிறது போல. அது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறதோ தெரியலை. நிமிர்ந்து பார்த்தான் ஒரு கணம் லூசியின் முகம் தெரிந்தது. அப்பாடா! ஒரு நிம்மதியும் பிறந்தது அவன் மனதில். ஆனால் இது என்ன லூசி ஏன் பயத்தில் கத்துகிறாள்??அப்பா, அப்பா, என்னைக் காபபாத்து என்கிறாளோ?இந்தச் சமயம் பார்த்து மனைவியும் இல்லை. எங்கே போனாள்?? இன்னும் வேகமாய் ஓடினான். இப்போது அவனுக்கு அந்தக் குட்டிப் பிசாசின் பின் பக்கம் தெரிந்தது. அது மெதுவாய்ப் பின்னால் வந்து அவன் பெண்ணை, அவனின் கண்ணின் கருமணியை, ஒரே குழந்தையை வேகமாய்க் கீழே தள்ளியது. அவன் ஓடிப் போய்த் தடுப்பதற்குள்..........

முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது. வாழ்க்கையே முடிந்து விட்டது. அவனின் ஒரே பற்றுக் கோடையும் இழந்துவிட்டான். இனி என்ன?? மனைவி துணை வருவாளா?

Monday, July 6, 2009

பிகாபூ!! ஐ ஸீ யூ!! தொடர்ச்சி!

எவ்வளவோ சொன்னான் கணவன் மனைவியிடம். இப்போது உயிருடன் இருக்கும் தங்கள் சொந்த ரத்தமான ஒரே பெண்குழந்தைக்கும் ஆபத்து நேரிடக் கூடாது எனத் தான் அஞ்சுவதாயும் சொன்னான். தனக்கும் பொன்னுக்கு வீங்கி வந்தால் தன்னுடைய உடல் நலம் குன்றிக்குறைபாடு உண்டாக்குவதற்காகவே அந்தக் குழந்தை அந்தச் சமயம் அவனை நெருங்கி வந்ததை எடுத்துக் காட்டினான். அதன் பின்னர் அந்தக் குழந்தை அவனிடம் வரவே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினான். திட்டமிட்டே தான் இந்தப் பெண்ணின் சாமர்த்தியமான, தந்திரமான நடவடிக்கையாலேயே ஸ்டெரிலைஸ் செய்யப் பட்டிருப்பதாகவும், இனி தனக்குக் குழந்தை பிறக்காது என்பதையும் உள்ளம் உருகச் சொன்னான். ஆனால் அவன் மனைவியோ??

என்ன இருந்தாலும் ஒரு பெண் அதிலும் நான்கு குழந்தைகளின் தாய், தன் கண்ணெதிரே தன் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போவதைப் பார்த்துக் கொண்டு எங்கனம் சும்மா இருப்பாள்/ இல்லை, அவள் சும்மா இருக்கவில்லை. இந்தப் பெண் குழந்தையின் திடீர் வரவு அவள் கணவனுக்கு எக்காரணத்தினாலோ பிடிக்கவில்லை. இல்லை, இல்லை அவளுக்குக் கணவனின் நடத்தையின் மேல் துளிக் கூடச் சந்தேகம் இல்லை. ஆனாலும் ஏனோ இவனுக்கு இந்தக் குழந்தையைப் பிடிக்காமல் போயிற்று. காரணம் எல்லாம் ஆய்ந்தறியும் மனப் பக்குவம் அவளிடம் இல்லை. அது மட்டும் இருந்திருந்தால்???? ஆனால் இந்தக் குழந்தை பாவம், ஏதுமறியாச் சிசு. இதைப் போய் சந்தேகப்படுகின்றானே?? முதலில் தங்கள் நாலு மாசக் குழந்தையைத் தொட்டிலில் இருந்து கீழே தள்ளினது இந்தக் குழந்தைதான் என்றான். பின்னர் தங்கள் இரண்டாம் மகன் தவறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டது இந்தப் பெண்ணினால் தான் என்றான். இப்போது மூத்த மகனைக் குளியல் தொட்டியில் தன் தலையில் கட்டி இருந்த நாடாவினால் கொன்றது இந்தக் குழந்தைதான் என்றும் அதற்குச் சாட்சி அவள் பையன் கையில் இருந்த அந்த நாடாவே என்கின்றான்.

