Sunday, August 21, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளல் பெருமானின் புகழ் மேன்மேலும் பரவியது. அவரின் சொற்பொழிவுகளையும், அருட்பிரசங்கங்களையும் கேட்ட மக்கள் தாமாகவே வலிய வந்து கொல்லாமை விரதம் பூண்டனர். பலரும் வள்ளல் பெருமானிடம் வந்து அவரை நமஸ்கரித்து அவருடைய பேச்சுக்களைக் கேட்டதிலிருந்து தாங்கள் கொல்லாமை விரதம் பூண்டிருப்பதைச் சொல்லி மகிழ்ந்தார்கள். வள்ளலாரும் கருணையுடன் அவர்களை ஆசீர்வதித்தார். ஒரு சிலர் சத்தியமும் செய்தனர். இன்னும் சிலர் தாங்கள் கொல்லாமை விரதம் பூண்டதில் இருந்து தங்கள் வயல்களில் விளைச்சல் அதிகரித்திருப்பதாயும் கூறினார்கள். விளைச்சலில் கால் பங்கு தானியத்தை மிகவும் மனம் உவப்போடு தருமச் சாலையின் அன்னதானத்திற்கு தானமாகவும் வழங்கினார்கள். ஒரு நாள் இவற்றைப் பற்றி எல்லாம் வள்ளலார் கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கையில் அங்கிருந்த அமாவாசை என்னும் பணியாள், சற்றே ஒதுங்கி நிற்க வள்ளலார் அவரை அழைத்து என்ன விஷயம் என விசாரித்தார்.



அமாவாசை எல்லாரும் பேசிக்கொண்டிருந்ததைத் தானும் கேட்டதாகவும், அனைவரையும் போல் தனக்கும் அதிர்ஷ்டம் அடித்திருப்பதாயும் கூறினார். அங்கிருந்த வேலாயுத முதலியாரும் இதைக் கேட்டு உற்சாகத்துடன் மேற்கொண்டு கேட்கத் தயாரானார். அப்போது அமாவாசை அடிகளோடு புலவர் வேலாயுத முதலியாரும் சேர்ந்தே தனக்கு அறிவுரை கூறியதாக நினைவூட்டவே, முதலியார் தாம் அந்த விஷயம் என்னவென்பதை அடியோடு மறந்துவிட்டதாகவும், மீண்டும் கூறும்படியும் கேட்டார். அமாவாசை அதற்கு ஆறுமாசம் முன்னால் சுவாமிகள் அமாவாசையிடம் மாடுகளைச் செத்தபின்னர் சாப்பிடும் வழக்கத்தை விடும்படி கூறியதை நினைவூட்டினார். அப்படியே தான் செய்து வந்ததாகவும், அதன் பின்னர் மீண்டும் சுவாமிகள் அழைத்து மாமிசம் மாட்டினுடையது மட்டுமல்லாமல், மீன், ஆட்டு மாமிசம் என எவ்வகையில் ஆனாலும் உண்ணக்கூடாது எனவும் அறிவுறுத்தியதாய்ச் சொன்னார். அப்போது அமாவாசை தாங்கள் இருக்கும் சேரியில் பங்காய்க் கிடைக்கும் மாமிசத்தை விட்டுவிட்டால் தான் செலவுக்குத் திண்டாடும்படி நேர்ந்துவிடுமே எனக் கவலைப்பட்டதாயும், சுவாமிகளோ, கொல்லாமை விரதம் கடைப்பிடிப்பதை வலியுறுத்தியதையும், புலவரும் அப்போது அங்கே இருந்தவர் சுவாமிகள் சொன்னபடியே செய்யுமாறு அமாவாசையைக் கட்டாயப் படுத்தினதையும் நினைவூட்டினார். வேலாயுத முதலியாருக்கு இப்போது நினைவில் வந்தது.



அமாவாசை மேலே தொடர்ந்து அதன் பின்னர் சுவாமிகள் அரை ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து தன்னிடம் கொடுத்துப் பெட்டியில் வைத்துக்கொள்ளச் சொன்னதாகவும், அன்றிலிருந்து தினம் அரை ரூபாய் கிடைக்கும் என உறுதியாகச் சொன்னதையும் நினைவூட்டினார். அதேபோல் அமாவாசை கொல்லாமை விரதம் கடைப்பிடித்து அடிகளாரின் அறிவுரைகளின்படியே இருந்துவர அன்றிலிருந்து தினமும் எப்படியாவது அரை ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிட்டுவதாயும் கூறி அடிகளின் காலில் விழுந்தார். மேலும் அன்று வரை தான் மட்டுமே கொல்லாமை விரதம் கடைப்பிடித்ததாகவும், இனி தன் குடும்பத்தினரையும் இருக்கச் சொல்லிச் செய்யப் போவதாகவும், இனி அவர் குடும்பத்தினர் அனைவரும் மாமிசமே உண்ணாமல் இருப்பார்கள் எனவும் உறுதி அளித்தார். அமாவாசையை ஆசீர்வதித்து அனுப்பினார் அடிகளார்.



