Monday, February 22, 2016

சுசீந்திரத்தில் தரிசனம்!

கன்யாகுமரியில் பகவதி அம்மன் தரிசனம் எளிதாகவே இருந்தது. ஏனெனில் அங்கே நுழைவுச் சீட்டு அனுமதி என்பதே இல்லை. கோயிலில் நுழையும்போதே கொட்டை எழுத்தில் எழுதிப் போட்டிருக்கின்றனர். ஆகவே நிம்மதியாகப் போய் நன்றாக பகவதியைத் தரிசனம் செய்யலாம். மக்களை அவரவர் பொறுப்பில் விட்டால் கொஞ்சம் கூடச் சுணக்கம் இல்லாமல் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள் என்பதற்கு இது ஓர் அத்தாட்சி எனலாம். தரிசனம் முடிந்து முக்கடல் கூடும் சங்கமம் சென்று பார்த்தோம்.  அங்கேயும் முன்னர் இருந்தாற்போல் பார்க்க வசதியாக எல்லாம் இல்லை. கூட்டம் வேறு. :( பின்னர் எங்கள் வண்டி ஓட்டுநர் வரச் சொன்ன இடத்துக்குக் கிளம்பினோம். கிளம்பும்போது ஓர் கடையில் முந்திரிப்பருப்பு நன்றாக முழுதாக இருக்கவே வீட்டு உபயோகத்துக்குக் கால் கிலோ வாங்கிக் கொண்டோம். பின்னர் வண்டியில் ஏறிக் கொண்டு சுசீந்திரம் போகச் சொன்னோம்.

இதற்கு முன்னர் வந்தப்போவும் சுசீந்திரம் போனோம். என்றாலும் இப்போதும் போக விரும்பினோம். இந்தக் கோயிலும் சிறப்பு அனுமதி இல்லாக் கோயில். அநேகமாய்த் தென் தமிழ்நாட்டிலேயே பல கோயில்களில் சிறப்பு அனுமதி இல்லாமல் பார்க்க முடிகிறது.  படங்கள் கிடைக்கவில்லை! :(  மடிக்கணினியை மீண்டும் நிறுவுகையில் எங்கேயோ போய் மாட்டிக் கொண்டிருக்கிறது போல! :) சுசீந்திரம் தாணுமாலயர் கோயில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் சேர்ந்திருப்பதாகச் சொல்லப்படும் கோயில்களில் ஒன்று.

இந்த சுசீந்திரம் புராண காலத்தில் ஞானாலயம் என்று அழைக்கப்பட்டதாகச் சொல்கின்றனர். இங்கே அத்திரி முனிவரும் அவர் மனைவி அநசுயாவும் தவம் செய்து வந்தனர். அநசுயா மிகப் பெயர் பெற்ற தபஸ்வினி என்பதோடு கற்புக்கரசியும் கூட. மும்மூர்த்திகளுக்கும் அவர்கள் மனைவியர் ஆன முப்பெரும் தேவியருக்கும் அவள் கற்பைச் சோதிக்கும் எண்ணம் ஏற்பட்டது. ஒரு சமயம் இமயமலையில் தவம் செய்ய வேண்டி அத்திரி முனிவர் மனைவியான அநசுயாவைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து மும்மூர்த்திகளும் துறவி வேடங்களில் வந்து அநசுயாவிடம் பிக்ஷை கேட்டனர். அநசுயாவும் ஆசிரமத்துக்குள் அழைத்து அவர்களுக்கு அதிதி உபசாரங்கள் செய்யத் தொடங்கினாள்.

உணவு படைக்கும் நேரம் மூவரும் முழு உடை அணிந்த ஒருவர் அளிக்கும் உணவை நாங்கள் ஏற்பதில்லை என்றும் ஆடை அணியாமல் உணவு படைத்தால் மட்டுமே ஏற்போம் என்றும் கூறினார்கள். முதலில் செய்வதறியாமல் திகைத்தாலும் அநசுயா சமாளித்துக் கொண்டு தன் தவ பலனாலும், கற்பின் பலனாலும் மூவரையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்தப் பச்சிளங்குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொஞ்சிப் பாலூட்டித் தாலாட்டித் தொட்டிலில் இட்டுச் சீராட்டினாள். தங்கள் கணவன்மார் மூவரும் குழந்தைகளாக மாறிவிட்டதை அறிந்த முப்பெரும் தேவியரும் திகைத்துப் போயினர். அநசுயாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி அவளைச் சோதிக்கவே இம்மாதிரி நடந்து கொள்ள நேர்ந்தது என்பதைத் தெரிவிக்க அநசுயாவும் அவர்களை மீண்டும் பழைய உருவுக்கு மாற்றினாள். மூவரும் தங்கள் தங்கள் அம்சத்தில் அநசுயாவுக்கு ஒரு குழந்தை பிறப்பான் என்று அருளிச் செய்தனர். ஒரு சிலர் மூவரின் ஒன்று சேர்ந்த அம்சமாக தத்தாத்ரேயரை அநசுயாவுக்கு அளித்ததாகவும் சொல்கின்றனர்.

அத்திரி முனிவரும் திரும்பி வந்ததும், அநசுயா நடந்ததைச் சொல்ல அத்திரி முனிவர் மும்மூர்த்திகளையும் மனமார வேண்டி நின்றார். அவருடன் அநசுயாவும் பிரார்த்தனைகள் செய்ய மூவரும் அங்கே இருந்த கொன்றை மரத்தினடியில் காட்சி கொடுத்தனர்.  இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக இங்கே கோயில் கட்டப்பட்டது என்றும் மூவரும் சேர்ந்த ஒருவராக தாணுமாலயன் என்னும் பெயரில் ஈசன் காட்சி கொடுப்பதாகவும் ஐதீகம். சிவன்(தாணு) , மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா) என்று மூவரும் இங்கே ஓருருக் கொண்டு காட்சி அளிக்கின்றனர்.

Image result for தாணுமாலயன் திருக்கோவில்

நன்றி விக்கிபீடியா!


தொடரும்!

Friday, December 11, 2015

மறுபடி கன்யாகுமரிக்கு வாங்க! இங்கே இருந்து பார்க்கலாம்!

டிடியைத் தவிர வேறே யாரும் இங்கே வரலை. அதனால் பரவாயில்லை. நான் தொடர வேண்டியது தான் என நினைக்கிறேன். கொஞ்சம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். அதான் முடியமால் போகிறது. போகட்டும்!

கன்யாகுமரியைப் பத்திக் கடைசியா எழுதிட்டு இருந்தேன். இல்லையா? கன்யாகுமரியின் சில படங்களைப் போடுகிறேன் இங்கே. அங்கேயும் போட்டிருந்தாலும் இங்கேயும் பார்த்துக்கலாமே!ம்ம்ம்ம்! படங்களை ஆல்பத்திலேருந்து எடுக்கிறது கொஞ்சம் கஷ்டமாப் போச்சு! அப்புறமா எப்படியோ ஒரு மாதிரியா எடுத்திருக்கேன். :)

முதல்முறை கன்யாகுமரி வந்தப்போ அங்கே கீழே தெரியும் மண்டபத்தில் இறங்கிப் பார்த்திருக்கோம். இப்போ அந்த வழி அடைக்கப்பட்டிருக்கிறது.


மண்டபத்திற்கு இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள். இது சரியாகக் கோயிலில் அம்மன் குடியிருக்கும் இடத்துக்கு நேரே வரும். இங்கே ஒரு வாயில் உண்டு. இதன் வழியாகத் தான் அம்மனின் மூக்குத்தி ஒளிவிடுவதைப் பார்ப்பார்கள் எனச் சொல்வது உண்டு. இப்போது இந்த வாயில் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. 



கோயிலின் கோபுரம் கொஞ்சம் தூரத்திலிருந்து! பக்கத்தில் தெரியும் மண்டபத்தின் வழியாகத் தான் நுழையணும்.

Sunday, November 29, 2015

இங்கே தொடரவா?

கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப் போகிறது இந்தப் பக்கத்துக்கு வந்து. சமையல் பதிவுகளையும், "எண்ணங்கள்" பக்கமே பகிர்வதால் இங்கே வரவே இல்லை. இனி கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்களை ஒதுக்கி வைக்கணும்னு எண்ணம். இப்படித் தான் கிறுக்குத் தனமா ஏதேனும் தோணும்!  சில சமயம் கணினியில் இருந்தே விலகி இருப்பேன். புத்தகங்கள் படித்துக் கொண்டு, தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டு என்று. நேற்றைய மின்வெட்டில் புத்தகங்களை அடுக்கலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ஒழுங்கு படுத்தினேன். அப்படி ஏதேனும் வேலையை ஏற்படுத்திக் கொள்ளணும். சும்மா உட்கார முடியாது! பல விஷயங்கள் ஆரம்பித்துப் பாதியில் நிற்கிறது. எச்சில், பத்து பத்தி ஆரம்பிச்சேன். பாதியிலே இருக்கு! கல்யாணங்கள் குறித்த பதிவில் இன்னும் இரண்டோ, மூன்றோ போட்டால் முடிஞ்சிருக்கும்! அதுவும் சப்தபதியோட நிற்குது!

கொளஞ்சியப்பர் கோயில் பதிவும் பாதியிலே! கன்யாகுமரிப் பதிவும் பாதியிலே! இப்படி எல்லாமும் பாதியிலே நிறுத்திட்டு வேறே ஏதேனும் போடும்படியா ஆயிடுது! ஆகவே கொஞ்ச நாட்களுக்கு எண்ணங்கள் பதிவுக்குப் போகாமல் இங்கேயே "என் பயணங்களில்" பக்கத்தில் அதை எல்லாம் நிறைவு செய்யலாமா என யோசனை! ஆரம்பத்திலிருந்தே பயணங்களை மட்டும் இங்கேயே எழுதி வந்திருக்கணும். இங்கே யாருமே வரதில்லைனு அங்கேயே எழுதப் போனால் நடு நடுவில் வேறே பதிவுகள் போடறாப்போல் ஆகிறது! :) இனி இங்கே சில நாட்களுக்கு எழுதலாம்னு எண்ணம். பார்ப்போம். கொஞ்ச நாட்களுக்குக் கணினியில் இருந்து விலகி நிற்கவும் விருப்பம். ஒரேயடியாக முடியாது தான். தனிப்பட்ட முறையில் வரும் மடல்களைப் பார்க்கவாவது வந்தாகணும். ஆனால் இந்தப் பதிவுகளை எழுதுவது, முகநூல் பக்கம், ஜி+ எல்லாத்தையும் ஓரம் கட்டலாம்னு நினைக்கிறேன்.  ஒரு மாதிரியான மனச்சோர்வு!  யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போன்றதொரு உணர்வு!

இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்க நினைக்கும் மனம்! வேறென்ன சொல்ல!

Sunday, August 25, 2013

அப்பா 3!

கணவன் வந்துவிட்டதை அறிந்து மாமியார், மாமனாருக்குக் காஃபி கொண்டு கொடுத்த கலா கணவனுக்கும், தனக்கும் காஃபி கலந்து கொண்டாள்.  தங்கள் அறைக்குச் செல்லக் கிளம்பினாள்.  இத்தனை நேரம் உள்ளே உட்கார்ந்திருந்த அவள் மாமியாரும், மாமனாரும், எப்படியோ ஊகித்தாற்போல் இப்போது ஹாலில் வந்து உட்கார்ந்திருந்தனர்.  அவள் செல்வதைப் பார்த்த மாமனார் கண்களால் ஜாடை காட்ட  அவள் மாமியாரோ, " ஆச்சு, இப்போ மந்திரம் ஓதியாகும். அவன் என்னிக்கோ வந்துண்டிருந்தான்.  இப்போத் தான் நிரந்தரமா இங்கே இருக்கப் போறான்.  அவனே பார்த்துக்கட்டும், இங்கே நடக்கிற அநியாயத்தை!  இவள் அடிக்கிற கொட்டத்தை நேர்லே பார்த்தாத் தான் புரியும் அவனுக்கும்." என்று சத்தமாகச் சொன்னாள்.  காதில் விழாதது போல் சென்றுவிட்டாள் கலா.

உள்ளே ராகவன் ஏதோ அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான்.  கதவு திறந்த சப்தம் கேட்டுத் தன் தாய் தான் வராளோ என நிமிர்ந்தவன், கலாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.  "வந்துட்டியா? எப்போ வந்தே?  வரச்சே கீழே விசாரிச்சேன்.  ஏதோ புது கேஸ் வந்திருக்குனு சொன்னாங்க.  யார் அது?  ஆணா, பெண்ணா? பிரசவ கேஸா?  இல்லை ஆர்டினரியா?" என்று கேள்விகளை அடுக்கினான்.

"முதல்லே காஃபியைப் பிடிங்க!" என்று அவன் கையில் காஃபியைக் கொடுத்த கலா, உரிமையோடு அவன் அருகில் உட்கார்ந்தாள்.  சற்று நேரம் பேசாமல் காஃபியை அருந்தியதும், அவள்,"இன்னிக்கு வந்த கேஸ் ஆண் தான்.  யார்னு தெரிஞ்சா ஆச்சரியப் படுவீங்க!" என்று சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள். அவள் முகத்தைப் பார்த்து எதுவும் புரியாத ராகவன், "ம்ம்ம்ம்ம்ம், சாயந்திரமா வரேன்." என்றான்.  "குழந்தைங்க வந்துட்டாங்களா?" என்றும் விசாரித்தான்.  "வர நேரம் தான்!  இப்போ வந்துடுவாங்க. அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் பண்ணணும்." என்றவாறு எழுந்தாள் கலா. "ம்ம்ம்ம், அங்கே ஆஸ்பத்திரியிலும் நோயாளிகளோடு மன்னாடிட்டு, இங்கேயும் வந்து வேலை செய்யறியே!  உன் உடம்பையும் கவனிச்சுக்க வேண்டாமா?  உனக்கு ஏதானும் ஒண்ணுனா எனக்குத் தாங்க முடியாது.  ஒரு ஆளைப் போட்டுக்கறது தானே! நீ இல்லைனால் நாங்கல்லாம் என்ன செய்வோம்!" என்றான்.