ம்ம்ம் ஒன்று இவனுக்கு மூளை குழம்பி இருக்கவேண்டும். இல்லை எனில் வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும். தன் குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?? அவள் சந்தேகம் அதிகமானது. தான் பெற்றெடுத்தவற்றில் மிஞ்சி இருக்கும் ஒரே பெண் குழந்தையின் மேல் தன் கணவனுக்கு அதீதப் பாசம் என்பதையும் அவள் அறிவாள். பார்க்கலாம் என்ன நடக்கின்றது என. மனம் வெறுத்து ஸ்டுடியோவின் உள்ளே அமர்ந்திருந்தான் கணவன். வெளியே தோட்டத்தில் ஊஞ்சலின் ஆட்டமும், குழந்தைகளின் குதூகலக் கும்மாளக்குரலும் கேட்டது அவன் மனதில் உறைக்கவில்லை. மெல்ல எழுந்து செய்வதறியாது ஜன்னலுக்கு அருகே வந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பெண், ஒரே பெண் லூசி வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்த வண்ணம் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். லூசியிடம் அவனுக்கு மிகவும் பாசம், அன்பு அதிகம். மூன்று ஆண் குழந்தைகளின் நடுவே ஒரே பெண் மட்டுமல்ல. சமயங்களில் அவனிடம் ஒரு தாயைப் போல் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ளும். பொன்னிறக் கூந்தல் அலை பாய, ஒரே ரோஜாப்பூவுக்கே கையும், காலும் முளைத்து எழுந்து வந்தாற்போன்ற நிறத்துடன் வெண்ணிற ஆடையில் ஒரு குட்டித் தேவதை போல் ஆடிக் கொண்டிருந்தாள். ஊஞ்சலை யாரோ ஆட்டிக் கொண்ட்ட்ட்ட்ட்....... என்னது// யார் ஆட்டுவது ஊஞ்சலை?? கடவுளே! அந்தக் குட்டிப் பிசாசு அல்லவோ ஆட்டுகின்றது. என் லூசி, லூசி, லூசிக் கண்ணே, உனக்கு எதுவும் ஆகக் கூடாதே?? சட்டென உண்மை உள்ளத்தில் உறைக்க அவன் வெளியே பாய்ந்தான்.

ஊஞ்சல் வேகமாய் ஆடியது. அந்தப் பெண் ஊஞ்சலை வேகமாய் ஆட்டி லூசியை எவ்வாறேனும் கீழே தள்ள முயன்று கொண்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. லூசி பயத்தில் அலற ஆரம்பித்திருந்தாள். தன்னை அறியாமல் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டே ஊஞ்சலின் அருகே சென்ற அவன் அந்தப் பெண் பிசாசை வேகமாய்த் தள்ளிவிட்டான். அது கீழே விழவில்லை. ஆனால் அவனை பார்த்த பார்வை இருக்கிறதே!! அவனால் ஆயுளுக்கும் அந்தப் பார்வையை மறக்க முடியாது. உலகத்து வெறுப்பை எல்லாம் ஒன்று திரட்டிக் கண்களின் வழியாகக் கொண்டு வந்து அவனைப் பார்த்தது. இன்னும் ஒரு நிமிஷம் தாமதித்து வந்திருந்தாயானால் என் வேலை முடிந்திருக்கும். இப்போ நான் இன்னும் ஓர் நாள் பார்க்கவேண்டும். இந்த முறையிலும் கொல்ல முடியாது. வேறு வழி யோசிக்க வேண்டும். என் எதிரியே நீதான் என இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே எனக்குப் புரிந்துவிட்டது. உன்னையும் உன் மனைவியையும் பிரிக்கிறேன் பார்!

இத்தனையையும் அந்த ஒன்றரை வயதுக் குழந்தை வாயினால் பேசவில்லை. ஆனால் அவனுக்கு ஒவ்வொரு எழுத்தாகப் புரிந்தது. அவனுக்குப் புரிந்தது என்பதை அந்தக் குழந்தையும் புரிந்து கொண்டது. அதே சமயம் தான் புரிந்து கொண்டதை அந்தக் குழந்தை உணர்ந்துவிட்டது என்பதை அவனும் உணர்ந்தான். அவன் உடல் சில்லிட்டது. மரம்போல் நின்றான். லூசி மெல்லக் கீழே இறங்கி அவனைத் தொட்டாள்.

"அப்பா, அப்பா!!!!" லூசி அழைத்தாள். அவன் கைகள் தன்னை அறியாமல் லூசியைக் கட்டிக் கொண்டன. வாய் விட்டு விம்மி அழுதான் அவன். அந்தப் பிசாசுக் குழந்தையோ அவனைப் பல மடங்கு வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது. இனி லூசியை ஒரு கணமும் பிரியாமல் இருக்கவேண்டும் என அவன் மனதில் உறுதி பிறந்தது. அது புரிந்தாற்போல் அந்தக் குழந்தை திடீரெனத் திரும்பிப் பார்த்து அவனை நோக்கி ஏளனமாய்ச் சிரித்தது. அவன் உடல் நடுங்கியது.

Friday, July 3, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!! தொடர்ச்சி!

