Wednesday, September 17, 2008

சித்திரம் பேசுதடி!! தேவகிரிக் கோட்டை!

இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே
இங்கே

இதை எழுதியே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. பல்வேறு வேலைகளுக்கு இடையே இதன் குறிப்புக்களையும் எங்கேயோ வச்சுட்டேன். ஒருவழியா இணையம் இல்லையா ஒரு வாரமா, இப்போத் தான் தேடி எடுக்க நேரமே கிடைச்சதுனு சொல்லலாம். எல்லோரா குகைகளுக்குச் செல்லும் முன்பே நாங்கள் முதன் முதல் சென்றது தவுலதாபாத் கோட்டை. தற்சமயம் தவுலதாபாத் என அழைக்கப் பட்டாலும் இதன் உண்மையான பெயர் தேவகிரிக் கோட்டை ஆகும். யாதவ வம்சத்து அரசர்களால் ஆளப்பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் இந்தப் பெயரே நீடித்து இருந்திருக்கின்றது, முகமதியர் வரும் வரைக்கும். அதுவும் முகமது- பின் – துக்ளக்கை யாருக்கும் மறக்கவே முடியாது. துக்ளக் புத்தகத்தால் மட்டுமல்ல, நாடகம் கூட வந்தது, நினைவிருக்கலாம். அந்த துக்ளக் மன்னனால் டெல்லி தலைநகருக்குரிய பெருமையில் இருந்து நீக்கப் பட்டு, மொத்த இந்தியாவையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர, இந்தியாவின் மத்தியில் உள்ள இந்தத் தட்சிண பூமியின் தேவகிரிக் கோட்டைதான் சரியாக இருக்கும் எனத் தீர்மானித்து அங்கே சிலகாலம் தலைநகரம் மாற்றப் பட்டது. இதைப் பற்றி அறியும் முன்னர் தேவகிரிக் கோட்டையின் வரலாறு பற்றிச் சிறிது தெரிந்து கொள்ளுவோமா??

12-ம் நூற்றாண்டு வரையில் இந்து அரச குடும்பங்களாலேயே ஆளப்பட்டு வந்தது இந்தக் கோட்டை. தேவகிரி, தேவர்களின் மலை என்ற பெயரால் அழைக்கப் பட்டு வந்தது. இது அநேகமாய் எவராலும் வெல்ல முடியாதபடிக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது. பில்லமராஜா என்ற யாதவ அரசனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. ஒளரங்காபாத்தில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இந்தக் கோட்டை. மலையின் கற்களாலேயே வெட்டி எடுக்கப் பட்டுக் கட்டப் பட்ட கோட்டைகளின் முன்மாதிரியாகவும் சொல்லப் படுகின்றது. என்றாலும் வலுவான அரசன் இல்லாததால் 14-ம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்களின் வசம் சென்றது. சுல்தான்களின் வசம் சென்ற 30 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் ஆட்சிக்கு வந்த முகமது பின் துக்ளக் என்ற அரசன், இந்தக் கோட்டைக்கு தவுலதாபாத், (செல்வங்களின் இருப்பிடம்) என்ற பெயர் மாற்றம் செய்து, தலைநகர் இனிமேல் இந்தக் கோட்டையில் இருந்து செயல்படும் என அறிவித்தான். ஒருவேளை அப்படி இருந்திருக்கலாம், மன்னன் செய்த ஒரு தவறினால் அது சரிவர நடக்கவில்லை. டெல்லியின் மொத்தக் குடி மக்களையும் மன்னன் மாற்ற முற்பட, வயதானவர்கள், நோயுற்றவர்கள், ஏழைகள், குழந்தைகள் போன்ற பல்வேறு தரப்பினருக்கும் இது மிகுந்த சிரமத்தையும், பொருட்செலவையும் கொடுத்தது. இதில் மிகுந்த நோயுற்றவர்களும் தப்பவில்லை. பலரும் டெல்லியில் இருந்து தேவகிரி செல்லும் வழியிலே இறந்தனர். பின்னர் தாமதமாய் மனம் வருந்திய மன்னன், மீண்டும் அதே தவறைச் செய்தான். இம்முறை டெல்லியில் இருந்து கிளம்பிய அத்தனை மக்களையும் மீண்டும் டெல்லிக்கே போகச் சொல்ல, இப்போதும் அதே போல் மக்களுக்குத் தீங்கே விளைந்தது. எனினும் அனைத்துக்கும் தப்பி வந்த ஒரு சிலரால் தேவகிரிக் கோட்டை ஏற்றமே பெற்றது. கோட்டையின் வளர்ச்சி அபரிமிதமாய் இருந்தது. மிகப் பெரிய நகரமாய் தலைநகரம் ஆன டெல்லிக்கே சவால் விடும் வகையில் அதன் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் இருந்தது.

பின்னர் இந்தக் கோட்டை பாமனி சுல்தான்களின் கையில் வந்து சேர்ந்தது. அவர்கள் டெல்லியில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுயாட்சி புரிந்து வந்தனர். 16-ம் நூற்றாண்டிற்குப் பின்னர் தட்சிண பீடபூமியின் சுல்தான்கள் ஆட்சி முடிந்து இந்தக் கோட்டை டெல்லியின் முகலாயர் வசம் போய்ச் சேர்ந்து அதன் கடைசிச்சக்கரவர்த்தி ஆன ஒளரங்க சீப் காலம் வரையிலும் அவனிடமே இருந்து வந்தது. சிவாஜியின் காலத்திற்குப் பின்னர் சிலகாலம் மராத்தியர்கள் வசம் இருந்து வந்தாலும் பின்னர் இந்தக் கோட்டை ஹைதரபாத் நிஜாம் வசம் போய்ச் சேர்ந்தது. 1949-ம் ஆண்டு வரையிலும் நிஜாம் மன்னர்களிடமே இருந்து வந்த இந்தக் கோட்டை நிஜாம்களின் சரணாகதிக்குப் பின்னர் இந்திய யூனியனிடம் வந்து சேர்ந்தது. இப்போது கோட்டையின் அமைப்பைப் பார்க்கலாமா???

1 comment:

  1. கோட்டையின் வரலாற்றைப் பத்தி ரொம்ப அழகா எழுதிருக்கீங்க. தவுலதாபாத் பேரைக் கேட்டாலே துக்ளக் தலைநகரை மாற்ற முற்பட்டது தான் நினைவுக்கு வரும். ஒரு நல்ல வரலாற்றுக் கட்டுரையைப் படிச்ச மாதிரி இருந்தது.

    அப்புறம் நான் இன்னும் தலைவி சொல் கேட்டு நடக்கும் சின்னப்பையன் தான்.
    :)

    ReplyDelete