அவனைப் பார்த்துப் புன்முறுவல் செய்த கலா, "என் சிநேகிதியிடம் சொல்லி இருக்கேன். அனுப்பறதாச் சொல்லி இருக்கா!" என்றவள் கொஞ்சம் தயங்கினாள். "என்ன யோசனை?  அந்த ஆளை முடிச்சுடு! யோசிக்காதே!" என்றான் ராகவன்.  "இல்லை" என்று மீண்டும் கலா தயங்க, "அப்பா, அம்மாவுக்காக யோசிக்கிறாயா?" என்றான் ராகவன்.  நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் கலா.  அந்த ஒரு பார்வையிலேயே அனைத்தும் புரிந்தது அவனுக்கு.  "யோசிக்காதே!  அந்த ஆள் வரட்டும். அவங்களையே நியமிச்சுடு.  நான் இனி இங்கே தான் இருக்கப்போறேன்.  அடுத்து மாற்றல் வந்தாலும் வேறே துறைக்கு மாறிடலாம்னு ஒரு எண்ணம். பார்ப்போம்.இல்லைனா, வேலையை விட்டுட்டு, உன்னோட ஆஸ்பத்திரி மேனேஜ்மென்டைப் பார்த்துண்டு உட்காரலாமானு இருக்கேன்." என்றான்.

"அப்பா, சாமி, அந்த வேலை மட்டும் வேண்டாம்.  அப்புறமா நான் இந்த வீட்டிலேயே இருக்க முடியாது!" என்றாள் கலா.  அதற்குள்ளாகக் குழந்தைகளின் கூக்குரல் கேட்க, அவங்க வந்துவிட்டது தெரிஞ்சு கலா மீதம் பேச்சு வார்த்தையை இரவில் வைச்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பினாள்.  ராகவனுக்கும் கலாவுக்கும் ஒரு பெண், ஒரு ஆண் .  பெண் பெரியவள், பையன் சின்னவன்.  பெண் ஐந்தாம் வகுப்பிலும், பையன் முதல் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.  அன்று பள்ளியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருந்தது.  அதில் பங்கேற்கச் சென்ற கலாவின் பெண் அதில் பரிசு வாங்கி இருந்தாள்.  அந்த உற்சாகம் தான் இருவருக்கும்.  சந்தோஷத்தோடு பாட்டியிடம் அதைக் காட்டினாள் ஷோபா.  முகத்தைத் தோள்பட்டையில் இடித்துக் கொண்ட பாட்டி, "என் மேலே பட்டுடாதே.  உன் அம்மாதான் ஆஸ்பத்திரித் தீட்டை எல்லாம் கொண்டு வரான்னா, நீயும் என் மேலே இடிச்சு, என்னை ராத்திரிச் சாப்பிட விடாமப்பண்ணிடாதே!" என்றாள்.

குழந்தை முகம் சுருங்கியது.
*********************************************************************************
சந்திரா வாயே திறக்கவில்லை.  அத்தனை குழம்பையும் கொட்டினான்.  நினைவாகத் தனக்குத் தேவையானதை எடுத்து வைத்துக்கொள்ள மறக்கவில்லை.  குழந்தைகள் வாய் திறவாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவன் கத்திக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.  அந்த வீட்டில் அவன் தான் தலைவன்.  குடும்பத் தலைவன்.  அவர்கள் அனைவருக்கும் அவன் தான் சோ'று போட்டுக் காப்பாற்றி வருகிறான். ஆகவே அவனுக்குத் தான் முதலிடம்.  அவனுக்குத் தெரியாமல் யாரும் எதுவும் பண்ண முடியாது.  அவனுக்குத் துரோகம் செய்வதாம் அது. வயிறு நிறையச் சாப்பிடவும் கூடாது. அவனாகப் பார்த்து இதைச் சாப்பிடுங்கனு சொன்னால் சாப்பிடணும்.  இல்லைனால் பார்த்துக் கொண்டே பேசாமல் இருக்கணும்.  சந்திராவும் குழந்தைகளும் அப்படியே பழகி விட்டனர். பண்டிகை, விசேஷ நாட்களில் குழந்தைகள் பாவம் என்று அக்கம்பக்கத்திலிருந்து ஏதேனும் தின்பண்டமோ, வேறு ஏதேனுமோ கொண்டு வந்து கொடுத்தால் அப்படியே திருப்பி விடுவான். ஒரு தரம் அவங்க வீட்டில் பண்டிகை இல்லை.  ஆடிப்பெருக்குச் செய்த கலந்த சாதங்களை ஒரு டிபன் காரியரில் போட்டுக் கூடவே ஒரு பாத்திரத்தில் அப்பளம், கறிவடாமும் எடுத்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமி வந்து கொடுத்துப் போனார்.  சந்திராவும் சகஜமாக வாங்கிக் கொண்டு விட்டாள்.

அவன் வந்ததும் சாப்பிட அமர்ந்தான்.  வீட்டுச் சாப்போடு இருந்த அந்தப் புதிய உணவு வகைகளைப் பார்த்தவன், "ஏது இது?" என்று உறுமினான்.  சந்திரா, பக்கத்துப் போர்ஷன் மாமி குழந்தைகளுக்குனு கொடுத்ததாகச் சொல்லவே, அந்த உணவு அப்படியே பாத்திரத்தோடு வீசி எறியப் பட்டது.  தன் போர்ஷனில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாமிக்குக் கண்ணில் நீரே வந்துவிட்டது.  அவனை வந்து ஏன் இப்படிப் பண்ணறீங்கனு கேட்டதுக்குக் கன்னாபின்னாவென்று பேசிவிட்டான்.  அதிலிருந்து அந்த மாமி சந்திராவிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசுவதில்லை. இதெல்லாம் சந்திராவுக்குப் பழக்கம் ஆகிவிட்டது.  ஆனால் குழந்தைகள் என்ன செய்யும்?

அவன் சாப்பிட்டு விட்டு எழுந்ததும், குழந்தைகளைச் சாப்பிட அழைத்தாள் சந்திரா. ஒருத்தருக்கும் சாப்பிடணும்னு தோணலை.  ஆனால் சாப்பிடலைனு சொன்னாலும் அதுக்கும் திட்டுவான். வாயே திறக்காமல் மூவரும் வந்து அமர்ந்தனர். குழந்தைகளுக்கு மாவடுவைப் போட்டுவிட்டு சாதத்தைப் போட்டு ரசத்தை ஊற்றினாள்.  எங்கே!  குழம்பை எல்லாம் தான் கொட்டியாச்சே! காய் பண்ணினதில் அவள் எடுத்து வைக்கும் முன்னரே அவன் வந்துவிட்டான்.  ஆகவே அவன் சாப்பிட்டது போக மிச்சத்தை ராத்திரிக்கு வைத்துக் கொண்டு  அவன் சிநேகிதமாய் இருக்கும் எதிர் வீட்டிற்கு அவனே நேரில் கொண்டு கொடுத்தான்.  அந்த வீட்டம்மா, "உங்க குழந்தைங்களுக்கு வேண்டாமா?" னு கேட்டதுக்கு,
"ஒண்ணும் கேட்காதீங்கம்மா!" என்று ஜெயராமன் அழ ஆரம்பித்தான்.  அந்த அம்மா திகைத்துப் போனாள்.

Wednesday, August 21, 2013

அப்பா 2!

அந்த வீட்டில் இது எழுதப்படாத விதி.  முதலில் ஜெயராமன் தான் சாப்பிட வேண்டும்.  அதன் பின்னர் அவன் இரவுக்குத் தனக்குத் தேவையானவற்றைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வான்.  சாதம் மட்டும் இரவு சூடாக வடிக்க வேண்டும்.  ஆகவே மிகுந்தவைகளையே ஜெயராமனின் மனைவி, குழந்தைகள் சாப்பிடலாம். அதோடு வீட்டில் ஊறுகாய் போட்டிருந்தாலோ அல்லது மாவடு போட்டிருந்தாலோ குழம்பு ஜெயராமனுக்கு மட்டும் தான் வைக்க வேண்டும்.  மற்றவர் ஊறுகாயைத் தொட்டுக் கொண்டோ, மாவடு ஜலத்தை ஊற்றிக் கொண்டோ சாப்பிடலாம்.  இல்லை எனில் வெறும் ரசம் சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டுக் கொள்ளலாம்.  இந்த வீடு ஜெயராமன் சம்பாத்தியத்தில் நடக்கிறது.  அவன் தான் குடும்பத் தலைவன்.  அவனுக்குத் தான் முன்னுரிமை.  மீறி நடந்தால் மனைவி, குழந்தைகள் எனப் பார்க்காமல் வெளியேற்றிவிடுவான்.  இதுவரை சந்திரா அப்படி எத்தனையோ முறை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு முறையும் பிறந்த வீட்டில் சென்று நிற்கையில் அவள் மனமும், உடலும் கூசும். ஒரு முறை அவள் பெரிய பிள்ளையையும் ஜெயராமன் இப்படி அடித்து விரட்ட அவன் பெரியப்பா வீட்டில் போய்த் தங்கினான்.  அது முதல் ஜெயராமன் அடித்துத் துரத்துவதும், அவர்கள் பெரியப்பா வீட்டில் போய்த் தங்குவதும் வழக்கமாகப் போய்விட்டது.  எதற்கு என்றெல்லாம் இல்லை;  சின்னக் காரணம் கிடைத்தால் போதும்.  இது வரையிலும் சசியைத் தான் துரத்தவில்லை.  பெண் என்ற ஒரே காரணம்.  இதோ இப்போது சாப்பிட அமர்ந்திருக்கிறான். வெண்கலப்பானையில் கரண்டியைப் போட்டு சாதம் எடுக்கையில் அந்தப் பாழாய்ப் போன குழம்புக் கிண்ணம் சத்தப் படுத்திக் காட்டிக் கொடுத்துவிட்டதே! என்ன நடக்கப் போகிறதோ! மெதுவாக அங்கிருந்து வெளியே செல்ல யத்தனித்த சந்திராவின் மேல் சூடாக எதுவோ வந்து விழக் கண்களும், மூக்கும் எரிச்சலாக எரிந்தன.  என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள்ளாக அங்கிருந்த ஒரு கம்பை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்த ஜெயராமன் அவள் தலைப்பின்னலைப் பிடித்துக் கொண்டு கம்பால் அடித்து நொறுக்கினான்.

"அப்படி என்ன, வாய்க்கு ருசியாகச் சாப்பிடணும்!  அதுவும் பொம்பளைக்கு!  ஏண்டி, நீ என்ன வெட்டி முறிக்கிறே இந்தக் குடும்பத்துக்கு!  வடிச்சுக் கொட்டின நேரம் போக மீதம் இருக்கும் நேரம் வெட்டியாத் தானே பொழுதைக் கழிக்கிறே!  அதுக்கு உனக்கு வெறும் சோறு போதாது? வித, விதமாக் குழம்பு, ரசம்னு சாப்பிடக் கேட்குதோ! இது எத்தனை நாளா நடக்கிறது!  எவ்வளவு புளி செலவு பண்ணி இருக்கே?  குழம்புப் பொடி உன் அப்பன் வீட்டுக் காசிலேயே பண்ணினது? சாம்பாரில் போட்டிருக்கும் காய்கள் எங்கிருந்து வந்தது?  என் காசிலே சாப்பிட்டுக் கொண்டு எனக்கா துரோகம் பண்ணறே?  இன்னிக்கு உன்னை ரெண்டிலே ஒண்ணு பார்த்துட்டுத் தாண்டி மறு வேலை!" அடிகள் அதிகமாக விழுந்தன.  எதற்கும் வாயே திறக்கவில்லை சந்திரா. வாயைத் திறந்தால் அடி தான் இன்னும் மோசமாகும்.  சொல்வது எதுவும் அவன் காதில் ஏறப் போவதில்லை.
*********************************************************************************

வந்திருந்த வெளி நோயாளிகளைக் கவனித்து முடித்த கலாவுக்கு அலுப்பாக இருந்தது.  அங்கிருந்த ஒரு அனுபவம் மிக்க நர்சிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவசர கேஸ் என்றால் மட்டுமே தன்னை அழைக்கும்படி சொல்லிவிட்டு அங்கேயே மாடிப் பக்கமாக இருந்த தன்னுடைய வீட்டிற்குச் செல்லப் படியேறினாள்.  மாடி வராந்தாவில் இருந்த கணவனுடைய செருப்புக்கள் அவன் வீட்டிற்கு வந்துவிட்டதை உறுதி செய்தன.  அவள் கணவன் மத்திய அரசு அதிகாரி. ஊருக்கு ஊர் மாறும் வேலை.  ஆகையால் அவள் மட்டும் மாமியார், மாமனார் குழந்தைகளுடன் இங்கே சொந்த வீடு கட்டிக் கொண்டு கீழே மருத்துவமனையும், மேலே வீடுமாக இருந்து வந்தனர்.  அவள் கணவன் அவ்வப்போது விடுமுறையில் வந்து செல்லுவான்.  இப்போது சில மாதங்களாகச் சென்னையிலேயே ஒரு அலுவலகத்திற்கு மாற்றம்.  அங்கேயே நிரந்தரமாகத் தங்கும்படியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இதே அலுவலகம் இல்லை எனினும் வேறு துறையில் இதே பதவிக்கான அலுவலகங்களில் என்று பார்த்துக் கொண்டிருக்கிறான்.  ஊர், ஊராக மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டுச் சுற்றியதில் அவனுக்கும் மனம் மிகுந்த அலுப்புடனும், வருத்தத்துடனும் இருக்கிறது.  அதிலும் கலா அவன் காதலித்து மணந்த மனைவி.


