Tuesday, March 8, 2011

மீனாக்ஷி பெறாத செல்லக் குழந்தை! சிதம்பரம் ஸ்வாமிகள்.

ஸ்ரீசிதம்பரம் ஸ்வாமிகள்:


இவரைத் திருப் போரூர் சிதம்பர ஸ்வாமிகள் என்று சொன்னாலும் இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை. அருணகிரிநாதர், ஷிர்டி பகவான் போன்ற பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய முடியாதவர் இவர். ஆனால் இவர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நான்மாடக் கூடலாம் தென்மதுரையில் சங்கப் புலவர் மரபில் உதித்தவர் என்றும், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர் என்றும் தெரியவருகிறது. அன்னை ஸ்ரீமீனாக்ஷியின் செல்வக் குழந்தையாகவே வளர்ந்துவந்தார் சிதம்பரம் ஸ்வாமிகள். இளம்பிராயத்திலேயே தமிழை நன்கு கற்றுக் கவிபாடும் ஆற்றலோடு, இறைவழிபாடு, யோகம் போன்றவற்றிலும் தனித் திறமை பெற்றிருந்தார். இவரின் உபாசனா மூர்த்தியாக அன்னை மீனாக்ஷியே திகழ்ந்தாள். அனவரதமும் அன்னையையே துதித்து வந்தார்.



இந்நிலையில் சுவாமிகளின் கவித்திறனைக் கண்டு வியந்த ஊரார் அவருக்குக் கவிராயர் என்ற பட்டமும் அளித்துக்கெளரவித்தார்கள். சுவாமிகளின் பெருமையை அறிந்த கொங்கு நாட்டில் இருந்த அவிநாசி ரெட்டியார் என்பார் குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திப்பல வழிபாடுகள் செய்தவண்ணமிருந்தார். அவர் வீட்டுக்கு ஒருமுறை வருகை தந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குமாரதேவர் என்னும் யோகி ரெட்டியாருக்கு திருநீறு அளித்துக் குழந்தைச் செல்வத்துக்குப்பிரார்த்தித்தார். குழந்தையும் பிறந்து வளர்ந்து வந்துகொண்டிருந்தது. குழந்தைக்குத் தக்க ஆசானைத் தேடிக் கொண்டிருந்தார் ரெட்டியார். அப்போது சிதம்பரக் கவிராயரைக் குறித்து அறிய நேரிட அவரைத் தம் இல்லத்துக்கே அழைத்துத் தாம் பெற்ற குழந்தைக்குக் கல்வி போதிக்கும்படி வேண்ட. சுவாமிகளும் ரெட்டியாரின் இல்லத்திலேயே தங்கிக் குழந்தைக்குப்பாடம் கற்பித்துவந்தார். எப்போது வரும் வழக்கம்போல் அப்போதும் வர நேர்ந்த குமாரதேவர் சிதம்பரம் சுவாமிகளையும் அவர் பாடம் நடத்தும் நேர்த்தியையும் கண்டு ஆனந்தம் கொண்டார். சிதம்பரம் ஸ்வாமிகளுக்கும் குமாரதேவரைக் கண்டதும் காரணம் புரியாத பரவசம் ஏற்பட்டது.