திகைத்துப் போனான் கணவன். இது நிஜமா??? தன்னால் இனி குழந்தை பெற முடியாதா??? எதுக்கும் உள்ளூர் மருத்துவரிடமும் காட்டிடலாமா?? ஆமாம், அதான் சரி, இங்கே பெரிய ஆஸ்பத்திரி. நிறையப் பேர் பரிசோதனைக்கு வருவாங்க. ஆகையால் தவறு நேரிடச் சந்தர்ப்பம் இருக்கு. தனக்கு அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. எந்தக் குறையும் இல்லாமல் இருக்கும் எனக்கு. ஊருக்குத் திரும்பி வந்தான். உள்ளூர் மருத்துவரிடம் சென்றான். அவரிடம் தன்னுடைய சந்தேகத்தைச் சொன்னான். ஆறு மாதங்களாக முயன்றும் தன் மனைவி கர்ப்பம் தரிக்கவில்லை என்றும், தனக்கு இது கவலை அளிப்பதாகவும் குறை யாரிடம் எனத் தெரிந்து கொள்ளவேண்டும் எனவும் சொன்னான். லண்டன் சென்று திரும்பிய தகவலைக் கூறவில்லை. அவன் மனைவியையும் வரவழைத்தார் மருத்துவர். குடும்ப மருத்துவர் என்பதால் உரிமையோடும், கேலியோடும் இருவரையும் ஏதோ சண்டையினால் இணையவில்லை, இப்போப் பேசிப் பார்த்தால் சரியாகும் என்ற நம்பிக்கையுடன் பேச்சுக் கொடுத்தால்..... அவன் சொல்வது உண்மையே. ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கணவன் தன்னை இன்னொரு குழந்தை பிறப்புக்குத் தயார் படுத்தியும் தான் கருவுறவில்லை என்றும், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து கொள்ளவில்லை என்றும் கூறுகின்றாள் மனைவி. இருவரையும் சோதனை செய்து பார்த்த மருத்துவர் முகத்தில் அதிர்ச்சி. கணவனுக்கு எப்படியோ ஸ்டெரிலைஸேஷன் நடந்துள்ளது.

மனைவியிடம் விஷயத்தை மெல்லத் தெரிவிக்கின்றார் மருத்துவர். அவளுக்கும் அதிர்ச்சி. ஆனால் அவள் நினைத்ததோ. லண்டனுக்கு நண்பனைப் பார்க்கப் போவதாய்ப் பொய் சொல்லிவிட்டுக் கணவன் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பானோ??? அப்படித் தான் இருக்கும். இந்த ஒரு குழந்தையை நாம் வளர்ப்பதால் இவன் இந்த முடிவுக்கு வந்துவிட்டானோ?? இருக்கும், இருக்கும். இந்தக் குழந்தையைப் பிடிக்காது என்பதால் மூன்று குழந்தைகளையும் மறைமுகமாய் இறக்க உதவியவன் இவனாய்த் தான் இருக்கணும். என்ன ஆனாலும் சரி, இந்தக் குழந்தையை விடக் கூடாது. இருக்கும் ஒரே பெண்ணையும் பாதுகாக்கணும். மனைவி முடிவெடுத்தாள். பரிசோதனையின் முடிவு அவளிடம் சொல்லப் பட்டதும் கணவன் இருக்கும் திசை கூடத் திரும்பால் வீட்டை நோக்கிச் சென்றாள்.

கணவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. என் ஆருயிர் மனைவி, எனக்கு இப்படியானதுக்குக் காரணம் கூடக் கேட்கவில்லை. அவள் பாட்டுக்குப் போயிட்டாளே? எல்லாம் இந்தப் பாழும் குழந்தையால் வந்தது தானே?? இது என்ன குழந்தை? பிசாசுக் குழந்தை! அனைவரின் ரத்தத்தையும் உறிஞ்சி வாழும் குழந்தையாக இருக்கிறதே. ம்ம்ம்ம்?? ஒரு பறவை கூட இப்படித் தானே?? சட்டெனத் தான் காட்டிற்குத் தன் வேலை விஷயமாய் சில படங்கள் பிடிக்கச் சென்ற போது பார்த்த ஒரு அதிர்ச்சிக் காட்சியையும், தன்னையும் அறியாமல் தான் அதைப் படம் பிடித்து வைத்திருப்பதையும் நினைவில் கொண்டு வந்தான். வீட்டை நோக்கி நடந்தான். மனைவியிடம் எப்படியாவது அந்தப் படத்தைப் போட்டுக் காட்டவேண்டும். ஒரே நினைவுடன் வீட்டிற்கு வந்தான்.