இருவரும் ஒரே குலம் தான்.  ஜாதகப் பொருத்தங்களும் பார்த்தார்கள் தான் என்றாலும் கலாவின் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை.  ராகவனுக்கோக் கலாவை மிகவும் பிடித்து விட்டது.  ஆகவே தன் பெற்றோர், கலாவின் பெற்றோர் எதிர்ப்பையும் மீறிக் கலாவைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று செய்து கொண்டான்.  இப்போதும் ராகவனுடைய அப்பா, அம்மாவிற்குக் கலாவிடம் நிஷ்டூரம் தான் காட்டத் தெரியும். சேர்ந்து இருக்கிறார்களே தவிரத் தன் பெற்றோர் பற்றி ராகவன் நன்கறிவான்.  ஆனாலும் மருத்துவம் படித்த கலா அதைத் திறமையாகச் சமாளித்து வந்தாள். கூடியவரை என்றோ வரும் ராகவன் காதுகளுக்கு எந்த விஷயமும் போகாமல் பாதுகாத்து வந்தாள்.  இதை எல்லாம் எண்ணிப்பெருமூச்சு விட்டவாறு உள்ளே சென்ற கலாவுக்குத் தன்னைக் கண்டதுமே உள்ளே சென்று கதவைச் சாரத்திக் கொண்ட மாமியாரைப் பார்த்துச் சிரிப்பு வந்தது.

மங்களம்மாள் ஹாலில் தான் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.  கலா உள்ளே நுழைவதைக் கண்டதுமே உள்ளே சென்று இழுத்துப் போர்த்துக் கொண்டாள்.  பத்மநாப ஐயர் மனைவியைப் பார்த்து, "என்ன மஹாராணி வந்துட்டாளா?" என்று நக்கலாகக் கேட்க, பதில் பேசாமல் தலையை அசைத்தாள் மங்களம்.  "நீ பேசாமல் படு, சொல்கிறேன்.  அவளுக்கென்ன, கேஸ், கேஸ் அப்படினு நாக்கூசாமல் சொல்லிக் கொண்டு அங்கே வெறுமனே உட்கார்ந்துட்டுப் பொழுதைக் கழிக்கிறா.  பார்த்துக்கறதெல்லாம் நர்சுங்க.  இங்கே வந்ததும் வேலை செய்ய முடியாதாமா அவளுக்கு?  அவளுக்கும், அவள் குழந்தைகளுக்கும் அவளே செய்ஞ்சுக்கட்டும்.  நீ ஏன் போறே?"  என்றார்.

"இல்லை, ராகவன் வந்திருக்கான்.  அவன் ஏதேனும் நினைச்சுக்கப் போறானே!" என்றாள் மங்களம் மெல்ல.   "அவன் என்ன நினைச்சுக்கறது!  உனக்கு உடம்பு சரியில்லை;  வயசாச்சு; செய்ய முடியலைனா ராகவன் கோவிச்சுக்கப் போறானா என்ன! பேசாமல் படு! காஃபி வருதானு பார்ப்போம். நமக்கில்லைனாலும் ராகவனுக்காக அவள் பண்ணித் தானே ஆகணும்.  இல்லைன்னாலும் அவளுக்குப் போட்டுக்கணுமே!  என்ன தான் செய்யறானு பார்த்துடுவோம்!"

கதவு தட்டப்பட்டுப் பின் திறக்கப் பட்டது. கலா ஒரு தட்டில் இரண்டு காபி தம்ளர்களோடு வந்து அவற்றையும் இன்னொரு தட்டில் தின்பதற்கு ஏதுவாக முறுக்கு, தட்டை வகைகளும் வைத்து விட்டு நகர்ந்தாள்.

"ஏண்டிம்மா, ஒவ்வொண்ணாக் கொண்டு வரக் கூடாதோ! இப்படி ஹோட்டலில் கொடுக்கிறாப்போல எல்லாத்தையும் மொத்தமாக் கொண்டு வைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம்!  இல்லை என்ன அர்த்தம்ங்கறேன்!" மங்களம் நிஷ்டூரமாகக் கேட்க, பத்மநாபன், "அவள் கடமை முடிஞ்சது! ஒவ்வொண்ணாப் பார்த்துப் பார்த்துச் செய்ய நாம் என்ன அவள் அப்பா, அம்மாவா? மாமியார், மாமனார் தானே!  அதான் ராகவன் வந்திருக்கானே!  இனி இங்கே தானே இருக்கப் போறான்!  எல்லாத்தையும் பார்த்துப் புரிஞ்சுக்கட்டுமே!" என்றார்.

கலா பதிலே பேசாமல் நகர்ந்தாள்.  குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.  அவங்களுக்குச் சாப்பிட ஏதேனும் தயார் செய்யணும்.  அவளுக்கு வேலை இருந்தது.  இரவுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துட்டு., ஆறுமணிக்கப்புறமா கீழே போய் நோயாளிகளைப் பார்த்துட்டு வரணும்.  ராகவன் இங்கேயே வந்துட்டானானால் ஒரு சமையல்காரியைப் போட்டுடலாம்னு சொல்லி இருக்கான்.  அதைக் குறித்தும் முடிவு செய்யணும்.  வருகிற சமையல்காரங்க எல்லாம் மங்களத்தம்மாளின் மிரட்டல்களிலும், அதிகாரத்திலும் நிற்காமல், சொல்லிக் கொள்ளாமல் போயிடறாங்க.  இனி வருகிறவளாவது சரியாய் அமையணும்.

கலாவுக்கு ஆயிரம் கவலை இருந்தன. 

அப்பா! 1

மயக்கமாய்க் கிடந்தவரைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.கலா. ஒரு நிமிடம் அவளுக்குத் தான் ஒரு மருத்துவர் என்ற எண்ணமே வரவில்லை.  அவரை சோதித்துக் கொண்டிருந்த நர்ஸ் நிமிர்ந்து அவளைப்பார்த்து, பிபி ஏறி இருக்கு டாக்டர்!  ஷுகர் ரான்டம் செக் பண்ணினதிலேயே நிறைய இருக்கு. மாதிரி ரத்தம் சோதனைக்குக் கொடுத்திருக்கேன்.  அந்த ரிப்போர்ட் சாயந்திரம் தான் கிடைக்கும்."

சட்டெனச் சுதாரித்துக் கொண்டாள் கலா.  "இவரை அழைத்து வந்தது யார்?" எனக் கேட்டாள்.  நர்ஸ் வெளியே சென்று அழைக்க உள்ளே வந்தார் ஒருவர்.  அவரைப் பார்த்த கலா, "இவர் உங்களுக்கு என்ன உறவு?" எனக் கேட்டாள்.

இதற்குள்ளாக முழுமையாகச் சுயநிலைக்கு வந்துவிட்டாள் கலா.  ஆகவே அவள் குரல் பிசிறின்றித் தெளிவாக இருந்தது.  வந்தவர் அவளைப் பார்த்து, " பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர்.  இன்று காலையிலிருந்தே ஆள் வெளியே வரவே இல்லை.  அதான் உள்ளே சென்று பார்த்தப்போ மயங்கிக் கிடந்தது தெரிந்தது.  இங்கே கூட்டி வந்தேன்."  என்றார்.

"அப்படியா?  இந்தப் பகுதியைச் சேர்ந்தவரா?  எத்தனை நாட்களாகத் தெரியும் உங்களுக்கு?" என்று கேட்ட வண்ணமே தன் சோதனையைத் தொடர்ந்தாள் கலா.

"ஆறேழு மாதங்கள் முன்னால் வந்தார். இங்கே பக்கத்து வீட்டில் ஒரு போர்ஷனை எடுத்துக் கொண்டு குடி வந்தார்.  இவருக்கு வங்கிக்குப் போக வர, மற்றும் சில தேவையான சாமான்களை வாங்கித் தர என அழைப்பார்.  வயசானவர் ஆச்சே, துணைக்கும் யாரும் இல்லையே என உதவிகள் செய்வேன். அப்படித்தான் பழக்கம்." என்றார் வந்தவர்.

"சரி, இவருக்குச் சர்க்கரை நோயும் இருக்கு.  ரத்த அழுத்தமும் இருக்கு.  அதனால் மயங்கி இருக்கார். சாப்பாடும் சரியாகச் சாப்பிடலை போல.  நான் இங்கே இவரை அட்மிட் செய்து கொள்ளவா?" என்றாள் கலா.

தயங்கினார் வந்தவர்.  "என்ன செலவாகுமோ?  அவர் ஒத்துக்கணும்.  அவரைப் பார்த்தால் அவ்வளவு பணம் இருக்குமானு தெரியலையே!"  என்று வாய்விட்டுத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் கூறிக் கொண்டார். சிரித்தாள் கலா.  பின்னர்," இவர் வீட்டுச் சாவி உங்களிடம் தானே இருக்கு? அங்கே கொஞ்சம் தேடிப் பார்த்து இவர் உறவினர்களில் எவரேனும் ஒருத்தர் தொலைபேசி எண்ணோ, விலாசமோ கிடைக்கிறதா பாருங்கள்.  இவர் எனக்குத் தெரிந்தவரின் அப்பா போல் இருக்கிறது.  பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் நிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை.  ஆனாலும் நான் அட்மிட் செய்து கொள்கிறேன்.  நீங்கள் இவருடைய அறையில் தேடிப் பாருங்க. பணத்தைக்குறித்து இப்போதைக்குக் கவலை வேண்டாம்." என்றாள் கலா.  அவள் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.

வந்தவர் கிளம்பிச் செல்ல மணியை அடித்து ஆட்களை வரவழைத்த கலா, நர்ஸிடம்  "இந்தப் பெரியவரை ஒன்பதாம் எண் படுக்கையில் விடுங்க.  நர்ஸ், கேஸ் ஷீட் தயார் செய்து விடு. நான் இந்த பிரிஸ்க்ரிப்ஷனில் எழுதி இருக்காப்போல் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து விடு.  திட ஆகாரம் இப்போதைக்கு வேண்டாம்.  க்ளூகோஸ் ஏறட்டும்." என மடமடவென உத்தரவுகளைப் பிறப்பித்தாள் கலா.  அவள் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் மனதுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
*********************************************************************************
குழம்பைக் கீழே இறக்கினாள் சந்திரா.  ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  சட்டென ஒரு கிண்ணத்தை எடுத்துக் குழம்பால் நிரப்பினாள்.  அதை எங்கே வைப்பது?  சற்றே தடுமாறியவள் ஒரு தட்டைப் போட்டு மூடிவிட்டு அதைச் சாதம் வைத்திருக்கும் வெண்கலப் பானையிலேயே உள்ளே அழுத்தினாள்.  மேலே கொஞ்சம் சாதத்தைப் போட்டு மூடிவிட்டாள்.  தட்டுப்போட்டிருந்ததால் குழம்பு உள்ளே சிந்தாது.  சிந்தினாலும் அடி சாதத்தில் தான் இருக்கும்.  அதை அவள் எடுத்துக் கொள்வாள்.  குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்று பார்த்தாள்.  அவ்வளவு நேரம் அவளையே கவனித்துக்கொண்டிருந்த சசி சட்டெனப் புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள். அவளின் இரு சகோதரர்களும் குளிக்கச் சென்றிருந்தனர்.  அவர்கள் இருவரும் ஒரே பள்ளி.  சசி மட்டும் பெண்கள் பள்ளியில் படித்து வந்தாள்.  அதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கோ!  சந்திராவின் மனம் கலங்கியது.

வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.  அவன் வந்துவிட்டான்.  ஜெயராமன் தான்.  அவள் கணவன்.  இப்படி மரியாதை இல்லாமல் நினைக்கிறோமோ என சந்திராவுக்குள் குற்ற உணர்ச்சி தோன்றினாலும் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை.  வந்தவுடன் என்ன செய்தே? என்ன பண்ணினே?  எதை எடுத்தே?  எங்கே வைச்சே என ஆயிரம் கேள்விகள் கேட்பான். நம் வீடுதானே என்ற சுதந்திரம் கிடையாது.  ஒரு கடுகு தாளிப்பது என்றால் கூடக் கணக்கு ஒப்பிக்க வேண்டும். அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை நிரப்புவது அவன் தான்.  நிரப்பிய சாமான்கள் எத்தனை நாட்கள் வருகின்றன என்ற கணக்கும் வைத்திருப்பான். இதோ, இப்போ உள்ளே வந்தான் எனில் இதைக் கண்டு பிடித்தால்!! ஒரு பிரளயமே நடக்கும்.  அப்படி ஒண்ணும் கெட்ட பழக்கம் உள்ளவன் அல்ல.  எந்தவிதக் கெட்ட பழக்கங்களும் இல்லை.  வெற்றிலை, பாக்குக் கூடப் போடமாட்டான். ஆனால் அது எல்லாத்துக்கும் சேர்த்து வைத்துப்பெண் என்றாலே மட்டமாக நினைப்பவன்.  ஆண்களுக்குத் தொண்டு செய்வதற்கே பெண் பிறவி என நினைப்பவன்.