சிதம்பர சுவாமிகளின் மனப்பக்குவத்தை அறிய விரும்பிய குமாரதேவர் அவரைச் சோதிக்கும் வண்ணம் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தக்க பதில்கள் சொல்லிச் சிதம்பரம் சுவாமிகள் அவர் உள்ளத்தைக் குளிர்வித்தார். சுவாமிகளிடம் கொஞ்சநஞ்சம் இருந்த செருக்கும் அகன்று மனம் விசாலமடைய குமாரதேவரால் அவர் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. குமாரதேவர் அவரைத் தம் குருநாதர் சாந்தலிங்க சுவாமிகளிடம் அழைத்துச் சென்றார். அவருடைய முக தீக்ஷண்யத்தைக் கண்டும், தமிழ்ப் புலமையைக் கண்டும் வியந்த சாந்தலிங்கர், தாம் இயற்றிய, “வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், கொலை மறுத்தல், அவிரோதவுந்தியார், மற்றும் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்கம் ஆகிய நூல்களைச் சிதம்பர சுவாமிகளிடம் தந்து உரை எழுதப் பணித்தார். ஞான நூல்கள் ஆன அவற்றிற்கு உரை எழுதிய சிதம்பரம் சுவாமிகளைப் பார்த்து சாந்தலிங்க சுவாமிகள் பெரு மகிழ்வு அடைந்தார். தம் முதன்மை சீடர் ஆன குமாரதேவரைப் பார்த்து, “இவன் உன் புத்திரன், இவனுக்கு தீக்ஷை கொடுத்து அருள் செய்வாயாக!” என்று சொல்கின்றார். குமாரதேவரும் வீர சைவ முறைப்படி சிதம்பர சுவாமிகளுக்கு 21 தீக்ஷைகள் செய்வித்து நிஷ்டை, சமாதி முதலானவை கைகூடும் வண்ணமான பெரும்பேற்றையும் அருளிச் செய்கின்றார். குமாரதேவர் கற்பித்தவண்ணம் பல மணி நேரம் தியானத்தில் மூழ்கி எழுந்த சிதம்பரம் சுவாமிகளின் தியானத்தில் ஒரு சமயம் ஒரு அழகான மயில் ஒன்று தோகை விரித்த வண்ணம் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டார். தியானத்திலிருந்து எழுந்த சிதம்பரம் சுவாமிகள் உடனேயே தம் குருநாதராகிய குமாரதேவரிடம் இதற்கான காரணத்தைக் கேட்க, அவரோ சிதம்பரம் சுவாமிகளை மதுரை திரும்பச் சொல்லுகின்றார்.



அங்கே அங்கயற்கண்ணியைத் தியானித்த வண்ணம் இருந்தால் இந்த மயில் தரிசனத்தின் காரணமும் புலப்படும் என்றும் சொல்லி அனுப்பினார். அவ்வண்ணமே மதுரை வந்தடைந்த சுவாமிகள் தினந்தோறும் அன்னை மீனாக்ஷியை மனம் உருகி வழிபட்டு, விரதங்கள் பல மேற்கொண்டு 45 நாட்கள் கடுந்தவமும் புரிந்தார். ஒன்பது கோணமிட்டு, அன்னையவளின் பீஜ எழுத்துக்களை அதில் ஊன்ற வைத்து, சிந்தையில் பதித்துச் சிந்தித்தவண்ணம் இருப்பார். மூர்த்தம் என அழைக்கப் படும் விக்ரஹத்தில் மூர்த்திகரிக்கும் அன்னையான அந்த முழுமுதல்வி அன்னை மீனாக்ஷி அவரின் நனவிலும், கனவிலும் அவர் முன் நடமாட ஆரம்பித்தாள். அவரின் நெஞ்சினுள் அன்னை புகுந்து அவரின் வாக்காய் மலர்ந்தாள். அப்போது மலர்ந்த பூக்களே, “மீனாக்ஷி கலிவெண்பா” என்ற பெயரில் இன்றளவும் வழங்கப் படுகிறது. அம்பிகையின் அதிரகஸ்ய சேவை நுட்பங்களை அந்தக் கலிவெண்பாவில் ஆனந்த தாண்டவம் ஆடும் வண்ணம் அமைத்துப் பாடினார் சிதம்பரம் சுவாமிகள்.



சிதம்பரம் சுவாமிகள் தொடருவார்.

3 comments:

  1. ஏது பிழை செய்தாலும்
    ஏழையேன் பால் இரங்கி
    தீது பிழை புரியாத தெய்வமே
    திருப்போரூர் முருகனே நு கண்கலங்கி பாடியவர்!!
    எத்தனை மகான்கள் . உயிருடன் இருக்கும் வரை அவர்களை நாம் மகான்கள் என்று ஒத்துக்கொள்வதில்லை . அவர்கள் மறைந்தப்புறம் கோவில் எழுப்பி விழா எடுக்கிறோம் :(( இதில் ராமன் கிருஷ்ணனையும் இந்த உலகம் விட்டு வைக்க வில்லை:((

    ReplyDelete
  2. வாங்க ஜயஸ்ரீ, நல்வரவு. ராமனையும், கிருஷ்ணனையும் தான் குற்றம் சொல்லிட்டே இருக்காங்களே.

    ReplyDelete
  3. Please publish the full song
    ஏது பழை செய்தாலும் ஏழை

    ReplyDelete