அவள் அவனிடம் பேசவே இல்லை. எல்லாம் இயந்திரத்தனமாய் நடந்தது. ஆனாலும் அவன் தன் ஒரே மகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான். வேலைகளை முடித்து மனைவி ஓய்வாய் இருக்கும் சமயம் அவளை அழைத்து இந்தப் படத்தைப் பார் என்று சொன்னான். காட்டில் கிட்டத் தட்ட ஒரு மாதத்துக்கு மேல் அவன் தங்கி இருந்தபோது எடுத்த படம் அது. அவளுக்கும் ஓரளவு தெரியும். என்றாலும் வேண்டாவெறுப்பாய் அமர்ந்தாள் படத்தைப் பார்க்க. ஆண் குருவியும் பெண் குருவியும் சந்தோஷமாய்க் கூடு கட்டி முட்டை பொரிக்கின்றது. ஆண் குருவி வெளியே சென்றுவிடுகிறது. பெண் குருவியும் உணவுக்காகப் போயிருக்கையில் ஓர் குயில் பறவை, ஆங்கிலத்தில் Cuckoo என அழைக்கப் படும் பறவைகள் இரண்டு வந்து அந்தக் கூட்டில் குருவியின் முட்டைகளோடு தங்கள் முட்டையையும் இட்டன.
இது தெரியாத அப்பாவிக் குருவி அந்த முட்டையையும் சேர்த்தே அடைகாத்தது. முட்டைகள் பொரிந்து குஞ்சு வெளியில் வரும்போது அப்பாவிக் குருவி தன்னுடைய குஞ்சு என்றே நினைத்துக் குயில் குஞ்சுக்கும் உணவூட்டியது. உணவைப் பெற்றுக் கொண்ட குயில்குஞ்சோ அதற்குப் பரிகாரமாய் குருவியின் ஒரு குஞ்சைக் கீழே தள்ளியது.

கீழே விழுந்த குருவிக் குஞ்சு இறந்தது. தன்னுடைய ஒரு குஞ்சு இறந்துவிட்டதைக் கவனித்தும் அப்பாவியும், அசடும் ஆன குருவி செய்வதொன்றும் அறியாமல் பேசாமலே இருந்தது. மேலும் அதிகப் பாசத்துடனேயே குயில்குஞ்சிற்கு உணவூட்டியது. இப்படியே ஒவ்வொரு குஞ்சாகக் குருவிக் குஞ்சைக் கீழே தள்ளிக்கொன்று முடித்த குயில்குஞ்சிற்கு இப்போது பறக்கும் சக்தி வந்துவிடக் கூவிக் கொண்டே பறந்து சென்றது. அப்போதும் உண்மை அறியாமல் அசடாகவே அடுத்த முட்டை பொரிப்புக்குத் தயாராகிக் கொண்டிருந்தது குருவி.

இந்தப் படத்தைப் போட்டுக் காட்டிவிட்டுக் கணவன் இந்தக் குயில் போலத் தான் இந்தப் பெண்ணும். நம் குழந்தைகளை ஒவ்வொன்றாய்க் கொன்றுவிட்டுத் தான் மட்டும் தனியாக இருக்க நினைக்கின்றாள். நம் அன்பு, பாசம், பணம், சொத்து எல்லாவற்றையும் அவளே அடைய நினைக்கிறாள். என்று பலவிதங்களிலும் எடுத்துச் சொன்னான். மனைவி அத்தனையையும் பொறுமையாய்க் கேட்டுக் கொண்டாள். பின்னர் சிரித்தாள்.

Thursday, July 2, 2009

பிகாபூ!! ஐ ஸீ யூ!! தொடர்ச்சி!

குழந்தை அவனை விட்டு அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. எப்படியாவது தன்னிலிருந்து பிரித்துத் தாயிடம் விட நினைத்தால் அது அவனை அட்டை போல் ஒட்டிக் கொண்டது. அவன் மனைவி வேறே உடல் நலம் சரியில்லாத குழந்தை, அதிசயமா அவன் கிட்டே வந்து ஒட்டிக்கிறது. அதுக்கு இப்போ தந்தையின் அரவணைப்புத் தேவை போல. விரட்டாதீங்க என்று கண்டிப்போடு கட்டளை போடவே வேறே ஒன்றும் செய்ய முடியவில்லை. மெல்ல மெல்லக் குழந்தைக்கு உடல் நலம் சரியாப் போச்சு. ஆனால் அவனுக்கு வந்துவிட்டது இந்தப் பொன்னுக்கு வீங்கி. நல்ல ஜுரம் வேறே. அந்தப் பிசாசுக் குழந்தையோ, வந்த காரியம் முடிஞ்சாப்பல அவனுக்கு ஜுரம் வந்ததுமே அது அம்மாவிடம், அதான் அவன் மனைவிதானே தாய்க்குத் தாயாக் கவனிக்கிறா?? அவளிடம் சென்றுவிட்டது. இந்தக் குழந்தை வெகு தந்திரக் காரக் குழந்தையாக இருக்கிறதே?? கவலைப்பட்டான் கணவன். மருத்துவரைக் கலந்தாலோசித்தான். நூற்றில் ஒருவருக்கு எந்தக் குறையும் ஏற்படாது எனவும், அந்த ஒருவராக அவன் இருக்கப் பிரார்த்திக்கலாம் எனவும் மருத்துவர் சொன்னார்.