கல்யாணம் ஆகிச் சில மாதங்களுக்கே அவள் வாழ்க்கை இன்பமயமாக இருந்தது.  பின்னர் திடீரென மாறிவிட்டான். தினம் தினம் அடி, உதை தான்.  அவள் சாப்பிடுவதைக் கணக்குப் பண்ணுவான். பிறந்த வீட்டுக்குப் போ என விரட்டி விடுவான்.  மூன்று குழந்தைகள் எப்படிப் பிறந்தது நமக்கு எனப் பல சமயம் எண்ணிக் கொள்வாள் சந்திரா.  முதல் குழந்தை மட்டுமே விரும்பிப் பெற்றது.  இரண்டாவதான சசி பிறந்தப்போவே அவன் கொடுமை அதிகம் ஆகிவிட்டது.  பிள்ளைத் தாய்ச்சி என்று கூடப் பார்க்காமல் அடித்து இந்தக் குழந்தை என்னுடையதல்ல என்றெல்லாம் சொல்லி அவளை அவமானப் படுத்தினான்.  எப்படியோ பெண்ணைப் பெற்றுவிட்டோமே என்று  அவள் கவலைப்பட்டாலும் சசி அப்படியே நிறத்திலும், குணத்திலும் தந்தையைக் கொண்டிருந்தாள்.  குணம் நல்லபடியாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள் சந்திரா.  பெண்ணைப் பார்த்ததும் சில வருடங்களுக்கு அவள் மேல் அன்பு காட்டிய ஜெயராமனோ மூன்றாவதாகப் பிறந்த பிள்ளைக்குப் பின்னர் முற்றிலும் மாறிவிட்டான்.

பெண்ணாய்ப் பிறந்தது அவர்கள் குற்றமா?  ஆனாலும் ஜெயராமனுக்குத் தான் குடும்பத் தலைவன்.  தான் சம்பாதித்து இவர்களுக்குச் சோறு போடுகிறோம் என்ற எண்ணம் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.  அதைச் சொல்லிலும், செயலிலும் காட்டினான்.  ஒருநாள் சசி ரொம்பப் பசியா இருக்குனு சீக்கிரம் சாப்பிட உட்கார, ஜெயராமன் பேசிய பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாது.  அன்றிலிருந்து பசி பொறுக்கப் பழகிவிட்டாள் சசி.  என்றாலும் வளரும் குழந்தை அல்லவா?  பள்ளி வேறு தூரத்தில் இருக்கிறது.  அதற்குப் பேருந்தில் தான் செல்லணும்.  அதற்கான காசை அவனிடமிருந்து வாங்குவதற்குள் போதும், போதும்னு ஆகிடும். இன்னும் எத்தனை நாட்கள் இந்தக் கொடுமையோ என ஏங்கினாள் சந்திரா.

ஜெயராமன் வரும்போதே கத்திக் கொண்டு வந்தான். யார் மேல் கோபமோ, தெரியவில்லை.  உள்ளே வந்ததுமே சந்திராவிடம், "அங்கே என்னம்மா செய்துண்டிருக்கே?  சமைச்சு முடிச்சாச்சுன்னா இந்தப் பக்கம் வா னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்! உப்புப் பார்க்கிறேன், புளி பார்க்கிறேன், ருசி பார்க்கிறேன்னு நீ சாப்பிட்ட மிச்சத்தைச் சாப்பிடணும்னு எனக்குத் தலையெழுத்து இல்லை. " என்றான்.  சந்திரா நகர்ந்துவிட்டாள்.  உப்பில்லாமல் சமையல் இருந்தால் அதற்கும் அவளுக்கு அடி விழும்.  முன்னால் பார்த்தால் அதுவும் தப்பு.  என்றாவது மறக்காதா!  மனிதர்கள் தானே எல்லாருமே!  அதற்குள்ளாக ஜெயராமன் தட்டைப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்துவிட்டான்.  சந்திராவுக்குத் திக் திக் என்று இருந்தது.  கறியைத் தட்டில் போட்டுக் கொண்டவன் சாதம் எடுக்கக் கரண்டியை வெண்கலப் பானையில் விட்டான். "டங்"கென்று கரண்டி எதிலோ மோதியது.

Tuesday, December 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


தனது பக்தனுக்காகத் தாமே வந்து கடன் அடைத்துச் சென்றது சாக்ஷாத் அந்த ஸ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை புரிந்து கொண்ட தானீஷா, தான் மஹாபாபியாக இருந்து இறைவனே நேரில் வந்ததைத் தெரிந்து கொள்ளவில்லையே என நினைத்து நினைத்து ஏங்கினான்.  அங்கே சிறையில் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோபன்னா எழுந்து பார்த்தபோது விஷக்கிண்ணம் கவிழ்ந்து கிடப்பதையும் தானீஷா கையொப்பம் இட்டுக் கடன் தீர்ந்துவிட்டதாக அறிவித்த ரசீதையும் பார்த்தார்.  திகைத்தார்.  ஏதோ அதிசயம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். ராமன் திருவடியை அடைய முடியாமல் வந்து தடுத்துவிட்டானே என ஏங்கினார். ராமனைத் தாம் நிந்தித்ததால் இவ்வாறு செய்துவிட்டான் போலும் என எண்ணினார்.  அதனால் தான் விஷத்தைக் கொட்டி விட்டான் போலும் என எண்ணினார். அப்போது சிறைக்கதவுகள் திறக்கப் பட்டன.  தானீஷா பரிவாரங்களோடு அங்கே வந்து கொண்டிருந்தான்.  மறு விநாடிக் கதவு திறந்து தானீஷா எதிரே நின்றான்.  கோபன்னாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.  தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.  கோபன்னாவின் கர்ருணையால் அன்ன்று தாம் இறைவனையே கண்டதைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.  கோபன்னாவுக்கோ, ஸ்ரீராமனே நேரில் வந்தானா, தானீஷாவுக்குக் காட்சி கொடுத்தானா என எண்ணித் தமக்கு அந்தக் காட்சி கிட்டவில்லையே என ஏங்கினார்.  தானீஷாவோ அவர்கள் வந்ததையும், தம்முடன் பேசியதையுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  பிரசாதத்துக்கு ஆசைப் பட்டு கோபன்னாவிடம் பணி புரிவதாய்க் கூறினார்களே என  அதிசயித்தான்.  கோபன்னாவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

தானீஷாவைத் தூக்கி எடுத்து அணைத்துக் கொண்டு, “நீர் செய்த பாக்கியம் தான் என்னே!  இறைவனைக் காணும் பேறு கிடைத்தது.  பனிரண்டு வருடமாய்க் கதறிக் கதறி அழைத்து இந்த நடுநிசியில் மூட்டை தூக்கி வந்து என் கடனை அடைத்துச் சென்றுவிட்டானா?  எனக்குக் காட்சி கிடைக்கவில்லையே! ஏ, ராமா, எனக்குக் காட்சி கொடுக்க மாட்டாயா?” எனக் கதறினார்.  தானீஷா, அவரிடம், நீர் சாதாரண கோபன்னா இல்லை;  ராமதாஸர்! ராமன் திருவடிக்கே தொண்டு பூண்ட பெரியவர். உம் அருமை தெரியாமல் நான் உம்மைத் துன்புறுத்தி மஹா பாவத்தைச் செய்து விட்டேன்.”  என்றான்.  எல்லையற்ற மன நிறைவோடு மீண்டும் பத்ராசலம் வந்தார் ராமதாஸரான கோபன்னா.  தானீஷா ராமனுடைய சேவைக்காக ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து உதவினான்.  நெடுநாட்கள் அதன் பின்னர் ராமனின் புகழைப் பாடி வந்தார் ராமதாஸர்.  ஒருநாள் பொன்மயமானதொரு தேர் விண்ணிலிருந்து இறங்கியது.  ராமதாஸர் வீட்டு வாசலில் நின்றது.  தன் மனைவியையும் அழைத்தார் ராமதாஸர்.  கைவேலையை முடித்துவிட்டு வருவதாய் அந்த அம்மாள் சொல்ல, “நீ கொடுத்து வைக்கவில்லை!” எனச் சொல்லிக் கொண்டே தேரின் மீது ராமதாஸர் ஏறிக் கொண்டு ராம நாம உபதேசத்தைக் கூறிக் கொண்டே தேரோடு விண்ணில் எழும்பிச் சென்றார். அவர் மனைவி உள்ளிருந்து வந்து பார்க்க, “நீ உன் மகனுக்குப் பணிசெய்யும் பொருட்டே உன்னைத் தங்க வைத்தோம்!” என அசரீரி வாக்குக் கேட்க அந்த அம்மாளும் தன் விதியை நினைந்தபடி தங்கிவிட்டார்.  பத்ராசல ராமதாஸர் ராமன் மேல் எண்ணற்ற பாடல்களைப் புனைந்து பாடினார்.  பாரதத் திருநாட்டில் ஹைதராபாத்திலே செல்வம் கொழித்திருப்பதன் காரணமும் பத்ராசல ராமதாஸருக்கு ராமன் அளித்த செல்வம் என்றே கூறப்படுகிறது.

பத்ராசலம் ராமதாஸர் கதை நிறைந்தது.

Sunday, December 9, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


விஷம் குடிப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை ஸ்ரீராமனையும், அவன் பிரிய மனைவியான சீதம்மாவையும் நினைத்த கோபன்னா, சீதம்மா நீயாவது உன் கணவனிடம் போய்ச் சொல்ல மாட்டாயா?  இன்னும் எத்தனை காலம் எனக்கு இந்த தண்டனை? என மனமுருகிப் பிரார்த்தித்தார்.  தியானத்திலும் ஆழ்ந்து போனார்.  அங்கே சீதம்மா மாயம்மாவுக்கு மனதில் ஒரே வேதனை.  இந்த கோபன்னா இத்தனை தூரம் மனமுருகிப் பிரார்த்தனைகள் பல செய்தும் நம் கணவர் வேடிக்கை பார்க்கிறாரே இது என்ன நியாயம் என மனதிலேயே கேட்டுக் கொண்ட கேள்வியை இன்று நேரிலும் கேட்டுவிட்டாள்.  “சுவாமி, கோபன்னா எத்தனை நல்லவன்?  நம் கோயிலுக்காக அன்றோ அவன் உழைத்தான்!  ஒரு காசு கூட சொந்தமாக எடுத்துக் கொள்ளவில்லையே.  அதோடு நம்மிடம் எவ்வளவு பக்தியுடனும் பிரேமையுடனும் இருக்கிறான்.  அவனை இப்படிப் பரிதவிக்க விட்டு விட்டுத் தாங்கள் இங்கே ஆனந்தமாய்க் காலம் கழிக்கலாமா?” என வினவ, ஸ்ரீராமனின் முகத்தில் இளநகை பூத்தது.  “சீதே, போன பிறவியிலும் பரம பக்தன் ஆன இவன், ஒரு கிளியைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்து வந்தான்.  பனிரண்டு ஆண்டுகள் அவ்விதம் வளர்த்து வந்ததால் அதே பனிரண்டு ஆண்டுகள் இவனும் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.  இன்றோடு அந்தச் சிறை வாசம் முடிவடைகிறது.  நானும், லக்ஷ்மணனுமாய் நாளை தானீஷாவைப் போய்ப் பார்த்து இவன் கடன்களை அடைக்கப் போகிறோம். “ என்றான் ஸ்ரீராமன்..

“வெகு அழகு ஸ்வாமி, ஆயுளையே உங்கள் சேவையில் கழித்து வரும் கோபன்னாவை விட்டுவிட்டு, தானீஷாவுக்குப் போய் தரிசனம் கொடுக்கப்போகிறீர்களே!” என்றால் சீதை ஏமாற்றமுடன். 
“சீதே, தானீஷா கோபன்னாவைச் சிறையில் அடைத்த குற்றம் ஒன்று மட்டுமே செய்தான்.  ஒரு நல்ல அரசனாகக் குடிமக்களை நன்கு பேணி வருகிறான்.  நீதிமானாகவும், நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும் உள்ளான்.  மேலும் அவன் போன பிறவியில் காசியில் அந்தணனாகப் பிறந்து ஈஸ்வரனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேஹம் செய்யப் பிரார்த்தித்துக் கொண்டவன்.  இதன் மூலம் பெரிய பதம் கிடைக்கும் என எண்ணினான்.  ஆனால் 999 –வது குடம் வந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை, என ஆயிரமாவது குடத்தை அந்த ஈசன் தலையிலேயே போட்டு உடைத்துவிட்டான்.  அந்த வினைப்பயன் தான் அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.  மேலும் அவனுக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் என ஈசனே வாக்குக் கொடுத்துள்ளார்.  ஈசன் வாக்குப் பொய்யாகலாமா?”  என்றான் ஸ்ரீராமன்.