ஒருநாள் காலைவேளையில் தியானம் முடித்து, பூஜை முடித்து, அன்னதானமும் முடித்து வேலாயுத முதலியாருடன் தருமச்சாலையில் வந்து அமர்ந்த அடிகளின் முன்னால் ஆறுமுக முதலியார் ஓட்டமாய் ஓடி வந்து முதல்நாள் இரவு அடிகள் போர்த்தி இருந்த போர்வையைக் கள்வன் களவாடிக்கொண்டு போய்விட்டான் என்ற செய்தி தெரிந்து தாம் ஓடோடி வந்ததாய்க் கூறினார். மிகுந்த பதட்டத்துடன் இருந்தார் ஆறுமுக முதலியார். சுவாமிகள் அவரைச் சாந்தப் படுத்த ஆறுமுக முதலியார் நடந்தது என்ன எனக் கேட்டார். சுவாமிகள் முதல் நாள் கூடலூர் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து குள்ளஞ்சாவடி வந்தபோது அங்குள்ள சத்திரத்துத் திண்ணையில் தங்கியதாகவும் கூறினார். சத்திரக் காவல்காரன் சுவாமிகளைக் கண்டு இன்னார் எனத் தெரிந்து கொண்டு போர்வை ஒன்றைப் போர்த்திக்கொள்ளக் கொடுத்ததாயும் கூறினார். மேலும் அந்தக் காவல்காரர் முஸ்லீம் அன்பர் எனவும், அடிகளுக்குத் துணை யாரும் இல்லை எனத் தெரிந்து கொண்டு அடிகளோடு தங்கியதாகவும் கூறினார். இருவரும் திண்ணையிலேயே படுத்திருக்கையில் கள்வன் ஒருவன் வந்து அடிகளின் போர்வையை இழுக்க, உடனே விழித்துக்கொண்ட அடிகள் , தாம் விழித்தது கள்வனுக்குத் தெரிந்தால் போர்வை அவனுக்குக் கிடைக்காது என எண்ணிப் புரண்டு படுத்ததாகவும் கள்வன் போர்வையை எடுத்துக்கொண்டு விட்டான் எனவும் கூறினார். காவலர் விழித்து எழுந்தவர் கள்வனை அதட்ட, அடிகள் போனால் போகட்டும் எனக் காவலரைச் சமாதானம் செய்துவிட்டுப் போர்வையைக் கள்வனிடம் கொடுத்து, “இனி திருட்டுத் தொழில் வேண்டாம்.” என்று அறிவுரை கூறியதாகவும் சொன்னார். பின்னர் காலை எழுந்து தருமச்சாலைக்கு வந்துவிட்டதாகவும் கூறினார். ஆறுமுக முதலியாரிடம் இதற்காகப் பதட்டம் அடைய வேண்டாம் எனவும் அன்புடன் கூறினார். அப்போது வேலாயுத முதலியார், இம்மாதிரி நடப்பது இது முதல் முறை அல்ல;ஏற்கெனவே இருமுறை நடந்துள்ளது என்று கூற ஆறுமுக முதலியார் ஆச்சரியமடைந்தார்.

ஆனால் வள்ளலார் இவை எல்லாம் வேண்டாம் எனத் தடுக்க, வேலாயுத முதலியாரோ தான் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்ட, அவர் இஷ்டம் போல் செய்யச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார் அடிகளார். வேலாயுத முதலியார் தொடர்ந்தார்:



ஒரு சமயம் மஞ்சக்குப்பம் கோர்ட்டில் வேலை பார்க்கும் சிரஸ்தேதார் ராமச்சந்திர முதலியார் வடலூருக்கு வந்து அடிகளைத் தம்மூருக்கு வந்து தங்கும்படி அழைத்ததாகவும், அதன் பேரில் அடிகளும் அவருடன் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறினார். இருவரும் வண்டியில் சென்றிருக்கிறார்கள். இதே குள்ளஞ்சாவடி அருகில் இரவு கள்வர் இருவர் வண்டியை மறித்திருக்கின்றனர். வண்டியில் சிரஸ்தேதார் சேவகன் இருந்தும், அவனும், வண்டியை ஓட்டி வந்த வண்டிக்காரனும் பயந்து போய் அருகே இருந்த முந்திரிக்காட்டுக்குள்ளே போய் ஒளிந்து கொண்டார்கள். கள்வர்கள் வண்டியின் பின்புறம் வந்து வண்டியுள்ளே அமர்ந்திருப்பவர்களைக் கீழே இறங்கச் சொல்லி வற்புறுத்த, முதலில் சிரஸ்தேதார் கீழே இறங்கினார். அவர் கை விரலில் வைர மோதிரம் இருந்தது. கள்வர்கள் அதைக் கழட்டச் சொல்லி அதட்டினார்கள். அப்போது பெருமான் அவர்களைப் பார்த்து, “என்ன அவசரமோ?” என்று கேட்க, அவர்கள் பெருமானை அடிப்பதற்காகத் தடியை உயர்த்தினார்கள். உயர்த்தின கைகள் அப்படியே செயலற்று நிற்கக் கண்ணும் தெரியவில்லை அவர்களுக்கு.

2 comments:

  1. it is great to read VAllalar's charithram. can you refer any good book about Vallalar? (not by Vallalar). Thanks in advance

    ReplyDelete