உடல்நலம் சீரானது அவனுக்கும். அவனுக்கு உடனேயே மனைவியைப் போய்ப் பார்க்கவேண்டும். அவளுடன் ஓர் முழு இரவைக் கழிக்கவேண்டும் என்ற ஆவல் தீரவில்லை. மேலும் அவன் ரத்தம், அவன் ஊன், அவன் உயிர் எல்லாவற்றிலும் அவனும், அவளும் இணைந்த ஒரு குழந்தை வேண்டும் அவனுக்கு. அவனுடைய ஒரே பெண்ணிற்குத் துணை வேண்டும். அது ரத்த சம்பந்தமாக இருக்கவேண்டும். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அல்லது பல மாதங்களுக்கு மேல் கிட்டத் தட்ட ஒரு வருஷம் ஆகிவிட்டதோ? பிரிந்து இருந்ததாலேயே என்னமோ அவன் மனைவியும் அவனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தாள். ஆயிற்று, ஒரு மாதம், இரு மாதம் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆறுமாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் அவன் மனைவி கருவுறவில்லை. அவள் அது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தாள். ஒருவேளை கர்ப்பத் தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றாளோ?

அவளறியாமல் அவள் அறையையும், அலமாரியையும் உடை வைக்கும் இடங்களையும் மற்ற அந்தரங்க இடங்களையும், அவனுக்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசிய இடங்களையும் சோதனை போட்டான். ம்ஹூம். எதுவும் இல்லை. கவலையில் ஆழ்ந்தான் கணவன். மருத்துவரைப் பார்க்கவேண்டியது தான். இங்கே வேண்டாம். உள்ளூர் என்பதாலும் மருத்துவர் குடும்ப மருத்துவர் என்பதாலும் வெளியே தெரியும். ஆகவே லண்டன் சென்று இந்தக் குழந்தை பிறக்கச் செய்வதில் கை தேர்ந்த மருத்துவர்களில் ஒருவரிடம் சென்றான். எல்லாவிதமான சோதனைகளும் செய்யப் பட்டன. அவனுடன் பேசினார் மருத்துவர். அவன் மனைவியிடமும் பேசவேண்டும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் விஷயத்தை எடுத்துச் சொல்லி மனைவிக்குத் தெரிய வேண்டாம் என்றும் சொல்ல, மருத்துவர் அவனை விசித்திரமாய்ப் பார்த்தார். கடைசியில் ஒரு முக்கியப் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவும் வந்தது. அவனுக்குக் குழந்தையே இனிமேல் பிறக்காது. வந்து போன பொன்னுக்கு வீங்கியால் அவனுக்கு இந்தக் குறை ஏற்பட்டுவிட்டது. He is sterilised!

Tuesday, June 30, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!!!!

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் கணவன். சிறு வயதில் இருந்தே குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் அவனுக்கு. தனக்குக் குறைந்த பட்சமாய் ஆறு குழந்தைகளாவது வேண்டும் என நினைப்பான். அதே போல் அவன் எண்ணத்துக்கு ஒத்த மனைவியும் கிடைத்தாள். வேலையும் அவன் குழந்தைகளைச் சந்தோஷப் படுத்தும் கார்ட்டூன் சித்திரங்களை உருவாக்கும் பணியாகவே தேர்ந்தெடுத்திருந்தான். மனைவியின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது அதற்கு. திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகளில் இருவருக்கும் ஒரு சின்னக் கருத்து வேறுபாடு கூட இருந்ததில்லை. அவள் மனதை அவனும், அவன் மனதை அவளும் படித்தாற்போல், சொல்லி வைத்தாற்போல் எல்லாம் நடக்கும். மணி, மணியாய் நாலு குழந்தைகள். ம்ம்ம்ம்ம்ம் அதிலே மூன்று போய்விட்டது. மூன்றும் ஆண் குழந்தைகள். ஒருவேளை, ஒரு வேளை, அந்தப் பிசாசுப் பெண்ணிற்கு ஆண் வர்க்கம் என்றால் பிடிக்காதோ???