மறுநாள் நடு நிசி. தானீஷாவின் அந்தப்புரத்திலே அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.  ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தான்.  அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்தப்புர பாராக் காவலையும் தாண்டிக் கொண்டு இரு சிப்பாய்கள் கையிலே ஒரு பெரிய பணப்பையோடு இடையிலே கால் சராய் தரித்து, வாளை இடுப்பிலே ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்கள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அரசகுமாரர்களோ என்னும்படி இருந்தது.  இருவரும் பாராக் காவற்காரர்களிடம் வந்தபோது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  சிரித்துக்கொண்ட இருவரும் அந்தப்புரக் கதவில் கை வைக்கக் கதவு தானாகத் திறந்தது.  கனவு கண்டதில் விழித்த தானீஷா அந்தப்புரக் கதவு திறப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் பார்க்க எதிரே இரு சுந்தரபுருஷர்கள் நின்றனர்.  அறையே கோடி சூரியப் பிரகாசமாக ஜொலித்தது.  அந்த வெளிச்சத்தையும் இரு இளைஞர்களின் அழகையும், அவர்களின் தேஜஸையும் கண்ட தானீஷா இருவரையும் பார்த்து யார் எனக் கேட்க, அவர்கள், “நாங்கள் கோபன்னாவின் வேலையாட்கள்.  என் பெயர் ராம்ஜி. இவன் பெயர் லக்ஷ்மண்ஜி. பத்ராசலத்திலிருந்து வருகிறோம்.”  என்றனர்.

“வேலையாட்களா?  எத்தனை வருடங்களாகச் செய்கிறீர்கள்? என்ன சம்பளம் உங்களுக்கு?” தானீஷா கேட்டான்.

“ஐயா, நாங்கள் பல தலைமுறைகளாகச் செய்து வருகிறோம்.  சம்பளமெல்லாம் கிடையாது.  அந்த ராமர் கோயில் பிரசாதத்துக்காகச் செய்கிறோம்.”
“ஆச்சரியமாய் உள்ளதே.  இப்போது என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“ஐயா, கோபன்னா உங்களிடம் கடன் பட்டிருக்கிறாராமே.  அதை அடைக்கச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்.  பணத்தைக் கொண்டு வந்துவிட்டோம்.  இதோ உமக்குச் சேர வேண்டிய ஆறு லக்ஷம் பொன்கள். “ கையிலிருந்த பணப்பையைப் பிரித்து அவிழ்த்துக் கொட்ட, கலகலவென சப்தித்துக்கொண்டு தங்க நாணயஙக்ள் உருண்டோடின.  “இவற்றைச் சரி பார்த்துக் கொண்டு, கடன் தீர்ந்ததற்கான ரசீதைக் கொடுங்கள் ஐயா, “ என அவர்கள் அவசரப் படுத்த இந்த நட்ட நடுநிசியில் இந்த இருவரும் எங்கிருந்தோ வந்து கோபன்னாவின் கடனைத் தீர்ப்பதை எண்ணி எண்ணிப் பார்த்த தானீஷாவுக்கு வியப்புத் தாங்கவில்லை.  அது சரி இவர்களை உபசரிக்கக் கூட இல்லையே.  எப்படி உபசரிப்பது?  தானீஷா குழப்பத்துடன் அவர்களிடம் இந்த நடுநிசியில் உங்களை எப்படி உபசரிப்பது எனத் தெரியவில்லை, என்று சொல்ல, இருவரும் வேலைக்காரர்களான தங்களுக்கு எந்த விதமான உபசாரமும் வேண்டாம் எனவும், ரசீதைக் கொடுக்கும்படியும் திரும்பக் கேட்டனர்.  தானீஷா ரசீதைக் கொடுக்க இருவரும் இருண்ட சிறையிலிருந்து கோபன்னாவைப் பார்க்கப் போனார்கள்.  கோபன்னாவைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு மனம் உருக, அண்ணனிடம், “நீ செய்தது அநியாயம், நமக்கு வானளாவக் கோயில் எடுத்தவன் சிறையில் வாடுகிறான்.  அவன் நிலைமையைப் பாருங்கள்.  எலும்பும் தோலுமான உடலுடனும், குழி விழுந்த கண்களோடும், சடாமுடியோடும், தாடியோடும் பிச்சைக்காரனைப் போல் நிர்க்கதியாய்ப் படுத்திருக்கிறான்.  நீங்கள் இன்னும் முன்னமே உங்கள் கருணையைக் காட்டி இருக்கலாகாதா?” என்று சொல்ல, ஸ்ரீராமனோ, “அப்பனே, இது பூர்வ ஜன்ம வினை. இதை இவன் அனுபவித்தே தீர வேண்டும்.  ஊழ்வினையைத் தடுக்க என்னாலும் இயலாது.  சரி, நீ இப்போது  உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்த்து வா!” எனச் சொல்ல லக்ஷ்மண்ஜியும் ஆதிசேஷனாக மாறி உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்க்கிறான்.  ரசீதை கோபன்னாவின் பக்கத்திலே வைக்கிறார்கள்.  பின்னர் இருவரும் மறைந்தனர்.

அரசன் தங்க நாணயங்களைப் பார்த்துப் பார்த்து அதிசயித்தான்.  அவற்றின் முத்திரையைச் சோதிக்க ஸ்ரீராம் என அவற்றில் எழுதி இருந்தது.  இயன்றவரை பல நாணயங்களைச் சோதித்தும் அனைத்திலும் ராமன் பெயரே இருக்கவும்.  தானீஷாவுக்கு உண்மை புரிந்தது.  கோபன்னாவுக்காக வந்தது சாக்ஷாத் ஶ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை உணர்ந்தான்.  கோபன்னா எத்தனை பெரிய மஹான் என்பதும் புரிந்தது அவனுக்கு.  

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


ஹைதராபாத் நகரில் அவரைக் காவலில் வைத்தனர் சேவகர்கள்.  கோபன்னாவின் மாமன்மாருக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  இருண்ட சிறைச்சாலையில் மாமன்மார் வந்து பார்த்து கோபன்னாவைக் கோபம் பொங்கத் திட்டித் தீர்த்தனர்.  தானீஷாவின் முன்னிலையில் கோபன்னா விசாரணைக்கு வந்தார்.  மன்னனிடம் தாம் மன்னனைக் கேளாமல் செய்தது தவறே என ஒப்புக் கொண்ட கோபன்னா, இந்தத் திருப்பணியை மன்னனே முன்னின்று நடத்தி இருக்க வேண்டும் என்றும் இதனால் விளைந்த, விளையப் போகிற நற்பலன்கள் அனைத்தும் அரசுக்கே ஏற்படும் என்றும் கூறிய கோபன்னா ஸ்ரீராமனின் மகத்துவத்தையும் பக்தியின் பெருமையையும் அதன் விளைவாய் ஏற்படும் ஞானத் தத்துவங்களையும் மன்னனிடம் எடுத்து உரைத்தார்.  ஆனால் மன்னன் மனம் மாறவில்லை.  கோபன்னாவின் அறிவாற்றலும், ஞானத்தையும் கண்டு உள்ளூர வியந்தாலும் பண விஷயத்தில் இம்மியும் விட்டுக் கொடுக்க மன்னன் தயாராக இல்லை.  மேலும் கோபன்னா ஒருவரை விட்டு விட்டால் பின்னர் இம்மாதிரியே எல்லாரும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.  எல்லாரும் பணத்தைச் செலவு செய்துவிட்டுத் திருப்பணி என்பார்கள்.  ஆகவே இந்த கோபன்னாவிடம் நயந்தும், பயந்தும் பேசியே பணத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்தான்.  கோபன்னாவ்விடமிருந்து ஆறு லக்ஷம் வராஹன்கள் வரும் வரையிலும் சிறையில் அடைக்குமாறு கூறி மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டான் தானீஷா.  மக்கள் செய்தியறிந்து வீதிக்கு வீதி இது குறித்தே விவாதித்து வந்தனர்.

கோபன்னா சிறையில் இருந்தார்.  கரடுமுரடான தரை.  கிழிந்ததொரு பாய்.  போர்த்திக்கொள்ள மிக மோசமானதொரு கம்பளி.  அந்த அறையில் படுக்கவே முடியவில்லை. ஆனால் அங்கே படுக்கையிலே காட்டிலே ஒவ்வொரு நாளும் ஸ்ரீராமன் கட்டாந்தரையிலே புற்படுக்கையிலே படுத்தது அவர் மனதில் வந்தது.  ஆஹா, அந்த ஸ்ரீராமன் காட்டில் புழுதியிலே கட்டாந்தரையிலே புற்களால் ஆன படுக்கையில் அல்லவா படுத்திருந்தான்.  அதுவும் ஒரு ஆண்டா, இரண்டு ஆண்டா!  ப்தினான்கு ஆண்டுகள். ஸ்ரீராமா நீ எப்படித்தான் தூங்கினாய் அப்பா. என மனம் உருகினார்.  உணவும் சரியாக அமையவில்லை கோபன்னாவுக்கு.  உப்பும் அரிசியும் சரிசமமாகக் கலக்கப்பட்ட அன்னத்தைக் காவலன் கொடுக்க அதுவும் ஸ்ரீராமன் அருளால் கிடைத்த பிரசாதமே என மனம் உருகி வாங்கி உண்டார் கோபன்னா.  தன் மனதுக்குள்ளாக ஸ்ரீராமனுக்கு மானஸ பூஜை செய்து கொண்டே இருந்தார்.  அவர் உடல் தான் சிறையில் இருந்ததே தவிர உள்ளம் முழுதும் ஸ்ரீராமனிடம் மூழ்கி இருந்தது.  ஆகவே சிறைச்சாலையின் துன்பங்கள் அவரை ஒன்றும் செய்யவில்லை.  சிறையிலும் ஆனந்தமாக அவர் இருப்பதைக் கேள்விப் பட்ட தானீஷா, ஆஹா, இது சரியில்லை;  இவனை முச்சந்தியிலே நிறுத்துக் கசையடி கொடுங்கள்.  பணத்திற்கு அப்போதானும் வழி சொல்லுவான் எனக் கூறினார்.

தண்டனைச் செய்தி ஹைதராபாத் நகரம் முழுதும் பரவியது. மக்கள் துடிதுடித்தனர்.  ஆஹா, கோபன்னா எத்தகைய ராமபக்தர்!  அவருக்கா இத்தகைய தண்டனை! பணத்தை அவரா எடுத்துக் கொண்டார்.  தம் மனைவிக்கும் மகனுக்கும் கொடுத்தாரா!  இல்லையே.  அல்லது தமக்கென நிலம், நீச்சு என வாங்கிச் சேர்த்தாரா.  அதுவும் இல்லையே.  பத்ராசலம் கோயிலுக்கன்றோ செலவழித்தார்.  கோபன்னா திருப்பணிக்கு முன்னர் பத்ராசலம் எப்படி இருந்தது!  இப்போதோ, பூலோக வைகுண்டம் போல் அல்லவா ஒளிர்கிறது.  கோயில் மட்டுமா அழகாக அமைந்துள்ளது!  வழிபாடுகளில் என்ன விமரிசை, என்ன பக்தி.  இப்படி எல்லாம் நடக்க ஏற்பாடு செய்த ஒரு பரமபக்தரை இப்படியா தண்டிப்பது.  இது தகாது.  அநியாயம்.  என ஓலமிட்டனர் மக்கள்.  “ஏ ராமா, இது என்ன நீயும் தானீஷாவுடன் சேர்ந்து வேடிக்கையா பார்க்கிறாய்.  அல்லது இதுவும் உன் விளையாட்டுகளில் ஒன்றோ! என ஸ்ரீராமனையே பலரும் கேட்டனர்.  கோபன்னாவும் வீரர்கள் காவலுடன் முச்சந்தியை நோக்கி அழைத்து வரப் பட்டார்.  ஊரார் சிலர் வேடிக்கை பார்க்க, பெரும்பான்மை மக்கள் கதறி அழ கோபன்னாவுக்கு தண்டனை நிறைவேறத் தொடங்கியது.  ஸ்ரீராமன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தார் கோபன்னா.  அடியோ மேன்மேலும் விழுந்தது.  முதுகிலே ரத்தம் பீறிட பத்துப் பிரம்புகளுக்கும் மேல் முறிந்து விழ, ராமசந்திரனுக்கு மங்களம் என்ற வார்த்தையையே கோபன்னா திரும்பத் திரும்பக் கூற அவரை அடிப்பதிலும் பயனில்லை என உணர்ந்த சேவகர்கள் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  அடிக்குப் பயந்து பணத்துக்கு ஏற்பாட்டு செய்வார் என தானீஷா எதிர்பார்த்ததும் நடக்காமல் போகவே தலையில் பாறாங்கல்லைச் சுமந்து கொண்டு நகர் முழுவதும் வலம் வரச் சொல்லி தண்டனை கொடுத்தான் தானீஷா.

அந்த தண்டனையையும் ஸ்ரீராமன் பெயரைச் சொல்லிக் கொண்டே நிறைவேற்றினார் கோபன்னா.  பின்னர் கைகால்களைக் கட்டி மணலில் உருட்டினர்.  அப்போதும் மனம் தளராமல் ஸ்ரீராமன் பெயரைச் சொன்ன வண்ணம் நிறைவேற்றினார்.  இப்படியே வருடங்கள் உருண்டன.  கோபன்னாவால் பணம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  தண்டனைகளும் நிற்கவில்லை.  கோபன்னாவின் மன உறுதியும் தளரலாயிற்று.  இந்த ஸ்ரீராமன் அனைத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறானே.  அவனும் ஒரு மனிதனாகத் தானே இருந்தான்.  மனிதன் படும் துயரம் எத்தகையது எனப் புரிந்து கொள்வான் என நினைத்தேனே.  நான் அவனை இறைவன் என நினைத்தது தவறு.  எல்லாப் பொருட்களையும் எனக்கா செலவு செய்து கொண்டேன்.  ஏ, ராமா, உனக்கல்லவோ செலவு செய்தேன்.  உன் கோயில் பிராகாரங்களுக்கே லக்ஷம் பொன் செலவிட்டேனே.  உனக்குத் தான் ஆடை, ஆபரணங்கள், நகைகள் போன்றவை வாங்கினேன்.  அத்தனையையும் நீ தானே அனுபவிக்கிறாய்.  எவ்வளவு வாங்கினேன்.  உன் மாமனாரான ஜனகனா கொடுத்தான்.  அத்தனையும் தானீஷாவுக்குச் சேர வேண்டிய வரிப்பணம்.  உனக்காகத் தானே செலவழித்தேன்.  அப்போது நீ பேசாமல் பார்த்துக் கொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு இருந்துவிட்டு இப்போதும் வேடிக்கையா பார்க்கிறாய்!  என் துன்பம் உனக்குப் புரியவில்லையா!  இந்த கோபன்னாவுக்கு இன்னும் எத்தனை அடிகளும், தண்டனைகளும் இருக்கிறதோ அத்தனையும் தாங்கட்டும் என நினைக்கிறாயா?

இவ்வாறே அவர் ஸ்ரீராமனைப் போற்றியும் நிந்தித்தும் பல பாடல்களைப் புனைந்து பாடினார்.  அப்போது ஒரு நாள் திடீரென அவருக்கு சீதையின் தோற்றம் கண்களில் தெரிந்தது.  “அம்மா, தாயே, உன்னை மறந்துவிட்டேனே.  என் துன்பத்தை நீயாவது உன் கணவனுக்கு எடுத்துச் சொல்லமாட்டாயா. என் கடவுள் என உன் கணவன் ஸ்ரீராமனை நான் எண்ணியது அத்தனையும் வீண்.  அவனுக்கும் உனக்கும் தானே நான் செலவு செய்தேன்.  அவனாவது ஒரு வார்த்தை தானீஷாவிடம் போய்ச் சொல்லக் கூடாதா!  அவன் சொல்லவில்லை;  சொல்லவும் மாட்டான்.  தாயே, நீ தான் எனக்காக எடுத்துச் சொல்லக் கூடாதா?  நானும் எத்தனை வருடங்கள் இன்னமும் பொறுப்பது!  உன் கணவனுக்குக் கல் நெஞ்சம் அம்மா.  அவன் இரக்கமே காட்ட மாட்டான்.  கடினமான மனம் இருந்ததால் தானே, உன்னை, “தீக்குளித்துவிட்டு வா!” என்று சொன்னான். அதோடு விட்டானா!  நிறை கர்ப்பிணியான உன்னைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னானே.  அப்போதே அவன் குணம் எல்லாருக்கும் புரிந்துவிட்டது.  நான் தான் புரிந்து கொள்ளவில்லை.  அவன் கருணையே இல்லாதவன் அம்மா;  இவனைப் போய்க் கருணாசாகரன் எனச் சொல்வது தப்பு. வேண்டாம் தாயே, வேண்டாம்.  நீயும் அருள் புரிய வேண்டாம்.  உன் கணவனும் உதவி செய்ய வேண்டாம். நான் விஷம் குடித்து உயிரை விட்டு விட்டு நேரிலேயே வந்து உன் கணவனைக் கேட்கிறேன்.  ஆம் அது தான் சரி. இவ்வாறெல்லாம் எண்ணிய கோபன்னா எங்கிருந்தோ விஷம் எடுத்து வர ஏற்பாடு செய்து அதை நீரிலே கரைத்துவிட்டுக் குடிக்க ஆயத்தமானார்.  சீதம்மா, நீயாவது உன் கணவனிடம் சொல்ல மாட்டாயா எனக் கேட்டுக் கொண்டே விஷத்தைக் குடிக்க ஆயத்தம் ஆனார்.


Saturday, November 10, 2012

ஸ்ரீமஹா பக்த விஜயம்! பத்ராசலம் ராமதாஸர்!


தங்கத் தகடுகளால் கொடிமரம் வேயப் பட்டது.கோபுரங்களில் தங்கக் கலசங்கள் பதிக்கப்பட்டன. பீடங்களோ வெள்ளியால் ஆனவை. ஆராதனைக்கான உபகரணங்கள், பாத்திரங்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப் பட்டன. பஞ்சலோகங்களால் ஆன ஸ்ரீராமனின் உற்சவ விக்ரஹத்திற்கு நவரத்தினங்களால் ஆன ஆபரணங்கள் சூட்டப்பட்டன. அனைத்தும் முடிந்து முறைப்படியான யாகங்கள் செய்து கோயிலில் கும்பாபிஷேஹமும் முடிந்தது. இயற்கையான மலை அழகிலே ஜொலித்துக் கொண்டிருந்த ஸ்ரீராமன் இப்போது தன் பக்தன் ஆன கோபன்னா செய்த செயற்கையான அலங்காரங்களையும் ஏற்று அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருந்தான். கோயிலின் நந்தவனத்தில் ஜாதிப்பூக்கள், சண்பகப் பூக்கல், வில்வம், துளசி போன்றவை வளர்க்கப் பட்டு முறையே இறைவனுக்குச் சார்த்தப் பட்டது. பழங்கள் வித விதமாகப் படைக்கப்பட்டன. சந்தனம், ஊதுபத்தி, தசாங்கம் போன்றவற்றின் சுகந்தம் வேறு மனதையும் மூக்கையும் நிறைத்தட்து. கோபன்னா ஆனந்தத்தில்திளைத்தார். கோயிலுக்கு பக்தர்கள் வருகையும் பெருகியது.

இது இவ்வாறிருக்க, ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியும் பத்ராசலம் தாலுகாவின் வரிப்பணம் வந்து சேரவில்லை என்பதை தானீஷா அறிந்தான். கோபன்னாவின் மாமன்மார்களை அழைத்து, கோபன்னாவை நம்பிக்கையானவன் எனக் கூறி ராஜ சேவகத்துக்கு சிபாரிசு செய்தீர்களே! இப்போது வரிப்பணம் வரவில்லையே எனக் கேட்க, தங்கள் மருமகனால் தங்கள் பெயர் கெடுகிறதே எனக்கவலையுற்ற அவ்விருவரும் ஒரு தூதுவனை பத்ராசலத்துக்கு அனுப்பி வைத்தனர். தூதுவனும் கோபன்னாவைக் கண்டு மன்னன் கொடுத்த ஓலையைக் கொடுத்தான். கோபன்னா அந்த ஓலையைப் படித்துவிட்டு தூதுவனை ஸ்ரீராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்று தரிசனம் பண்ண வைத்தார். தாம் செய்துள்ள திருப்பணிகளை எல்லாம் காட்டினார். தூதுவன் ஆச்சரியக்கடலில் முழுகினான்.  அருமையான பணியைச் செய்திருந்தாலும் இதற்குப் பெயரும் புகழும் கிடைத்திருந்தாலும் அனைத்தும் அரசாங்கப் பணத்தில் செலவிடப் பட்டவை. ஆகவே இது திருட்டுக் குற்றமே.  அரசனின் கோபத்திற்கும் ஊராரின் பழிக்கும் ஆளாகி இருக்கும் கோபன்னா என்ன பதில் சொல்ல முடியும் எனக் கேட்டான். கோபன்னாவோ தனக்கு எதுவுமே விளங்கவில்லை என்றும், இது அரசனே முன்னின்று செய்திருக்க வேண்டிய ஒன்று என்றும், தான் தனக்கு என ஒரு செப்புக்காசைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை எனவும் கூறினார். மேலும் தான் ஸ்ரீராமனையே நம்பி இருப்பதால் அவன் தன்னை எந்த அவமானமும் துன்பமும் நேராமல் காப்பான் என நம்புவதாயும், தானீஷா பெருந்தன்மையாகத் தன்னை மன்னிப்பார் எனவும் கூறினார். பின்னர் எதற்கும் இந்த விஷயத்தை முதலில் தம் மாமன்மாரிடமே சொல்லும்படியும் அவர்கள் பின்னர் ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனவும் கூறினார் கோபன்னா.

தூதுவனும் அவ்வாறே வந்து மாமன்மாரிடம் கோபன்னா கூறியவற்றைக் கூறத் திகைத்த மாமன்மார் எப்படியும் இங்கே வந்து தான் ஆகவேண்டும்; அதுவரை பொறுப்போம் என எண்ணினார்கள். தானீஷாவின் சபை கூடி வரவு, செலவுகள் குறித்த விவாதங்கள் நடந்தன.  எங்கெங்கே வரவு பாக்கி இருக்கிறது என்பது குறித்தும் பேசப்பட, பத்ராசலம் தாலுகாவில் பாக்கி உள்ளதைக் கண்டு ஆச்சரியமடைந்த தானீஷா, கோபன்னா இன்னமும் பாக்கி வைத்திருக்கிறாரா? ராஜபக்தி உள்ள மனிதன் ஆயிற்றே என தூதுவர்களை அழைத்து விசாரிக்க பத்ராசலம் சென்று வந்த தூதுவன் தான் கண்டும் கேட்டும் அறிந்த செய்திகளைத் தானிஷாவிடம் தெரிவித்தான். தானிஷாவின் முகம் சுருங்கியது. எவ்வளவு பாக்கி என விசாரிக்க ஆறு லக்ஷம் வராஹன்கள் பாக்கி என அறிந்த தானீஷா கோபம் எல்லை மீற பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும் இல்லையேல் விசாரணைக்கு வரவேண்டும் எனவும் தக்க காவலுடன் கைது செய்து அழைத்து வரவேண்டும் எனவும் கட்டளை இட்டான். ராஜ சேவகர்கள் பத்ராசலம் சென்று அரசனின் கட்டளையைத் தெரிவிக்க கோபன்னாவோ, சேவகர்களுக்கு விருந்து படைக்க ஆயத்தம் செய்தார். வந்த வேலை முடியும் முன்னர் உணவு உண்ண மாட்டோம் என மறுத்தனர் சேவகர்கள்.  அவர்களிடம் தன்னிடம் செப்புக்காசு கூடக் கிடையாது எனக் கூறிய கோபன்னாவை இந்த விஷயத்தை அரச சமூகத்தில் வந்து தெரிவிக்குமாறு சேவகர்கள் கூறினர். ஏவலாளர் புடை சூழக் கிளம்பிய கோபன்னாவை, இப்போது குற்றவாளியாகச் செல்வதால் இம்மாதிரி வர முடியாது எனவும், தக்க காவலுடன் தாங்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினர் சேவகர்கள் அதற்குள் ஊர்மக்களுக்கு விஷயம் தெரிந்து சத்யாக்ரஹம் செய்ய முன் வந்தனர். மக்களை சமாதானம் செய்த கோபன்னா தன் மனைவியிடமும், மகனிடமும் விஷயத்தைத் தெரிவித்து, ஸ்ரீராமன் இருப்பதாகவும் அவன் தம்மைக் காப்பான் எனவும் கூறிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.

Sunday, October 28, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்-- பத்ராசலம் ராமதாஸர் !

வருமானம் இல்லாமல் வந்த விருந்தினர்க்கு உணவு படைத்துக் கொண்டே இருந்தால்
எத்தனை நாட்களுக்கு வரும்?  நாளாவட்டத்தில் கோபன்னாவின் வீட்டில் வறுமை
தாண்டவம் ஆடியது.  அடியார்களை உபசரிக்க முடியாமல் வருந்திய கோபன்னாவுக்கு
ஹைதராபாத் மன்னனான தானீஷாவின் அமைச்சரவையில் உயர்ந்த பதவிகள் வகித்த தனது
தாய் மாமன்களின் நினைவு வந்தது.  அவர்கள் மூலம் தானும் அரசாங்க வேலை
ஏதேனும் ஒன்றைப் பெற்று வருமானத்திற்கு வழி ஏற்படுத்திக் கொண்டால்
வருங்காலத்துக்கு மட்டுமின்றி அடியார்களையும் தக்க முறையில் உபசரிக்கலாம்
என நினத்தார் கோபன்னா.  ஹைதராபாத் சென்று தன் மாமன்களான அக்கன்னா,
மாதன்னா இருவரையும் வணங்கித் தன் கோரிக்கையை முன் வைத்தார்.  தானீஷா
நல்லவனாக இருந்தாலும் பண விஷயத்தில் படு கஞ்சன் எனக் கூறிய மாமன்மார்கள்
வரி வசூல் போன்ற வேலைகளில் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என
புத்திமதியும் கூறினார்கள்.  பின்னர் மறுநாள் தர்பாரிலே தங்கள் மருமகனை
அறிமுகம் செய்வித்து வந்த நோக்கத்தையும் தெரிவித்தனர்.  அப்போது
பத்ராசலம் தாலுகாவில் வேலை காலியாக இருந்ததால் தானீஷா உடனே அந்தத்
தாலுகாவின் தாசில்தாராக கோபன்னாவை நியமித்தார்.  கிஸ்தியை ஒழுங்காக
வசூலிக்க வேண்டும் எனக் கண்டிப்பாய்க் கூறி முத்திரையிட்ட கடிதமும்
கொடுத்து அனுப்பி வைத்தார்.