தலையில் வைத்த கையை எடுக்கவில்லை அவன். நேற்றுத் தான் வரைந்த சித்திரங்களைப் பார்க்கலாம் என்று அவற்றின் திரையை விலக்கினால்!! ஆஹா!! என்ன இது?? தன்னை அறியாமல் தன் இறந்த குழந்தைகளையே வரைந்திருந்தான் அவன். கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாய்ப் பெருகி ஓட ஆரம்பித்தது. ஸ்டுடியோவின் கதவை யாரோ திறக்கும் சத்தம். ஆம், வீட்டிலேயே அருகேயே ஸ்டுடியோ வைத்திருந்தான் அவன். வீட்டை ஒட்டியே அலுவலகமும் அமைந்திருந்தது வசதியாகவே இருந்தது. யார் வருகின்றார்கள் எனத் திரும்பிப் பார்த்தான். அவன் மனைவியே தான். கையில் அந்தக் குழந்தையும். யாரோ பெற்ற குழந்தை! அதன் முகத்தைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருந்தது.

தாயைக்கட்டி அணைத்துக் கொண்டிருந்தது. அவன் மனைவி கையில் காலை ஆகாரத்துடன் காஃபியும் இருந்தது. மெல்ல வந்து அவனருகில் அமர்ந்தாள் அவள். அவன் பார்த்துக் கொண்டிருந்த சித்திரங்களை அவளும் பார்த்தாள். கண்களில் கண்ணீர் பெருகியது. என்ன இருந்தாலும் பெற்ற தாயல்லவா?? கணவனைப் பார்த்தாள். அவள் நினைத்தது, என்னமோ தவறு செய்துவிட்டார், இந்தக் குழந்தையை வளர்ப்பதால். இன்று பூராவும் இவரோடு கழித்து விட்டால்?? கொஞ்சம் சமாதானம் அடைவார். அப்போது மெல்ல இந்தக் கண்ணான கண்மணியைப் பற்றி எடுத்துக் கூறிச் சொன்னால் சமாதானம் அடைவார். கணவனிடம் சமாதானமாகவே பேசத் தொடங்கினாள். இந்தக் குழந்தை வந்ததில் இருந்து இல்லாத அன்பை மனைவியிடம் கண்டான் கணவன். திடீர்னு என்ன என்று தோன்றியது. அடுத்த கணம் தன் மேலேயே கோபம் வந்தது. எவ்வளவு அந்நியோனியமாய் வாழ்க்கையைக் கழித்தோம்??இப்போ என் அன்பு மனைவியை நான் சந்தேகப் படும்படியான சூழ்நிலையா??? பெருமூச்சு விட்டான்.

கணவன் தோள்களில் தன் கைகளை வைத்தாள் மனைவி. அவளை, அவனும், அவனை அவளும் நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தார்கள் அவன் மனதில் திடீரென ஓர் எண்ணம். என்ன இருந்தாலும் நமக்கென ஓர் ஆண்குழந்தை கூட இல்லையே?? இன்றிரவு, இன்றிரவு மட்டும் இவள் சம்மதித்தால், ஆஹா, ஓர் ஆண்குழந்தைக்கு முயலலாமே?? நாம் பெற்றெடுத்திருக்கும் ஒரே பெண்குழந்தை தனியாகப் போகக் கூடாது என்றால் சம்மதிப்பாளோ?? மெல்லப் பேச்சைத் தொடங்கினான். கணவனின் எண்ணம் புரிந்தது அவளுக்கு. கணவனின் ஆசையை மறுக்கும் எண்ணம் அவளிடமும் இல்லை என்றாலும் அடுத்து ஓர் குழந்தைக்காக என்பதை நினைத்தால், கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. ஏற்கெனவே மூன்று குழந்தைகளைப் பறி கொடுத்தாச்சு. இன்னும் இருப்பது ஒரு பெண் குழந்தைதான். இந்தக் குழந்தைதான் அவளுக்குத் துணையாக இருப்பாளே??

என்றாலும் உடனேயே கணவனிடம் சொல்லிவிடக் கூடாது. சற்றே பொறுத்து அவன் மனம், உடல் அமைதி அடைந்திருக்கும்போது சொல்லவேண்டும். அவ்வளவில் அவள் கணவனுக்குச் சம்மதம் என்பதை மட்டும் அவனுக்குப் புரியும் வகையில் தெரிவித்துவிட்டுக் குழந்தையுடன் சென்றாள். கணவனுக்கோ தலை கால் புரியவில்லை. இன்றிரவு அவள் நம்மிடம் மயக்கத்தில் இருக்கும்போது அந்தக் குழந்தையைப் பற்றி அவள் மனதில் பதியும் வண்ணம் நன்கு எடுத்துச் சொல்லி அதை அவளிடமிருந்து பிரிக்க வேண்டும். சாத்தான் குழந்தை! எங்கிருந்து வந்தது??? அன்று பூராவும் இந்தக் கனவுடனேயே அவன் பொழுது போயிற்று. கேட்டிருந்த இரு தியேட்டர்காரர்களுக்குத் தேவையான கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தான். மதிய உணவும் முடிந்தது. மாலை அவன் காலாற நடந்துவிட்டு வரலாம் என்று சென்றான். மனைவி வராதது இப்போது அவனைப் பாதிக்கவில்லை. இரவு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான். திரும்பி வந்தவன் இரவு உணவுக்காகக் காத்திருக்கும்போது மனைவி வந்தாள் முகத்தில் அப்பிய ஏராளமான கவலையுடன். அவனை அழைத்தாள்.

அந்தப் புதிய குழந்தையின் பெயரைச் சொல்லி அதை வந்து பார்க்கும்படிக் கூப்பிட்டாள். என்ன இது? சாதாரணமாக நம்மை அழைக்க மாட்டாளே?? கணவன் அவளோடு சென்றான். குழந்தையின் தொட்டிலைப் பார்த்தான். குழந்தை சுருண்டு படுத்திருந்தது. இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது?? அவனுக்கு ஏதோ சந்தேகம். குழந்தையின் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னாள் மனைவி. அரை மனதோடேயே தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் அனலாய்த் தகித்தது. மருத்துவரை வரவழைக்கட்டுமா எனக் கேட்டான் மனைவியிடம். அவள் ஆமோதிக்க மருத்துவர் வந்து குழந்தையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டுக் குழந்தைக்குப் பொன்னுக்கு வீங்கி(mumps) என்றும், சரியாகிவிடும் இரண்டு, மூன்று நாட்களில் என்றும் சொன்னார். கூடவே இதே ஆண் குழந்தை என்றால் அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்றும் சொல்லிவிட்டு அவளையும், அவனையும் பார்த்து விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டே மேலும் சொன்னார். உன் கணவனை நெருங்க விடாதே. இது ஒட்டுவாரொட்டி போல. இந்தப் பொன்னுக்கு வீங்கி உன் கணவனுக்கு வந்தால், அப்புறமாய் அவனுக்குச் சந்ததிகளை உண்டாக்கும் ஆற்றலே போய்விடும் என்று சொன்னார். மனைவி வெட்கத்துடன் மையமாய்ச் சிரிக்கக் கணவனுக்குச் சுருக்கென்றது.

அன்றிரவு அவன் வழக்கம்போல், அதாவது இந்தக் குழந்தை வந்து சேர்ந்ததும் நடப்பது போன்ற வழக்கத்துடன் தனியாகவே படுத்துக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவன் மனைவி இந்தக் குழந்தையை அவனுக்குப் பிடிக்காது என்பதால் அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. இப்போது எல்லாம் கூடி வரும் சமயம் இந்தச் சனியன் உடம்பை வரவழைத்துக் கொண்டுவிட்டதே! இதான் சாக்குனு அவள் இங்கே எட்டிக் கூடப் பார்க்கலையே?? என்ன செய்வது? திடீரென ஓர் யோசனை, கணவனுக்குள்ளாக. ஆஹா, அந்த மருத்துவர் சொன்னது!! அந்தக் குழந்தை பக்கம் போகக் கூடாது என்று சொன்னாரே??? நல்லவேளை! சனியன் வராது இங்கே! படுக்கை அறைக் கதவைச் சும்மாச் சாத்திவிட்டு நிம்மதியாகத் தூங்கினான் அவன். காலை எழுந்திருக்கும்போதே சின்னக் கால்களும், கைகளும் அவனைச் சுற்றி அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனாகத் தன்னோட பெண்தான் என நினைத்த வண்ணம் அந்தக் கால்களையும், கைகளையும் சிறு உடலையும் சேர்த்துத் தூக்கி நெஞ்சோடு அணைத்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தான். அவன் கையில் இருந்ததைப் பார்த்த அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது, அந்தக் குழந்தை, யாரோ பெற்றெடுத்துப்போட்டுவிட்டுப் போன அந்தப் பெண் குழந்தை! தூங்கிக் கொண்டிருக்கோ? அவன் நினப்புப் புரிந்தாற்போல சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தது அது. பார்த்த பார்வை! ஏளனமாய்க் கண்களாலேயே சிரிக்கிறதோ அது???? பதினையாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டினாற்போல் துடித்தான் அவன்.

பிகாபூ!! ஐ ஸீ யூ!!!