பத்ராசல க்ஷேத்திர மஹிமையையும், அங்குள்ள ஶ்ரீராமர் கோயிலின் புகழையும்
குறித்து ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த ராமதாஸர் தனக்கு அளிக்கப்பட்ட
பல்லக்கில் ஏறி அந்த ஊரை அடைந்து, ஊருக்கு முன்னால் கீழே இறங்கி மலையை
வலம் வந்தார்.  கோயிலுக்குச் சென்று தன் குடும்பத்தோடு குடியிருந்த
ஶ்ரீசீதாராமரை, பரத, லக்ஷ்மண, சத்ருக்கன, ஆஞ்சநேயரோடு தரிசனமும்
செய்தார்.  புதிய தாசில்தாரைக் குறித்தும், அவர் கண்டிப்பைக் குறித்தும்
கவலையுற்றிருந்த பத்ராசலம் மக்கள் பக்திப் பரவசத்தோடு காட்சி அளித்த
இவரைப் பார்த்து மகிழ்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.  பதவி ஏற்ற நாள் முதல்
சிறப்பாகப் பதவிக்கு உரிய வேலைகளைத் தவறாது செய்துவந்தார் கோபன்னா.
குடிகளைத் தம்மிலிருந்து பிரித்து நினையாமல் இருந்து வந்ததால் எப்போதும்
ஊர் பாடல்,  ஆடல், பஜனை, வழிபாடுகள் எனக் கோலாகலமாக இருந்து வந்தது.
மக்களும் தவணை தவறாமல் கிஸ்தியைச் செலுத்தி வந்தனர்.  மற்ற தாலுகாவின்
தாசில்தார்களுக்கு எல்லாம் ஓர் நல்ல உதாரணமாகத் திகழ்ந்தார் கோபன்னா.

பத்ராசலம் கோயில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்தது.  அதற்குத்
திருப்பணி செய்ய வேண்டும் என நினைத்தார் கோபன்னா.  அதற்கு முன்னால் அதன்
பூர்வ சரித்திரம் என்ன என்பதை ஆராய்ந்தார்.  “தம்மக்கா என்னும் அந்தணப்
பெண் தன் மகளோடு இவ்வூரில் வாழ்ந்து வருகையிலே அவள் கனவிலே ஸ்ரீராமர்
தோன்றித் தாம் மலை மீது இருப்பதைச் சொல்ல, மலை ஏறிப் பார்த்தபோது ஒரு
புதரில் சீதாசமேத ஶ்ரீராமர், பரத, லக்ஷ்மண, சத்ருக்ன, அநுமனோடு காட்சி
கொடுத்தார்.  அவர்களுக்குக்கோயில் கட்டி இந்த விக்ரஹங்களைப் பிரதிஷ்டை
செய்ய வேண்டும் என நினைத்த தம்மக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினாள்.
நகரில் வாழ்ந்து வந்த பத்திர ரெட்டி என்பவரும், மற்றும் ஊராரும் பண உதவி
செய்ய, கோயில் வேலைகள் நடந்தன.  அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகியவற்றோடு
ஸ்ரீராமர் அங்கே தன் குடும்பத்தோடு கோயில் கொண்டார்.  நாளடைவில் தம்மக்கா
ஶ்ரீராமரோடு ஐக்கியமானாள்.  பின்னர் ஒரு அரசன் ஏதோ திருப்பணி என்ற
பெயரில் செய்தான்.  ஆனால் இப்போதோ கோயில் முட்புதர்களும், செடிகொடிகளும்
மண்டி சுவற்றிலேயும் மரங்கள் வேரோட ஆரம்பித்துவிட்டிருந்தது.  இத்தகைய
நிலைமையைக் கண்ட கோபன்னாவுக்குக் கண்ணீர் வந்தது.

யோசித்தார்.  தானீஷாவுக்கு பத்ராசலம் தாலுகாவின் வசூல் என்பது ஒன்றும்
பெரிய விஷயம் அல்ல.  பத்ராசலம் அவன் ராஜ்யத்தின் ஒரு சிறு பகுதியே ஆகும்.
பார்க்கப் போனால் இது தானீஷாவே முன்னின்று ஏற்று நடத்தி இருக்க வேண்டிய
பணி.  இந்தக் கோயிலைச் சீர்திருத்திக் கட்டினால் எத்தனை மக்கள்
பயனுறுவார்கள்.  ஆகவே இதை நாமே ஏற்று நடத்திவிடலாம். என நினைத்தார்
கோபன்னா. உடனே தனக்கு உதவியாக  இருந்த கணக்கனிடம் வரிப்பணம் எவ்வளவு எனக்
கேட்க, அவன் ஆறு லக்ஷம் பொன் இருப்பதாய்த் தெரிவித்தான்.  கோயில்
திருப்பணிக்கு எவ்வளவு தேவை எனக் கணக்குப் போட்டால் ஆச்சரியவசமாக அதுவும்
ஆறு லக்ஷம் பொன்னாக இருந்தது.  கோபன்னா உடனே திருப்பணியை ஆரம்பிக்க அந்த
மலைப் பிரதேசத்தில்  உளியின் சப்தமும், ஆட்களின் கூக்குரலும்
சம்மட்டிகளின் ஓசையும் கேட்க ஆரம்பித்தது.  திருப்பணி வேலைகள் வெகு
சுறுசுறுப்பாக நடந்தது.  பல ஊர்களில் இருந்து சிற்பிகளும், ஆட்களும்
வந்து வேலை செய்தனர்.  மிகப் பிரம்மாண்டமாகக் கோயில் எழுந்தது.
தூண்களில் செதுக்க வேண்டிய சிற்பங்களைத் தெரிவு செய்தார் கோபன்னா.
அலங்கார மண்டபம், கர்பகிரஹம், பலிபீடங்கள், கொடிமரம், எல்லாம் உருவாகின.
ராமாயணக் கதையையே சிற்பங்களாக வடித்தார் ஒரு சிற்பி.

Thursday, October 18, 2012

ஸ்ரீ மஹா பக்த விஜயம்!--பத்ராசலம் ராமதாஸர்!


குழந்தை போனது என்னமோ போனதுதான்.  ஆனால் பக்தர்களோ இன்னும் சாப்பிடவே இல்லை.  இப்போது போய்க் குழந்தை போனதைச் சொன்னால் அத்தனை பக்தர்களும் பட்டினி கிடக்க நேரிடும்.  எல்லாம் வீணாவதோடு குழந்தை ஒன்றும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை.”  ஒரு முடிவுக்கு வந்த ராமதாஸரின் பத்தினி குழந்தையை, அதாவது குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் ஓர் அறையிலே கொண்டு வைத்துப் போர்வையால் மூடிவிட்டு எதுவுமே நடவாதது போல் தன் காரியங்களைக் கவனிக்கலானாள்.  சமாராதனை முடிந்தது.  அனைவரும் தாம்பூலம் பெற்றுச் சென்றனர்.  மெல்லக் கணவனிடம் வந்த ராமதாஸரின் பத்தினி தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள்.  பின்னர் அழைத்துச் சென்று குழந்தையைக் காட்டினாள்.  அந்தக் குழந்தையின் உடலை எடுத்து வந்த பத்ராசல ராமதாஸர் குழந்தையைச் சந்நிதியில் கிடத்தினார்.  “ஏ, ராமா, இதுவும் உன் சோதனையா?  அடியவரைக் காப்பது, இடர் தீர்ப்பது என்பது உன் கடமையன்றோ!  நின் கடன் அடியேனைத் தாங்குதலும் சேர்ந்தன்றோ! இதெல்லாம் பொய்யா?  இப்படியும் நடக்குமா?  இந்தச் செல்வம் நீயன்றோ எங்களுக்குத் தந்தாய்!  நீயே இப்படித் திரும்பப் பிடுங்கலாமா?” என்றெல்லாம் கதறி அழுதார்கள்.  பல மணி நேரம் கதறி அழுத அவர்களைக் குழந்தையின் குரல் அப்பா, அம்மா என அழைப்பது கேட்டது.  திடுக்கிட்ட அவர்கள் பார்த்தபோது இறந்த குழந்தை உயிருடன் வந்திருப்பதைக் கண்டனர்.  இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லில் அடங்காத ஒன்று. இதன் மூலம் ஸ்ரீராமன் மேல் அவர்கள் வைத்த பக்தி மேலும் பெருகிற்று.

ஸ்ரீராமனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவல் ராமதாஸரின் நெஞ்சில் இருந்து வந்தது. தன் குருவான கபீர்தாஸரின் நினைவு வந்தது.  “எப்போது நீ நினைத்தாலும் அப்ப்போது நான் வருவேன்.” என்று தன்னிடம் கூறிச் சென்றிருந்த குருநாதரஇ நினைத்தார் கோபன்னா.  நினைத்த மாத்திரத்தில் வந்து நின்றார் கபீர்தாஸர்.  ஸ்ரீராமனைத் தரிசிக்கவேண்டும்; நேரிலே தரிசனம் கிடைக்கும்படி என்ன வழி எனக் கேட்ட கோபன்னாவிடம் கபீர்தாசர் அது அதற்கென்று உரிய காலத்திலே தான் கிடைக்கும் எனவும், அதுவரை ராமதாஸர் தனக்கென விதித்துள்ள செயல்களைச் செய்து வரவேண்டும் எனவும் கூறினார்.  ஆனால் இந்த பதில் கோபன்னாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை.  கபீரோ,” புலன்களை அடக்கித் தவம் செய்து வரும் மாமுனிவர்களுக்கெல்லாம் கூட எளிதில் கிட்டாத பொருள் ஸ்ரீராம தரிசனம்.  அதை இப்போதே பார்க்க வேண்டும் என்றால் இயலுமா? முதலில் உன் பக்தியை மேம்படுத்திக்கொள்ளும் வழியைப் பார்.” என்றார்.  ராமதாஸருக்கோக் காத்திருக்க விருப்பம் இல்லை;  பொறுமையும் இல்லை.  இப்போதே, இங்கேயே உடனே பார்க்க வேண்டும் எனக் கபீர்தாசரை வற்புறுத்த, “நாளைப் பகல் ஒருமணிக்குக் காட்சி கொடுப்பார்.” என்று சொல்லிவிடுகிறார்.  இந்தச் செய்தி எப்படியோ ஊரெல்லாம் பரவ ராமதாஸரின் இல்லத்தில் ஊர் மக்கள் கூட்டம் தாங்கவில்லை.  

கபீரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது.  ஸ்ரீராமரிடம் தன் சீடனான கோபன்னாவின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படியும் அவனுக்கு ஶ்ரீராமர் மறுநாள் உச்சி வேளையில் தரிசனம் கொடுப்பார் எனத் தான் வாக்களித்திருப்பதையும் கூறித் தன் வாக்கைக் காப்பாற்றும்படி ஸ்ரீராமனை வேண்டினார்.  ஸ்ரீராமரோ கோபன்னாவுக்கு இன்னமும் தெளிவோ, மனம் பண்படுதலோ ஏற்படவே இல்லை எனக் கூறிப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என மறுக்கக் கபீரோ ஒரு பக்தனாகிய தன் வாக்கை எவ்வாறேனும் காக்கவேண்டியது ஸ்ரீராமரின் கடமை எனக் கெஞ்சினார். கோபன்னாவின் வீடு திமிலோகப் பட்டது.  பஜனை, பூஜைகள், என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.  ஆங்காங்கே மக்கள் மிருதங்கம், ஜால்ரா முதலியனவற்றை ஒலிக்கச் செய்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.  உச்சி வேளை நெருங்க நெருங்க, அங்கே சூழ்நிலையில் பரபரப்புக் கூடலாயிற்று.  நடுக் கூடத்திலே இறைவனுக்கெனத் தனியானதொரு ஆசனம் அமைக்கப் பட்டிருந்தது.  இறைவனின் சேவைக்கு வேண்டிய மலர்கள், பழங்கள், நிவேதனங்கள், அதோடு ஷோடச உபசாரங்களுக்கு ஏற்பட்ட சாமக்ரியைகள் முதலியனவும் தயாராகக் காத்திருந்தது.  அப்போது பார்த்து ஒரு எருமை மாடு அங்கே வந்தது.  அதன் உடல் முழுக்கச் சேறு. கொம்பெல்லாம் சேற்று மண் ஒட்டிக் கொண்டிருந்தது.  அந்த்அ மாடு நேரே நடந்து இறைவனுக்கு அமைக்கப் பட்டிருந்த ஆசனத்துக்கு அருகே சென்றட்து.  செல்லும்போதே கீழே இருந்த நிவேதனங்கள், மலர்கள், பழங்கள், ஷோடச உபசார சாமக்ரியைகள் என அனைத்தையும் உருட்டிக் கொண்டே சென்றது.  கூடி இருந்த அனைவருக்கும் பொறுமை போயிற்று.  கோபம் பொங்கியது.  ஒரு தடியை எடுத்து மாட்டை நன்றாக அடித்து விரட்டினார்கள்.  மாடும் “அம்மா” எனக் கத்திக் கொண்டே ஓடிப் போய்விட்டது.

கபீரிடம் சென்ற ஸ்ரீராமர், “கபீர், உன் சீடன் என்னை நன்றாக அடித்துவிட்டான்;  இதோ பார்!  அடித்த அடையாளங்கள்.  அவன் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை.” எனக் கூற, கபீர் கோபத்துடன், “ராமா, நீ எருமையாகப் போவாய் என அவனுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க, “அவனுக்கு இன்னும் உரிய பக்குவ நிலை வரவில்லை கபீர்.  அது வந்ததும் அவனுக்கு நான் காட்சி தருவேன்.”  எனக் கூறி மறைந்தான்.

Monday, September 17, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம்--பத்ராசலம் ராமதாஸர்!


ஆத்தங்குடி மாளிகைச் சித்திரங்களில் காணப்பட்டவை பத்ராசல ராமதாஸர் கதை எனச் சொல்ல, ராஜம் அம்மாவும் அதை உறுதிப்படுத்தினார்.  உடனே நம் காளைராஜன் அவர்கள் அந்தக் கதையைக் கூறுமாறு கேட்டிருந்தார்.  இரண்டு நாட்களாக இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தேன்.  இப்போது தான் எழுதலாம் எனக் கொஞ்சம் தைரியம் வந்தது.

சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவரான சத்குரு தியாகப் பிரம்மம் அவர்களால் போற்றப் பட்ட பெரியார் பத்ராசலம் ராமதாஸர்.  தம்மை "ராமதாஸ தாஸன்" எனச் சொல்லிக் கொண்டவர் தியாகப் பிரம்மம்.  ராமதாஸருக்கு அருள் புரிந்து அவரது துன்பங்களைப் போக்கி அருளியது போல் எனக்கும் அருள் செய்வாய் எனப் பாடி இருக்கிறார். அத்தகைய பெருமை வாய்ந்த பத்ராசலம் ராமதாஸர் காலம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலம் ஆகும். கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்த காலத்தில் கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கன்னா என்னும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.  இவரது மனைவி காமாம்பாள் என்பவர்.  இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கோபன்னா என்னும் பெயர் கொண்ட பின்னால் ராமதாஸர் என அழைக்கப்படப் போகும் பக்தர் ஆவார்.

கோபன்னா இளவயதிலேயே புராணப்ரவசனம் நடக்கும் இடங்களிலே முன் வரிசையிலே அமர்ந்து ராமாயணக் கதையை ஆவலுடன் கேட்பார். ராமரிடம் எல்லையற்ற அன்பு கொண்டார்.  ராமரை வழிபடுவதே தம் வாழ்க்கையின் முக்கிய லக்ஷியமாய்க் கொண்டார்.  தாயும், தந்தையும் ஒருவர் பின் ஒருவராக மறைய குடும்பத்தில் பெரியோர் வழிபட்டு வந்த ஶ்ரீராமரின் விக்ரஹம் இவருக்கு வந்து சேர்ந்தது.  அந்த விக்ரஹத்தை வைத்து வழிபட்டு வந்த சமயம் ஒரு நாள் முதியவர் ஒருவர் அங்கே வந்தார்.  இவரது பக்தியைக் கண்டு வியந்தார் அவர்.  ஶ்ரீராமரின் விக்ரஹத்தின் மேல் கோபன்னா வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு உள்ளூர ஆனந்தம் அடைந்த அந்தப் பெரியவர் அவரைச் சோதிக்க எண்ணி அந்த விக்ரஹம் இருந்த பெட்டியை விக்ரஹங்களோடு குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார்.  இதை அறியாத கோபன்னா விக்ரஹங்களைக் காணாமல் தவித்தார்; துடித்தார்.

அப்போது முதியவர் அவரிடம் என்ன விஷயம் எனக் கேட்க, தான் வழிபட்டு வந்த ஶ்ரீராமர் விக்ரஹத்தைக் காணவில்லை என கோபன்னா கூற, தாம் வேறு விக்ரஹம் தருவதாய்ச் சொல்லிச் சமாதானம் செய்து பார்க்கிறார். கோபன்னா, தாம் வழிபட்டு வந்த விக்ரஹம் தான் தனக்கு வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.  அதன் பின்னர் இவருக்கும் முதியவருக்கும் வாக்குவாதம் நடக்க முடிவில் பெரியவர் ஶ்ரீராமநாமத்தைச் சொல்லிப் பேழையைக் குளத்திலிருந்து மீட்டுக் கொடுத்துத் தாம் கபீர்தாசர் என்பதையும் அவருக்குத் தெரிவித்து, கோபன்னாவின் தலை மீது கைவைத்து ஸ்பரிச தீக்ஷையும் கொடுத்து அருளிச் சென்றார்.

பின்னரும் தெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டு அடியார்களுக்கு அன்னமும் இட்டு வந்தார் ராமதாஸர்.  ஊர் மக்கள் இவை எல்லாம் இல்லறத்திலிருந்து கொண்டு செய்வதே மேன்மை தரும் என வற்புறுத்திச் சொல்ல, கோபன்னா ஒருவழியாகத் திருமணத்துக்குச் சம்மதம் கொடுத்தார்.  திருமணமும் நடந்தது.  இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.  ஒரு முறை ஶ்ரீராமநவமி சமயம்.  பஜனையும், சமாராதனையும் பெரிய அளவில் செய்வதற்கான ஏற்பாடுகளை கோபன்னாவும், அவர் மனைவியும் செய்து கொண்டிருந்தனர்.  சமையல் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அன்னம் வடிக்கப் பட்டுக் கஞ்சி ஓடி, ஓடி, ஒரு குழியிலே வந்து தேங்கி இருந்தது.  ஶ்ரீராமனது திவ்ய மங்கள விக்ரஹம் சகல அலங்காரங்களுடன் பூஜை முடிந்து கற்பூர ஆரத்தியை ஏற்றுக் கொண்டிருந்த நேரம்.  நாமாவளிகளின் கோஷம் ஊரையே நிறைத்தது.  ஆயிற்று;  சிறிது நேரத்தில் இலை போட்டுப் பரிமாற வேண்டியதுதான்.

அப்போது ஏதோ வேலையாக வீட்டின் பின்புறம் சமையல் நடக்கும் இடத்துக்குச் சென்றாள் கோபன்னாவின் மனைவி.  கையில் குழந்தை.  குழந்தை துள்ளி விளையாடும் பருவம்.  அவளே எதிர்பாராமல் கஞ்சி நிரம்பியிருந்த குழியில் குழந்தை விழுந்துவிட்டது.  துடித்துப் போன கோபன்னாவின் மனைவி குழந்தையை உடனே தூக்கினாள்.  ஆனாலும் குழந்தையின் உடல் துவண்டது.  உயிரில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.  செய்ய வேண்டியது என்ன? சற்றே நிதானித்தாள் அவள்.

Friday, May 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞான சம்பந்தர்!

கொட்டும் மழையிலும் கைவிளக்கோடு ஞானசம்பந்தர் நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி வட்டமாக மழைத்துளி விழாமல் இறையருள் காத்து நின்றது. மழை நீர் கூட அவர் இருந்த பக்கம் வராமல் அஞ்சியதைப் போல் ஒதுங்கியே ஓடிற்று.  விடிய விடிய நின்று கொண்டிருந்தார் ஞானசம்பந்தர்.  மெல்ல மெல்லப் பொழுதும் விடிந்தது.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  ஆகையால் அவருக்கு மனைவி  இருந்தார்.  அவர் காலையில் எழுந்து வாசலைத் திறந்து விளக்கு ஏற்றிக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறந்தார்.  திறந்தவர் அதிர்ந்து போனார்.  ஞானசம்பந்தர் கைவிளக்கோடு நின்று கொண்டிருப்பதையும், கை விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்ததையும், மழை லேசாகத் தூறலாகப் போட்டுக் கொண்டிருந்ததையும், இரவில் நல்ல மழை பெய்திருப்பதற்கான அடையாளங்களையும் கண்டார்.   ஞானசம்பந்தரைப் பார்த்தார்.  அவர் நனையவில்லை என்பதையும் அந்த மழையிலும் விளக்கும் அணையவில்லை என்பதையும் கண்டார்.  வியந்தார். உடனே ஓடிச் சென்று தன் கணவரிடம் விஷயத்தைக் கூறினார்.  அப்போது தான் கமலை ஞானப் பிரகாசருக்கு முதல் நாள் இரவில் ஞானசம்பந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு வழி காட்டி வந்திருக்கும் விபரம் புரிந்தது.  வெளியே ஓடோடி வந்தார்.

பதறிப் போனார். விடிய விடிய இரவு முழுதும் இப்படி நிற்க வேண்டுமெனில் எவ்வளவு ஆழமான குரு பக்தி இருக்க வேண்டும். இதை நினைத்து இப்படியும் ஒரு சீடனா தமக்கு என எண்ணி ஒரு பக்கம் ஆனந்தம் அடைந்தார்.  கண்களில் கண்ணீர் பெருகியது.  இப்படியும் ஒரு சீடனா எனக்கு என அவரை ஆரத் தழுவிக் கண்ணீர் சொரிந்தார்.  “அன்பரே, நீர் சீடராயிருக்கும் நிலையைக் கடந்து விட்டீர்.  உம்மைப் போன்ற சீடன் எனக்குக் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேனோ! நீர் இனி ஆசாரியராக இருக்கும் தகுதியைப் பெற்று விட்டீர்கள்.  நீர் சாதாரணமான ஞானசம்பந்தனும் இல்லை.  குரு ஞானசம்பந்தர்.  தகுந்த இடத்தில் சென்று இரும்.  உம்மைத் தேடி வரும் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு சிவஞானப் பொருளை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவீராக.  சைவ சமயப் பரிபாலனமும் உம்மால் நடைபெறட்டும்.” என ஆசிர்வாதம் அளித்து அவரைத் தனியாகப் போய் ஆசாரியராக இருக்கும்படி கட்டளையும் இட்டார்.

ஆனால் குருஞானசம்பந்தருக்கோ தன் குருவை விட்டுப் பிரிய மனமில்லை.  மனம் வருந்தி குருவானவர் எப்படி இவ்வாறு சொல்லலாயிற்று என்பதை ஒரு பாடல் மூலம் உணர்த்தினார்.  “கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்
சினக்கும் கமலையுள் ஞானப் பிரகாச சிதம்பர, இன்று
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே.”
இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த கமலை ஞானப் பிரகாசர், குரு ஞானசம்பந்தரைத் தேற்றினார். அண்மையில் காவிரிக்கரையில் தெற்குப்பக்கம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று அங்கே மடம் அமைக்கக் கூறினார்.  வில்வாரண்யம் யமன் வழிபட்டுப் பேறு பெற்றதால் தருமபுரம் என்ற பெயரிலும் அழைக்கப் படும் எனவும் கூறி அங்கே சென்றிருந்து மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்க்குமாறு கட்டளையிட்டார்.  தன்னை வாரந்தோறும் வந்து தரிசிக்கலாம் எனவும் கூறி ஆறுதல் சொன்னார்.

அதன்படி குருஞானசம்பந்தர் திருவாரூரினின்று கிளம்பி மயிலாடுதுறை வந்து தருமபுரத்தை அடைந்தார்.  தருமபுரீசுவரரையும், அபயாம்பிகையையும் வணங்கித் தாம் தங்க ஒரு மடமும், அதில் தாம் அன்றாடம் வணங்கும் சொக்கலிங்கத்திற்கு ஒரு கோயிலும் அமைத்தார்.  அதுகாறும் தருமபுரீஸ்வரர் கோயிலை நிர்வகித்த நிர்வாகிகளான முனிவர்கள் இவரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்துவிட்டு ஓய்வும், தவம் செய்யவும் வேண்டித் தென்னாடு சென்றனர். குருஞானசம்பந்தர் நிலையாகத் தருமபுரத்திலேயே தங்கினார்.  வாரந்தோறும் ஆரூர் சென்று குருவையும், ஆரூர்த் தியாகேசனையும் வணங்கி வந்தார்.  குருஞானசம்பந்தரின் ஞானமும், அறிவும் நாலாதிசையிலும் பரவலாயிற்று.  சீடர் பலர் வந்து அவரிடம் சரணடைந்தனர்.  தருமை ஆதீனம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

சிதம்பர வழிபாட்டிற்காக ஒரு முறை சிதம்பரம் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.  அப்போது இரவு, பகலாக நிட்டையில் இருந்த இவருக்கு சிவகாமி அம்மை அர்த்த ஜாமப் பள்ளியறைப் பிரசாதங்களைக் கொடுத்து அருளினார்.  இவர் காலத்தில் வில்வாரண்யத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாக வரலாறு சொல்கிறது.  இதை தருமை ஆதீனத்தின் முத்திரைச் சின்னத்தில் ஓவியமாகக் காண முடிகிறது.  குரு ஞானசம்பந்தர் அருளிய  நூல்களாவன:

1.சொக்கநாதக் கலித்துறை
2. சொக்கநாத வெண்பா
2. சிவபோத சாரம்
4. பண்டாரக் கலித்துறை என்னும் ஞானப் பிரகாச மாலை
5. நவரத்ன மாலை
6. சோடசகலாப் பிராசாத சட்கம்
7. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
8. முத்தி நிச்சயம்.

இவற்றை ‘குரு ஞானசம்பந்தர் அட்டகம்” என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  இதைத் தவிர ஞானாவரண விளக்கம், சிவபூசா பத்ததி போன்ற நூல்களையும் இவர் இயற்றி இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து, மதுரையில் சொக்கநாதரின் திருவருளைப் பெற்று, திருவாரூரில் குரு கமலை ஞானப் பிரகாசரின் மூலம் குருவருள் பெற்று, மயிலாடுதுறைக்கருகே தருமபுரத்தில் தாமே குருவாய் அமர்ந்த குருஞானசம்பந்தர் விரைவில் தமது முத்திப்பேற்றுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார்.  தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கவும் ஆதீனத்தில் ஆட்சி புரியும், தம் மாணாக்கர்களில் சிறந்தவரான ஆனந்த பரவசர் என்பாருக்கு ஞான உபதேசம் செய்து ஆசாரியத் தலைமையை நல்கித் தாம் புதிதாய்க் கட்டிய ஞானபுரீசுவரர் கோயிலில் சிவலிங்கப் பெருமான் திருவடி நிழலில் நிட்டையில் ஆழ்ந்து முத்தி அடைந்தார்.

தேவாரம் தளத்தின் உதவியோடு எழுதப் பட்டது.