குழந்தை முகத்தைப் பார்த்தால் சற்றுமுன்னர் தன்னை வெறுப்போடு பார்த்தது இந்தக் குழந்தைதானா என்னும்படி இருந்தது. தாய் முகத்தைப் பார்த்துச் சிரித்ததோடு அல்லாமல், தன்னைத் தூக்க வேண்டும் என்றும் செல்லமாய் அழைப்பு விடுத்தது. அவன் மனைவியும் அந்தக் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள். இந்தக் குழந்தையின் பெற்ற தாய் பெற்றுப் போட்டுவிட்டுப் போனதில் இருந்து இவளே தன் பாலையே கொடுத்து வளர்த்து வருகின்றாள். தன் சிறிய மகன் பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதிலும் இருவருக்கும் சற்றும் வேறுபாடில்லாமல் தன் பாலையே கொடுத்து வளர்த்தாள். இப்போ அவள் மகனும் இல்லை, பால் குடிக்க. இந்தக் குழந்தைக்கே தன் பாலைக் கொடுக்கின்றாள். குழந்தையும் நன்கு ஆரோக்கியமாய் நன்றாகவே இருக்கிறது. நம் குழந்தையும் தாயிடம் பால் குடிப்பதைப் பொறுக்காமலேயே கொன்றுவிட்டதோ?? கணவன் மனதில் ஓர் எண்ணம் ஓட, அவன் எண்ணம் புரிந்தது போல் அந்தக் குழந்தை அவனைத் திரும்பிப் பார்த்தது. கண்களா அது?? இரு பளிங்குக் கற்களா?? உணர்ச்சிகள் மாறி மாறிக் கொட்டுவதால் கண்கள் என்றே சொல்லலாம். எப்படிப் பட்ட உணர்ச்சிகள்??? அவனிடம் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றதே அந்தக் கண்கள். சொல்லாமல் ஏதோ செய்தியைச் சொல்லுகின்றதே? ம்ம்ம்ம்??? என்ன செய்தி??

கணவனுக்குள் திடீரென ஓர் எண்ணம். தன் மூத்த மகனையும், ஒரே மகளையும் தான் இன்னும் கவனமாய்ப் பார்த்துக்கொள்ளவேண்டும் என. இந்த எண்ணம் தோன்றியதும் அவர்களை அவன் திரும்பிப் பார்க்க, அந்தக் குழந்தையும் அவன் எண்ணம் புரிந்தது போல் அவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு அவனையும் பார்த்தது. சிரித்தது. அந்தச் சிரிப்பு, அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள். உடல் சில்லிட்டது கணவனுக்கு. மனைவியின் பெயரைச் சொல்லிக் கத்தினான். உடனேயே அந்தக் குழந்தையை பாதிரியாரிடமாவது ஒப்படைக்குமாறு கெஞ்சினான். இது நாம் பெற்ற இரு குழந்தைகளின் எதிர்காலம். அதை நினைத்தாவது இந்த உதவியைச் செய் என வேண்டினான். அவன் மனைவி அவனை இப்போது சற்றே வெறுப்போடு பார்த்தாள். ஒரு பச்சைக் குழந்தையின் மேல் அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றானே?? பிறந்த உடனேயே தாயை இழந்தது இது. தகப்பன் யாரெனத் தெரியவில்லை. பால் வடியும் இதன் முகத்தைப் பார்த்தாவது தன் கணவன் மனம் மாற மாட்டானா?? இல்லை, இல்லை அவர் நல்லவர் தான். அடுத்தடுத்து இரு குழந்தைகள் இறக்கவும் ஊரிலும் எல்லாரும் இந்த வீட்டைச் சாத்தான் சுத்துகிறது என்று பேசவும் சற்றே மனம் தடுமாறி விட்டார்.

சில மாதங்கள் கழிந்தன. எத்தனை நாட்கள் ஆனாலும் தன்னிரு குழந்தைகளை இருவராலும் மறக்கமுடியவில்லை. ஒருநாள் பெரிய மகன் குளிக்கக் குளியலறைக்குச் சென்றான். வெகுநேரம் ஆகியும், அவன் திரும்பி வரவே இல்லை. கணவன் மனதில் பயம் பிடித்துக் கொள்ளக் குளியலறைக்குச் சென்றான். அங்கே குளியல் தொட்டியில் அவன் மகன் பிணமாய்க் கிடந்தான். அவன் பக்கத்தில் அந்தக் குழந்தையின் உடலில் இருக்கும் நாடா. அந்தக் குழந்தை இங்கே வந்ததா?? சட்டெனத் திரும்பிப் பார்த்த கணவன் கண்களில் சற்றுத் தூரத்தில் இருந்த வாயிலுக்குத் தவழ்ந்து சென்று கொண்டிருக்கும் குழந்தை கண்களில் பட, வேகமாய் ஓடி அந்தக் குழந்தையை இன்னிக்கு இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று ஓட, அவன் மனைவி அந்தக் குழந்தையைப் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டு வர, அவன் மரமாய் நின்றான். குளியல் தொட்டிக்கருகில் வந்து பார்த்த மனைவி அலறினாள். அவள் அலறல் நிற்கவில்லை. அவள் மனதில் கணவனே தன் மகனைக் கொன்றிருப்பானோ என சந்தேகம்!